குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, June 28, 2018

நான் தமிழ்ப்பெண்

எம் தமிழ்ப்பெண்கள் சிறு குழந்தையாக இருக்கும் போது, இடுப்பில் வெற்றிலை போன்று தங்கத்தில் செய்து அணிந்திருப்பார்கள். பருவ வயதுப் பெண்கள் தாவணி உடுத்தி மஞ்சள் பூசி இருப்பார்கள். வீட்டு வேலையின் போது கணுக்கால் தெரியும் படி பாவாடையை இடுப்பில் செருகி இருப்பார்கள். கெண்டைக்கால் கூடத் தெரியாது. புதிய ஆண்கள் வீட்டுக்கு வரும் போது கண்கள் மட்டுமே வெளியில் தெரியும்படி நின்று கொண்டு பேசுவார்கள். பெண்களின் முகங்கள் தேஜஸ்சில் ஜொலிக்கும். திருமணமான பெண்கள் மெட்டி ஒலிக்க உடம்பு அதிரா வண்ணம் காற்றில் மிதந்து வருவார்கள். இப்படித்தான் நான் என் சிறுவயதில் கண்டு, பழகிய பெண்களைப் பார்த்திருக்கிறேன். என் சகோதரிகளும், அம்மாவும், உறவுப் பெண்களும் இப்படித்தான் இருந்தார்கள். இன்றைக்கும் இருக்கின்றார்கள். 

உடல் அதிர ஓடியோ அல்லது நடந்தோ கூட நான் பார்த்தது இல்லை. இது தமிழ்ப் பெண்களின் அடையாளம் என நான் அறிந்திருந்தேன். எம் தமிழ்பெண்களை இளையராஜா என்கிற ஓவியக்கலைஞர் அழகாக பட்டை தீட்டி இருந்தார். அந்தப் புகைப்படங்கள் கீழே !


(ஓவியம் : இளையராஜா - நன்றி)

பத்து நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் லைவ் நாடகமான ”பிக் பாஸ்” நிகழ்ச்சியை வீட்டில் பார்க்கின்றார்கள். நேற்று தூக்கம் வரவில்லை என்பதற்காக நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். மும்தாஜை வைத்து டெம்ப்ட் ஏற்ற ஏற்பாடு செய்திருப்பதைக் கண்டு கொண்டேன். அவருடன் மமதிசாரி என்றொரு (இது யாரென்று தெரியவில்லை) பெண்ணைப் பார்த்தேன். 

பிக் பாஸ் பணிப்பெண்ணாக இருக்க வேண்டும் எனக் கொடுத்த டாஸ்க்கில் இவர் ”தான் தன் கணவனைத் தவிர வேறு எவரையும் தொட மாட்டேன் என்றும், நான் தமிழ்ப்பெண்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அதாவது பணிப்பெண்ணாக ஆண்களுக்கு சேவை செய்ய மாட்டாராம். அவர் தமிழ்ப் பெண்ணாம். இத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. 

ஒரு சில பெண்கள் பெண் சுதந்திரப் பைத்தியம் பிடித்து நாறிப்போவார்கள். அதில் இவர் ஒருவர் என்று நினைத்துக் கொள்ளலாம். மும்தாஜ் மற்றும் மமதியினால் தான் ஷாப்பிங்க் செய்யும் டாஸ்க்கில் தோற்றுப் போய் பணிப்பெண் தண்டனையை,  பெண்கள் அனைவரும் டாஸ்காகச் செய்ய வேண்டி இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஸ்கிரிப்ட் படி நடிக்கிறார்கள். பிக் பாஸ் இந்த ஸ்கிரிப்டில் இருக்கும் பிழையினைக் கவனிக்காமல் விட்டு விட்டார்.

கடந்த பிக் பாஸ் சீசனில் நடித்த ஜூலியைக் கூட ஒரு வகையாக சகித்துக் கொள்ளலாம் போல. ஆனால் இந்த மமதிசாரியின் சேட்டைகள் பெண்கள் மீது வெறுப்பினை உண்டாக்கும் அளவுக்கு எரிச்சலின் உச்சத்தில் தள்ளுகிறது. மும்தாஜுடன் அவரின் கேணங்கிச் சேட்டைகளைச் சகித்துக் கொள்ளவே முடியாது. அவ்வளவு ஒரு கேவலமான நடிப்புச் சேட்டை. பேச்சு அதற்கும் மேல். நான் தமிழ்ப்பெண் என்பதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. மாலையில் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியில் மமதி சாரி காலையில் சொன்ன நான் தமிழ்ப்பெண் என்ற வார்த்தை மாலையில் அவர் தன்னை எப்படி வெளிப்படுத்தினார் என்பதைக் கீழே இருக்கும் புகைப்படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.



(புகைப்பட உதவி : பிக்பாஸ் - விஜய் டிவி - ஹாட்ஸ்டார்)

இணையத்தில் இவரைப் பற்றித் தேடினேன் பிராமின் பொண்ணாம். டிவியில் எல்லாம் வந்திருக்கிறதாம் என்று எழுதி இருந்தார்கள். நான் கண்ட பிராமின் பெண்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்களாக இருந்தார்கள். இன்றைக்கும் இருக்கின்றார்கள்.

