குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, December 30, 2008

முந்தானை முடிச்சு

எனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, மீன் குழம்பு பற்றிய பேச்சு வந்தது.

“ என்னதான் சொல்லுங்க தங்கம், என் மனைவி வைக்கும் மீன் குழம்பை சாப்பிட்ட பிறகு வேறு எங்கும் மீன் குழம்பே சாப்பிட பிடிக்காது. மட்டன் குழம்பும், மட்டன் வறுவலும் இவள் கை பட்டால் போதும். அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும். நானும் ஊர் உலகமெல்லாம் சுற்றி வந்து விட்டேன் தங்கம். என்னவள் சமையல் செய்து சாப்பிட்டால் தான் சாப்பிடவே தோன்றும்” என்றார்.

ஆமோதித்தேன்.

நண்பரின் மனைவி தன் சமையல் பக்குவத்தால் கணவனை தன் அன்புப் பிடிக்குள் கொண்டு வந்து விட்டார் என்பது புரிந்தது. எவ்விடத்திற்குச் சென்றாலும் மனைவியின் நினைப்பு வருவது என்பது பெரிய விஷயம். நண்பரின் மனைவிக்கு தாம்பத்தியம் பற்றிய சரியான அர்த்தம் தெரிந்திருக்கிறது.

யாருக்காக சம்பாதிக்க வேண்டுமென்ற நினைப்பு வரும்போதெல்லாம் மனைவியின் முகம் அவனுக்குள் புரளும். மனைவியின் முகமும், அவளின் சுவையான சமையலும் அவனுக்குள் மனைவி மீதான அன்பினை ஊழிக்காற்றாய் ஊதிப் பெருக்கும். அவனுக்காக அவனுடன் இசைந்து பெற்றுத் தரும் குழந்தைகளையும், குடும்பம் நடத்தும் அழகினையும் எண்ணி அவன் மாய்ந்து போவான். அவனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவிக்கு வேண்டியதெல்லாம் வாங்கி கொடுத்து அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டுமென்ற ஆவல் மேலோங்க ஓடி ஓடி சம்பாதிப்பான். இது தான் வாழ்க்கை. இது தான் தாம்பத்தியம். பிறருக்காக வாழ்வது தான் வாழ்க்கை.

கிராமப்புறங்களில் இந்த வாழ்வினைத் தான் முந்தானை முடிச்சு என்பார்கள். வாழ்வியல் கல்வியில் சமையல் கலை என்பது ஒரு முக்கியமான பகுதி. ஆனால் இன்றைய நவ நாகரீக பெண்கள் சமையல் என்றால் காத தூரம் ஓடுகிறார்கள். விளைவு தாம்பத்திய வாழ்வு முறிவு.

மனிதன் வாழ்வது எதற்கு ? சிருஷ்டிக்காக. அதை மறந்து விட்டார்கள் இன்றைய மாந்தர்கள். புலனின்பமே வாழ்வின் அர்த்தமென்றெண்ணி வாழ்வினை தொலைத்து விட்டு பரிதவித்து நிற்கின்றார்கள்.


தாம்பத்திய வாழ்வின் இன்றியமையா பகுதி உணவு. இன்றைய ஸ்பெஷல் தென்னிந்திய மீன் குழம்பு வைப்பது எப்படி என்ற விளக்கப் படம். இப்படத்தைப் பார்த்து முயற்சிக்கவும்.

குறிப்பு : மீன் குழம்பில் கவுச்சி வாடை அடிக்க கூடாது. அப்படி கவுச்சி வாடை வந்தால் மீன் குழம்பு சரியில்லை என்று அர்த்தம். மீனை நன்கு கழுவி சற்று லெமன் சாறு சேர்த்து மீண்டும் கழுவினால் கவுச்சி வாடை போய் விடும். சங்கரா, வஜ்ஜிரம், பாறை, மஞ்சக்கிளி, உளி, தட்டக்காரா, செம்மீன், வெள மீன் போன்றவை மீன் குழம்புக்கு ஏற்றது. காரமும், புளிப்பும் சேர்ந்தால் தான் மீன் குழம்பு சுவையாக இருக்கும். ஆற்றிலிருந்து பிடித்து வரும் மீனுக்கும், கடல் மீனுக்கும் சுவை மாறுபடும்.

Monday, December 29, 2008

கோடீஸ்வரனும், குடியானவனும்

கடந்த வாரம் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகனின் உடல் நிலைக்கு சற்று ஹாட்டான இடம் தேவை என்று டாக்டர் நண்பர் அறிவுறுத்தியதால், என் நண்பர் சஹாரா என்று சொல்லும் சென்னையில் பில்டர்ஸ் தொழில் பார்க்கும் தம்பியின் வீட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயச் சூழ்நிலை. வேறு வழியின்றி ட்ரெயினில் பயணம். ஏசி சேர்கார் ஒத்து வருமா என்று விடிகாலையில் டாக்டரிடம் கன்சல்ட் செய்த பின்னர் ட்ரெயின் ஏறினோம். காலை ஆறு முப்பதுக்கு கிளம்ப வேண்டிய ட்ரெயின் ஏழு பத்துக்குத்தான் கிளம்பியது. இரண்டரை மணிக்குச் சென்னை சென்று சேர்ந்தாகி விட்டது. தம்பி காருடன் காத்திருந்தான்.
இரண்டு நாட்கள் மகனின் உடல் நிலையின் மீது கவனம் கொண்டேன். சரியாகி விட்டான்.

இதற்கிடையில் நண்பர் ஒருவர் அழைப்பின் பேரில் அவரின் வீட்டுக்கு டின்னர் சென்றோம். வண்டி அனுப்பி இருந்தார்கள். குடும்பத்தோடு பயணம். துரைப்பாக்கத்திலிருந்து ஆறு மணிக்கு கிளம்பினோம். முகப்பேருக்கு எட்டரை மணிக்கு சென்று சேர்ந்தோம். இரண்டரை மணி நேரம். டிராபிக்கில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம்.

இரண்டு கோடி செலவழித்து வாங்கிய பென்ஸ் காரில் அமர்ந்திருக்கும் கோடீஸ்வரனும், வெறும் ஆயிரம் ரூபாயில் வாங்கிய சைக்கிளில் அமர்ந்திருக்கும் குடியானவனுக்கும் ஒரே தீர்ப்பை வழங்கிய சென்னையின் சிக்னல்கள் தான் உண்மையான நீதியரசர்களாய் தெரிந்தார்கள்.

சைக்கிள்காரர் நின்றிருந்தார். ஆட்டோ, ஷேர் ஆட்டோ, பென்ஸ் கார் முதல் அனைவரும் சிக்னலில் காத்து கிடந்ததைப் பார்த்த போது உலகில் உண்மையான சமத்துவம் நிலவும் இடமாக சென்னை ட்ராபிக் சிக்னல்கள் தெரிந்தது. உடனே அமைச்சர்கள், உயரதிகாரிகள் என்று விதண்டாவாதம் பேச ஆரம்பிக்க கூடாது.

வாழ்க்கையினூடே சில இடங்களில் சில தவிர்க்க இயலாத சம்பவங்களில் நாமும் மாட்டிக் கொள்வோம் என்பது உண்மை என்று அறிந்து கொண்டேன்.

Friday, December 19, 2008

சாரு நிவேதிதா - பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்பு நண்பர் சாரு நிவேதிதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


Monday, December 15, 2008

பெண் சமத்துவம்




பெண்கள் விடுதலை பற்றிப் பேசிவரும் பெண்ணுரிமையாளரும், பெரியாரிஸ்டுமான ஓவியா அவர்களின் பொன்மொழி :

”குடும்ப அமைப்பில் இருந்து கொண்டு எந்த பாலின சமத்துவத்தையும் கொண்டு வர முடியாது. அதே நேரத்தில் பெண் விடுதலை என்ற பாதையின் வழியாக போராடும் போது இந்தக் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து விடும் என்பது என் கருத்து. அப்படி சிதைவதுகூட இருபாலாருக்கும் நன்மைதான் ”


மிஸ் வோர்ல்ட் 2008 இல் முதல் ரன்னர்அப்பாக வந்த பார்வதி, இரண்டாவது ரன்னரப் Gabrielle Walcott, மிஸ் வோர்ல்ட் 2008 பட்டத்தை வென்ற Ksenia Sukhinova இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். வாழ்க பெண்கள் விடுதலை. வாழ்க பெண் சுதந்திரம்.

Saturday, December 13, 2008

சகோதரியும் குழந்தைப்பேறும்

எனது தூரத்து உறவுக்காரச் சகோதரிக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லை. போகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வமில்லை. பார்க்காத டாக்டருமில்லை என்றும் சொல்லும் அளவுக்கு ட்ரீட்மெண்டுகள் எடுத்தாலும் ஒன்பது வருடமாக பயனில்லாமல் இருந்திருக்கிறது. மனது வெறுத்துப் போய், என் அக்கா, வருத்தத்தில் இருந்தபோது ஒரு நாள் மருத்துவரிடம் கறாராக எனக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என்று வேதனையில் கேட்டார். டாக்டர் யோசித்து விட்டு ஜெனரல் ஜெக்கப் எழுதி கொடுத்தார். அப்போது தான் தெரியவந்தது தைராய்டு சுரப்பியில் சற்றுப் பிரச்சினை என்று. இதன் காரணமாகத் தான் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை என்று கண்டு பிடித்தார்கள். 50 மாத்திரைகள் கொண்ட மருந்து புட்டிதான் என் சகோதரியின் குழந்தையின்மைப் பிரச்சினையைத் தீர்த்தது. தைராய்டில் ஹைபோ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என்று இரு பிரச்சினைகள் இருக்கின்றனவாம். குழந்தையின்மைக்கு இதுவும் ஒரு காரணமென்று சொன்னார் என் சகோதரி.

சரியான நேரத்தில் சரியான ட்ரீட்மெண்ட் கிடைக்கவில்லை என்பதால் என் சகோதரி பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்தச் சம்பவத்தை இங்கு பகிர்ந்து கொள்ளக் காரணம் இருக்கிறது. மக்களில் அதிக பேர், தலைவலி வந்தால் தலைவலி போக மட்டும் தான் மருந்தெடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அந்த தலைவலிக்குக் காரணமென்ன என்று அறிந்து கொள்வதில்லை. இதைப் போன்றே வாழ்விலும் சில பிரச்சினைகள் வரும் போது பிரச்சினைக்குக் காரணம் என்ன்வென்று கண்டுபிடித்து தீர்க்க வேண்டும். இல்லையெனில் அது நீருபூத்த நெருப்பாகவே இருக்கும்.

Thursday, December 11, 2008

மந்திரம் கால் மதி முக்கால்

இந்தக் கதையில் வசிய மை பற்றி வந்திருப்பதால் வசிய மை என்ற தலைப்பில் ஒரு பதிவினை தனியாக எழுதி இருக்கிறேன். அந்தப் பதிவினை படித்தால் இந்தக் கதை சற்று சுவாரசியமாய் இருக்கும்.

இந்தக் கதையோடு தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நிறைவு பெறுகிறது. காரணம் மனிதர்களின் தவறுகளினால் தான் வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கிறது எனவும், எல்லோரும் தர்ம சீலர்கள் ஆகி விட்டால் வாழ்க்கையில் சுவாரசியமே இருக்காது எனவும் எனது இங்கிலாந்தில் வசிக்கும் பெண் தோழி ஒருவர் மொபைலினார். அவரின் கருத்துக்காக, இந்தத்தலைப்பில் வரும் கதைகள் இத்தோடு நிறைவு பெறுகிறது. தொடர்ந்து படித்து வாருங்கள்.

அவருக்கு இரண்டு பெண் மகவுகள். இருவரும் பேரழகிகள். ஊரிலிருப்போரின் பிள்ளைகளுக்கு காய்ச்சல் வந்தாலும், வாந்தி பேதி எடுத்தாலும் அந்த வீட்டில் ஆஜராகிவிடுவார். மற்றும் இன்னபிற சொல்ல இயலா பிரச்சினைகளுக்கும் இவர் தான் நிவர்த்தி செய்ய வருவார். பிரச்சினை தீருமா என்றால் ”மோ”. (”மோ” என்றால் என்ன என்பதற்கு விரைவில் கட்டுரை ஒன்றினை மேற்கோள் காட்டுவேன். அதுவரை பொறுத்தருள்க)

இதுவுமின்றி இவருக்கு மற்றொரு தொழிலும் இருந்திருக்கிறது. வசிய மை தயாரித்துக் கொடுப்பது. கொடுத்தால் மட்டும் போதுமா ? பலன் கிடைத்ததா என்றால் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு சாகும் வரையில் மவுசு இருந்தது.

ஆண்களுக்கு பெண் வசிய மை கொடுப்பார். பெண்களுக்கு ஆண் வசிய மை கொடுப்பார். இதை விடுத்து இன்னுமொரு காரியமும் செய்து வந்திருக்கிறார். இவரின் மகளை ஊரின் பெரிய பணக்காரி ஒருத்தி விளக்குமாற்றால் அடி பின்னி எடுத்து விட்டார். தடுக்க வந்த இவருக்கும் சேர்த்து அடிகள் கிடைத்திருக்கின்றது. பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். பணம் ஏழையோடு மோதுகிறது என்ற பயம் காரணமாக இருந்திருக்கலாம். இவர் அப்போது ஒரு சபதமிட்டார். உன்னை ஒரு வாரத்திற்குள் பூமியிலில்லாதவாறு செய்து விடுகிறேன் என்று.

சொல்லி ஒரு வாரம்கூட முடியவில்லை. காலையில் நன்றாக இருந்த பணக்காரி சிறிது நேரத்தில் தூக்கில் தொங்கினாள். ஊரே பேசியது. இவர் தான் அவளைக் கொன்று விட்டார் என்று. ஆனால் யாரும் அவரிடம் கேட்கவில்லை. பயம்.. பயம்.
இவர் செய்து வந்த காரியம் என்னவென்று இப்போது புரிந்து விட்டதா?

நாட்கள் சென்றன. இவரின் இளைய மகள் தூக்கில் தொங்கினாள். மூத்த மகளுக்கு பைத்தியம் பிடித்தது. மனைவி இறந்தாள். பேரன் ஒருவன் கிறுக்குப் பிடித்து அலைந்தான். இவருக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை. இருக்க இடமும் இல்லை. பட்டினியாய் திரிந்தார். தொழிலும் நசிந்தது. படுக்கையில் கிடந்து இறந்தார்.

நான் தான் கொன்றேன்.. நான் தான் கொன்றேன்.... என்று அடிக்கடி முனகிக் கொண்டிருப்பாராம்.

தர்மம் சூட்சுமமானது தானே ?

பின்குறிப்பு : ஆண் வசிய மை தயாரிப்பு பற்றி எழுதவில்லையே என்று படிப்பவர்கள் நினைக்கலாம். பெண்ணை மயக்குவது தான் பெரிய பாடாய் இருப்பதால் பெண்ணைப் (அதாவது ஆணை மயக்கும் வித்தை) பற்றிய கவலை இன்றி இருந்து விட்டனர் போலும். எல்லா ஆண்களும் நடிகர்கள் போலவா இருக்கின்றார்கள் ? இல்லை ஆர்பி ராஜநாயஹம் போல அழகானவராகவா இருக்கின்றார்கள்?

அவர்பொருட்டு எல்லாருக்கும்

பெங்களூரில் இருக்கும் நண்பர் சரவண கார்த்திகேயன் ஓவரா உணர்ச்சி வசப்பட்டு எழுதிய பதிவை படித்து பாருங்கள்.

அவர்பொருட்டு எல்லாருக்கும்


நேரம் இருக்கும் போதெல்லாம் இந்த இணைய தளத்துக்கு சென்று வரவும். வெகு அருமையாக எழுதுகிறார்.

சரவணகார்த்திகேயன் - www.writercsk.com


நன்றி : ரைட்டர் சிஎஸ்கே இணையதளம்.

Wednesday, December 10, 2008

கண்ணதாசனின் சப்பைக்கட்டு

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நான்காவது பகுதியில் தெய்வம் அன்றே கொல்லும் என்ற கதையினைப் பார்த்தோம். சும்மா கதை விடுகிறானென்று படிப்பவர்கள் நினைப்பார்கள். இங்கு, எனக்கு துணையாய் வருபவர் கண்ணதாசன். அவரின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார். இந்தச் சம்பவம் தெய்வம் அன்றே கொடுக்குமென்பதற்கு உதாரணமாய் மிளிர்கிறது.

திரையுலகின் ஜாம்பவான் சின்னப்பாதேவர் (பஹ்ரைன் செந்தில் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை) முப்பத்தைந்து வயது வரையில் வறுமையிலும், ஏழ்மையிலும் உழன்ற போதிலும் நேர்மையினைக் கடைப்பிடித்தார். வெற்றிலைப்பாக்கு கடையில் வாங்கிய ஆறு ரூபாய்க் கடனுக்காக கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கினான் கடைக்காரன். நிதித் துன்பம் தாங்காமல் மருதமலை கோவிலுக்குச் சென்று முருகனிடம் அழுது புலம்பி விட்டு திரும்பிய போது காலில் இடறிய சிகரெட் பாக்கெட்டினை எத்தியவாறே வந்தவர் ஏதோ நினைத்தபடி பாக்கெட்டை எடுத்து பிரிக்க, உள்ளே இரு சிகரெட்டுகளும், பத்து ரூபாயும் இருந்ததாம். கடன் ஆறு ரூபாய். தெய்வம் கொடுத்தது பத்து ரூபாய். அழுத அன்றே கொடுத்தது தெய்வம்.
தொடர்ந்து கண்ணதாசனே எனது கதைகளுக்கு உதவியாய் வருகிறார். அவரது அந்தக் கட்டுரையில் இருந்து சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்.

" பாவமாம் புண்ணியமாம் எந்த மடையன் சொன்னான், சொர்க்கமாம் நரகமாம் எங்கே இருக்கின்றன அவை?, பாவமும் புண்ணியமும் பரலோகத்தில்தானே? பார்த்துக் கொள்வோம் பின்னாலே " இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும் பொன் மொழிகள். நரம்பு தளர்ந்து போன கிழவர்கள் மரண பயத்தில் உளறிய வார்த்தைகள் அவை என்று நினைக்கிறார்கள். எப்படி தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள் என்கிறது கிறிஸ்தவம். மேலும் பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் சொல்கிறது.

இப்படி எழுதி வரும் கண்ணதாசன் தர்மத்தின் தீர்ப்பு சூட்சுமமானது என்று சொல்லிவருமெனக்கு உதவியாய் கதை ஒன்றினையும் எழுதியிருக்கிறார். அவரின் வார்த்தைகளிலேயே சற்று சுருக்கமாய்ச் சொல்கிறேன்.

