குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Friday, June 19, 2026

இயக்குனர் பாரதிராஜா: இமயம் தொட்ட புகழும், வாழ்வின் நிழல் பக்கங்களும்

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவுக்குப் பின், ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் திரைத்துறையினரின் கருத்துக்களைக் காணும்போது, உலகமே கொண்டாடிய ஒரு மாபெரும் கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சிகரமானதாக இருந்திருக்கவில்லை என்பதை ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது. 

அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த கங்கை அமரன், "எல்லாரும் இவரைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே!" என்று ஆதங்கப்பட்ட வார்த்தைகள், பாரதிராஜாவின் இறுதிக்காலத் தனிமையை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

தமிழ் சினிமாவில் எத்தனையோ முகம் தெரியாத புதுமுகங்களை அறிமுகப்படுத்தி, அவர்களைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற பெருமை 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவுக்கு உண்டு. ஆனால், அத்தகைய சாதனையாளரால் தன் சொந்த மகனை வைத்து மக்கள் ரசிக்கக்கூடிய ஒரு வெற்றிகரமான திரைப்படத்தைக் கொடுக்க முடியாமல் போனது ஒரு பெரும் அவலமே.

தன் மகனைத் திரைத்துறையில் வெற்றி பெற வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவருக்குள் இருந்திருக்கலாம். 'இயக்குனர் இமயம்' என்ற உயரிய பட்டம் இருந்தும், தன் சொந்த மகனின் திரைவாழ்வை அவரால் செப்பனிட முடியவில்லை என்றால், அந்தப் பட்டத்தால் அவர் பெற்ற பலன் என்ன என்ற கேள்வி எழுகிறது. 

மகனின் மறைவுக்குப் பிறகு, அத்துயரத்தின் காரணமாகவே அவர் திரைப்படப் பணிகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டார். இறுதிநாட்களில் உடல்நலனுக்குத் தேவையான மருந்துகளைக் கூட அவர் முறையாக உட்கொள்ளவில்லை என்று கூறப்படுவது, அவர் அடைந்த மனவேதனையின் உச்சத்தைக் காட்டுகிறது.

வாழ்வின் கணக்குகளும், காரண காரியங்களும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை.

அவருக்கு ஏன் இந்த நிலை? இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால், அவர் சினிமா துறையில் உச்சத்தில் இருந்தபோது நடந்த சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. 

ஒரு நேர்காணலில் அவரே குறிப்பிட்டது போல, புதுமுகங்களை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் பெயர்களை மாற்றும் வழக்கம் அவரிடம் இருந்தது. "பெயரை மாற்றுவதற்கு எனக்கு உரிமை கொடுத்தது  யார் என்ற எண்ணம் எனக்குள் ஒருமுறை தோன்றியது, அதன் பிறகே அதை நிறுத்தினேன்" என்று அவரே ஒப்புக்கொண்டார்.

இது ஒரு உதாரணம் மட்டுமே. இதேபோல அவருடைய திரைப்பயணத்தில் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கக்கூடும். உலகில் எந்தவொரு செயலும் காரண காரியமின்றி நடப்பதில்லை. 

அந்த வகையில், தன் வாழ்நாளில் யாரோ ஒருவருக்குச் செய்த செயலால் அல்லது யாரோ ஒருவரின் மனவருத்தத்தால் ஏற்பட்ட சாபமே, அவருடைய இறுதிக்காலத் துயரத்திற்குக் காரணம் என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான பாடம் என்னவென்றால்: "யார் மனதையும் புண்படுத்தக்கூடிய ஒரு தொழிலையோ, செயலையோ நாம் செய்யக் கூடாது; அப்படிச் செய்தால் அதற்கான பலனை நாம் இந்த வாழ்விலேயே அனுபவித்தே தீர வேண்டும்" என்பதுதான். 

இது பாரதிராஜாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக வரலாறும், மனித வாழ்க்கையும் நமக்கு உணர்த்தும் எதார்த்த உண்மை. யாரும் தப்பித்துப் போகவே முடியாது.

அவருடைய மறைவின்போது, "சினிமா உலகம் ஒரு மிகப்பெரிய ஆளுமையை இழந்துவிட்டது" என்று திரையுலகினர் கண்ணீர் வடித்தனர். பல முன்னணி நடிகர்கள் கதறி அழுததையும், அவரிடம் உதவி இயக்குனர்களாகப் பணிபுரிந்து இன்று பெரிய இயக்குனர்களாக இருக்கும் பலரின் நாடகத்தனமான அஞ்சலிகளையும் நாம் பார்க்க முடிந்தது.