மமதிசாரி சொன்ன தமிழ்பெண் என்பவர் எம் தமிழ்ச்சமூகத்தைக் கேவலப்படுத்தும் சொல். தமிழ்பெண் என்பவள் இளையராஜா வரைந்த ஓவியம் போலத்தான் இருப்பார் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்கால சமூகம் தமிழ்பெண் என்றால் இவரைப்போல இருப்பார்களோ என்று தவறுதலான முடிவுக்கு வந்து விடக்கூடாது என்பதால் ஒரு ஒப்பீட்டுக்காக இப்பதிவினை எழுதுகிறேன்.

எனக்கு குடும்ப அமைப்பு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் மீது மிகுந்த மதிப்பு உண்டு. ஏனென்றால் இவைகள் தான் இதுகாறும் மனித சமூகத்தின் மேன்மைக்கு பாதுகாவலனாய் இருக்கின்றன. ஆங்காங்கே நடக்கும் ஒரு சில தவறுதலான விஷயங்களால் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் மீதான நம்பிக்கை குறைவான விமர்சனங்கள் வரலாம். அது பெரும்பான்மையாக இருக்க முடியாது என்பது எனது எண்ணம்.

மமதி சாரி நவீனக்கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்தமாக தன்னை தமிழ்பெண் என்றுச் சொல்லிக் கொண்டு அதன் அடையாளங்களை அழிக்க முற்படுவது சரியல்ல. அவர் தான் பேசும் சொல்லுக்கு இருக்கும் அர்த்தத்தை உணர்ந்து பேச வேண்டும். 

Monday, June 25, 2018

தமிழகத்தின் எதிர்கால முதலமைச்சர் யார்?

இன்றைய தமிழகத்தின் நிலைமை பற்றி ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் ஒரு விதமான பதற்றத்தினை உருவாக்குகிறது. அம்மா இறந்த பிறகு நடந்த களேபரங்களின் காரணமாக தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள் என்று இணையதளங்களும், யூடியூப் வீடியோக்களும், செய்திசானல்களும் நொடிக்கொருதரம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். 

எது உண்மை என்று அறிய முடியவில்லை. ஆனால் இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஒரு விதமான எரிச்சல் இருப்பதை பலரும் சொல்கின்றார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவு மற்றும் அதைத் தொடர்ந்து மத்திய அரசால் தமிழகத்தில் கொண்டு வரப்படும் பல்வேறு திட்டங்களின் எதிர்ப்பு, அதற்கு மெய், வாய் பொத்தி சலாம் போடும் அரசு இது என பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. 

தமிழக அரசின் கல்வித்துறையில் நடக்கும் பல்வேறு நல்ல விஷயங்கள் இந்த களேபரங்களால் மறைந்து விடுகின்றன. அமைச்சர் செங்கோட்டையன் அவர்களால் கல்வித்துறையில் கொண்டு வரப்படும் திட்டங்கள் மெச்சத் தகுந்தவையாக இருக்கின்றன. முதலமைச்சர் எடப்பாடியின் கைகள் கட்டப்படாமல் இருந்தால் நல்ல ஆட்சியினைக் கொடுத்திருப்பார் என்கிறார்கள் பலரும். எந்த முதலமைச்சருக்கும் இல்லாத பல குடைச்சல்களைச் சமாளித்து ஆட்சி நடத்துவது என்பது சாதாரணம் இல்லை. 

சேலம் எட்டு வழிச்சாலைகான அவசியத்தையும், அதனால் விளையக் கூடிய பலன்களையும் அரசு வெளிப்படையாக அறிவித்திருக்கலாம். வாய்ச் சொல்லாக இல்லாமல் பத்திரிக்கை வாயிலாக மக்களிடம் தொடர்பு கொண்டிருக்கலாம். அதிகாரத்தினை அளித்த மக்களிடம் அதிகாரத்தைக் காட்டுவது எதிர்காலத்தில் ஓட்டுக் கேட்டு வீடு தோறும் செல்லும் போது வார்த்தைகளில் விவரிக்க இயலாத எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடலாம். 

விவசாய நிலங்களை அழித்துதான் சாலை அமைக்க வேண்டுமென்பது கொடுமை. உண்ண உணவு தரும் பூமியை அழிப்பது அன்னையை அழிப்பதற்குச் சமம். 

காலம் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் என்பார்கள். ஆனால் இப்போதைய காலம் எதையும் மறக்கடிக்க வைக்காது. டெக்னாலஜியின் காலம் அழியாப்பதிவுகளை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கிறது.

* * * 

கடந்த வாரம் சாமியைப் பார்க்கச் சென்றிருந்தேன்.  அடியேன் ஓஷோவைப் படிப்பவன்.  கடவுள் என்பதைப் பற்றிய பல்வேறு கேள்விகள் எனக்குண்டு. திருமூலரின் நீயே கடவுள் என்பதைப் பற்றியும் பல விதமான குழப்பங்கள் எனக்குண்டு. இன்னும் முடிவுக்கு வர இயலாத ஒரு விஷயமாக கடவுள் இருக்கிறார்.  இதற்கிடையில் ரஜினியின் அரசியல் மற்றும் காலா படம் எனக்கு ஏதோ சொன்னது.

