குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, June 19, 2026

இயக்குனர் பாரதிராஜா: இமயம் தொட்ட புகழும், வாழ்வின் நிழல் பக்கங்களும்

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவுக்குப் பின், ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் திரைத்துறையினரின் கருத்துக்களைக் காணும்போது, உலகமே கொண்டாடிய ஒரு மாபெரும் கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சிகரமானதாக இருந்திருக்கவில்லை என்பதை ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது. 

அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த கங்கை அமரன், "எல்லாரும் இவரைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே!" என்று ஆதங்கப்பட்ட வார்த்தைகள், பாரதிராஜாவின் இறுதிக்காலத் தனிமையை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

தமிழ் சினிமாவில் எத்தனையோ முகம் தெரியாத புதுமுகங்களை அறிமுகப்படுத்தி, அவர்களைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற பெருமை 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவுக்கு உண்டு. ஆனால், அத்தகைய சாதனையாளரால் தன் சொந்த மகனை வைத்து மக்கள் ரசிக்கக்கூடிய ஒரு வெற்றிகரமான திரைப்படத்தைக் கொடுக்க முடியாமல் போனது ஒரு பெரும் அவலமே.

தன் மகனைத் திரைத்துறையில் ஜெயிக்க வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவருக்குள் இருந்திருக்கலாம். 'இயக்குனர் இமயம்' என்ற உயரிய பட்டம் இருந்தும், தன் சொந்த மகனின் திரைவாழ்வை அவரால் செப்பனிட முடியவில்லை என்றால், அந்தப் பட்டத்தால் அவர் பெற்ற பலன் என்ன என்ற கேள்வி எழுகிறது. 

மகனின் மறைவுக்குப் பிறகு, அந்தத் துயரத்தின் காரணமாகவே அவர் திரைப்படப் பணிகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டார். இறுதிநாட்களில் உடல்நலனுக்குத் தேவையான மருந்துகளைக் கூட அவர் முறையாக உட்கொள்ளவில்லை என்று கூறப்படுவது, அவர் அடைந்த மனவேதனையின் உச்சத்தைக் காட்டுகிறது.

வாழ்வின் கணக்குகளும், காரண காரியங்களும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை.

அவருக்கு ஏன் இந்த நிலை? இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால், அவர் சினிமா துறையில் உச்சத்தில் இருந்தபோது நடந்த சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. 

ஒரு நேர்காணலில் அவரே குறிப்பிட்டது போல, புதுமுகங்களை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் பெயர்களை மாற்றும் வழக்கம் அவரிடம் இருந்தது. "பெயரை மாற்றுவதற்கு எனக்கு உரிமை கொடுத்தது  யார் என்ற எண்ணம் எனக்குள் ஒருமுறை தோன்றியது, அதன் பிறகே அதை நிறுத்தினேன்" என்று அவரே ஒப்புக்கொண்டார்.

இது ஒரு உதாரணம் மட்டுமே. இதேபோல அவருடைய திரைப்பயணத்தில் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கக்கூடும். உலகில் எந்தவொரு செயலும் காரண காரியமின்றி நடப்பதில்லை. 

அந்த வகையில், தன் வாழ்நாளில் யாரோ ஒருவருக்குச் செய்த செயலால் அல்லது யாரோ ஒருவரின் மனவருத்தத்தால் ஏற்பட்ட சாபமே, அவருடைய இறுதிக்காலத் துயரத்திற்குக் காரணம் என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான பாடம் என்னவென்றால்: "யார் மனதையும் புண்படுத்தக்கூடிய ஒரு தொழிலையோ, செயலையோ நாம் செய்யக் கூடாது; அப்படிச் செய்தால் அதற்கான பலனை நாம் இந்த வாழ்விலேயே அனுபவித்தே தீர வேண்டும்" என்பதுதான். 

இது பாரதிராஜாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக வரலாறும், மனித வாழ்க்கையும் நமக்கு உணர்த்தும் எதார்த்த உண்மை. யாரும் தப்பித்துப் போகவே முடியாது.

