குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, October 8, 2016

ஒரு மட மாது

’பட்டால்தான் புத்தி வரும்’ பழமொழி இன்றைக்கும் உயிர்ப்போடு இருந்து கொண்டே இருக்கிறது. அனுபவம் சொல்லித் தந்த பாடத்தை அன்றைக்கே பலரும் சொல்லி வைத்துச் சென்றிருக்கின்றார்கள். ஆனால் ’யார் கேட்பது?’. அனைத்துச் சுகங்களையும் அள்ளிப் பருகிய கண்ணதாசனே முடிவில் கண்ணனைத் தஞ்சமடைந்தார். வேறு வழி? ஆடிய ஆட்டம் அப்படி? 

நண்பரின் மனைவியுடன் மதுரை சென்று வந்த மனைவி வரும் போதே டெங்குவைக் கூட அழைத்துக் கொண்டு வந்து விட்டார். கணபதி சாலையில் இருக்கும் சிவா மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தோம். நான்கு நாட்களாக வாந்தி, காய்ச்சல் குறையவே இல்லை. பாரசெட்டமல் மருந்தினை மட்டுமே கொடுத்துக் கொண்டு குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டே இருந்தார்கள். ஒரு நாள் தாமதித்திருந்தால் நினைக்கவே பயமாக இருக்கிறது. மனைவி ரொம்பவும் மெலிந்து விட்டார். வீட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து திரிந்த வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. பிளேட்லெஸ் 80,000 ஆயிரம் வரை குறைந்து விட்டது.

உடனடியாக கே.எம்.சி.எச் அழைத்துச் சென்று ஐ.சி.யூவில் அட்மிட் செய்தேன். வாந்தியாக எடுத்துக் கொண்டிருந்தார். அருகில் அமர்ந்திருந்த போது கண்களில் இருந்து தானாகவே தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மருத்துவர் ஜீவன் சந்திரா அவர்கள் மனைவியைப் பரிசோதித்து விட்டு என்னிடம் சொன்னார், “டோண்ட் வொரி மேன், ஐ வில் கிவ் யூ ஹெர் வித் வெரி சேஃப். நந்திங்க் டு வொரி மேன்” என்றுச் சொல்லி ஒரே ஒரு ஊசி மட்டும் போட்டார். அடுத்த அரை மணி நேரத்திற்குள் மனைவியின் வாந்தி நின்று விட்டது. சாப்பிட ஆரம்பித்து விட்டார்.

குளுக்கோசுடன் பாரசெட்டமல் மருந்து மற்றும் தண்ணீர் உணவு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வந்தார்கள். பிளேட்லெஸ் அதிகமாகி கொஞ்சம் கொஞ்சமாக டெங்குப் பாதிப்பில் இருந்து வெளி வந்தார். 

பணம் இருந்து என்ன பயன்? வேறு என்ன இருந்தும் என்ன பிரயோஜனம்? எதுவும் கை கொடுக்காது. உடலெல்லாம் ஊசி குத்திக் குத்தி புண்ணாகும். மருந்தின் வீரியத்தில் உடல் படாத அவஸ்தைப் படுத்தும். சாப்பிட முடியாது. தூங்க முடியாது. வேதனை, வேதனை, வேதனை இதைத்தவிர வேறெதையும் அனுபவிக்க முடியாது.

இதையெல்லாம் பார்த்து பார்த்து உடம்பின் மீதான பற்றே எனக்குப் போய் விட்டது. தலைக்கு ஷாம்பூ, வாசனை எண்ணெய், டை, முகத்துக்கு க்ரீம், ஷேவ் லோசன், ஷேவிங் மெசின், ஃபோம், செண்ட், சோப், டியோடரண்ட், விலை உயர்ந்த ஆடைகள், கார்கள், சொகுசாக அமர ஷோபாக்கள், ஏசி என்று உடம்புக்குத் தேவையான அத்தனையும் செய்தும் உடல் நோயால் பீடித்து விடுகிறது. ஒரு நாள் உடலைக் கழுவ வில்லை என்றால் நாற்றமடித்து விடும். மனைவி கூட அருகில் வரமாட்டாள். பெற்ற பிள்ளை தூரப்போய் விடுவர். இத்தனையும் ஒவ்வொருவருக்கும் தெரியும். தெரிந்தும் என்ன செய்கின்றார்கள்? 

சமீபத்தில் என் நண்பர் வாட்ஸப்பில் அனுப்பிய வீடியோ வெகு அருமையாக இருந்தது. யூடியூப்பில் ஏற்றி இதோ உங்களுக்காக. பொறுமையாக பாருங்கள். தானாகவே சகமனிதனின் மீது பற்று ஏற்பட்டு விடும். வீடியோவைப் பாருங்கள். தொடர்ந்து கீழே இருக்கும் பாடலையும் படித்து விடுங்கள். சும்மா கிர்ருன்னு இருக்கும்.


