குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, November 29, 2016

கண்ணில் தெரியும் கபாலிகள்

பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை ஆண்ட போது, உப்புக்கு வரி விதித்தார்கள். அதை எதிர்த்து காந்தி உப்புச் சத்யாகிரகத்தைத் ஆரம்பித்தார். வேதாரண்யத்தில் ராஜாஜி தங்கி இருந்து உப்புச் சத்யாகிரகத்தை நடத்த திட்டமிட்டார். காவல்துறையினர் இவரை உப்பு எடுக்க விடாது தடுக்க வேண்டும் என்று கருதி அதற்கென முன்னேற்பாடுகளில் இருக்கும் போது இரவே தண்ணீர் எடுத்து உப்புக் காய்ச்சி உப்பை எடுத்து விட்டாராம் ராஜாஜி. அப்போராட்டத்தின் போது போலீஸார் அடிதடி நடத்த கையிலெடுத்த உப்பை விடாது பிடித்துக் கொண்டு போராடினாராம் ஒருவர். அவர் கையை மண்ணில் வைத்து மிதிக்க கட்டை விரல் தனியாக துண்டாகப் போய் விழுந்ததாம். இப்படி ஒரு காட்சியை ‘மண்ணில் தெரியுது வானம்’ என்ற நாவலில் விவரித்திருக்கிறார் ஆசிரியர் ந.சிதம்பர சுப்ரமணியன். இன்றைக்கு ஒரு நாள் வங்கி வாசலில் நிற்பதுக்கு கூட வலிக்கிறது. அன்றைக்கு தன் உயிரைக் கொடுத்து இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்கள் எங்கே? ஒரே ஒரு நாள் வெயிலில் நின்றால் குதிக்கும் நாம் எங்கே? வெட்கமாக இல்லையா?

அப்போது பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சம்பளம் பெற்றுக் கொண்டு தன் நாட்டு மக்களையே அடித்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் இல்லை. நம்மவர்கள் தான். நம் இந்திய மன்னர்கள் தான் வயிற்றைக் கழுவுவதற்காக பிரிட்டிஷாரிடம் கூலி வாங்கிக் கொண்டு சுதந்திரத்திற்காகப் போராடிய தன் சகோதரனை அடித்து உதைத்து மண்டைகளைப் பிளந்து பலரை பரலோகம் போக வைத்துக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரனிடம் தன்மானத்தை அடகு வைத்து வயிற்றுப் பிழைப்புக்காக அவன் காலை நக்கிக் கொண்டு ஊழியம் வாங்கிக் கொண்டிருந்தனர்.

இதே நாவலில் ஒரு இடத்தில் பத்திரிக்கை அலுவலகத்தில் நடந்த ஒரு விஷயத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். உலகப்போர் நடந்து கொண்டிருந்த போது இந்தியாவும் கலந்து கொண்டதாக பிரிட்டிஷார் அறிவித்தனர். போர் காலமாகையினால் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. தினசரி பதிவு செய்து ஒரு வருடம் நடத்தினால் அரசே தினசரிக்கான பேப்பரை மானிய விலையில் கொடுக்கும். (இன்றைக்கும் இந்த விஷயம் நடந்து கொண்டிருக்கிறது எவருக்காவது தெரியுமா?) அவ்வாறு கொடுக்கப்பட்ட பேப்பர் பண்டிலை கள்ளமார்க்கெட்டில் விற்று கறுப்புப்பணத்தை உருவாக்கினார்கள் என்று நாவலில் பதிவு செய்திருக்கிறார். அந்த இதழின் ஆசிரியர் ஒருவர் காந்தியின் பால் பற்றுக் கொண்டவர் என்றும் மற்றொருவர் வியாபாரி என்று எழுதி உள்ளார்.

காந்தி காங்கிரஸ்ஸைக் கலைத்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் எவரும் கேட்கவில்லை. பதவிக்கு வந்ததும் அரசு நிலங்களை தங்கள் பெயர்களில் மாற்றிக் கொண்டனர் என்றும் ஒரு விஷயத்தை நாவலில் விவரித்திருக்கிறார் ஆசிரியர். அந்த நாவலின் முன்னுரையில் எழுதப்பட்ட ஆண்டு 1969 என்று தேதியிடப்பட்டுள்ளது. அன்றைக்கே ஆரம்பித்து விட்டனர் தம் ஆட்டத்தினை சுய நலக்கும்பல்கள். கதர் உடுத்தி மக்களிடையே வேஷம் போட்ட அந்த நயவஞ்சகக் கும்பல் தன் குடும்பத்தினையும் தன் நலத்தினையும் மட்டுமே உத்தேசித்து இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து கொழுக்க ஆரம்பித்தனர். அதைத்தான் அந்த நாவல் விரிவாக எடுத்துச் சொல்கிறது.

இந்தியா சுதந்திரம் அடையப் போராடி எத்தனையோ உயிர்கள் போராட்டக்களத்தில் பலியாயின. அப்போது  பலியாகக் காரணமாயிருந்த காவல்துறையிலும், ராணுவத்திலும் இருந்தவர்கள் பெரும்பான்மை இந்தியர்களே. அவர்களே வயிற்றுப் பிழைப்புக்காக போராட்ட வீரர்களை அடித்துக் கொன்றனர். பிரிட்டிஷ் அரசிடம் வேலை செய்வதைக் கவுரவம் என்றுச் சொல்லித் திரிந்தார்கள் பல சுயநலவாதிகள் அன்றைக்கு.

சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இந்தியாவில் இன்னும் தெருவில் படுத்திருக்கும் ஏழைகள் குறையவில்லை. எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய பலனை தன் சுய நலத்தினால் குவித்து வைத்துக் கொண்டு இந்திய மக்கள் தொகையில் சுமார் 1 சதவீதமாக இருக்கும் சுய நலக்கும்பல்கள் குபேரர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தவுடன் எரிகிறது. 

60 ஆண்டுகால ஆட்சியில் கொள்ளையடித்து குவித்து வைத்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கும் பல சுயநலநரிகள் போக வழி தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். கோடிகளில் சம்பளம் பெற்று கள்ளப்பணத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் பல நடிகர்கள் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். கல்வித் தந்தைகள் இனி என்ன செய்வது என்று தெரியாமல் பிரதமரை கடும் கோபத்துடன் தனிமைகளில் திட்டிக் கொண்டிருக்கின்றனர். ஊழல் அரசு அலுவலர்கள் தங்கள் அநியாயமாக திரட்டி வைத்திருக்கும் பணத்தை வெள்ளையாக மாற்ற அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். 

இருக்க வீடே இல்லாதவர்கள் பலர் இருக்க ஒருவன் பல வீடுகளை வாடகைக்கு விட்டுக் கொண்டிருக்கின்றான். இதெல்லாம் எப்படி சாத்தியமானது? என்றால் அது கள்ளப்பணம். கறுப்பு பணம் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 

அரசின் சட்டம் 250000க்கும் மேல் சம்பாதித்தால் கணக்கு காட்டு என்கிறது. ஆனால் எவரும் காட்டுவதில்லை. சம்பாதிக்கும் பணத்தைக் கணக்கு காட்டியே தீர வேண்டும் என்றால் குதிக்கின்றார்கள். சட்டத்தை மதிக்கமாட்டேன் என்கிறார்கள்.  தெருவில் இறங்கிப் போராடுகின்றார்கள். 

தெருவோரம் படுத்து இருக்கும் ஏழைகளுக்காக என்றைக்காவது போராடினார்களா இந்த வெள்ளை வேட்டி குறு நில மன்னர்கள்? இல்லையே? ஊழலில் குவித்த பணம் வெற்றுக் காகிதமாய் போய் விடுமே என்பதற்காக கூட்டம் கூட்டி கூப்பாடு போடுகின்றார்கள்.

கள்ளப்பணத்தை வைத்துக் கொண்டு நிலத்தின் விலையை ஏற்றுகிறார்கள், பொருட்களை வாங்கிப் பதுக்குகின்றார்கள். பொருட்களின்  விலையேறுகிறது. கள்ளப்பணத்தினால் தான் சாதாரண நேர்மையான ஒருவனால் இடம் கூட வாங்க முடிவதில்லை. இதையெல்லாம் சரி செய்ய அரசு முடிவெடுத்தால் குதிக்கின்றார்கள். போராடுகின்றார்கள். ஊழல் பணத்தால் தன் ஆசை நிறைவேற அதிக விலை கொடுத்துப் பொருட்களை வாங்குகிறார்கள். அதே விலைக்கு சாதாரண மக்களும் வாங்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகி விடுகிறது. நான் சொல்லும் இந்த விஷயம் உண்மையா இல்லையா என்று யோசித்துப் பாருங்கள்.

இதோ பருப்பு விலைகுறைந்து வருவதாக விகடன் வெளியிட்ட செய்தி. கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளவும். கருப்புப் பணத்தைக் கொண்டு பதுக்கி வைத்த பருப்பு வகைகள் வெளியில் வர ஆரம்பித்திருக்கின்றன.

http://www.vikatan.com/news/india/73668-reason-behind-decrease-in-dal-prices.art

ஊழல் பணத்தினால் தங்கள் குழந்தைகளுக்கு விலைக்கு படிப்பினை வாங்கி விடுகின்றார்கள். கள்ளப்பணத்தினால் தங்கள் மகன் மகள்களை சினிமாவில் நடிக்க வைத்து கோடிகளில் சம்பாதிக்கின்றார்கள். இப்படி இந்தியாவெங்கும் ஊழல்வாதிகளும், சுய நலக்கும்பல்களும் அக்கிரமமாகச் சம்பாதித்த பணத்தினால் இந்தியர்களைச் சுரண்டிக் கொண்டே இருக்கின்றார்கள். இந்தியர்கள் மேலும் மேலும் ஏழைகளாகிக் கொண்டே இருக்கின்றார்கள். விலைவாசியும் விண்ணில் ஏறிக் கொண்டிருக்கின்றது. வீட்டு வாடகை 1000 ஆக இருந்தது இன்றைக்கும் 10000 ஆகி விட்டது. இந்த உயர்வு யாரால் ஏற்படுத்தப்படுகிறது என்று யோசித்துப் பாருங்கள். உழைப்பவர்களின் பணத்தினை தான் ஊழல் செய்த பணத்தினால் வைத்து இருக்கும் சொத்துக்களை வைத்து மேலும் உறிஞ்சுகின்றார்கள். 