மாயவரத்திலே வாழ்ந்து வந்த விதவையினை ஐந்து பேர் சேர்ந்து கற்பழித்தனர். மூச்சுத் திணறி இறந்த பிறகும் பிணத்தையும் ஒருவன் கற்பழித்தான். நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். பிடிபட்டவர்கள் ஏழு பேர். ஏழு பேருக்கும் மறுநாள் தூக்கு. ஆறுபேர் அழுது துடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒருவன் மட்டும் சலனமேயில்லாமல் அமைதியாக இருந்தான். நானும் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அமைதியாக இருந்த மனிதனிடம் பேச்சுக் கொடுத்தோம். அவன் சொன்னான்.

"ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில் இல்லாதவாறு அலிபி தயார் செய்துவிட்டு அந்தக் கொலையைச் செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக் கொலை நடந்த அன்று, நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன் தான் என்னை அங்கே இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்சியங்களோடு என்னைக் கைது செய்து விட்டார்கள். காரணம், கொலை செய்தவர்களிலே மூன்றுபேர் என் சொந்தக்காரர்கள். சாட்சியம் சரியாக இருந்ததினால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கனவே செய்த கொலைக்களுக்காக சாகப் போகிறேன். "

அவன் சொல்லி முடித்த போது "அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழியே என் நினைவுக்கு வருகிறது.

தர்மு தன்னையும் மறந்து சொன்னார். " என்னதான் சொல்லையா, செய்யற பாவம் என்றைக்கும் விடாதய்யா! " ஆமாம் பாவம் கொடுத்த "போனஸ்" தான் செய்யாத கொலைக்குத் தண்டனை.

"என்ன விலை நிர்ணயிக்கிறாயோ, என்ன விலை கொடுக்கிறாயோ, அதே விலை திரும்ப வரும்" என்று எழுதி இருக்கிறார்.

இந்தக் கதையில் தர்மம் சற்று சூட்சுமமாகத்தான் தன்னை நிலை நாட்டி இருக்கிறது என்பதும் படிப்போராகிய உங்களுக்கு புரிகிறதா.

ஆதலால் தான் சொல்கிறேன் " தர்மம் சூட்சுமமானது தானே? "

நன்றி : கண்ணதாசன், வானதி பதிப்பகம்.

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நான்கு

இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை யுன்னாதே - பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்க்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் : பட்டினத்தார்.

பட்டினத்தாரைப் போல வாழ்ந்தாரும் இல்லை. வாழப்போவாரும் இல்லை. லெளகீக வாழ்க்கையின் உச்சத்தையும் தொட்டார். ஆன்மீக வாழ்வின் உச்சத்தையும் அடைந்தார். வாழ்க்கையின் விளக்கம் அவரது வாழ்க்கையிலே கிடைக்கும். ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே செய்யும் காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே என்ற படி பிறருக்கு துன்பமிழைப்பதையே வாழ்வின் நோக்கமாக கொண்டுள்ளனர் மாந்தர்கள்.

தெய்வம் நின்று கொல்லுமென்பார்கள். ஆனால் தெய்வம் அன்றே கொன்ற கதை ஒன்றும் உண்டு.

அவன் அந்த ஊரில் எவருக்கும் அடங்கா காளை. இரண்டு பெண்மக்கள் அவனுக்கு. இருப்பினும் பிறர்த்தியாருக்கு அவன் செய்யும் அடாவடி, கொடுஞ்செயலைக் கண்டு துளியும் கவலைப்பட்டானில்லை. ஆண்டவனும் அவனுக்குப் பாடம் புகட்டாமல் விடுவதில்லை என்று முடிவுகொண்டான்.

தன் வீட்டுக்குப் போகும் வழியில் இருந்த நிலத்தின் மீது கண் கொண்டான் கயவன். அந்த நிலம் கைம்பெண்ணின் ஒருத்திக்குச் சொந்தமானது. அதில் சிறு வீடு கட்டினாள். வேலை பார்த்த கொத்தனாரையும், சித்தாளையும் நையப்புடைத்தான் கயவன். எனக்கு இந்தச் சொத்தில் பங்கிருக்கிறது என்றான். கைம்பெண்ணோ அழுதாள். புலம்பினாள். விட்டானில்லை கயவன். தடுத்திட்டான் வீட்டு வேலையினை. ஊரும் பார்த்தது. ஒடுங்கிக் கிடந்தது. கேட்டால் ஊரே என்னது என்பான் இந்தக் கொலைக்கும் அஞ்சாத கயவன் என்று ஒதுங்கிக் கொண்டது.

என்ன செய்வது? சட்டத்தின் கதவினைத் தட்டினாள் கைம்பெண். சட்டம் அவனைக் கேள்வி கேட்கவுமில்லை. கைம்பெண்ணினுதவிக்கும் வரவில்லை.

யாருமெனக்குத் தேவையில்லை என்று சென்றாள் கோவிலை நோக்கி. அழுதாள். வீட்டுக்குத் திரும்பிச் சென்றாள்.

மறு நாள் காலையில் கயவனின் மகள் ஒருத்தி தாலி அறுத்தாள். மருமகன் மண்டையைப் போட்டான். அடுத்த நான்காவது நாளில் கையும் காலும் இழுத்துக் கொண்டது. வாயில் இருந்து எச்சில் ஒழுகியது கயவனுக்கு. கைம்பெண்ணின் வீட்டு வேலை ஜரூராக நடந்தது.

தெய்வம் நின்று கொல்லுமென்பது தெய்வத்திடம் அடைக்கலமாவோரின் வேண்டுதலைப் பொறுத்தது.

தர்மம் சூட்சுமமானது தானே....

Tuesday, December 9, 2008

பிண்டோற்பத்தி ...

சினிமா, டெக்னாலஜி, தர்மம் என்றெழுதி படித்த உங்களுக்கு சற்று வெறுப்புத் தட்டியிருக்கும். ஆகையால் இன்று வேறு பக்கம் சென்று வரலாமென்றுதான் இப்பதிவு. இப்பதிவும் கூட அறிவியல் கண்டுபிடிப்புத்தான். பிள்ளைகள் உருவாவது எப்படி என்று இன்றைய அறிவியல் கண்டுபிடிக்கும் முன்பே தமிழில் பாடி வைத்திருக்கிறார்கள். ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை பெறுவது எப்படி என்ற விளக்கமுமிப்பாடலிலே சொல்லப்பட்டிருக்கிறது. இப்பாடலில் காரிய சித்திக்கான நேரமும், மூச்சுப் பயிற்ச்சியினைப் பற்றிய விளக்கமும் கூட இருக்கிறது.

கேளப்பா மனமான வாயுகூடி
கெடியான சித்தமா காசம்பொங்கி
வேளப்பா ஆங்கார சிகாரமிஞ்சி
மேவுதற்குப் பெண்மேலே மோகமாகும்
நாளப்பா ஐந்துக்கும் மலமேதென்றால்
நலம் பெறவே சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
தாளப்பா மனதோடே வியானன்கூடும்
தனியான நாதத்தில் பானன் தானே

தானென்ற விந்துவினிற் சமானன்கூடும்
தனியான சித்தத்தில் வியானன் சேரும்
கானென்ற ஆங்காரம் கர்ச்சிப்போடே
கலந்து நிற்கும் உதானனப்பா கண்டுகொள்ளு
வேனென்ற பத்துமொன்றாய் மனதுங்கூடி
மேவியவன்கலந்து வந்து விழுகும்போது
மானென்றமெளனபர வசமேயாவாள்
மருவுகின்ற பெண்ணுக்கும் முறைதான்கேளே

முறையான பெண்ணாணும் மெளனமுற்றால்
மோசமில்லைகருவங்கே தரிக்கும்பாரு
நிறையான வலத்தோடி லாணேயாகும்
நேராகயிடத்தோடிற் பெண்ணேயாகும்
உறையான கருப்பையிற் சுக்கிலமாய்ப்பாய
உத்தமனே சுரோணிதந்தா னுரைந்துகொள்ளும்
கறையாகப்பாய்ந்தவெளி தமருபோலக்
கழற்கொடிக்காய போற்றிண்டு சிரசுமாமே

ஆமப்பாசிரமோடே கையுங்காலும்
அப்பனே தத்துவங்கள் நரம்புமூளை
ஓமப்பாஅத்திமுத லுரோமத்தோடு
உத்தமனேபதினொருவா சலுமேகாணும்
காமப்பால்விழுந்த வழி சிரசினாலே
கைம்முறையாய்த் தாயுண்ட அன்னஞ்செல்லுஞ்
சேமப்பா நடுமையத் தொப்புளாலே
சென்றதெல்லாமலமாகக் கழியுந்தானே

தானென்றபதினொன்றாற் சடந்தான்முன்னே
சாதகமாயெடுத்துவரும் மடலெவ்வாறு
ஊனென்றபெண்ணுக்கு மனதுவேறாய்
உருதமுற்றுமெளனமுன்னாப் பாவத்தாலே
கானென்ற மலடாவாள் புருடனுக்குங்
கைமுறையாயிப்படிதான் கண்டுகொள்ளு
தேனென்றமொழியாட்குப் பரனார் சொன்னார்
செகமெல்லாம் இப்படித்தான் செனித்தவாறே

அது என்ன வலத்தோடி , இடத்தோடி என்று கேட்கின்றீர்களா.... அதன் விளக்கம் இந்தப் பாடலில் வருகிறது. இப்பாடலில் சில ரகஷியங்கள் மறைவாய் கிடக்கிறது. மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

வெள்ளி வெண்டிங்கள் விளங்கும் புதனிடம்
தெள்ளிய ஞாயிறு செவ்வாய் சனி வலம்
வள்ளல் வியாழம் வளர்பிறைக்கோரிடம்
ஒள்ளிய தேய்பிறைக் கேவலமாகுமே
மாறிவளர் பக்கமதிற் குறையும் பக்கம்
மதி நாடி கதிர் நாடி வளர்ப்பொன்னோடிப்
பேறுமிகவுண்டாகும் பிராணனிற்கும்
பின்புரைத்த காரியங்க ளெல்லாமேலாம்
கூறுகின்ற சனி நாளிற் பகலிராவிற்
குலவுசரம் வலமிடத்தே கோணாதோடில்
நாறுமலர்பெந்திருவே சொன்னோமிந்த
ஞாலமெல்லாம் புகழ்பெறவே நடக்குமென்றே


யோகிகள் எப்போதும் சுவாசத்தைச் சூரிய கலையிலேயே நடத்திக் கொண்டிருப்பார்களாம்.. சூரியகலையில் காரிய சித்தி வேறு ஆகுமாம். முயற்சித்துப் பாருங்களேன்.

ரகசிய வன்முறை : உயிரோசை

உயிர்மையின் இணைய இதழ் உயிரோசையில் வெளிவந்திருக்கும் ரகசிய வன்முறை கட்டுரையினைப் படிக்க இங்கே சொடுக்கவும்

உயிரோசையில் ரகசிய வன்முறை : தங்கவேல்


நன்றி : உயிர்மை மற்றும் உயிரோசை


* * *

Monday, December 8, 2008

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் 3

அந்த ஊர் முக்கியஸ்தரின் மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஊரின் இன்னொரு முக்கியஸ்தரின் மகளோடு காதல். கவிதை மழை பொழிவான் காதலன். உலக அறிவின்றி இருக்கும் காதலியோ அவனெழுதும் கவிதைக்கு அர்த்தம் புரியாமல் என்ன இப்படியெல்லாம் எழுதுகிறாய் என்று கடிந்து கொள்வாள். முக்கியமான விஷயம் என்னவென்றால் அவனது கவிதையில் இதயமென்ற வார்த்தை தான் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கும்.

தினமும் சந்திப்பு நடக்கும். பார்வையோடு சரி. சாப்பாடு ஆச்சா? அம்மா எப்படி இருக்கிறார், அப்பா எப்படி இருக்கிறார்? இப்படித்தான் பேசிக் கொள்வார்கள். காதலன் படிப்பினை முடித்து விட்டு வீட்டில் இருந்தான். இவர்களின் காதல் ஊர் பெண்டுகளுக்குத் தெரிய கண் காது மூக்கு சேர்த்து பேச ஆரம்பித்தார்கள். காதலனின் அம்மாவிடமே அது பற்றி விசாரிக்க, காதலனின் வீடே பற்றி எரிந்தது. காதலிக்கு அவள் அப்பாவால் கும்மாங்குத்துகள் பரிசாகக் கிடைத்தன. காதலியைப் பார்க்க முடியாமல் தவித்த காதலன் ஊரை விட்டு வெளியேறினான்.

காலங்கள் கடந்தன. ஊருக்குத் திரும்பினான். காதலியைச் சந்தித்தான். திருமணம் பற்றிப் பேசினான்.காதலி மழுப்பினாள்.கடமை அழைக்க பிறிதொரு நாளில் சந்திக்கலாமென்று வேலைக்கு திரும்பவும் சென்றான். காலங்கள் கடந்தன. மீண்டும் ஊருக்குத் திரும்பினான் காதலியைப் பார்ப்பதற்கு.

காதலியைப் பார்க்க முடியவில்லை. காரணம் அவளுக்குத் திருமணமாகி இருந்தது. காதலி அவனிதயத்தில் குத்தி விட்டுச் சென்றாள். வலிக்கும் இதயத்தோடு மீண்டும் வேலைக்குத் திரும்பினான்.

காலங்கள் உருண்டோடின.

காதலன் ஏதோ விஷயமாக ஊருக்குத் திரும்பினான். காதலனின் நண்பன் காதலியைப் பற்றிச் சொன்னான். காதலிக்குப் பிறந்த மகனின் இதயத்தில் ஓட்டையாம்.

தர்மம் சூட்சுமமானது தானே ??????

மொபைல் போனை கம்ப்யூட்டராக பயன்படுத்தலாமா ?



டெக்ஸ்டாப் மாடல் கம்ப்யூட்டர் இன்று லேப்டாப்பாக மாறி விட்டது. இன்னும் சிறிது காலத்தில் ”மொபைல்டாப்” கம்ப்யூட்டராக மாறவும் வாய்ப்பிருக்கிறது. மொபைல் டெக்னாலஜியின் வளர்ச்சி அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கும் இக்காலத்தில் எதிர்கால மொபைல்டாப் எப்படி உருவாக்கலாம் என்ற யோசனைதான் இந்தப் பதிவு.

தற்போது இருக்கும் மொபைல் போனில் சிறு மாறுபாடுகளைச் செய்தால் போதும், மொபைல் போனை முழுக் கணிணியாகப் பயன்படுத்தலாம். இதற்கு தேவையான வசதிகள் : இன்பில்ட் இண்டகிரேட்டட் புரஜெக்டர் (INBUILD INTEGRATED PROJECTOR), கீபோர்ட் (KEY BOARD), மெளஸ்(MOUSE), மொபைல் போனுக்கான ஆபரேட்டிங்க் சிஸ்டம் (OPERATING SYSTEM). இந்த வசதிகளை மொபைல் போனில் கொண்டு வந்தால் போதும். அட்டகாசமான கம்ப்யூட்டர் தயார். தற்பொழுது ரேடியோ, டிவி, இணையம் மூன்றினையும் மொபைலில் பயன்படுத்துகிறோம். மொபைலை மொபைடாப் ஆக மாற்றி விட்டால் உள்ளங்கைக்குள் உலகம். அகன்ற திரையில் டிவி பார்க்கலாம். சாட்டிங்க் செய்யலாம். இன்னும் என்னென்னவோ செய்து தூள் கிளப்பலாம். ஆளுக்கொரு கணிணி. ஹெட்போனைக் காதில் மாட்டிக் கொண்டால் போதும். ஆளாளுக்கு தனி உலகம். திரை தேவையில்லை. ஸ்கிரீன் தேவையில்லை. செல்போனிலிருந்து சுவரிலோ அல்லது தரையிலோ செல்போனின் உள்ளிணைந்த இண்டகிரேட்டட் புரஜெக்டர் மூலமாக ஸ்கீரினைக் கொண்டு வரலாம். மொபைல் போனுடன் (தேவையென்றால் இணைத்துக் கொள்ளும் வசதி) இணைந்த கீபோர்ட், மெளஸ் மூலம் கணிணியில் செய்யக்கூடிய வேலைகளை எளிதில் செய்யலாம். பேப்பர் வடிவில் சுருட்டி வைத்துக் கொள்ளும் அளவுக்கு கீபோர்டுகள் வந்து விட்டன. மெளஸ்ஸும் சிறிய சைஸ்சில் கிடைக்கின்றன. இணைய இணைப்புக்கு 3ஜி டெக்னாலஜி பயன்படுத்தலாம். இதற்கு என்று பெரிய அளவில் செலவு ஏதும் பிடிக்காது. பிரச்சினை என்னவாக இருக்குமென்றால் ஸ்டோரேஜ். இதற்கும் வழி இருக்கிறது. அதிவேக பிராசஸர், மற்றும் ரேம் மெமரியுடன், எஸ்டி கார்ட் மூலம் இப்பிரச்சினையையும் எளிதில் தீர்த்து விடலாம். 3ஜி வந்து விட்டால் இணைய வேகமும் உயரும். ஆக, மொபைல் நிறுவனங்கள் எதிர்காலத்தில் இவ்வகைக் மொபைல் கம்ய்யூட்டரை உருவாக்கியே தீர வேண்டும். இதற்கான விலையினைக் கிட்டத்தட்ட 7000 ரூபாய்க்குள் அடக்கி விடலாம். பவர் பிரச்சினை இருக்காது. யூபிஸ் தேவையில்லை. இப்படி எவ்வளவோ வசதிகள் தரப்போகும் மொபைல்டாப் எப்போது வரும் ??????

