குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, February 25, 2014

தன்னாலே மனதுக்குள் எழும் கேள்வி

மன்னர் ஒருவர் ஓவியப் போட்டி ஒன்றினை வைத்தார். இரண்டு ஓவியர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

ஆளுக்கொரு சுவர் எதிரெதிரே கொடுக்கப்பட்டது. சுவருக்கிடையில் திரைச்சீலை தொங்க விடப்பட்டது.

முதல் ஓவியர் சுவற்றில் அற்புதமான ஓவியத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார்.

இரண்டாவது ஓவியர் சுவற்றினை பட்டை தீட்டி பாலிஷ் செய்து கொண்டிருந்தார்.

போட்டிக்கான கடைசி நாளும் வந்து விட மன்னர் வந்தார். திரைச்சீலை விலக்கப்பட்டது.

முதல் ஓவியரின் ஓவியம் கண்ணைப் பறித்தது.

இரண்டாவது ஓவியர் பாலிஷ் செய்த சுவற்றில் முதல் ஓவியரின் ஓவியம் பிரதிபலித்தது.

இரண்டாவது ஓவியருக்கே பரிசைக் கொடுத்தார் மன்னர்.

- எங்கோ படித்தது. எழுதியவருக்கு நன்றி



ஆண்கள் அவசியம் படிக்க வேண்டியது

எது நல்லது? இதுவா?

ஜெர்மனியில் இருந்து ஒரு தமிழ் பெண் அழைத்தார். எனக்குத்தான் வசியம் பற்றி நிறைய அழைப்புகள் வரும் என்று முன்பே சொல்லியிருந்தேன் அல்லவா? அதே பிரச்சினைதான் இப்போதும்.

அவர் துயரத்தை என்னவென்று கேட்போம் என்று தொடர்ந்து பேசினேன்.

திருமணம் ஆன நாள்  முதலாய் அவரின் கணவர் எப்போதும் அவர் குடும்பத்தாரோடுதான் பேசிக் கொண்டிருப்பாராம். இவர் தனியாளாய் அறைக்குள் அடைந்து கிடப்பாராம். இரவு வந்தால் அறைக்கு வந்து குடும்பம் நடத்துவாராம்(???). அவரின் அம்மா, அப்பா, தங்கைகளுக்குத்தான் முதல் மரியாதை. இப்பெண்ணிடம் ஏதும் அதிகமாய் பேசிக் கொள்வதில்லையாம். இப்படியே காலங்கள் கழிந்த நாட்களில் இருவருக்கும் இரண்டு பசங்கள் பிறந்து விட்டார்கள்.

திடீரென்று சில நாட்களாகவே அவர் கெட்ட சகவாசப் பெண்களுடன் ஊர் சுற்றுகின்றாராம். வீட்டுக்கும் வருவதில்லை. அம்மா வீடே கதியென்று கிடக்கின்றாராம். அப்பெண் பெரும் துயரத்தோடு என்னிடம் கதைத்துக் கொண்டிருந்தார். வேதனையாக இருந்தது.

பிரச்சினை ஆணிடம் உள்ளது. 

இந்த ஆண்களுக்கு ஒரு விஷயம் புரிபடவே இல்லை.

அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பிகளுக்கு மரியாதையும், அவர்களுக்குச் செய்ய வேண்டியதையும் செய்துதான் தீர வேண்டும். அது கடமை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் இன்னொரு வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண் புகுந்த வீட்டுக்கு வரும் போது அவளின் ஒரே நம்பிக்கை, ஆதாரம் எல்லாம் கணவன் தான். ஆடித் திரிந்த அவள் இனிமேல் வேறொருவருக்குச் சொந்தம் என்று வரும் போது அவளுக்குள் ஏற்படும் சில உள்மனப் போராட்டங்களை ஆண்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. தன் வீட்டாருடன் அவள் திடீரென்று சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் நடந்து கொள்வது போல, புகுந்த வீட்டாரிடம் ஒட்டிக் கொண்டு அனைவரிடம் நல்ல பேர் எடுக்க வேண்டுமென நினைக்கும் மனோபாவத்தில் தான் பெரும்பாலான ஆண்கள் இருக்கின்றார்கள்.