அன்றைக்கு சுதந்திரப் போராட்டத்தின் போது தன் சகோதரனையே கொன்றொழித்த பிரிட்டிஷ் அடிமைகளாக இருந்த இந்தியர்களையும், இன்றைக்கு கள்ளப்பணத்திற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராகப் போராடும் சுதந்திர இந்தியர்களுக்கும் ஏதாவது வேறுபாடுகள் தெரிகின்றனவா? 

இந்திய அரசின் இந்த நடவடிக்க பாமர மக்களுக்கு பல சிரமங்களைக் கொடுக்கிறது என்பது உண்மைதான். அந்தச் சிரமங்கள் எதிர்கால தம் சந்ததியினருக்கு நல்லதைக் கொண்டு வரும் என்று புரிந்து கொள்ள வேண்டும். எதிர்கால சந்ததியினர் சுகமாக வாழ நாம் இந்தச் சிரமங்களை ஏற்று இந்திய அரசுக்கு ஆதரவு நல்க வேண்டும். கருப்புப்பண கோட்டான்களும், ஊழல் பெருச்சாளிகளும் மக்களை திசை திருப்ப தாங்கள் வைத்திருக்கும் அதர்ம பணத்தினைக் கொண்டு பல்வேறு விஷயங்களை முன்னெடுப்பார்கள். அந்தக் கபாலிகளிடம் ஜாக்கிரையாக இருக்க வேண்டும். 

சினிமாவில் வந்த பாடல் வரிகள் இவை. படியுங்கள். உண்மையை உணருங்கள்.

என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?

இன்பம் துன்பம் என்பது
இரவு பகலைப் போன்றது
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
சோகமென்ன தோழனே
சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு
இன்று ஓய்வெடு
நீ இன்று ஓய்வெடு
என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?

பிறக்கும் போதும் பேரில்லை
இறக்கும் போதும் பேரில்லை
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
ஜெயிக்கபோகும் மானிடா
மயக்கம் இங்கே ஏனடா
உறுதியோடு கேளடா
உண்மை நீயடா
ஓ... உண்மை நீயடா

என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?

நன்றி:- பாடலாசிரியர் வைரமுத்து. இயக்குனர் பாலு மகேந்திரா மற்றும் ந.சிதம்பர சுப்பிரமணியன்

இந்த சமயத்தில் இந்தப் பாடல் சொல்லும் அர்த்தங்கள் பல. கண்ணில் தெரியும் கபாலிகளைப் பாருங்கள். கபாலிகளிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க மீண்டும் ஒரு சுதந்திரப்போரினை நம் பாரத அரசாங்கம் அறிவித்திருக்கிறது என்பதை நினைவில் கொண்டு கபாலிகளுக்கு எதிராகப் போராடுவோம் வாருங்கள்.

இந்தியத் தாய்க்கு வணக்கம் !


Saturday, November 26, 2016

காயகப்பல்

சமீபத்தில் சித்தர் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்த போது கிடைத்த அறிய பாடல் இது. பாடல் புரியும் என்று நினைக்கிறேன். எவ்வாறு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது போனதோ அதே போல ஒரு நாள் செல்லாது போகும் இந்த உடலை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று சித்தரொருவர் பாடி வைத்திருக்கிறார். படித்துப் பாருங்கள். 

சிந்தை குலைந்து மனம் சிதறி நிற்கையில் கொஞ்ச நேரம் இப்பாடல்களைக் கேளுங்கள். சிந்தை தெளிந்து சீராவீர்கள்.

இனி சித்தரின் அபூர்வ பாடல் :

ஏலேலோ ஏகரதம் சர்வரதம் 
பிரமரதம் ஏலேலோ ஏலலிலோ. 

பஞ்சபூதப் பலகை கப்பலாய்ச் சேர்த்து 
பாங்கான ஓங்குமரம் பாய்மரம் கட்டி 
நெஞ்சு மனம்புத்தி ஆங்காரஞ்சித்தம் 
மானாபிமானங் கயிறாகச் சேர்த்து 

ஐந்தெழுத்தைக் கட்டி சாக்காகயேற்றி 
ஐம்புலன் தன்னிலே சுக்கானிருத்தி 
நெஞ்சு கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கி 
சிவனுடைய திருப்பொருளை சிந்தையில் நினைந்து 

தஞ்சலான வெள்ளத்தில் தானே 
அகண்டரதம் போகுதடா ஏலேலோ ஏலேலோ. 
களவையுங் கேள்வையுந் தள்ளுடா தள்ளு
கருணைக்கடலிலே தள்ளுடா கப்பல் 

நிற்குணந்தன்னிலே தள்ளுடா தள்ளு
நிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல் 
மூக்கணைமுன்றையுந் தள்ளுடா தள்ளு 
முப்பாழுக்கப்பாலே தள்ளுடா கப்பல் 

திக்குதிசையெங்கும் தள்ளுடா தள்ளு 
திருமந்திரஞ் சொல்லி தள்ளுடா கப்பல் 
பக்கமுடன் கீழ்மேலும் தள்ளுடா தள்ளு 
பரவெளிக்கப்பாலே போகுதடா கப்பல் ஏலேலோ ஏலேலோ

தந்தை தாய் சுற்றமும் சகலமுமறந்து
தாரம் சகோதரம் தானதும் மறந்து
பந்தமும் நேசமும் பாசமும் மறந்து 
பதினாலு லோகமும் தனையும் மறந்து

இந்திரியர்கள் இரட்சித்த கப்பலிலேறி
ஏகாந்தமான தொரு கடலிலே தள்ளி 
அந்திரமான வெளி அருளானந்த வெள்ளத்தில்
அழுந்து தையோ கப்பல் ஏலேலோ ஏலேலோ.

பாடல் பாடிய சித்தர் அடியினைப் பணிந்து இப்பாடலை பதிவிடுகிறேன். 
நன்றி குருவே !

Wednesday, November 23, 2016

கரட்டான்

இன்னும் வங்கிகளில் கூட்டம் நின்று கொண்டிருக்கிறது. சிறுவாட்டுப் பணத்தை எப்படி மாற்றுவது என்று கிழவிகள் கூடிக் கூடி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். எனக்குத் தெரிந்த பாட்டி சிறுவாட்டுப்பணமாய் பத்தாயிரம் வைத்திருக்கிறது. பாட்டியின் பக்கத்து வீட்டுக்காரர் நூறு ரூபாய்க்கு பத்து ரூபாய் கமிஷன் கேட்க பாட்டிக்கு ஆக்சிலேட்டர் எகிறி இருக்கிறது. பாட்டிக்கு சரியான கோபம் வந்து விட்டது. ஒன்றுமே சொல்லாமல் முறைத்துக் கொண்டு போய் விட்டது. ஆனால் அந்த கமிஷனால் ஏற்பட்ட கோபத்தில் அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் இப்போது தினமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். பார்க்கும் போதெல்லாம் கரிச்சுக் கொட்டும் பாட்டியைப் பார்த்தாலே எமனைப் பார்ப்பது போல எகிறிக் குதித்தோடிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் பாட்டியிடம் மொத்த காசையும் வாங்கி, அது வைத்திருக்கும் கேஸ் கனெக்‌ஷன் அக்கவுண்டில் போட்டு, பாஸ்புக்கில் பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து பாட்டியிடம் கொடுத்து விட்டார். பாட்டி இன்னொரு பக்கத்து வீட்டுக்காரருக்கு எள்ளுருண்டை, எள்ளடை எல்லாம் செய்து கொண்டு போய் கொடுக்கிறார். அத்தோடு இருந்தாலும் பரவாயில்லை. அந்தப் பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி என்னெவெல்லாம் பேச வேண்டுமோ அதையெல்லாம் ஒவ்வொரு தெருவில் இருக்கும் கிழவிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறது. தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது கமிஷன் விஷயம். இவரைப் பார்க்கும் கிழவிகள் எல்லாம் என்னவோ பெரிய குற்றம் செய்து விட்டதாக தங்களுக்குள் அவரைப் பார்த்து ஆள் காட்டி விரலைக் காட்டிப் பேசப் பேச ஆள் என்னவோ மாதிரியாகத் திரிகின்றார்.

யாரிடம் என்ன பேச வேண்டும் என்று தெரிந்து கொண்டு பேச வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஆகும். பாட்டியின் வாயில் விழுந்து தினம் தினம் வறுபட்டுக் கொண்டிருக்கும் அந்த ஆள் இப்போது சோகமாகத் திரிந்து கொண்டிருக்கின்றாராம். அவரிடம் கொஞ்சம் பெண் தன்மை அதிகம். ஆகையால் அவர் பாட்டியிடம் வாங்கிய பேச்சுக்களை மோடியிடம் திருப்பிக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி படத்தை கண்ணாடியில் ஒட்டி வைத்துக் கொண்டு தினமும் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறாராம். மனைவிக்கோ இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. 

இப்படியெல்லாமா மனிதனுக்கு பிரச்சினைகள் எழும்? என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. யாராவது கிராமத்துப் பாட்டியிடம் முயற்சித்துப் பாருங்களேன்.

இளம் வயதில் நான் செய்த ஒரு செயல் இப்போது என்னை பீதியில் தள்ளி விட்டிருக்கிறது. விஷயம் தெரியாத வயதில் செய்த செயலுக்கெல்லாம் இப்போது பயந்தே ஆக வேண்டிய சூழல். விஷயத்தைச் சொல்கிறேன். கேளுங்கள். 


வீட்டின் வடக்குப் பக்கமாக கிணற்றடி. கிணற்றின் கிழ புறமாக காசாலட்டு மாமரம் விரிந்து பரந்து இருக்கும். தாழ்ந்த கிளைகள் உண்டு. அதில் கயிறு கட்டி ஊஞ்சல் செய்து ஆடிக் கொண்டிருப்பேன். மாமரத்தின் வடபுறமாக வேலி. வேலியில் ஓங்கி வளர்ந்த பனைமரம் ஒன்று இருந்தது. ஒரு நாள் மதியம் போல இருக்கும். ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தவன் பனைமரத்தின் உச்சியில் பார்க்க அகலமான கண்களுடன் சாம்பல் நிறத்தில் பெரிய பறவை ஒன்றினைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் எனக்குள் நடு நெஞ்சில் சிலீர் என்று பயம் ஏற்பட்டது. சரியாக அது தலையை நான்கு புறமும் சுத்த அதைக் கண்டு பயந்து அம்மா அம்மா என்று அலறிக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். அம்மாகிட்டே கேட்டால் அது ஆந்தை என்றார்கள். அன்றிலிருந்து ஆந்தை என்றாலே எனக்கு ஆகாது. இருந்தாலும் யாராவது விளையாடுவதற்கு கூட வந்தால் மாமரத்தின் ஊஞ்சலுக்குச் சென்று விடுவேன். கண் ஒரு பக்கம் பனைமரத்தைப் பார்த்தாலும் உச்சியினைப் பார்க்காது. அவ்ளோ பயம்.