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் - 2

அந்த கிராமத்தில் அண்ணன் தம்பி இருவர். சமமாக சொத்து பங்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. அண்ணனுக்கு நான்கு பிள்ளைகள். தம்பிக்கு ஒன்று. தம்பி மனைவிக்கும், தம்பிக்கும் அண்ணனைப் பார்த்து பொறாமை. பக்கத்து பக்கத்து வீடாகையால் அடிக்கடி ஏதாவது பிரச்சினை செய்வார் தம்பி. அண்ணன் ஒதுங்கிச் செல்வார். அண்ணன் மீதும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் துவேஷம் கொள்ளக் காரணம் அரசாங்கத்திடமிருந்து மாதா மாதம் விடுதலைப் போராட்ட வீரருக்கான பணம் வருவது. இது இப்படி இருக்க, அண்ணன் குடும்பத்தார் அனைவரும் விவசாய வேலையில் இறங்கியதால் குடும்பம் முன்னேறிக்கொண்டிருந்தது. தம்பிக்கு ஒரே ஒரு பிள்ளை ஆகையால் கூட மாட வேலை செய்ய ஆள் இல்லை. அதனால் அவரின் வளர்ச்சி தடைப் பட்டது. அண்ணன் குடும்பம் முன்னேறுவது கண்டு வெம்மையில் வாடிய தம்பி குடும்பம், பட்டுநூல்கார மந்திரவாதியை அணுகினர். எப்படியாவது அண்ணன் குடும்பத்திலிருப்போரை ஒழித்துக் கட்டி விட வேண்டுமெனச் சொல்லி காசையும் கொடுத்தனர். கொடுத்த காசுக்கு துரோகம் செய்யாமல் பட்டு நூல்காரனும் பில்லி வைத்தான். அண்ணன் குடும்பத்தாருக்குச் சொந்தமான மாட்டு மந்தையில் இருந்த மாடுகள் செத்து வீழ்ந்தன. பாரம் இழுக்கும் வண்டி மாடுகள் வாயில் ரத்தம் தள்ளி இறந்தன. ஆட்டு மந்தையில் ஆடுகளும் இறந்தன. என்ன காரணமென்று தெரியாமல் கலங்கினர் அண்ணன் குடும்பத்தார். தம்பி குடும்பமோ குதூகலத்தில் கொக்கரித்தது. அண்ணன் மனைவி கால் கடுப்பிலேயே செத்தாள். குடும்பத்தின் குலவிளக்கு அணைந்தது. ஒழிந்தது அண்ணன் குடும்பம் என்று சந்தோஷத்தில் மிதந்தது தம்பி குடும்பம். தம்பி மகனுக்கு வந்த மனைவியும் பட்டு நூல்காரனை விடாமல் பிடித்துக் கொண்டாள். விளைவு மேலும் மேலும் அண்ணன் குடும்பத்தில் இழப்புகள். பிரச்சினைகள். அண்ணன் குடும்பம் தவித்தது.

அண்ணன் வீட்டிற்கு ஒரு பாதிரியார் வந்தார். வீட்டின் சனி மூலையிலும், சனி மூலைக்கு நேரெதிர் மூலையிலும் புதைக்கப்பட்டிருந்த பில்லியினை எடுத்து சுடுகாட்டில் வைத்து எரித்தார். பிரச்சினை முடிவுக்கு வந்தது. என்ன காரணமென்று தெரிந்து கொண்டார்கள் அண்ணன் குடும்பத்தார். தம்பி குடும்பத்தார் செய்யும் எந்த மந்திரவாத தொல்லைகளும் தங்களைப் பாதிக்காதவாறு தற்காத்துக் கொண்டார்கள். தம்பி குடும்பத்தார் சோர்ந்து போனார்கள். அண்ணன் குடும்பத்தில் வளர்ச்சி வேகமெடுத்தது.

காலங்கள் உருண்டோடின. பிள்ளைகள் பெரியவர்களானார்கள். அண்ணனுக்கும் தம்பிக்கும் பேரன் பேத்திகள் வந்தார்கள். தம்பி திடீரென நோயில் விழுந்தார். தம்பி மகன், தகப்பனை வீட்டின் வெளியில் இருந்த மரத்தடியில் போட்டான். மலம், நீர் எல்லாம் படுக்கையிலேயே சென்றன. உடம்பில் புண் வைத்து புழு நெளிந்தது. சாப்பாடும் கிடைக்காது. கத்தி கத்தி தொண்டையும் வறண்டு போனது. மருமகளும், மகனும் உதாசீனப் படுத்தினர். மழையிலும், வெயிலிலும் கிடந்து வாடினான் தம்பி. தம்பியின் துயரம் பொறுக்க முடியாமல் தம்பி மகனுக்கும், மனைவிக்கும் தெரியாமல் அண்ணன் சாப்பாடு வாங்கி வந்து போட்டார். தம்பி அழுதான். தம்பியை தன் பராமரிப்பில் விட ஆள் வைத்து தூது விட்டான் அண்ணன். தம்பி மகன் மறுத்து விட்டான். மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் ஒரு குடையின் கீழ் மரத்தடியில் கிடந்தான் தம்பி. ஊரே பார்த்தது. யாரும் எதுவும் கேட்கவில்லை. இரவுகளில் அழுது புலம்புவான் தம்பி. தம்பி மனைவியை வீட்டை விட்டு அடித்து விரட்டினாள் மருமகள். தம்பியைச் சுற்றிச் சுற்றி வருவான் அண்ணன். ஒரு நாள் உடம்பில் புழுக்கள் அதிகமாக, குடிக்க கஞ்சியின்றி மழையிலும் வெயிலிலும் கிடந்து செத்தான் தம்பி. ஊரே ஒன்று கூடி மலர் படுக்கையில் கிடத்தி சுடுகாட்டில் வைத்து எரித்தார்கள். பலகாரங்கள் சாப்பிட்டார்கள். கறி சமைத்து ஊரே சாப்பிட்டது. தம்பியின் மனைவி ஊரை விட்டு ஒதுங்கி இருந்த ஒரு வீட்டில் கொண்டு போய் கிடத்தப்பட்டாள். நான்கு நாட்களுக்கு ஒருமுறை சாப்பாடு கிடைத்து அவளுக்கு. அவளும் இருட்டறையில் கிடந்து பசியோடு செத்தாள். அவளுக்கும் காரியத்தைச் செய்து முடித்தார்கள். தம்பியின் இழப்புத் தாங்காமல், தம்பி செத்துப் போன ஒரு வருடத்திற்குள் அண்ணனும் செத்துப் போனான்.

தர்மத்தின் தீர்ப்பைப் பார்த்தீர்களா? தர்மம் சூட்சுமமானது தானே? எப்படி சூரியனும் பூமியும் ஒரு வித கணக்கோடு இயங்குகிறதோ அது போல மனிதனின் வாழ்க்கையும் மாயமான கணக்கின் ஒழுங்கோடு இயக்கப்படுகிறது என்பது உண்மையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

குறிப்பு : தர்மம் சூட்சுமமானது எந்த தலைப்பில் வெளிவந்த முதல் பதிவுக்குப் பின் வரும் பதிவுகள் கதைகளாய் எழுதப்பட்டு, இன்றிலிருந்து தலைப்பும் தர்மத்தின் தீர்ப்புக் கதைகளாய் மாறிவிட்டது. படிக்க படிக்க கடவுளின் மீது பற்று ஏற்படுவதாய் கருதினால் அதற்கு நான் பொறுப்பாளி ஆக முடியாது. நடந்ததைச் சொல்கிறேன். இக்கதைகளில் வரும் மாந்தர்கள் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். அவர்களின் மூலம் கேட்ட சம்பவங்கள் தான் கதைகளாய் எழுதப்படுகிறது. சம்பவங்களின் உண்மைத் தரத்துக்கு நான் உத்திரவாதம் தர இயலாது. ஒரு வேளை இக்கதைகளின் மாந்தர்கள் சொல்லிய கதைகள் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

Sunday, December 7, 2008

மேஜிக் செய்வது எப்படி ? மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்

சமீப காலமாக சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவிக்களில் மேஜிக் ஷோக்கள் களைகட்டுகிறது. பார்க்க படு சுவாரஸியமாக இருக்கிறது. இன் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது என் மாமாவும், என் முதுகும் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. ஏன் அப்படி என்றால், என் சிறு வயதில் என் அப்பா வைத்திருந்த மகேந்திர ஜாலம் புத்தகத்தில் ஒரு மேஜிக் சமாச்சாரம் பற்றி படித்தேன். அதாவது நாயுருவி இலையினை நன்றாக மென்று குதப்பி துப்பிய பின்பு மண்ணை வாயில் போட்டு மெல்லலாம் எனவும், கண்ணாடியைக் கூட கடிக்கலாம் என்று எழுதி இருந்தார்கள். பரீட்சித்துப் பார்க்கலாம் என்று செயலில் இறங்கிய போது அதை எப்படியோ மோப்பம் பிடித்த மாமா என் முதுகில் விளையாடி விட்டார். முதுகில் அடிவாங்கிய பின்பும் தொடர்ந்து பரீட்சையில் இறங்கினால் விளைவுகள் படு மோசமாய் இருக்குமென்பதால் அத்தோடு மறந்து விட்டேன். மேஜிக் நிகழ்ச்சியினைப் பார்க்கும் போதெல்லாம் மாமாவும், என் முதுகும் நினைவுக்கு வருவதை இன்றைக்கும் என்னால் மறக்கமுடியவில்லை.

அந்தப் புத்தகத்தில் இன்னொரு சமாச்சாரம் படித்தேன். வேரில்லாக் கொத்தான் செடி என்று ஒன்று இருக்கிறதாம். அது கள்ளிச் செடிகளின் மேல் கொடி போல படர்ந்து இருக்குமாம். வேர் இருக்காதாம். பின்னே எப்படி பச்சையாக இருக்கிறது என்று கேட்கத் தோன்றும். நடு இரவில் அந்த கொடி பூமியில் புதைந்து கிடக்கும் அதன் வேரான கிழங்கினை நோக்கி திரும்பும் எனவும், அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் என்று எழுதி இருந்தார்கள். உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை. இந்த வேரில்லாக் கொத்தானை ஏதாவது எதிர்கள் வீட்டில் சொருகி வைத்து விட்டால் அவ்வீடு குட்டிச்சுவராய் ஆகிவிடும் என்று எழுதி இருந்தனர்.

நிலம்புரண்டி வேர் என்று ஒன்று உண்டாம் இந்தச் செடியின் விசேஷம் என்னவென்றால், புதையலைக் கண்டு பிடிக்க உதவுமாம். காடுகளில் கிடைக்கும் இந்தச் செடி மனித வாடை பட்டதும் பூமிக்குள் மறைந்து விடுமாம். இதைக் கண்டு பிடிக்க தேத்தா மரத்தின் கொட்டைகளை கையில் எடுத்துக் கொண்டு சென்றால், இந்தச் செடி இருக்கும் இடத்தில் தேத்தா மரத்துக் கொட்டைகள் வெடிக்குமாம். இப்படியெல்லாம் ஏதேதோ எழுதி இருந்தது. புலிப்பாணி ஜாலமென்று இன்னுமொரு புத்தகம் கிடைத்தது. படித்தால் தலை கிறு கிறுத்து விடும். அந்த அளவுக்கு படு பயங்கரமாக இருக்கும். தமிழில் இப்படியெல்லாம் புத்தகங்கள் இருக்கிறது என்பது எனக்கு புதிய தகவலாய் இருந்தது.

அந்த வயதில் சுபாவின் நரேந்திரன், வைஜெயந்தி நாவலில் மூழ்கி இருந்த எனக்கு இப்படிப் பட்ட புத்தகங்கள் வேறொரு உலகினை எனக்கு அறிமுகப்படுத்தியது. இப்பதிவின் மூலமாக அந்த உலகத்தையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

புலிப்பாணி ஜாலமென்ற புத்தகத்தில் இருந்து ஒரு பாடலையும், காசு, கார்டு வைத்து எப்படி மேஜிக் செய்வது என்ற வீடியோவினையும் உங்களுக்கு வழங்குகிறேன். படித்தும், பார்த்தும் ரசித்து விட்டு இதைப் போன்றதொரு சம்பவங்கள் உங்கள் வாழ்வில் நடந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பூசித்தான் வெற்றிலையிற் பொட்டைப் பார்த்தாற்
புவனத்திலுள்ளதெலா முனக்கே தோன்றும்
நேசித்த சேடன்முடி காண்பாய் வைத்த
நிதியான புதையலெலா முன்ன தாமே
பூசித்தே சக்தியின்மா பீஜம் நாட்டிப்
புணர்ப்பான வாயிரத் தெட்டுருவே செய்ய
நேசித்துக் கருணையுடன் வருவளானா
னிதியோடு சூனியந்தர னெடுத்திடாயே


இது அஞ்சன மை தயாரிக்கும் முறை பற்றிய பாடல். அஞ்சன மை என்பது பரவை அஞ்சனம், பாதாள் அஞ்சனம் என்று இரு வகைப்படும். பரவை அஞ்சனமை பூமியிலுள்ள பொருட்களை எல்லாம் காட்டுமாம். பாதாளமென்பது பூமிக்குள் இருக்கும் பொருட்களை எல்லாம் காட்டுமாம்.

வாழ்க்கை படு மர்மமாக இருக்கிறது அல்லவா... ???????

சரி, மேஜிக் ட்ரிக் எப்படி செய்கிறார் என்று பார்த்து முயற்சிக்கவும்.


Saturday, December 6, 2008

தர்மம் சூட்சுமமானது உண்மை நிகழ்ச்சி - 1

எங்கள் ஊரில் மிகப் பெரிய பாடகர் ஒருவர் இருந்தார். ஊரில் நடக்கும் அத்தனை விழாக்களிலும் அவரின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும். சினிமா பாடல்களில் அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அவரை வெளி நாட்டு பாடகர்கள் கூட ஒப்பிடுவார்கள். அந்த அளவுக்கு பிரபலமானவர். இவர்கள் பரம்பரையே பாடல் பாடி புகழடைந்தவர்கள். பாடகரின் அப்பாவும் பாடகராக புகழ் பெற்றவர். இவர் கூடப் பிறந்தவர்கள் அனைவரும் பாடுவதில் கில்லாடிகள். தற்போது டிவிக்களில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் கூட பாடகரின் தகப்பனார் கலந்து கொள்வது உண்டு.

இப்படி புகழ் பெற்ற பாடகரிடம் இருக்கும் கெட்ட குணம் - பெண்கள். இவர் பெண்களை வேட்டையாடியது போல வேறு எவரும் செய்திருக்க முடியாது. ஒவ்வொரு மேடைக் கச்சேரியிலும் பாட்டுப் பாடிய பின்னர் அன்றைக்கே கச்சேரி கேட்க வந்த ஏதாவது ஒரு பெண்ணை ஒதுக்கி விடுவார். முதலில் கல்யாணமென்று தான் பேச்செடுப்பாராம். அவர் குரலுக்கு மயங்கிய அந்தப் பெண்ணும் விரைவில் அவரிடம் மயங்கி கிடப்பாள். அவளைத் தன் கைக்குள்ளேயே வைத்திருந்து காரியம் பார்ப்பதற்காக அடுத்த மேடைக் கச்சேரியில் நீதான் என்னுடன் பாட இருக்கிறாய் என்று சத்தியம் செய்வாராம். காரியம் முடிந்ததும் மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவாராம். மஞ்சள் கலர் என்றால் பாடகருக்கு ரொம்பவும் இஸ்டமாம். மஞ்சள் கலரில் எந்தப் பெண்ணையாவது பார்த்தால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முடிந்தது. உறிஞ்சி விடுவாராம். பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறேன் பேர்வழி என்று பாடகிகளை பெட்ரூமில் பெண்டு நிமிர்த்தி விடுவாராம். சரியாக அந்த சமாச்சாரத்திற்கு ஒத்துழைக்காத பாடகிகளை சுருதி சரியில்லை தாளம் சரியில்லை என்று ஒத்திகையின் போதே மானத்தை கப்பலேற்றி விடுவாராம். வேறு வழியின்றி பாடகிகளும் அந்தச் சமாச்சாரத்துக்கு சம்மதம் தெரிவிப்பார்களாம். இப்படி இவரால் குத்திக் குதறப்பட்ட பாடகிகள் எத்தனையோ பேராம்.

ஏமாற்றி விட்டாய், அது இதுவென்று அழுது புரண்டு அழிச்சாட்டியம் செய்தால் அந்தப் பெண்ணின் மீது அபாண்டமாகக் குற்றச்சாட்டு சொல்லியும், ஊரில் அவருக்கு இருக்கும் செல்வாக்கினால் அந்தப் பெண்ணைப் பற்றிய பொய்யான புரளியை பரவ விட்டும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு செய்து விடுவாராம். வேறு எங்குமே கச்சேரி கிடைக்க விடாமல் வேறு செய்து விடுவாராம். இப்படி அவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் எண்ணிக்கை பற்றி கணக்கெடுத்து சொல்ல முடியாதாம்.

இவரின் இந்த அழிச்சாட்டியம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கசிய கசிய, அவரின் மீதான க்ரேஸ் குறைந்து அவரை மேடைகளில் பாட அழைப்பது குறைந்தது. பார்த்தார். இனி இப்படியே போனால் பிழைக்க முடியாது என்று விவசாயத்தில் இறங்கினார். விவசாயத்தில் அவருக்கு ஓரளவுக்கு லாபம் கிடைத்ததாக சொன்னார்கள். இந்த நிலையில் அவருக்கு முன்பே கலியாணமும் ஆகியிருந்தது. மூன்று பிள்ளைகள் வேறு. முதல் பிள்ளை பிறந்தவுடன் தான் அவருக்கு அதிர்ஷடம் அடித்ததாகச் அவரே சொல்வாராம். அந்தப் பிள்ளைக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்திருக்கிறது. எங்கெங்கோ சிகிச்சைகள் எடுத்தார்கள். பாடகர் தன் முதன் மகன் மீது அளவற்ற பாசம் கொண்டவராம். இந்த மஞ்சள் காமாலையினை எவராலும் சரி செய்ய இயலாதாம். அதனால் பாடகரின் மகன் அற்ப ஆயுளில் உயிரை விட்டிருக்கிறார். ஆள் பித்துப் பிடித்தது போல ஆகிவிட்டாராம். நான் என்ன செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது என்று அழுது புலம்புகிறாராம்.

பெண்களின் பாவம் பொல்லாதது என்பார்கள். அதுவும் மஞ்சள் கலர் பெண்கள் என்றால் பாடகருக்கு கொள்ளை ஆசையாம். இவரின் பையனுக்கு வந்த்தோ மஞ்சள் காமாலை நோய். விதியின் விளையாட்டைப் பார்த்தீர்களா?

தர்மம் சூட்சுமமானது தானே ?????

குறிப்பு : இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது என்பதால் படிக்க சுவாரசியமாய் இருக்கும் பொருட்டு “உண்மை” என்ற பதம் தலைப்பில் சேர்க்கப்பட்டது.

Friday, December 5, 2008

சின்னப்பயலே சின்னப்பயலே

எம்ஜியாருக்காக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல். எனது ஊருக்கு அருகில் இருக்கிறது இந்தப் பட்டுக்கோட்டை. கல்யாண சுந்தரத்துக்கு சாலையின் முக்கில் ஒரு சிலையுமுண்டு. என் மகன் என்னிடம் கேட்டான் ” யாரப்பா அவரு” பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் என்றேன். அவரின் பாடல் நினைவுக்கு வந்தது.

கம்யூனிச தத்துவம் இப்பாடலில் அங்குமிங்கும் வெளிப்படுகிறது. இன்றையக் கால கட்டத்தில் கம்யூனிச தத்துவமெல்லாம் எடுபடுமா என்ன ???

ஒரு பக்கம் உல்லாசத்தின் உச்சகட்டத்தை அனுபவிக்கும் மனிதர்கள்
மறு பக்கம் ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லா தவிக்கும் மனிதர்கள்.



ஒருவன் மனதில் ஒன்பதடா...

