குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, May 30, 2013

மனிதன் எப்படி வாழ வேண்டும்?


பூமியில் பிறப்பெடுத்த மனிதனுக்கு அவனின் ஒவ்வொரு கால வயதிலும் பிறரின் உதவியில்லாமல் வாழவே முடியாது. ஆனால் விலங்குகளுக்கு அப்படி அல்ல. பால் கறப்பு முடிந்து அடுத்த கன்றுக்கு பசு தயாரானதும் பசு வேறு கன்று வேறு என்றாகி விடும். அதன் பிறகு கன்றின் வாழ்க்கை அதன் கையிலோ அல்லது அது எவரிடம் இருக்கிறதோ அவரின் கையிலோ மாறி விடும். இதே போலத்தான் ஒவ்வொரு விலங்கினங்களும் வாழ்கின்றன.

ஆனால் மனிதப் பிறவியை எடுத்துக் கொண்டால் குழந்தையாய் இருக்கும் பொழுதில் இருந்து அம்மாவின் உதவி தேவை. அம்மாவிற்கு அப்பாவின் உதவி தேவை. அப்பாவிற்கு பிறரின் உதவி தேவை என்று உதவி உதவி என்று பிறரிடமிருந்து பெறுவது வாழ் நாள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

வளர்வதற்குப் பெற்றோர் உதவி தேவை

படிப்பதற்கு ஆசிரியர் உதவி தேவை

சந்ததிக்கு பெண்ணின் உதவி தேவை

இப்படி அவனின் ஒவ்வொரு நொடியிலும் பிறரிடமிருந்து அவன் பெற்றுக் கொள்வது அதிகம். ஆனால் தற்போதைய கலிகாலத்தில் பெற்றுக் கொள்பவன் பிறருக்கு கொடுக்க மறுக்கிறான். அதை பணம் என்ற அளவுகோலை கொண்டு நான் ஏன் கொடுக்க வேண்டும்? என்று விதண்டாவாதமாய் கேள்வி கேட்கின்றான். அப்படிக் கேள்வி கேட்போருக்கு ஒரு செய்தி இதோ.

எனது மாஸ்டர் என்னிடம் சொன்ன ஒரு உண்மைச் சம்பவம்.

மாஸ்டர் அவரின் நண்பரின் கடைக்குச் சென்றிருந்த போது அழகிய யுவதி ஒருவர் வந்து 500 ரூபாய்க்குப் பென்சில் பேனாக்கள் வாங்கிச் சென்றிருக்கிறார். 

நண்பர் மாஸ்டரிடம்”இப்பெண்ணைப் பார்த்தால் ஏதாவது வித்தியாசமாய் தெரிகிறதா?” என்று கேட்டிருக்கிறார்.

”ஒன்றும் தெரியவில்லையே” என்றார் மாஸ்டர்.

“இப்பெண் எப்போது சாகும் என்று தெரியாது. முற்றிய நிலையில் புற்றுநோயால் அவதிப்படுகிறார். ஆனால் அப்பெண்ணின் முகத்தில் அதற்கான ஏதாவதொரு அறிகுறி தெரிகிறதா? இந்தச் சூழலிலும் வெறும் 5000 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருக்கிறார். வாங்கும் சம்பளத்தில் 500 ரூபாயை தன்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய அனாதை விடுதிக்கு பென்சில், பேனாவாக வாங்கிக் கொடுத்து வருகிறார் “ என்றார் மாஸ்டரின் நண்பர்.

மேலே இருக்கும் சம்பவத்தைக் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. 

மாஸ்டர் தொடர்ந்து, ”மனிதன் சமூகத்திடமிருந்து பெற்றுக் கொண்டதை திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும். இங்கு நாம் பெற்றிருப்பது எதுவுமே நம்முடையது அல்ல. நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் நமக்கு கொடுத்துச் சென்றது. மனிதன் அதை மறந்து வாழ்கிறான். அதனால் துன்பத்தில் உழல்கிறான்” என்றார்.