இன்னொரு சம்பவமும் எனக்கு ஏற்பட்டது. காசாலட்டு மாமரத்தில் காய்கள் பிடித்தவுடன் தொரட்டி வைத்து மாங்காய்களைப் பிடுங்கி வைக்கோல் போருக்குள் வைத்து விடுவேன். தினமும் எந்த மாங்காயாவது பழுத்து இருக்கிறதா என்று பார்ப்பேன். மாங்காய் பழுத்து விட்டால் நன்றாக அழுத்திப் பிசைந்து விட மாம்பழம் கொழ கொழவென ஆகி விடும். நுனியில் ஒரு ஓட்டையைப் போட்டு விட்டு உறிஞ்சினால் மாம்பழ ஜூஸ். அடியேன் கண்ட மேனிக்கு மாம்பழத்தைத் தின்பதுண்டு. வீட்டில் வியாபாரிக்கு விற்றது போக மீதமுள்ள மாங்காய்களை வேப்பந்தழையில் போட்டு பழுக்க வைப்பார்கள். அந்தக் கணக்கு வேறு. ஆனால் யாருக்கும் தெரியாமல் நான் கொஞ்சம் மாங்காய்களை வைக்கோல் போருக்குள் ஒளித்து வைத்து சாப்பிடுவதுண்டு. மாம்பழத்தின் ருசி அப்படி. அப்படி ஒரு நாள் பதுக்கி வைத்திருந்த மாங்காய்களை வைக்கோல் போருக்குள் கையை விட்டு பார்க்க ஏதோ தட்டையாக இருந்தது. யாரோ விளையாண்டு விட்டானே என்ற கோபத்தில் அதை இழுத்து வெளியில் போட மல்லாக்க விழுந்தது அந்த வஸ்து. என்ன வஸ்து என்று தெரியாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதை குப்புற தூக்கிப் போட்டேன். சிறிது நேரத்தில் அது மெதுவாக நகன்றது. பயத்தில் அம்மா என்று அலற அனைவரும் ஓடி வர பார்த்தால் அது ஆமை. அம்மா என்னைக் கண்ட மேனிக்குத் திட்ட ஒரு வழியாக ஆமையை தீயை வைத்துக் கொன்று குப்பைக் கிடங்கில் புதைத்தார்கள். இனிதான் விஷயமே இருக்கிறது.

(கரட்டான் என்றழைக்கும் ஓணான்)

ஞாயிற்றுக் கிழமைகளில் மாமா பையன் விட்டியன் என்னுடன் விளையாட வந்து விடுவான். அவனுக்கு ஏன் விட்டியன்னு பெயர் வந்துச்சுன்னு தெரியாது. விட்டிப்பயலைக் கூப்பிடு என்றுதான் சொல்வார்கள். நானும் அவனும் ஒன்று சேர்ந்தால் அன்றைக்கு கரட்டானுக்குச் சமாதி என்று அர்த்தம். அவன் கைகாட்டி தோட்டத்து வீட்டில் இருந்து வரும் போதே தென்னை ஓலையின் ஈர்க்கைக் கொண்டு வந்து விடுவான். ஈர்க்கு நரம்பு போலவே இருக்கும். நுனியில் சுறுக்குப் போட்டால் அவ்வளவு எளிதில் கண்ணுக்குப் புலப்படாது. வேலியில் பதுங்கி இருக்கும் கரட்டானைச் சுறுக்குப் போட்டுப் பிடித்து அடித்துக் கொன்று விடுவோம். பின்னர் அதற்கு ஆக வேண்டிய காரியங்களைச் செய்து மண்ணுக்குள் புதைத்தால் தான் இருவருக்கும் விளையாட்டு முடியும்.


பட உதவி சிறுகதைகள் தளம்

இப்படி பல கரட்டான்களைக் கொன்று கொன்று விளையாடிய நாட்கள் எப்போதாவது நினைவுக்கு வந்து செல்லும். கடந்த வாரம் ஒரு நாள் நானும் மனையாளும் கலெக்டர் அலுவலகம் சென்று விட்டு வந்த போது நடு ரோட்டில் கரட்டான் நின்று கொண்டிருந்தது. சற்றே பெரிய கரட்டான் அது. நடு ரோட்டில் தலையைத் தூக்கிக் கொண்டு என்னை முறைத்துக் கொண்டு நின்றது. வண்டியை நிறுத்தி விட்டேன். மனையாள் ஒதுங்கிப் போங்க என்றார். இடது பக்கம் ஒதுங்கினால் இடது பக்கம் வந்தது. வலது பக்கம் திருப்பினால் வலது பக்கம் வந்தது. இது என்னடா கொடுமை என்று நினைத்துக் கொண்டு பின்னாலும் முன்னாலும் பார்த்தால் அந்த நேரம் பார்த்து ஒரு வண்டியும் வரவில்லை. கரட்டான் என்னைத் தடுக்க எனக்கோ பழைய நினைவுகள் வர சிலீரென்று பயமேற்பட்டது. நானும் விட்டிப்பயலும் கொன்ற கரட்டான்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு புதிய பிறப்பாக பிறந்து இப்போது நேருக்கு நேராக மோத வந்து விட்டதோ என்று நினைத்தேன். விட்டியனுக்கும் எனக்கும் பாதிப் பங்கு ஆகவே கரட்டானே இருவரையும் ஒன்றாகப் பார்த்து தான் நீ சண்டைக்கு வர வேண்டும், இப்போது சென்று விடு என்று அதைப் பார்த்துச் சொன்னேன். அது அசைவதாகத் தெரியவில்லை. அந்த நேரம் பார்த்து லாரி ஒன்று வர கரட்டான் சாலையோரம் ஒதுங்கியது. விட்டால் போதும் என்று வீடு வந்து சேர்ந்து விட்டேன்.

வீட்டின் வெளியே உட்கார்ந்திருந்த போது வேப்பமரத்தின் மீது ஒரு கரட்டான் உட்கார்ந்து கொண்டு என்னையே பார்ப்பதும் பின்னர் தலையைத் தூக்கி ஆட்டுவதுமாக இருந்தது. விடாது கரட்டான் போல! என நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்து விட்டேன். இப்போது வேப்பமரத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் கண்கள் கரட்டானைத் தேடுகின்றன. அதைக் காணவில்லை. என்னை மன்னித்து விட்டதா? என்று தெரியவில்லை.

Sunday, November 20, 2016

ஆட்டுக்குட்டியும் புற்களின் வாசமும்

சின்னஞ் சிறிய பிராய மனசு. தெளிந்த நீரோடை போல இன்றைக்கு நினைத்தாலும் மனதை வருடும். அத்தகைய மனசு இருந்த இடத்தில் இன்றைக்கு நம்மிடம் இருக்கும் மனசு இருக்கிறது. ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். எவ்வளவு கொடுமையான நிகழ்வுகளை எல்லாம் நாம் ஒவ்வொரு நாளும் அனுபவித்து அனுபவித்து தெளிந்த நீரோடை போன்ற மனதை அழுக்கு நிறைந்த சாக்கடையாக மாற்றிக் கொண்டே வருகிறோம். 

எனக்குள் உறைந்து கிடக்கும் அற்புதமான ஓவியம் சின்னஞ் சிறிய வயதில் நான் வளர்ந்த வீடு. என் வீடு அல்ல அது. என் தாய் பிறந்த வீடு அது. அகலமான கற்கள் பாவிய வாசல். மூன்று புறமும் செங்கற்கள் வைத்து அழகாக பூசப்பட்டிருக்கும். தெற்கு வாசல் வீடு. வடக்கேயும் வாசல் இருக்கும். வடக்குப் பக்கம்  குடத்தடி. வரிசையாக குடங்கள் தண்ணீர் நிரம்பி இருக்கும். குடத்தடியில் ஒரு மாமரம் இருக்கும். அழகான பூக்களைச் சொரிந்து கொண்டிருக்கும். இடது பக்கமாய் குப்பைக் கிடங்கு. கிடங்கினை ஒட்டியவாறு தென்புறமாய் கிழமேலாய் ஒரு கூரை வீடு. வேலைக்காரர்கள் தங்கிக் கொள்ளவும், ஆட்டுக்குட்டிகளையும், மாடுகளையும் கட்டி வைப்பதற்கு இருக்கும். குடத்தடியைத் தாண்டி கிழமேலாய் பெரிய வைக்கோல் போர் இருக்கும். இதற்கு வடக்குப் பக்கமாய் நான்கு பேர் சேர்ந்து கட்டிப்பிடித்தாலும் அடங்காத அளவில் பெரிய மாமரம். அதன் வடக்கே காசாலட்டு மாமரமும், ஒட்டு மாமரமும், பாவற்காய் போலவே காய்க்கும் ஒரு மாமரமும் வட மேற்கு மூலையில் தண்ணீர் வற்றவே வற்றாத கிணறும் அதைத்தாண்டி ஒரு பெரிய பனைமரமும் இருந்தது. 

பெரிய அகலமான ஓட்டு வீடு. திண்ணை, நடு வீடு, இரண்டு பக்கமும் இரண்டு அறைகள், பிறகு சமையல் கட்டு என்று பார்ப்பதற்கே படு ரகளையாக இருக்கும். இன்னும் கொஞ்ச நாளில் அந்த வீட்டினை இடிக்கப் போகிறார் மாமா. அருகில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். பழையது ஆனால் குப்பைக் கூடைக்குத்தானே போக வேண்டும். 


வீட்டில் மாடுகளும், செம்மறி ஆடுகளும் அதிகம். பால் மாடும், கன்றுகளும் இருக்கும். வண்டி மாடுகள் இரண்டு ஜோடி இருக்கும். மழைக்காலங்களில் வயற்காடுகளில் இருந்து புற்கள் அறுத்துக் கொண்டு வந்து ஆட்டுகுட்டிக்கும் மாடுகளுக்கும் போடுவார்கள். கரக் கரக் என்று வாய் கொள்ளாமல் ஆட்டுக்குட்டிகளும் மாடுகளும் தின்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். வாய் பேசாத ஜீவன்களுக்கு உணவிடுவதையும், அதுகள் வாய் கொள்ளாமல் தின்பதையும் காண்பதை விட மகிழ்ச்சியான தருணங்கள் ஏதுமில்லை. 

