குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, April 30, 2021

இயக்குனர் கேவி ஆனந்த் - ஒரு முற்றுப் பெறாத நாவல்

எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு மாலைமதி, ராணிமுத்து, குமுதம் ஆகிய புத்தகங்கள் அறிமுகம் ஆனது. ஐந்தாம் வகுப்பின் போது ராணிகாமிக்ஸ் படிக்க ஆரம்பித்து இருந்தேன்.

அடுத்த அடுத்த தொடர் நாட்களில் சுபா, ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பி.டி.சாமி போன்ற நாவல் ஆசிரியர்களின் நாவல்கள் படிக்க கிடைத்தன. குமுதத்தில் தொடராக வரும் சாண்டில்யன் நாவல்களின் தொகுப்புகள் கிடைத்தன.

கசாலி என்ற நண்பன் மூலமாக அம்புலிமாமா போன்ற பல காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க கிடைத்தன. இறந்து போன எனது நண்பன் ஜகாங்கீர் ஆலம் மூலமாக பலப்பல புத்தகங்கள் கிடைத்தன. 

பாடப்புத்தகங்கள் அதனுடன் இம்மாதிரியான புத்தகங்களுடன் பள்ளிகளில் இயங்கும் நூலகப் புத்தகங்களையும் அவ்வப்போது படிப்பதுண்டு.

இப்படியான நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்களான சுபா (சுரேஷ் - பாலகிருஷ்ணன்) எழுதும் சுபா நாவல், சூப்பர் நாவல் ஆகிய நாவல்களில் வரக்கூடிய அட்டைப்படங்கள் படு டெரராக இருக்கும். அப்போதெல்லாம் இண்டெர்னெட் கிடையாது.

அந்த நாவல்களில் வரும் புகைப்படங்கள் நாவலில் வரக்கூடிய ஒரு சிறு சம்பவத்தைக் காட்டும். ஒவ்வொரு புகைப்படமும் அந்த வயதில் எனக்கு மிகுந்த ஆர்வத்தைத் தரும்.




இப்படித்தான் எனக்கு கே.வி.ஆனந்த் புகைப்படக்கலைஞராக அறிமுகம் ஆனார். சுபாவுக்கு கடிதம் எழுதி பதில் கடிதம் கூட வந்தது. அப்போது கே.வி.ஆனந்த் பற்றியான முழு ஈடுபாடு எனக்கு இல்லை.

அவரின் முதல் படமான கனா கண்டேன் திரைப்படத்தினை இதுவரை பார்க்கவில்லை. ஏனோ அது என்னை ஈர்க்கவே இல்லை. அடுத்து அவர் இயக்கி வெளியான அயன், கோ, மாற்றான், அனேகன், கவன் மற்றும் காப்பான் ஆகிய படங்களை பார்த்திருக்கிறேன்.

ஃபேண்டசி படங்கள் அவரின் தேர்வாக இருந்தது. சுபாவின் உளவாளி நரேந்திரன் வைஜெயந்தியின் ஃபேண்டசி நாவல்களைப் போல படமும் அப்படியே வந்தன. அயன் மற்றும் கோ விறுவிறுப்பினை கூட்டும் பாலிவுட் படங்கள் போல இருந்தன. அனேகன் வேறு வகையானது. கவன் மற்றும் காப்பான் இரண்டும் புனைவுகளின் உச்சம். ரசிக்கலாம். ஆனால் அது பார்வையாளனுக்கு எந்த வித உணர்ச்சியையும் தரவில்லை. காப்பான் போன்ற ஒரு மொக்கைப்படத்தினை கே.வி.ஆனந்த் எப்படி இயக்கினார் என்று புரியவே இல்லை.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பெறும் அனுபவங்களின் சாரம் அவனை கூர்மையாக்கும். பலருக்கு அது என்றைக்குமே தெரியாமலே போய் விடும். 

