குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, December 30, 2017

நஷ்டமே இல்லாத வியாபாரம்

அடிக்கடி மனைவியிடம் ”ஒன்னும் முடியவில்லை என்றால் வசியமருந்து விற்பனைக்கு கிளம்பி விடுவேன். ஒரே ஆண்டில் கோடி கோடியாய் குவித்து விடுவேன்” என்று சொல்லிக் கொண்டிருப்பேன். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆசைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. அவர்களின் ஆசைகளை அப்படியே அறுவடை செய்து விடலாம். ஆனால் மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறதே? அறம் என்ற ஒன்று இருக்கிறதே? ஆகையால் என்னால் இனி பேசக்கூட இயலாது. அப்படிச் சம்பாதித்து என்ன கிழிக்கப் போகின்றோம்?  பணம் வைத்திருந்தால் நல்ல ஆடை உடுத்தலாம். விலை உயர்ந்த காரில் செல்லலாம். உயர்ந்த உணவகங்களில் உணவருந்தலாம். இருந்தும் இந்த உடலை பாதுகாத்து 1000 ஆண்டுகள் வாழ்ந்திட இயலுமா? எந்த நொடியிலும் மகிழ்ச்சியாக வாழ இயலுமா? இது எதுவுமே இயலாது ஆனாலும் சாதித்திட முயல்கிறோம். காசைத் தேடித் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

100 சதவீத வாழ்க்கையில் 1 சதவீதம் தான் பணம். மிச்ச 99 சதவீதம் வாழ்க்கை இருக்கிறது. ஆனால் கலிகாலத்தில் 1 சதவீதம் தான் வாழ்க்கையாகவும் 99 சதவீதம் பணமாகவும் மாறிப் போய் விட்டது.

கனடாவில் வசிக்கும் லூசுப்பயலுக்கு என் சகோதரியின் பெண்ணைப் பார்த்து திருமணத்திற்கு நிச்சயம் செய்தார்கள். என் மருமகளும் அவனும் நேரில் சந்தித்தித்த போது, ”நீ ஏன் காஃபிக் கடையில் உட்கார்ந்திருக்கிறாய், மாலில் இருந்தால் செலவிருக்காது அல்லவா?” என்றானாம் அந்த கே.பயல். பின்னர், “உன் பெற்றோர்கள் ஆண்டுக்கு ஒரு தடவை தான் கனடா வரலாம், அதுவும் அவர்கள் செலவில்” என்றானாம். “சம்பாதிக்கும் பணத்தில் 60 சதவீதம் என்னிடம் கொடுத்து விட வேண்டும், மீதி குடும்பச் செலவுக்கு” என்றானாம். விசா வாங்கும் போது தனியாக பெற வேண்டுமாம், பியான்சி என்றால் கூடுதல் செலவாகும் என்றானாம். அவனை நான் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் இன்னேரம் ஜெயிலில் இருந்திருப்பேன். எந்தப் பெண் மாட்டிக் கொண்டு சாவப்போகின்றாளோ தெரியவில்லை. இந்த வாழ்க்கையைத்தான் உலகம் மிகச் சிறந்த வாழ்க்கை என்கிறார்கள். இந்த லூசுப்பயல் கடைசியில் ஜக்கி மாதிரி கார்ப்பொரேட் சாமியார்களுக்கு செருப்பு துடைத்துக் கொண்டிருப்பார்கள்.

நேற்று நானும் ஒரு செட்டியாரும் ஒரு சிறிய வேலை தொடர்பாக வெளியில் சென்றிருந்தோம். செட்டியாரின் மகளுக்குத் திருமணம் நடக்கவிருக்கிறது. ஆன்மீகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் ”ஜக்கி வாசுதேவ் எவ்வளவு பெரிய ஆள்” என்றார் அவர். “ஜெயலலிதாவை விடவா பெரிய ஆள் ஜக்கி பெரியவர்? இப்போது ஜெயலலிதா எங்கே?” என்று எதிர்கேள்வி கேட்டேன். ”சார், ஜக்கி பிரதமர் மோடியிடம் தொடர்பு வைத்திருக்கிறார்” என்றார். “வாஜ்பாய் எங்கே, அத்வானி எங்கே, நரசிம்மராவ் எங்கே?” என்றேன் தொடர்ந்து. ஆள் ஒன்றும் பேசவில்லை.

அறம் என்ற ஒன்று இந்த உலகினை இயக்கி வருகிறது. ஹிட்லரும், முசோலினியும், அசோக சக்கரவர்த்தியும், ராஜ ராஜசோழனும் இப்போது எங்கே என்று ஒவ்வொருவரும் கேள்வி கேட்டீர்கள் என்றால் வாழ்க்கையின் நிலையாமை பற்றிப் புரியும். 

”இந்த உலகின் மாபெரும் அவதாரமும் உண்மையை மட்டுமே பேசிச் சென்ற ஒருவர் வாழ்ந்திருக்கிறார் என்றால் அவர் ஓஷோ” என்று என் குருநாதர் ஜோதி ஸ்வாமி அடிக்கடிச் சொல்வார். ஓஷோவின் புத்தகங்கள் எனக்கு பல்வேறு உண்மைகளை உரித்துக் காட்டி இருக்கின்றன. தெளிவற்ற மனம் தெளிந்த நீரோடை போல மாறியதற்குக் காரணம் ஓஷோவின் நூல்கள். என் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமென்று நான் மட்டுமே முடிவு செய்வேன் என்கிற தன்னம்பிக்கையை எனக்குத் தந்தது. அவர் சொல்லிய ஒரே ஒரு உண்மையை மட்டும் கீழே பகிர்கிறேன். படித்துப் பாருங்கள். இது நீங்கள் எப்போதாவது யாரிடமிருந்தாவது ஏதோ ஒரு காரணத்துக்காவது கேட்டிருக்கலாம். ஆனாலும் ஓஷோ சொல்ல வந்தது இதுதான். அதைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

இந்த உலகில் ஒன்றே ஒன்று மட்டுமே உயிர்ப்புடன் உள்ளது. அது உங்களின் மனதுக்குள் உறைந்து போய் கிடக்கும் “தயை”. அதை வெளிக்கொணருங்கள். வாழ்க்கை அற்புதமானதாக இருக்கும். எதையும் கடந்து சென்றால் எல்லாமும் உங்கள் பின்னால் வரிசை கட்டி உங்களைச் சேர நின்று கொண்டிருக்கும். நீங்கள் தேடியது உங்களைத் தேடி வரும். 

இனி ஓஷோவின் கதை கீழே...!

உலகில் இருக்க நிரந்தரத்திற்காக படும் இந்த ஆசை எப்படியும் ஆரோக்கியமானதல்ல. ஆனால் அது உள்ளது. எனவேதான் ஆன்மீக நிறுவனங்கள் – ஆம், நான் அவற்றை நிறுவனங்கள் என்றே அழைக்கிறேன். – கிறிஸ்துவ, இந்து, முகம்மதிய நிறுவனங்கள் நூற்றாணடுகளாக மிகப் பெரிய வியாபாரத்தை நடத்தி வந்திருக்கின்றன. இன்னும் செய்கின்றன……. அவர்களது வியாபாரத்திற்கு முடிவே கிடையாது, ஏனெனில் அவர்களது வியாபாரப் பொருள் பார்க்கக்கூடிய விஷயமல்ல என்பதுதான் ஒரே காரணம். அவர்கள் உங்களிடமிருந்து பார்க்கக்கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நீ நம்ப மட்டுமே கூடிய விஷயத்தை உனக்கு கொடுக்கின்றனர்.

எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ராஜா முழு உலகத்தையே ஜெயித்துவிட்டான். ஆனாலும் அவன் அமைதியின்றி இருந்தான் – இப்போது, என்ன செய்வது உலகத்தையே ஜெயித்தபின் நிம்மதியாக ஓய்வாக இருக்கலாம் என அவன் நினைத்திருந்தான். தான் அமைதியின்றி இருப்போம் என அவன் ஒருபோதும் நினைத்ததே இல்லை. அவன் அமைதியின்றி இருந்ததே இல்லை. போரிடும்போது, தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும்போது – ஏனெனில் எப்போதும் ஜெயிக்க வேண்டிய எதிரி, பிடிக்க வேண்டிய தேசம், போக வேண்டிய இடம் இருந்து கொண்டே இருந்தது – சிந்திக்க காலமோ, நேரமோ அவனுக்கு இருந்ததேயில்லை. அவன் எப்போதும் ஆக்ரமிக்கப் பட்டு இருந்தான். ஆனால் இப்போது அவன் இந்த முழு உலகத்தையும் ஜெயித்து விட்டான் – ஆனாலும் அமைதியின்றி இருக்கிறான் – என்ன செய்வது இப்போது.

ஒரு ஏமாற்றுக்காரன் இதைக் கேள்விப் பட்டான். அவன் அரணமனைக்கு வந்து, அமைதியின்றி இருப்பவர்களுக்காக தேவையான மருந்து என்னிடம்  இருக்கிறது எனக் கூறி அரசனை சந்திக்க அனுமதி கேட்டான். உடனடியாக அவன் உள்ளே அழைத்துச் செல்லப் பட்டான். ஏனெனில் எல்லா மருத்துவர்களும் தோற்றுப் போய்விட்டனர். அரசனால் உட்கார முடியவில்லை, தூங்க முடியவில்லை, அமைதியின்றி கவலையோடு அலைந்துகொண்டே இருந்தான். அவன், “இனி என்ன செய்வது? வேறு ஏதாவது உலகம் இருக்கிறதா? கண்டுபிடியுங்கள், அதையும் நாம் ஜெயிப்போம்.” எனக் கேட்டான்.

இந்த ஏமாற்றுக்காரன் அரசவைக்கு வந்து, “கவலைப்படாதீர்கள் அரசே, இந்த உலகையே ஜெயித்த முதல் மனிதர் நீங்கள்தான் – கடவுள் தானே அணியும் ஆடைகளை பெற தகுதியுடையவர் தாங்கள்தான். என்னால் இதை பெற்றுத்தர முடியும்” என்றான்.

இது ஒரு சிறப்பான யோசனையாக இருந்தது. அரசன் உடனடியாக ஆர்வம் கொண்டான். அவன், “நீ இந்த வேலையை செய்ய ஆரம்பித்து விடு. கடவுளின் சொந்த ஆடைகள்……… அவை ஏற்கனவே இந்த பூமிக்கு வந்திருக்கின்றனவா?” எனக் கேட்டான்.

அந்த மனிதன், “இல்லை, ஏனெனில் அவைகளை பெறகூடிய தகுதியை யாரும் இதுவரை பெறவில்லை. நீங்கள்தான் முதல் மனிதர். அதனால் முதல்தடவையாக, சொர்க்கத்திலிருந்து நான் உங்களுக்காக அந்த உடைகளை தருவிக்கிறேன்.” என்றான்.

அரசன், “எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடு……. எவ்வளவு செலவாகும்?” எனக் கேட்டான்.

அந்த மனிதன், “அவை விலைமதிப்பற்றவை. ஆனாலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் தேவைப்படும் – ஆனால் அதன் மதிப்பிற்கு முன் இந்த செலவு ஒன்றுமேயில்லை.” என்றான்.

அரசன், “கவலைப்படாதே. பணம் ஒரு பொருட்டல்ல. ஆனால் என்னை ஏமாற்ற முயற்சி செய்யக் கூடாது.” என்றான்.

அந்த மனிதன், “ஏமாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் அரண்மனையிலேயே தங்குவேன். நீங்கள் உங்கள் படையை அரண்மனையை சுற்றி நிறுத்தி வைத்து விடுங்கள். நான் இங்கேயேதான் வேலை செய்வேன். ஆனால் நான் உள்ளிருந்து தட்டும்வரை எனது அறை திறக்கப்படக் கூடாது. நீங்கள் அந்த அறையை வெளியே பூட்டிவிடலாம், அப்போதுதான் நான் தப்ப முடியாது என்று நீங்கள் திருப்தியோடு இருக்கலாம். ஆனால் நான் கேட்கும் பணத்தை நான் கூறும் நபர்களுக்கு நீங்கள் அனுப்பி விடவேண்டும். மூன்று வாரங்களுக்குள் இந்த வேலை முடிந்து விடும்.” என்று கூறினான்.

மூன்று வாரங்களுக்குள் அவன் கோடிக்கணக்கான ரூபாய்களை வாங்கி விட்டான். ஒவ்வொரு நாளும் ஒரு பெயர் – காலை, மாலை, மதியம், இரவு – உடனடியாக அவசரம்.

இந்த வேலை அப்படிப் பட்டது என்பதை அரசன் அறிவான். … இந்த மனிதன் அரசனை ஏமாற்ற முடியாது. அவன் எங்கே போக முடியும்? ஏனெனில் அவன் உள்ளே பூட்டப் பட்டிருக்கிறான். உறுதியாக அவன் தப்பிப் போக முடியாது.

மூன்று வாரங்களுக்குப் பின் அவன் உள்ளிருந்து கதவை தட்டினான். கதவு திறக்கப் பட்டது. அவன் ஒரு அழகான மிகப் பெரிய பெட்டியுடன் உள்ளிருந்து வந்தான். அவன் உள்ளே போகும்போது, “நான் உங்களுக்காக தருவிக்கப் போகும் ஆடைகளுக்காக இந்த பெட்டியை உள்ளே என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.” எனக் கூறி அந்த பெட்டியை உள்ளே எடுத்துச் சென்றிருந்தான். ஏமாறாமல் இருப்பதற்க்காக அரசன் அந்த பெட்டியினுள் ஏதாவது ஆடை இருக்கிறதா எனப் பார்த்தான். இல்லை, அது காலியாக இருந்தது, அதில் ஏமாற்ற எதுவும் இல்லை. அந்த பெட்டி அவனிடம் கொடுக்கப் பட்டது.

இப்போது அந்த ஏமாற்றுக் காரன் வெளியே வந்து, “இந்த பெட்டி அனைவரின் – கற்றவர்கள், பண்டிதர்கள், அறிவாளிகள், ராணி, ராஜா, இளவரசன், இளவரசி – முன்னிலையிலும் திறக்கப்பட வேண்டும். இது ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகையால் அனைவரும் வர வேண்டும்.” என்றான்.

