குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, March 31, 2014

மனதைப் போட்டு அழுத்துகிறதா பிரச்சினை? இதோ வழி

மனிதர்களில் பெரும்பாலானோருக்குப் பிரச்சினையே அவர்களின் மனசு தான். அரை நிமிடம் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்? அப்படியே அரை மணி நேரம் மனதில் எந்த ஒரு சிந்தனையும் இன்றி இருந்தால்....

தூக்கத்தில் தான் மனசு சிந்தனையற்று இருக்கும். அதுகூட சில சமயங்களில் கனவாய் வந்து மிரட்டும்.

வேறு வழி இன்றி தன்னிலை மறக்க தமிழக அரசின் மரணக்கடைக்குச் செல்ல வேண்டியதுதான். வித விதமான மருந்துகளை வாங்கிக் குடித்து தன்னிலை மறந்து போதையில் திளைத்தால் தான் மனதைப் பிடித்து அழுத்திக் கொண்டு படாதபாடு படுத்தும் அந்தப் பிரச்சினை தீரும்.

காதலி கோவித்துக் கொண்டு ஊடலாகி விட்டாள். உடனே தமிழக அரசின் மரணக்கடை மருந்து. மனைவி கோவித்துக் கொண்டு போய் விட்டார். உடனே தமிழக அரசின் மரணக்கடை மருந்து என்று எதற்கெடுத்தாலும் மருந்தாய்க் குடித்துக் குடித்து மரணத்துக்கு வரவேற்பு வைக்கின்றார்கள்.

சரி என்னதான் வழி என்கின்றீர்களா?

ஒரு பிரச்சினை வந்து விட்டது. பிரச்சினை ஒரு நாள் முடிவுக்கு வந்தே தீரும். முடிவு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொண்டு விடுவோம் அல்லவா? அதற்குள் ஏன் மனதைப் போட்டு குழப்பி, குழம்பி அய்யோ அம்மா என்று அரற்ற வேண்டும்?

ஆகவே என்ன பிரச்சினை வந்தாலும் சரி, உடனே அட... என்று உதறித் தள்ளி விடுங்கள். மனசு இலேசாகி விடும். ஒரு நாள் அதை மறந்து விடுங்கள். பின்னர் அப்பிரச்சினைக்கு ஒரு முடிவு உங்களுக்கே தெரியும். மேட்டர் ஓவர்.

ஏதாவது ஒரு அரசியல்கட்சித் தலைவரை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். 

ஒரே ஒரு தொழில், ஒரே ஒரு மனைவி, ஒன்றிரண்டு பிள்ளைகள் வைத்திருக்கும்  நம்மை விட எத்தனைப் பிரச்சினைகளை அவர்கள் ஒவ்வொரு நாளும் சந்திப்பார்கள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் கவலைப்பட்டு உள்ளுக்குள் புழுங்க ஆரம்பித்தால் அவர் ஹாஸ்பிட்டலில் ஹோமாவில் படுத்திருக்க வேண்டும். என்ன செய்கிறார்? சிந்தியுங்கள்.

ஆகவே ... இனி என்ன பிரச்சினை வந்தாலும் தூக்கித் தூர கடாசி விட்டு, அடுத்த வேலையில் மூழ்குங்கள். பிரச்சினை வந்த இடம் தெரியாமல் ஓடிப் போய் விடும்.

ஓகே !

”ஏங்க... ஏங்க....”

-இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நான் ஏங்கனுமோ தெரியலை!-(மனசுக்குள் நான்)

”என்ன கோதை?”

“லேட்டாயிடுச்சு... வந்து காய்கறி நறுக்கிக் கொடுங்க...” என்றாள்.

”என்ன கோதை காலையிலேயே ஆரம்பிச்சுட்டே, பேப்பர் படிக்க விட மாட்டியா?, தொந்தரவு செய்கிறாயே?” என்றேன்.

“அதுக்கு நீங்க சாமியாரா இருக்கணும். யாரும் தொந்தரவு செய்யமாட்டாங்க” என்றார்.