இந்தியாவெங்கும் பிரபலமான, மக்களின் அன்பைப் பெற்ற ஒரு நடிகர் ரஜினியின் வாழ்க்கையில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் எனக்கு பெரும் குழப்பத்தினை உண்டாக்கியது. 

தூத்துக்குடி (ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது) சம்பவத்திற்காக ரஜினி செல்வது; அங்கு யாரோ ஒருவர் ’நீங்க யாரு?’ எனக் கேட்டது; அதன் பலனாக ரஜினியின் கோப பேட்டி வெளியானது; அதன் பிறகு ரஜினியின் மீது மக்களுக்கு உண்டான கோபம்;  காலா திரைப்படம் வெளியிடப்பட்டது; பிறகு ரஜினிக்கு மக்கள் நலனுக்கு எதிரானவர் என மாறியது ஆகிய நிகழ்வுகள் கடவுள் இருக்கின்றார் போல என எண்ண வைத்தது. தூத்துக்குடி சம்பவம் மட்டும் நடக்காமலிருந்தால் காலா திரைப்படத்தின் மூலம் ரஜினியின் அரசியல் பிரவேஷம் பெரிய புரட்சியினை உருவாக்கி இருக்கும். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக ஏதோ ஒரு வலையில் ரஜினி சிக்கியதை மேற்கண்ட சம்பவம் சொல்லியது.

”கடவுள் இருக்கின்றாரா? சாமி” என மேற்கண்ட விஷயத்தைச் சொல்லிக் கேட்டேன்.

”ஏதோ ஒரு சக்தி - அதைத்தான் கடவுள் என்கிறோம் - இருக்கு ஆண்டவனே” என்றார்.

”சாமி, ரஜினி முதலமைச்சர் ஆவாரா? பிஜேபி கமல்ஹாசன், சீமான், ஸ்டாலின், டிடிவி இவர்களில் யார் முதலமைச்சராக வருவர்?” 

“ரஜினி அரசியலுக்கு வருவார் அவ்வளவுதான் ஆண்டவனே. புதியவர்கள் தான் தமிழகத்தின் ஆட்சிக்கு வருவார்கள். எல்லாக் கட்சியிலும் இருக்கும் நல்லவர்கள் திடீரென ஒன்றாவார்கள். இவனைத்தான் தேடினோம் என்பது போல மக்களும் வாக்களித்து அவர்களை உட்கார வைத்து விடுவார்கள். இது அடுத்து வரக்கூடிய தேர்தலில் நடக்கும் வாய்ப்புகள் அதிகம். இல்லையெனில் அதற்கடுத்த தேர்தலில் அவர்கள் தான் வருவார்கள். அடுத்த இருபத்தைந்தாண்டுகளுக்கு அவர் ஒருவரே முதலமைச்சராய் இருப்பார்” என்றார்.

இப்படியும் நடக்குமா? என்று என்னால் யோசிக்க முடியவில்லை. ஏனெனில் அம்மா மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட போது சாமியிடம் கேட்டேன். அவர் ஒரே வார்த்தையில் ’ஆத்மா சாந்தியடையட்டும்’ என்றார்.
“என்னங்க சாமி? இப்படிச் சொல்லீட்டீங்க?” என்றேன்.

“அதான் சொல்லீட்டேனே ஆண்டவனே, ஆத்மா சாந்தியடையட்டும்” என்றார் மீண்டும்.

அதேதான் நடந்தது. இதை முன்பே எழுதி இருக்கலாம். ஆனால் அது நன்றாக இருந்திருக்காது. ஆனால் இப்போது எதிர்காலத்தில் வரக்கூடிய நிகழ்வுகள் பற்றி பேசிக் கொண்டிருந்த போது எழுதவா என்று அவரிடம் அனுமதி கேட்டுத்தான் எழுதுகிறேன்.

நடந்தால் நமக்கு வேறென்ன வேண்டும்? எனது குருவின் வார்த்தை என்றும் தோற்றதில்லை என்பதால் எனக்கு எந்த வித உணர்வும் இல்லை. அது நடந்தே தீரும் என்றே நினைக்கிறேன்.

விஷயம் இத்துடன் முடியவில்லை.

“சாமி, ஊழல் செய்து கோடி கோடியாய் குவிக்கின்றார்களே அவர்களின் எதிர்கால கதி என்னவாகும்?”

“நாலாயிரம் பேரிடம் இருப்பதைப் பிடிப்பதை விட நான்கு பேரிடம் இருப்பதை எளிதில் பிடித்து விடலாம் அல்லவா? அதைப் போல எளிதில் எல்லா சொத்தையும் மீட்டு விடுவார்கள். கவலையே வேண்டாம்” என்றார்.

நடக்க வேண்டும். நடந்தால் நன்றாக இருக்கும்.

* * *

”ஏங்க ! எழுந்திரீங்க....! “ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.

எதிரே மனையாள்.

“காய்கறியெல்லாம் வெட்டித்தாங்க, சமைக்கணும்” 

“ஏய் லூசு, இப்பத்தான் பிக்பாஸு ஐஸ்வர்யா தத்தாவின் உதட்டினை இழுத்து....!”

”என்னது????”

“ஒன்னுமில்லை, கனவு”

”அதானே பாத்தேன்....! சீக்கிரமா வாங்க, சமைக்க நேரமாயிடுச்சு” என்றார்.

