குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, September 29, 2012

கோவிலும் மனித உடலும்


தமிழர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியை, குமரிக் கண்டத்தினை கீழே இருக்கும் படத்தில் பாருங்கள். இப்படி இருந்த தமிழர் வாழ்விடம் இப்போது இருக்கும் அவலத்தையும் பாரீர். இருக்க இடம் இல்லாமல் தவிப்பதைப் பாரீர். பரிசோதனைக் கூடங்களில் கொல்லப்படும் எலி போல தமிழர்கள் கொல்லப்படுவதைப் பாரீர். ஏன் என்று கேட்க நாதியற்றுப் போனதைப் பாரீர். உலகின் மூத்த குடியான தமிழர்கள் தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் கையேந்தி நிற்கும் அவலத்தைப் பாரீர். 


ஆனால் உங்களுக்கு ஒரு உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். காலத்தின் சூழலில் மனம் மயங்கி கிடக்கும் தமிழர்கள் தான் இன்றைக்கும் என்றைக்கும் அசைக்கவே முடியாத உலக கோடீஸ்வரர்களுக்கெல்லாம் கோடீஸ்வரர்கள். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பது ஒரு ரகசியம். அதையெல்லாம் பட்டவர்த்தனமாக வெளியில் சொல்ல முடியாது. காலம் வரும் போது தெரிந்து கொள்ளுங்கள். அது சுனாமியைப் போல தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

நம் தமிழர்களின் அறிவிற்கு எந்த மனிதனாலும் ஈடே கொடுக்க முடியாது. ஒவ்வொரு தமிழனின் வாழ்வியல் கோட்பாட்டிலும் அசைக்க முடியாத பங்கீட்டாய் இருப்பவை கோவில்கள். “கடவுள் நம்மைக் காப்பாற்றுவாரா?” பதிவில் ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடலையும் கீழே வரும் விபரங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

கோவிலின் அமைப்பும் மனித உடலின் பாகங்களும்

முன்கோபுரம் - பாதங்கள்
முன்மண்டலம் - முழங்கால்
நிருத்தமண்டபம் - தொடை
பலிபீடம் - தொப்புள்
மகாமண்டபம் - மார்பு
அர்த்தமண்டபம் - கழுத்து
கர்ப்பகிரகம் - சிரம்
தட்சிணாமூர்த்தி - வலது செவி
சண்டிகேஸ்வரர் - இடது செவி
ஸ்தபனமண்டபம் - மூக்கு
ஸ்தபனமண்டலவாசல் - வாய்
லிங்கம் - புருவத்தின் மத்திய பகுதி
விமானம் -தலையின் உச்சி
சரீரப்ப்ரஸ்தாரம் ஷேத்திரம் (தலம், கோவில் இருப்பிடம்)

அன்ன மயம், பிராண மயம், மனோ மயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம் என்கிற ஐந்து பிரகாரங்களையும் ஐந்து வித கோஷங்கள் என்று குறிப்பிடுவார்கள்.  இதனைப் பின்பற்றித்தான் சாமியை வழிபடல் வேண்டும். 

கோவில்களுக்குச் சென்று வழிபடுவது எப்படி  என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுவோம்.

மன ஒருமை செய்து, வேற்று சிந்தனை களைந்து, இறையுடன் ஒன்றி கோவிலுக்குள் நுழைய வேண்டும். பலிபீடத்தின் அருகில் வீழ்ந்து தீய எண்ணங்களை பலிகொடுத்து, சுத்தமான உணர்வுடன் எழுந்து கொடிமரத்தின் அருகில் சென்று விழுந்து வணங்க வேண்டும்.

ஆண்கள் - தலை, இரண்டு கைகள், இரண்டு காதுகள், இரு முழங்கால்கள், மார்பு போன்றவை மண்ணில் பட வணங்க வேண்டும்.