வேறு வழி !!! 

இது போன்ற பிரச்சினைகளை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தீரவே தீராது.



Monday, March 24, 2014

பிரம்மஸ்ரீ எஸ்வி.ராமசாமி அய்யாவின் குருபூஜை

அன்பு நண்பர்களே,

பிரம்மஸ்ரீ எஸ்.வி.ராமசாமி அய்யாவின் முதலாமாண்டு குரு  பூஜை விழா நாளை 25.03.2014 அன்று காலை 10 மணி முதலாய் தொடங்க இருக்கிறது.

அதுசமயம் அய்யாவின் குருபூஜையில் கலந்து கொள்ள விழைவோர் கீழ்கண்ட முகவரிக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.


செந்தில் நகர்,
சிவலிங்கபுரம்,
எஸ்.ஐ.எச்.எஸ். காலனி,
ஒண்டிப்புதூர், கோவை

தொடர்புக்கு :

ஜோதி சுவாமி - 9894815954
பாலன் - 9486207916

Saturday, March 22, 2014

நிலம்(5) - வெளியூரில் சொத்துக்கள் வைத்திருக்கின்றீர்களா கவனம்!

வெளியூர்களில் சொத்து வைத்திருக்கும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது இது. பொறுமையாகப் படிக்கவும்.
          
சமீபத்தில் ஒரு பூமி விலைக்கு வந்தது. அந்தப் பூமியில் ஒரு பிரச்சினை. டிடிசிபி அப்ரூவல் பெற்ற மனையிடத்தில் ஒரு மனையினை முத்து என்பவரின் மனைவி தேவி என்கிறவர் நில புரமோட்டரிடமிருந்து 1980ஆம் ஆண்டு கிரையம் பெறுகிறார். வில்லங்கச் சான்றிதழில் தேவியின் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது பதிவாகி இருக்கிறது. சொத்து தேவிக்கு உரிமையானது.

2011ம் வருடம் ராம் என்பவர் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்கிறார். அது என்னவென்றால் எனக்குச் சொந்தமான பூமியை தேவி என்கிறவர் போலியாக ஆவணம் தயாரித்து உரிமை கொண்டாடுகிறார் என ராஜேஷ் என்பவரின் மனைவி தேவி என்றுக் குறிப்பிட்டு தேவி மீது (கவனிக்க) வழக்குத் தொடர்கிறார். 

தேவியிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஏனென்றால் அப்படி ஒருவர் இல்லவே இல்லை. முத்துவின் மனைவி தேவிதான் இருக்கிறாரே தவிர ராஜேஷ் என்பவரின் மனைவி என்பவர் இல்லவே இல்லை.  பிரதிவாதியிடமிருந்து பதிலேதும் இல்லை.

ஆகையால் கோர்ட் ராம் என்பவருக்கே சொத்து உரிமையானது என்று உத்தரவு பிறப்பிக்கிறது. அந்த உத்தரவைக்  கொண்டு ராம் நில உடமைப் பதிவேடுகளில் மாற்றம் செய்கிறார்.

நில உடைமைப் பதிவேடுகளில் இப்போது நிலம் ராமுக்குச் சொந்தமானது. அப்போது தேவியின் சொத்து என்ன ஆனது?

மேற்படிச் சொத்துக்கு யார் உரிமையாளர்?

நிச்சயம் தேவிதான் உரிமையாளர்.

ராம் டாக்குமெண்டுகளை தயார் செய்திருக்கிறாரா என்றால் அதுவுமில்லை. அவர் கிரையம் பெற்றது சரியானது தான். அது எப்படி?

டிடிசிபி புரமோட்டருக்கு நிலம் எழுதிக் கொடுத்தவர்களுக்கு இன்னும் கொஞ்சம் சொத்து அவ்விடத்தில் இருந்திருக்கிறது. அந்தச் சொத்தினைதான் ராம் வாங்கி இருக்கிறார்.

அதெப்படி ஒரே சொத்துக்கு இருவர் உரிமையாளர்களாக இருக்கமுடியும் என்கின்றீர்களா?

