குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, August 14, 2018

இரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்

ஆவணம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்க ஆரம்பித்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் இன்றும் என்னை விட்டு அகலாது அவ்வப்போது காலை நனைக்கும் கடலலைகள் போல நினைவுகளைச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கின்றன. கிருஷ்ணமூர்த்தி என்றொரு ஓவிய ஆசிரியர் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். ஆறாம் வகுப்பிற்கு அவர் ஓவியப்பயிற்சியுடன், ஆங்கிலமும் சொல்லிக் கொடுத்தார். கதைகள் சொல்லிக் கொண்டிருப்பார். அவருக்கு ஒரு உள் பிரச்சினை இருந்து கொண்டே இருந்தது. ஆங்கிலம் அவருக்குச் சரியாக வராது. அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். ஏனென்றால் அடியேன் தான் வகுப்பின் லீடர். பேப்பர் திருத்துவதிலிருந்து மக்கு பசங்களுக்கு மாலையில் டியூசன் சொல்லிக் கொடுப்பதிலிருந்து அவருக்கு நிரம்பவும் பிடித்த மாணவன் நான். வாரம் தோறும் அவரின் வீட்டுக்கு நானும் தங்கையும் சென்று விடுவோம். தனியாகத்தான் இருந்தார். எனக்கு ஆங்கில இலக்கணமும் படிக்கவும் சொல்லித்தருவார்.

என்னென்னவோ செய்து பார்ப்பேன். ஓவியம் மட்டும் எனக்கு வரவே வராது. முடிந்த அளவு முயற்சிப்பேன். ஓவியத்தில் இருக்கும் நாசூக்கு எனக்கு வரவில்லை. அவரும் பல தடவை சொல்லிக் கொடுத்தார். இருந்தால் தானே வருவதற்கு? ஒரு தடவை கூட முகம் சுளித்ததே இல்லை.


என்னைப் படைத்த இறைவனுக்கு எப்போதுமே என் மீது அதிக கரிசனம் உண்டு. என்னிடம் இருக்கும் ஒவ்வொன்றாய் பிடுங்கிக் கொண்டு ”இவன் என்ன செய்வான்னு பார்ப்போம்” என விளையாடிக் கொண்டே இருக்கிறான். பால் குடி மறக்கா குழந்தையாக இருக்கும் போது நடக்கமுடியாமல் கால்களை பறித்துக் கொண்டான். அசரவில்லையே நான். அது அவனுக்கும் எனக்குமான கணக்கு. அதை நான் அவனுடன் தீர்த்துக்கொள்கிறேன். இப்படித்தான் எனக்கு மிகவும் பிடித்த என் ப்ரிய ஆசிரியரை அவன் வேறு பள்ளிக்கு மாற்றினான். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்னை விட்டு வேறோரு ஊருக்குச் சென்றார். இப்போது அவர் எங்கிருக்கின்றாரோ? இல்லையோ? தெரியவில்லை.

அதன் பிறகு ஜோசப் அமல்தாஸ் என்றொரு வாத்தியார் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை டியூசன் சொல்லிக் கொடுத்தார். அவரின் பெல்பாட்டம் பேண்ட் ரொம்ப பேமஸ். சைக்கிளில் வருவார். சட்டைக்காலர் கூட ஆட்டுக்காது போல கிடந்து அல்லாடும். ஒரு பைசா என்னிடம் வாங்கியதில்லை. நானும் அவர் எனக்குச் சொல்லித்தரும்படி வைத்துக் கொள்ளவும் இல்லை. ஆனால் அவரிடம் படித்தேன். படித்துக் கொண்டே இருந்தேன். ரொம்பவும் கண்டிப்பான ஆசிரியர். அவரைப் நெஞ்சுக்குள் திடுக்கென்று இருக்கும். ஆங்கிலத்தில் டென்ஸ் (TENSE) வைத்து வாக்கியங்கள் எழுதக் கற்றுக் கொடுத்தவர் அவர். அதை வைத்துதான் கல்லூரியில் படிக்கும் போது ஆங்கில புயலைச் சமாளித்தேன். இன்றைக்கும் எனது ஆங்கிலப் புலமையில் என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவரே !

டியூசனுக்குச் செல்லும் போது அவர் அறையின் அருகில் இருந்த மற்றொரு அறையில் வேறொரு பள்ளியில் வேலை செய்து வரும் ஆசிரியர் தங்கி இருந்தார். பார்க்கும் எவரிடமும் எளிதில் ஒட்டிக் கொள்ளும் பழக்கம் எனக்கு. அந்த ஆசிரியருடன் பழகிக் கொண்டேன். ஒரு மண்ணெண்ணய் ஸ்டவ். இரண்டு மூன்று பாத்திரங்கள். ஒரு சில கரண்டிகள். நான்கைந்து உடைகள். கைலிகள் இரண்டு. ஏதோ ஒரு ஊர்ப் பெயர் சொன்னார். நினைவில் இல்லை. கல்யாணம் ஆகி விட்டது என்றார். அவர் சமைக்கும் போது அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன். நாசூக்கு என்றால் அப்படி ஒரு நாசூக்கு. சுத்தமென்றால் அப்படி ஒரு சுத்தம். ஆனால் சமையலில் மண்ணெண்ணெய் வாடை அடிக்கும். ஏதேதோ பேசிக்கொண்டிருப்பார். கேட்டுக் கொண்டிருப்பேன். சிறிது நேரம் அமைதியாக இருப்பார்.

புல்புல்தாராவை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? அவர் வைத்திருந்த புல்புல்தாராவை எடுத்து வாசிப்பார். அது அழுது கொண்டே இருக்கும். அவரின் நெஞ்சுக்குள் எந்தக் காதலி அமர்ந்து கொண்டு சோக கீதத்தை வாசித்துக் கொண்டிருந்தாரோ? தெரியவில்லை. அதைப் பற்றி என்னிடம் அவர் ஏதும் சொன்னதும் இல்லை. அவர் புல்புல்தாராவை வாசிக்கும் போதெல்லாம் சோகமாகவே இருக்கும். ஞாயிறுகளில் அவரைச் சந்திக்கச் சென்று வருவேன். அவரின் அந்த வாசிப்பு எனது அந்த வயதில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அவர் அறையின் நேர் கீழே இருந்த வீட்டில் ஒரு குடும்பம் தங்கி இருந்தது. அந்தக் குடும்பத்தின் தொழில் ஐஸ் விற்பது. மலர்ந்த மல்லிகை போன்ற ஒரு முகம் எனக்கு மாலையில், விற்காமல் மீதமிருக்கும் ஐஸைக் கொண்டு வந்து நீட்டும். எனக்கு மட்டுமே நீட்டும். முக்காடிட்டு ஒற்றைக் கண்ணில் வழிந்தோடும் பாசத்தைக் காட்டும் அந்தக் கண்கள் இப்போதும் என் கனவுகளில் வந்து என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து கொள்வேன். பின்னர் தூக்கம் வராது. மனது தவியாய் தவிக்கும். அந்தக் கண்கள் இப்போது என்னவாக இருக்குமோ தெரியவில்லை.


கண்கள் என்றைக்கும் அழிவதில்லை. அதன் அழகும் குறைவதில்லை. கண்கள் சொல்லும் கவிதைகளும், அதன் பேச்சுகளையும் இதுவரை எழுதி எழுதியே களைத்துப் போன கவிதையாளர்களால் கூட கண்களின் பேச்சை எழுத முடியவில்லை. கண்களுக்கு மொழியே தேவையே இல்லை அல்லவா?

கருணை பொங்கி, ப்ரியமாய் வழிந்தோடிய அந்தக் கண்களின் அன்பில் நனைந்து, நனைந்து மூழ்கி அதிலேயே கரைந்து போக மனது தவிக்கிறது. 