அந்த மனிதன் உண்மையிலேயே மிகவும் தைரியசாலி. ஏமாற்றுக் காரர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவன் அரசரிடம், “அருகில் நெருங்கி வாருங்கள். நான் இந்தப் பெட்டியை திறக்கப் போகிறேன். உங்களுடைய தலைப்பாகையை கொடுங்கள். அதை நான் இந்த பெட்டியினுள் போட வேண்டும். இப்படித்தான் செய்ய வேண்டும் என எனக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. முதலில் உங்களுடைய இந்த தலைப்பாகையை உள்ளே போட்டு விட்டு, கடவுள் அளித்திருக்கும் தலைப்பாகையை வெளியே எடுத்து உங்களிடம் கொடுப்பேன். நீங்கள் அணிந்து கொள்ளலாம்.” என்றவன், ராஜசபையிடம் திரும்பி, “ஒரே ஒரு நிபந்தனை. இந்த உடைகள் தெய்வீகமானவை, அதனால் யார் தங்களது சொந்த தகப்பனுக்கு பிறந்தவர்களோ அவர்கள் கண்ணுக்கு மட்டுமே இந்த உடை தெரியும். யார் அப்படி இல்லையோ, அவர்கள் கண்களுக்குத் தெரியாது. இதில் நான் எதுவும் செய்ய முடியாது.” எனக் கூறினான்.

ஆனால் ஒவ்வொருவரும், “இதில் பிரச்னை எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்கள்தான்”. என்றனர்.

அரசரின் தலைப்பாகை உள்ளே சென்றது, ஏமாற்றுக்காரனின் வெறுமையான கை வெளியே வந்தது, அவன் அரசரிடம், “தலைப்பாகையின் அழகைப் பாருங்கள்” என்றான். அவனது கைகளில் ஏதுமில்லை. ஆனால் ராஜசபை முழுவதும் கைதட்டியது. ஒவ்வொருவரும் இதுபோன்ற அழகான ஒன்றை இதுவரை பார்த்ததேயில்லை என மற்றவரை மிஞ்சும் வண்ணம் சத்தமிட்டனர்.

இப்போது அரசன், நான் இவனது கைகளில் ஏதுமில்லை என்று சொன்னால் நான் மட்டுமே வேசி மகன் என ஆகி விடுவேன். இந்த வேசி மகன்கள் அனைவரும் தங்களது சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்களாகி விடுவர். அதனால் பேசாமலிருப்பதே சிறந்தது என நினைத்தான். உண்மையில் இதுதான் ஒவ்வொருவரின் நிலையும். எல்லோரும் அந்த மனிதனின் கைகளில் ஏதுமில்லை எனக் கண்டனர். ஆனால் யார் இதை வெளியே சொல்வது? எல்லோரும் எதையோ பார்ப்பது போல நடிக்கும்போது யார் அங்கு ஒன்றுமில்லை என்பதை சொல்வது? ஒவ்வொருவரும், “நான் வேசி மகனாக இருக்கக்கூடுமோ, அதனால் பேசாமலிருப்பதே சிறந்தது. தேவையில்லாமல் ஏன் இவர்களால் இகழப் பட வேண்டும்?” என சந்தேகப் பட்டனர். அதனால் அவர்கள் அதனுடைய அழகைப் பற்றி அதிக சத்தமாக கூற ஆரம்பித்தனர்.

அரசன் இல்லாத தலைப்பாகையை தனது தலையில் அணிந்தான். ஆனால் தலைப்பாகை மட்டுமல்ல, மற்ற உடைகளும் மறைய ஆரம்பித்தன. கடைசியில் அவனது உள்ளாடை மட்டுமே எஞ்சியது. அரசன் ஒரு விநாடி, “என்ன செய்வது இப்போது” என யோசித்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. “தலைப்பாகையை பார்த்தாயிற்று, மேலாடையை பார்த்தாயிற்று, சட்டையை பார்த்தாயிற்று, பின் எப்படி உள்ளாடையை பார்க்க முடியாது இப்போது பார்க்கத்தான் வேண்டும். திரும்பி போக முடியாது. இந்த மனிதன்……….”

அந்த மனிதன் இல்லாத உள்ளாடையை அவனது கைகளில் ஏந்தி, எல்லோரிடமும் காட்டினான். “பாருங்கள், எத்தனை வைரங்கள் இந்த உள்ளாடையில் என்று பாருங்கள்”. என்றான்.

முழு அரசவையும் கைதட்டி பாராட்டி, “மனித வரலாற்றிலேயே இப்படி ஒரு அனுபவம் நிகழ்ந்ததேயில்லை.” என்றது.

அரசனின் உள்ளாடையும் உள்ளே சென்றது. ஆனால் அந்த ஏமாற்றுக்காரன் வித்தியாசமானவன். அவன், “நான் இதை பெறும்போது, கடவுள் என்னிடம், ‘இந்த உடைகள் முதன்முறையாக உலகத்திற்கு வருகின்றன, அதனால் அரசர் இந்த உடைகளை போட்டுக் கொண்ட பின் இந்த தலைநகரத்தை ஒருமுறை சுற்றி வரச் சொல்லி நான் சொன்னதாக அவரிடம் சொல். அப்போதுதான் எல்லா மக்களும் இந்த உடைகளை பார்க்க முடியும். இல்லாவிடில் ஏழை மக்களால் இந்த உடைகளை ஒருபோதும் பார்க்கவே முடியாது’ என கூற சொன்னார். அதனால் ரதம் தயாராக இருக்கிறது வாருங்கள்.” என்றான்.

இப்போது முடியாது என மறுப்பது சாத்தியமில்லை. அரசன் “இந்த விஷயத்தை தலைப்பாகையோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டது. நான் நிர்வாணமாக இருக்கிறேன் என்பதை நான் கூறினால்…..முழு அரசவையும் சிரிக்குமே.” என நினைத்தான்.

மற்றவர்கள், “ஆமாம், அரசே அதுதான் சரி. கடவுள் கூறியிருந்தால் அப்படியே நடந்தாக வேண்டும். அதுவே இந்த உடைகளுக்கு நாம் அளிக்கும் மிகச் சரியான வரவேற்பாகும்.” என்றனர்.

பாதை நெடுக மக்கள் கூட்டம் அலைமோதியது. கடவுளின் ஆடைகளை பற்றிய செய்தி நாடு முழுக்க பரவியிருந்தது. அரசன் சம்மதித்தான். அவன் நிர்வாணமாக தனது தேரில் ஏறி நின்றான். தேருக்கு முன் சென்ற இந்த மனிதன் எல்லோருக்கும் கேட்கும்படியாக, “இந்த கடவுளின் உடைகள் யார் தங்களது சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்களோ அவர்களுக்கு மட்டுமே தெரியும்”. என அறிவித்தான்.

அதனால் பார்த்த அனைவரும் எதுவுமே கூறவில்லை. ஆனால் ஒரு சிறிய குழந்தை, தனது தந்தையின் தோளின் மீது அமர்ந்திருந்த அது, “அப்பா, அரசர் அம்மணமாக இருக்கிறார்” என்றது.

அந்த தந்தை, “முட்டாளே, வாயை மூடு நீ வளர்ந்த பிறகு உன்னால் அந்த உடைகளை பார்க்க முடியும். அதற்கு ஒருவிதமான பக்குவம் தேவைப் படுகிறது. உன்னைப் போன்ற குழந்தையால் அதைப் பார்க்க முடியாது. நீ அதை பார்க்க விரும்பினால் சும்மாயிரு. ஆரம்பத்திலிருந்தே உன்னை கூட்டிக் கொண்டு வருவதில் எனக்கு விருப்பமில்லை”. என்றார்.