அப்பெண்ணின் நன்றி மறவாமையை நினைத்து எனக்கு ஒரு நிமிடம் சந்தோஷமாய் இருந்தது. அவரின் உடல் நிலையை நினைத்து மனம் கனக்கிறது.
-

Monday, May 27, 2013

குல்மொஹர் மரங்களில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன

விடிகாலைப் பொழுதில் தினம்தோறும் வீட்டின் அருகில் மயில்கள் அகவிக் கொண்டிருக்கும். அச்சத்தம் எனக்கொரு ஆர்வத்தைக் கொடுக்கும். கிட்டத்தட்ட இருபது மயில்களுக்கு மேல் இருக்குமென்று எண்ணுகிறேன். அதில் இரண்டு மயில்கள் எனது மருத்துவ நண்பரின் வீட்டின் மீது நின்று வெடுக் வெடுக்கென்று தலையை அங்குமிங்குமாய் திருப்பிக் கொண்டிருக்கும். மிக வேடிக்கையாக இருப்பினும் அவற்றின் அழகு என்னை குதூகலத்தில் கொண்டு போய் தள்ளி விடும். பூக்கள் விரிந்தாற் போல ஒரு மகிழ்ச்சி எனக்குள்ளே பரவும். பூக்களை நாமெப்போதும் ரசிப்பதில்லை. பூக்கள் என்றவுடன் பெண்கள் நினைவுக்கு வந்து விடுகிறார்கள். ஆகையால் உண்மையான பூக்களை நாம் ரசிப்பது இல்லை. எனினும் அது யாருக்காகவோ பூத்துக் கொண்டே இருக்கின்றன.

வாழ்க்கையும் அவ்வாறுதான். ஆனால் அதை வாழத்தான் எவருக்கும் நேரமில்லை. அல்லது தெரியவில்லை. எல்லோரும் அதை வெகு சிக்கல்களுக்குள்ளாக்கி பின் துயரத்தில் வீழ்கிறோம்.

வசியம் என்பதைப் படித்து விட்டு, என்னை அழைக்கும் நபர்கள் எவரும் தன் வாழ்வினைப் பற்றிய படிதல் இல்லாமலிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஏன் பிறந்தோம், ஏன் வாழ்கிறோம் என்று தெரியவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தெரியுமா? 

பாதை ஒன்று தெரிகிறது. அதில் நடக்க ஆரம்பிக்கிறோம். தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறோம். ஏன் நடக்கிறோம், எதற்காக நடக்கிறோம் என்பதெல்லாம் தெரியாது. நமக்கு முன்னே இருப்பவர் நடக்கிறார். நானும்  நடக்கிறேன் என்பார்கள். இப்படித்தான் இருக்கும் அவர்களின் வாழ்க்கை.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிகிறது அல்லவா? புரியாதவர்களுக்கு ஒன்றும் சொல்வதிற்கில்லை.

குல்மொஹர் மரங்களில் பூக்கள் அழகாய் பூத்திருக்கின்றன. ஒரு இலைகளைக் கூட காணமுடியவில்லை. வெறும் பூக்கள் தான் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. அவை அழகாய் உங்களுக்கு ஒன்றினைச் சொல்ல விரும்புகின்றன. 

அதைப் புரிந்து கொள்ள முயலுங்கள். வாழ்க்கை அழகானது. அதை அர்த்தமுடன் வாழ முயலுங்கள்.

அன்பைத் தவிர வேறெதுவும் வளர்வதில்லை. அது கொடுத்தால் கூடிக் கொண்டே செல்லும். இன்னும் பெருகி வழிந்து கொண்டே இருக்கும். எவரெல்லாம் அன்பில் நனைகிறார்களோ அவர்களுடன் இறைவன் இருப்பான் என்கிறார் எனது மாஸ்டர். அன்பினைக் கைக்கொள்ளுங்கள். இறைவன் உங்களின் சொற்களில் வந்து நிற்பான்.

வாழ்க வளமுடன்

Wednesday, May 15, 2013

நேர்மைக்கு முன்னால்


சமீபத்தில் சவுக்கு இணையதளத்தில் நேர்மையே உன் விலை என்ன?என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அக்கட்டுரை இந்தியாவின் தற்போதைய நிலையை சரியாகச் சுட்டிக்காட்டி இருந்தது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் இருக்கும் கார்ப்பொரேட் கம்பெனிகாரர்களின் மன அசைவுக்கு ஏற்பத்தான் அரசியலும், நாடும் அசையும். இதைத் தெரிந்து கொண்டவர்கள் பிசினஸ் புள்ளிகளாக மாறுகிறார்கள். தெரியாதவர்கள் நேர்மை பேசி விரக்தியில் விழுவார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு விலையுண்டு என்பவர்கள் ஜெயிக்கின்றார்கள். அதைத் தெரிந்து கொள்ளாதவர்கள் தோல்வியைத் தழுவுகின்றார்கள். இது கார்ப்பொரேட் தத்துவம். வாழ்வியல் தத்துவம் வேறு. எந்த ஒரு கார்ப்பொரேட்டும் ஒரு காலத்தில் வீழ்ச்சியைத் தான் சந்திக்கும். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கழுகாகி விட முடியாது அல்லவா? இது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம். இப்போது விஷயத்திற்கு வரலாம்.