கையில் கத்தியுடன் காய்கறிகளை இரக்கமே இல்லாமல், அதாவது விதி அதற்குரிய காலம் வந்தவுடன் மனிதர்களை எழும்பவே விடாமல் வைத்து கணக்குத் தீர்க்குமே, அதைப் போல வெட்டித்தள்ளினேன். கடுகு வெடித்து வெங்காயம் வதங்கும் வாசனை மூக்கினை எட்டியது. 

* * *

Monday, June 18, 2018

பிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட்

பிக்பாஸ் 2 - நேற்று ஆரம்பித்திருக்கிறார்கள். என் மகளின் பிரியமான புரோகிராம். 12 வயசு குழந்தைக்கு இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்ன சுவாரசியத்தைத் தந்து விடும் என்று புரியவில்லை. பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென ஷோபாவிலிருந்து எழுந்தார். வரும் நாட்களில் இசைப்பள்ளியின் ஆண்டு விழாவின்போது பாடுவதற்காக 'போகும் பாதை தூரமில்லை’ என்ற பாடலை சாதகம் செய்ய ஆரம்பித்து விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது.

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் பணத்தொப்பை வந்து விட்டது. முறுக்கிய மீசை வைப்பவர் எல்லாம் பாரதி ஆகிடமுடியாது என்று அவரைப் பார்த்ததும் எனக்குள் தோன்றியது.

பாரதி! பாரதிதான். ஆனால் எனக்குள் ஒரு உறுத்தலுண்டு. கமல் கட்சியின் பொலிட்பீரோவில் எனக்கு அறிமுகமான மென்னுணர்வு கொண்ட பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும் ஒருவர் என்று கேள்விப்பட்டேன். கமலின் நுண்ணிய அரசியலின் தன்மை பற்றி அவர் புரிந்து கொண்டுள்ளாரா? எனத் தெரியவில்லை. 

கமலின் மிக நுண்ணிய ஜாதி அரசியல் சாட்சியாகப் பதிவாகி இருக்கிறது அதன் பங்கேற்பாளர்களைப் பார்த்ததும். அவருக்கும் பிக்பாஸுக்கும் தொடர்பில்லை என்றெல்லாம் ஸ்கிரிப்ட் இருக்கிறது என்பார் அவர். வெளுத்ததெல்லாம் பால் எனக்கருதும் இயல்புடையோருக்கு கமல் சொல்வது ஒவ்வொன்றும் உண்மையாகத் தெரியும். ஆனால் எல்லோருக்கும் அப்படி இருக்க இயலாது அல்லவா?

சமீபகாலமாக உளவியல் தாக்குதல்களை நிகழ்த்தும் அரசியல் தீவிரவாதத்துக்கும் நிகரான ஒரு மனத்தாக்குதலை நிகழ்த்தப்போகும் பிக்பாஸ் ஸ்கிரிப்ட் உண்மையில் விதிக்கும் நிகரானது. அந்த ஸ்கிரிப்டின் விளைவுகள் சமூகத்தில் உருவாக்கபோகும் உளவியல் நிகழ்வுகளை, போராட்டங்களை, ஆத்திரங்களை, மகிழ்ச்சிகளை உன்னித்துப் பார்த்தால் இந்த நிகழ்ச்சியின் உள் அரசியல் விளங்கி விடும்.

பிக்பாஸ் மனமயக்கும், அசத்தும் ஒரு திரைக்கதை. இயக்குபவர் கமல்.

பதினாறு ஆட்களை வைத்துக் கொண்டு ஒரு சமூகத்தின் போக்கினை எளிதாக அவதானித்து விடலாம் என்கிற போக்கு மனிதத்துக்கு அழகல்ல. யார் எப்படிச் சிந்திக்க வேண்டும், எதைப் பற்றி யோசிக்க வேண்டுமென யாரோ ஒருவர் முடிவு செய்கிறார் என்றால் அந்த நிகழ்ச்சி ஒப்பற்ற ஒன்றாக இருக்கலாம்.ஆனால் அதன் துணையுடம் சமூகத்தின் பாதையை வழி மாற்றலாம் என்கிறபோது அதன் தீவிரவாதத்தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

யாரால் தனக்கு வாழ்க்கையும், வளமும் கிடைத்து சுகபோக வாழ்க்கையை வாழ்கிறோமோ அவர்களுக்கு தீமை செய்திடும் ஒரு நிகழ்ச்சியை செய் நன்றித்தனம் இன்றி ஒருவர் செய்கிறார் என்றார் அவர்களை நாம் என்ன சொல்லி அழைப்பது? மிருகங்களுக்கு கூட நன்றி உணர்ச்சி இருக்கும். ஆனால் மனிதர்களுக்கு? அதுவும் சினிமாக்காரர்களுக்கு????

Tuesday, June 5, 2018

விக்கி ரூடோஸ் சூப்பர் சிங்கர்

எனது நண்பரும் உறவினருமான பெரியசாமி கவுண்டரின் தோட்டத்திற்கு கவுண்டர் அம்மணி ருசியாக சமைக்கும் அரிசி பருப்புச் சாதத்துக்காகவும், கவுண்டர் எனக்காக காரமும் புளிப்பும் சரி சமமாகக் கலந்து வைக்கும் எண்ணை மின்னும் கருவேப்பிலை ரசத்தினை ருசிக்கவும் அடிக்கடிச் செல்வதுண்டு. கவுண்டர் ஒரு பொமேரேனியன் வளர்த்து வந்தார். கூண்டுக்குள் இருக்கும் அது. முகத்தில் கருப்பும், வெள்ளையுமாய் என்னை முதன் முதலாகப் பார்த்த போது கர்ண கடூரமாக ’நீ! யார்?” என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தது.