கோடைக்காலங்களில் ஆட்டுக்குட்டிகளையும், மாட்டு மந்தையினையும் வேலைக்காரர்கள் புல் மேய அழைத்துச் சென்று மாலையில் அத்தனையையும் கொண்டு வந்து கயிற்றில் கட்டி வைப்பார்கள். 

(உழவாரம் - புகைப்பட உதவி : ஜஃப்னா ஹெரிடேஜ்)

ஒரு கோடை நாள் என்று நினைக்கிறேன். வீட்டில் உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று விட்டனர். ஜெயராசு எங்கோ சென்று விட்டான். நான் மட்டுமே இருந்தேன். கொட்டகைப் பக்கம் வந்து பார்த்தால் பசியில் ஆட்டுக்குட்டிகள் கத்திக் கொண்டிருந்தன. எனக்கு மனசுக்குப் பொறுக்கவில்லை. ஜெயராசு எங்காவது ஒதுங்கப்போயிருப்பான் போல. கொலுசு ராவுத்தர் வீட்டின் அருகில் தரையில் படர்ந்து இருக்கும் புற்களைச் செத்தி எடுத்து வந்து கொடுக்கலாம் என்று நினைத்து உழவாரத்தை வைத்து தரையோடு தரையாக படர்ந்து கிடந்த புற்களை செத்தினேன். கொஞ்சம் கொஞ்சமாக செத்தச் செத்த புற்கள் கையோடு வந்தன. எடுத்து மண்ணை உதறி விட்டு அருகில் வைத்திருந்த கூடையில் போட்டுக் கொண்டே வந்தேன். புற்களைப் பூமியில் இருந்து பறித்த போது அதன் வேர்கள் அறுந்து கூடையில் விழும் போது எழுந்த அற்புதமான வாசம் என்னைத் தழுவியது. மனது சிலிர்த்தது. மகிழ்ச்சியில் இன்னும் கொஞ்சம் புற்களைச் செத்தினேன். கொண்டு வந்து ஆட்டுக்குட்டிகளிடையே அமர்ந்து கொண்டு ஒவ்வொரு செத்தையாக எடுத்து ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் கொடுக்கையில் அதுகள் கடித்து மெல்லுகையில் எழுந்த வாசம் இன்றைக்கும் என்னை விடாது சூழ்ந்து கொண்டிருக்கின்றது.

கடந்து போன ஒரு நாளில், பெரியசாமி கவுண்டர் தன் வீட்டுத் தோட்டத்தில் சின்னஞ் சிறிய ஆட்டுக்குட்டியைக் கட்டி வைத்திருந்தார். அழகான சிறு ஆட்டுக்குட்டி அது. அருகில் வேப்பந்தழைகளைக் கட்டி வைத்திருந்தார். இழந்து போன எதையோ மீண்டும் பார்த்தைப் போல இருந்தது. அதைப் பிடித்துக் கொண்டு நானமர்ந்திருந்த கட்டிலில் கட்டி வைத்துக் கொண்டு ரொம்ப நேரம் அதன் தலையில் கையால் தட்டிக் கொண்டிருந்தேன். அது கோபமாய் பின்னே போவதும் பின்னர் முன்னே வந்து கால்களை உயரத் தூக்கி முட்டுவதுமாய் இருந்தது. நீண்ட நேரம் அது கூட விளையாடிக் கொண்டிருந்தேன். ஆனால் புல்லைத்தான் காணவில்லை. கவுண்டர் எங்காவது உழவாரம் வைத்திருக்கின்றாரா என்று தேடின என் கண்கள். 

“அங்கே என்னத்தை அப்படித் தேடுறீங்க?” என்றாள் மனைவி. 

பிளாக்கைப் படிக்கும் அன்பு நண்பர்களே! ஒரு நிமிடம் கண்ணை மூடி உங்களின் சின்னஞ் சிறிய பிள்ளைப் பிராயத்து நினைவுகளை கண்ணுக்குள் கொண்டு வாருங்கள். ஏதோ ஒரு வாசம் அந்தப் பிராயத்திலிருந்து விடாது உங்களையே சுற்றிக் கொண்டிருப்பது நினைவில் வருகிறதா? வரும்!

இனி தேடினாலும் கிடைக்கவா போகிறது உழவாரமும் அந்தப் புற்களின் வாசமும்? 

Tuesday, November 15, 2016

கைகொடுத்த பத்ரகாளியம்மன்

இந்தியாவெங்கும் புரோக்கர்கள் ”சார் இத்தனை கோடி இருக்கிறது எத்தனை பர்செண்டேஜ்” என்று ஆரம்பிக்கின்றார்கள். பணம் வைத்திருப்பவர் யார்? பணம் மாற்றிக் கொடுப்பவர் யார்? என்று எவருக்கும் தெரியாது. ஆனால் கோடிகளில் தான் பேசுகின்றார்கள். பெட்டிக்கடை முதற்கொண்டு மாலில் இருக்கும் காஃபிக் கடை வரைக்கும் இதுதான் நான்கு நாட்களாகப் பேச்சு. என்னிடமும் பல நண்பர்கள் ”என்னப்பா இப்படி மோடி செஞ்சுட்டாரு” என்று வருத்தப்பட்டார்கள்.

மோடி தான் இரண்டு மாதங்கள் டயம் கொடுத்தார் அல்லவா? அப்போதே சூதானமாக சிந்திக்க வேண்டும். அதையெல்லாம் விட்டு விட்டு இப்போது ’செஞ்சுட்டாருன்னா என்ன அர்த்தம்?’ என்றால் பதில் பேச்சு வரவில்லை.

ஒரு சிலர் என்னதான் வழி? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த வழியும் இல்லை என்று அவர்களுக்கு புரியும் படி பாடம் எடுத்த போது வலிக்காத மாதிரி பேசினார்கள்.

வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவர் படா குஷியில் இருந்தார். என்ன விஷயம் என்று கேட்டேன். மஞ்சப்பையில் ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு ஒரு பெண்மணி வீடு வீடாக அலைந்து கொண்டிருக்கின்றாராம். வீட்டுக்காரருக்கு உடம்பு முடியவில்லையாம். ஹாஸ்பிட்டல் செலவுக்குப் பணமில்லையாம். ”வீட்டுக்காரர் என்ன வேலை செய்கிறார்?” என்று கேட்டேன். ”பத்திரப்பதிவாளராக வேலை செய்கிறார்” என்றார். 

”விதி வலியது” என்றுச் சொல்லி சிரி சிரியென்று சிரித்துக் கொண்டிருந்தார். ”நன்றாகத் தூங்கினேன் தங்கம்” என்றார் தொடர்ந்து. ”ஏன் இத்தனை நாளா தூங்கவில்லையா?” என்ற போது ”பக்கத்து வீட்டு அரசு அதிகாரி கோடி கோடியாய் சம்பாதிக்கின்றான், அவனின் நண்பரான நானோ அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறேனே என்று எல்லா கடவுள்களையும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டி முடிக்கையில் விடிந்து விடும் தங்கம் என்றார்” சிரிப்புடன். 

”இப்போது அந்தக் கடவுகளை தினமும் பாராட்டிக் கொண்டிருக்கிறேன். திட்டத்தான் நேரமாகிறது. பாராட்ட ஒரு நிமிடம் கூட ஆவதில்லை” என்றார் நண்பர். சூடாக காஃபியைப் பருகி விட்டு மகிழ்ச்சியுடன் வீட்டுக்குக் கிளம்பினார்.

இன்னொரு நண்பர் வீட்டுக்கு வந்து ”சில்லறை கொடுங்க” என்றார். ”இன்னும் பிரிண்ட் வரவில்லை, வந்ததும் கொடுத்து விடுகிறேன்” என்றேன். கடுப்பில் ”வண்டியில் பெட்ரோல் தீர்ந்துடுச்சுப்பா, நூறாவது கொடேன்” என்றார். அம்மணியிடம் திரும்பினால் எரிமலைகளைக் கண்களில் பார்க்க வாயை மூடிக் கொண்டேன். ”கையில் எவ்வளவு இருக்கு?” என்றேன். ஆயிரமென்றார். ”சரி என்னுடன் வாருங்கள்” என்றுச் சொல்லி இருவரும் நண்பரின் பெட்ரோல் பங்குக்குச் சென்றோம். நண்பரை ”இங்கேயே இரும்” என்று சொல்லி விட்டு, நான் மட்டும் பங்குக்குச் சென்று 200 ரூபாய்க்குப் பெட்ரோல் போட்டேன். ”மீதி நாளை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று சத்தமாகச் சொன்னவர் கையில் 800 ரூபாயைச் சில்லரையாகக் கொடுத்தார். சத்தம் காட்டாமல் வாங்கிக் கொண்டு வந்து விட்டேன். நண்பரிடம் கொடுத்தால் ”மீதிப்பணம் எங்கே?” என்று அதிர்ந்து போய் கேட்டார். ”கமிஷன்” என்றவுடன் “நீங்களுமா?”என்றுக் கேட்டு சோகமானார். விஷயத்தைச் சொல்லி வீட்டுக்கு அழைந்து வந்து மனையாளிடம் 200 ரூபாயை வாங்கிக் கொடுத்தேன். 

”இதே பங்கில் பத்து நிமிடத்துக்கும் முன்பு நான் கேட்டால் இல்லையென்றார்களே?” என்றார். ”என்ன செய்கிறேன் பார்?” என்று கோபமாக கிளம்ப ”அவங்க நாளைக்கு தான் பாக்கி தருகிறேன் என்றார்கள்” என்றேன். ”அப்போ இது?” என்றார். “அதான் இது?” என்றேன். முறைத்து விட்டு கிளம்பினார். வீதியில் போற ஓணானை வேட்டிக்குள் விடுவது என்பது இதுதான். பழமொழியை அனுபவித்த சந்தோசத்தில் நம்ம விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

வங்கியில் பணம் எடுக்க முடியாது. வரிசை கட்டி நிற்க வேண்டும். நம்மிடம் இருக்கும் பணத்தையே நம்மால் எடுக்க முடியவில்லை ஆனால் வீட்டுச் செலவுக்கு குறைந்தது தினமும் 100 ரூபாயாவது வேண்டும். கையிலிருந்த சில்லறை எல்லாம் முடிய வேறு வழி இன்றி குல தெய்வம் பத்ரகாளியம்மன் தான் கை கொடுத்தார். அவ்வப்போது நூறு, ஐம்பதாக போட்டு வைத்தது இன்றைக்கு உதவுகிறது. அதற்காக அவருக்கு வட்டி கொடுத்து விடலாம் என்று முடிவு கட்டிக் கொண்டு கையேந்தி நிற்கையில் என்னை எடுத்துக்கோ என்று கையில் வந்து விழுந்தது அவரின் பணம். 