அவருடைய மறைவின்போது, "சினிமா உலகம் ஒரு மிகப்பெரிய ஆளுமையை இழந்துவிட்டது" என்று திரையுலகினர் கண்ணீர் வடித்தனர். பல முன்னணி நடிகர்கள் கதறி அழுததையும், அவரிடம் உதவி இயக்குனர்களாகப் பணிபுரிந்து இன்று பெரிய இயக்குனர்களாக இருக்கும் பலரின் நாடகத்தனமான அஞ்சலிகளையும் நாம் பார்க்க முடிந்தது.

நாளைக்கு இறக்கப் போகும் நபர்கள், இன்று அழுது கொண்டிருக்கிறார்கள் என்பார்கள். வந்தோமா, அஞ்சலி செலுத்தினோமா, சென்றோமா என்று இல்லாமல் பாரதிராஜாவின் செயல்களைப் பற்றி பெருமை பொங்க பேசிக் கொண்டிருந்தார்கள். அதாவது அவருடன் இவர்கள் இருந்தார்கள் என்பதுதான் பேச்சின் சாராம்சம்.

பவா செல்லத்துரை என்றொரு எழுத்தாளர் அஞ்சலிக்காக பேசிய போது பாரதிராஜா பற்றி டவுசர் போட்டுக்கிட்டு நின்றார், சாப்பிட்டார், தூங்கினார், பேசினார் என்பது போலவே தனி மனித செயல் துதியைப் பேசினார். அப்படிப் பேச அவருக்கு வெட்கம் கொஞ்சம் கூட இல்லை. அவர் நடந்தது, பார்த்தது, பேசியது, தின்றது, திட்டியது பற்றி விலாவரியாகப் பேசினார். இதை ரசித்துக் கேட்க ஒரு கூட்டம், கை தட்ட ஒரு கூட்டம். 

நாம் அவர் இயக்கிய முதல் மரியாதை படத்தை ஆராயலாம்.

வயதான சிவாஜிக்கும், இளம் பெண் ராதாவுக்கும் இடையே மலரும் காதல் தான் கதையின் கரு. 

இக்கதை இளையராஜாவுக்குப் பிடிக்கவில்லை என பாரதிராஜா பேட்டியில் சொல்லி இருக்கிறார். இளையராஜா வயதான ஹீரோவுக்கும், இளமையான ஹீரோயினுக்கும் காதல் டூயட் பாடல்களை இசையமைக்கவில்லையா என்று கேட்டால் என்ன சொல்வாரோ? அது ஒரு பக்கம் இருக்கும்.

இந்தப் படத்தில் பாரதிராஜா கையாண்ட ஓர் அருமையான விஷயம் இருக்கிறது. சிவாஜிக்கு அவரின் மனைவியுடன் இல்லற வாழ்க்கை கிடையாது. அவர் தனது மாமன் மகன் வேறு எவனுடனோ உறவு கொண்டதால் வயிற்றில் குழந்தை. மாமனின் வேண்டுகோளுக்காக அவளை திருமணம் செய்து கொண்டார். பிள்ளையும் பிறந்தது. அம்புட்டுதான் இருவரின் வாழ்க்கையும். சொத்து மாமன் கொடுத்தது. பெண்ணும் தான். குழந்தையோ தனக்கு உரிமையில்லாதது. ஒரு அவல வாழ்க்கையின் பிம்பமாக சிவாஜி. ஊருக்கு ராஜா, வீட்டுக்குள் கையாலாகாதவர். 

இந்த நிலையில் ஓடப் பெண் ராதா மீது அவர் கொண்ட காதல் நேர்தன்மை கொண்டது. 

மனைவி இருக்கையில் மற்றொரு பெண்ணுடன் காதல் கொள்வத் கள்ளக்காதல். பாரதிராஜா இக்கதையில் காதலை நேர்மைப்படுத்தினார்.