அடுத்த முறை சென்ற போது விக்கிக்கு பிஸ்கெட் வாங்கிக் கொண்டு போனேன். முறைத்துக் கொண்டே சாப்பிட்டான். வீட்டுக்கு கிளம்பிய போது மீண்டும் கர்ண கடூரமாக போகக்கூடாது என்று கத்த ஆரம்பித்தான். சிரித்துக் கொண்டே வந்து விட்டேன். அந்தப் பக்கம் செல்லும் போது பிஸ்கெட்டோடு தான் செல்வேன். அவனுக்கு பிஸ்கெட் கொடுத்து விட்டு விரலை கம்பிக்குள் நீட்டினால் கழுத்தை கம்பியோடு வைத்து நிற்பான். ஒற்றை விரலால் அவனை தடவிக் கொடுப்பேன். 

என் நண்பர் என்னென்னவோ செய்து பார்த்தார். அவரை அவனுக்குப் பிடிக்கவே இல்லை. அதுமட்டுமல்ல எனது மனையாளையும் அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது. பிஸ்கெட் போடுவார்கள், என்னென்னவோ சமாதானம் செய்வார்கள். அருகில் சென்றால் கடிக்க உறுமுவான். நண்பர் மட்டுமே என்னை சரிப்படுத்துவார், மனையாள் அடிக்கடி காரத்தை அதிகப்படுத்துவார் அதற்காகவோ என்னவோ அவர்கள் இருவரையும் விக்கிக்கு பிடிக்காது போல.

ஒரு நாள் என்னுடன் கூடவே ஓடி வந்து விட்டான். எனக்குத் தெரியாது. நீண்ட நேரமாக நான் சென்ற வழியில் நின்று கொண்டிருந்தானாம். கவுண்டர் போனில் சொன்னார். கேட்ட எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. 

(விக்கி)

என் உணர்வோடு உணர்வாக மாறினான் விக்கி. சாப்பிடும் போது அவனுக்குக் கொடுக்காமல் சாப்பிட மனது தடை போடும். அவனின் கண்கள் என்னைப் பார்ப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அவன் சாப்பிட்டால்தான் மனது நிம்மதியாகும். அது ஒரு உயிர். ஐந்தறிவு கொண்ட அவனின் அளவற்ற அன்பினை எதனால் அளவிட முடியும் சொல்லுங்கள் பார்ப்போம்?

நேற்று பெரியசாமிக்கவுண்டர் வந்திருந்தார் என்னைப் பார்க்க. 

”எப்படி இருக்கான்?” எனக் கேட்டேன். 

”விக்கிச் செத்துப் போயிட்டானுங்க சார்!” என்றார். தெரு நாய்கள் சேர்ந்து கழுத்தில் கடித்துக் குதறி விட்டனவாம். காயங்களோடு கூண்டுக்குள் வந்து படுத்து கொஞ்சம் தண்ணீர் குடித்தானாம். மயங்கிப் போனானாம். டாக்டரிடம் கொண்டு சென்றாராம். இறந்து விட்டானாம்.

இரண்டு நாட்களாக மனம் பாரமாய் கிடக்கிறது. சாப்பிடக்கூட முடியவில்லை. என்ன செய்வது எனப் புரியவும் இல்லை. 

‘அடேய் விக்கிப்பயலே! எனது நண்பன் ஜஹாங்கீர் ஆலம் மேல் உலகத்தில் தான் இருக்கான். அவனும் நானும் சேர்ந்து மகிழ்வோடு புகைக்க சிகரெட்டோடு பூமியில் என் காலம் முடிந்த பிறகு வருவேன். அத்துடன் உனக்குப் பிடித்த பிஸ்கெட்டோடு அங்கே உன்னைப் பார்க்கிறேன். உனது அழகான கழுத்தில் உனக்குப் பிடித்தமாதிரி என் விரல்களால் அலைந்து விடுகிறேன். உன் அன்பான வெது வெதுப்பான கழுத்தின் சூடு என் விரலில் பரவட்டும். எனக்காக காத்துக் கொண்டிரு’

நிற்க.

(என் இனிய ரூடோஸ்)

கடந்த வாரத்தில் ஒரு நாள் விடிகாலையில் ரூடோஸ் கத்திக் கொண்டிருந்தாள். காருக்கு அடியில் ஒரு குட்டி படுத்திருந்தது. அது அவளின் ராஜ்ஜியம். நாங்கள் அவளின் அன்பிற்கு அடிமைகள். அவளின் ராஜ்ஜியத்துக்குள் எவருக்கும் அனுமதி இல்லை. அந்தக் குட்டியினை ரித்திக்கும், நிவேதிதாவும் எடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட ரூடோஸ் கடுப்பில் எகிறிக் குதித்துக் கொண்டிருந்தாள். தரையெங்கும் குரைத்ததன் எச்சில்கள். கண்கள் அகல குரைத்தாள். என்னால் அவள் படும் வேதனையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தக் குட்டியை எங்கோ கொண்டு போய் விட்டு விட்டு வந்தான் ரித்திக். வந்தவன் சும்மா இருக்காமல், ‘அப்பா! அதை விட்டு விட்டு வந்ததும் ஓடி வந்து காலடியில் நின்று கத்தியதுப்பா?’ என்றான். 