நிச்சயம் முடியவே முடியாது.

அப்போது ராமின் பத்திரத்தில் என்னதான் பிரச்சினை?

ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கிறது.

சொத்து விபரத்தில் குறிப்பிட்டுள்ளது முந்தைய உரிமையாளர்களுக்கு பாத்தியமற்ற வேறொரு இடம். அதுதான் பிரச்சினை. ராம் தவறான சொத்தினை வாங்கி இருக்கிறார்.

இதைக் கண்டுபிடித்து சரி செய்ய எத்தனை காலம் ஆகும் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.தேவிக்கு எவ்வளவு பிரச்சினை உண்டாகி இருக்கிறது என்று பாருங்கள்.

இந்தப் பிரச்சினையின் முழு காரணகர்த்தா டாக்குமெண்ட் எழுதியவர் மற்றும் சொத்தினை ராமுக்கு விற்றவர் இருவர் மட்டும் தான்.

ராம், தான் எந்தச் சொத்தை வாங்குகிறோம் என்று தெரியாமல் வாங்கி இருக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும் அவர் வழக்குத் தொடுத்தது யார் மீது என்று பார்த்தால் அதுவும் தவறானது. ராம் நிச்சயம் கோர்ட்டை ஏமாற்றி இருக்கிறார் என்றே தெரிய வருகிறது.

இப்படியும் பிரச்சினை வரும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதற்கு என்னதான் வழி !

நன்கு அனுபவம் வாய்ந்த எழுத்தர்கள் அல்லது நல்ல சர்வீஸ் கம்பெனிகளை அணுகுவதுதான் சாலச் சிறந்தது.

இனி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.


Monday, March 17, 2014

பெண்கள் சுயநலமானவர்களா?

பள்ளியில் இருந்து வரும்போது அம்மு முகத்தை தூக்கி வைத்திருந்தார்.

எனக்குத் தாங்காது.

விஷயமென்னவென்று விசாரித்தேன். 

பையன் லீவு நாளில் பாஸ்கெட் பால் ட்ரெய்னிங்கில் சேர்ந்து விட்டானாம்.
பயிற்சிக்கு அவன் பள்ளிக்குப் போக வேண்டும். அதனால்  நாங்கள் யாரும் வெளியூர் போக முடியாது. அம்முவின் ஆண்டி அவளை மஸ்கட்டுக்கு லீவுக்கு அழைத்திருப்பதால் அவள் எப்படி மஸ்கட்டுக்குப் போவது? இதுதான் பிரச்சினை.

உன்னாலே நான் வீட்டுக்குள்ளேயே கிடக்கனுமா? என்று ரித்தியுடன் சண்டை. அதனால் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு இருந்தார்.

”உங்க மக ஊரு சுத்தறதுக்கு எம் மவன்(எப்பூடி பேசுறாங்கன்னு பாருங்க) பயிற்சிக்கு போகாக்கூடாதுங்கறளே, இவளைப் பார்த்தீங்களா?”ன்னு கோதை எரியற நெருப்புல எண்ணெயை ஊத்த அம்முவுக்கு பத்திக்கிட்டு வந்துருச்சு. அம்மு கண்ணுல தண்ணி. எனக்கு கிர்ரென்னு இருந்தது. மகள் அழுதுட்டா எனக்கு தன்னாலே பிபி உச்சத்துக்கு எகிறிடும்.

சாப்பிடும் போதும் அம்மு உம்முனே இருந்தார்.

ஒரு வழியா சாப்பிட்டு முடித்து உம்மென்ற முகத்தோடு படித்துக் கொண்டிருந்தார் அம்மு.

நான் மெதுவாக ஆரம்பித்தேன்.

”கோதை இன்னும் இரண்டு பிள்ளைகளைப் பெற்றிருந்தால் அம்மு கூட யாராவது விளையாட கூட இருப்பாங்களே”

“ஆமா, என்ன என்ன செய்யச் சொல்றீங்க. எனக்கு இரண்டுதான்னு ஆயிருச்சு” என்றார் கோதை.