மனிதனின் மனம் இருக்கிறதே, அதனால் செய்ய இயலாத காரியம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? அந்த அளவுக்கு வலிமை வாய்ந்த மனம் பற்றிய பாடல் இது என்பதால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

ஒவ்வொரு மனிதனின் மனதில் மறைந்து கிடக்கும் மர்மங்கள் எவ்வளவோ ???????

Friday, November 28, 2008

ராதையின் காதல் வலி

ஒரு நாள் காதலியைக் காணவில்லை. வருவாள் வருவாள் என்று காத்திருந்தேன். காணவில்லை. அவளின் தங்கையையும் காணவில்லை. எனக்குள் ஏதோ ஒன்று உடைந்தது போல உணர்ந்தேன். கலீல் ஜிப்ரானின் கவிதைகளை படித்து மனதினை தேற்றிக் கொள்வேன். இருந்தாலும் மனசு கேட்காது. எப்போது தான் வருவாளோ என்று பிரவச வலியால் துடிக்கும் பெண்ணைப் போல மனசு துடித்துக் கொண்டிருந்தது. என் நண்பன், நான் படும் வேதனையைக் காணச் சகிக்காமல் அழுதான். ஏனடா, இப்படி உன்னையே சாகடித்துக் கொள்கிறாய் என்று கண்ணீர் சிந்தினான்.

” இறந்த பிறகும் என் கண்கள் திறந்தே இருக்கும்
ஏனென்றால் இன்னும் உனக்காக காத்திருக்கிறேன் “

என்ற கலீல் ஜிப்ரானின் கவிதை வரிகளை அவனிடம் சொன்னேன். ஜெயதேவர் கண்ணனின் காதலி ராதை கண்ணனைப் பார்க்க இயலாமல் காதல் பிரிவில் படும் வேதனையை பாடலாக எழுதி இருப்பார். கண்ணதாசனின் வரிகளில் வழிந்தோடும் ராதையின் காதல் பிரிவின் வலிகள் நான் படும் துயரத்தின் வலியை விட சுமாராகத்தான் இருந்தது.

காதலிக்காக காதலன் பாடும் பாடல் என்று இந்தப் பாடலை எடுத்துக் கொள்ளுங்களேன்.


காதலிக்கும் போது கேட்ட பாடல்

நான் ஒரு காலத்தில் எனது வகுப்புத் தோழியுடன் காதல் வயப்பட்டிருந்தேன். எனக்கும் அவளுக்கும் காதல் தூது தோழியின் தங்கை. தோழி சுமாராகத்தான் இருப்பாள். ஆனால் இவள் தங்கையோ அழகு என்றால் அப்படி ஒரு அழகு. தேவதை போலவே இருப்பாள். உடல்வாகும், நடையும், முகமும் அவ்வளவு லடசணமாக இருக்கும்.

என் மீது கொள்ளைப் பிரியம் வைத்திருந்தாள். ஆனால் நான் தான் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டேன். எனக்கு மகன் பிறந்த பின்னர் எனது உறவினர் வீட்டுக்கு மகனுடன் சென்றேன். என் மனைவி மகனுக்குச் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த போது தோழியின் தங்கை என் மனைவியிடம் சொன்னது “ இவன் என் வயிற்றில் இருந்து பிறக்க வேண்டியவன், எங்கோ பிறந்திருக்கிறான்”. என் மனைவி என்னிடம் வந்து சொன்னாள். அப்படியா சொன்னாள் என்று சொல்லிச் சிரித்து வைத்தேன்.

தோழியுடன் காதல் வயப்பட்டிருந்த போது அவளின் சிரிப்புக்காக நாள் முழுதும் தவமிருப்பேன். அந்த நேரங்களில் இந்தப் பாடலைத்தான் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பேன். நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.

Monday, November 24, 2008

சாட்டிலைட் இன்டர்நெட்

நிமிடத்தில் கண்டம் விட்டு கண்டம் தகவல்கள் பரிமாறவும், இருந்த இடத்திலிருந்தே விரும்பக்கூடிய தகவல்களைப் பெறவும், மற்ற இன்னபிற வசதிகளையும் இன்டர்நெட் மூலம் இன்றைய உலக மாந்தர்கள் அனுபவித்து வருகிறார்கள். வளர்ந்த நகரங்களில் எளிதாக பிராட்பேண்ட் அகலக்கற்றை, டயலப் மூலம் இண்டர் நெட்டினைப் பயன்படுத்தலாம். ஆனால் டெலிபோனோ அல்லது செல்போனோ வயர்களோ செல்லாத ரூரல் ஏரியாக்களில் எப்படி இணையத்தை பயன்படுத்துவது ? காட்டுக்குள் செல்ல வேண்டுமென்ற சூழ் நிலையில் அங்கிருந்து எப்படி இணைய உலகில் தொடர்பு பெற முடியும் ? அதற்கும் வழி இருக்கிறது. சாட்டிலைட் மூலம் இணைய இணைப்பைப் பெறுவதன் பெயர் தான் சாட்டிலைட் இன்டர்நெட். ஹாலிவுட் சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள். லேப்டாப்பை வைத்துக் கொண்டு என்னென்னவோ செய்து கொண்டிருப்பார்கள். எங்கோ ஒரு அத்துவானக் காட்டிலிருந்து கொண்டு இமெயில் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். அதெல்லாம் எப்படிச் சாத்தியமென்று என்றாவது யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா ? எப்படி செயல்படுகிறது என்பதனை இப்பதிவில் படித்துப் பாருங்கள்.

இணைப்புக்கு தேவையானவை : இரண்டு அல்லது மூன்றடி அகலமுள்ள டிஷ் ஆண்டனா, சிக்னல் ரிசீவர், மோடம் மற்றும் கோயாக்சில் கேபிள். இவை தான் சாட்டிலைட் மூலம் இணைய வசதி பெறத் தேவையானவை.

கருவிகளைப் பொறுத்துவது எப்படி : டிஷ் ஆண்டனாவை (சரியான திசையில் பொறுத்த வேண்டும்) சர்வீஸ் புரவைடரின் சாட்டிலைட்டின் சிக்னல் பெறும் வகையில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். கோயாக்ஸில் கேபிள் மூலம் சர்வீஸ் புரவைடர் தரும் மோடத்தை டிஸ் ஆண்டனாவில் பொருத்தப்பட்ட ரிசீவருடன் இணைக்க வேண்டும். மோடத்திலிருந்து ஈதர்னெட் மூலம் கணிப்பொறியில் இணைக்க வேண்டும். கணிப்பொறியில் டிசிபிஐபி வசதி இருக்க வேண்டும். விண்டோஸ் ஆபரேட்டிங்க் சிஸ்டம் இருந்தால் போதும்.

எப்படிச் செயல்படுகிறது : கணிப்பொறியிலிருந்து வரும் சிக்னல் ஆண்டனாவிலிருந்து நேரடியாக சாட்டிலைட்டுக்கு அனுப்பப்படும். சாட்டிலைட் சர்வீஸ் புரவைடரின் ஹப் செண்டருடன் தொடர்பில் இருக்கும். இந்த ஹப் செண்டர் இண்டர்னெட்டுடன் தொடர்பில் இருப்பதால் பயன்படுத்துவோரிடமிருந்து வரும் வேண்டுகோளுக்கேற்ப தேவைப்படும் தகவல்களை பெற்று சாட்டிலைட்டுக்கு அனுப்பி வைக்கும். சாட்டிலைட்டிலிருந்து கணிப்பொறிக்கு தகவல்கள் அளிக்கப்படும். இங்கு சாட்டிலைட், ஹப் செண்டர்கள் கேட்வேயாகச் செயல்படும்.

அமெரிக்காவில் இந்த சர்வீசைத் தருவதற்கு கம்பெனிகள் இருக்கின்றன. மாதமொன்றுக்கு நான்காயிரம் ரூபாயும், மேற்படி பொருட்களை நிறுவவும் வருடத்திற்குமாக மொத்தம் கிட்டத்தட்ட 15,000 ரூபாயும் செலவாகும். தற்பொழுது ஒரு எம்பி அளவுக்கு டவுன்லோட் ஸ்பீட் வசதியும், 126 கேபி அளவுக்கு அப்லோடு வசதியும் தருகிறார்கள். இந்தியாவில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் படிக்கும் வாசகர்கள் தகவல்கள் தரலாம்.

Sunday, November 23, 2008

இறைவனும் ரித்திக்நந்தாவும்

காதல் திருமணம். வீட்டை விட்டு என்னுடன் வந்து விட்டார் மனைவி. தாலி கட்டிய பின்னர் காவல்துறையில் தஞ்சம் அடைந்து, சுற்றத்தாரின் புறக்கணிப்பெல்லாம் சமாளித்து இரு மாதங்களுக்குப் பிறகு எனது உறவினர் வீட்டில் விட்டு விட்டு தொழிலை கவனிப்பதற்காக சென்று விட்டேன்.

மனைவி வயிற்றில் என் வாரிசு ரித்திக் நந்தா. மனைவிக்கு தங்கிய இடம் புதுசு. புது உறவுகள். மூன்று மாடி வீட்டில் செல்லக் குழந்தையாய், துள்ளித் திரியும் மானாய் வளர்ந்தவள். உயர்தர பொன்னி அரிசி சாப்பிட்டு, பஞ்சு மெத்தையில், மின் விசிறி கீழே உறங்கியவள். எனக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வந்தாள். அவள் பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்த ஒரு சுடிதார். காதில் ஒரு இரண்டு கிராமில் தோடு ஒன்று.
என் உறவினர் வீட்டில் ஒரு மாதம் தங்கியிருந்தாள். நித்தம் வாந்தி. சாப்பாடு பிடிக்கவில்லை. கொட்டை அரிசி சாப்பாடு. எல்லாம் புதுசு. பெரும்பாலும் பட்டினிதான் கிடப்பாள். விடிகாலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பசி எடுக்குமாம். என்னவளுக்கும் பசி. ஆனால் உறவினர் வீட்டிலோ ஒன்பது மணிக்கு தான் சாப்பாடு கிடைக்கும். வெளியில் சொல்லவும் பயம். மார்கழி மாதம் அது. என் மனைவி தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் ஒரு சிவன் கோவில். அங்கு மார்கழி மாதம் வந்தால் தினமும் விடிகாலையில் பஜனை செய்வார்கள். தேவாரம், திருவாசகம், வள்ளலார் பாடல்கள் பாடுவார்கள். பஜனை முடிந்ததும் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் சுண்டல் தருவார்கள். நான் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் காலத்தில் அந்தக் கோவில் சிவபெருமானை தினமும் சந்தித்து சிறிது நேரம் ஏதாவது பேசி விட்டு, கும்பிட்டு வருவேன்.





விடிகாலையில் என் மனைவிக்கு பசி வந்து விடும். பசியால் சுருண்டு விடுவாள். அவள் தங்கியிருந்த எனது உறவினரின் பையன் தினமும் கோவிலுக்கு சென்று விட்டு, வரும் போது பொங்கலை வாங்கி வந்து தருவான். அவன் வரும் வரை பசியோடு பாட்டு எப்போ முடியும் என்று பாட்டை கேட்டபடியே காத்து இருப்பாள். அந்த பொங்கலை சாப்பிட்டு என் மனைவி பசி ஆறுவாள்.

இதை நேரில் சந்தித்தபோது என்னிடம் சோகமாக சொல்லுவாள். மகன் பிறந்து என் சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் சிவபெருமான் கோவிலைப் பார்த்தால் என் தகப்பனின் நினைவு தான் வரும். வயிற்றில் இருந்த என் மகனுக்காக சாப்பாட்டை அனுப்பி வைத்த சிவபெருமானின் அருளை நினைத்து நினைத்து பெருமிதம் கொள்வேன். எனக்கு கடவுள் ஆசி உண்டு அல்லவா.

திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பார்கள். என் விசயத்தில் அதுதான் நடந்தது. கர்ப்ப காலத்தில் என் மனைவிக்கு சாப்பாடு கொடுத்தது தெய்வம். பசி அறிந்து உதவி செய்தது தெய்வம்.

ஆகவே நண்பர்களே தெய்வத்திடம் வேண்டுங்கள். நமக்கு வேண்டியதை தரும் கற்பக விருட்சம் அது. எப்படியாவது யார்மூலமாவது உதவி செய்ய அனுப்பிவிடும். தொலைபேசி இல்லா காவல்காரர் அவர். சேவைக்கு கட்டணம் வசூலிக்காதவர் அவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர் அவர். எண்ணற்ற பேண்டு வித் கற்றையை உடையவர். எத்தனை கோடி பேர் வேண்டுமென்றாலும் ஒரே நேரத்தில் ஆக்சஸ் செய்யலாம் அவரின் உள்ளத்தை. அவரின் உள்ளத்தில் உமது அழைப்பை பதிவு செய்தால், ஓடோடி வருவார் உதவி செய்ய. அதற்கு தேவை உமது உள்ளத்தை அவரின் உள்ளத்தோடு இணைக்க வைக்கவேண்டியது மட்டும் தான். இதற்கு மாத வாடகை தேவையில்லை. இலவசம் அவனை அழைப்பதற்கு. அவுட்கோயிங்கும் இலவசம். இன்கமிங்கும் இலவசம். முக்கியமாக ஹேன்ட் செட் அது கலராகவோ அல்லது பிளாக்காவோ இருக்க தேவையே இல்லை.

அவர் நமக்கு ஒரு உகந்த ஒரு தோழன். அவரிடம் ரகசியத்தை சொன்னால் அது தான் ரகசியம். சாவி இல்லாத பெட்டகம் வைத்து இருக்கின்றார். நம்மை தவிர வேறு எவரும் அந்த ரகசிய பெட்டகத்தை திறக்க முடியாது. அழையுங்கள் ஓடோடி வருவார். நாம் எப்போது அழைப்போம் என்று காத்து இருக்கிறார் அவர்...

Wednesday, November 19, 2008

சொர்க்கமே என்றாலும்....

இப்பாடலை எனது மனம் கவர்ந்த பதிவர் ஒருவருக்காக இங்கு பதிவிடுகிறேன்.




அனானிமஸின் கமெண்ட்ஸ்சுக்காக பழைய போட்டோவை இணைத்துள்ளேன். இந்த போட்டோவில் ஒரு விஷயமிருக்கிறது. என் மனைவியால் மூன்று வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எனது புகைப்படங்களிலேயே இது தான் அழகாய் இருப்பதாக அவளிடம் சொல்வேன். அதற்கு அவளின் பதில் : கணவர் எந்த போஸில் அழகாய் இருப்பார் என்று மனைவிக்குத் தான் தெரியும்.

Tuesday, November 18, 2008

நடமாடும் தெய்வங்கள்

இன்று காலையில் வீட்டுக்கு வெளியே ஜீப் சத்தம் கேட்டது.

” என்னம்மா சத்தம் ? “
“ மூன்று மாத பிள்ளையை கொன்று போட்டிருக்கிறார்களாம்” என்றார் மனைவி.
“ என்ன ? “
“ ஆமாங்க.. யாருன்னு தெரியலை. போலீஸ் வந்திருக்காங்க” என்றார் மனைவி

பொக்கை வாய்ச் சிரிப்பும், பிஞ்சு விரல்களும், பால் வழியும் வாயோடு சிரிக்கும் குழந்தையையா கொன்று இருக்கிறார்கள்.
பிஞ்சுப் பாதங்களால் நெஞ்சில் உதைத்தால் பிறவிப்பயன் நிறைவேறுமே. நடமாடும் இயற்கையின் அற்புதமல்லவா குழந்தை. இறைவனின் படைப்பில் உயிரோடு மானிடருக்கு கிடைக்கும் சொர்க்கமல்லவா குழந்தை. வீட்டுக்கு வரும் நடமாடும் கடவுள்தானே குழந்தைகள்.....

நெஞ்சம் கனத்து, கண்ணீரில் நனைந்தது கண்கள்.

பிள்ளை இல்லா அன்னை ஒருத்தியின் குரலில் வெளிப்படும் வேதனையினைக் கவனியுங்கள்.

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா
கனிந்த விட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா
கண்ணீரில் வாடுதடா....

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

பெற்றெடுக்க மனமிருந்தும் பிள்ளைக்கனி இல்லை
பெற்றெடுத்த மரக்கிளைக்கு மற்ற சுகம் இல்லை
சுற்றமென்னும் பறவையெல்லாம் குடியிருக்கும் வீட்டில்
தொட்டில் கட்டி தாலாட்டும் பேரு மட்டும் இல்லை
பேரு மட்டும் இல்லை

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

வேண்டுமென்று கேட்பவருக்கு இல்லை இல்லை என்பார்
வெறுப்பவருக்கும் மறுப்பவருக்கும் அள்ளி அள்ளித் தருவார்
ஆண்டவனார் திருவுள்ளத்தை யாரறிந்தார் கண்ணே
யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே
யார் அறிவார் கண்ணே

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

* * * * *

எப்படியடா உங்களுக்கு இப்படியெல்லாம் செய்ய முடிகிறது. பாவிகளா... பாவிகளா....

துள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்



ஹாட்சாட், லெபனான் பாப் பாடகி நான்ஸி அஜ்ரமின் குரல் - பாடலைக் கேட்டால் மனசு ஆற்றிலிருந்து வெளியே குதித்த மீனாய் துள்ளித் துள்ளி குதிக்கும்.

உடம்பிலொரு மின்சார உணர்ச்சி கிளம்பி தலை முதல் கால்வரை கிறுகிறுக்க வைத்து விடும்.

டயல் அப் வாசகர்களுக்காக எம்பிதிரி வடிவில் கேட்டு மகிழுங்கள்.

Wednesday, November 5, 2008

ஊட்டி சென்று வந்த கதை - 3

போட் ஹவுசில் அன்றைய தினம் நிறைய மக்கள் குவிந்திருந்தார்கள். ஆளாளுக்கு மொபைல் போன், கேமராக்களுடன் தான் திரிகிறார்கள். மனிதர்களுக்கு தன் இருப்பை உலகுக்கு காட்ட வேண்டுமென்ற ஆவல்(ஆதிக்க மனப்பான்மையாக இருக்குமோ?). ஃபோட்டோக்களாக எடுத்துக் கொண்டிருந்தனர். சுற்றுலா வந்ததன் நோக்கத்தை முற்றிலுமாக மறந்து விட்ட மனிதப் பிறவிகள். இயற்கையை அதன் அமைதியோடு மனதுக்குள் உணர்ந்தால் தான் அதன் மகத்துவம் புரியும். ஆனால் இவர்கள் செய்த காரியங்கள் புற அழகிற்கும், நாக்குச் சுவைக்கும் அடிமையாய்ப் போன மனித அகதிகள் போன்றவர்கள் இவர்கள் என்பதனை உணர்த்தின.