நாளைக்கு இறக்கப் போகும் நபர்கள், இன்று அழுது கொண்டிருக்கிறார்கள் என்பார்கள். வந்தோமா, அஞ்சலி செலுத்தினோமா, சென்றோமா என்று இல்லாமல் பாரதிராஜாவின் செயல்களைப் பற்றி பெருமை பொங்க பேசிக் கொண்டிருந்தார்கள். அதாவது அவருடன் இவர்கள் இருந்தார்கள் என்பதுதான் பேச்சின் சாராம்சம்.

பவா செல்லத்துரை என்றொரு எழுத்தாளர் அஞ்சலிக்காக பேசிய போது பாரதிராஜா பற்றி டவுசர் போட்டுக்கிட்டு நின்றார், சாப்பிட்டார், தூங்கினார், பேசினார் என்பது போலவே தனி மனித செயல் துதியைப் பேசினார். அப்படிப் பேச அவருக்கு வெட்கம் கொஞ்சம் கூட இல்லை. அவர் நடந்தது, பார்த்தது, பேசியது, தின்றது, திட்டியது பற்றி விலாவரியாகப் பேசினார். இதை ரசித்துக் கேட்க ஒரு கூட்டம், கை தட்ட ஒரு கூட்டம். 

நாம் அவர் இயக்கிய முதல் மரியாதை படத்தை ஆராயலாம்.

வயதான சிவாஜிக்கும், இளம் பெண் ராதாவுக்கும் இடையே மலரும் காதல் தான் கதையின் கரு. 

இக்கதை இளையராஜாவுக்குப் பிடிக்கவில்லை என பாரதிராஜா பேட்டியில் சொல்லி இருக்கிறார். இளையராஜா வயதான ஹீரோவுக்கும், இளமையான ஹீரோயினுக்கும் காதல் டூயட் பாடல்களை இசையமைக்கவில்லையா என்று கேட்டால் என்ன சொல்வாரோ? அது ஒரு பக்கம் இருக்கும்.

இந்தப் படத்தில் பாரதிராஜா கையாண்ட ஓர் அருமையான விஷயம் இருக்கிறது. சிவாஜிக்கு அவரின் மனைவியுடன் இல்லற வாழ்க்கை கிடையாது. அவர் தனது மாமன் மகன் வேறு எவனுடனோ உறவு கொண்டதால் வயிற்றில் குழந்தை. மாமனின் வேண்டுகோளுக்காக அவளை திருமணம் செய்து கொண்டார். பிள்ளையும் பிறந்தது. அம்புட்டுதான் இருவரின் வாழ்க்கையும். சொத்து மாமன் கொடுத்தது. பெண்ணும் தான். குழந்தையோ தனக்கு உரிமையில்லாதது. ஒரு அவல வாழ்க்கையின் பிம்பமாக சிவாஜி. ஊருக்கு ராஜா, வீட்டுக்குள் கையாலாகாதவர். 

இந்த நிலையில் ராதா மீது அவர் கொண்ட காதல் நேர்தன்மை கொண்டது. 

மனைவி இருக்கையில் மற்றொரு பெண்ணுடன் காதல் கொள்வத் கள்ளக்காதல். பாரதிராஜா இக்கதையில் காதலை நேர்மைப்படுத்தினார். இன்றைக்கு கள்ளகாதல் ஒழுக்கத்தில் சேர்த்தி.

எந்தப் பெண்ணுடனும் உறவு கொள்ளாத ஹீரோ, தனக்குப் பிடித்த ஒரு பெண்ணின் அன்பின் காரணமாக காதல் கொள்வது என்பது எதார்த்தமே. வயது வித்தியாசமென்பது காதலுக்கு கிடையாது.

இதுதான் இயக்குனரின் திறமை. பாரதிராஜா இப்படத்தில் சொன்ன காதல் உண்மையான காதலே. 

அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமானவை. ஒன்றுடன் ஒன்று இணைக்க முடியாதவை.

புகழின் உச்சியில் இருக்கும்போது மனிதர்களைக் கொண்டாடும் இந்த உலகம், தனிமையில் இருக்கும்போது கைவிட்டுவிடும் என்பதற்கு பாரதிராஜாவின் வாழ்க்கையே ஒரு சாட்சி.

வந்தார், வாழ்ந்தார், சென்றார். 

இயற்கையை வெல்ல எவராலும் முடியாது அல்லவா?


Friday, May 9, 2025

வாழ்க்கையின் நிலையாமை - அபூர்வம் சித்தியின் மறைவு

பத்தாம் வகுப்பு வரை ஆவணம் மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். மூன்று சக்கர சைக்கிள் உதவியுடன் பள்ளித் தோழர்களின் உதவியால் வீட்டுக்கும் பள்ளிக்கும் சென்று வருவது பிரச்சினையாக இல்லை. பனிரெண்டாம் வகுப்புக்கு கீரமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்க வேண்டி இருந்தது.