பெண்கள் - இரண்டு கைகள், இரண்டு முழங்கால்கள், தலை பூமியில் படும்படி வணங்க வேண்டும்.

சன்னதி கிழக்கு என்றால் பலிபீடத்தின் அக்னி மூலைக்கு எதிரில் தலைவைத்து வணங்க வேண்டும். தெற்கு, மேற்கு நோக்கிய சன்னதி என்றால் பலிபீடத்தின் நிருதி மூலையியில் தலைவைத்து வணங்க வேண்டும். வடக்கு நோக்கிய சன்னிதியானால் பலிபீடத்தின் வாயு மூலையில் தலைவைத்து வணங்க வேண்டும்.

கொடிமரத்தைத் தாண்டி மண்டபத்தில் நுழைந்த பிறகு வேறு எந்தச் சன்னிதியிலும் வணங்கக்கூடாது. எவருக்கும் வணக்கம் செலுத்துதல் கூடாது. நந்தியை வணங்கி, அவரிடம் சிவ பெருமானை வணங்க உத்தரவு கேட்ட பிறகுத்தான் சிவனை வழிபட செல்ல வேண்டும்.

இதன் பின்னர் கருவறை வாசலில் இருக்கும் துவாரபாலகரை தரிசித்து விட்டு அதன் பின்னர் கருவறை சென்று சிவனை வழிபடல் வேண்டும். அதன்பிறகு பிற சன்னிதிகளை வணங்கலாம்.
-
நேற்று நண்பர் ஒருவர், உலகில் மாபெரும் கலவரங்கள் நடக்கப்போவதாகச் சொன்னார். இப்போதுள்ள காலத்தின் வெளிப்பாடு மிகக் கொடூரமாய் இருக்கிறது. அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமங்கள் எல்லாம் அக்கிரமங்களே அல்ல. அது ஒன்றுமே இல்லாதவை. ஆனால் அரசியல்வாதிகளை முன்னிருத்திக் கொண்டு சில சுய நலவாதிகள் செய்யும் அக்கிரமங்கள் அளவுகடந்து செல்கின்றன. அரசியல்வாதி 0.000001 பர்செண்டேஜ் தின்கிறான். ஆனால் இவனை துணையாக்கும் சுய நலவாதிகள் தின்பது 9.99999 பர்செண்டேஜ். இச்சுய நலவாதிகளுக்கெதிரான மக்கள் கலவரங்கள் நடக்கப் போகின்றது என்பதைக் குறிகள் சுட்டிக் காட்டுகின்றன. விதிப் பலனை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கின்றார்கள். மீண்டும் ஒரு உலகப் போர் நிகழப்போகின்றது. அதிலே கவுரவர்கள் என்கிற சுய நலவாதிகள் அழிக்கப்படப்போகின்றார்கள். இப்போது ஊழல்வாதிகளாய் வெளிப்படுவது அரசியலாதிகள் அல்ல. கார்பொரேட் கம்பெனிகள் என்ற சுயநலவாதிகள். இவர்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் உலகெங்கிலும் ஆரம்பமாகி விட்டது. அது பரவும் ! சுய நலசக்திகளை, மக்கள் விரோத சக்திகளை அழிக்கும். அந்தப் போரில் மக்களும் தங்கள் இன்னுயிரை இழப்பர். இழப்பினும் உலகம் சுத்தமடையும்.

* * * * * * *

கட்டுரை ஆக்க உதவியும் நன்றியும் : கழுகூர் வரலாற்றுத் தழும்புகள் - கவிஞர் கழுகூர் பழனியப்பன்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கங்கள் மிகவும் அருமை...

மிக்க நன்றி...

ssk said...