தமிழ் சினிமாவின் கேடுகெட்ட ரசனை உலகத்தில் அவர் தன் பெயர் சொல்லக்கூடிய ஒரு நல்ல படத்தையாவது இயக்கி விடுவார் என்ற நம்பிக்கை இருந்தது.

பல்வேறு குடும்ப நாவல்களை எழுதிய சுபாவின் நண்பரான கே.வி.ஆனந்த் ஏன் குடும்பதளத்தில் படைப்புகளை உருவாக்க தவறினார் என்பதற்கு ஒரே ஒரு காரணமாய் தெரிவது, அவர் தன்னை இன்னொரு ஷங்கராக நினைத்து விட்டார் என்பதாக இருக்கலாம்.

இயக்குனர் ஷங்கரின் கதைகள் காப்பி அடிப்படையிலானவை. காட்சி பிரம்மாண்டங்களையும், நடிகர்களின் புகழையும் வைத்து அவர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். இன்றைக்கு அவரின் படைப்புகள் ரசிகர்களின் பல்வேறு கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளாகிக் கிடக்கின்றன. விற்பனை அளவிலும் கூட அவை தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தருவதில்லை. நடிகருக்கும், இயக்குனருக்கும் சம்பளம் கிடைத்து விடுவதுதான் தான் இவ்வகை இயக்குனர்களின் முதல் நோக்கமாகும். அவர்கள் தங்களை நம்பி பணம் செலவழிப்பவர்களை நட்டாற்றில் விட்டு விடுவார்கள். அதுமட்டுமின்றி நல்ல படங்களைத் தர வேண்டுமென்ற ஆவல் இல்லாதவர்கள்.  இயக்குனர் கே.வி.ஆனந்த் தன் படங்களை இவரைப் போல உருவாக்கியதால் இவ்வாறு எண்ணத் தோன்றிற்று.

கே.வி.ஆனந்த் கொரானாவால் தன் இன்னுயிரை இழந்து விட்டார். அது ஃபேண்டசி கதை விரும்பிகளுக்கு மாபெரும் இழப்பு. அவரின் சூப்பர் நாவல் புகைப்படங்கள் இன்றைக்கும் என் கருத்தை விட்டு அகலா வண்ணம் என்னை அச்சமூட்டிக் கொண்டிருக்கிறது. அவரின் மறைவு நம்பக்கூடியதாக இல்லை. 

அவர் சுபா அவர்களின் தொடரும் நாவல்களின் வரிசைகள் போல வரலாற்றில் தொடரும் என்று போட்டு விட்டுச் சென்று விட்டார்.  அவர் முற்றும் போடாத ஒரு நாவலாகிப் போனார்.

அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். 

Monday, April 5, 2021

மண்டேலா - திரைப்படம்

திரைப்படங்கள் மன மகிழ்ச்சிக்காக, கொண்டாட்டத்துக்காக, நல்ல படிப்பினைகளைக் கற்றுத் தருவதாக, நெகிழ வைப்பதாக இருந்தால் தான் அப்படம் மக்களின் மனதில் பதிந்து விடும். 

விசாரணை, அசுரன் ஆகிய படங்களை நான் பார்க்கவே இல்லை. அதே போல கமலின் மகா நதியை இன்றும் பார்க்கவில்லை. காசி படத்தில் பாதியில் எழுந்து வந்து விட்டேன்.

மன நிலையைப் பாதிக்கும் எந்த வித பதிவினையும் மனதுக்குள் பதிந்து விடக்கூடாது என்பதில் எனக்கு கொஞ்சம் பிரக்ஞை உண்டு.

என்னைப் பொறுத்தவரை பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று நடித்துக் கொண்டிருப்பவர்கள் செய்யும் சக மனித குற்றங்கள் தான் கொடிதிலும் கொடிது என்பேன். பொறாமையால், ஆற்றாமையால் அவர்கள் செய்யும் செயல்கள் பாதிப்பதை விட வேறு எதுவும் பெரிய துன்பத்தைத் தந்து விடாது.