சினிமா ஒவ்வொரு காட்சியாக எடுக்கப்பட்டு பின்னர் கோர்க்கப்படுவது.

அதுவும் வாழ்க்கையும் ஒன்றில்லை என்பதை ஆண்களின் மனது புரிந்து கொள்ள மறுக்கிறது. அதே போல சில பெண்களும் இருக்கின்றார்கள்.

தன் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் புரிந்து கொண்டு அவள் தனக்கொரு குடும்பத்தை நிர்மாணிக்க தயாராக வேண்டும். அதற்குரிய மனப்பக்குவம் சிலருக்குத்தான் இருக்கும். இப்போதையப் பெண்களுக்கு அது கிடையாது. ஒரு சிலர் விதி விலக்காக இருக்கலாம்.

ஆணும் பெண்ணும் இணைந்து ஒரு குடும்பம் என்கிற ஆலமரத்தினை உருவாக்குவதுதான் இறைவனின் படைப்பியல் நோக்கம். இதற்கொரு முழு உதாரணமாய் சொல்ல வேண்டுமெனில்  எழுத்துச் சித்தர், தமிழர்களின் தலைவர் திரு. கலைஞரைத்தான் சொல்ல வேண்டும். அவர் ஒரு மிகச் சிறந்த குடும்பத்தலைவர். அவர் ஒருவரால் எத்தனை வாரிசுகள் இருக்கின்றார்கள் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இதைத்தான் வாழ்க்கை என்பது.
ஒரு ஆணுக்கு அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை, அக்கா செய்ய முடியாததை அவனின் மனைவி செய்வாள். திருமணம் ஆன ஆணுக்கு மிகவும் முக்கியமானவர் அவனின் மனைவி. 

அவள் சரியில்லை என்றால் நிதர்சனம் என்னவென்றுச் சொல்லிக்கொடுக்க வேண்டும். அவளை நிதர்சன வாழ்க்கைக்குத் தயார் செய்தல் வேண்டும். அவளை தன் வாரிசுகளை உருவாக்கி அதை நல்வழியில் சீர்படுத்திச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லிக்கொடுத்து அவளை முழுமையாகத் தயார் செய்தல் வேண்டும்.

என் அம்மா சொல்வதைத்தான் கேட்பேன். என் உடன்பிறந்தார் தான் முக்கியம் என்றால் நீ சும்மா இருக்க வேண்டும். வேறொரு வீட்டுப் பெண்ணைக் கொண்டு வந்து லூசுத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது.

இப்போதெல்லாம் குழந்தை பெறுவதை தள்ளிப் போடுவது ஒரு பேஷனாக வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பப்புக்குச் செல்வது, குடிப்பது, கூத்தடிப்பது தான் வாழ்க்கை என்றால் குடும்பம் என்கிற அமைப்பு எதற்கு? திருமணம் ஆன உடன் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். குடும்பப் பொறுப்பு தன்னாலே வந்து விடும். எக்காரணம் கொண்டும் பிள்ளை பெறுவதை தள்ளிப்போடாதீர்கள்.

இப்படித்தான் ஹிப்பிகள் என்றொரு கூட்டம் கஞ்சா, குடி, கூத்து, பல ஆண்களிடம் படுப்பது, பல பெண்களை சுகிப்பது என்று திரிந்து கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள் எங்கே என்றுச் சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு ஹிப்பி கூட கிடையாது.

இயற்கைக்கு மாறான எந்த ஒரு விஷயமும் நாளடைவில் அழிந்து போகும் என்பது இயற்கை.

சில பெண்கள் கல்யாணம் ஆன நாள் முதல் கணவன் தன்னுடனேயே இருக்க வேண்டும். அவன் தான் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும் என்று நினைப்பது பைத்தியக்காரத்தனம். அது ஒரு கடைந்தெடுத்த முட்டாள்தனமானதும் கூட. 

சுற்றமும், நட்பும் இல்லையென்றால் இந்த உலகில் மனிதன் எவனும் உயிருடன் வாழலாம். ஆனால் மகிழ்ச்சியாக வாழவே முடியாது. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதுதான் மனித வாழ்க்கையின் தத்துவம். 