Monday, August 13, 2018

தமிழகம் ஒரு தர்மபூமி

திருவள்ளுவர் !  இதைத்தவிர வேறொன்றினையும் தமிழகம் ஒரு தர்ம பூமி என்பதற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டியதில்லை. தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அதை எவரும் நம்புவதும் இல்லை. ஆனால் இப்போது நம்பித்தான் ஆக வேண்டும். இந்தக் காலத்தில் தர்மமாம், அதர்மமாம் என்று கேலி பேசுபவர்கள் அதிகமிருக்கின்றார்கள். புத்தகங்களில் இருப்பவை எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது என்றெல்லாம் அடுக்கடுக்காக காரணங்களை அடுக்குவார்கள். 

இப்படித்தான் கண்ணதாசன் ஆரம்பத்தில் கடவுளே இல்லை என்று கடுமையான நாஸ்திக உணர்வில் கடவுள் மறுப்பு கட்டுரைகளைத் தீட்டி வந்தார். பேசியும் வந்தார். அவரின் கடைசிக் காலத்தில் கண்ணனின் கீதைக்கு உரை எழுதினார். ”கண்ணா ! கண்ணா !!” என்று உருகினார். 

இதை இப்போது எழுதக்காரணம் இருக்கிறது. எழுதத்தான் வேண்டுமா? என்று கூட யோசித்தேன். 

பதினோறு வயசுக் குழந்தையைக் கூட கற்பழிக்கும் காமாந்தகர்கள் இங்கு இருக்கின்றார்கள். இன்றைக்கு என்ன? என்பது பற்றிச் சிந்திக்கும் சிந்தனாவாதிகளுக்கு, நின்று கொல்லும் தர்மம் பற்றிய ஒரு சில விஷயங்களைச் சொல்லலாம் என நினைக்கிறேன். 

குறுக்கே நூல் போட்டவெனெல்லாம் கடவுள்கள் என்று பேசும் அறிவிலிகள் இங்கு அதிகமிருக்கின்றார்கள். கடவுளையும் காசு பண்ணும் அதிபுத்திசாலி மடையர்களும் இருக்கின்றார்கள். ஆன்மீகத்தின் பெயரால் ஒன்றுமறியா எதார்த்த மனிதர்களின் சொத்துக்களை உறிஞ்சிக் கொழுத்து காமத்தில் திளைத்து, உலகியல் இன்பங்களை நுகர்ந்து தெரியும் சாமியார்ப்பயல்களும் இங்கு இருக்கின்றார்கள். மதத்தின் பெயரால், வேதப் புத்தகங்களின் பெயரால் கொலை செய்யும் கொடூர மதிபடைந்த மாந்தர்களும் இங்கு இருக்கின்றார்கள். அரசியலின் பெயரால், அதிகாரத்துக்கு வந்து அடாத கொலைகளையும், துடிக்கதுடிக்க பறித்துத் தின்னும் கொள்ளையர்களும் இங்கு இருக்கின்றார்கள். நீதியின் பெயரால் அதிகாரத்திற்கு வரும் நீதிமான்களும் பதவிக்காக தர்மத்தை விற்றுக் காசாக்கும் அற்ப மனம் படைத்த அயோக்கியர்களும் இங்கு இருக்கின்றார்கள். தானொன்றே நிதர்சனம் என்று பேசித் திரிபவர்களும் இங்கு இருக்கின்றார்கள். பேனாவிற்குள் ரத்தத்தையும், நீதியைக்கொன்ற பாதகத்தையும், அரசியல்வாதிக்கும் அடிபணிந்து நக்கி விடும் எச்சிலையும் போட்டு எழுதும் பத்திரிக்காவாதிகளும் இங்கு இருக்கின்றார்கள். எது உண்மை? எது பொய்? என்று உணரா வண்ணம் தீது பேசி, புறம் கூறி வாழ்க்கை நடத்தும் இழிபிறந்தார்களும் இங்கு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எல்லாம் தர்மம் என்ற ஒன்று இருக்கிறது என்பது பற்றிய சிந்தனை இருப்பதில்லை. அதிகாரமும், அகங்காரமும் அனைத்தையும் மறைத்து விடுவதால் அடாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அப்படியானவர்களின் கடைசி என்ன என்று எவருக்கும் தெரிந்திருக்கப்போவதில்லை. அதைப் பற்றித்தான் இப்போது படிக்கப்போகின்றோம். 