துன்பம் வரும் போது  கடவுள் தான் கை கொடுப்பார் என்பதை மோடிஜியால் அறிந்து கொண்ட நேரம் இது. 

Thursday, November 10, 2016

இந்தியாவில் மீண்டும் வெடிக்கப்பட்ட அணுகுண்டு

பிஜேபியினர் ஆட்சியிலிருந்த போது தான் பொக்ரானில் அமெரிக்க கழுகின் பார்வைக்குச் சிக்காமல் அணுகுண்டு வெடிப்புச் சோதனை நடத்தினார்கள். நாடு முழுவதும் தங்க நாற்கரச் சாலைகளை போட்டனர். சாலைகள் எல்லாம் பட்டொளி வீசின. அதே போல மீண்டும் இந்தியாவில் பெரும் அணுகுண்டினை வெடித்திருக்கிறது பிஜேபி அரசாங்கம். இதற்கு என ஒரு தைரியம் வேண்டும். மிகச் சரியான அறிவிப்புதான் இது. 

பலரும் பலவிதமான கருத்துக்களைச் சொல்கின்றனர். கருப்புப்பணம் ஒழியாது என்கிறார்கள். அதையெல்லாம் யோசிக்காமலா அரசாங்கத்தினர் இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிடுவார்கள்? ஒருவர் 10 கோடி ரூபாய் வைத்திருந்தால் வெறும் இருபத்தைந்து இலட்சம் செலவில் 10 கோடியை வெள்ளையாக மாற்றி விடலாம் என்று சொல்கின்றார்கள். பத்தாயிரம் ரூபாய் கொண்டு செல்கின்றார்கள் என்றாலே கொலை செய்கிறார்கள். கையிலிருந்து வெளியில் செல்லும் பணம் திரும்பவும் வருமா? அதுவும் கருப்புப் பணம்? என்றால் எவராவது மீண்டும் கொடுப்பார்களா? சாத்தியமே இல்லாதது.

500 பேரைத் திரட்டுவது அவர்கள் கையில் பணத்தைக் கொடுப்பது பின்னர் வாங்குவது எல்லாம் நடக்கும் காரியமா? பெரிய பணக்காரர்கள் வெளி நாட்டுக்கு பணத்தைக் கொண்டு சென்று விட்டார்கள் என்றால் திரும்பவும் இந்தியாவிற்கு அப்பணம் வெள்ளையாகத்தானே கொண்டு வரப்படும்? அவர்களுக்கு வேறு வழியே இல்லை. 

அதுமட்டுமல்ல இனி வங்கியில் வாரம் இரு முறை 10000 ரூபாய் எடுக்கலாம். ஆக மாதம் 80,000 ரூபாய் எடுக்கலாம் என்று அறிவித்திருக்கின்றார்கள். இந்த அறிவிப்பின் காரணமாக அனைத்து பரிவர்த்தனைகளும் கார்டுகள் மூலம் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பணமாக எந்த பரிவர்த்தனையும் நடக்கக்கூடிய சாத்தியங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விட்டால் பெரும்பான்மையான கணக்கில் காட்டப்படாத பணம் வெளியில் வந்து விடும் என்று அரசு நினைக்கிறது. சரியான நினைப்புதான் என்று தோன்றுகிறது.

சமீபத்தில் வொயிட் பிளாக் டிரான்சாக்சனுக்கு டிரஸ்டுகளைப் பயன்படுத்தலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஒரு ஆப்பினை செருகி விட்டார்கள். என்ன காரணத்திற்காக டிரஸ்டிலிருந்து பணம் வெளியில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற கேள்வியுடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இனி டிரஸ்டுகள் ஒழுக்கமாக கணக்குகளைக் காட்டியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக பெரும்பான்மையான டிரஸ்ட் பரிவர்த்தனைகள் பொது வெளியில் வெளியான சம்பவங்களை நாம் கண்டிருக்கின்றோம்.

உடனடியாக கள்ள நோட்டுக்களை பிரிண்ட் செய்வார்கள் என்கிறார்கள். இதையெல்லாம் தடுக்கவே முடியாது. நடக்கத்தான் செய்யும். உடனடியாக எல்லாவற்றையும் மாற்றி விடலாம் என்பதெல்லாம் நடக்காத விஷயம். மெல்ல மெல்ல மக்களை கட்டாயப்படுத்திட வேண்டிய வேலையை அரசாங்கம் செய்கிறது. பாரட்டத்தான் வேண்டும். அரசியல்வாதிகளும், ஊழல் பேர்வழிகளுக்கும் தான் பெரும் பிரச்சினை. இனி அக்கவுண்டில் பணம் கட்டினால் 200000 லட்சத்துக்கும் மேல் 200 சதவீதம் பெனால்டி போடுகின்றார்கள். 

ஒன்று பெனால்டி கட்டி, வரவு வந்தது எப்படி என்று கணக்குக் காட்ட வேண்டும். இல்லையென்றால் பணத்தை எரிக்க வேண்டும் அல்லது புதைக்க வேண்டும். இதைத்தவிர வேறு எதுவும் வழியே இல்லை. தங்கமாக மாற்றி விடலாம் என்றாலும் இனி அதற்கும் வழி இல்லை. தங்கம் ஒரு நாள் பணமாக மாற வேண்டும். அப்போது பிரச்சினை வரும். 

பணம் இருக்கின்றவர் பையன் டாக்டராகின்றான். இனி அதற்கு வழி இல்லாமல் போகும் என்று நம்பலாம். கோடிகளில் கணக்குக் காட்டாமல் வைத்திருப்பவன் தானே காசைக் கொடுத்து எல்லாவற்றையும் விலைக்கு வாங்கினான். இனி என்ன செய்வார்கள்?

இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு எத்தனையோ மக்கள் தங்கள் இன்னுயிரையே இழந்தார்கள். அதைப் போல இன்றைக்கு சாதாரண மக்கள்களுக்கு உண்டாகும் பிரச்சினைகளை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். இந்தச் சாதாரண மக்களின் பணம் தான் அது. யாரோ ஒருவரிடம் கொட்டிக் கிடக்கிறது. இனி அது வெளியில் வந்தே ஆக வேண்டிய கட்டாயம். வந்தே தீர வேண்டும். 

தர்மம் நின்று கொல்லும். கொன்றே விடும். 

Monday, November 7, 2016

குருவியா பனம்பழமா புரியவில்லை

நான்கைந்து நாட்களுக்கு முன்பு திடீரென்று கிர்ரென்று வந்தது. இடது பக்கமாக தள்ளியது. என்னடா இது சோதனை? என்று நினைத்துக் கொண்டு பிரஷர், சுகர் டெஸ்ட் எடுத்தால் எல்லாம் சரியாக இருந்தது. பித்தம் அதிகமாகி இருக்கும் என நினைத்தேன். தீபாவளி பலகாரம் எதையும் சாப்பிடவில்லை. 

எண்ணெய் பலகாரங்களை சுத்தமாக நிறுத்தி விட்டேன். பால், டீ, காஃபி எதுவும் இல்லை. மட்டன், சிக்கன், மீன் இப்படி எந்த உயிரினத்தையும் கொன்று தின்பதையும் நிறுத்தி விட்டேன். முட்டை என்றாலே வாந்தி வருகிறது. 

இரண்டு கோப்பை காய்கறிகள், உப்புக் குறைவான சாப்பாடு, வடித்த சோறு, வேக வைத்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்புகள் என்று சைவ விலங்கு போல உணவினை எடுத்து வருகிறேன். பின் ஏன் இந்த தலை சுற்றல் வந்தது? காரணம் புரியாமல் எரிச்சலும் பதட்டமும் உண்டானது. பித்தம் தான் காரணம் என்று என் நண்பர் சொன்னார். தீபாவளிப் பலகாரங்கள் சாப்பிட்டிருப்பாய். மசாலா அயிட்டங்களை வெளுத்திருப்பாய். ஆகையால் இது பித்தமாகத்தான் இருக்கும் என்று சொல்லி மருத்துவரைப்பார் என்றார். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. நான் என்ன சாப்பிட்டேன் என்று எனக்கல்லவா தெரியும்? 

மருத்துவ நண்பரை அழைத்து பேசினேன். அவர் ஒரு மாதமாக நடந்த விஷயங்களை ஒன்றைக்கூட மறைக்காமல் சொல்ல வேண்டும் என்ற கட்டளையுடன் ஆரம்பித்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நீர் கோர்த்துக் கொண்டு கனகனவென வந்தது. முருங்கைக்கீரை சூப் வைத்துக் குடித்து சரி செய்தேன். ஆனால் சளி உடம்பை விட்டு போகவில்லை. தொண்டையிலும் மூக்கிலுமாக அவ்வப்போது வெளி வந்து கொண்டிருந்தது. 

மருத்துவர் உடனடியாக காரணத்தைப் புரிந்து கொண்டு சளி காதுக்கருகில் இருக்கும் நரம்பினைப் பாதித்திருக்கும். அதனால் இந்த தலைசுற்றல் வந்திருக்கும் என்றும், பித்தமாக இருக்க அடியேன் நண்பர் வீட்டிலிருந்து வந்த நாட்டு முருங்கைக்காயை உண்டதால் இருக்கும் என்றும் சொன்னார். மருந்து கொடுத்தனுப்பினார். 

மூன்று நாட்களாக படாதபாடுபட்டேன். படிக்க முடியவில்லை. எழுத முடியவில்லை. யாரிடமும் சரியாகக் கூட பேச முடியவில்லை. டாக்டர் கொடுத்த மருந்தினை உட்கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. இதோ இன்றைக்கு எந்த தலைசுற்றலும் இன்றி கணிணியில் அமர்ந்து விட்டேன். முழுவதும் குணம் தெரியவில்லை. ஆனால் குணமாகி விடும் என்ற நம்பிக்கை.