எனக்கு நடந்த ஒரு விஷயத்தை, இங்கு உங்களுக்கு புரிவதற்காக எழுதுகிறேன். எல்.பி.ஏ அதிகாரிகள் மனை அப்ரூவலுக்காக இடத்தினை பார்வையிட வந்திருந்தார்கள். நானும் நின்றிருந்தேன். இடத்தினை சுத்தம் செய்து, அளந்து அறுதியிட்டு நான்கெல்லை கற்களைப் பதித்து வைத்திருந்தேன். அவர்கள் அளந்து பார்த்தார்கள். 500 மீட்டர் ரேடியேஸ் வரை சுற்றிப் பார்த்தார்கள். இந்த இடத்திற்கு வரும் தார்ச்சாலைகள் பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படுகிறதா, அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்து விட்டு கிளம்பினார்கள். அப்போது பூமியை விற்றவரின் உறவினர் டிவிஎஸ்ஸில் வந்து ஜீப்பை மறித்தார். அதிகாரிகள் என்னவென்று விசாரித்தார்கள். 

”இது என் பூமி, எனக்கு உரிமை இருக்கிறது. இதற்குள் நீங்கள் எப்படி உள்ளே வரலாம்?” எனக் கேள்வி கேட்டார். உண்மையில் அப்படி ஏதும் இல்லை.

அதிகாரிகள் அவரிடம் ”எங்களிடம் அவர் சமர்பித்த ஆவணங்களின் உரிமை இந்தச் சொத்து அவருடையது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. உங்களுக்கு சொத்தில் உரிமை இருந்தால் கோர்ட் மூலம் நிவாரணம் தேடிக் கொள்ளுங்கள்” என்றுச் சொல்லி விட்டு சென்று விட்டனர்.

இதே கொஞ்சம் எடக்கு முடக்கான அதிகாரியாக இருந்தால், ”என்ன சார்? பிரச்சினை இருக்கும் போலவே?” என அதற்கு தனியாக பிட் போட்டிருப்பார்கள்.

இதைத்தான் பொறாமையினால், ஆற்றாமையினால் செய்யும் செயல் என்பேன். அது நாள் வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தவர், அதிகாரிகளிடம் அவ்வாறு பேசிய பிறகு என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். அவர் அவ்வாறு பேசுவார் என்று எனக்கு அது நாள் வரை தெரியாது. அப்போதுதான் தெரிந்தது அவர் எவ்வளவு பொறாமையால் பீடிக்கப்பட்டு என் மீது வன்மம் கொண்டிருந்தார் என்பது.

புரிகிறதா எந்தக் குற்றம் பெரிய குற்றம் என்று.

மண்டேலா திரைப்படத்துக்கு வருகிறேன்.

தாய், தகப்பன் அற்ற ஒருவன் அந்த ஊரின் ஆலமரத்தடியில் சலூன் கடை வைத்திருப்பார். அவருக்கு ஒரு அனாதைச் சிறுவன் உதவியாள். அவர்களின் வேலை ஊருக்கு வேலை செய்வது. தீண்டத்தகாதவன். ஒவ்வொரு வீட்டுக்கும் ரேசன் வாங்கிக் கொடுப்பது, பாத்திரங்கள் கழுவி கொடுப்பது, அதற்கான சம்பளமாக கஞ்சி கிடைக்கும். ஒரு சிலர் காசு கொடுப்பார்கள். அவனின் ஒரே குறிக்கோள் அவனது அப்பா சாகும் போது ஒரு சலூன் கடை கட்டி விடு என்று சொன்ன வார்த்தைகள் தான். அதற்காக அவன் குருவி கூடு கட்ட தூசி தும்பைகள் சேர்ப்பது போல காசு சேர்த்துக் கொண்டிருப்பான். அவனுக்கு ஊரார் வைத்திருக்கும் பெயர் இளிச்சவாயன்.