கலிகாலம் வந்து விட்டதே, உன் பொருள் என் பொருள், என் பொருள் உன் பொருள் என்று சண்டை சச்சரவுகள் இல்லாமால் வாழ்ந்து வரும் மனிதர்களிடையே எப்படிப் பிரச்சினையை உருவாக்குவது என்று கவலைப்பட்டார்களாம். பளபளவென மின்னும் தங்கக் கட்டிகளை தெருவில் இறைக்க அன்றிலிருந்து மனிதனுக்குள் தனக்கு என்ற ஆசை வேர்விட்டு பிரச்சினை துளிர் விட்டு இன்றைக்கு அடுத்தவன் எக்கேடு கெட்டால் என்ன என்று நினைக்கும் வரை வந்து விட்டது.

இப்படியான காலகட்டத்திலும் தர்ம தேவதையின் தவப்புதல்வர்கள் இப்பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட ஒரு தர்ம தேவையின் தவப்புதல்வனின் கதை தான் இது.

திருச்சியில் மிகப் பெரிய கார்ப்பொரேட் கம்பெனி ஒன்று இருக்கிறது. அக்கம்பெனியின் முதலாளி பெரும் தனக்காரர். எவரையும் மதிப்பது கூட இல்லை. பணமிருந்தால் போதும் எவனையும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற எள்ளல் கொண்டவர் அவர். இப்படிப்பட்ட தடித்தனம் மிக்க அவர் திருச்சியின் பிரதான சாலையில் இடமொன்றினை வாங்கினார். வாங்கியவுடன் இரண்டடுக்கு மாடிக் கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி விட்டு, நான்கு மாடிகளைக் கட்டி விட்டார். 

கார்ப்பொரேஷன் அதிகாரி ஒருவர் இந்த சட்டமீறலைக் கண்டுபிடித்து நோட்டீஸ் கொடுக்கச் சென்ற போது, அவரை அலுவலகத்திற்குள் விடவே இல்லை. கேட்டிற்கு வெளியில் இருக்கும் செடியின் மீது உன் நோட்டீஸை ஒட்டி விட்டுப் போ என்று எகத்தாளமாய் எக்காளாமிட்டிருக்கிறார் முதலாளி. அதிகாரி நேர்மைக்கு பெயர் போனவர். தர்ம தேவதையின் வாரிசு. என்ன அவமானப்படுத்தினாலும் தன் கடமையைச் சரிவரச் செய்யும் தன்னம்பிக்கைக்காரர். அடுத்த சில நாட்களில் பொக்லினைக் கொண்டு வந்து அத்துமீறிக் கட்டப்பட்டிருந்த இரண்டு மாடிகளை இடித்து தள்ளி விட்டுச் சென்று விட்டார்.

பணமிருந்தும், புகழ் இருந்து, அதிகாரவர்க்கத்தினரின் துணை இருந்தும் கட்டிட இடிப்பினை அவரால் தடுக்க முடியவில்லை. அவரால் செய்ய முடிந்தது என்ன தெரியுமா? அந்த கார்ப்பொரேஷன் அதிகாரிக்கு மாற்றல் வாங்கிக் கொடுத்தது மட்டும் தான். இதை அவர் தனது வெற்றி என நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கும் சேர்ந்து மிகப் பெரிய ஆப்பினைச் சொருகினார் அந்த அதிகாரி.

மாற்றலாகிப் போன இடத்தில் அவருக்கு நெருக்கமான ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியைச் சந்தித்து இருக்கிறார். ஐயேயெஸுக்கு ஆச்சரியம். திருச்சியில் இருந்தவர் திடீரென இங்கு வந்து விட்டாரே என்ன காரணம் என்று கேள்வி கேட்க, அவர் விவரத்தைச் சொல்லி இருக்கிறார். அந்த ஐ ஏ எஸ் தன் நண்பரை மாற்றம் செய்த அந்த கார்ப்பொரேட் முதலாளிக்கு பாடம் கற்பிக்க விரும்பினார். 

அடுத்த ஒரு வாரத்தில் அந்த நிறுவனத்தில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்து. அத்தனை அக்கவுண்டுகளும் லாக் செய்யப்பட்டது. அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. திக்பிரமை பிடித்தவர் போலாகி விட்டார். முதலாளிக்குத் திகில் பிடித்து விட்டது. கிலி பிடித்தாட்ட ஆள் பீதியில் உறைந்து போனார். கோடிக்கணக்கான ரூபாய்க்கு கணக்குக் காட்ட வேண்டுமே? என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார். தர்மம் நின்று கொல்லும் என்பதை அவர் நிச்சயம் உணர்ந்திருக்க வேண்டும்.