ஆனால் அந்த குழந்தையால் சும்மாயிருக்க முடியவில்லை. திரும்ப திரும்ப அது, “நான் அவர் அம்மணமாக நிற்பதை தெளிவாக பார்த்தேன்”. என்றது. அந்த தந்தை அந்த குழந்தையுடன் கூட்டத்திலிருந்து விலகி சென்றார். ஏனெனில் அந்த குழந்தை சொல்வது மற்றவர்கள் காதில் விழுந்துவிட்டால் அந்த குழந்தை அவனுடையது அல்ல, வேறு யாருக்கோ பிறந்தது என அர்த்தமாகி விடுமே.

பார்க்க முடியாத பொருட்களை விற்பனை செய்யும்போது மிக சுலபமாக மக்களை ஏமாற்றலாம், அவர்களுக்கு எதிரான விஷயங்களை அவர்களையே செய்ய கட்டாயப் படுத்தலாம். – அதுதான் துறவறம்.

கடவுளின், உண்மையின், மோட்சத்தின், நிர்வாணாவின் பெயரால் போலி பூசாரிகளால் செய்யப் படுவது மனித தன்மையுடையதே அல்ல.

அவர்களது பெயர்கள் மாறுபடலாம். ஆனால் இந்த உலகத்தில் பூசார்கள்தான் மிகப் பெரிய ஏமாற்றுக்காரர்கள். மற்ற ஏமாற்றுக்காரர்கள் எல்லோரும் திருடர்கள், அவ்வளவுதான். அவர்கள் வேறு என்ன உன்னை ஏமாற்ற முடியும் ஆனால் பூசாரிகள், குறி சொல்பவர், மத போதகர், குருக்கள், தீர்த்தங்கரர்கள் – இவர்கள்தான் மிகப் பெரிய ஏமாற்றுக் காரர்கள்.

அவர்கள் இதுவரை யாரும் பார்த்திராத, யாரும் பார்க்கவே முடியாத விஷயங்களை விற்பனை செய்கின்றனர். இதுவரை பார்த்த சாட்சி ஒன்று கூட இல்லை.

மரணத்திலிருந்து திரும்பி வந்து யாரும், “ஆம், இது அழிவற்ற அழகு, அழிவற்ற சந்தோஷம், முடிவற்ற அமைதி, அழியாத மெளனம்”. எனக் கூறியதில்லை.

அந்த வியாபாரம் நடந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில் யாரும் இதுவரை அதற்கு மாற்றுக் கூறியதில்லை – நீ அதை மறுத்து கூறினால் நீதான் தவறானவன். ஏனெனில் இந்த முழு உலகமும் அதை நம்புகிறது.

Monday, December 18, 2017

பத்து வருடமாய் தூங்காமல் இருக்க இயலுமா?

அதிசயம் என்று நினைக்கவோ, நீங்கள் ஆச்சரியப்படவோ இதை எழுதவில்லை. இப்படி நாமும் இருக்கலாம் என்பதற்காகத்தான் எழுதுகிறேன்.  பத்திரகிரியார் தன் மெய்ஞானப் புலம்பலில் “தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்” என்று புலம்பி இருப்பார். அதென்ன தூங்காமல் தூங்கி சுகம் காண்பது என்று எனக்குள் கேட்டுக் கொண்டிருப்பேன். 

உடலுக்குத் தூக்கம் அவசியம் என்பார்கள். அதை விட மெய்ஞானத் தூக்கத்தில் ஆழ்ந்து தூங்காமல் தூங்குவதற்கும் பயிற்சியும், முறையான வழியும் உண்டு என்கிறார்கள் சித்தர்கள். இதையெல்லாம் பாடல்களாய் எழுதி வைத்து இருக்கிறார்கள். ஆனால் சாட்சி? உண்மையா என்று உணர்வதற்கு ஏதேனும் நிகழ்கால நடப்புகள் இருக்கின்றனவா என்று தெளியாத மனசு கேள்வி கேட்கும். அப்படித்தான் நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரு யோகியின் கதை என்கிற புத்தகத்தில் யோகேஸ்வரானந்தரின் அனுபவங்களைப் படித்த பிறகு கொஞ்சம் தெளிவு பிறந்தது. என் அறிவு உணர்ந்து கொள்ளாத, அல்லது அறிந்திடாத விஷயங்களை நான் இனி மறுப்பது கூடாது என்ற கொள்கைக்கு வந்தேன். அறிவியல் பூர்வமாக சாத்தியமா என்று இனி ஆராயத் தேவையில்லை என்ற முடிவுக்கும் வந்து விட்டேன். மானிடர்கள் தனக்கு ஒரு விடயம் புரியவில்லை என்பதற்காக உடனடியாக மறுதலித்து கிண்டல் செய்து பேச ஆரம்பித்து விடுவார்கள். அது அவர்களின் அறியாமை. அது அவர்களின் பிரச்சினை. தாம் அறிந்து கொண்டிருப்பது பிறரின் கூற்று என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அறிவிலிகள். நாம் உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை ஒவ்வொன்றும் பிறரால் நமக்கு வழிகாட்டப்பட்டவை அல்லவா? இதில் நம் புத்தி எங்கே போனது? அது இருந்தாலல்லவா நாமெல்லாம் உண்மையான மனிதர்களாக இருப்போம். நாம் பிறரின் பதிப்பு அவ்வளவே. நம் சிந்தனை கூட பிறரால் வழி காட்டப்பட்ட வழியில் மட்டுமே இயங்கும் தன்மை கொண்டவை. தனக்கான சிந்தனை என்று எவரும் சிந்திப்பது இல்லை.நேற்று காலையில் எனக்கு நிரம்பவும் பிடித்த தம்பதிகளுடன் உரையாடிட காலம் கிடைத்தது. இருவரும் ஆன்மீக வழி நின்று சேவைகள் செய்து வருபவர்கள். அந்தத் தம்பதியினரைச் சந்தித்த போது, அப்பெண்மணியின் முகம் தேஜஸ்சில் ஜொலித்தது. அப்படி ஒரு தெளிவு. இதுவரை நான் அந்த முகப் பொலிவை எந்தப் பெண்ணிடமும் பார்த்தது இல்லை. அல்ல, அல்ல பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.

அவரின் கணவர் என்னிடம் வருத்தப்பட்டார், ”இவர் தூங்கி பத்து வருடங்களுக்கும் மேல் ஆகிறது” என்று.  அது சாத்தியமா? என்று எனக்குப் புரியவில்லை. அடியேனோ எட்டரை மணிக்கு மேல் தலையாட்டிட ஆரம்பித்து விடுவேன். விடிகாலை நான்குக்கு மேல் படுக்கை முள்ளாகி விடும். விடிகாலையில் துயில் எழுவதும், சீக்கிரமே தூங்கச் செல்வதும் எனக்கு வாடிக்கையாகி விட்டது. அந்த முகத்தில் ஒரு சிறு கரு வளையமோ அல்லது அயர்ச்சியோ அல்லது சோர்வோ இல்லை. துடைத்து வைத்தக் குத்து விளக்காக இருந்தார் அவர். அதெப்படி பத்து வருடமாய் தூங்காமல் இருக்க இயலும்? என்றொரு கேள்வி எழ, அவர்களை அழைத்துக் கொண்டு குருநாதரைத் தேடிப் புறப்பட்டோம்.