சுற்றி வர கடைகள். எங்கு நோக்கினும் மக்கள் வெள்ளம். அமைதியான, அழகான அந்த இடத்தை வணிக அரங்கம் போல உருமாற்றியிருந்தார்கள். மக்கள் கடைகளில் குவிந்திருந்தார்கள். சோளம், ஐஸ் கிரீம் என்று தின்பண்டங்களின் விற்பனை சூடு பறந்தது. குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களில் நேற்றைய குழந்தைகளும் இன்றைய குழந்தைகளும் வீல் வீல் என்று சத்தமிட்டபடி விளையாடினார்கள். தம்பியின் வற்புறுத்தல் காரணமாக போட்டில் ஏறினேன். வீல் சேர் அனாதையாக நின்றது.

தூரத்தில் இருந்து வீல் சேரைப் பார்த்தேன். ”வீடு வரை உறவு. வீதி வரை மனைவி. காடு வரை மக்கள். கடைசி வரை யாரோ“ கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வந்தது. சில இடங்களில் சில தேவையற்றுப் போகும். மனிதனும் தன் வயதான காலத்தில் மற்றவருக்கு பயனில்லாப் பொருளாய் ஆகிவிடுகிறான். உலகம் பொருள் சார்ந்த வாழ்க்கையின் பால் நடைபோடத் துவங்கி விட்ட காரணத்தால், மனித உணர்வும், உணர்ச்சியும் கவனிப்பாரற்று கிடக்கின்றன. அவை மனோ தத்துவ மருத்துவர்களால் மறு சீரமைப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. புறவுணர்வு வாழ்க்கையின் பால் மூழ்கிக் கிடக்கும் மனிதனுக்கு அகவுணர்வு வாழ்க்கையின் மகத்துவம் புரிதலில்லை. அதை சில ஆன்மீகவாதிகள் என்போர் காசாக்கி வருகின்றனர். அவ்விடத்திலும் கூட்டமுண்டு. அவ்விடமும் வணிக அரங்காக மாற்றமடைந்திருக்கும். ஏனென்றால் உலக மாந்தர்கள் நுகர்வோர் வாழ்வினை மட்டுமே நாகரீகத்தின் உச்சக்கட்டமாக நினைக்கின்றார்கள். இவர்களின் பொழுது போக்கு மல்டி பிளக்சுகளிலும், உயர்தர ஹோட்டல்களிலும் ஒளிந்து கிடக்கிறது. அங்குச் செல்லத் தேவையான பொருளாதாரத்திற்காக தன் வாழ்வையே பலியாக்கும் விட்டில் பூச்சிகளாய் இன்றைய மனிதர்கள் உலா வருகிறார்கள்.

அமைதியான தண்ணீர். பச்சை நிறத்தைப் பிரதிபலித்தது. சுற்றிலும் மரங்கள். தண்ணீரில் படகுகள் மிதந்தன. வாழ்க்கையில் மனிதர்கள் மிதப்பது போல. படகும் மக்களை சுமந்து கொண்டு தண்ணீரில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. மக்கள் தன் மக்களை சுமப்பது போல.

தனி போட் எடுத்துக் கொண்டு நானும், தம்பியும், எனது மனைவியும், தம்பி மனைவியும், என் மகள் மற்று மகனுடன் போட்டில் பயணித்தோம்.

வலிந்து வலிந்து போட்டைத் தள்ளும் மனிதரைப் பார்த்தேன். உள்ளம் நிலை கொள்ள வில்லை. வலித்தது. ஒரு ஜாண் வயிற்றுக்காக கைகள் வலிக்க வலிக்க, மூச்சுத் திணற திணற கால்களை உதைத்துக்கொண்டு கண்கள் வெளிவரும் அளவுக்கு இரு கைகளாலும் துடுப்பினால தண்ணீரைத் தள்ளிக் கொண்டு வந்தார். மனதுக்குள் வலித்தது. மனித வாழ்க்கை இவ்வளவு குரூரமானதா ?

ஏன் ???????????????????????????????????????????????????????????

Monday, November 3, 2008

சந்தவை தயாரிப்பில் நான்

ஒரு மாலை நேரம்.கணிப்பொறியில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தேன். கிரைண்டர் சத்தமிட்டது. ச்சே இவளுக்கு எப்ப பாரு இதே வேலை. எரிச்சலாக இருக்க, கதவை சாத்த முயற்சித்த போது, அம்மணி ( அதாங்க என் மனைவி)

"என்னங்க இங்க வாங்க " என்று அழைக்க,

ச்சே இவளுக்கு இதே வேலையாப் போச்சு எப்ப பாரு எதையாவது சொல்லி மூடை கெடுத்து விட்டு..ச்சே ச்சே. எதுக்குடா கல்யாணம் பன்னினோம் என்று ஒரே வெறுப்பா இருந்தது. வேறு வழி இல்லாததால் அழைப்புக்கு உடன்பட வேண்டியதாகி விட்டது.கோர்ட்டு சம்மன் எல்லாம் தூசு பண்ணிடலாம். ஆனா இந்த அம்மணிகள் உத்தரவு இருக்கே கேட்டவுடன் குலை நடுங்க செய்கின்றன..

" எதுக்கு வரச் சொன்னே " கோபத்துடன் நான்.
" இதை பிடிச்சு திருகுங்க " என்றாள். எனக்கு சரியான கோபம். வேலையைக் கெடுத்து விட்டாளே என்று.
" இதுக்கா கூப்பிட்டே , ஏன்டி உசுரே எடுக்கிறே "
" உஸ், பேசாம சொல்லுறதை செய்யுங்க " என்றாள். பார்வையா அது. அப்படி ஒரு கொடூரமய்யா அது..
அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். ஹிட்லராம் ஹிட்லர். அவனெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை. இந்த அம்மணிகள் தானய்யா கொடுங்கோலர்கள். மனசாட்சியே இல்லாத இடி அமீன்கள்.

சமயலறையில் ஒரு வஸ்து இருந்தது. மாமியார் உபயமாம். மாமியார்கள் தானைய்யா எமன். ஏற்கனவே ஒன்று தலைமீது ஏறீ உட்கார்ந்து கொண்டு ஆட்டம் போடுது. இதுல இது வேற. பார்க்க ஸ்பீல்பெர்க் படத்தில் வருமே ஒரு இயந்திரம், பூமிக்குள் இருந்து வெளியே வந்து ஆட்கள் எல்லாம் பிடித்து முழுங்குமே, மூனு காலு கூட இருக்குமே, அது போல இருந்தது.

இடியாப்ப உரல் பாத்து இருக்கீங்களா ? அது போல தான் இருந்தது அந்த வஸ்து. ஆனா அதை மூன்று கால்களுக்கு இடையில் பொருத்தி மேலே திருகு போல இருந்தது அதை திருகினால் உரலுக்குள் சென்று அழுத்துகிறது. உரலுக்குள் மாவை வைத்தால் பிழிந்து கம்பி போல வெளியே தள்ளுகிறது.

அம்மணி இட்லி போல (எங்க வீட்டு இட்லி வைத்து தான் எல்&டி பெரிய பெரிய கட்டிடம் எல்லாம் கட்டுறாங்க) இருந்ததை எடுத்து உரலுக்குள் வைத்து

" ம், திருகுங்க " என்றாள்.

ராணுவ உயர் அதிகாரி கூட இப்படி எல்லாம் உத்தரவு போட மாட்டார்களய்யா. அங்கே வேலை பிடிக்கலைன்னா ராஜினாமா செய்து விடலாம். இங்கே முடியுமா ? விதி.. யாரோ நம்ம மன்றத்துல கல்யாணம் செய்யபோறதா எழுதி இருந்தாங்க . சமயம் பார்த்து அது நினைவுக்கு வர, அவரை நெனச்சு பாவமா இருக்க, நொந்தபடி அந்த கம்பியை பிடித்து திருகினால், அட நொக்காமக்கா, இட்லியா அது இல்லை வெள்ளை குண்டா. திருகவே முடியலை. கையெல்லாம் எரிச்சல் வர, ஆம்பளை இல்ல, முக்கி முக்கி ( சத்தம் வெளியே தெரியாமல் தானய்யா )ஒரு வழியா திருகி முடிக்க, வெள்ளை வெளேரென்று அது கீழே இருந்த தட்டில் சுருள் சுருளாக விழுந்தது. அதற்குள் எனக்கு வேத்து விருவிருத்து போயிருச்சு.

ஒரு வழியா இருந்த வெள்ளை குண்டுகளை எல்லாம் உரலுக்குள் திணித்து அம்மணி " ம்... " என்று உத்தரவு இட நான் விக்கி விதிர்த்து முக்கி முனகி கை எரிச்சல் பட பிழிந்து முடித்தேன்.

அருகில் அமர்ந்து இந்த சமையல் போரை பார்த்துக்கொண்டு இருந்த என் ஒன்றரை வயசு மகளுக்கு தட்டில் அந்த சந்தவையை போட்டு கொடுக்க, கீழே அமர்ந்து கொண்டு சிறிய கையால் எடுத்து வாயில் வைத்து ஒரு உறிஞ்சு உறிய, வாய்க்குள் வைத்து மென்றபடி என்னை பார்த்து சிரித்தது. கை எரிச்சல் எல்லாம் போயே போச்சு...

இது தான் வாழ்க்கையா ?

ஆமா சந்தவை எப்படி தயாரிப்பது என்று உங்களுக்கு சொல்லனும் இல்லையா...

தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - இரண்டு கப்
தேங்காய் - அரை மூடி
ஏலக்காய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அரிசியையை மூன்று மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் போட்டு அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து, ஏலக்காயை மறக்காமல் போட்டு நைசாக ( சந்தனம் போல ) அரைத்து எடுத்து, கடைசியில் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து வைத்துகொண்டு, இட்லி பாத்திரத்தில் குழியில் ஊற்றி பத்து நிமிடம் வேகவைக்க வேண்டும். வெந்தவுடன் எடுத்து, சூடாக அந்த வஸ்துவுக்குள் வைத்து பிழிந்தால் சூடான மணமான சந்தவை தயார். இதனுடன் தேங்காய் பால் அல்லது சட்னி சேர்த்து சாப்பிட்டால் அருமை...

--------------------------------------------------------------
05-08-2007 அன்று தமிழ் மன்றத்தில் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு
--------------------------------------------------------------

Sunday, November 2, 2008

சங்கரா மீன் குழம்பு

உழவர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிய பிறகு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். கூடவே மனைவியும், மகளும். மீன்கடையில் அழகழகாக மீன்களை அடுக்கி வைத்திருந்தனர். சனிக்கிழமை கவுச்சி சாப்பிடாமல் இருங்கள் என்ற எனது அஸ்டாராலஜிஸ்ட் நண்பரின் கட்டளையினை இன்று ஒரு நாள் மீறித்தான் பார்ப்போமே என்று மனைவியிடம் மெதுவாக அம்மணி, இப்படி இப்படி என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்ய, முறைத்தாள்.

சரணாகதி தத்துவத்தை உதிர்த்தேன், வேறு வழியின்றி மீன் சமைத்துத் தர சம்மதித்தாள். சட்டத்தையும் சில சமயம் வளைத்து விடலாமல்லவா? எங்கள் வீட்டுச் சட்டம் வயிற்றுக்காக சற்றே வளைந்து கொடுத்தது. அதனால் கிடைக்கப்போவது மீன் குழம்பு.

சங்கரா மீன் வாங்கிக் கொண்டிருக்கும் போது அருகில் அடுக்கி வைத்திருந்த நண்டு சோகமாக என்னையே பார்ப்பது போல தோன்றியது. எனக்கு ஒரு வழக்கமிருக்கிறது. யாரேனும் சோகமாக முகத்தை வைத்திருந்தால் எனக்கு பார்க்க பொருக்காது.உடனடி நிவாரணம் செய்ய முற்படுவேன். அந்த வழக்கத்தின் காரணமாக நண்டின் சோகத்தை போக்க விரும்பினேன். அம்மணியை நோக்கி ஒரு ரொமாண்டிக் லுக் விட, அடுத்த நிமிடம் நண்டும் மெனுவில் சேர்ந்தது.

உள்ளுக்குள் ஒரே கும்மாளம். ஆகா இன்னிக்கு மீன் குழம்பும், நண்டு வறுவலும் கிடைக்கப்போவதை எண்ணி எண்ணி மனசு எக்காளமிட்டது.

மீன் குழம்பினை எப்படிச் செய்வதுன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க..

கொஞ்சம் தளர நல்லெண்ணெய் விட்டு வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை கிளறி விட்டு, அதனோடு சிறிய வெங்காயம் மற்றும் நடுவில் கீறிய இரண்டு பச்சை மிளகாயையும் போட்டு வெங்காய வாசம் போகும் வரை வதக்கி அத்துடன் தட்டி வைத்த பூண்டும், இரு நறுக்கிய தக்காளியுடன் துளியூண்டு உப்பும் சேர்த்து வதக்கிய பிறகு மல்லித்தூள், மிளகாய்தூள் சேர்த்து வாசம் போகும் வரை, அதாவது எண்ணெய் மசாலிவிலிருந்து பிரியும் வரை வதக்கிய பிறகு புளி சேர்த்து நன்கு கொதிக்க வைத்த சாற்றில் சங்கரா மீனைச் சேர்த்து இரு கொதி விட்டு இறக்கி வைத்து மேலே மல்லித்தழை தூவி, சிறிது நேரம் சென்ற பிறகு சுடு சோற்றில் குழம்பினை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சொர்க்கம் அவ்விடத்தில் இருக்கும்.

இப்போ நண்டு வறுவல் எப்படிச் செய்வதுன்னு சொல்றேன்.

அரை மூடி தேங்காய், நான்கு பல் பூண்டு, இரண்டு வெங்காயம், அரை டீஸ்பூன் சோம்பு, நான்கு சிவப்பு மிளகாய் இவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொண்டு அத்துடன் கழுவிய நண்டினை சேர்த்து பிசைந்து தேவையான அளவு உப்புச் சேர்த்து வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் மசாலாவுடன் இருக்கும் நண்டினை சேர்த்து ஒரு கிளறு கிளறி மூடி வைத்து விடவேண்டும். சிறிது நேரத்தில் நண்டு வெந்து விடும். மசாலா நன்கு சிவக்கும் வரை பிரட்டி எடுத்தால் வாசம் ஊரையே தூக்கும்.
அந்த மசாலாவின் சுவையே தனி. எந்த நட்சத்திர ஹோட்டலிலும் கிடைக்காத அருமையான சுவை.

கிடைக்கப்போகும் மீன் குழம்பும், நண்டு வறுவலும் எண்ணங்களில் விரவ, வண்டியை விரட்டினேன்.

”ஏங்க, வெங்காயம், பூண்டு, தக்காளி நறுக்கி தருகின்றீர்களா” என்று மனைவி கேட்க, வேறு வழி. மீன் குழம்பு வேண்டுமே, நண்டு வறுவல் வேண்டுமே. மறுக்க முடியுமா? (நேரம் பார்த்து காரியத்தை நடத்திக் கொள்வது இப்படித்தான் போலும். தலையணை மந்திரமாக இருக்குமோ??)

சின்ன வெங்காயம் உரித்து இரண்டாக வெட்டினேன். பூண்டினை தோல் உரித்து வைத்தேன். தக்காளிகளை சிறிய சிறிய பீஸ்களாக நறுக்கி வைத்தேன். தேங்காயை திருகி எடுத்து வைத்தேன்.

முக்கால் மணி நேரத்தில் நண்டு மசாலாவின் வாசனையும், மீன் குழம்பு வாசனையும் என்னைச் சூழ்ந்தது. சாப்பாடு தயார் என்றார் மனைவி. இன்று ஒரு கட்டு கட்டி விட வேண்டுமென்று நினைத்தபடி அறையிலிருந்து வெளி வந்தேன்.

மூன்று தட்டுகளில் சூடாக சாதம் எடுத்து வைத்தார். மகனும், மகளும் ”அப்பா நண்டினை எடுத்துக் கொடு “ என்றார்கள். பிள்ளைகள் இருவரும் சாப்பிடட்டும் பின்னர் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றுச் சொல்லி விட்டு, நண்டு மசாலாவைச் சோற்றில் சேர்த்து பிசைந்து ஊட்டி விட்டேன். நண்டின் சதையினை எடுத்து ஊட்டி விட்டேன். ஆர்வமாக “ அப்பா நல்லா இருக்கு” என்று சொல்லியபடியே சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும், நாங்கள் இருவரும் சாப்பிட அமர்ந்தோம். ரித்தியும், அம்முவும் நல்லா சாப்பிட்டாஙகல்ல என்று சொல்லியபடி மீன் குழம்பினை சோற்றில் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டேன். அதிகம் சாப்பிட இயலவில்லை. மனைவியோ ஒரு கரண்டி சாதத்தைக் கூட சாப்பிடவில்லை. பிள்ளைகள் இருவரும் சாப்பிட்ட அழகும், அவர்களின் சந்தோஷமும் இருவருக்கும் சாப்பிட்ட நிறைவினைத் தர, நண்டும் மீன்குழம்பும் சட்டியில் இருந்தன, ஆனால் எங்களுக்குத்தான் சாப்பிடப் பிடிக்கவில்லை.

Friday, October 31, 2008

அன்னை இந்திராகாந்தி

இந்தியாவின் இரும்புத் தலைவி. ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது இந்திராகாந்தி அவர்கள் இறந்து விட்டார் என்று பள்ளியில் விடுமுறை விட்டார்கள். ஆனால் நாளை காலை அவசியம் அனைவரும் வந்து விட வேண்டுமென்று உத்தரவு.

மறு நாள் காலை ஆஜர். என் மூன்று சக்கர வண்டியில் இந்திராகாந்தி அவர்களின் புகைப்படத்தை முன்புறம் இணைத்து மாலைகள் போட்டு, வண்டி முழுவதும் பூக்களால் தோரணம் அமைத்தார்கள். வண்டிக்குள் நான். வண்டியைத் தள்ள இரு தோழர்கள். என் பின்னால் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் அணி வகுத்தார்கள். கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரம். ஊர்வலம் சென்றது. வழியில் யார் யாரோ சாலையில் விழுந்து கும்பிட்டார்கள். ஊர்வலத்தை எங்கள் ஊர் கடைத்தெருவில் முடித்தோம். நான் வீடு வந்து சேர்ந்து விட்டேன். எனக்குப் பெருமையாக இருந்தது. பள்ளியே என் பின்னால் வந்தது அல்லவா. மாலையில் இந்திராக் காந்தி அவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தி குளத்தில் குளித்து விட்டு வந்தது எங்கள் ஊர்.

வாழ்ந்தால் அவர் மாதிரி வாழனும். மக்கள் இந்திராக்காந்தி அவர்களின் மேல் காட்டிய அன்பினை நினைத்தால். எங்கோ ஒரு பட்டிக்காட்டு மக்கள் அவர் மீது காட்டிய வெறித்தனமான பாசம்.. மனிதர்கள் பாசத்தால் கட்டப்பட்டவர்கள்.
இப்பதிவை எழுத காரணமாயிருந்தவர் : திவ்யா. நன்றி திவ்யா.