ஆட்டோ ஷங்கர் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் குற்றச்செயல்களில் ஈடுபடும்போது நமக்கு இப்படி ஒரு முடிவு இருக்குமா? என்று நினைத்துப் பார்த்திருப்பாரா? ஹிட்லர் தன் முடிவு இப்படித்தான் இருக்கும்? என நினைத்தாவது பார்த்திருப்பாரா? உலகையே ஆள நினைத்த நெப்போலியனுக்கும், அலெக்‌ஷாண்டருக்கும் அவர்களின் இறுதிக்காலம் இப்படி ஆகி விடும் என்று தெரிந்திருக்குமா? நிச்சயம் தெரிந்திருக்காது. அவ்வாறு தெரிந்து இருந்தால் எவரும் ஒருவரையாவது நாட்டினைப் பிடிக்கும் ஆசையில் கொலை செய்திருப்பார்களா? 

ஒரு காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் நான்கு கைகளாலும் லஞ்சம் வாங்கி சொத்துக்களைக் குவித்தார். தனது இரண்டு மகன்களும் அவரின் கண் முன்னே காரில் நசுங்கிச் செத்ததைப் பார்த்து பைத்தியமாகிப் போனார். கல்விக்கு காசு வாங்குவது தலைமுறைக்குற்றம். கல்வி அறிவித்தவன் கடவுள் ஆவான் என்றார்கள் நம் முன்னோர்கள். ஆனால் அதற்காக காசு வாங்கிக் குவித்த ஒருவர் தன் ஒரே மகனைப் பரிகொடுத்து இன்றைக்குப் படுக்கையில் இருக்கிறார். ஓடி ஓடி, அடித்துப் பிடித்து, அடுத்தவனைக் கெடுத்துப் பிடுங்கிச் சம்பாதிக்கின்றவர்களின் இறுதிகாலம் கொடுமையானதாக இருக்கிறது. வயதானவர்களிடம் பேசிப்பாருங்கள். பெற்ற பிள்ளைகள் பெற்றோர்களை காப்பகத்தில் கொண்டு போய் தள்ளி விட்டு விடுகின்றார்கள். பின்னே எதற்கு ஓடி ஓடி சம்பாதித்தார்கள் என்றால் அப்போது தெரியவில்லை, இப்போதல்லவா தெரிகிறது என்று தத்துவம் பேசுவார்கள். நோயில் வீழ்ந்து நொடிக்கு நொடி அவஸ்தைப் பட்டு அனாதையாகச் செத்துப் போவார்கள்.

பூமி இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. எல்லாமும் இருக்கிறது. ஆனால் அதை ஆளும் ஆட்கள் எங்கே போனார்கள்? தமிழகத்தை ஆண்ட அரசியல்வாதிகள் ஒவ்வொருவரின் வாழ்க்கை ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்துப் பார்த்தால் அவர்கள் ஆடிய ஆட்டங்களும், அவர்களின் கடைசிக்கட்ட வாழ்க்கை முடிவுகளும் கண் முன்னே சாட்சியாக வந்து நின்று கொண்டிருக்கின்றன. இத்தனையும் தெரிந்தும் மனிதர்கள் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அது அவர்களின் அறிவிலித்தனமாகத்தானே இருக்க முடியும்?

அண்டை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டுக்குள் காவிரியில் பொங்கி வரும் தண்ணீரை திருப்பி விட முடியுமா? அவர் காவிரியில் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட திறந்து விடக்கூடாது என்று பேசினாரே இப்போது பேசச் சொல்லிப் பாருங்களேன்.