அலோபதி மருத்துவரிடம் சென்றால் உணவு மற்றும் இன்ன பிற பழக்க வழக்கங்களை விசாரித்து மருந்து கொடுப்பார். சித்த மருத்துவரிடம் சென்றால் கர்மா, பாவம், புண்ணியங்கள் அதன் வரவுகள் செலவுகள் பற்றியெல்லாம் சொல்லி மருந்து கொடுப்பார். எதைத்தான் நம்புவதோ தெரியவில்லை. ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம். நோயும் அந்தந்த உடம்புக்கு தகுந்தவாறு தான் சரியாகும். ஆனால் எவரும் இதைப் புரிந்து கொள்வதில்லை. இணையத்தில் கொட்டிக் கிடக்கும் வைத்தியங்களைச் செய்ய ஆரம்பித்தால் சின்னாபின்னமாகி விடும். இணையவெளி மருத்துவக் குறிப்புகள் நோயை அடையாளம் காணவும், அதைக் குணப்படுத்தும் வழிகளைத் தெரிந்து கொள்ளவும் தான் உதவும். முழுக் குணமடைய தகுந்த வைத்தியத்தைச் செய்து ஆக வேண்டும்.

நேற்று திடீரென்று தூதுவளைக் கீரை கிடைத்தது. ரசம் வைத்துக் கொடுத்தார் மனையாள். சாதத்தோடு கொஞ்சமும், தனியாக கொஞ்சமுமாகச் சாப்பிட்டேன். இன்றைக்குப் பரவாயில்லை போல இருக்கிறது. மாத்திரையாலா தூதுவளை ரசத்தாலா என்று பெரிய குழப்பமாகி விட்டது. குருவி உட்கார பனம்பழம் விழுந்ததா? இல்லை பனம்பழம் விழும் போது குருவி உட்கார்ந்ததா என்று தான் தெரியவில்லை.

Sunday, November 6, 2016

மாரிமுத்து திரையரங்க நினைவலைகள்

பிறந்து வளர்ந்த ஊர் ஆவணம். ஆனால் என் தகப்பனார் ஊர் நெடுவாசல். உறவினர் பிரச்சினைகளால் அடியேனால் மாமா வீட்டில் தான் பிறந்து வளர முடிந்தது. ஆவணத்தில் முக்கியமான இரண்டு தெருக்கள் இருக்கின்றன. ஒன்று வடக்குத் தெரு, மற்றொன்று தெற்குத் தெரு. இந்த தெருக்கள் பகுதியில் தான் பெரும்பான்மையான தேவர் இன மக்கள் வாழ்கின்றார்கள். மேலத்தெருவில் முஸ்லிம் மக்கள் அதிகம். ஊரின் கிழக்கே வயல்களும் மேற்கே தோட்டங்களும் உள்ளன. ஊரின் மேற்கே கைகாட்டியின் அருகில் உள்ள அரசு முந்திரித் தோப்பு இருந்தது. இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை.

ஊரின் வடக்கே மாரிமுத்து திரையரங்கம் ஒன்று இருந்தது. எனது பள்ளித் தோழன் மாரிமுத்துவின் உறவினர் அவர்கள் தான் உரிமையாளர். தெற்கு வடக்கு நீளமான கொட்டகை. இடது பக்கம் பஜ்ஜிக்கடை. வலது பக்கம் டிக்கெட் கவுண்டர். இடது பக்கமாய் பெண்களுக்கான டிக்கெட் கவுண்டர் இருக்கும். சைக்கிள் ஸ்டாண்டு வெளியில் உள்ள கொட்டகைக்குள் இருக்கும். கைகாட்டியில் ஸ்டார் தியேட்டர் இருந்தது. ஆனால் அதன் சத்தம் சகிக்காது. மாரிமுத்து தியேட்டரில் சவுண்ட் வெகு துல்லியம். கைகாட்டியில் தங்கம் தியேட்டர் என்று நினைக்கிறேன். அது ஒரு நாள் லாரியில் வைக்கோல் ஏற்றிச் சென்ற போது கரண்டுக் கம்பியில் உரசி தீப்பற்றியதும், லாரி டிரைவர் நேராக அந்த தங்கம் தியேட்டருக்குள் கொண்டு போய் நிறுத்தி விட்டு ஓடி விட்டான். தங்கம் தியேட்டர் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. நல்லவேளை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கொஞ்ச நாள் கரியும் கட்டையுமாக தொங்கிக் கொண்டிருந்தது. அதன் பிறகு சிமெண்ட் போட்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் கைகாட்டி ஸ்டார் தியேட்டர்.





( நன்றி படங்கள் உதவி : கடல் பயணங்கள் சுரேஷ்குமார்)

மாரிமுத்து தியேட்டருக்குள் மூன்று இருக்கை பகுதிகள் இருந்தன. திரையின் முன்பு மண் கொட்டியிருக்கும். அடுத்து பெஞ்ச், அதை அடுத்து மரச்சேர்கள் போடப்பட்டிருக்கும். அடியேன் அம்மாவுடன் எம்.ஜி.ஆர் படம் பார்க்க சிறு வயதில் செல்வதுண்டு. சண்டைக்காட்சிகள் என்றால் எதிரில் அமர்ந்திருக்கும் பெண்களின் முதுகில் நானும் எம்.ஜி.ஆராகி குத்துக்கள் விடுவேன் என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள். சிவாஜி படம் பார்க்கப் போவார்கள். அழுக்காட்சி என்றால் எனக்கு அலர்ஜி. இதெல்லாம் அம்மா  சொல்லித்தான் தெரியும். நினைவில் இல்லை. அம்மாவுக்கு எந்த நடிகரின் படம் பிடிக்கும் என்று இதுவரையிலும் கேட்டதில்லை. 

வயலில் வேலை செய்பவர்களும், உழைப்பாளிகளும், சம்சாரிகளும் சற்றே ஆசுவாசப்படும் இடமாக மாரிமுத்து திரையரங்கம் இருந்தது. மண்ணில் துண்டை விரித்து தலையணை போலச் செய்து திரையின் முன்பாகப் படுத்துக் கொண்டே பலரும் திரைப்படத்தைப் பார்ப்பதை பார்த்திருக்கிறேன். நல்ல படமாக இருக்க வேண்டும். குடும்பத்தோடு செல்ல வேண்டும். அப்போதுதான் திரைப்படம் பார்க்க முடியும். தனியாக செல்ல வாய்ப்பே இல்லை. மாரிமுத்து திரையரங்கில் உள்ள டிஃபன் கடையின் முறுக்கு, இட்லி ரொம்பப் பிரபலம். சுவை அள்ளும். இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை அந்த பாக்கியம் கிட்டும். ஒரு திரைப்படம் சுமாராக ஒரு மாதமாவது ஓடும். இரண்டு காட்சிகளுக்கும் ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.

தீபாவளி சமயத்தில் மதியம் போல ஜில்மா படம் போடுவார்கள். ஊரில் இருக்கும் உறவினர்கள் ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாதவாறு ரகசியமாகச் சென்று வருவார்கள். பொங்கல் நாளில் கூட்டம் அள்ளும். தினமும் ஐந்தே முக்கால் மணிக்கு பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். தியேட்டர்காரர்களும் திரையிடப்படும் படங்களின் பாடல்களை ஸ்பீக்கரில் பாட விடுவார்கள். மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தியேட்டர் நோக்கி விரைவார்கள். மாரிமுத்து திரையரங்கை தொட்டு தூண்டிக்காரன் கோவில், சிவன் கோவில், துர்க்கை அம்மன் கோவில், பெரியகுளம் இருக்கும். மழைக்காலங்களில் தவளையின் சத்தமும், குளிரும் வாட்டும். விழா நாட்களில் நான்கு காட்சிகள் நடைபெறும். சுற்றிலும் படுதாவை இழுத்து விட்டுக் கொண்டு படம் பார்ப்பதுண்டு. பள்ளிக்கூடத்தில் ஏதாவது சிறுவர் படங்கள் வந்தால் அழைத்துச் செல்வார்கள். அப்போது தான் மேட்னி ஷோ பார்க்க முடியும்.

எனக்குத் திருமணமான புதிதில் தியேட்டர் வேலை செய்து கொண்டிருந்தது. அதை விலைக்கு வாங்கி நடத்தலாம் என்ற முயற்சி கூட செய்தேன். ஆனால் முடியவில்லை. டிஃபன் கடை வைத்திருந்த ஒரு நபர் செய்த உட்சதியால் அது நடைபெறாமல் போயிற்று. திருமணம் முடிந்த கையோடு தியேட்டரை வாங்கி ஊரிலேயே தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைப்பில் பல்வேறு கட்ட முயற்சிகளைச் செய்தேன். நடக்கவில்லை. ஆளாகி விட்டான் என்றால் சகித்துக் கொள்ளமுடியாது அல்லவா? ஆகவே என்னென்ன சதிகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார்கள் அப்போது. நான் திருமணம் செய்து கொண்டதே என்னை அறிந்தப் பலருக்கு இதயத்தில் ஊசியைச் செருகியது போல இருந்தது என்று என் நண்பன் ஒருவன் அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பான். இப்போது அது கயிறு திரிக்கும் இடமாக மாறி விட்டது. ஊருக்குச் சென்றிருந்த போது அந்த தியேட்டரில் படம் பார்த்த நினைவுகள் மேகமாய் கவிழ்ந்து கொண்டன.

மண்ணைக் குவித்து அதன் மீது சிம்மாசனமாய் உட்கார்ந்து திரைப்படம் பார்ப்பது என்பது அன்றைய காலத்தில் எனக்கு எந்தளவு மகிழ்ச்சியைத் தந்தது என்று சொல்ல முடியவில்லை. அந்தச் சந்தோஷமும், மகிழ்ச்சியும் இன்றைக்கு எந்த தியேட்டரில் படம் பார்த்தாலும் கிடைக்கவில்லை. காலம் மனிதனின் சந்தோஷங்களை கொஞ்சம் கொஞ்சமாக தனக்குள் இழுத்துக் கொண்டு விடுகிறது. 

இனி மாரிமுத்து திரையரங்கத்தை காண முடியாது. அதன் நினைவுகள் மட்டும் என்னுடன் கூடவே பயணிக்கின்றன. இனி அது உங்களுடன் கூட பயணிக்கும் என நினைக்கிறேன். நீங்களும் ஏதோ ஒரு திரையரங்கத்தில் என்னைப் போலவே படம் பார்த்திருப்பீர்கள். அந்த நினைவுகளை விட சுகமானது இனி நமக்கு வாய்க்கப்போவதில்லை.