அன்று முழுவதும் ரூடோஸ் சாப்பிடவில்லை. மாலையில் அவளை அருகில் வர வைத்து தடவிக் கொடுத்து சமாதானம் சொன்ன பிறகுதான் சாப்பிட்டாள். அவளின் முகம் வாடிக் கிடந்தால் உள்ளத்தில் சோகம் படர்கிறது. அவளின் வாழ்வு பதினைந்து வருடம் இருக்கலாம். தொழில் ரீதியான பயணங்களும், எனக்கான ஓய்வும் அவளோடு நான் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டே வருகிறது..இனி வரும் இந்த நேரக்குறைவு காலகட்டம் என் முன்னால் வந்து நின்று என்னை அடிக்கடி சோகத்தின் பிடியில் தள்ளுகிறது. அவளின் மீது எல்லையில்லா அன்பு கொப்பளிக்கிறது. 

நிற்க

சனி, ஞாயிறுகளில் விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பசங்களோடு பார்ப்பதுண்டு. மனையாளுக்கு ராஜியை ரொம்பவும் பிடிக்கும். எனக்கு அவரின் குரல் பிடிக்காது. செந்திலின் குரல் கவனிக்க வைக்கும் அளவுக்கு காந்தமுள்ளது. அதையெல்லாம் காட்டிக் கொள்ளமாட்டேன். திடீரென ஒரு சனி அன்று ”ஏங்க, இந்த நிகழ்ச்சியில் யார் பாடுவது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?” என்று கேட்டார் மனையாள். அன்று சனிக்கிழமை என்பதை மறந்து போனேன். விதி வலியது என்பார்களே அது அடிக்கடி என் வாயில் வந்து விழும்.

வழக்கம் போல, “ஸ்வேதா மோகன்” என்றேன். 


”அதானே, என்ன அதிசயமா இருக்கேன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்.  அதான் காரணமா?” என்று சொல்லியபடி அடுக்களைக்குள் சென்றார். அன்றைக்கு சட்டினியில் காரம் அதிகமாயிருந்தது. 

சனி தன் வேலையைக் காட்டி விட்டான். சனிக்கிழமை அதுவுமாக சூனியம் வைத்துக் கொண்டேனே ?????????? 

Monday, June 4, 2018

நிலம் (44) - அதிகச் சொத்துக்கள் அரசு வசமாகபோகிறது

நில உச்சவரம்புச் சட்டத்தினைக் கையில் எடுத்து வேலையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது தமிழக அரசு. செய்தி வெளி வந்து விட்டது. இனி எவரும் ஏக்கர் கணக்கில் சொத்துக்களைக் குவிக்க இயலாது. டிரஸ்ட் மற்றும் நிறுவனங்களுக்கு விதி விலக்கு உண்டு எனினும் அதற்கான அப்ரூவல் பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்படியே அப்ரூவல் பெற்றாலும் அந்த நிலங்கள் அரசு நிலங்களாகத்தான் கருதப்படுமே தவிர தனியார் நிலமாக இருக்காது. 

அதுமட்டுமல்ல இது போன்ற கம்பெனியின் கீழ் இருக்கக் கூடிய நிலங்களை வாங்கும் போது வெகு கவனமாக வாங்குதல் அவசியம். இல்லையென்றால் ஏமாற்றப்படுவீர்கள் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். தகுதியும், இது பற்றிய விவரங்கள் தெரிந்த நல்ல ஆலோசகரிடம் ஆலோசனைப் பெற்ற பிறகே அது போன்ற சொத்துக்களை வாங்க வேண்டும். அதுமட்டுமின்றி டிரஸ்ட் கீழ் வரக்கூடிய பூமிகளை வாங்குவதற்கும் ஏகப்பட்ட சட்ட விலக்குகள் தேவை என்பதையும் கவனத்தில் கொள்க. யாருக்கு எங்கே எவ்வளவு சொத்துக்கள் உள்ளன? என்பதை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அவ்வாறு கண்டுபிடிக்கவும் வழிகள் உண்டு. நன்கு ஆலோசித்த பிறகே இது போன்ற சொத்துக்களை வாங்க வேண்டும் என்பதினை மறந்து விட வேண்டாம்.


இதோ கீழே தினமலரில் வெளிவந்திருக்கும் செய்தி உங்களுக்காக.