மச்சான் ஆத்மநாதன் அங்கு தான் படித்தான். இருவரும் பள்ளிக்கு சென்று வருவோம். இடையில் என் அம்மாவுக்கும், அவனது அம்மாவுக்கும் கிராமத்து சண்டை வர, அவன் என்னை சைக்கிளில் அழைத்து செல்ல மறுத்து விட்டான். ஒரு வாரம் லீவு. 

ஒரு வழியாக நெடுவாசலில் இருந்து வரும் பாலநாதன் என்னை அழைத்துச் செல்வான். கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் தூரம். ஆவணம் கைகாட்டியில் இருந்து செல்லும் ஆனந்தனும் அழைத்துச் செல்வான். ஒரு கட்டத்தில் கீரமங்கலத்தில் தங்கும் அறையொன்றினை வாடகைக்குப் பிடித்து தங்கி விட்டேன். 

கீரமங்கலம் போலீஸ் ஸ்டேசன் பின்னால் தங்கும் அறை.  மண்பானை விற்ற பள்ளித் தோழன் இப்ராம்ஷா உதவி. தினமும் காலையில் ஹோட்டலில் இட்லி, மதியம் பட்டினி, இரவில் ஒரு தோசை என ஏற்பாடு. அரசு ஹாஸ்டலில் தங்க எனக்கு அனுமதி கிடைத்தது. அது ஒரு நரகம். சாப்பாடோ கொடுமை.

இப்படித்தான் எனது உயர்நிலை பள்ளிக் கல்வி கடந்தது. பெரிய கொடுமையை அனுபவித்தேன். சாப்பாடு கிடைக்காது. இப்ராம்ஷா வரவில்லை எனில் அல்லது மறந்து விட்டாலோ பட்டினி. பள்ளிக்கும் போக முடியாது. அன்றைக்கு லீவு. இந்த லட்சணத்தில் எங்கே படிப்பது? ஒரு வழியாக முட்டி மோதி படித்துக் கொண்டிருந்தேன்.

அபூர்வம் சின்னம்மா பைங்கால். கீரமங்கலத்துக்கு பக்கத்து ஊர். சித்தப்பா நாகப்பன். அவர்களுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. என் அப்பாவின் தங்கையின் மகள். சித்தி கூட பிறந்தது வீரப்பன், குட்டியப்பன், வீரியம்மாள், சிவையாள், பாப்பாத்தி, அபூர்வம் மற்றும் நாகம்மாள் என ஏழு பேர். 

அம்மா சித்தியிடம் பேசி, பைங்காலில் தங்கிக் கொண்டு, நாகப்பன் சித்தப்பாவின் அண்ணன் மகன் நடராஜனுடன் கீரமங்கலம் பள்ளிக்கு சென்று வர ஏற்பாடு செய்தார்கள்.

பைங்கால் வாசி ஆகி விட்டேன். ரெஸ்ட் ரூம் பெரிய பிரச்சினை. குளிக்க ஆத்துக்கு நடராஜன் அழைத்து செல்வான். நினைத்தவுடன் ஒன்றுக்கு போக முடியாது. கிராமங்களில் கழிவறையெல்லாம் இருக்காது. ஒப்பன் கழிவறை. என் நிலையெல்லாம் நினைத்துப் பாருங்கள். வாழும் போதே நரகத்தை அனுபவித்தேன்.

சித்தி வீடு எனக்கு சொர்க்கம். சித்தப்பா பாலனின் மகள் மாலதி எனது தங்கை, அங்கையற்கண்ணி இன்னொரு தங்கை, ராமசாமி தம்பி, பாட்டி மற்றும் நடராஜன் என உறவுகள். விடிகாலையில் மாலதி ஒரு குவளை காப்பி தரும். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் அபூர்வம் சித்தி எருமை பாலில் காப்பி தரும். தினமும் சூடான சாப்பாடு. மாலதி தினமும் வெண்ணெய் கொண்டு வந்து சோற்றுக்குள் வைக்கும். நெடுவாசலில் கட்டிக் கொடுத்த மாலதி, ஏதோ பிரச்சினையால் இறந்து போச்சு. இன்று வரை என்னால் மறக்கவே முடியாத தங்கை. மாலதி என யாரவது தெரிந்தால் போதும், கண்கள் கலங்கி விடும்.

பள்ளிக்கு பத்து பைசா வாங்கி செல்லும் அங்கையற்கண்ணி, ஒரு மிட்டாய் வாங்கி உள்ளங்கைக்குள் வைத்து கொண்டு, மாலையில் பள்ளியில் இருந்து வரும் எனக்கு ஈரத்தால் கசிந்து போனதை தரும். ராமசாமி இரவில் என்னுடன் படுத்துக் கொள்வான். கொல்லைப்பக்கம் போக எனக்கு உதவி செய்வான். 