எந்தப் பெண்ணுடனும் உறவு கொள்ளாத ஹீரோ, தனக்குப் பிடித்த ஒரு பெண்ணின் அன்பின் காரணமாக காதல் கொள்வது என்பது எதார்த்தமே. வயது வித்தியாசமென்பது காதலுக்கு கிடையாது.

இதுதான் இயக்குனரின் திறமை. பாரதிராஜா இப்படத்தில் சொன்ன காதல் உண்மையான காதலே. 

அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமானவை. ஒன்றுடன் ஒன்று இணைக்க முடியாதவை.

புகழின் உச்சியில் இருக்கும்போது மனிதர்களைக் கொண்டாடும் இந்த உலகம், தனிமையில் இருக்கும்போது கைவிட்டுவிடும் என்பதற்கு பாரதிராஜாவின் வாழ்க்கையே ஒரு சாட்சி.

வந்தார், வாழ்ந்தார், சென்றார். 

இயற்கையை வெல்ல எவராலும் முடியாது அல்லவா?


எல்லோருக்கும் எல்லாமும் - ஒரு சிறந்த ஜனநாயகத்திற்கான மக்கள் பங்களிப்பு (2)



"எல்லோருக்கும் எல்லாமும்" என்ற நிலையை எட்ட, ஒரு மிகச்சிறந்த ஜனநாயக நாட்டில் மக்களின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 

"மக்கள் எவ்வழியோ, மன்னன் அவ்வழி" என்பார்கள். அதைப்போல, மக்களின் தேவைகள், மனநிலை மற்றும் எண்ணங்கள் எவையோ, அவைதான் ஒரு மிகச்சிறந்த ஜனநாயகத்தை உருவாக்க முடியும்; அதற்கு அடிப்படையான காரணமாகவும் இருக்க முடியும்.

இந்த அடிப்படையில் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றை ஒன்றுதான்: முதலில் கதை கேட்பதையும், கதை சொல்வதையும் நிறுத்துங்கள். உலகிலேயே மிக மிக பிரபலமான, அதிகாரம் மிக்க, ஆனால் முழு உண்மையற்ற ஒரு விஷயம் உண்டென்றால் அது கதை சொல்வதும் கதை கேட்பதும்தான்.

மனிதர்கள் தோன்றி எத்தனையோ காலங்கள் ஆகிவிட்டன.

ஆரம்ப காலத்தில் மனிதர்களுக்கு எழுத்தறிவோ, இலக்கண அறிவோ எதுவுமே இருந்ததில்லை.

மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் பின்னரே ஒலிகள், குறிகள், மொழிகள், எழுத்துக்கள் போன்றவை உருவாகி, தொடர்ந்து செம்மைப்படுத்தப்பட்டு ஒரு முழுமையான வடிவத்தைப் பெற்றன.

இந்த வடிவங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்த்தவை கதைகள்தான்.

கதைகள் என்பவை சாதாரணமானவை அல்ல. அது ஒரு மிகச்சிறந்த, அதிகாரம் மிக்க, ஒவ்வொருவருக்குள்ளும் மிக அந்தரமாக ஊடுறுவும் தன்மை கொண்ட, மிக மிக வலுவான ஊடகம் (Medium) ஆகும்.

இந்தக் கதை கேட்பதையும் கதை சொல்வதையும் மனிதன் எப்போது நிறுத்துகிறானோ, அப்போதே அவன் பிறரின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

நாம் ஏன், எதற்கு என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால் கதைகளில் நாம் அவ்வாறு கேட்பதில்லை. அது கதை என்று நிறுத்தி விடுகிறோ. நிலாவில் பாட்டி கதை இன்றைக்கும் பலரின் மனதில் அச்சாணி போல பதிந்திருக்கும். இதை ஆராய்ந்து பார்த்திருக்கிறோமா என்றால் இல்லை. ஆனால் நிலாவைப் பார்த்ததும் பாட்டி கதை நினைவுக்கு வந்து விடும். இப்படித்தான் இந்தக் கதைகள் மனிதர்களின் வாழ்வியலை சீர்குலைக்க ஆரம்பித்தன.