”வேற ஏதாவது ஐடியா இருந்தாச் சொல்லேன் கோதை” என்றேன்.

”வேற ஐடியாவா...? இனி ஒன்னே ஒன்னுதான் பாக்கி, நீங்க இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிட்டா இன்னும் இரண்டு குழந்தைகளைப் பெத்துக்கலாம்” என்றார் கோதை.

”சரி பொண்ணுக்கு எங்கே போறது?”

“ அதான் உங்க அக்கா, தங்கை, மாமா, அம்மான்னு ஆயிரம் பேர் இருக்காங்களே உங்களுக்கு. சொன்னா எங்காவது பிடிச்சு ஒரு பொண்ணைக் கொண்டாந்து நிறுத்திடுவாங்களே!”

”சரி அம்மாகிட்டே போனைப் போட்டுச் சொல்றேன். அம்முக்கு கூட விளையாட ஆள் வேணுமாம். அதானால நானும் கோதையும் சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கிறோம். இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிட்டு இன்னும் இரண்டு குழந்தைகளைப் பெத்துக்கலாம்னு ஐடியா, அதனால பொண்ணு பாருன்னு பேசட்டுமா?”

“உடனே அதைச் செய்யுங்க...”

படித்துக் கொண்டிருந்த அம்மு  நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு விட்டு வெளியில் வந்தார்.

”நான் எங்கேயும் போகல. உனக்குக் கல்யாணமெல்லாம் வேணாம்” என்றார்.

“இல்லம்மா, நீதானே மஸ்கட்டுக்குப் போகனும், ரித்தி இருந்தாதானே நல்லா இருக்கும்னு சொன்னியே” என்றேன்.

“சும்மா சொன்னேன். உடனே அப்பத்தாகிட்டே பேசி பொண்ணெல்லாம் பார்க்கச் சொல்லாதே. நானும் ஏதாவது ஒரு பயிற்சியில் சேர்ந்துக்கலாம்னு இருக்கேன்” என்றார். அம்முவின் கண்கள் கோதையை ரகசியமாய் சந்தித்தன. அம்மாவும் மகளும் ரகசியமாய்ச் சிரித்துக் கொண்டதை தெரிந்தும் தெரியாமலும் பார்த்தேன்.

சிரித்துக் கொண்டே அலுவலகம் கிளம்பினேன்.

பெண்கள் எப்போதும் சுய நலமே உருவானவர்களாகவே இருக்கிறார்கள் போல தெரிகிறதே என  நினைத்தேன்.

சுயநலம் எப்போதும் நன்மையைத் தருமென்றால் அது நலம் தானே !

Saturday, March 15, 2014

ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழா அழைப்பிதழ்


கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் இருக்கும் அருள்மிகு விஸ்வகர்மா ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா வரும் பங்குனி மாதம் 5ம் நாள் - 19.03.2014 - புதன் கிழமை அன்று நடைபெற உள்ளது.

அது சமயம்  15.03.2014 சனிக்கிழமை முதல் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா தொடக்கம் ஆரம்பித்து நடைபெற உள்ளது. அன்பர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மனின் அருள் பெற்று மகிழவும்.


Tuesday, March 4, 2014

நிலம் (4) - வில்லங்கசான்று

இன்றைய (04.03.2014) டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் முதல் பக்கச் செய்தி ஒன்று வந்திருந்தது.

அதற்கு முன்பு பத்திரப்பதிவு பற்றிய முக்கியமான விஷயங்களைக் காண்போம்.

சொத்து ஒன்றினை வாங்க முடிவெடுக்கின்றீர்கள். அதற்கு என்னென்ன டாக்குமெண்டுகள் தேவை?