ஆழ்ந்த தெய்வபக்தி கொண்ட தம்பதிகளின் சரியான நேரச் சேர்க்கையினால் பூமிக்கு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி என்று விரித்துரைத்தார் ஜோதி சாமி என்னிடம் தனியாக.

காய்ஞ்ச மாடு கம்மங்கொல்லையில் விழுவது போன்று இல்லறத்தில் ஈடுபடுவதினால் தான் வாரிசுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகப் போய் விடுகின்றன ஆண்டவனே என்றார். அவர் தூங்க வேண்டிய அவசியமே இல்லை. அவ்வாறு அவர் தூங்க ஆரம்பித்தால் பின்னர் எழவே மாட்டார் என்று அவரின் கணவரிடம் சொன்னார். ஆகவே வருத்தமோ அல்லது கோபமோ பட வேண்டாம் என்று கனிவுடன் அறிவுறுத்தினார். இருவருக்கும் நிரம்பவும் மகிழ்ச்சி. பத்து வருடங்களாக மனதுக்குள் பாரத்தோடு இருந்தவர்களுக்கு அது ஒரு நோய் அல்ல என்பது புரிந்ததும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். 

அலோபதி மருத்துவர்கள் இதற்கு பல பெயர்களைச் சூட்டுவார்கள். ஒரு யோகியின் கதை புத்தகத்தில் காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்தவரின் புகைப்படம் இருக்கிறது. அது சாத்தியமா என்று அறிவியலால் நிரூபிக்க முடியாது.

தம்பதிகள் இல்லறத்தில் ஈடுபடவும் நேரம் காலங்கள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் நாம் பின்பற்றுவதில்லை என்று சொன்னார் சாமி. உடனே ஜோசியக்காரர்களிடம் சென்று முதலிரவுக்கு நேரம் குறித்தால் போதுமா என்று உங்கள் மனசு கேட்க ஆரம்பிக்கும். அந்த நேரம் அல்ல இது. சாமி என்னிடம் கூறியது வேறு. இனி அது எனக்குப் பயன்படாது என்பதாலும் குழந்தைகளுக்கு ஆதர்ஷ மனிதனாய் இருக்க வேண்டும் என்கிறதாலும் அதிகம் கேட்கவில்லை.

போன வாரம் என்று நினைக்கிறேன். சாமியிடம் பேசிக் கொண்டிருந்த போது ”700 வருடங்களுக்கும் மேல் வாழ வழி இருக்கிறது ஆண்டவனே” என்றார்.  அதற்குரிய எளிய வழி முறைகளையும் என்னிடம் எடுத்துரைத்தார். எனக்கு அதுவும் தேவைப்படாது. இந்த உடலை வைத்துக் கொண்டு 1000 வருடங்கள் வாழ்ந்து என்ன கிழிக்கப் போகிறோம், போதுமடா சாமி, என்றைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்றைக்கு மகிழ்வாய் உடலை உகுத்திட வேண்டுமென்று எண்ணமுள்ளதால் (உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் அல்லவா?) அவர் சொன்ன எளிய வழிமுறையை இங்கு எழுதிடவில்லை.

ஒரு ஹிட்லர் 60 வருடம் வாழ்ந்ததிற்கே இத்தனை கொலைகள் செய்தார். இன்னும் 1000 வருடங்கள் வாழ்ந்தால் என்ன ஆகும்? என்று நினைத்தாலே நடுக்கமெடுக்கிறது. ஆகவே கலிகாலத்தில் விதிக்கப்பட்டது எதுவோ அது  அப்படியே நடக்கட்டும்.

வாழ்க வளமுடன் !

Saturday, December 16, 2017

மக்களை முட்டாளாக்கும் பத்திரிக்கைகளும் மீடியாக்களும்

பல்வேறு செய்திகளையும், நாட்டு நடப்புகளையும் நம் வீட்டுக்கே கொண்டு வருபவை செய்திதாள்களும், டிவி மற்றும் இணையதளங்கள். ஆனால் இவைகளில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மை என்ன? என்பது பற்றி எவரும் சிந்திப்பதே இல்லை. ஒவ்வொரு மீடியாவும் தங்களுக்கு ஏற்றவாறு செய்திகளை திரித்து வெளியிடுகின்றன என்று பேசுவோம். ஆனால் அதை மறந்து விட்டு, அந்தச் செய்திகள் உண்மை என நினைத்து விடுகிறோம். இந்த இடத்தில் தான் நாம் நம்பிக்கை என்று மன ஏற்பால் ஏமாற்றப்படுகிறோம்.

ஆடு தன் முன்னாள் செல்லும் ஆட்டின் வாலைப் பார்த்துக் கொண்டே செல்லும் என்பார்கள். அதே போல தினசரிகளில் வரும் செய்திகள் ஒவ்வொன்றும் உண்மை என்று நம்பிக்கொண்டு இன்றைக்கும் டீக்கடைகளிலும், பலர் ஃபேஸ்புக்கிலும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு விவாதித்துக் கொண்டு, கமெண்ட், லைக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முன்பு டீக்கடை, இப்போது ஃபேஸ்புக், டிவிட்டர். ஆனால் ஏமாறுவது நாம் என்று அறியாமலே ஏமாந்து கொண்டிருக்கிறோம். பத்திரிக்கைகள் என்றைக்கு கட்சி சார்பானதாக மாறியதோ அன்றைக்கே மீடியா தன் தர்மத்தை இழந்து விட்டது. பேனாவின் நிப் உடைந்து போய் அரசியல் சாக்கடையில் விழுந்து விட்டது. பத்திரிக்கைகளில் பேனா நிப்பினைப் போட்டு நான்காவது தூண் என்றெல்லாம் எழுதுவார்கள். அதை உண்மை என்று நம்பி பத்திரிக்கைத் துறைக்குள் நுழைந்தவர்கள் எதார்த்தம் என்னவென்று தெரிந்து கொண்டு, பிழைக்கும் வழிக்கு மாறி விட்டார்கள். பிழைக்கும் வழி - “உண்மையை சார்ந்திருப்பதுக்கு ஏற்ப பேசுவது இல்லை மறைப்பது” 

உங்களுக்கு சாட்சிகள் இல்லையென்றால் நம்பமாட்டீர்களென்பதால் சாட்சியுடன் வந்திருக்கிறேன். இனி பேப்பர் படித்து அந்தச் செய்தி உண்மை என்று நம்புவதை விட்டு விடுவீர்கள் என்று நினைக்கிறேன். 

தினமலரில் இன்றைக்கும் 16/12/2017 அன்று வந்த செய்தியின் படம் கீழே
.

செய்தியைப் படித்து விட்டீர்களா? இனி தினகரனில் வெளிவந்த செய்தி கீழே. உடனே அது பிஜேபி பத்திரிக்கை, இது திமுக பத்திரிக்கை என்று ஆரம்பித்து விடாதீர்கள். செய்தி ஒன்று. ஆனால் அதன் அர்த்தம் என்ன என்பதை மாத்திரம் புரிந்து கொள்ள முயலுங்கள். மீடியாக்காரர்களை நாம் என்னவென்று அழைக்கலாமென்று நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.