அணையில் இத்தனை அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கக்கூடாது என்று கோர்ட்டில் அடாது செய்தார்களே இப்போது தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறார்களே, அந்த மழையிடம் சென்று அதிகாரத்தைக் காட்ட முடியுமா? கோர்ட்டில் வழக்குப் போட்டு, சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி மழையைத் தடுக்க முடியுமா? குறைந்த பட்ச மனிதாபிமானமும் இன்றி பேசியவர்களுக்கு இப்போது பிறரின் மனிதாபிமானம் தேவைப்படுகிறது அல்லவா? இதுதான் தர்மத்தின் கணக்குத் தீர்க்கும் வழி!

தண்ணீர் - உயிர் நீர். இயற்கையின் அற்புதப் படைப்பு. இயற்கையின் முன்னே மனிதர்கள் எல்லாம் அற்பத்திலும் அற்பமானவர்கள். எந்தத் தண்ணீரால் பாதிப்பு என்று பொய் பேசினார்களோ அது உண்மையாக நின்று அவர்களின் முன்னே “நாட்டியம் ஆடுகிறது”

அதைத் தரமாட்டோம் என்று பேசியவர்கள் எல்லோரும் இப்போது என்ன பேசுவார்கள்? இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து மழை பெய்தால் ஒரு மாநிலமே கடலுக்குள் சென்று விடும். இன்னொரு மாநிலமோ கதிகலங்கிப் போகும். அண்டை மாநிலங்களை நோக்கி நீளும் அவலக்குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. அன்றைக்கு ஆணவக்குரல்கள் ஒலித்தன. இன்றைக்கு அவலக்குரல்கள் எழும்புகின்றன. ஒவ்வொரு  மாநில மக்கள்களையும் தன் சுய நலத்துக்காக பிரித்தாண்ட அரசியல்வாதிகள் இப்போது தங்கள் கட்சியினரை வைத்து எல்லாம் செய்ய வேண்டியதுதானே? ஏன் செய்ய முடியவில்லை? உதவுங்கள் என்று அலறுகின்றார்களே ஏன்?

தர்மம் நின்று கொல்லாது. சுத்தமாகத் துடைத்துப் போட்டு விடும். சென்னையில் அட்டூழியங்கள் அதிகரிக்கையில் சுனாமியும் வந்தது. மழையும் வந்தது. சுத்தமாகத் துடைத்து போட்டு விட்டுப் போனது.

இந்தியா தர்ம பூமி. அதில் தமிழகமோ ஆன்மீக பூமி. ஆடும் வரை ஆட விட்டு, பின் மொத்தமாகப் பிடுங்கிக் கொண்டு விடும் தர்மத்தின் கடவுள்கள் உறையும் அற்புதமான பூமி. தமிழகம் மட்டுமே மனிதர்கள் வாழ மிகத் தகுதி வாய்ந்த அற்புதமான பூமி. வேறு எங்கிலும் தமிழகத்தைப் போன்ற வாழ்விடம் இல்லை.  தமிழகத்துக்கு அடாது செய்தால் படாதபாடுபடுவார்கள் என்பது உண்மை.

தமிழகத்தில் தமிழராய் வாழ நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

இந்தப் பூமிப் பந்தில் மனிதர்கள் வாழும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு தமிழனும் வாழ்வான். வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான். ஏனென்றால் அவன் தர்ம பூமியில் பிறந்தவன். அவனின் பாதை தர்மத்தின் பாதை. 

(இக்கட்டுரை யாரையும் எவரையும் புண்படுத்த வேண்டுமென்று எழுதவில்லை. உண்மையை எடுத்துச் சொல்லி இருக்கிறேன். தர்மத்தின் பாதையைப் புரிந்து கொள்ள முயலுங்கள். வாழும் வரை பிறரை நிந்திக்கா வண்ணமாவது வாழலாம். நிந்தனை செய்து வாழ்பவர்கள் நித்தமும் சித்ரவதைப்பட்டு சீரழிந்து போவார்கள் என்கிறது தர்மம்)

Friday, August 10, 2018

கண்ணீர்

ஒரு கதை உங்களுக்காக !