எப்படி ஐடியில் வேலைச் செய்பவர்கள் அடிமையை விட கேவலமாக எப்போது எச்.ஆரால் வேலை பறிக்கப்படுமோ என்று தெரியாமல், பணிப்பாதுகாப்பின்றி எப்போதும் பதட்டத்திலேயே வேலை செய்கிறார்களோ அதைப் போலத்தான் இளிச்சவாயனும்.

என்ன ஒன்று இளிச்சவாயனுக்கு வேலை செய்து முடித்ததும் காசு கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் வேலை மட்டும் செய்ய வேண்டும்.

இப்படியான சூழலில் அந்த ஊரில் இருக்கும் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட் சங்கிலி முருகனுக்கு இரண்டு மனைவிகள். ஆளுக்கு ஒரு மகன். இருவரும் பக்கத்து பக்கத்து ஊர்களில் இருந்து கொண்டு அடிதடி அரசியலை இருவரும் தங்களுக்குள் ஊர் பெயரைக் காரணம் காட்டி செய்து வருபவர்கள்.

அண்ணன் அவன் ஊரின் தண்ணீர் தொட்டியினை செயல்படாமல் முடக்கி விட்டு, ஊருக்கு நல்ல தண்ணீர் எனச் சொல்லி போர் தண்ணீரை விற்றுக் கொண்டிருக்கிறான். தம்பி அவன் ஊரில் டாஸ்மார்க் பாரை ஏலம் எடுத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறான்.

அந்த ஊரின் பள்ளிக்கூடம் சண்டையால் மூடிக் கிடக்கிறது. நீர் தொட்டியும் மூடிக் கிடக்கிறது. நல்ல சாலை இல்லை. தெரு விளக்கு இல்லை. இப்படி எதுவுமே இல்லாத பட்டிக்காட்டு ஊரில் இளிச்சவாயனும், கிருதாவும் வசிக்கிறார்கள்.

தேர்தல் வருகிறது. அண்ணன் தம்பி இருவரும் போட்டி போடுகிறார்கள். அவரவர் ஊர்காரர்களில் வாக்கு சீட்டின் படி இருவருக்கும் சம பலம். ஒரே ஒரு ஓட்டுதான் வேண்டும். 

இதற்கிடையில் அந்த ஊருக்கு வரும் போஸ்ட்வுமன் இளிச்சவாயனுக்கு பெயர் வைத்து ஆதார், வோட்டர் ஐடி பெற்று போஸ்ட் ஆபீசில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து கொடுக்கிறாள். இளிச்சவாயன் மண்டேலா ஆம் நெல்சன் மண்டேலா ஆகிறான்.  வோட்டர் லிஸ்டில் மண்டேலாவுக்கு ஓட்டு போட வாய்ப்பு வருகிறது.

முப்பது கோடி பணம் கிடைப்பதற்காக வெறியுடன் இருவரும் மண்டேலாவை மிரட்டி யாருக்கு ஓட்டுப் போடுவாய் என அடாது செய்கிறார்கள். ஒரு வழியாக ஓட்டினை ஏலம் விடுகிறார்கள். ஒரு கோடிக்கு ஏலம் போகிறது. 

இப்படியான சூழலில் மண்டேலா இருவரிடமும் பள்ளிக்கூடம், தெருவிளக்கு, நீர் தொட்டி, சாலைகள் என அனைத்தையும் ஒரே ஒரு ஓட்டினைக் காட்டி செய்ய வைக்கிறான். ஊர்ப் பிள்ளைகள் கல்விச் சாலைக்குச் செல்கிறார்கள். வீட்டு வாசலில் நீர் கிடைக்கிறது. உடைத்து எறியப்பட்ட பொதுக் கழிவறை செயல்படுகிறது. சாலை வசதியின்மையால் ஊருக்குள் வராத மினிபஸ் ஊருக்குள் வந்து செல்கிறது. தெரு விளக்குகள் எரிகின்றது.

ஊர் மக்கள் ஓட்டுப் போட டோக்கன் பெறுகிறார்கள். ஓட்டுக்கு இரண்டாயிரம் பெறுகின்றார்கள். 

