குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, October 18, 2019

நரலீலைகள் - வழியும் காதலில் ராதே (6)

அன்பே ராதே...!

எல்லைகளற்ற பிரபஞ்சத்தின் எண்ணற்ற தூசிகளில் ஒரு தூசியான பூமியில் பூத்த கள்ளம் கபடமற்ற ஒரே ஒரு ஜீவன் நீதானடி..!

சத்தங்கள் அற்ற உலகில் வசிக்கும் என் மென்மையான இதயத்தை, உன் புன்னகையால் கீறிச் செல்லும் ஒலியைக் கொண்டவளே...!

உதட்டோரம் நெளியும் சுளிவுகளில் நடனமாடும் புன்னகையை நிரப்பி, பூமியில் நிற்கவே முடியாமல் நிலை தடுமாறும் வகையில் நின்று கொண்டு, உன் மோகனப் புன்னகையால் கோடானு கோடி ஈட்டிகளை, என்னை நோக்கி எரியும் அன்பானவளே...!

உன்னால் உன்மீது காதலால் தகித்துப் பொங்கும் எரிமலையில் உன் அமுத கண்களில் துளிர்க்கும் ஒரு துளி நீரை விட்டு காதலால் அணைத்து முகிழும் அற்புத அழகே...!

பிரவாகத்தில் அமைதியாய் பூக்கும் மலரைப் போல மென்மையானவளே, உன் காதுகளில் அணிந்திருக்கும் அழகான பொன் வேய்ந்த காதணிகள் ஆடும் நர்த்தனம் கண்டு, உள்ளம் சோர்ந்து போனதடி....!

ராதே... உன் பெயர் தானடி காதல்... நீதான் காதல்... காதலில் மூழ்கிப் போய் மூச்சடைத்து பிரஞ்கையற்றுப் போய்க் கொண்டிருக்கிறேனடி....!

என்னை உன் காதலால் நிரப்பி விட்டாயடி மோகனத்தில் மோனத்தைக் காட்டும் தேவியே...!

காதல்...! காதல்...!! காதல்...!!!

ராதே...! ராதே...!! ராதே...!!!



* * *

வில்லன் இப்படி காதலில் மூழ்கி விட்டால், இந்த நாவல் எப்படி நகரும்? வாசகர்களே, நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். நாவல் ஆசிரியன் இந்த நாவலை எழுதிக் கொண்டே செல்வானென்று. ஆனால் அவனுக்கும் இந்த நாவலின் கதாபாத்திரங்களுக்கும் இடையில் சச்சரவுகள் எழும்பி விட்டதை நீங்கள் அறிந்துள்ளீர்கள் அல்லவா? கதாபாத்திரங்கள் ஆசிரியருடன் முரண்பாடு கொண்டால் என்ன ஆகும்? நாவல் வடிவு பெறாதே? கவலையாய் இருக்கிறேன் நாவலாகிய அடியேன்.

அஸாஸில் காதலில் மூழ்கிப் போனான். உலகம் இனி எப்படி இயங்கும்? என்னை இப்படி புலம்ப விட்டு விட்டானே ஆசிரியன். நாவல் இனி எப்படி உருவாகும் எனத் தெரியவில்லை. 

இந்தப் பாழாய்ப் போன காதல் அஸாஸிலுக்கு ஏன் வந்தது? ராதேயின் மீது காதல் கொண்டு, பித்துப் பிடித்தவன் போல அலைகிறான். ஏற்கனவே இந்த ராதே, இன்னும் கண்ணனை அடையாமல், ஏங்கி யமுனா நதிக்கரையோரம் அலைந்து கொண்டிருக்கிறாள். அவளை இவன் காதலிக்கிறானாம். என்ன கன்றாவியோ இது?

* * *

Monday, October 14, 2019

நிலம் (58) - மாற்றப்பட்ட அப்ரூவ்ட் பிளான் ஏமாற்றப்பட்ட உரிமையாளர்கள்

ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்புவது, துரோகம் என்று அலறுவது எல்லாம் மனிதனின் இயல்பு. ஏமாற்றவே புறப்பட்டவர்களிடம் ஏமாறுவது ஒன்றும் தவறு அல்ல. அது அவர்களின் டிசைன். இப்படித்தான் ஒருவன் என் உழைப்பை இரண்டு வருடம் உறிஞ்சினான். பின்னர் வசதியாக மாறிக் கொண்டான். அவனை இந்த உலகம் ஆஹா...! ஓஹோ... ! என்று பாராட்டுகிறது. இங்கு நியாயமும், தர்மமும் பேச்சிலும், புத்தகங்களிலும், வேதங்களிலும் மட்டும் தான் இருக்கின்றன. இன்னொருவனை ஏமாற்றுவது அல்லது அவனறியாமல் அவனிடமிருந்துது பிடுங்கிக் கொள்வது புத்திசாலித்தனமாக பார்க்கப்படுகிறது.