Wednesday, October 29, 2008

சாருவுக்கு கடவுளின் மொழி கட்டுரைக்காக எழுதிய கடிதம்

என் வசத்திலேயே இல்லை

வாத்தியாரே....

நான் இன்று என் வசத்திலேயே இல்லை. நான்ஸி அஜ்ரமின் குரலோடு மிதந்து கொண்டிருக்கிறேன். மிதந்து கொண்டிருக்கிறேன். காற்றோடு காற்றாக.. காற்றின் ஊடே மிதந்து கொண்டிருக்கிறேன். மனசு லேசாகி விட்டது. கண்ணை மூடினால் இசைவெள்ளம் என்னைச் சூழ்கிறது. மிதக்கிறேன்.. மிதக்கிறேன்..

என் மனசுக்கு இதமாய் ஹிந்துஸ்தானி இசையும், புல்லாங்குழலும் அதன் தனி இசையும் எங்கோ ஒரு அத்துவானக் காட்டில் ஒற்றையாய் பறந்து கொண்டிருக்கும் என் மனதில் கேட்கும் இசையாய் சிலிர்ப்பினை உண்டாக்கும். பிறந்து பத்து நாளேயான வெது வெதுப்பான சூட்டில் இருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பின் இசை போன்ற அனுபவத்தையும், பரவசத்தையும் தருகிறார் நான்சி அஜ்ரம். என் தாயின் மடியில் தலை வைத்து உறங்கும் அந்த வேளையில் அவளின் விரல்கள் தலைமுடிக்குள் அலைந்து கொண்டிருக்கும் போது உயிரையே தடவும் உணர்ச்சி உருவாகும். அவ்வித உணர்ச்சியினை உண்டாக்குகிறது நான்ஸி அஜ்ரமின் குரல். என் அன்பு மகளின் இதயத்துடிப்பினையே இதுவரை இசைக்கெல்லாம் இசையாக நினைத்திருந்தேன்.என்னைத் தாலாட்ட என் மனைவியின் நெஞ்சின் துடிப்பு ஒன்றே போதுமானதாயிருந்தது. அந்த வரிசையில் நான்ஸி அஜ்ரமின் பாடல்கள் சேர்ந்து விட்டன. நான்ஸி அஜ்ரமை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள்.

காதல்... காதல்... காதல்...
காதல் போயின் சாதல்.......... என்றான் பாரதி.

அவன் சொல்ல வந்த அர்த்தம் புரியவில்லை. இன்று தான் புரிந்து கொண்டேன்.

காதலின் வேதனையை நான்ஸி அஜ்ரம் பாடும் தொனி சித்ரவதைகள் எல்லாவற்றிலும் முதலிடத்தைப் பிடிக்கும் என்று என்னுள் உணர நேர்கிறது. சமீபத்தில் ஹாஸ்டல் என்ற திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. மனிதர்களைச் சித்ரவதைப் படுத்தும் படம். வேதனை... வேதனை... வேதனை... எழுத்தில் எழுத இயலா வேதனை... படமாக்கியிருக்கும் விதம் மனதில் ரத்தம் சொட்ட வைக்கும். சித்ரவதையின் உச்ச கட்டமாய் சிலிர்த்து நிற்கும் உடம்பு..... கூர்மையான ஊசியை வைத்து நறுக் நறுக்கென இதயத்தைக் குத்தி, இதயத்தில் இருந்து வழியும் சூடான ரத்தம் வழியும் போது உண்டாகும் வலியினை விட உச்சகட்டமானது நான்ஸி அஜ்ரமின் காதல் வேதனைக் குரல்.

காதல் கொண்டுள்ள மனிதன் தான் வேதனை உலகின் உச்சகட்ட வேதனையை அனுபவிக்கிறான்.... ரத்தமின்றி, ஆயுதமின்றி மனிதனை சித்ரவதை செய்யும் காதல் தான் அணு ஆயுதத்தை விட கொடுமையான ஆயுதம் என்பதில் வியப்பேதும் இல்லை.

அன்பன்,
தங்கவேல் மாணிக்கம், கோயமுத்தூர்.

Tuesday, October 28, 2008

நான்ஸி அஜ்ரமின் பாடல் எம்பி3 வடிவில்...

நான்ஸி அஜ்ரமின் பாடலைக் எம்பி3 வடிவில் கேட்க.... கேட்க......

கடவுளின் மொழி:நான்ஸி அஜ்ரம்:சாரு நிவேதிதா

என் இனிய நண்பர், எழுத்தாளர் சாரு நிவேதிதா இன்று காலையில் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தார்.

”தங்கம், அடுத்து வரும் கட்டுரைக்கான பாடல் தொகுப்பு இவைகள். அதற்கான வேலைகளை ஆரம்பிக்கின்றீர்களா ?”

எண்ணிப் பார்த்தேன். கிட்டத்தட்ட இருபது பாடல்கள். அட நொக்காமக்கா, இன்னிக்கு பெண்டு நிமிரப் போகுது என்று நினைத்தபடி, பாடல்களை ஒவ்வொன்றாக கேட்கத் துவங்கினேன்.




நான்ஸி அஜ்ரமின் இந்தப் பாடலைக் கேட்டேன். மெய் மறந்தேன். செல் போன் ரிங்காகி விட்டது இந்தப் பாடல். அண்ணனைக் கூப்பிட்டு போனுக்கு ரிங்க் பன்னுங்கள் என்று சொன்னேன். நான்ஸி அஜ்ரம் பாடினாள். காற்றில் மிதந்தேன். மிதந்தேன்...

பசி மறந்தோடியது. குளிக்கும் அறைக்குள் நுழைந்தேன். என்னைச் சுற்றி சுற்றி நான்ஸி அஜ்ரமின் குரல்கள் ஆரவாரித்தன.

குளியலை அரைகுறையாக முடித்து விட்டு வெளி வந்தேன். மனைவி புரூட்டை எடுத்துக் கொண்டு வந்தாள்.

”எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது” என்று சொல்லிய படி கணிணி அறைக்குள் நுழைந்தேன்.

”ஏங்க, பைத்தியம் பிடிச்சிருச்சா உங்களுக்கு“ என்றாள்.

சிரித்தேன். நான்ஸி அஜ்ரமின் குரலைக் கேட்க கேட்க என்னை மறந்தேன். இதோ நான்ஸி அஜ்ரம் தன் காதலனுக்காக பாடிக் கொண்டிருக்கிறாள்.

பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன். சாரு அவர்களுக்கு நன்றி...

Sunday, October 26, 2008

நேரமாகிக் கொண்டிருக்கிறது !!!!

எவ்வளவோ ஆசைகள்...
என்னென்னவோ விருப்பங்கள்...
இதனிலும்
படிக்க பல மணி நேரம்...
வேலைக்காக பல மணி நேரம்..
ஆன்மீகத்துக்காக பல மணி நேரம்..
மனைவிக்காக, மகனுக்காக, மகளுக்காக,
நண்பனுக்காக என்று பல மணி நேரம்...
இப்படி எத்தனையோ மணித்துளிகள்
பிறருக்காய்...
எனக்கான நேரம் வந்த போது,
என் வாசலில்
மரணம் வந்து நின்றது....

ஆகையால், எனக்கான நேரத்தில்
என்னை வாழவிடு விதியே....
நேரமாகிக் கொண்டிருக்கிறது.......

Thursday, October 23, 2008

Survival of fitness

எனது சில நண்பர்கள் சினிமா இயக்குனர்கள். அந்த இயக்குனர்களில் ஒருவர் ” தங்கம், புது படம் கமிட் ஆகியிருக்கிறேன். புது முகம் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆரம்பகால ரேவதி போல, புதுமுகம் தேவை, உனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டுப்பாருங்களேன் “ என்றார். எனது நண்பர்கள் பல பேரிடமும் சொல்லி வைத்திருந்தேன். அதில் ஒரு நண்பர் எனது முன் அனுமதி இல்லாமல் இரண்டு பெண்களிடம் எனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து விட்டார்.

மாலை நேரம், புது எண்ணிடமிருந்து அழைப்பு வந்தது.

”சார் மதுமதி பேசறேன், தங்கம் சாரா?”
“எஸ் சொல்லுங்கள் “
“சார், போட்டோ கிடைத்ததா “
” ஓ... நீங்களா, கிடைத்து விட்டது. இயக்குனருக்கு அனுப்பி இருக்கிறேன்”
“ஏதாவது பதில் வந்ததா சார்”
“இல்லேம்மா, டைரக்டரைப் பிடிக்க முடியவில்லை. அவரே கூப்பிடுவார். அதன் பின்னர் தான் தெரியும்”
“சார், வேற ஏதாவது வேணுமா ”
“ வேற ஏதாவதுன்னா, என்னம்மா ?”
” உங்களை நேரில் வந்து பார்க்கலாமா “ என்றார்.

எனக்கு விர்ரென்று கோபம் தலைக்கேறியது. இந்தப் பெண் உமனைசர் என்று நினைத்து விட்டது போல தெரிகிறதே என்று நினைத்துக் கொண்டு,

“அதெல்லாம் வேண்டாம். உன்னை இயக்குனர் செலக்ட் செய்தால், நீயாச்சு, அந்த இயக்குனராச்சு. என்னை எதுக்குப் பார்க்கனும்?” என்று கர்ண கடூரமாக சொன்னேன்.

ஒரு நிமிடம் பேச்சே கேட்கவில்லை.

“சார், மன்னிச்சுக்கங்க “ என்று விம்மிய குரல் வந்தது.
“ பாரும்மா, எதுக்கு சினிமாவுக்கு வரனும்னு நினைக்கிறே” என்றேன்.
“ சர்வைவல் ஆஃப் பிட்னெஸ்” என்றார் அந்தப் பெண்.

இரண்டு வார்த்தைகளில் அவரின் சூழ்நிலையை விளக்கிய அந்தப் பெண்ணின் அறிவினை எண்ணி வியந்தேன்.

ஆம், சர்வைவல் ஆஃப் பிட்னெஸ். நினைத்துப் பார்த்தால் கொலை, கொள்ளை, போர், ஊழல், சர்வாதிகாரம் எதுவுமே தப்பே இல்லை என்று தான் தெரிகிறது.

வாழ வேண்டும். அதற்கு எது வேண்டுமானாலும் செய்யலாம்.

குறிப்பு : சர்வைவல் ஆஃப் பிட்னெஸ் என்று இரவில் புலம்பிக் கொண்டிருந்தீர்கள். அதற்கேற்ற கதையை எழுதவா ? என்று மனைவி இந்தப் பதிவை படித்த பின்னர் சொன்னார்.

Wednesday, October 22, 2008

ஊட்டி சென்று வந்த கதை - 2

எனக்கு மக்களைப் பற்றியும் அவர்களின் பார்வைகள் பற்றியும் கொஞ்சம் கூட கவலை இல்லை. காசே இல்லை என்றால் பிச்சை எடுக்கிறான் என்பார்கள். காசு பணம் வந்தால் கொள்ளை அடிக்கிறான் என்பார்கள். இவர்களின் பார்வை குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதை போல இருக்கும். இந்த மக்களால் நான் பட்ட வேதனை கொஞ்சம் நஞ்சம் அல்ல. பள்ளியில் படித்த போது முதல் மார்க் வாங்குவேன். எனக்கும் என் மச்சானுக்கும் தான் போட்டி. மாலையில் டியூசன் முடித்து மூன்று சக்கர வண்டியில் முக்கி முனகியபடி வருவேன். அந்த நேரம் பார்த்து கடையில் வெறும் வாய் மெல்ல வருபவர்கள், ”ஏண்டா, உன் மாமனை கடை கன்னி வச்சுத் தரச்சொல்லி சம்பாதிக்கலாம்ல. எதுக்குடா, எங்க பையனுவ படிப்பையும் சேர்த்துக் கெடுக்கிறே” என்பார்கள். இவர்கள் எல்லாம் என்மீது கோபம் கொண்டவர்கள். இவர்களின் பையன்கள் முதல் மார்க் வாங்க முடியவில்லை என்று தனக்குள் கருவிக் கொண்டு சொல்லால் குளவியாய் கொட்டும் உன்மத்தர்கள். மாமனும், மச்சானுமே முதல் மார்க்கும் இரண்டாம் மார்க்கும் எடுத்தா நம்ம பயலுக எப்படி முதல் மார்க்கு எடுக்கிறது என்ற ஏக்கம். இவர்களின் கிண்டல் பேச்சைக் கேட்டதும் எனக்குள் வன்மம் எழும். முறைத்து விட்டு இன்னும் வேகமாக சைக்கிளைச் சுற்றுவேன்.




கல்லூரியில் படித்த போது நடந்த நிகழ்ச்சி. எங்கள் ஊரிலிருந்து கல்லூரிக்குச் செல்ல மூன்று பஸ் மாற வேண்டும். பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் தஞ்சாவூர் செல்லும் பஸ், பஸ் ஸ்டாண்டின் ஆரம்பத்தில் நிற்கும். பஸ்ஸிலிருந்து இறங்கி எச்சிலும், கோழையும் துப்பி காய்ந்து கிடக்கும் தரையில் கைகளை ஊன்றிக் கொண்டு கால்களை இழுத்துக் கொண்டு வேர்த்து விறுவிறுத்து பஸ்ஸில் ஏறினேன். கண்டக்டர் என்னைப் பார்த்ததும், ”டேய் உனக்கு அறிவில்லை. இதே எழவா போச்சு. வேற பஸ்ஸைப் பாரு” என்றார். கண்டக்டரை கர்ண கடூரமாக முறைத்தேன். அதே சமயத்தில் ஒரு முக்காடு போட்ட முஸ்லிம் பெண்மணி ஒருவர் 25 பைசா காசை கையில் வைத்தார். அவர்களை என்னதான் செய்வது ? அவர்களைப் பொறுத்த வரை அது உதவி. ஆனால் அது எனக்கு என் தன்மானத்துக்கு விடப்படும் சவால். அந்த அம்மாவிடமே காசை திரும்பக் கொடுத்து வேண்டாம் என்று மறுத்தேன். அது என் முகத்தையே உற்று உற்றுப் பார்த்தபடி வந்தது. கண்டக்டர் அருகில் வந்து மன்னிக்கவும் என்றார். மன்னிப்பாம் மன்னிப்பு. என்னாங்கடா ஒருத்தனை கேலி பண்ணி அவனிதயத்தை குத்தி கிழித்து விட்டு மன்னிப்பாம். புண்ணாக்கு. இவனுகளை நிக்க வச்சு பழுக்க காய்ச்சிய கடப்பாரையை குண்டியில சொருகனும் போல வன்மம் வரும். ஒரு நிமிடம் நிதானித்திருந்தால் வித்தியாசம் தெரிந்திருக்கும். ஆனால் அதைச் செய்யக்கூட திராணியில்லாதவர்கள். கொலை செஞ்சா அந்த நிமிடத்தோடு வலியும் போகும் உயிரும் போகும். ஆனால் இதயத்தைக் கிழித்தால் சாகும் வரை அல்லவா அந்த வலி இருக்கும்.

இதையாவது ஒரு வழியா மன்னிக்கலாம். ஆனால் இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்று இருக்கிறதே ரத்தம் கொதிக்கும். மிகப் பெரிய ஹோட்டலில் மூன்று நாள் வாசம். நானும் நண்பரும் ஒரு பெரிய பிசினஸ் சம்பந்தமாக வந்து பேச்சு வார்த்தையெல்லாம் முடித்து விட்டு ஊருக்கு கிளம்ப பஸ் ஸ்டாண்டில் பத்து லட்சரூபாய் காரில் வந்து இறங்கினோம். என்னை இறக்கி விட்டவர் மிகப் பெரிய கோடீஸ்வரர். பஸ்ஸில் ஏற இரண்டு ஸ்டெப் எடுத்து வைக்க வேண்டும். அதற்குள்ளாக காரில் வந்த ஒரு மகாத்மா ஒரு ரூபாய் காசை என் மீது விட்டெறிந்தார். எனக்கு அது சகஜமான நிகழ்ச்சி. என் நண்பருக்கோ கோபம். காசை கையில் எடுத்துக் கொண்டு ஸ்டாப் என்று கத்தினார். கார்காரர் என்னவோ ஏதோவென்று நிறுத்த அவரிடம் சென்ற என் நண்பர், “ஏன்யா அவர் உன்னிடம் காசா கேட்டார்” என்று சொல்லி முறைத்து விட்டு வந்தார். கார்காரர் ”சாரி” கேட்டார். என் நண்பருக்கு படபடப்பு அடங்க வெகு நேரமானது.

இப்படிப்பட்ட மனிதர்களால் சில நேரங்களில் தன்மானம் கிழித்தெறியப்படும் போது உள்ளுக்குள் சமூகத்தின் மீது வன்மம் பற்றி எரியும். அது தவறு என்று இப்போதைய மனநிலை சொல்கிறது. ஆனால் அந்த நேரத்தில் எழும் மனநிலை அதை உணருமா ? கொதிக்கும். இப்போது நான் எவரின் மீதும் வன்மம் கொள்வதில்லை. காரணம் வாழ்க்கை. எனக்குள் இருக்கும் வன்மம் இன்று ஆக்கபூர்வமாக செயல்படுகிறது. வாழ்க்கை என்பது கொடுத்துப் பெறுவது. மகிழ்ச்சியைக் கொடுத்தால் மகிழ்ச்சியைப் பெறலாம். துன்பத்தைக் கொடுத்தால் துன்பத்தைப் பெறலாம். இது தான் மனித வாழ்வின் அடி நாதம். ஆனால் யாரும் அதை உணருவதாய் இல்லை. அதைப் பற்றி எனக்கும் கவலையும் இல்லை.

கதை எங்கேயோ சென்று விட்டது. என்ன செய்வது சில நேரங்களில் இப்படியும் ஆகிவிடும். சாலை ரிப்பேர் செய்யப்படுகிறது மாற்று வழியில் செல்லுங்கள் என்ற போர்டினைப் பார்த்து மாற்று வழி மூலமாக சேருமிடம் போவோமில்லையா அதைப் போல இதை எடுத்துக் கொள்ளுங்கள்.

வெகு ஆழமான பகுதி. ஓரத்தில் மீன்கள் துள்ளிக் குதித்தன. பார்க்கும் போது பரவசமாய் இருந்தது. என் இதயமே துள்ளிக் குதித்ததாய் கற்பனை கரைபுரண்டோடியது. தம்பி “அண்ணே, மான் பாரு “ என்றான். பார்த்தேன். சிறையில் மான். வாழ்க்கைக்குள் மனிதன். இரண்டும் பொறுந்தி வருவதாய் தோன்றியது.




இயற்கையைச் சுற்றிப் பார்க்க வந்து விட்டு, புகைப்படமாய் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தொடரும்..................

