குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, November 5, 2016

வழக்குமன்றங்கள் வழக்குகள் விவாதங்கள் உண்மை என்ன?

சாமானியனுக்கு கோர்ட்டுகள் தான் தர்மம் இருக்கும் இடம். ஒருவர் கூடவா நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்? என்று மக்கள் பேசிக் கொள்வார்கள். அந்தளவுக்கு கோர்ட்டுகளின் மீது நம்பிக்கை கொண்டுள்ள சாமானிய மக்களின் எண்ணம் நிறைவேறுகிறதா என்ற முடிவுக்கு வர முடியவில்லை. காரணம் அரசியல். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பதவிக்கு வரும் அரசியல் நீதி மன்றங்களைப் பந்தாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு நீதிபதி பிரதமர் முன்பே அழுதார். அதையும் நாம் தினசரிகளில் படித்தோம். ஆனால் என்ன நடந்தது? ஒன்றுமில்லை.

இந்தியாவில் கோர்ட்டுகளை நிர்வகிக்க தனி அமைப்பினை உருவாக்கினால் தான் நீதி நிலை நாட்டப்படும். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை கோர்ட்டுகள் ஒரு வரையறைக்குள் அழுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். நீதிபதிகள் முதலமைச்சரைச் சந்தித்தே ஆக வேண்டிய சூழல் உண்டாகத்தான் செய்யும். அது நீதி பரிபாலனத்துக்கு சரியாக வராது. தேர்தல் கமிஷன் போல தனி அமைப்பு நீதிமன்றங்களை நிர்வகிக்கவும், நீதிபதிகளை நியமிக்கவும், சம்பளம் கொடுக்கவும், செலவுகளைக் கவனிக்கவும், சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும் தேவை. அவ்வாறு அமைத்திடாவிடில் நீதிமன்றங்களின் குரல்வளை நெறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். அதிலும் முக்கியமாக தீர்ப்புகள் திருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகள் தொடர்கதையாக நடந்து கொண்டே இருக்கும். கீழ்கோர்ட்டில் தண்டனை மேல் கோர்ட்டில் விடுதலை என்றால் நீதிமன்றங்களின் மீது உள்ள நம்பிக்கை சிதைந்து போகும் அல்லவா? இதற்கொரு விடிவுகாலம் கிடைக்கக் கூடிய எல்லா சாத்தியங்களையும் அரசியல் அழித்துக் கொண்டே வருகிறது.

புதிய சிந்தனை கொண்ட தலைவர்களை தமிழகத்தில் இன்றைக்கு காண்பது அரிதாகி விட்டது. தமிழகத்தினைப் பொறுத்தவரை தமிழ் சமூக மேம்பாட்டுச் சிந்தனையும், செயலூக்கமும் கொண்டவர்களையும் புதிய சிந்தனாவாதிகளையும் பார்க்க முடிவதில்லை.

ஒவ்வொருவரும் இருக்கும் கட்சிகளுக்கு ஜால்ரா வீசுபவர்களாகவே இருக்கின்றார்கள். ஏதோ ஒரு கட்சியில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். தனி ஆவர்த்தனம் செய்ய முயன்றால் ஆக்டோபஸ் போல கட்சிகள் அவர்களை அழித்து விடுகின்றன. எவரையும் புத்தம் புதிய சிந்தனைகளோடு வெளி வர விடுவதில்லை.

பசி இருந்தால் தான் புதிய சிந்தனைகளும், ஆக்கங்களும், புதிய சிந்தனாவாதிகளும் வெளி வருவர். ஆனால் இங்கு எல்லாமே இலவசமானதாய் பசி கொஞ்சமேனும் ஆற்றப்படுகிறது. சோம்பேறிகள் நிறைந்து விட்டனர். அது ஒரு பக்கம் இருக்கட்டும். 

ஒரு வழக்குப் பற்றி சுவாரசியமான கதை ஒன்றினை ஓஷோவின் புத்தகத்தில் படித்தேன். படித்துப் பாருங்கள். செம ரகளையாக இருக்கும்.