நில உச்சவரம்பு சட்டப்படி, உபரி நிலம் தொடர்பான கணக்கெடுப்பு, மாநிலம் முழுக்க துவங்கியுள்ளது. மாநிலத்தில், உபரியாக உள்ள நிலங்களை மீட்க வகை செய்யும், நில சீர்திருத்த சட்டம், 1970 பிப்., 15 முதல் அமலில் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும், நில உரிமை உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, உபரி நிலத்தை, அரசு கையகப்படுத்தி வந்தது.கடந்த, 1983ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், நாடு முழுக்க, ஒரு கோடியே, 11 லட்சத்து, 15 ஆயிரம் ஏக்கர், உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. அதில், 71 லட்சத்து, 63 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 48 லட்சத்து, 90 ஆயிரத்து, 600 ஏக்கர் நிலம், நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டன.அரசின் திடீர் உத்தரவையடுத்து, மீண்டும் உபரி நிலத்தை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. 'ஒவ்வொரு வருவாய் கோட்ட அளவில், உபரி நிலம் தொடர்பான அறிக்கையை, வரும், 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:நில உச்சவரம்பு சட்டப்படி, நஞ்சை, புஞ்சை நிலம் என, வகைப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு, அதிகபட்சம், 60 ஏக்கர் வரை மட்டுமே நிலம் இருக்க வேண்டும்.அறக்கட்டளை மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு, நில உச்சவரம்பு சட்டத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும், ஒரு சென்ட் அதிகமாக இருந்தாலும், அது உபரி நிலமாக கருதப்பட்டு, வருவாய்த்துறை வசம் எடுக்கப்படும். இதற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. உபரி நிலம் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு விதிமுறைப்படி, 'நோட்டீஸ்' வழங்கி, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். 


குறிப்பு : ஒரு குடும்பத்திற்கு 60 ஏக்கர் என்பதன் கணக்கு வேறு. அரசு வைத்திருப்பது தர ஏக்கர் கணக்கு என்பது வேறு. 60 ஏக்கர் எனக் குறிப்பிடுவது நாம் பயன்படுத்தும் கணக்கு. ஊருக்கு ஊர் இந்த ஏக்கர் வித்தியாசப்படும் என்பதினைக் கவனத்தில் கொள்க.

Saturday, June 2, 2018

சம்பளமில்லா வேலைக்காரர்கள்

காலம் மாறிக் கொண்டிருக்கிறது. முன் காலத்தில் உள்ள எதார்த்தமான மனிதர்களை இனிக் காண இயலாது. எங்கும் பணம், எதிலும் பணம், பகட்டு இருந்தால் தான் சக மனிதனை மதிக்கின்றார்கள். திருடனிடம் இருக்கும் பணத்திற்குத்தான் சமூகத்தில் மரியாதை. அவன் திருடன் என்பது அல்ல பிரச்சினை. பணம் யாரிடம் இருக்கிறது? அவனை மதி, அவன் உயர்ந்தவன் என்கிறது சமூகம். அதை மதிக்கும்படியான மூளைச் சலைவகளை வீட்டுக்குள் இருக்கும் டிவி சைத்தானும், தினசரி சைத்தான்களும் செய்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொருவருக்கும் தர்மம், நியாயங்கள் இருக்கின்றன. நீ வாழ பிறரைக் கெடு என்கிறது அரசியல். பதவியில் அமர என்ன வேண்டுமானாலும் செய் என்கிறது அரசாங்கம். இங்கு மக்கள், அவர்களுக்கான துன்பங்கள், துயரங்கள் பிரச்சினையே இல்லை. பணம் தான் எல்லாவற்றுக்குமான பிரச்சினையாக, மூலமாக, ஆணி வேராக இருக்கிறது. பணமிருந்தால் போதும் கொலை செய்து விட்டு சட்டத்தின் எந்த பிடிக்குள்ளும் சிக்காது சிங்காரமாக வாழலாம். மூட்டை மூட்டையாகப் பணம் கொடுத்தால் வளையாத எதுவும் வளைந்து நின்று சல்யூட் அடிக்கும். அது சட்டமானாலும் சரி, அரசானாலும் சரி, மக்களானாலும் சரி. ஓட்டுப் போட வைக்கவும் பணம் தான் தேவை. பணம் கொடுக்கின்றார்களா அவன் திருடனே ஆனாலும் சரி, வெற்றி பெற வைக்கும் மக்களின் மனோபாவம் மாறி விட்டது. 5 ரூபாயில் ஆரம்பித்த ஓட்டுக்குப் பணம் இப்போது பத்தாயிரமாக உயர்ந்துள்ளது. இனி வரும் காலங்களில் ஓட்டுக்கு லட்சம் கொடுப்பார்கள். 

தரமற்ற காண்ட்ராக்ட் வேலைகள், மக்கள் பணத்தை உறிஞ்சும் கார்ப்பொரேட் நிறுவனங்கள், லஞ்சம் பெறுவதே லட்சியம் என வாழும் அரசியல்வாதிகளும், அரசாங்க அலுவலர்களும் என மொத்த இந்தியாவும் லஞ்சத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. 

வளர்ந்து வரும் அறிவியல் துணைகொண்டு மக்கள் என்ன சிந்திக்க வேண்டும், எப்படிச் சிந்திக்க வேண்டும், எதைப் பற்றிப் பேச வேண்டும், எந்தப் பொருளை வாங்க வேண்டும் என்பதெல்லாம் தீர்மானிக்கப்படுகின்றன. மக்களை குழுக்களாக, ஜாதிகளாக, அமைப்புகளாக, பிரச்சினைகளோடு போராடுபவர்களாக அரசியல் சக்திகள் பிரித்து வைத்திருக்கின்றன. தேர்தல் வரும் போது அவர்கள் ஒன்று கூடி பதவிக்கு வந்து விடுவார்கள். 