அதுமட்டுமின்றி தினத்தந்தியின் செய்தியின் இணைப்பு கீழே இருக்கிறது. அதையும் படித்து விடுங்கள்.

சொல்ல வந்தது அவ்வளவுதான். 

மார்கழி பிறந்து விட்டது. கோவையில் குளிர் அதிகம் வாட்டுகிறது. விடிகாலை கோலம், சாணி, கோவில் குளங்களுக்குச் சென்று வருவது எல்லாம் கிராமப் புறங்களில் நடக்கின்றனவா எனத் தெரியவில்லை. ஆன்மீகம் நல் வழிப்படுத்தும் பாதை. ஆனால் கடவுள் தான் இன்றைக்கும் இந்த பூமிபந்தின் மிக உயர்ந்த வியாபாரப் பொருளாக மாறிப் போனார் என்பது வருத்தம் அளிக்கிறது.


Monday, December 11, 2017

நிலம் (42) - நில உச்ச வரம்புச் சட்டம் இன்னும் இருக்கிறதா?

என்னிடம் ஆலோசனை கேட்க வரும் பலரிடம் நில உச்சவரம்புச் சட்டம் பற்றி விவரித்திருக்கிறேன். ஆனால் ஒருவரும் நம்பமாட்டேன் என்றார்கள். ஒருவர் ”என் வக்கீலிடம் கேட்டேன், அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, உங்களுக்கு மட்டும் தான் இப்படி வித்தியாசமான விஷயமெல்லாம் தெரியுமா?” என்று எதிர்கேள்வி கேட்டார். அவரிடம் நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. முட்டாள்களிடம் பேசுவதில் என்ன பிரயோஜனம்? சொல்வதில் ஏதாவது உண்மை இருக்குமா? என்று கூடவா சிந்திக்கக் கூடாது. வக்கீல் சொல்லி விட்டார் என்றால் போதுமா? உண்மை என்று ஒன்று உண்டு அல்லவா? ஏன் சிந்திக்க மாட்டேன் என்கிறார்கள் என்றே தெரியவில்லை. அது போகட்டும். அது அவரவர் பிரச்சினை.

“சாலையோரம் இருந்த இடத்தினை வாங்காதீர்கள்” என்று படித்துப் படித்துச் சொன்னேன். கேட்கவில்லை. இன்றைக்கு இடித்து விட்டார்கள். என் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை எனக்குத் தெரிந்தவருக்கு. காசும் போச்சு, நிம்மதியும் போச்சு. சொன்னால் கேட்பவர்களுக்கு சொல்லலாம். ஆதாரத்தைக் கொடுத்தும், கேட்கமாட்டேன் என்று நிலம் வாங்கியவரின் கதி இன்றைக்கு அதோகதி. படட்டும். இனி புத்தி வந்து என்ன ஆகப் போகிறது?

நில உச்சவரம்புச் சட்டம் என்றால் என்னவென்றால் ஒரு தனி மனிதர் மொத்தமாக ஐந்து தர ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அதிகமாக வைத்திருந்தால் அரசு எந்த அறிவிப்பும் இன்றி அதை அரசுடைமையாக்கி விடும். விஷயம் புரிகிறதா? தனியார் கம்பெனிகள் என்றால் 15 தர ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் என்றால் அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு என தனியாக அரசு அலுவலகம் வைத்திருக்கிறது.

தினமலரில் வந்த செய்தி கீழே:

நில சீர் திருத்த சட்ட பணிகளை கண்காணிக்கும் துணை கலெக்டர் பணியிடங்கள் கலைக்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியரிடம், ஒப்படை அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

சிலரிடம் உபரியாக உள்ள நிலங்களை பெற்று, நிலம் இல்லாதோருக்கு வழங்கும் நில சீர்திருத்த சட்டம், சுதந்திரத்துக்கு பின் கொண்டுவரப்பட்டது. 

தமிழக நில சீர்திருத்த, நில உச்சவரம்பு சட்டம், 1961ல் அறிமுகம் செய்யப்பட்டது. இது, 1970 பிப்., 15 முதல் நடைமுறையில் உள்ளது. நில உச்சவரம்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின், 1983, மார்ச் முழுவதும், 1.11 கோடி ஏக்கர் உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில், 72 லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், 49 லட்சம் ஏக்கர், நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. நில உச்சவரம்பு சட்டம், தற்போதும் நடைமுறையில் உள்ளது. சட்ட விதிகளின்படி, நிலம் எடுப்பு, பட்டா மோசடி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பணிகளுக்காக, மாவட்டம் தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மாவட்ட அளவில், துணை கலெக்டர் தலைமையிலான பிரிவு, நில உச்சவரம்பு சட்ட பணிகளுக்காக இயங்கி வந்தது. மத்திய அரசின் உத்தரவுப்படி, சில மாதங்களுக்கு முன், நில சீர்திருத்த பணிகள் அனைத்தும், ஆர்.டி.ஓ., எனப்படும், வருவாய் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. நில சீர்திருத்த அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் ஒப்படை வழங்கும் அதிகாரிகளாக, அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நில சீர்திருத்த சட்டத்தில், நிலம் எடுப்பு, ஒப்படைப்பு தொடர்பான பணிகள், சப்-கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ., வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உபரி நிலம் ஒப்படைப்பு, நில சீர்திருத்தம் போன்ற பணிகள், சட்ட வழிகாட்டுதலின்படி, வருவாய் கோட்ட அளவிலேயே மேற்கொள்ளப்படும். 

இது குறித்து, மக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில், சப்-கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், பெயர் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்


படித்து விட்டீர்களா? யாரெல்லாம் ஏகத்துக்கும் சொத்துக் குவித்து வைத்திருக்கின்றீர்களோ அவர்கள் உடனடியாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று வாழாவிருந்து விடாதீர்கள். அதென்ன தர ஏக்கர் என்று கேள்வி கேட்பவர்கள் போனில் அழைக்கவும். அல்லது மெயில் அனுப்பவும்.

விரைவில் பாகம் பிரித்த சொத்தின் உரிமையாளர், இறந்து போனால் அந்தச் சொத்தின் அடுத்த வாரிசு யார்? என்ற கேள்விக்கும், வில்லங்கமான ஒரு விஷயத்திற்கு விளக்கம் எழுத இருக்கிறேன். 

Saturday, December 9, 2017

வங்கி டெபாசிட்டும் இனி அம்புட்டுதானா?

பிஜேபி தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆனதும் இந்தியா வல்லரசாகி, எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன். கண்ணை மூடினால் வெண் தாடி மோடிஜி மாவீரன் சிவாஜி போல தோற்றமளித்தார். ஓட்டைக் குத்தி விட்டு வந்தேன்.