பல்வேறு துறைகளால் ஒருங்கிணைக்கப்பட்ட மாபெரும் சிக்கல்கள் நிறைந்த ரெவின்யூ துறை. சாலைத்துறையில் ஆரம்பித்து பல துறைகள் நிலத்திற்கான ஆவணங்களைப் பராமரித்து வருகின்றன. அவைகளை ஒருங்கிணைப்பது மிகவும் சவால் நிறைந்த பணியாகும். எனக்குத் தெரிந்து அது அவ்வளவு எளிதானது அல்ல. தியாகமும், அர்ப்பணிப்பும், நிலத்தின் அத்தனை சிண்டு சிடுக்களைத்  தெரிந்த  ஒருவரால் தான் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அல்காரிதமை உருவாக்க முடியும். ஆமை போல நகரும் அரசின் ரெவின்யூ பிரிவில் அதெல்லாம் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள்.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா? ஒரு மனிதன் இப்படி காசுக்காக செய்யத் துணிவாரா? என்று இப்பதிவைப் படிக்கும் போது உங்களுக்கு கேட்க தோன்றும். அந்தளவுக்கு கொடு மதியாளர்கள் சூழ் உலகு இது.

சமீபத்தில் வெளிநாடு வாழ் நண்பர் ஒருவரின் வாழ் நாள் உழைப்பை  போட்டு வாங்கிய சொத்தின் ஆக்கிரமிப்பு கண்டு கொதித்த எனக்கு கிடைத்தது நல்ல வசவு. கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டிய கட்டம். நண்பரின் நலம் மட்டுமே முக்கியமாக தெரிந்தது. வாளா இருக்க வேண்டிய சூழல். நண்பரோ  அமைதி விரும்பி.  அவர் சரி எனச் சொல்லி இருந்தால் ஆக்கிரமிப்பாளனின் மூளையைச் சூடாக்கி வெளியில் கசிய வைத்திருப்பேன். அந்த அயோக்கியன் பெற்ற இரு புதல்வர்கள், என்ன ஒரு வினோதம் தெரியுமா? அவர்களும் அப்படியே....! இவர்களை நம்பி இரு பெண்கள். அவர்களுக்கு இனி வாரிசுகள்  வரும்... ! கருவில் அழிக்க வேண்டிய அற்பர்கள் பூமியில் மனிதர்களாய் நடமாடுகிறார்கள். இன்னொருவனின் சொத்தினை ஆக்கிரமிப்பு செய்கிறோம் என்பது  அவர்களுக்கு சரியானது. அது அவர்களின் தர்மம். அது அவர்களுக்கு நியாயம். 

இதோ இன்னும் ஒரு சம்பவம் உங்களுக்காக....!

கோவை, வேடப்பட்டியில் 1987ல் ஒரு வீட்டு மனை அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அனுமதி பெற்றவர் சுமார் 19 வீட்டு மனைகளை பணம் வாங்கிக் கொண்டு ஒருவருக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்திருக்கிறார். அட்டர்னி வாங்கியவர் அரசு அனுமதி கொடுத்த மனைப்பிரிவை தனது வசதிக்காக மாற்றி புது பிளானை உருவாக்கி, பழைய அனுமதி எண்ணை வரைபடத்தில் போட்டு, ஊராட்சி மன்ற தீர்மானத்தின் படி விற்கிறேன் எனச் சொல்லி விற்று விட்டார்.

இரண்டு மூன்று கிரையங்கள் ஆகி விட்டன. கிரையம் வாங்கியவர்களில் பலர் மீண்டும் தற்போதைய மனை வரன்முறைப்படி பணம் கட்டி வரன்முறை பெற்றிருக்கின்றார்கள். யாரோ ஒருவர் இது பற்றி வழக்குப் போட பத்திரப்பதிவாளர் அந்த கிராமத்தின், அந்தக் குறிப்பிட்ட சர்வே நம்பர் நிலங்களின் கிரையங்களை நிறுத்தி விட்டார்.

பவர் எழுதிக் கொடுத்த உரிமையாளர், பவர் எழுதி வாங்கியவர் பணம் தரவில்லை, ஆகவே எல்லா பத்திரங்களையும் ரத்துச் செய்கிறேன் என்று சொல்லி கிளம்பி இருக்கிறார். அதுமட்டுமின்றி செண்டுக்கு ஒரு லட்சம் தாருங்கள் என்று தற்போதைய மனையை தன் பெயரில் வைத்திருப்பவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அவராலும் எழுதிக் கொடுக்க முடியாது. இடியாப்பச் சிக்கலில் இருக்கிறது பிரச்சினை. இதை எப்படி தீர்ப்பது? தீர்வு இருக்கிறதா? 

இல்லாமல் இருக்குமா? காலமும், பொருளும் செலவாகும். மன அமைதி போகும். உளைச்சல் அதிகமாகும். உழைத்த காசை இப்படித் திருடுகின்றார்களே என ஆற்றாமை உண்டாகும். ஆனால் சரி செய்யலாம். சரி செய்து ஆக வேண்டும். வேறு வழி????

ஆகவே நண்பர்களே... ! உங்களுக்குச் சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான். கவனமாய் இருங்கள். 

வெளி நாடுகளில் வசித்துக் கொண்டிருப்போர் கோவையில் சொத்துக்கள் வைத்திருந்தால், சொத்தினை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், வரி வகையாறாக்கள், வாடகை வசூல் செய்ய அணுகலாம். கலிகாலம் இது. ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது.

வாழ்க வளமுடன்....!