சாத்தானை நோக்கி ஒருவன் மூச்சிரைக்க ஓடி வந்தான். சாத்தான் அவரை ஏறிட்டு என்னவென்பது போலப் பார்த்தான்.

“சாத்தானே! போச்சு! போச்சு!! எல்லாம் போச்சு. யாரோ ஒருவன் உண்மையைக் கண்டுபிடித்து விட்டானாம். அவன் அதை பிறருக்குச் சொல்லி விட்டால் நம் கதி அதோ கதிதான்” என்று கதறினான்.

சாத்தான் அவனைப் பார்த்துச் சிரித்தான்.

”அவ்வாறு கவலைப்பட ஏதும் இல்லை. அந்த உண்மையைக் கண்டுபிடித்தவன் கூட நம் ஆட்கள் இருக்கின்றார்கள், அவர்கள் அந்த உண்மையை வெளியிட விடாமல் பாதுகாப்பார்கள்” என்றான் சாத்தான்.

“அவ்வாறு நம் ஆட்கள் ஒருவரையும் அங்கு பார்க்கவில்லையே?” என்றான் ஓடி வந்தவன்.

“அவர்களை உனக்குத் தெரியாது. அந்த உண்மையக் கண்டுபிடித்தவன் அருகில் அறியவியலாளர்கள். தர்க்கவாதிகள், ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள், மதவாதிகள், பூசாரிகள் போர்வையில் நம் ஆட்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அவன் உண்மையை உலகுக்குச் சொல்லும் முன்பு, அதைப் பற்றி விவாதிப்பார்கள், ஆராய்ச்சி செய்வார்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்துக்களைத் திணிப்பார்கள். ஆக அங்கே உண்மை காணாமல் போய் இவர்களின் பேச்சுக்களும், ஆராய்ச்சிகளும் தான் வெளியில் வரும். இவர்களைச் சமாளித்து அந்த உண்மையக் கண்டுபிடித்தவன் எங்கே வெளியில் சொல்லப்போகின்றான்? இவர்களைச் சமாளிக்கவே அவனுக்கு நேரம் போதாது. ஆகவே உண்மை வெளியில் போகாது. கவலைப்படாதே. என்றும் நம் ஆட்சி தான் இங்கே” என்றான் சாத்தான்.

ஓஷோ தனது “தாவோ - ஒரு தங்கக்கதவு” நூலில் சொன்ன கதைதான் இது.

அது என்ன தாவோ என்று கேட்கத்தோன்றும்.

எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ”அது ஏற்கனவே உள்ளது”. இதைப் பற்றி சீன தேசத்தைச் சேர்ந்த லாஓ-ட்ஸே என்பத்தோரு குறிப்புகளை எழுதி இருக்கிறார். இருப்பினும் தாவோ பற்றிய வார்த்தைகள் அதில் முழுமையற்றவையாக இருக்கின்றன.

Tao - Te Ching - நூலில் இருந்து ஒரு பகுதி
=====================================

Chapter Eighty-one
====================
Words of truth are not pleasing.
Pleasing words are not truthful.
The wise one does not argue.
He who argues is not wise.
A wise man of Tao knows the subtle truth,
And may not be learned.
A learned person is knowledgeable but may not know the subtle truth of Tao.
A saint does not possess and accumulate surplus for personal desire.
The more he helps others, the richer his life becomes.
The more he gives to others, the more he gets in return.
The Tao of Nature benefits and does not harm.
The Way of a saint is to act naturally without contention.