எனக்கு இருக்கும் அரைகுறை பொருளாதார அறிவில், மோடிஜியின் செல்லா நோட்டு அறிவிப்பு கண்டு குஷியானேன். ஆஹா என்னே ஒரு திட்டம் என்று புளகாங்கிதம் அடைந்தேன். வயித்துப் பாட்டுக்கே தகிங்கினத்தோம் போட்டுக் கொண்டிருக்கையில் பிளாக்கில் ஏது பணம்? தேர்தல் நேரங்களில் பஸ்களிலும், கண்டெய்னர்களிலும் கட்டுக்கட்டாக கரன்சிக்களை, டிவிக்களில் பார்ப்பதோடு சரி. தமிழகத்தை நல்ல மாநிலமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் எனது ஆஸ்தான நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி ஆகியோரின் படங்களில் கட்டுக் கட்டாகப் பார்த்ததுண்டு. ஒரு ரூபாய் வைத்துக் கொண்டு கோடிகளைக் குவிக்க ரஜினியின் டிரைவராக இருந்திருக்க வேண்டும். ம்... அதையெல்லாம் யோசித்து என்ன செய்ய? அதிர்ஷடம் வேண்டும். அதுவும் எப்படித் தெரியுமா?

நம்ம யோக்கியனுக்கு எல்லாம் யோக்கியராகப் படம் எடுக்கும் சங்கரின் படத்தில், கிட்ட நின்னு பார்க்கக் கூட முடியாத இலியானா அழகியின் மெத் மெத் சமாச்சாரம் இடிக்க, ஸ்கூட்டரில் பயணிக்கும் கும்பகோணத்து சுப்ரமணியம் ஹோட்டலுக்காரருக்கு அடித்த அதிர்ஷ்டம் போல நமக்கும் அடித்தால் மூட்டை மூட்டியாக கரன்சிக்கள் கிடைக்கும். உடனே சங்கர் படத்தில் கும்பகோணத்து அய்யர் எப்படி நடித்தார் என்று கேட்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நம்ம இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமனிடம் சென்று அதெப்படி நீங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சரானீர்கள் என்று கேள்வி கேட்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். (இந்த அரசியல் எல்லாம் தெரிந்தால் நீ பிளாக் எழுத வருவாயா என்று திட்டுகிறவர்களுக்கு ஒரு சல்யூட். நிச்சயமாக இந்த அரசியல் தெரிந்தால் நானல்லவா இந்தியாவின் பிரதமராக இருந்திருப்பேன்?)


காசு பணம் சேர வேண்டுமெனில் அவரவருக்கு நேரம் வர வேண்டும். ஏன் சொல்கிறேன் என்றால், இப்போதைய தமிழக அரசில் எம்.எல்.ஏவாக இருப்போரும் எம்.பியாக இருப்போரும் லக்கால் சூழப்பட்டவர்கள். கொட்டிக்கொண்டிருக்கிறது மழை. என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கிக் கிடக்கின்றார்கள். அந்தளவுக்கு மழை கொட்டோ கொட்டுன்று கொட்டிக் கொண்டிருக்கிறது. (அமலாக்கத்துறையினரும், அய்ட்டிக்காரர்கள் தவறாகப் புரிந்து கொள்ளப் போகின்றார்கள். நான் உண்மையிலேயே மழையைத்தான் சொல்கிறேன் அரிச்சந்திரன் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களே. தவறாகப் புரிந்துகொண்டு விடாதீர்கள் ப்ளீச்....!(ஷ்க்குப் பதில் ச் தான் இங்கு சரியாக வரும்)

என்ன சொல்கிறேன் என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமென்றால் நீங்களெல்லாம் ஆஃபிரிக்காவுக்குச் சென்று விடுங்கள். நீங்கள் இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லை. அப்பிராணிகள் ஆஃப்ரிக்காவில் தானே இருக்க வேண்டும். என்ன நான் சொல்வது?

இன்று கீழே இருக்கும் செய்தியைப் படித்தேன். பகலிலேயே கனவு வருகிறது. கனவில் அலறி அடித்துக் கொண்டு எழும்புகிறேன். பகல் கனவு பலிக்காது என்றுச் சொல்லி இருக்கின்றார்கள். அப்படியா? உங்களுக்குத் தெரியுமா?

சரி விஷயத்துக்கு வந்து விடுகிறேன். வழக்கம் போல தினமலரில் இந்தச் செய்தி வரவில்லை. தினகரனில் படித்தேன். படித்தவுடன் பக் என்று ஆகி விட்டது. நீங்களும் படியுங்கள். இந்தியா நிச்சயம் வல்லரசாகி விடுமென்று நான் அடித்துச் சொல்கிறேன். நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்??? அதுமட்டுமா அரோகரா அரோகராவும் இனி போட வேண்டிய சூழல் வந்து விடும். ஆகையால் பழனி முருகனை வழி பட்டு வாருங்கள். ஒரே ஒரு கோவணத் துணி கூடவா நம்ம இந்தியாவில் கிடைக்காமல் போய்விடும்? நிச்சயம் கிடைக்கும் கோவணம். கோவணம் இருந்தும் என்ன பயன் என்று புலம்பும் பெண்மணிகளுக்கு “அம்மா, தாய்மார்களே! ஏதோ பிழைச்சுப் போகிறேன்” என்று பெரிய மனது பண்ணி விட்டு விடுங்களேன். ப்ளீஸ்...!

செய்தி கீழே. நன்றி தினகரன்.

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு மசோதா பலரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. வங்கிகள் திவாலானால், அதனை மீட்டெடுக்க வாடிக்கையாளர்கள் போட்ட பணத்தை பயன்படுத்திக்கொள்ள இந்த மசோதா வகை செய்கிறது எனவும், இந்த விதியை நீக்க வேண்டும் எனவும் எதிர்ப்பு வலுத்துவருகிறது. சிறுசேமிப்பு என்பது சிறுவயது முதல் பெரியவர்கள் கற்றுத்தரும் அனுபவ பாடம். பணத்தை பாதுகாப்பாக போட்டு வைப்பதற்காகவே வங்கிகளில் சிறுசேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளவர்கள் ஏராளம். சேர்க்கப்பட்ட பணம் பாதுகாப்பாக உள்ளது என்ற நிம்மதி வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுக்கிறது. ஆனால் இந்த அடிப்படை அம்சத்தையே ஆட்டிவைக்கும் நிலையில், புதிய நிதி மசோதா பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜூன் 14ம் தேதி, பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ‘நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு - 2017 மசோதா’ என்ற ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. அதன்பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.   இதில் பல முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, வங்கிகள் திவால் ஆகிவிட்டால், அதில் வாடிக்கையாளர்கள் போட்டு வைத்துள்ள டெபாசிட் பணத்தை வங்கிகள் எடுத்துக்கொண்டு திவால் பிரச்னைக்கு தீர்வுகாண பயன்படுத்திக்கொள்ளும் என்ற ஒரு விதி சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த, ஜூன் 14 அன்று பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ‘நிதித் தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு - 2017 மசோதா’வுக்கு (எப்ஆர்டிஐ மசோதா) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா ஆகஸ்ட் மாதம் 10 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு, இந்த மசோதா மீதான தனது அறிக்கையை, வரும் 15ம் தேதி துவங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையை சேர்ந்த ஷில்பா  என்ற பெண் சேஞ்ச்.ஓஆர்ஜி இணையதளம் மூலம் நிதியமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதில் ‘நிர்வாக குறைபாட்டால் திவாலான வங்கிகளை மீட்க, அதில் டெபாசிட் செய்துள்ள அப்பாவி மக்களின் பணத்தை பயன்படுத்தாதீர்கள்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த கைெயழுத்து இயக்கம் தொடங்கி 24 மணி நேரத்தில் சுமார் 40,000 பேர் கைெயழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது இது 74,000ஐ தாண்டிவிட்டது. இதன்பிறகுதான் இந்த மசோதா பற்றிய அச்சம் பலரையும் தொற்றிக்கொண்டு விட்டது.