குறிப்பு: டெண்ட் கொட்டகை சினிமா பற்றி கடல்பயணங்களில் சுரேஷ் குமார் எழுதி இருக்கிறார். அவரின் பதிவில் இருந்து சில படங்களை இங்கு லிங்க் கொடுத்திருக்கிறேன். அவரின் பதிவைப் படித்துப் பாருங்கள். நிச்சயம் நீங்கள் சிறுபிள்ளையாகவே மாறி விடுவீர்கள்.


Saturday, November 5, 2016

வழக்குமன்றங்கள் வழக்குகள் விவாதங்கள் உண்மை என்ன?

சாமானியனுக்கு கோர்ட்டுகள் தான் தர்மம் இருக்கும் இடம். ஒருவர் கூடவா நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்? என்று மக்கள் பேசிக் கொள்வார்கள். அந்தளவுக்கு கோர்ட்டுகளின் மீது நம்பிக்கை கொண்டுள்ள சாமானிய மக்களின் எண்ணம் நிறைவேறுகிறதா என்ற முடிவுக்கு வர முடியவில்லை. காரணம் அரசியல். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பதவிக்கு வரும் அரசியல் நீதி மன்றங்களைப் பந்தாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு நீதிபதி பிரதமர் முன்பே அழுதார். அதையும் நாம் தினசரிகளில் படித்தோம். ஆனால் என்ன நடந்தது? ஒன்றுமில்லை.

இந்தியாவில் கோர்ட்டுகளை நிர்வகிக்க தனி அமைப்பினை உருவாக்கினால் தான் நீதி நிலை நாட்டப்படும். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை கோர்ட்டுகள் ஒரு வரையறைக்குள் அழுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். நீதிபதிகள் முதலமைச்சரைச் சந்தித்தே ஆக வேண்டிய சூழல் உண்டாகத்தான் செய்யும். அது நீதி பரிபாலனத்துக்கு சரியாக வராது. தேர்தல் கமிஷன் போல தனி அமைப்பு நீதிமன்றங்களை நிர்வகிக்கவும், நீதிபதிகளை நியமிக்கவும், சம்பளம் கொடுக்கவும், செலவுகளைக் கவனிக்கவும், சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும் தேவை. அவ்வாறு அமைத்திடாவிடில் நீதிமன்றங்களின் குரல்வளை நெறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். அதிலும் முக்கியமாக தீர்ப்புகள் திருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகள் தொடர்கதையாக நடந்து கொண்டே இருக்கும். கீழ்கோர்ட்டில் தண்டனை மேல் கோர்ட்டில் விடுதலை என்றால் நீதிமன்றங்களின் மீது உள்ள நம்பிக்கை சிதைந்து போகும் அல்லவா? இதற்கொரு விடிவுகாலம் கிடைக்கக் கூடிய எல்லா சாத்தியங்களையும் அரசியல் அழித்துக் கொண்டே வருகிறது.

புதிய சிந்தனை கொண்ட தலைவர்களை தமிழகத்தில் இன்றைக்கு காண்பது அரிதாகி விட்டது. தமிழகத்தினைப் பொறுத்தவரை தமிழ் சமூக மேம்பாட்டுச் சிந்தனையும், செயலூக்கமும் கொண்டவர்களையும் புதிய சிந்தனாவாதிகளையும் பார்க்க முடிவதில்லை.

ஒவ்வொருவரும் இருக்கும் கட்சிகளுக்கு ஜால்ரா வீசுபவர்களாகவே இருக்கின்றார்கள். ஏதோ ஒரு கட்சியில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். தனி ஆவர்த்தனம் செய்ய முயன்றால் ஆக்டோபஸ் போல கட்சிகள் அவர்களை அழித்து விடுகின்றன. எவரையும் புத்தம் புதிய சிந்தனைகளோடு வெளி வர விடுவதில்லை.

பசி இருந்தால் தான் புதிய சிந்தனைகளும், ஆக்கங்களும், புதிய சிந்தனாவாதிகளும் வெளி வருவர். ஆனால் இங்கு எல்லாமே இலவசமானதாய் பசி கொஞ்சமேனும் ஆற்றப்படுகிறது. சோம்பேறிகள் நிறைந்து விட்டனர். அது ஒரு பக்கம் இருக்கட்டும். 

ஒரு வழக்குப் பற்றி சுவாரசியமான கதை ஒன்றினை ஓஷோவின் புத்தகத்தில் படித்தேன். படித்துப் பாருங்கள். செம ரகளையாக இருக்கும்.


இனி ஓஷோவின் பத்தி,

சட்டத்தொழில் உலகிலிருந்து மறைகிற போது 90 சதவீதம் சூழ்ச்சிகளும் அதனோடு சேர்ந்து மறைந்து விடும். சட்டம் தெரிந்தவர்களே அதிகமதிக குழப்பத்தை உண்டாக்குபவர்கள்.

என் துணை வேந்தர்களில் ஒருவர் மாபெரும் சட்ட வல்லுனர். உலகப் புகழ் பெற்ற சட்ட வல்லுனர். அவர் மீண்டும் மீண்டும் பின்வரும் சம்பவத்தைக் கூறுவது வழக்கம். ஒரு தடவை ஒரு இந்திய மகாராஜாவுக்காக தனி நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் வாதாடிக் கொண்டிருந்தார். அவர் ஒரு பெரிய குடிகாரர். முந்தின நாள் இரவு அவர் நிறையக் குடித்திருந்தார். அதன் மப்பு இன்னும் இருந்தது. எனவே அவர் தான் மகாராஜாவுக்கு சார்பாக வாதாடுகிறோமா எதிராக வாதாடுகிறோமா என்பதையே மறந்து விட்டார். எனவே ஒரு மணி நேரமாக மகாராஜாவுக்கு எதிராக அவர் பேசினார். மகாராஜாவுக்கு வேர்த்துக் கொட்டியது. அவரது உதவியாளர்கள் நடுங்கினார்கள். ”என்ன செய்து கொண்டிருக்கிறார் இவர்?”. தேநீர் இடைவேளை வந்தது. அவர்கள் அவரிடம் சொன்னார்கள், “என்ன காரியம் செய்து விட்டீர்கள்? நம் கட்சிக்காரரை ஒழித்துக் கட்டி விட்டீர்கள், இனி அவரை காப்பாற்ற வழியே இல்லை”

“என்ன நடந்து விட்டது?” என்றார் அவர்.

“நம் சொந்தக் கட்சிக்காரருக்கே எதிராக இவ்வளவு நேரமும் பேசிக் கொண்டிருந்தீர்கள்!”

“கவலையை விடுங்கள், இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது” என்றார்.

மறுபடியும் வழக்குமன்றம் தொடங்கியது. அவர் சொன்னார்,”கணம் கோர்ட்டார் அவர்களே, ஒரு மணி நேரமாக நான் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்ததற்கு நன்றி. ஏனென்றால் எதிர்கட்சியார் முன் வைக்க சாத்தியமான எல்லா வாதங்களையும் நான் தான் தந்து கொண்டிருந்தேன். இனி நான் என் கட்சிக்காரரின் தரப்பைச் சொல்வேன்”

பின் தன் வாதங்களையே அவர் மறுத்து அந்த வழக்கில் வென்றார்.

விஷயம் விளங்கி விட்டதா? வழக்காடு மன்றங்களில் வக்கீல்களாக இருந்தவர்களே நீதிபதிகளாக பதவியேற்கின்றார்கள் என்கிற போது மனதுக்குள் சிறிய அவநம்பிக்கை ஏற்பட்டு விடுவதை நாமெல்லாம் உணர்கிறோம். ஆனால் இருந்தும் என்ன பயன்? நம் சட்டம் அப்படி இருக்கிறது.

இந்திய மக்களின் மீது பற்றுக் கொண்ட, பதவிக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப்படாத எவனொருவன் தலைவனாக வருகின்றானோ அந்த நாளில் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் பல்வேறு அதிகார சட்டங்களை நீக்கி மக்களுக்கு நன்மை புரியும் சட்டங்கள் உருவாக்கப்படும் என்று நம்புவோம். இந்தியத்தாய் தன் குடும்பத்தினை நிர்வகிக்க தக்கப் புதல்வனை உருவாக்குவார் என்று நம்புகிறேன்.

நீதித்துறை பரிபாலன முறை மாற்றப்பட்டால் நாட்டில் ஊழலும் இருக்காது. அதிகார அத்துமீறலும் இருக்காது. அவரவர் அவரவர் வேலையைப் பார்ப்பார்கள். 

Friday, November 4, 2016

யாருக்கும் தகுதியில்லை

தம் காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் பாகவதர். வழியில் ஒரு சிற்றூர். அதைக் கடந்து வரும்போது ரயில்வே கேட் ஒன்று குறுக்கிடவே பாகவதரின் கார் நின்றது.

யாரோ ஒரு கட்டை வண்டிக்காரன்; அருகிலிருந்த காட்டிலிருந்து விறகு வெட்டி எடுத்துக் கொண்டு அந்த வழியே வந்து கொண்டிருந்தான்.

“ஆஹா, என்ன பேரானந்தம்!”

பாகவதரின் பாட்டுத்தான். ஆனால் பாடியவர் பாகவதர் அல்ல; கட்டை வண்டிக்காரன்.

காருக்கு வெளியே தலையை நீட்டி அவனைப் பார்த்தார் பாகவதர். அவ்வளவுதான்.; “சாமி, நீங்களா?” என்று வாயெல்லாம் பல்லாகச் சொல்லிக் கொண்டே அவன் வண்டியை நிறுத்தி விட்டுக் கீழே இறங்கினான்.”எத்தனையோ நாளா என் சாமியைப் பார்க்கணும்னு நான் நெனச்சிக்கிட்டு இருந்தேன்? - இன்னிக்குப் பார்த்துட்டேன் சாமி, என் கண் குளிரப் பார்த்துட்டேன் - இருங்க - சாமி! இன்னிக்கு என் கையாலே ஒரு சோடாவாச்சும் வாங்கிக் சாப்பிடாமே நீங்க இங்கேயிருந்து போகக்கூடாது - ஆமாம்!” என்று படுகறாராகச் சொல்லிக் கொண்டே அவன் அங்குமிங்கும் ஓடினான். எங்கிருந்தோ ஒரு கோலிச் சோடாவை வாங்கிக் கொண்டு அவசரம் அவசரமாக வந்து அவரிடம் நீட்டினான்.

“அவரு இந்தச் சோடாவையெல்லாம் குடிக்கமாட்டாரு ஐயா!” என்றார் டிரைவர்.