 நன்றி : படவிளக்கம் உருவாக்கிய ஜெ.பிரதீபன்

இனி பாடல் வரிகள்

ஒரு மடமாது மொருவனுமாகி
இன்ப சுகந்தரு மன்பு பொருந்தி
யுணர்வு கலங்க வொழுகிய விந்து
வூறுசுரோணித மீதுகலந்து

பனியிலொர்பாதி சிறுதுளிமாது
பண்டியில்வந்து புகுந்து திரண்டு
பதுமவரும்பு கமடமிதென்று
பார்வை மெய்வாய் செவிகால் கைகளென்ற

உருவமுமாகி யுயிர்வளர் மாத
மொன்பது மொன்று நிறைந்து மடந்தை
யுதரமகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளுமறிந்து

மகளிர்கள் சேனை தரவணையாடை
மண்படவுந்தியு தைந்து கவிழ்ந்து
மடமயில் கொங்கை யமுதமருந்தி
யோரறிவீரறி வாகிவளர்ந்து

 ஒளிநகையூற லிதழ்மடவாரு
வந்துமுகந்திட வந்துதவழ்ந்து
மடி யிலிருந்து மழலை பொழிந்து
வாவிருபோவென நாமம் விளம்ப

உடைமணியாடை யரைவடமாட
வுண்பவர் தின்பவர் தங்களொடுண்டு
தெருவிலிருந்து புழுதியளைந்து
தேடியபாலரொ டோடி நடந்து

அஞ்சு வயதாகி விளையாடியே
உயர்தரு ஞான குருவுபதேச
முத்தமிழின்கலை யுங்கரைகண்டு
வளர்பிறையென்று பலரும் விளம்ப

வாழ்பதினாறு பிராயமும் வந்து
மயிர்முடிகோதி மறுபதநீல
வண்டிமிர் தண்டொடை கொண்டை புனைந்து
மணிபொன் இலங்கு பணிகளணிந்து

மாகதர் போகதர் கூடிவணங்க
மதன சொரூப னிவனென மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழிகொண்டு சுழியவெறிந்து

மாமயில் போலவர் போவதுகண்டு
மனது பொறாம லவர்பிறகோடி
மங்கல செங்கல சந்திகழ்கொங்கை
மருவமயங்கி யிதழமுதுண்டு

தேடியமாமுதல் சேரவழங்கி
ஒருமுதலாகி முதுபொருளாயி
ருந்த தனங்களும் வம்பிலிழந்து
மதனசுகந்த வித்னமிதென்று

வாலிப கோலமும் வேறுபிரிந்து
வளமையுமாறி யிளமையுமாறி
வன்பல்விழுந்திரு கண்களிருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து

 வாதவிரோத குரோதமடைந்து
செங்கை யினிலோர் தடியுமாகியே
வருவதுபோவ தொருமுதுகூனு
மந்தியெனும்படி குந்திநடந்து

மதியுமிழந்து செவிதிமிர் வந்து
வாயறியாமல் விடாமன்மொழிந்து
துயில்வருநேர மிருமல்பொறாது
தொண்டையு நெஞ்சமு முலர்ந்து வறண்டு

துகிலுமிழந்து சுணையுமிழந்து
தோகையர் பாலர்கள் கோரணிகண்டு
கலியுகமீதி லிவர்மரியாதை
கண்டிடுமென்பவர் சஞ்சலமிஞ்ச

கலகலவென்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து
தெளிவுமிராம லுரைதடுமாறி
சிந்தயு நெஞ்சமு முலைந்துமருண்டு
  
திடமுமுலைந்து மிகவுமலைந்து
தேறிநலாதர வேதென நொந்து
மறையவன்வேத னெழுதியவாறு
வந்ததுகண்டமு மென்று தெளிந்து

இனியெனக் கண்ட மினியெதொந்த
மேதினவாழ்வு நிலாதினி நின்ற
கடன்முறை பேசு மெனவுரை நாவு
றங்கி விழுந்துகை கொண்டு மொழிந்து

கடைவழி கஞ்சி யொழுகிடவந்து
பூதமு நாலுசு வாசமு நின்று
நெஞ்சு தடுமாறி வருநேரமே
வளர்பிறைபோல வெயிறுமுரோம

முஞ்சடையுஞ் சிறுகுஞ்சியும் விஞ்ச
மனதுமிருண்ட வடிவுமிலங்க
மாமலைபோல் யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி யுயிர் கொடுபோக
  
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கின ரேயிவர் காலமறிந்து
பழையவர் காணு மெனுமயலார்கள்

பஞ்சு பறந்திட நின்றவர்பந்த
ரிடுமெனவந்து பறையிட முந்த
வேபிணம் வேக விசாரியுமென்று
பலரையுமேவி முதியவர் தாமி

ருந்தசவங்கழு வுஞ்சிலரென்று
பணிதுகில் தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறுமுடம்பை
வரிசை கெடாம லெடுமெனவோடி

வந்திள் மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை யடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிடமூடி யழல்கொடு போட

 வெந்து விழுந்துமு றிந்து நிணங்க
ளுருகி யெலும்பு கருகி யடங்கி
யோர்பிடி நீறுமிலாத வுடம்பை

நம்புமடி யேனை யினியாளுமே
- பட்டினத்தார் 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.