அதாவது, இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், தீர்வுக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்படும். இதை செயல்படுத்த இயக்குநர் குழு அமைக்கப்படும். இதில் நிதியமைச்சகம், செபி, ரிசர்வ் வங்கி, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், ஓய்வூதிய நிதி ஒழுங்கமைப்பு ஆணையம் ஆகியவற்றில் இருந்து ஒரு நபரும், மத்திய அரசு சார்பில் ஐந்து உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள். வங்கி, கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் அபாய கட்டணத்தை எட்டியிருப்பதாக கருதப்பட்டால், அந்த நிறுவனத்தை மூடுவதற்கும், வேறொரு நிதி நிறுவனம் அல்லது வங்கியுடன் இணைப்பதற்கும், ஊழியர்களை வேலையில் இருந்து அனுப்பவும் இந்த கழகத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என தெரிகிறது. அதோடு, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் சொத்துக்களை விற்று தீர்வுகாணவும் உத்தரவிடலாம். வங்கிகள் திவாலானால், மேற்கண்ட தீர்வுக்கழகம் ஒரு குறிப்பிட்ட அளவு வரை டெபாசிட் காப்பீடு வழங்கும். ஆனால் எந்த அளவுக்கு பணம் திரும்ப கிடைக்கும் என்று கூறப்படவில்லை. இதை தீர்வுக்கழகம்தான் முடிவு செய்யும். தற்போது வங்கிகள் திவால் ஆனால் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரன்டி கார்ப்பொரேஷன் மூலம் ஒரு லட்சம் கிடைக்கும். ஆனால் இந்த உத்தரவாதம் புதிய மசோதா விதிகளில் உள்ளதா என்பது தௌிவுபடுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. 

அதோடு, காப்பீடு அளிக்கப்படும் தொகைக்கு மேல் உள்ள டெபாசிட் பணத்தை, திவாலான வங்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்ய பயன்படுத்திக்கொள்ள முடியும். இதேபோல், ஐந்து ஆண்டுக்கு இருப்பு வைத்து அதன்பிறகு திருப்ப அளிக்கலாம். ஆனால், அவசரத்துக்கு தேவைப்பட்டால் இதை எடுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், நீதிமன்றங்களில் கூட முறையீடு செய்ய இயலாது. வங்கிகள் பெரிய நிறுவனங்கள், தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுக்கின்றன. இவை திரும்ப வராதபட்சத்தில் வங்கிகள் நிதிநிலை மோசமாகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு வாடிக்கையாளர் எப்படி பொறுப்பேற்க முடியும் என்பது எதிர்ப்பு தரப்பின் வாதம். ஆனால், வாடிக்கையாளர் வங்கியில் போட்ட பணத்துக்கு பாதுகாப்பு உத்தரவாதம் உண்டு. ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளில் உள்ள வாடிக்கையாளர் பாதுகாப்பு இதிலும் உறுதி செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.

* கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 
* மசோதாவில் உள்ள பிரிவு 52ன்படி , வங்கி திவாலானால் டெபாசிட்தாரர்கள் தங்கள் பணத்தை கோரும் உரிமையை இழக்கிறார்கள்.
* மசோதாவில் உள்ள இந்த விதியை நீக்கக்கோரி ஆன்லைனில் நடத்திய எதிர்ப்பு பிரசாரத்தில் 74,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
* வராக்கடனால் வங்கி நிதி நிலை மோசமாகும்போது, கடன் வாங்கியவர்கள் அல்லாமல், டெபாசிட்தாரர்கள் பலிகடா ஆவதாக எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 
* ரூ.5,000 கோடிக்கு மேல் கடன் வாங்கிய 12 கடனாளிகளிடம் வசூலிக்க வேண்டிய சுமார் ரூ.2.5 லட்சம் கோடி நிலுவையில் உள்ளது. இது வராக்கடனில் 25%
* இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் தீர்வுக்கழகம் உருவாக்கப்படும். இதை நிர்வகிக்க ரிசர்வ் வங்கி, செபி அதிகாரிகள் அடங்கிய இயக்குநர் குழு அமைக்கப்படும்.
* வங்கிகளில் உள்ள மொத்த வராக்கடனில் ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் வாங்கி திரும்ப தராத நிறுவனங்கள் 88% உள்ளன.
* 2016-17 பட்ஜெட் தாக்கலின்போது, நிதிநிறுவனங்கள் திவால் தொடர்பான தீர்வுகளுக்கு சட்ட விதிகள் ஏற்படுத்துவது பற்றி ஜெட்லி குறிப்பிட்டார்.
* இந்த மசோதாவை வரையறுக்க 2016 மார்ச்சில், பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலாளர் அஜய் தியாகி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

‘பாதுகாப்பு உண்டு’ அரசு விளக்கம் 

நிதித்தீர்வு மற்றும் வைப்புக்காப்பீட்டு மசோதா தொடர்பாக நிதியமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், நாடாளுமன்றத்தி–்ல் அறிமுகம் செய்துள்ள எப்ஆர்டிஐ மசோதாவில், வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கு உள்ள தற்போதைய பாதுகாப்பு உத்தரவாதம் நீடிக்கிறது. அதைவிட கூடுதல் பாதுகாப்பும், வெளிப்படை தன்மையும் புதிய மசோதாவில் உள்ளன. நிதிச்சேவை நிறுவனங்கள் திவால் ஆவது அசாதாரணமான நிகழ்வு. இதற்கு விரைவான தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. மற்ற சட்ட விதிகளில் உள்ளது போன்று டெபாசிட் பணத்தை சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி பயன்படுத்திக்கொள்ள வகை செய்யப்படவில்லை. நாடாளுமன்ற குழு பரிசீலனையில்தான் உள்ளது. வாடிக்கையாளர் பாதுகாப்புக்கு ஏற்ற மாற்றங்களுடன் இது உருவாக்கப்படும். தற்போது டெபாசிட்களுக்கு உள்ள கிரெடிட் கேரன்டி திட்டம் இதிலும் தொடரும். அச்சம் அடையவேண்டாம் என தெரிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். 

தற்போதைய விதி என்ன?

வங்கிகள் திவால் ஆகும்போது வாடிக்கையாளருக்கு பணத்தை அளிக்க காப்பீடு அவசியம். அனைத்து கமர்ஷியல் வங்கிகள், இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், உள்ளூர் வங்கிகள் இந்த காப்பீட்டை தர வேண்டும். இந்த காப்பீட்டை ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரன்டி கார்ப்பொரேஷன் (டிஐசிஜிசி) வழங்குகிறது. இந்த நிறுவனத்துக்கு வங்கிகள் தங்களின் டெபாசிட் அடிப்படையில் பிரீமியம் தொகையை செலுத்துகின்றன. இந்த காப்பீட்டின்படி ஒரு நபர் எவ்வளவு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருந்தாலும், திவால் ஆன பிறகு அசல், வட்டி சேர்த்து அதிகபட்சம் ஒரு லட்சம் கிடைக்கும்.