மனித வளத்தை எப்படி காசாக்குவது என்பதைப் பற்றிய சிந்தனைகளும், மனித மனத்தை தன் நோக்கி எப்படித் திருப்பிப் பயன் அடைவது என்பதற்காக முயற்சிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. யாரை ஜெயிக்க வைக்க வேண்டுமென கார்பொரேட் மூளைகள் சிந்தித்து கோடிகள் பெற்றுக் கொண்டு மக்களின் மனத்தில் ஊடுறுவுகின்றார்கள். மக்களும் ஆட்டு மந்தைகள் போல சிந்திக்கும் திறனன்றி ஏற்றுக் கொள்கிறார்கள். 

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

சாமியார்களும், அரசியல்வாதிகளும் எதிர்காலத்தில் வரக்கூடிய பலாபலன்களைக் காரணம் காட்டி அடிமை வம்சங்களை உருவாக்கி சம்பளம் தராத பணியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இருக்க இடமும், சாப்பாடும் கொடுத்தால் ஆன்மீகம் என்ற போர்வையில் அமைதி என்கிற தத்துவத்திற்காக சாமியாருக்காக உழைக்கின்றார்கள் ஒரு கூட்டம். 

கோவில் என்கிற பெயரில், பக்தி என்கிற தத்துவத்தில் உழைக்கும் பணத்தை சுரண்டுகிறது இன்னொரு கூட்டம். 

பதவி என்கிற மயக்கத்தில் மாமா வேலை கூடச் செய்ய அரசியல் எனும் பொதுத்தத்துவதிற்காக காசில்லா வேலைக்காரக் கும்பல்களை உருவாக்கி உறிஞ்சிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது அரசியல்கூட்டம். 

பதவியும், அதிகாரமும், கொழுத்த பணமும் எனக்கும், என் குடும்பத்திற்கும், என் நண்பர்களுக்கு மட்டுமே. வேலை செய்யவும், கோஷம் போடவும், வீசும் காசினைக் கவ்விக் கொள்ளும் நாயாகவும் இருக்க மட்டுமே உனக்கு தகுதி எனச் சொல்லி கும்மாளம்மடித்துக் கொண்டிருக்கிறது அரசியல்கூட்டம்.

சட்டங்கள் இருக்கின்றன என்று மக்களை நம்ப வைக்க அவ்வப்போது ஊழல் எனப் பிடிப்பார்கள். ஒரு சிலருக்கு தண்டனை கிடைத்து விட்டது என காட்டுவார்கள். கொழுத்த ஊழல்வாதிகள் சட்டத்தாலும் எவராலும் கண்டு கொள்ளாமலே ஓய்வு பெறுவார்கள். 

தர்மம், நியாயம், நீதி எனப் பேசுபவர்கள் இவை எதையும் கடை பிடிப்பது இல்லை. தனி மனிதனுக்கு ஒரு நியாயம், நிறுவனங்களுக்கு ஒரு நியாயம் என்று பத்திரிக்கைகள் சொல்லும். அது தான் உண்மை என்று ஒரு கூட்டம் நம்பும். அதைப் பற்றி ஒரு கூட்டம் பேசும், எழுதும், கத்தும், திட்டும்.  நீதி பிறழ்வதும், கொள்கை மாறுவதும் அரசியல் சாணக்கியத்தனம் என்பார்கள். தனி மனிதனுக்கு எனில் கடவுள் தண்டிப்பார் என்பார்கள். இப்படியெல்லாம் எதைப் பற்றியும் நேர் வழி சிந்திக்க விடமாட்டார்கள். இப்படியெல்லாம் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது இப்போது மட்டும் நடப்பது அல்ல. மனிதர்கள் சிந்திக்க ஆரம்பித்த காலத்திலிருந்து நடந்து கொண்டிருக்கும் அக்கப்போர்கள் இவைகள்.

காலம் போன நேரத்தில் உடம்பு ஒத்துழைக்காக நேரத்தில் எல்லாவற்றையும் அசை போட்டு அழுது கொண்டிருக்கும் கூட்டத்தார் பெருகி இருக்கின்றார்கள். அறுபது வயதா ஓடிப்போ என மேலுலகம் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள் மருத்துவத்துறையினரும், அரசும்.

யாரைப் பற்றிப் பேச வேண்டும், எவரைப் பற்றி எழுத வேண்டுமென ஃபேஸ்புக், டிவிட்டர்கள் முதலாளிகள் முடிவு செய்கின்றார்கள். எந்த வித பணமும் இன்றி, செலவும் இன்றி நாமெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறோம். பேசிக் கொண்டிருக்கிறோம் யாருக்காகவோ. நமக்காக நாம் எதுவும் செய்து கொள்ளாமல் பிறருக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அடிமைகள் நாம்.

சம்பளமே இல்லாமல் பிறர் உயரவும், வாழவும் இணையத்தில் காசைக் கரியாக்கி உழைப்பினைக் கொடுத்து அழிந்து கொண்டிருக்கிறோம் நாமெல்லாம். 

சிந்திக்க வேண்டுகிறேன். நமக்கான வாழ்க்கையை நாம் வாழ இப்படியான வேலைகளை, அலப்பறைகளை ஒதுக்கி விட்டு வாழ்வோம் வாருங்கள் !!