“இங்கே சோடாவா பெரிது, அதைக் கொடுக்கும் அன்புக் கையல்லவா பெரிது!” என்று சொல்லிக் கொண்டே பாகவதர் காரை விட்டுக் கீழே இறங்கி, வண்டிக்காரன் கொடுத்த சோடாவை இரு கைகளாலும் வாங்கி, ‘மடக், மடக்’ கென்று குடித்தார்.

பரம திருப்தி வண்டிக்காரனுக்கு; ‘ஆஹா, என்ன பேரானந்தம்!” என்று அவன் மறுபடியும் பாடவே ஆரம்பித்து விட்டான்.

அதற்குள் ‘கூகுக்’ என்று கூவிக் கொண்டு ரயில் வந்து விடவே, டிரைவர் காரைக் கிளப்ப முயன்றார். என்ன ஆச்சரியம்! பாகவதரைத் தம் பெட்டியிலிருந்தபடி எப்படியோ பார்த்து விட்ட ‘கார்டு’ சிவப்புக்கொடி காட்டி ரயிலை நிறுத்தி விட்டு, “ஆஹா. என்ன பேரானந்தம்!” என்றார்.

அதைக் கேட்ட பாகவதரின் கண்களில் உணர்ச்சிப் பெருக்கால் நீரே துளிர்த்து விட்டது. ”நீங்களெல்லாம் என்னிடம் இத்தனை அன்புகாட்ட உங்களுக்கு நான் என்ன செய்து விட்டேன்? என்ன செய்யப்போகிறேன்?” என்று கரம் குவித்தார்.

”ஒன்றும் செய்ய வேண்டாம், நீங்கள் ஆனந்தமாகப் பாடிக்கொண்டே இருங்கள்; நாங்கள் ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்!” என்ற ’கார்டு’ பச்சைக்கொடி காட்டி ரயிலை அங்கிருந்து நகர்த்தினார்.

விந்தன் எழுதிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை புத்தகத்திலிருந்து ஒரு சிறு துளி மேலே உள்ளது. இப்படியான ஒரு அன்பினை பெற்ற இறவா நடிகர் அல்லவா எம்.கே.டி அவர்கள்?


அசோக்குமார் படத்தில் எம்.கே.டி பாகவதரால் பாடப்பட்ட அருமையான பாடல் இது. இதில் இரண்டு வரியைத் தொடர்ந்தாற் போல இன்றைக்கு சினிமாவில் பாடுபவர்களால் பாடமுடியுமா? இந்தக் குரல் நம் மனதுக்குள் புகுந்து வரும் போது உண்டாகும் உணர்ச்சியினை வார்த்தைகளால் எழுதி விட முடியுமா? அமைதியாக அமர்ந்து இப்பாடலைக் கேளுங்கள். அது உங்களுக்குள் நிகழ்த்தும் வர்ண ஜாலங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

உலகில் நல்லவனாய் வாழ்வதை விட வேறு என்ன சந்தோஷம் மனிதனுக்கு இருக்கப்போகின்றது?

இதோ பாடல் வரிகள்:

பூமியில் மானிட ஜென்மம டைந்துமோர்
புண்ணியம் இன்றிவி லங்குகள்போல்
காமமும் கோபமும் உள்ளநி ரம்பவீண்
காலமும் செல்லம டிந்திடப்போம்

உத்தம மானிட ராய்பெரும் புண்ணிய
நல்வினை யால்உல கில்பிறந்தோம்
சத்திய ஞானத யாநிதி யாகிய
புத்தரைப் போற்றுதல் நம்கடனே

உண்மையும் ஆருயிர் அன்பும கிம்சையும்
இல்லையெ னில்நர ஜென்மமிதே
மண்மீதி லோர்சுமை யேபொதி தாங்கிய
பாழ்மர மேவெறும் பாமரமே

பாடல் ஆசிரியர்: பாபநாசம் சிவன்
பாடகர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
திரைப்படம்: அசோக்குமார்


நவம்பர் ஒன்றாம் தேதி மக்களால் நேசிக்கப்பட்ட தியாகராஜ பாகவதரின் நினைவு நாள்.

தமிழகத்தில் நடிகர்களுக்கு என்று ஒரு சங்கம் இருக்கிறது. குழாயடிச் சண்டை கூட நடந்தது. அதையும் டிவிக்காரர்கள் பரபரப்பாக்கினார்கள். அந்தக் கூத்தையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். கூத்து முடிந்து நடிகர்கள் தலைமைப் பொறுப்புக்கும் வந்து விட்டார்கள். ஆனால் வந்ததும் பிரச்சினை ஆரம்பித்து விட்டது.

பழைய நடிகர்களைக் கவுரவிக்கிறோம் என்றெல்லாம் அட்ராசிட்டி செய்தவர்கள் தியாகராஜ பாகவதருக்கு நினைவு அஞ்சலியைக் கூட நடத்தவில்லை. தமிழக மக்களின் மனத்தில் தங்க நாற்காலியில் அமர்ந்து தமிழ் சினிமா உலகையே அசைத்து விட்டுச் சென்ற மாபெரும் கலைஞனுக்கு மரியாதை செலுத்தக் கூட மறந்து விட்டார்கள்.

ஆனால் பாகவதருக்கு அவரின் ரசிகர் செலுத்திய உண்மையான அஞ்சலியை விடவா இவர்கள் செய்து விடப்போகின்றார்கள்? 72 வயதான் பழைய புத்தகக்கடை வைத்து நடத்தி வரும் ஸ்ரீரங்கம் நடராஜன் அவர்கள் தன் ஆதர்ச நாயகனுக்கு திருச்சியில் அமைந்துள்ள சமாதியின் அருகில் அமர்ந்து, தியாகராஜ பாகவதர்  பாடிய பாடல்களைப் பாடியபடியே அஞ்சலி செலுத்தினார் என்று தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. பாகவதரின் உறவினர்கள் நினைவு நாள் கொண்டாடுவது வேறு. ஆனால் ஒரு ரசிகன் தன்னால் ரசிக்கப்பட்ட நாயகனின் நினைவினால் சமாதியின் அருகில் நின்று பாடலைப் பாடியபடி அஞ்சலி செலுத்துவது என்பது சாமானியமானதா?

எத்தனையோ ஹீரோக்கள் வந்து சென்றார்களே இப்படி ஒரு அஞ்சலி நிகழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோமா? இல்லையே ஏனென்றால் வெகு கவனமாக தன் தந்தையர்களால் தயாரிக்கப்பட்ட ஹீரோக்களும், உறவுகளால் பீடிக்கப்பட்டு மூடப்பட்டு கிடக்கும் தமிழ் சினிமா உலகில் இருப்போர் பாகவதருக்கு அஞ்சலி செலுத்தக்கூட தகுதியில்லாமல் போனார்கள் என்பது தான் நெஞ்சில் அறையும் உண்மை.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் எம் தமிழ் மூதாதையர்கள் வாழ்ந்த நாட்களில் வாழ்ந்து அவர்களின் மனதில் இன்றைக்கும் இறவாது வாழ்ந்து வரும் எம்.கே.டி அவர்களுக்கு ஏதோ என்னாலியன்ற ஒரு சிறிய அஞ்சலி.

Wednesday, November 2, 2016

வார்த்தைகளின் வீரியம்

வெளி நாட்டில் படித்த தன் மகன் திரும்ப வந்ததும் தன் மருத்துவமனையை அவனிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வெடுக்க வேண்டுமென்று நினைத்தார் மருத்துவர். மகன் வந்ததும் அவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு வீட்டில் அமைதியாக இருந்தார் மருத்துவர். ஒரு சில நாட்கள் கழிந்தன. 

மகன் தன் தந்தையிடம் வந்து, ‘அப்பா, நீங்கள் எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து  கடந்த வாரம் வரை ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து வைத்தியம் பார்த்து வந்தீர்கள் அல்லவா? அந்தப் பெண்ணின் நோயை நான் மூன்றே நாட்களில் சரி செய்து விட்டேன்’ என்றான். அப்பாவை விட தனக்குத் திறமை அதிகம் என்ற பெருமையில் அவன் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.

மருத்துவர் அவனை நோக்கி நகைத்தார்.

‘மகனே, அந்தப் பெண்ணின் நோயை நான் ஒரே நாளில் சரி செய்து இருப்பேன். ஆனால் செய்யவில்லை. நீ வெளி நாட்டில் படித்தது, இந்த எனது வீடு, கார், நாம் வாழும் வாழ்க்கை எல்லாம் அந்தப் பெண்ணின் பணம்’ என்றார்.

மகனுக்கு விஷயம் விளங்கியது.

‘அப்பா, அந்தப் பெண்ணை வரச் சொல்லி ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டும், ரிப்போர்ட்டில் ஒரு பிரச்சினை என்றுச் சொல்லி விடுகிறேன். இரண்டு நாட்கள் கழித்து வரச் சொன்னால் அந்தப் பயத்திலேயே அந்தப் பெண்மணி நடுங்கி விடுவாள்’ என்றான்.

மருத்துவர் தன் மகனை அருகில் அழைத்துச் சொன்னார், ’மருத்துவ தர்மத்தைப் புரிந்து கொண்டாய்’ என்று.

உலக மெடிக்கல் கவுன்சிலுக்கு இந்திய மெடிக்கல் கவுன்சிலில் ஊழல் செய்ததாய் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கும் கேத்தன் சேதாய் தலைவராக்கப்பட்டிருப்பதை நினைத்த போது எங்கோ படித்த கதை நினைவுக்கு வந்து விட்டது.

மருத்துவர் அந்தப் பெண்மணியின் வசதியைப் பயன்படுத்திக் கொண்டார். அதனால் அவர் தன்னை வளப்படுத்திக் கொண்டார். அவர் மகனோ அவருக்கும் ஒரு படி மேல். நோயாளியிடம் மருத்துவர் சொல்வது ஒவ்வொன்றும் சத்தியமாக நம்பப்படும். யாரிடம் எந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும் என்று விவரம் தெரிந்த மருத்துவர்கள் சொல்வார்கள்.

நன்றாக இருக்கும் ஒருவரைப் பார்த்து, ’என்ன ஆள் இப்படி ஆகி விட்டீரே, சுகரா? பிரஷர் இருக்குமோ? என்று சும்மா கேட்டு வையுங்கள்’. அவனுக்குத் தூக்கம் வருமா? நிம்மதியாகத்தான் இருப்பானா? 

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் நம்ப வேண்டும்.