Tuesday, October 21, 2008

ஊட்டி சென்று வந்த கதை 1

சென்னையில் பில்டர்ஸ் தொழில் பார்க்கும் தம்பியின் அழைப்பு. நாளைக்கு வீட்டுக்கு வருகிறேன். ஊட்டி போகனும். கார் ரெடி பண்ணி வை என்றான். கூடவே அவன் அம்மணியும் வருவதாகச் சொன்னான்.

கோவையில் டிராவலிங் கம்பெனியில் கார் வாடகை பேசினேன். நாள் ஒன்றுக்கு 800 ரூபாய். 12 மணி நேரக் கணக்காம். கிலோ மீட்டருக்கு 6.50 ரூபாய். ஏசி என்றால் ஒரு ரூபாய் அதிகம். டிரைவருக்கு நாள் ஒன்றுக்கு 150 மற்றும் சாப்பாட்டு செலவு நம்முடையது. ஆக நாள் ஒன்றுக்கு 1600+150+100 சேர்த்து 1850.00ரூபாய். அதை விடுத்து கிலோமீட்டருக்கு காசு வேறு. 300 கிலோமீட்டர் தூரத்துக்கு 2250.00 ரூபாய் தனி. மூன்று நாட்கள் 5550ம் 2250ம் சேர்த்தால் 7800 ரூபாய் காருக்கு மட்டும் செலவாகும். அசந்து விட்டேன். அட நொக்கா மக்கா, இங்கே இருக்கும் ஊட்டிக்குச் சென்று வர மூன்று நாளுக்கு கிட்டத்தட்ட எட்டாயிரம் ரூபாயா ?

எனது நண்பர் வேறொரு கார் கம்பெனியை அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கார் கம்பெனியில் வாடகைக்கு கார் எடுத்த விபரத்தைக் கீழே பார்க்கவும். இதயமே நின்று விடும். படித்துப் பாருங்கள். டிராவலிங்க் கம்பெனிகள் எப்படி கொள்ளை அடிக்கிறார்கள் என்று பாருங்கள். இந்தக் கார் கம்பெனியில் கார் எடுக்க வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்ளவும். நம்பர் தருகிறேன். பயன்படுத்திக் கொள்ளவும்.

டாட்டா இண்டிகோ, ஏசி கார். நாள் ஒன்றுக்கு (24 மணி நேரம்) 1450 ரூபாய் வாடகை. டீசல் செலவு நம்முடையது. கார் வரும்போது டீசல் நிரப்பி வரும். காரை விடும்போது டீசலை நிரப்பிக் கொடுக்க வேண்டும். டிரைவர் பேட்டா, சாப்பாட்டு செலவு கிடையாது. இது தான் நான் வாடகை பேசி எடுத்த காரின் வாடகை விபரம். முதல் நாள் பத்தரைக்கு கிளம்பி மூன்றாம் நாள் நான்கு மணிக்கு வீடு திரும்பியதால் வாடகையும் டீசலும் சேர்த்து ஊட்டிக்குச் சென்று வந்த கார் செலவு 3995.00 ரூபாய். கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய் மிச்சமானது.

தம்பியும் அவன் மனைவியும் விடிகாலையில் வீட்டில் ஆஜர். டேய் கிளம்புடா என்றான். அடேய் விளங்காத பயலே.. உனக்குதானடா ஹனிமூன் டிரிப். தனியாப் போயிட்டு வா என்றேன். முடியாது என்று மறுத்து விட்டான். சப்ளையர் ஒருவர் மதியம் பதினொன்றரைக்கு சந்திக்க வருவதாக கூறியிருந்தார். எல்லாம் சொல்லிப் பார்த்தேன். முடியாது என்று மறுத்துவிட்டான். மகள், மகன், மனைவி, தம்பி, தம்பி மனைவியுடன் ஊட்டிக்குப் பயணம்.

வழியில் டீ கூட குடிக்கவில்லை. வயிற்றைப் பிரட்டிவிடுமென்று தம்பி தடுத்து விட்டான். இரண்டரை மணி நேரத்தில் ஊட்டியை அடைந்தோம். மிகவும் நல்ல ஹோட்டலாக செல்லுங்கள் என்று டிரைவரிடம் சொன்னேன். அவர் சென்ற இடம் ஹோட்டல் நஹர். காரிலேயே உட்கார்ந்து கொண்டேன். நீங்கள் சாப்பிட்டு வாருங்கள். எனக்கு தயிர்சாதம் கட்டி வாருங்கள். காரிலேயே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றேன். தம்பி விடவில்லை. காரின் பின்புறம் டிக்கியில் மடித்து வைத்திருந்த சக்கர நாற்காலியினை எடுத்து வந்து உட்கார வைத்து ஹோட்டலின் உள்ளே அழைத்துச் சென்றான்.



நான் எங்கும் செல்வது கிடையாது. காரணம் என் உடல் பிரச்சினை. முடிந்த அளவுக்கு மறுத்து விடுவேன். சாருதான் என்னை முதலில் வெளிக் கொணர்ந்தவர். ஒரு நாள் சாரு என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது தங்கம், வீல்சேர் இருக்கிறதா உங்களிடம் என்று கேட்டார். இல்லை சார். நான் அதைப் பயன்படுத்துவதே இல்லை என்றேன். அடப்பாவி என்று அதிர்ந்தார். இதை அவர் நண்பர் நிக்கியிடம் சொல்லி இருக்கிறார். அவர் உடனே செக்கை நீட்டியிருக்கிறார். அடுத்த ஒரு வாரத்தில் மனுஷ்யபுத்திரனிடமிருந்து சக்கர நாற்காலி வந்திறங்கியது.

இப்படிப்பட்ட வசதிகள் இருப்பது தெரியாமல் கல்லூரிப்படிப்பின் போது தினமும் மூன்று கிலோ மீட்டர் தூரம் கல் ரோட்டில் தவழ்ந்து சென்று படித்தது நினைவுக்கு வந்தது. மழை பெய்தால் சகதியில் தான் தவழ்ந்து போவேன். கட்டிடத்தின் வெளிப்புறமாய் இருக்கும் பைப்பில் கால்களையும், கைகளையும் கழுவிக்கொண்டு மாடி ஏறுவேன்.

சக்கர நாற்காலி வந்தவுடன் எனக்கு கால் முளைத்து விட்டதாய் கருதினேன். அதற்கு காரணம் சாரு நிவேதிதாவும், அவரின் நண்பர் நிக்கியும் மனுஷ்யபுத்திரன் ஆகிய மூவரும். சமீபத்தில் பெங்களூரு சென்றிருந்த போது சக்கர நாற்காலி வெகுவாக உதவியது. ஊட்டியில் சக்கர நாற்காலியின் பயனால் போட்டிங்க், வாக்கிங் என்று இயற்கையை என்னுள் உணர முடிந்தது. எங்கு சென்றாலும் சாருவும், நிக்கியும், மனுஷ்யபுத்திரனும் கூடவே வருவதாகவே இருக்கும். சாரு, நிக்கி மற்றும் மனுஷ்யபுத்திரன் மூவருக்கும் நன்றிகள்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். சாப்பாட்டில் உப்பும், மணமும் இருந்தது. சுத்தம் இருந்தது. சுவை எங்கே??? தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. அது தான் பெரிய ஹோட்டலின் நிலமை போல. ஊறுகாய் மட்டும் சுறுக்கென இருந்தது. சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மனைவி கண்ணில் ஜாடை காட்டினார். அடிப்பாவி. அதற்குள்ளாகவா ? என்று நினைத்து கண்ணாலேயே மிரட்டினேன். அருகில் தம்பி உடகார்ந்திருந்தான். எதிரில் தம்பி மனைவி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் மனைவியை மிரட்டிதை தம்பி மனைவி பார்த்து விட என்ன ? என்ன ? என்று விசாரிக்க அப்போதான் எனக்கு உண்மை தெரிந்தது. எனக்குப் பின்னாலே ஒரு ஜோடி உட்கார்ந்து இருந்தது. அந்தப் பெண் சரியான அழகு. மாநிறத்தில் கைகளில் மெஹந்தி போட்டு பார்க்க படு அசத்தலாக இருந்தாள் போலும். என் மனைவிக்கு அவளை உடனடியாக என்னிடத்தில் காட்ட வேண்டும் என்ற ஆவல். விஷயத்தைக் கேள்விப்பட்ட நான் மெதுவாக (சபை நாகரீகம் !) திரும்பினேன். அந்தப் பெண்ணின் நெஞ்சின் மீது பார்வை பதிந்தது. திக்கென்றது. இதென்னடா வம்பு பார்வை அங்கே போவுது என்றபடி தலையைத் திருப்பி விட்டேன். அந்த அம்மணி மார்பைக் காட்டும்படி டிரெஸ் செய்திருந்தார். பார்ப்பவரின் பார்வை அங்கே செல்வது இயல்பு. நாகரீகம் என்ற பெயரில் அடிக்கும் கூத்துகள் என்னென்ன விளைவுகளை உண்டு பண்ணுகிறது என்று நினைத்தபடி,

மெதுவாக தம்பியின் காதைக் கடித்தேன். அவன் அலட்டிக் கொள்ளாமல் திரும்பிப் பார்த்தான். சென்னையில் இருக்கிறான் அல்லவா ? இதைவிட எதையெதையோவெல்லாம் பார்த்திருப்பான் போல. சாப்பிட்டு முடித்த பின்னர்
லாட்ஜில் இரு அறைகள் எடுத்தோம். சற்று நேரம் ஓய்வுக்குப் பின்னர் போட் ஹவுஸ் சென்றோம். அங்கு மக்கள் கூட்டம். போட்டிங் வர மறுத்தேன். தம்பி விடவில்லை. மறுபடி வீல்சேரில் அமரவைத்து போட்டிங் அழைத்துச் சென்றான். அவ்விடத்தில் என் தகப்பனாய் மாறி விட்டான் என் தம்பி. மகனும், மகளும் அருகருகே நடந்து வந்தனர். இடது பக்கம் மனைவி, வலது பக்கம் தம்பி மனைவி. சேரைத் தள்ளியபடி தம்பி. தம்பியின் பின்புறமாய் டிரைவர். மக்கள் எங்களை வேடிக்கை பார்த்தனர்.

தொடரும்.............

Saturday, October 18, 2008

சூர்யவம்சம் - பாடல்

எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலாசிரியரும், இயக்குனரும், இசையமைப்பாளரும் ஒருங்கே ஒரு கோட்டில் இணைந்ததன் விளைவு இந்தச் சுவையான பாடல்.

Saturday, October 11, 2008

கந்தசாமி முத்துவைக் கலங்க அடித்த கதை

முக்கியமான வேலையாக வெளியில் சென்ற போது எதிரே வண்டியில் கந்தசாமி.

”எங்கேப்பா தங்கம்?”

“வண்டி சரி பண்ணனும், அதான்“ இழுத்தேன்.

”சரி நானும் வருகிறேன்“ சொல்லியபடி என்னுடன் மெக்கானிக் ஷாப்புக்கு வந்தார்.

மெக்கானிக் முத்து தீபாவளிக்கு வாங்கிய பேண்ட் சர்ட்டினைக் காட்டினார். மத்தியதரவர்க்கத்தைச் சேர்ந்தவனாகிய அடியேன் வழக்கம்போல விலை பற்றிக் கேட்க,

“ஜீன்ஸ் 1200, சர்ட் 800 “ என்றார் முத்து.

அசந்து போனேன். 1200 எனது ஒரு மாத நெட் வாடகை. 800 ஒரு மாத மளிகை சாமான் பட்ஜெட். கந்தசாமி என் முகத்தைப் பார்க்க, நானும் பார்க்க பெருமூச்செறிந்தேன்.

”தங்கம், உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்” வில்லங்கத்தை அங்கேயே ஆரம்பித்தார் கந்தசாமி.

ஏதாவது வில்லங்கமா சொல்லி ஏதாவது பிரச்சினையைக் கொண்டு வந்து விடப்போகிறார் என்றெண்ணி பயந்து கொண்டே ஈனஸ்வரத்தில் “ சொல்லுங்க”

”இந்த ஜீன்ஸ் விலை 300 ரூபாய் இருக்கும். சர்ட்டின் விலை 250 ரூபாய் இருக்கும். ஆனா பாரு, 1450 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்குறாங்க மக்கள்” என்றார்.

அதிர்ச்சியாகி ”என்ன கந்தசாமி, ஒரேயடியாய் கபடி ஆடுறீங்க” என்றேன்.

இதைக் கேட்ட முத்துவோ அதிர்ச்சியில் சிலையாகி விட்டிருந்தார்.

”ஆமாப்பா, நான் டெக்ஸ்டைல் துறையில் வேலை பார்த்தது தான் உனக்குத் தெரியுமே. ஐந்து டாலர், எட்டு டாலருக்கு மேலே ஜீன்ஸ் பேன்டெல்லாம் கிடையாதுப்பா. அவ்வளவு தான் அடக்க விலை. வெளி நாட்டுக்கு இன்வாய்ஸ் அனுப்பும்போது பார்த்திருக்கிறேன். சரக்கு அனுப்பும் கம்பெனிக்கு 20% லாபம் சேர்த்துதான் விலை குறிப்பிட்டிருப்பார்கள்”

“அப்போ, 250 லிருந்து 400 வரைதான் என்று சொல்கின்றீர்களா? “ என்றேன்.

”ஆமாப்பா. அவ்வளவுதான் விலை. பிராண்டுக்கு என்று ஒரு விலை சேர்த்து வெளி நாட்டுக்காரன் கொள்ளை கொள்ளையா அடிக்கிறான்கள். நம்ம ஊரு ஜவுளி கடையெல்லாம் நாளுக்கு ஒரு நடிகையை வைத்து விளம்பரம் செய்யுறாங்க. அதுக்கெல்லாம் எப்படி காசு வரும். இதோ இப்படித்தான்”

நம்பமுடியாமல் அவரையே பார்த்தேன்.

முத்துவோ புலம்ப ஆரம்பித்தார். ”அழுக்கு உடையோடு கஷ்டப்பட்டு, ஸ்பேனர் பிடித்து உழைத்துச் சம்பாதிக்கிற காசையெல்லாம் இப்படித் திருடுறாங்களே” என்று புலம்ப ஆரம்பித்தார்.

வந்த வேலை முடிந்த திருப்தியில் கந்தசாமி என்னை மெக்கானிக் ஷாப்பில் விட்டு விட்டு கிளம்பினார்.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகிவிட்டது முத்துவின் நிலை.

Friday, October 10, 2008

கந்தசாமியுடன்(10.10.2008)

கந்தசாமி என்ற எனது நண்பர். அடிக்கடி விதண்டாவாதமாக ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். அவரின் பேச்சினைக் கேட்டால் ரத்தம் கொதிக்கும்.

ஆனால் நான் அப்படி இல்லை. பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத்துண்டு எனக்கு என்று இருக்க வேண்டுமென அம்மா அடிக்கடி சொல்லுவார்கள். என்ன அர்த்தமென்றால், சில பாம்புகளுக்கு தலையில் விஷம் இருக்குமாம். சில பாம்புகளுக்கு வாலில் விஷம் இருக்குமாம். நடுத்துண்டில் விஷம் ஏதும் இருக்காதாம். அதைச் சாப்பிட்டால் பிரச்சினை இருக்காது. இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் இருக்குமிடத்திற்கு தகுந்த வாறு மாறிக்கொள்ள வேண்டுமென்பது தான். அய்யா அப்படித்தான். ஆனால் கந்தசாமி இருக்காரே அவர் ஒரு விதமான கேரக்டர். வேலை பார்ப்பது ஒரு மில்லில். மனைவி, குழந்தைகள் என்று அழகான குடும்பம். பேச ஆரம்பித்தாப் எப்போதும் மற்றவர்களை குறைச் சொல்லிக்கொண்டிருப்பார். விதண்டாவாதமாக ஏதாவது சொல்லி வைப்பார். வேறு வழி. எனக்கு எழுத வராது என்பதால் அவர் சொன்ன சில விதண்டாவாதங்களை நினைவுக்கு கொண்டு வந்து எழுதி வைக்கிறேன். பிடித்திருந்தால் படித்து வைக்கவும்.

கந்தசாமியிடம் எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவ்வளவும் அத்துப்படி. விஷய ஞானமுள்ளவர். அவருக்கு இப்போதைய தலையாய பிரச்சினை மின்சார வெட்டு. என்னைப் பார்க்கும்போதெல்லாம் கொந்தளிப்பார்.

” என்னப்பா இது. இப்படியெல்லாம் பேசுகிறாய் “ என்றால் போதும் தொலைந்தேன். அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்ள வேண்டும். எதிர்த்து ஏதாவது சொல்லபோனால் கொலை வெறியுடன் கருத்துக்கள் அம்புகளாய் சீறும். இப்படிப்பட்ட ஆளிடம் நட்புத் தேவையா என்றால் எனக்குத் சொல்லத் தெரியவில்லை. மனிதர் ரொம்ப நல்லவர். பேச்சுதான் ஒரு மாதிரியாய் இருக்கும்.

அப்படித்தான் நேற்று அவரைச் சந்தித்த நேரத்தில், ஒரு விஷயம் சொன்னார். ”தமிழ் சமூகத்திற்கு சுரனையே இல்லை”.

”என்னப்பா திடீரென்று இப்படி பாய்கிறாய் ? “

“ஆமாம் தங்கம். தமிழகம் என்றால் சினிமா. சினிமா என்றால் தமிழகம். சரிதானே ?”

ஏதோ வில்லங்கமாக வரப்போகிறது என்ற யோசனையுடன் ஆமோதித்து வைத்தேன்.

“பின்னே என்னப்பா, கிழவர்கள் காதலையெல்லாம் ரசிக்கிறார்கள் தமிழர்கள். அதுவும் பொருந்தாக் காதல். கிழவனும் குமரியும் “ என்றார்.

“ ஏய்... நீ எங்கே வருகிறாய் என்று தெரிகிறது. இப்படியெல்லாம் சத்தமா பேசி வைக்காதே.. பின்னி பெடலெடுத்து விடுவார்கள்”

சிரி சிரியென்று சிரித்தார். மனதுக்குள் என்னனென்ன நினைத்தாரோ தெரியவில்லை. நான் மெதுவாக அவரிடமிருந்து கழண்டு கொண்டேன்

Wednesday, October 8, 2008

உயிர்கள் படும் வேதனை

எனது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சொன்ன சில விஷயங்கள் என் மனதை அம்பு போல் துளைத்து விட்டது. விஷயம் இதுதான். மாட்டுச் சந்தைகளில் மாடுகள் ஏலம் போடுவது பெரிய திருவிழா மாதிரி நடக்கும். மீடியாக்களில் செய்திகள் வெளியிடுவார்கள். அந்த மாட்டுச்சந்தைகளில் மாடுகளை மனிதர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே அதை வார்த்தைகளில் சொல்வது எளிதல்ல. சிலவற்றை மட்டும் பட்டியலிடுகிறேன்.