மண்டேலா தன் ஓட்டுக்காக இருவரையும் செய்ய வைக்கிறான். வாக்கு அளிக்கும் நாளும் வருகிறது.

தேர்தலின் போது ஓட்டுப் போட போகிறான் மண்டேலா. அவன் திரும்பி வந்ததும் அவனைக் கொன்று விட அண்ணனும் தம்பியும் ஆட்களை அனுப்பி வைக்கிறார்கள்.

மண்டேலா ஓட்டினைப் போட்டு விட்டு ஆலமரத்தடியில் வந்து நின்று கொண்டிருக்கிறான். அவன் மீது அன்பு காட்டும் போஸ்ட்வுமன் அவனைக் கொல்லப்போகின்றார்கள் என்று தெரிந்து கொண்டு தப்புவிக்க சொல்கிறாள். மண்டேலா கேட்கவில்லை.

அதன் பிறகு ஒரு டிவிஸ்ட். கதை சுமூகமாக முடிகிறது. முடிவு மகிழ்ச்சியானது.

மனிதனுக்கு ஆறறிவு இருப்பதன் காரணம் அவனிடம் மிளிரும் மனிதாபிமானம்.

மனிதாபிமானம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் கடவுள் தன்மை கொண்டது. அதன் பரிணாமம் கொரானா காலத்தில் பசியால் வாடிக்கிடந்த மக்களுக்கு தெருவெங்கும் உணவு சமைத்துக் கொடுத்தது. அதை நாம் இணையதளங்களில் பார்த்தோம். ஆண்களும் பெண்களும்  போட்டி போட்டுக் கொண்டு தெருத் தெருவாய் உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு கொடுத்தார்கள்.

அப்போதெல்லாம் மக்கள் செத்தால் தான் என்ன இருந்தால் தான் என்ன என சொகுசாக இருந்து விட்டு, கோடி கோடியாய் கொள்ளையும் அடித்து விட்டு பவனி வந்தவர்கள் இன்று தெருத்தெருவாய் ஓட்டுப் போடுங்கள் என பல பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒவ்வொரு பத்திரிக்கையும் குறைந்த பட்ச நேர்மை இல்லாமல் ஒரு சார்பு நிலை எடுக்கிறார்கள். எந்தக் கட்சியும் சாராதவர்களும் நாளிதழ்கள் வாங்கிப் படிக்கின்றார்கள் என்ற எண்ணமும் இல்லாமல் தாங்கள் பெற்ற கோடிக்கணக்கான பணத்திற்காக எல்லோரையும் மூளைச் சலவை செய்ய முயற்சிக்கின்றார்கள். இவர்கள் அழிக்கப்பட வேண்டும். அல்லது ஒழிக்கப்படல் தமிழர் சமுதாயத்துக்கு அவசியம். இவர்கள் வெகு வெகு தீங்கானவர்கள். பணத்துக்கு தங்கள் வேலையை அடகு வைத்தவர்கள். தீவிரவாதிகளை விட மிகவும் மோசமானவர்கள் இந்தப் பத்திரிக்கைகள் என்னைப் பொறுத்தவரை. நடுநிலை இல்லாதவர்கள் நாட்டு மக்களை மோசம் செய்வார்கள். இவர்கள் செய்திருக்கிறார்கள். அரசியல் டிசைன் வேறு. அதற்காக தாங்கள் வெளியிடும் செய்திகளை விற்கலாமா? அக்கிரமம் இது. அயோக்கியத்தனம் இது. தர்மத்தின் வாசலில் அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்படும் நாட்கள் விரைவில் வரும்.

குறைந்த பட்ச மனிதாபிமானத்தைக் கூட அரசு மக்கள் மீது காட்டவில்லை என்பதை பல பத்திரிக்கைச் செய்திகள் மூலமும், இணையதளங்கள் மூலமும் நாமெல்லாம் கண்டோம்.