(உங்களுக்கு என் நன்றி லாஓ-ட்சே)

இயற்கையோடு இயற்கையாக கரைந்து போக, வந்த சுவடு கூடத் தெரியாமல், இருந்த இடம் தெரியாமல், வந்தது எப்படியோ அப்படியே சென்று விட வேண்டுமென்று சீனத்திலிருந்து புறப்பட்டு இமயமலைக்கு வந்த லாஓ-ட்சேவை நாட்டின் எல்லைப்பகுதி வீரன் தடுத்தான். அவர் இமயமலைக்குச் செல்ல வேண்டுமாயின் அவரின் அனுபவங்களை எழுதிக் கொடுத்த பிறகு அனுமதிக்கும்படி சீன மன்னன் உத்தரவிட்டிருந்ததைச் சொன்னான். லாஓ-ட்சே என்னனென்னவோ சொல்லிப் பார்த்தார். அந்த வீரன் விடுவதாயில்லை. வேறு வழி இன்றி அவனின் கூடாரத்தில் தங்கி மேற்கண்ட புத்தகத்தை அல்ல அல்ல குறிப்புகளை எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றார் என்று சொல்கின்றார்கள்.

இப்படித்தான் தாவோவுக்கு புத்தகம் எழுதப்பட்டதாம். தாவோ என்பது இயற்கை. என்றும் இருப்பது. அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்கிறார் ஓஷோ.

இயற்கையின் நியதி பிறப்பு - இறப்பு.

கலைஞர் - ஒரு வரலாற்றுப் புதினம். அவரின் வாழ்க்கையே வரலாறு. இவ்வுலகம் சர்வாதிகாரிகளையும், ஜனநாயகவாதிகளையும், கொடுங்கோலர்களையும் வரலாற்றாகப் பதிய வைத்திருக்கிறது. மக்களின் மூளைக்குள்ளே சர்வாதிகாரம், ஜனநாயகம் இரண்டும் எதிர் எதிர் துருவங்களாகப் பதிக்கப்பட்டு வருவதற்கு வரலாறு தான் காரணம். இவற்றை முன்னெடுத்தவர்களுக்கு வரலாற்றின் ஏடுகள் காத்திருக்கின்றன. அந்த வகையில் தமிழக மக்களுக்கு ஜனநாயகக் கடமையாற்றிய ஒரு தலைவர் மறைந்து போகிறார் என்றால் அது மனிதர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் ஒன்றுதான். இயல்புதான். ஆச்சரியமில்லை. ஆனால் வயதானவர் தன் கடைசி நாட்களை எளிமையாக, எளிதாக, இயல்பாக கடக்க முடியாமல் மருத்துவச் சாதனங்களால் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுதான் அறிவியலின் கோரத்தைக் காட்டியது.

அறிவியல் இயற்கைக்கு முரணானது. அறிவியல் மனிதகுலத்துக்கே விரோதமானது. (அறிவியல் இல்லையென்றால் தங்கம் பதிவெழுத முடியுமா? என்று ஆரம்பித்து விடாதீர்கள். இது வேறு, நான் சொல்லி இருப்பது வேறு)

எல்லோரும் கலைஞராக முடியாது. ஒவ்வொருவரும் தனியானவரே. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஒரு சாதாரண கூலித்தொழிலாளிக்கு விதிக்கப்பட்டது என்னவோ அதைச் செய்து அவன் தன் காலத்தை கடப்பான். அதைப் போலவே ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்டது எதுவோ அதைச் செய்து அவர்கள் காலத்தைக் கடப்பார்கள். மனிதன் காலத்தைக் கடந்து செல்வதுதான் முழு வாழ்க்கை. இடையில் இருப்பது அவனின் நாட்கள். அதை இன்பமாகவோ, துன்பமாகவோ அவனின் அறிவுகேற்ப மாற்றிக் கொள்கிறான். அறிவு என்று வந்து விட்டால் துன்பம் தானாக வந்து விடும் என்கிறார் ஓஷோ.