இனி ஓஷோவின் பத்தி,

சட்டத்தொழில் உலகிலிருந்து மறைகிற போது 90 சதவீதம் சூழ்ச்சிகளும் அதனோடு சேர்ந்து மறைந்து விடும். சட்டம் தெரிந்தவர்களே அதிகமதிக குழப்பத்தை உண்டாக்குபவர்கள்.

என் துணை வேந்தர்களில் ஒருவர் மாபெரும் சட்ட வல்லுனர். உலகப் புகழ் பெற்ற சட்ட வல்லுனர். அவர் மீண்டும் மீண்டும் பின்வரும் சம்பவத்தைக் கூறுவது வழக்கம். ஒரு தடவை ஒரு இந்திய மகாராஜாவுக்காக தனி நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் வாதாடிக் கொண்டிருந்தார். அவர் ஒரு பெரிய குடிகாரர். முந்தின நாள் இரவு அவர் நிறையக் குடித்திருந்தார். அதன் மப்பு இன்னும் இருந்தது. எனவே அவர் தான் மகாராஜாவுக்கு சார்பாக வாதாடுகிறோமா எதிராக வாதாடுகிறோமா என்பதையே மறந்து விட்டார். எனவே ஒரு மணி நேரமாக மகாராஜாவுக்கு எதிராக அவர் பேசினார். மகாராஜாவுக்கு வேர்த்துக் கொட்டியது. அவரது உதவியாளர்கள் நடுங்கினார்கள். ”என்ன செய்து கொண்டிருக்கிறார் இவர்?”. தேநீர் இடைவேளை வந்தது. அவர்கள் அவரிடம் சொன்னார்கள், “என்ன காரியம் செய்து விட்டீர்கள்? நம் கட்சிக்காரரை ஒழித்துக் கட்டி விட்டீர்கள், இனி அவரை காப்பாற்ற வழியே இல்லை”

“என்ன நடந்து விட்டது?” என்றார் அவர்.

“நம் சொந்தக் கட்சிக்காரருக்கே எதிராக இவ்வளவு நேரமும் பேசிக் கொண்டிருந்தீர்கள்!”

“கவலையை விடுங்கள், இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது” என்றார்.

மறுபடியும் வழக்குமன்றம் தொடங்கியது. அவர் சொன்னார்,”கணம் கோர்ட்டார் அவர்களே, ஒரு மணி நேரமாக நான் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்ததற்கு நன்றி. ஏனென்றால் எதிர்கட்சியார் முன் வைக்க சாத்தியமான எல்லா வாதங்களையும் நான் தான் தந்து கொண்டிருந்தேன். இனி நான் என் கட்சிக்காரரின் தரப்பைச் சொல்வேன்”

பின் தன் வாதங்களையே அவர் மறுத்து அந்த வழக்கில் வென்றார்.

விஷயம் விளங்கி விட்டதா? வழக்காடு மன்றங்களில் வக்கீல்களாக இருந்தவர்களே நீதிபதிகளாக பதவியேற்கின்றார்கள் என்கிற போது மனதுக்குள் சிறிய அவநம்பிக்கை ஏற்பட்டு விடுவதை நாமெல்லாம் உணர்கிறோம். ஆனால் இருந்தும் என்ன பயன்? நம் சட்டம் அப்படி இருக்கிறது.

இந்திய மக்களின் மீது பற்றுக் கொண்ட, பதவிக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப்படாத எவனொருவன் தலைவனாக வருகின்றானோ அந்த நாளில் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் பல்வேறு அதிகார சட்டங்களை நீக்கி மக்களுக்கு நன்மை புரியும் சட்டங்கள் உருவாக்கப்படும் என்று நம்புவோம். இந்தியத்தாய் தன் குடும்பத்தினை நிர்வகிக்க தக்கப் புதல்வனை உருவாக்குவார் என்று நம்புகிறேன்.

நீதித்துறை பரிபாலன முறை மாற்றப்பட்டால் நாட்டில் ஊழலும் இருக்காது. அதிகார அத்துமீறலும் இருக்காது. அவரவர் அவரவர் வேலையைப் பார்ப்பார்கள். 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.