ஏன் திடீரென மண்டேலாவுக்கு விமர்சனம் எழுதுகிறேன் என்று உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம்.

மண்டேலாவில் வரும் இரு காட்சிகள் தான் காரணம்.’

முதல் காட்சி : அந்த ஊரில் ஒரு டாய்லெட் கட்டி இருப்பார்கள். அதற்குள் நாயொன்று சென்று வந்து விடும். அதைச் சுத்தம் செய்ய மண்டேலாவை அழைத்து வரச் செல்வான் ஒருவன் காரில். மண்டேலாவும், கிருதாவும் காரில் உட்கார்ந்து விடுவார்கள். அவர்களை விரட்டி அடித்து காரின் பின்னால் ஓடி வரும்படி சொல்வான் கார் ஓட்டி வந்தவன்.

காரின் பின்னாலே ஓடி வரும் போது, கிருதா, “ஏண்ணே, கார் சும்மாதானே போகுது, நம்மைக் கூட்டிப் போனா என்ன?” என்று கேட்பான்.

அதற்கு மண்டேலா,”அவருக்கு காரில் டபுள்ஸ் அடிக்கத் தெரியாது போலடா” என்பான்.

இந்த வசனமானது நம் வாழ்க்கை மீது காறி உமிழ்கிறது. நாம் இப்படித்தான் சமரசம் செய்து கொள்கிறோம் எல்லாவற்றுக்கும். 

அடுத்த காட்சி: மண்டேலாவுக்கு அவனின் உண்மையான பேர் என்னவென்று தெரியாது. அதை அந்த ஊரில் இருக்கும் வயதான பெரியவர்களிடம் விசாரிக்கலாம் என்று விசாரிக்கின்றான். அப்படி ஒரு பெரியவரிடம் கேட்கும் போது, ”இதை என்னிடம் தானே விசாரிக்க வேண்டும் எனச் சொல்லி தொண்டைக்குள் இருக்கிறது. வெளிய வரமாட்டேன் என்கிறது, சுருட்டுக் கிடைக்குமா?” என்று கேட்பார். மண்டேலாவும் பல சுருட்டுகளை வாங்கிக் கொடுப்பான். பல சுருட்டுகளைப் புகைத்த பின்பும் பெயர் வெளியில் வராது. 

இதைத்தான் சக மனிதன் நம்மிடம் செய்யும் பாதகச் செயல். இதுதான் மிக மோசமான குற்றம்.

இந்த இரண்டு காட்சிகளும் காட்டும் வாழ்வியல் அபத்தங்கள் தான் இப்படத்தினை நீங்களும் பார்க்க வேண்டுமென பரிந்துரைக்கிறேன். நீங்களும் நானும் ஒரு வகையில் மண்டேலா வாழ்க்கைதான் வாழ்கிறோம். கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம். அவ்வளவுதான்.

விஜய் டிவியில் டெலிகாஸ்ட் ஆகிறது. காசு செலவின்றி பாருங்கள்.

அடுத்து கீழே இருக்கும் செய்திகளைப் படித்து விடுங்கள். நாம் இப்போது வாழும் வாழ்க்கையிலிருந்து கீழ் நிலைக்குச் சென்று விடக்கூடாது என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ் நாட்டில் இருக்கும் 365 ஜாதிகளில் ஒரு ஜாதியை விட அனைத்து ஜாதியினருக்கும் இது ஒன்றே போதுமானது. 

நாம் இனிமேல் எப்படி வாழ வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டும் அற்புதமான வரலாறு. வரலாறு நமக்கான பாடங்களைச் சொல்லும். மண்டேலா நமக்கான வழியினைக் காட்டும்.

வாழ்க வளமுடன்...! 


நன்றி : காக்கைச் சிறகினிலே இதழ் மற்றும் கட்டுரை ஆசிரியர் ஜோசப் குமார்.