அதை விடுத்து தன் புருஷனை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டுக்குச் செல்வது. பின்னர் மாமியார் சொல்வதை மந்திரமெனக் கேட்பது என்று மாற்றி விடுகின்றார்கள். இதே நடத்தையை நாளை அவள் பிள்ளைகள் செய்வார்கள். உடனே இவர்கள் மருமகள் கொடுமை என்பார்கள். இவர்கள் முன்பே செய்ததை அவர்கள் பிள்ளைகள் செய்தால் கொடுமை என்று கதறுவார்கள்.
ஒவ்வொரு தனி ஆணுக்கும் பெண்ணுக்கும் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.

கணவன், மனைவி உறவு என்பது மிகவும் புனிதமானது. அது ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி தன் இருப்பை உலகுக்கு விட்டுச் செல்லும் ஆலமரம் போன்றது. அதை மறந்து விட்டு பைத்தியக்காரத்தனமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் இப்படித்தான் குடும்பம் சிக்கி சின்னாபின்னமாகப் போய் விடும். 

இதுவா?

எங்கெங்கும் நோக்கினும் கை விடப்பட்ட வயதானவர்களாய் தெரு ஓரத்தில் விழுந்து உழல்வீர்கள். அந்த நிலைக்குச் செல்ல வேண்டுமெனில் ஆடுங்கள், பாடுங்கள், குடியுங்கள், கூத்தடியுங்கள். சில லூசுத்தனமான எழுத்தாளர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்யுங்கள். 

எதைச் செய்யினும் ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இந்தச் செயல் என்ன நன்மை தரும் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். விஷயம் விளங்கி விடும். விஷமமானவற்றை புரிந்து கொள்வீர்கள்.

Monday, February 24, 2014

யார் ஞானி பகுதி இரண்டு



எனது பால்ய பிராயத்தில் எனக்கொரு நண்பர் இருந்தார். அவர் பெயர் வேலாயுததேவர். அவர் சிவபெருமானைப் போற்றி பாடல்களை எழுதுவார். ஆவணம் பெரியகுளத்துகரையில் உள்ள சிவபெருமானிடம் அவருக்கு அவ்வளவு பக்தி. அவர் சிவபெருமானைத் துதித்து எழுதும் பாடல்களை புத்தகமாகப் பிரிண்ட் போடுவார். பிரிண்ட் போடுவதற்கு அச்சகத்தில் எழுத்துக் கோர்ப்பவர் தான் தாத்தாவுக்குப் பிரச்சினை.

தாத்தாவின் கையெழுத்து வீச்சு வீச்சாய் இருக்கும். அவ்வளவு  எளிதில் படித்து விட முடியாது. அச்சகத்தில் வேலை பார்ப்பவருக்கு வீச்செழுத்துப் படிப்பதில் பிரச்சினை. புத்தகம் பிரிண்ட் ஆகி வரும் போது பார்த்தால் ஒற்றுப் பிழை, புள்ளிகள் பிழை, எழுத்துப் பிழை என்று ஒவ்வொரு பக்கமும் பெரியவரின் திருத்திய சுவடுகளாய் இருக்கும். அதற்காக பெரியவர் ஒரு வேலை செய்தார்.

அந்தப் பிரச்சினையின் காரணமாகத்தான் அவர் தன் பாடல்களை அழகிய கையெழுத்தில் தன் பாடல்களை எழுத என்னைத் தேர்ந்தெடுத்தார். 

என் அம்மாவிடம் தாத்தா பேசி, தன் பாடல்களை என்னை எழுதரச் சொல்லக் கேட்டிருப்பார் போல. அம்மா என்னிடம் வந்து தாத்தாவுக்கு பாட்டு எழுதிக் கொடுப்பா என்றுச் சொல்ல அன்றிலிருந்து நானும் அவர் கொண்டு வந்து கொடுக்கும் வீச்சுக் கையெழுத்தினைப் பிரதியினைப் படித்து புரியாதவற்றை அவரிடம் கேட்டு அதன்படி எழுதிக் கொடுப்பேன். அவர் என் கையெழுத்துப் படியை எடுத்துக் கொண்டு போய் அச்சகத்தில் கொடுத்து புத்தகமாக்கி கொண்டு வருவார். அதில் ஒரு புத்தகமும் எனக்குத் தருவார்.