1. பல் போன மாடுகளுக்கு, இறந்த மாட்டின் பற்களை எடுத்து வந்து, கோணி ஊசியால் துளை போட்டு அந்த பற்களை பதிப்பார்களாம். மாட்டின் விலை பற்களை வைத்துக் கணக்கிடுவார்கள்.

2. மாட்டின் கால்களை கட்டி போட்டு விட்டு அதன் வாலை பிடித்து கடித்து வைப்பார்கள் முழுவதும். மாட்டை தொட்டவுடன் துள்ளுவதற்காக. ஏனென்றால் மாடு இளமையாக இருப்பதாக காட்டி அதிக விலை விற்க வேண்டுமென்பதற்காக.

3. முட்டும் மாட்டின் கொம்புகளில் விடாமல் அடித்துக்கொண்டே இருப்பார்கள். வலி தாங்காமல் அந்த மாடு முட்டாது.

4. மாட்டின் வயிறு புடைத்தது போல் இருக்க, மோட்டார் மூலம் தண்ணீரை வலுக்கட்டாயமாக செலுத்துவார்கள். புடைத்த வயிறுடன் காட்ட வேண்டுமென்பதற்காக.

5. மாடு வாங்கும் போது சுழி முதன்மையாக இருக்கும். வேண்டாத சுழி இருக்கும் மாட்டை, கட்டி போட்டு நெருப்பை பத்த வைத்து கோதுமை மாவின் உதவியால் சுழி இல்லாதவாறு செய்து விடுவார்கள்.

மாடாய் பிறந்து வளர்ந்து மனிதனுக்கு எல்லா உதவிகளையும் செய்து, அவன் செய்யும் கொடுமைகளை எல்லாம் தாங்கி அதன் பின்னர் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு அவன் வயிற்றுக்குள்ளே பிரியாணியாக செல்லும் மாடுகளை நினைத்தால் ...

இதை விடவா மனிதன் துன்பப்படுகிறான்... சொல்லுங்கள்...

இலவச புத்தகங்களின் தொகுப்பு

ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து, எப்போது வருமென்று காத்திருந்து புத்தகங்கள் படித்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு. உலக மொழிகளில் வெளிவந்த சில புத்தகங்களை இந்தத் தளத்தில் வரிசைப்படுத்தி இருக்கின்றனர். ஆங்கிலத்தில் மட்டும் கிட்டத்தட்ட இருபத்திரண்டாயிரம் புத்தகங்கள் கிடைக்கின்றன. தமிழ் மொழியில் ஒன்றும் இல்லை. படிக்க விரும்பும் நண்பர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் டவுன்லோடு செய்து பின்னர் படித்து வையுங்கள்.

http://www.gutenberg.org

Monday, October 6, 2008

உங்களில் யார் பிரபுதேவா ?

ஸ்ரீதர் - டான்ஸ் மாஸ்டரின் மேற்பார்வையில் உங்களில் யார் பிரபுதேவா நடனப் போட்டிக்குத் தேர்வானவர்களுக்கு நடனப் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு துரதிர்ஷடமான நேரத்தில் விஜய் டிவியைப் பார்க்க நேர்ந்தபோது கண்களில் பட்டது இந்தக் காட்சி.

சல்சா என்பது ஒரு வகை நடனமாம். மேல் பகுதி உடம்பு ஆடாமல் இடுப்பு மட்டும் அசைய வேண்டுமாம். மைக்கில் இன்ஸ்டரக்‌ஷன் கொடுத்தவாறு ஆடிக்காட்டினார் ஒருவர். கிட்டத்தட்ட நூறு ஆண்களும் பெண்களும் இருக்கும். தனித்தனியாக ஆடினர். ஸ்ரீதர் மைக்கில் அடுத்து யாருக்கு யாரெல்லாம் பிடிக்குமோ அவரவர்கள் ஜோடியாய் நின்று ஆட வேண்டும் என்றார்கள். ஹி..ஹி... அவனவன் கிடைத்தது சான்ஸ் என்று இடுப்பில் ஒரு கை. தோளில் ஒரு கை என்று அணைத்துப் பிடித்தவாறு ஆட ஆரம்பித்தார்கள். பின்புறங்கள் அழகாக ஆடிக்கொண்டிருந்தன. அதில் ஒரு சிறுவன் வேறு மாட்டிக் கொண்டான். வெட்கத்தில் அவனுக்கும் ஒரு ஜோடி கிடைக்க இடுப்பை ஆட்டினான்(டான்ஸ்ப்பா!).

விடிகாலையில் எழுந்து குளிரில் குளித்து மட மடவென மடிப்புக் கலையாத சட்டைப் போட்டு சைக்கிளில் அரக்கப் பரக்க மிதித்து அவள் வருவதற்கு முன்பே சென்று காத்திருந்து அவள் வரும் வரை அவளுக்காக உருகி உருகி வந்தவுடன் ஒரு தடவையாவது திரும்பிப் பார்க்கிறாளா என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் அவளைப் பார்த்தும் பார்க்காதவாறு அவளையேக் கவனித்து காதல் செய்து, கட்டிலில் கண்ணாமூச்சி விளையாடிய காலமெல்லாம் மலை ஏறிப் போச்சு.

சின்னத்திரை மீடியாக்கள் இன்று ஜோடிகளை சேர்த்துச் சேர்த்து ஆட விட்டுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் எனக்கு ஒரு எழுத்தாளர் சொன்ன கருத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.

அந்த எழுத்தாளர் பெயர் : ஜேம்ஸ் ஜாய்ஸ்
நாவலின் பெயர் : A PAINFULL CASE
கருத்து : ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் உறவு தவிர்த்து வெறும் சிநேகிதம் மட்டும் சாத்தியமில்லை.
உதவி : திரு ஆர்பி.ராஜநாயஹம்

உடனே அம்மா, அக்கா, தங்கை என்று ஆரம்பிக்க கூடாது. மனசுக்கு பட்டுச்சு எழுதிவிட்டேன். குறிப்பு : எனக்குள் இருக்கும் கலாச்சாரக்காவலனின் ஆசை இது. வேறு வழியின்று எழுதி தொலைக்க வேண்டிய கட்டாயம். எழுதிவிட்டேன்.

அன்பு மகனுக்கு கடிதம் (7) தேதி : 5.10.2008

ரித்திக், நீ முதன் முதலாய் எங்களை விட்டு விட்டு உனது மாஸ்டருடன் கராத்தே காம்படீஷனில் கலந்து கொள்ள செல்கிறாய். வாழ்த்துக்கள். அந்தக் குழுவிலேயே நீதான் சிறுவன். உன்னை பனிரெண்டு வயதுக்குள்ளே இருப்போருடன் போட்டியிட வைப்பார்கள். வெற்றி என்பது உலகில் வேறு வகையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன். நீ கராத்தே பழக வேண்டுமென்று நினைத்தற்குக் காரணம் உனக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் வரவேண்டுமென்பதற்காகத்தான். தற்காப்புக் கலையில் நீ சிறந்து விளங்க வேண்டுமென்பதற்காகத்தான்.




ஆறு வயதில் உனக்கு பல அனுபவங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதன் முதலாய் உன்னை மாஸ்டருடன் அனுப்பி வைத்தேன். உன்னை எல்லோரும் பாராட்டினார்கள். மெத்த மகிழ்ச்சி.

சமூகத்திற்கு சிறந்த சேவை செய்ய வேண்டும். உன்னால் இவ்வுலகம் பயன்பெற வேண்டும். பெற்றால் இப்படிப் பட்ட பிள்ளையைப் பெற வேண்டுமென்று உலகே சொல்ல வேண்டும். அப்போது தான் நானும், உன் அம்மாவும் பட்ட துன்பங்கள் தீரும்.

வாழ்த்துக்கள் ரித்தி...

அன்பு அப்பா

Wednesday, September 24, 2008

இந்தியாவில் நடந்த பார்ட்டி ஒன்றின் சில புகைப்படங்கள்

யூ டியூப்பில் பாடல்களை தேடிக்கொண்டிருந்த போது, பெங்களூரில் மிகப் பெரிய கம்பெனி ஒன்றினால் நடத்தப்பட்ட பார்ட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்ற தலைப்பில் வீடியோ ஒன்று கிடைத்தது.

சும்மா பார்த்து வையுங்க...

ஆத்துக்குள்ளே...

பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள். நானும் என் சின்னம்மாவின் பையனும் மாலையில் ஆற்றுக்கு குளிக்கச் சென்றோம்.
அன்று பார்த்து, ஆற்றில் தண்ணீரை நிறுத்தி விட்டிருந்தார்கள்.

சரின்னு குளத்தில குளிக்கலாம்டான்னு சொல்லிகிட்டு ஆற்றின் படியில் உட்கார்ந்தேன். ஆற்றில் அங்கங்கே தண்ணீர் குளம்போல கிடந்தது. தண்ணிக்குள் எதுவோ கிடப்பதுபோல தோன்ற டேய் அங்கே பாருடா தண்ணிக்குள்ளே என்னமோ கிடக்குன்னு தம்பிக்கிட்டே சொல்ல,
அண்ணே பாம்பா இருக்கப்போவுதுன்னு சொன்னான். பாம்பு தண்ணிக்குள்ளே என்னடா பன்னும். வேற என்னமோடான்னு சொல்ல, இருவரும் ஆற்றுக்குள் இறங்கினோம்.

சற்றுத் தொலைவிலேயே நின்று கொண்டு உத்து உத்துப் பாத்துக்கிட்டு இருக்கும்போது மீனு ஒன்னு துள்ளி விழுந்துச்சு. பாலு(தம்பி பெயர்) என்னன்னு பாத்துடனும்டான்னு சொல்லிக்கிட்டே யோசிச்சோம். மெதுவாக அந்தப் பள்ளத்துக்குப் பக்கத்துல இன்னுமொரு பள்ளத்தைத் தோண்டி வாய்க்கால கையால வெட்டி தண்ணிய வடிய விட்டா அங்கே ஒரு மீன் புதையலே இருந்தது.

அள்ளுடா அள்ளுடான்னு குளிச்சிட்டு துவட்ட வச்சிருந்த துண்டில மீனை அள்ளிக் கட்டினோம். இரண்டு துண்டுகளும் நிறைஞ்சிடுச்சி. குளிக்கிறதாவது ஒன்னாவது. நேரா சைக்கிளை விட்டோம் வீட்டுக்கும்.

அம்மாட்டே கொடுத்தோம். எங்கேடா புடிச்சிட்டு வந்தீங்கன்னு அம்மா கேக்க விபரத்தை சொல்லிட்டு மீண்டும் ஆத்துக்குப் பக்கத்தில இருந்த குளத்தில குளிக்க வந்தோம். பார்த்தா ஆத்துக்குள்ளே ஒரே கூட்டம். மக்கள் எல்லாம் மீன் பிடிச்சிக்கிட்டு இருந்தாங்க.

குளத்தில கண்ணு செவக்க செவக்க ஆட்டம் போட்டு விட்டு வீட்டுக்கு வந்தால் சுடுசோறு, மீன் குளம்பும் தயரா இருந்துச்சு.

குடத்தடியில இருந்த மாமரத்து மாங்காயும், மாங்காய் கொட்டையும் குளம்புக்குல மிதக்க, காரமும், புளிப்புமாய் இரண்டு தட்டு சோத்தை வயித்துக்குள்ளே தள்ளினோம்.

அன்று சாப்பிட்ட மீன் குழம்பை நெனச்சு நெனச்சு நெஞ்சு கனக்கிறது.

Thursday, September 18, 2008

செத்துப்போன மனசு !

நானும் என் நண்பனும் மாதம் பத்து தடவை தண்ணி அடிக்க கிளம்பி விடுவோம். ரமனா வோட்காவில் ( அல்சர் பிராப்ளத்துக்கு இப்படி குடித்தால் பிரச்சினை வராது என்று காலையில் இருந்து மாலை வரை தண்ணியில் மிதக்கும் குடிகார பெருமகன் சொன்ன தகவல். ஆனால் அதன் பின்னர் தான் அல்சர் அதிகமானது என்பது தனிக் கதை) லெமன் சேர்த்து குடிப்போம். சைடிஸ்ஸாக முட்டையுடன் பிரானைச் சேர்த்து அதனுடன் மிளகு பொடியும், மிளகாயும் எண்ணெயில் வதக்கி நன்றாக வறுத்து காரில் கொண்டு வந்து தருவார் சர்வர். அடுத்து வஞ்சிரம் மீனுடன் காரம் சேர்த்து நெய்யை அதன் மீது விட்டு தோசைக்கல்லில் தங்கக் கலரில் வறுத்து ஒரு சிப் சிக்னேச்சர் ஒரு வாய் மீன்.. காரில் உட்கார்ந்தபடியே சிக்னேச்சரோ அல்லது ரமனா வோட்காவையோ சிப் சிப்பாக உறிஞ்சினால் தொண்டையில் நெருப்பு எரியும். சிறிது நேரத்தில் நரம்புகள் தளர நினைவில் ஒரு மந்த நிலை வந்து தொக்கி நிற்கும். அந்த நிலையில் பார்க்கும் எந்தப் பெண்ணும் அழகாக தெரிவாள். சுவையில்லாத உணவும் சுவைக்கும். மதுவை ருசித்தால் மனசு மந்தமாகி விடும். அது தான் போதை... போதை... போதை... தண்ணி போதை... இன்னும் என்னென்னவோ போதைகள் இருக்கின்றன. அதெல்லாம் வரும் நாட்களில் எழுதுகிறேன்.

அப்படி ஒரு நாள் வரும்போது (நிதானத்துடன் தான்) கார் விறுக்கென இடதுபுறமும் வலது புறமும் சென்று பின்னர் நிலை பெற்றது. என் கண் முன்னே எமராஜாவும் சித்திரகுப்தனும் வந்து சென்றார்கள். ஆனால் பாருங்கள் அதில் ஒரு நிம்மதி இருந்தது. கார் வெட்டி வெட்டி இழுக்க இடதும் வலதுமாய் சரக் சரக்கென சென்று வர சீட்டில் அமைதியாய் உட்கார்ந்து இருந்தேன். என் மனதில் ஒரு நினைவும் இல்லை. மனம் செத்துப் போய் இருந்தது. கார் ஒரு நிலைக்கு வர, பட படவென வியர்த்துக் கொட்டியது. ஏசியிலும் வியர்வையில் குளித்தேன். மனசுக்குள் நடுக்கம் வர மயக்கம் வரும்போல இருந்தது.

சாவு நெருங்கிய போது எனக்குள் உணரப்பட்ட மனசு செத்துப்போன அதிசயம் மரணத்தின் மீது அபரிமிதமான காதலை உருவாக்கி விட்டது. ரமணாவும் தேவையில்லை. சிக்னேட்சரும் தேவையில்லை. ப்ளூ லேபிலும் தேவையில்லை என்ற நினைப்பு எனக்குள் அழுத்தமாக விழுந்து விட்டது.

மரணம் எப்படி இருக்கும்? அது எப்படி மனிதனை தழுவுகிறது. அழகான ஆழமான கடல் போல இருக்குமா? அந்த நிலையில் மனிதனின் மனசு என்ன நினைக்கும் என்றெல்லாம் எண்ணங்கள் எனக்குள் புயலடிக்கின்றன.

விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலோ மனிதனைத் தழுவுவது மரணம். அதைக் காதலிப்பதில் தவறேதும் இல்லை அல்லவா ?

Tuesday, September 16, 2008

மனதை மயக்கும் பாடலில் இதுவுமொன்று

இளையராஜாவின் குரலிலும் இசையிலும் இந்தப் பாடல் ஜொலிப்பதை கேளுங்கள். எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இந்தப் பாட்டை மிஞ்ச எவர் இருக்கிறார் இசையுலகில்.

சற்று நேரம் .. சற்று நேரம்.. மனதை இலேசாக்குங்கள். கால்களையும் கைகளையும் படர விடுங்கள். மூச்சினை மெதுவாக விடுங்கள். மனது லேசா லேசா இருப்பது போல உணருங்கள். இப்போது இந்தப் பாட்டைக் கேளுங்கள். மனம் மிதக்கும்.... கண்கள் சொக்கும்... குரலில் தேன் சொட்டும். அது உம்மை நனைக்கும்... நீங்கள் நனைவீர்கள்.. நிச்சயம் நனைவீர்கள் இசை மழையில்.... மனம் சட்டென்று ஒருமைப்படும்....

கேட்கும்போதே கிளுகிளுப்பைத் தரும் பாடல்

என் சிறு வயதில் வேலைக்காரர் ஜெயராஜ் என்னை மாரியம்மன் கோவில் முன்புறம் நடந்து கொண்டிருந்த கீழே இறங்காமல் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். அன்று கடைசி நாள். சுற்றி வரக் கயிறு கட்டி இருந்தனர். ஜெயராஜ் துண்டை விரித்து அமரச் சொன்னார்.

ஒரு பெண்ணும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவரும் இந்தப் பாட்டை ஒலிபெருக்கியில் போட்டு விட்டு ஆடினர். ஆட்டம் பட்டையக் கிளப்பியது. அந்த வயதில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் கேட்கவும் பார்க்கவும் படு ஜோராக இருந்தது. பாம்புபோல நெளிந்து வளைந்து ஆடி பார்ப்போரின் மனதினை சிதற வைத்த ஆட்டம் அது. அந்த வயதிலேயே பார்க்கும் போது கிளுகிளுப்பாய் இருந்ததன் விளைவு இதோ இன்று... கொட்டக் கொட்டக் விழித்துக் கொண்டு எழுதுகிறேன்.

இந்தப் பதிவை எழுதும் போது மணி 10.56 இரவு நேரம். அருகில் உள்ள வீட்டார்கள் அனைவரும் உறங்கி இருப்பார்கள். தப்பித் தவறி யாராவது இந்தப் பாட்டைக் கேட்டால், தங்கம் வீட்டில் மஜாவா இருக்கான் பாருன்னு அப்படி இப்படின்னு பேசிக்கிட்டே அவங்க அவங்க வீட்டில ஏதாவது நடக்கும்ல.... நடக்கட்டும்.. நடக்கட்டும்...

பாட்டைக் கேட்க கேட்க கிளுகிளுப்பாய் இருக்க, யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்ற நல்லெண்ணத்தில்.... இதோ சிலுக்கு ஸ்மிதாவும், கமலும்...

அடி தூள்...............


Sunday, September 14, 2008

குன்னக்குடியாரும் ஷாகிர் உசேனும்

வயலின் மாமேதையும், தபேலா சக்ரவர்த்தியும் இணைந்து கேட்போரின் மனதை கொள்ளை அடிக்கும் உத்தமத்திருட்டைப் பாருங்கள்... கேளுங்கள்.... நீங்களும் உங்கள் மனதினை இருவரிடமும் பரிகொடுத்து விட்டுத் தவிப்பீர்கள்... மனதை மயக்கும் கலவை. பெயர் கலர்ஸ். உபயம் : ஏஆர் ரஹ்மான்.