Thursday, April 1, 2021

நிலம் (81) - நத்தம் நிலங்கள் உரிமை யாருக்கு? முழுமையான விளக்கம்

நத்தம் பூமி அரசுக்குச் சொந்தமா? என்ற பதிவு எழுதி இருந்தேன். அதில் அரசுக்கு நத்தம் பூமியில் உரிமையில்லை என்று மட்டும் எழுதி இருந்தேன். விபரங்கள் எழுத வில்லை.

சமீபகாலமாக எனக்கு வரும் பல்வேறு அழைப்புகள் நத்தம் பூமி உரிமைத் தொடர்பாக இருக்கிறது. காலம் காலமாக குடியிருந்து வரும் இடங்களை வி.ஏ.ஓ மற்றும் உள்ளாட்சியினைச் சேர்ந்த தலைவர்கள், கவுன்சிலர்கள் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஆக்கிரமிப்புச் செய்வதும், அதில் முறைகேடுகள் செய்வதுமான பல்வேறு சம்பங்களை என்னைத் தொடர்பு கொள்ளும் நபர்களின் மூலமாக அறிய நேர்ந்தேன்.

இதை சட்டபூர்வமாக விரிவாக பார்க்கலாம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி இரவிச்சந்திரபாபு அவர்களின் முன்னிலையில் ஒரு வழக்கு வந்தது. அவ்வழக்கின் மனுதாரர் இளங்கோவன் என்பவர் சுமார் 1.30 ஏக்கர் விஸ்தீரணமுள்ள பூமியில் பரம்பரையாக குடியிருந்து வருகிறார். இந்த மனுதாரருக்கு பல்வேறு இடங்களில் நிலங்கள் இருக்கின்றன. ஆகவே அரசு வருவாய் துறையினர் இளங்கோவனிடம் இந்த இடத்தினை நிலம் இல்லா ஏழைகளுக்கு வழங்க இருப்பதாகவும், ஆகவே உடனே காலி செய்யும்படியும் சொல்லி இருக்கின்றார்கள். இதற்கு உள்ளாட்சி அமைப்பினரும் உடந்தை.

இந்த இடத்தில் ஒரு குறிப்பு : பல கிராம பஞ்சாயத்து தலைவர்களும், நகரப் பஞ்சாயத்து தலைவர்களும், பஞ்சாயத்துக் கூட்டத்தில் நத்தம் நிலங்களின் உரிமை பஞ்சாயத்தாருக்கு இருப்பது போலவும், அதை பொதுப்பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என்பது போலவும் தீர்மானங்களை நிறைவேற்றி, அதை வி.ஏ.ஓ மூலம் ரெவின்யூ அதிகாரிகளின் வழியாக பட்டாக்களையும் மாற்றி இருக்கின்றார்கள். எனக்கு அழைத்த பலர் இந்தச் சம்பவத்தை விவரித்திருக்கிறார்கள்.

இனி தொடரலாம்.

இப்படியான சூழலில் வழக்கு மேல் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வருகிறது. 

இனி வழக்கில் என்ன சொல்லப்பட்டது எனப் பார்க்கலாம்.

நீதிமன்றத்தின் முன்னால் இரண்டு கேள்விகள் இருந்தன. 

ஒன்று -  கிராம நத்தம் அல்லது நத்தம் புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்ட சொத்திற்கு அரசுக்கோ அல்லது கிராம / நகர பஞ்சாயத்து அமைப்புக்கோ உரிமை இருக்கிறதா?

இரண்டு - அவ்வாறு இருப்பின் குடியிருந்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலுமா?

இக்கேள்விகளின் பதிலை இனி பார்க்கலாம்.