எந்த ஒரு போலியும் நேர்மைக்கு முன்னே தூசிக்குச் சமமானது என்பதை அனுபவத்தில் அந்த முதலாளி நிச்சயம் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம்.


Friday, May 3, 2013

என்ன செய்வீர்கள்?

நானும் இல்லத்தரசியும் மெடிக்கலுக்கு மருந்து வாங்கச் சென்றிருந்தோம். பையன் விளையாடும் போது தலையில் இடித்துகொண்டான். தலையில் புசுக்கென்று வீங்கிக் கொண்டது. சரியான டென்ஷன். இல்லத்தரசி மருந்தகத்தில் நின்று கொண்டிருந்தாள். நானோ தகிக்கும் வெயிலில் நின்றிருந்தேன்.

அப்போது என் வண்டிக்கருகில் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. 

“சார், வண்டிக்கு எங்கே வீல் போட்டீர்கள்?” என்று கேட்டார்.

வெயிலி இது என்னடா கொடுமை என்று நினைத்துக் கொண்டே, அவருக்கு விபரங்களைச் சொன்னேன்.

“யாருக்கு சார்? “ என்று கேட்டேன்.

”என் பெண்ணுக்கு சார் ! மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டாள். என்னென்னவோ செய்து பார்த்தோம். எங்கெல்லாமோ ட்ரீட்மெண்ட் பார்த்தோம். ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு காலை எடுக்க வேண்டியதாகி விட்டது” என்றுச் சொல்லி கண்கலங்கினார்.

அடுத்து அவர் சொன்னது, “பையனுக்கு மூளைக்காய்ச்சல் வந்து இடுப்புக்கும் கீழ் செயலிழந்து விட்டது”.

கேட்ட எனக்கு திகீர் என்றது. அவருக்கு எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் நினைத்தேன். அவரின் மனவலி எனக்குள் பரவியது. அவருக்கு கோடிகளில் பணம் கொட்டிக் கிடக்கிறது. இருப்பினும் என்ன செய்வது? 

ஏன் இப்படி ஆனது அவருக்கு என்று எனக்குப் புரியவில்லை.

எத்தனை கோடிகள் இருப்பினும், எத்தனை அதிகாரத்தில் இருப்பினும், நாட்டின் உயர்ந்த பட்ச பதவியில் இருப்பினும் பிள்ளைகளுக்கு என்று வந்து விட்டால் அந்தக் கோடிகளால் என்ன செய்ய முடியும்? அதிகாரத்தால் என்ன செய்ய முடியும்? கையைக் கட்டிக் கொண்டு அழுதுதான் புரள வேண்டும்.

பிரதமர் நண்பராக இருந்தாலும் அவரால் என்ன சாதிக்க முடியும்? சொல்லுங்கள் பார்ப்போம். இதுதான் வாழ்க்கை. இது தான் உண்மை. ஆனால் எவரும் அதைப் புரிந்து கொள்வதே இல்லை.

வழியில் செல்லும் போது எவனாவது காரில் இடித்து விட்டால் அவ்வளவுதான். குதி குதியென்று குதிப்பார்கள். இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் அடிமுட்டாள்கள் என்று கருத வேண்டும்.

ஒரு நிமிடம் யோசியுங்கள். ஒரு தத்துவம் புரியும். இதோ ஒரு சித்தரின் பாடல் உங்களுக்காக.

தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
நாடி வருவதுண்டோ குதம்பாய் நாடி வருவதுண்டோ

போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
சாம்போது தான் வருமோ குதம்பாய் சாம்போது தான் வருமோ

காசினி முற்றாயுள் பைவசம் ஆயினும்
தூசேனும் பின்வருமோ குதம்பாய் தூசேனும் பின்வருமோ

உற்றார் உறவினர் ஊரார் பிறந்தவர்
பெற்றார் துணையாவரோ குதம்பாய் பெற்றார் துணையாவரோ

மெய்ப்பிணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்
பொய்ப்பிணி ஏதுக்கடி குதம்பாய் பொய்ப்பிணி ஏதுக்கடி

விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு
மண்ணாசை ஏதுக்கடி குதம்பாய் மண்ணாசை ஏதுக்கடி

சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள்
யானையும் நில்லாதடி குதம்பாய் யானையும் நில்லாதடி

செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்கா தழியுமடி குதம்பாய் தங்கா தழியுமடி

கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம்
கூடவே வராதடி குதம்பாய் கூடவே வராதடி

- குதம்பைச் சித்தர்