நான் ஐந்தாவது படித்த காலத்தில் இருந்து பனிரெண்டாவது படிக்கும் காலம் வரை அவருக்கு பாடல்களை எழுதிக் கொடுப்பேன்.

ஆவணம் ஆவிகுளத்துக்கரையில் இருக்கும் பள்ளியின் பின்புறம் பெரிய புளிய மரம் ஒன்றிருக்கும். பரந்து விரிந்து நிழல் கொடுக்கும் அம்மரத்தின் அடியில் பயிர் அடிப்பது,  நெற்போர் வைப்பது, நெற்போரடிப்பது,  நெல் காயப்போடுவது என்று பல வித விவசாய வேலைகளுக்கும் பயன்படும். அங்குதான் மதிய வேலையில் பள்ளிச் சிறார்களாகிய நாங்கள் விளையாடுவோம். அது பெரிய புளியமரம். அப்படி ஒரு விருட்சத்தை இதுவரையில் நான் எங்கும் கண்டதில்லை. 

திடீரென்று ஒரு நாள் அவர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டு என்னை அந்த புளியமரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அமர்ந்து சில பாடல்களை எழுதினோம். அவர் சொல்லச் சொல்ல அழகான கையெழுத்தில் எழுதிக் கொடுத்தேன். பாடல்கள் எல்லாம் எழுதி முடித்த பிறகு பழமையான அந்த சிவபெருமான் சன்னதிக்கு என்னை அழைத்துச் சென்றார். சன்னதியில் உட்காரச் சொல்லி விட்டு பின்புறம் சென்றார். கம்பிகள் பாவிய மரக்கதவுகளூடே சிவபெருமான் பிரம்மாண்டமாக தெரிந்தார். கோவிலின் பின்புறம் சென்றவர் கையில் சில இலைகளுடன் வந்தார். அதைக் கொண்டு போய் சிவபெருமானின் சன்னதியின் முன்பு இருக்கும் படிக்கட்டில் வைத்து விட்டு என் அருகில் வந்து நின்று கொண்டு கை கூப்பி எம்பெருமானை தொழுத நேரத்தில் அந்தப் பச்சை இலைகள் திடீரென்று தீபம் போல பற்றி எரிந்தது. 

எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். என்னடா இது இலைகள் இப்படி எரிகின்றனவே என்று நினைத்துக் கொண்டிருந்த போது என் தலைமீது கை வைத்து என்னவோ சொன்னார். பின்னர் எரிந்து கொண்டிருக்கும் இலைகளை தொட்டு கும்பிட்டார். நானும் கும்பிட்டேன். இலைகள் கருகி சாம்பலாய் கிடந்தது. அங்கிருந்து வந்து விட்டோம். 

அடுத்த நாள் மதியம் நானும் என சக வகுப்புத் தோழர்கள் சிலருடன் மீண்டும் சிவபெருமான் சன்னதிக்குச் சென்று தோழர்களிடம் சொல்லி இலைகளைப் பறித்து வந்து படியில் வைத்து “இம்..இம்” சொல்ல ஒன்றும் நடக்கவில்லை. நான் சொன்னதை என் சக தோழர்கள் எவரும்  நம்பத் தயாரில்லை. வெட்கமாய்ப் போய் விட்டது.

அடுத்த நாள் காலையில் தாத்தாவைப் பார்த்து இது பற்றிக் கேட்க, அவர் என்னைப் பார்த்து சிரி சிரியென்று சிரித்தார். பின்னர் ஏதோ சொன்னார். அது என்னவென்று எனக்கு நினைவில் இல்லை.

தொடர்ந்து இணைந்திருங்கள் என்னுடன்....


Saturday, February 8, 2014

யார் ஞானி?