சென்னைப் பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் அகராதியில் கிராம நத்தம் என்றால் கிராமத்தின் வசிக்கும் பகுதி அல்லது பிராமணர் அல்லாதவர்கள் வசிக்கும் பகுதி அல்லது வீட்டு மனைகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து, சென்னை சட்டம் 3/1905 (Tamilnadu Land Encroachment Act 1905) ன் படி கிராம நத்தத்திலிருக்கும் உரிமையானது அரசுக்கு மாறுதல் செய்வதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் நத்தம் என்பது கிராமப்பகுதிகளாக வகை பிரிக்கப்பட்டன. அதில் குடியிருந்து வருபவர்கள் எவ்வளவு நிலத்தின் மீது அனுபோகத்தில் இருக்கிறார்களோ அதை அளந்து, தீர்வை விதித்து அவர்களுக்கு உரிமை உடையதாக்க வேண்டுமென்கிறது மூன்றாம் சட்டத்தின் ஏழாம் பிரிவு. அதை அரசு தன் உடமையாக கருதக்கூடாது.

பெரும் பணக்காரர்களாக இருந்தாலும், கிராம நத்தத்தில் குடியிருப்பவர்கள் பல நிலங்களை உடையவர்களாக இருந்தாலும், அரசு அதைக் கையகப்படுத்த முடியாது. அது குடியிருப்பவர்களுக்கு மட்டுமே உரிமையானதாகும்.

கிராம பஞ்சாயத்தார் ரெவின்யூ விவகாரங்களில் தலையிட்டு சொத்தின் உரிமை மாற்றம் செய்வதற்கு பஞ்சாயத்து தீர்மானங்கள் மூலம் ஏதும் செய்ய முடியாது. அவ்வாறு செய்வது சட்ட விரோதம்.

இந்த வழக்கின் ஆதாரமாக தில்லைவனம் எதிர் மாவட்ட ஆட்சித்தலைவர் செங்கை அண்ணா மாவட்டம் (வழக்கு எண்:1998-3-LW-603)  மற்றும் எக்ஸிகியூட்டிவ் ஆபீசர் கடத்தூர் டவுன் பஞ்சாயத்து எதிர் பி.சுவாமிநாதன் (வழக்கு எண் 2004-3-LW- 278) ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமல்ல கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்ட இடத்தில் நிலத்தின் உரிமையாளர் விவசாயம், குடோன் மற்றும் இதர வாழ்வாதாரத்துக்கு தேவையானவற்றைச் செய்து கொள்ளலாம். இதற்கு அரசு எந்த வித தடங்கலும் ஏற்படுத்த முடியாது.

ஆகவே நண்பர்களே, இப்போது உங்களுக்கு கிராம நத்தம் என்றால் என்ன, அதன் உரிமையாளர் யார் என்ற விபரங்கள் தெரிந்து இருக்கும்.

இந்த விபரங்கள் தெரியாத அப்பாவிகளை ரெவின்யூ அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்பினரும் மிரட்டி சட்ட விரோதமாக ஆக்கிரமிப்புகளை உருவாக்கி ஏமாற்றி வருகிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு வி.ஏ.ஓ புதிதாக பொறுப்பேற்கும் கிராமத்தில் இருக்கும் பட்டா வழங்கப்படாத நத்தத்தில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பட்டா வழங்கி ஊழல் செய்திருக்கிறார்.

மனுக்கள் போட்டால் எந்த வித காரியமும் நடக்காது. இப்படிச் சட்டத்திற்குப் புறம்பான வழியில் பிறரின் சொத்தின் உரிமையைத் திருடும் நோக்கில் செயல்படும் எவராக இருப்பினும் அவரைச் சட்டத்தின் முன்பு நிறுத்தி பணி நீக்க ஆணை பெறல் வேண்டும்.

மிகச் சரியான ஆவணங்களையும், வழக்கும் போட்டு நிவாரணம் பெற பாதிக்கப்பட்டவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைக் கட்டணம் உண்டு. ஏனென்றால் தினமும் உங்களைப் போல எனக்கும் பசி எடுக்கும் அல்லவா?

இப்பதிவினை பலருக்கும் பகிர்ந்து விடுங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

தொடர்ந்து இணைந்திருங்கள்

எனது யூடியூப் சானல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திருங்கள்.

https://www.facebook.com/goldonlineproperties

https://www.youtube.com/c/goldonline