மாலையில் பாட்டியின் படுக்கையில் தான் படுத்திருப்பேன். தூங்கி விடுவேன். பாட்டி தனது சேலையால் போர்த்தி விட்டு, சத்தம் காட்டாமல் இருப்பார்கள். அபூர்வம் சித்தி ஒன்பது மணிபோல எழுப்பி வேறு அறையில் தூங்க வைக்கும்.

நாகப்பன் சித்தப்பா கீரமங்கலம் தியேட்டருக்கு படம் பார்க்க சென்று திரும்பி வரும் போது, பலகாரம் வாங்கி வருவார். இரவில் எழுப்பி சாப்பிட சொல்வார். தூக்க கலக்கத்துடன் சாப்பிட்டு விட்டு, தூங்கி விடுவேன். பாப்பாத்தி சித்தி, அவ்வப்போது வீட்டில் ஏதாவது ஸ்பெஷல் செய்தால் கொண்டு வந்து தரும்.

அபூர்வம் சித்தியின் கைப்பக்குவம் போல யாருக்கும் வாய்க்காது. இறால் குழம்பும், வறுவலும், மீன் குழம்பும், மீன் வறுவலும், சாம்பாரும், வற்றல் குழம்பு, ரசம் - சொல்லால் எழுத முடியாது. வாரா வாரம் பேராவூரணிக்கு சென்று வரும் சித்தி, எனக்கு பலகாரகங்கள் வாங்கி தரும். ஒரு வாரம் பலகாரகங்கள் சாப்பிட வரும்.

கெச்சலான உடல். திருத்திய முகம் என தெய்வாம்சம் பொருந்திய சித்தி இன்றைக்கு இல்லை. அவர் இறைவனை நாடி சென்று விட்டார். பல்வேறு பணி சுமைகளால் என்னால் அவர் உடல் நிலை சரியில்லாத நிலையில் சென்று பார்க்க முடியவில்லை. நேற்றைக்கு முதல் நாள் இரவு 11 மணிக்கு காலமாகி விட்டார் என அண்ணன் கேசவன் சொன்னார். 

அபூர்வம் சித்தி - நாசூக்கானவர். அவரின் உடை உடுத்தும் விதம், மற்றவர்களுடன் உரையாடும் விதம், பேசும் விதம் எல்லாம் கெத்தாக இருக்கும். வீரப்பன் மாமா, குட்டியப்பன் மாமா - அபூர்வம் சித்தி மூவரும் ஒரே மாதிரி இருப்பார்கள். இறந்து போன எனது தாய்மாமா அருணாசலத்துக்கும், என் அம்மாவுக்கும் பிடித்தவர். 

விடிகாலையில் எழுந்து வாசல் பெருக்கி, மாடுகளுக்கு தீவனம் போட்டு, சாணக் கழிவுகளை எடுத்து, பால் கறந்து, உலை வைத்து சோறு பொங்க அடுப்பை தூண்டி விட்டு, எனக்கு காப்பி போட்டுக் கொடுத்து விட்டு, வயல்காட்டுக்கு சென்று, வேலையாட்களை பார்த்து விட்டு, சித்தப்பாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு என பம்பரம் தோற்றுப் போய் விடும். நினைத்துப் பார்க்க முடியாது. ஓயாது ஒழியாது வேலை வேலை என ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

மூன்று மாதங்கள் என நினைவு. சித்தி வீட்டில் இருந்து பள்ளி சென்று வந்து பனிரெண்டாம் வகுப்பு முடித்தேன். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவை வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். ஊருக்கு சென்று வரும் போதெல்லாம் சித்தப்பாவையும், சித்தியையும் பார்த்து விட்டு வருவேன். இனி?

சித்தப்பாவுடன் கல்யாணத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது - டிவிஎஸ் பைக்கின் பின்புறம் அமர்ந்து இருந்தவர் பின்னால் விழுந்து விட்டார். தலையில் அடி. சித்தப்பா பெரிய செலவு செய்து சிகிச்சை கொடுத்தார். சித்திக்கு சரியாகவில்லை. 

எல்லோருக்கும் பிடித்த அவர் இன்று இல்லை. அவரை இழந்து வாடும் சித்தப்பாவுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் தகாது. சித்தியின் மகன் நீதிக்கு என்ன ஆறுதல் சொல்வது எனவும் தெரியவில்லை.

என்னால் இந்த இழப்பில் இருந்து மீள முடியவில்லை. அம்மா, அப்புறம் சித்தி என இயற்கையின் செயலால் உண்டான இழப்புகள் என்னை வாட்டி வதைக்கிறது. 

சித்தியின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்தனை செய்து கொள்கிறேன்

 09.05.2024 (5.25AM)