தன்னை அறிந்தவர் தன்னை வெளிப்படுத்தார். எப்படி திடீரென்று வந்தோமோ அப்படியே திடீரென்று சென்று விடுவதையும், நிழல் மறைவது போல மனிதனும் மறைந்து விடுவான் என்பதையும், நிலையற்றவையே நிலையானது என்பதையும் அறிந்தவர்கள் எவரும் தன்னை வெளிக்காட்டவே மாட்டார்கள்.

ஆறு சட்டைகள் போட்டுக் கொண்டு ஒருவர் பைத்தியக்காரனைப் போல பேரூர் தாண்டிய பகுதியில் அவ்வப்போது தென்படுவார். அவர் யார்? எங்கிருந்து வந்தார்? அவருக்கு என்னதான் வேலை? இப்படி எந்தக் கேள்விக்கும் அவரிடம் இருந்து பதிலே கிடைக்காது. அவர் யாரிடமும் எதுவும் எதிர்பார்ப்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. ஆனால் கேட்டோருக்கு அவர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இன்னொருவர் கடந்த இருபத்தைந்தாண்டு காலமாக ஒரே சடாமுடி, ஒரே உடையுடன் மருதமலைக்கும் பழனிக்குமாய் நடந்து கொண்டே இருக்கிறார். ஏன் அவர் அப்படி நடக்கிறார்? அவர் என்ன செய்கிறார்? யாருக்காவது தெரியுமா? அவரிடம் நெருங்கினால் சிரிப்பொன்றே பதிலாய் தருவார். இப்படிப்பட்டவர்கள் ஏன் பூமியில் அவதரிக்கின்றார்கள். இதெல்லாம் புரிந்து கொள்ளவே முடியாத ஆனால் புரிந்து கொள்ளக்கூடிய விஷயங்கள்.

நிலையற்ற வாழ்க்கையின் நிலையாமைத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் எவரும் எந்த போதிலும் தான் யார், தன்னிடமிருக்கும் மகிமை என்பது பற்றி எவரிடமும் சொல்வதில்லை.

என் சிறுவயதில் நான் கண்ட ஒருவரைப் பற்றிய அனுபவம் இது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடிக் கிராமமான ஆவணத்தில் இருக்கும் சிவன் கோவில் நான் சிறு வயதாக இருந்த போது சிதிலமடைந்து கிடக்கும். சிவன் கோவிலின் எதிரே மிகப் பெரிய புளிய மரமொன்று இருக்கும். சிவன் கோவிலின் வடபுறமாய் குளமொன்று பரந்து விரிந்து கிடக்கும். 

இக்கோவிலின் அருகில் தான் நான் படித்த அரசுப்பள்ளி இருக்கும். தாத்தா என்னிடம் அடிக்கடிச் சொல்வார், ”சிவன் கோவிலிலிருக்கும் லிங்கத்தை மாட்டு வண்டி கட்டிக் கொண்டு போய் மன்னார்குடி பக்கமிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார்கள்” என்று.  மஹா சிவராத்திரியன்றும் இன்னுமொரு விஷேசத்தின் போது வெகு விமர்சையாக விழா கொண்டாடுவார்கள். அப்போது சிவ பெருமான் தகதகவென்று ஜொலிப்பார். இப்படியான காலத்தில் நான்காவதோ ஐந்தாவதோ படிக்கும் காலத்தில் தான் இந்த அனுபவம் எனக்கேற்பட்டது.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா? அவர்கள் இறைவன் பால் பக்தி கொண்டு தன்னையே அவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள். இப்படியும் வாழ முடியுமா என்றெல்லாம் நாம் சிறு வயதில் படித்த அவர்களின் வரலாறு நமக்குள் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும்.

லிங்கத்தின் கண்ணில் ரத்தம் வடிந்ததற்காக தன் கண்ணையே தோண்டி எடுத்து லிங்கத்தில் பதித்த கண்ணப்ப நாயனார் கதை உங்களுக்குத் தெரியும் தானே? இதெல்லாம் சாத்தியம் தானா? என்று உங்களுக்கு தோன்றுகிறதல்லவா? இப்படியும் இருப்பார்களா ? நம்பமுடியவில்லையே என்றெல்லாம் தோன்றுபவர்கள் தொடர்ந்து படியுங்கள்.