தமிழன் மிக பெரிய ஒரு வரலாறை கொண்டவன். அவனுடைய அணுவில் அந்த சக்தி உள்ளது என்றே நானும் நினைத்து வந்தேன்.
திருக்குறள் ஒன்றை மட்டும் எடுத்து அதில் உள்ளவற்றை படித்து படித்து பார்க்க இதை தமிழன் எழுதினான,
இப்படியும் இதை சொல்ல முடியுமா, இவ்வளவு சுருக்கமாக பொட்டில் அறைந்தது போல் சொல்ல முடியுமா, என்று வியப்பு ஏற்படும்.
அப்படிபட்ட சிறப்பு கொண்டது. தமிழன் அறிவு மிகவும் ஆழ்ந்த ஒன்று. இதை நான் பல நாட்டவரிடையே பேசி பழகி கண்ட ஒன்று.
நம்முடைய வாழ்வியல் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. இன்றோ எல்லாம் சிதைக்கபட்டு விட்டது.
தமிழ் இனம் தொடர்ந்து ஒற்றுமை என்ற ஒன்று இல்லாததனால் இன்று வரை சிறுமைபடுத்தபட்டு அழிக்கபட்டு வருகிறது.
போரின் போது கூட தற்குறி எண்ணம் கொண்ட பலர் தமிழரை பிரித்து ஒற்றுமையை சிதைத்து நம் கண் முன் நடந்தது.
இந்த இனத்தில் தான் என்ற பற்று அதிகம். நாம் என்ற பற்று குறைவு.
பிச்சை எடுக்கும் இனமாக ஆன பின், மான அவமானம் பார்க்க முடியாமல் எந்த இழி செயலையும் செய்தனர்.
அதனால் இங்கு முதல் எங்கும் தமிழர் அடிமை பட்டு கொண்டே உள்ளனர்.
எந்த இடத்திலும் தங்களுக்கு தலைவர்/தலைவியாக, தமிழை எதிர்பவர்களை ஏற்று கொள்வதும் முக்கிய காரணம்.
இன்றும் கூட தமிழை இழிவு படுத்துபவர்களை போற்றி வருவது கண் கூடு.
இதே போல் வேறு எங்காவது (நேற்று பிறந்த மொழிக்காவது) நடக்க முடியுமா.

கடவுள் , கோவில், பூசை போன்ற தத்துவத்தை தமிழன் கண்டு பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது.
சமுகத்தை பற்றி இவ்வளவு சிந்தித்தவர்கள் சாதி என்ற இழி தன்மையை கொண்டிருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.
மாற்றாக பல அறிவியல் சிந்தனைகளை வாழ்விலே சாதரணமாக கலந்து விட்டு சென்று உள்ளார்கள்

தமிழனின் மிக பெரும் சொத்து என்பதே அவனுடைய பரந்த மனமும் உயர்ந்த எண்ணங்களும் புத்தாக்க சிந்தனைகளும் தான்.
இவையெல்லாம் அணுவில் உள்ளதால், எளிதாக அழிந்து விடாது. மக்களிடம் சிந்தனைகளை எழுப்பினால் அவர்கள் மாறுவார்கள்.
நீங்கள் கூறும் கோடிகள் கிடைக்கலாம். இப்படியே இன்னும் தற்குறியாக இருந்தால் கோடி அல்ல, குடிஇருக்ககூட இயலாத நிலைமை ஏற்படும்.
தன்னலம் தீர்ந்து எந்த விசயத்திலும், பொது நலம் கொண்டு யோசித்தாலே பல தீர்வுகள் கிடைக்கும். தனக்கு கிடைப்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தாலே போதும், சமத்துவம் வரும், மக்கள் நல வாழ்வு வாழ முடியும்.

பாலராஜன்கீதா said...

மண நாள் ஆண்டுவிழா வாழ்த்துகள்

யயாதி said...

" எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமே அல்லால் வேறொன்றறியேன் பராபரமே " என்ற சிந்தனையோடு ஆலய வழிபாடு செய்தாலே போதும்.நாடு செழிக்கும்." ஆலயம் தொழுவது சாலவும் நன்று " என்ற கருத்தினை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதே எனது ப்ரார்த்தனை.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.