1) விற்பனை செய்யக்கூடிய சொத்தின் பத்திரம்
2) வில்லங்கச் சான்று
3) சொத்து பத்திரத்தின் சர்ட்டிபைடு நகல் 
4) சிட்டா
5) அடங்கல்
6) கந்தாய ரசீது
7) இன்ன பிற சில சான்றுகள்

இதில் வெகு முக்கியமான சான்று - வில்லங்கச் சான்றுதான். இந்தச் சான்றிதழில் சொத்தின் சர்வே எண், எல்லைகள், அதன் விஸ்தீரணம், கிரையம் செய்யப்பட்ட ஆண்டு, கிரைய ஆவணத்தின் எண், கிரையம் கொடுத்தவர், கிரையம் வாங்கியவர், விற்ற விலை போன்ற அத்தனை விபரங்களும் இருக்கும்.

இந்தச் சொத்து இன்னாருக்குச் சொந்தமானது என்பதைக் கட்டியம் கூறும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் சொத்தினை வாங்கினாலும் பிரச்சினை வரும் என்று உங்களால் நம்ப முடிகிறதா?  அரசு நாங்கள் கொடுக்கும் வில்லங்கச் சான்று பிழையற்றதாக இருப்பதாக கருத முடியாது என்றுச் சொல்கிறது.தமிழக அரசால் வழங்கப்படும் இந்தச் சான்றிதழ் மட்டுமே ஒரு சொத்தின் உண்மையான உரிமையாளரை அடையாளப்படுத்தும். 

ஆனால் சமீபத்தில் சென்னை ஹை கோர்ட்டில் நடைபெற்ற வழக்கொன்றில் தமிழக அரசு குறைபாடறற்ற வில்லங்கச் சான்றிதழை வழங்குவது என்பது முடியாது என்றுச் சொல்லி இருக்கிறது. 

இப்படி வழங்கப்பட்ட வில்லங்கச் சான்றிதழை வைத்து சொத்து வாங்கிய ஒருவர் நில அபகரிப்பு வழக்கில் சிக்கினார். உடனே கைதுதான். வில்லங்கச் சான்றில் வராத சொத்தினை வாங்கியது அவருக்கு பெரும் பிரச்சினையைத் தந்து விட்டது. இது அரசின் தவறு. ஆனால் பாதிக்கப்பட்டது முதலீடு போட்டவர் அல்லவா? (இந்தச் செய்திதான் இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்திருக்கிறது)

பின்னர் எதை நம்பி எப்படித்தான் சொத்துக்களை வாங்குவது என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். பின்னர் ஏன் அரசு வில்லங்கச் சான்றிதழ் கொடுக்கின்றார்கள் ? அதற்கு ஏன் நாம் பணம் கட்ட வேண்டும்? பின்னர் பதிவுத்துறை ஏன் இருக்கிறது என்று பல வித கேள்விகள் மனதுக்குள் எழலாம்.

இது மிகப் பெரிய பிராஜெக்ட். பிரச்சினை வர வரத்தான் தீர்வுகளை உருவாக்க முடியும். அரசினைக் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் பழைய சர்வே எண்ணும், புதிய சர்வே எண்ணும் மிகப் பெரிய குழப்பத்தை உண்டாக்கும். பூமியைப் பார்ட் பார்ட்டாக விற்பார்கள். அதனுடைய எல்லைகளை வைத்துதான் ஒரு சொத்தினை அடையாளம் காண முடியும். அதிலும் பலவித குளறுபடிகள் நடக்கும். 

நமக்கும் தெரியாத ஒரு சில நுணுக்கங்களை இந்தத் துறையில் அதிக அனுபவம் பெற்றவர்களிடம் இருந்து பெற வேண்டியது அவசியம் என்பது உங்களுக்குப் புரிய வரும். 

பெரும் உழைப்பில் கிடைக்கும் பணத்தை நிலத்தில் முதலீடு செய்யும் முன்பு பல வித ஆலோசனைகளை தகுந்தவர்களிடம் கேட்டுப் பெற வேண்டியது அவசியம்.

குறிப்பு: பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பத்திரம் தயாரிப்பது, சொத்தில் இருக்கும் வில்லங்கங்களை நீக்கிச் சரிசெய்வது போன்ற பல்வேறு சேவைகளை எமது நிறுவனம் வழங்கி வருகிறது.

தொடர்பு கொண்டு எமது சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.