கலைஞர் மறைவைத் தொடர்ந்து காவேரியில் பொங்கிய தண்ணீரை விட அவரின் தொண்டர்களின் கண்ணீரே அதிகமானது. இப்படியும் பிறரின் மனத்துக்குள் ஊடுறுவ முடியுமா? என்று ஆச்சரியம்தான். கலைஞரின் தொண்டர்கள் சிந்திய கண்ணீர் கண்டு உள்ளம் கனத்தது. ஸ்டாலின் அழுதது அவரின் அப்பாவுக்காக. அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் ஒரு தொண்டன் (காவேரி நியூஸ்) அடித்துக் கொண்டு அழுதானே அதைக் காண்கையில் நெஞ்சுக்குள் வலித்தது. அவன் தன் தலைவன் மீது கொண்ட பக்தியை, பாசத்தை நினைக்கையில் பாசம் என்பது எவ்வளவு பெரிய கொடுமையான மாயவலை என்று அறிய நேர்ந்தது. 

கதையும், அதைத் தொடர்ந்த தாவோவின் பதிவும் இப்போது உங்களுக்குள் ஏதோ குழப்பத்தைனை உருவாக்கி இருக்கும். கலைஞருக்கும், இந்தக் கதைக்கும், தாவோவிற்கும் உள்ள தொடர்புகளையும், கலைஞரின் மறைவைத் தொடர்ந்து தற்போது நடந்து வருபவைகளை ஒவ்வொன்றோடும் ஒப்பிட்டுப் பாருங்கள். நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று தெரிய வரும்.

இன்னொரு கண்ணீர் கதையை தொடருங்கள்.

ஒரு முறை மேட்டுப்பாளையம் செல்ல வேண்டி இருந்தது. மதிய நேரமாகையால் ஒரு ஹோட்டலில் உணவு உண்பதற்காக காரை நிறுத்தினார் நண்பர். நான் காரில் வழக்கம் போல அமர்ந்து கொண்டேன். நண்பரிடம் ’நான்கு கவழம் சோறும், இரண்டு கப் காய்கறிகளும் போதும்’ எனச் சர்வரிடம் சொல்லுங்கள் என்றுச் சொல்லி இருந்தேன். சாப்பாடு கொண்டு வந்தது ஒரு பெண். நான் ஒரு வாரம் சாப்பிடும் சாப்பாட்டினைத் தட்டில் வைத்து குழம்பு, கூட்டு வகையறாக்களை இன்னொரு தட்டில் கொண்டு வந்து கொடுத்தார். மலைத்தே போனேன். கையில் கொடுத்து விட்டு விடு விடுவென்று சென்று விட்டார்.

தட்டினை எடுக்க வரும் போது மீதமிருந்த சோற்றினைப் பார்த்து விட்டு, ”இன்னும் சாப்பிடல்லயா?” என்றார். 

 “சாப்டேம்மா, நீதானம்மா உண்மையான அன்னபூரணி” என்றேன்.

“என்ன சொன்னீங்க?”

“அன்னபூரணி”

ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்தது. அவரின் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது.

“என்னை யாரும் இப்படிச் சொன்னதேயில்லைங்க” என்றுச் சொல்லியபடி தட்டுக்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றது.

”நீங்க சுத்த மோசம் தங்கம், எதையாவது சொல்லி எல்லோரையும் அழ வைத்து விடுகின்றீர்கள்” என்று நண்பர் கோபித்துக் கொண்டார்.

கண்ணீர் மனதை லேசாக்கும் காற்றைப் போல. 

காய்த்துப் போன கைகள், கலைந்த கேசம், கருத்துப் போன முகம். ஆனால் அந்தப் பெண்ணின் கைகளோ கர்ணன். பசிக்குச் சோறிடுவது அன்னபூரணிதானே?

உண்மையைச் சொன்னால் உடனே தர்க்கவாதிகளும், வேதாந்த சித்தாந்தவாதிகளும் குறை சொல்ல வந்து விடுகின்றார்கள். நண்பரின் பேச்சை நிராகரித்தேன்.