ஒவ்வொருவரும் தாய், தந்தையரும் கதைகள் சொல்கிறார்கள். ஆனால் இந்தக் கதைகளின் உண்மை என்னவென்று யாருக்கேனும் தெரியுமா? என்றால்  தெரியாது. தேவையில்லை ஏனெனில் அது கதை. அப்படியான கதைகள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய அழிவை உண்டாக்கி இருக்கின்றன என வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

ஒரு நல்ல ஜனநாயகத்தையும், நல்லதொரு அரசாட்சியையும் நாம் உருவாக்க வேண்டும் என்றால், நாம் முதலில் இந்தக் கதை சொல்வதிலிருந்தும், கதை கேட்பதிலிருந்தும் விடுபட வேண்டும்.

உண்மையான ஜன நாயகம் என்பது ஒவ்வொரு மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் அப்படித்தான் ஜன நாயக ஆட்சி உருவாக்கப்பட்டிருக்கிறதா?

சிந்தியுங்கள் !

எல்லோருக்கும் எல்லாமும் - உண்மையான ஜனநாயகத்திற்கான தேடல் (1)




ஒரு நாட்டின் தலையாய கடமை என்பது, தன் நாட்டு மக்களுக்கு மிகச்சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தருவதாகும். 

நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் ஓர் அரசு, தன்னுடைய கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் மூலமாக மக்களுக்கு மிகச்சிறந்த வாழ்வியலைத் தர வேண்டும். 

அந்த நோக்கத்துடன்தான் அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கே வருகிறார்கள். 

அதற்காகவே மக்களிடம் சென்று தங்களுடைய கொள்கைகளை விவரித்து, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, உங்கள் வாழ்க்கையை வளப்படுத்துவோம்" என்று தேர்தல் வாக்குறுதி அளித்து வாக்குகளைப் பெறுகிறார்கள். இது ஜனநாயகத்தின் அடிப்படைத் தேர்தல் முறை என்பதை நாம் அறிவோம்.

ஆனால், ஓர் அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, (இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும்) அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு நிறைவான வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறதா என்று கேட்டால், "இல்லை" என்றே சொல்ல வேண்டும். 

ஒரு குறிப்பிட்ட சமூகமும், குறிப்பிட்ட சில பிரிவினரும் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். "எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்" என்ற கோட்பாடு இந்தியாவில் இதுவரை நிறைவேறவே இல்லை.

இதன் காரணத்தை யோசித்துப் பார்த்தால், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் ஆட்சியாளர்களின் தவறான வழிநடத்துதலே முதன்மைக் காரணமாகத் தெரிகிறது. 

மக்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகளைப் பற்றி அவர்கள் சிந்திப்பதே இல்லை; 

தங்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் மட்டுமே முக்கியம் என்று நினைக்கிறார்கள். இவர்களின் கொள்கைகள் மக்களின் அன்றாடப் பசியைத் தீர்க்கவோ அல்லது அவர்கள் நிம்மதியாக உறங்குவதற்குக் தங்குமிடம் (வீடு) தரவோ பயன்படவில்லை என்பதே உண்மை.

இதைச் சரி செய்ய முடியுமா என்றால், நிச்சயமாக முடியும். இந்த உலகத்தில் முடியாதது என்று எதுவுமே இல்லை. இதை எவ்வாறு சரி செய்வது என்பதை இனிவரும் பதிவுகளில் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.  

இப்பதிவைப் போலவே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட பலர், எழுதி இருக்கிறார்கள், எழுதி வருகிறார்கள். இந்தப் பதிவினால் என்ன பயன் என்று நினைக்க கூடும். 

இது பலர் எழுதிய பதிவல்ல. இது வித்தியாசமானது. வேறுபாடானது. அவசியம் தொடர்ந்து படியுங்கள்.