குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, September 30, 2016

அன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் உணவும் சுவையும்

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரசு அலுவலக வேலையாக மாலையில் கலெக்டர் அலுவலகம் சென்று விட்டு, எனது வக்கீல் நண்பரைப் பார்த்து விட்டு வீடு திரும்பிய போது கிட்டத்தட்ட 7 மணிக்கு மேல் ஆகி விட்டது. கணபதி ட்ராபிக் தாண்டி வீடு செல்ல எப்படியும் ஒரு மணி நேரம் ஆகி விடும் என்பதால் காந்திபுரம் பேரூந்து நிலையத்தின் எதிரில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலில் ஒரே ஒரு தோசை மட்டும் வாங்கிக் கொண்டு வீடு செல்ல முடிவு செய்து பார்சலுக்கு ஆர்டர் கொடுத்தேன்.



பார்சல் வந்ததும் கணபதி ட்ராபிக்கில் சிக்கி டீசல் பெட்ரோல் புகையினை சுவாசித்து வீடு வந்து சேர கிட்டத்தட்ட எட்டரை மணிக்கு மேல் ஆகி விட்டது. கோயமுத்தூர் வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இருக்கும். ஹோட்டலில் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அன்னபூர்ணா தவிர வேறு எங்கும் சாப்பிடுவதில்லை. வேறு ஹோட்டலில் சாப்பிட்டால் வாய்ப்புண் வந்து விடும். பின்னர் வாயுத்தொல்லை வேறு வந்து அவஸ்தைப்படுத்தி விடும்.

நண்பர்கள் வந்தாலும் அன்னபூர்ணாவினை மட்டுமே பரிந்துரைப்பதுண்டு. காசைக் கொடுத்து விட்டு உடம்பைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம் என்பதால்.

மனையாள் தட்டில் தோசையை எடுத்து வந்து கொடுத்தார். சாம்பாரை ஊற்றினார். தோசையைக் கொஞ்சமாய் கிள்ளி, சாம்பாரில் துவைத்து வாயில் வைத்தால் இனிப்பு. தேங்காய்ச் சட்னியோ அது ஒரு விதமான இனிப்பு. எரிச்சல் தான் வந்தது. சாம்பாரில் சர்க்கரையை ஏன் தான் கொட்டுகின்றார்களோ எனத் தெரியவில்லை? முன்பெல்லாம் அன்னபூர்ணா டிஃபன் என்றால் எச்சில் ஊறும். மிக நல்ல நிறுவனம், பசித்து வருவோருக்கு அன்னமிட்ட வளர்ந்த நீண்ட நெடிய வரலாறு கொண்ட உணவகம் என்பதால் இந்தப் பிரச்சினையைப் பற்றி ஒரு மெயில் தட்டி விடலாம் என நினைத்து எழுதினேன்.

அடுத்த நாள் அன்னபூர்ணாவிலிருந்து முப்பது வருடமாக வேலை செய்து வரும் திரு.கலைமணி அவர்கள் போனில் அழைத்தார்கள். பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தேன். எனது ஆதங்கத்தைக் கொட்டினேன்.

சாப்பாடு சுத்தமாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். மீன் குழம்பில் மீன் கவுச்சி வாடை வரக்கூடாது; கறிக்குழம்பில் ரத்த வாசம் வரக்கூடாது; சாம்பார் சாப்பிட்டவுடனும் கை மணக்க வேண்டும் என்று ஏக எதிர்பார்ப்புகள் உண்டு. மனையாளுக்கும் எனக்கு இந்த ஒரு விஷயத்தில் தான் அடிக்கடி முட்டிக் கொள்ளும், ஒரு சில சமயங்களில் அருமையாக சாம்பார் வைப்பார். பல தடவைகள் ஒரு மாதிரியாக இருக்கும். எனக்கு இது கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக புரியவே புரியாத மர்மமாகவே இருந்து வந்தது. கவனமில்லாமல் சமைக்கின்றாரோ என்ற சந்தேகம் வேறு ஏற்படும். இருப்பினும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இதற்கு என்ன காரணம் என்பதை கலைமணி அவர்கள் புரிய வைத்தார்கள். அந்தக் காலத்தில் விவசாயம் செய்து வந்த உணவுப் பொருட்களின் தரமும் இந்தக் காலத்தில் விவசாயம் செய்து வரும் உணவுப் பொருட்களின் தரமும் வேறு வேறு. அந்தக் காலத்தில் இருந்த சுவையை இந்தக் காலத்தில் கொண்டு வர முடியாது என்றும் அதற்கு உணவு சமைக்கப் பயன்படும் பொருட்கள் தன் வயத்தை இழந்து விட்டது என்றும் சொன்னார். ஆமாம் அது உண்மைதான்.

ஊருக்குச் சென்று வரும் போது ஆவணம் கைகாட்டி மார்க்கெட்டில் கொஞ்சம் காய்கறிகள் வாங்கி வருவதுண்டு. மதுரைப் பக்கம் சென்றாலும் மாலை நேரச் சந்தைகளில் காய்கறிகள் வாங்கி வருவேன். உண்மையில் அந்தக் காய்கறிகள் வெகு மணமாக சுவையாக இருக்கும். முருங்கைக் கீரை வாசம் தூக்கும். முருங்கைக்காய் வாசமோ அள்ளும். பீட்ரூட் அடுப்பில் வேகும் போதே மணம் மனதைக் கொள்ளை கொள்ளும். ஆனால் கோவையிலிருக்கும் காய்கறிகள் உப்புச்சப்பின்றி ஒரு விதமான அவிஞ்ச வாசம் அடிக்கின்றன. இத்தனைக்கும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவேன்.

சந்தையில் இருக்கும் கருவேப்பிலைக்கும், வீட்டின் பின்புறத்தில் இருக்கும் வேப்பிலைக்கும் வட தென் துருவ வித்தியாசம்.

சென்னை வடபழனியில் பிரசாத் ஸ்டூடியோ எதிரில் உள்ள த்ரீ சிக்ஸ்டியில் தான் வேலை நிமித்தம் சென்றால் தங்குவதுண்டு. சரவணபவன் சாப்பாடுதான் கொண்டு வந்து தருவார்கள். வாயில் வைக்கமுடியாது. அரிசி வெந்து இருக்காது. பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு படு கேவலமான பார்சல் செய்து அனுப்புவார்கள். கொடுமை. விலை ரூபாய் 180 என்று நினைக்கின்றேன். வேகாத ப்ரைடு ரைஸ் என்றொரு அயிட்டத்தை எப்படித்தான் சாப்பிடுகின்றார்களோ தெரியவில்லை? அரை குறை வேக்காடு அரிசியில் ஒரு உணவு பதார்த்தம்.

நவீன அறிவியல் உலகம் பணம் கிடைப்பதற்காக உண்ணும் உணவின் தரத்தை குறைத்து விட்டது. உணவுப் பொருட்கள் அனைத்தும் தன் இயல்பு மாறி வியாபார உத்திக்காக மாறிப்போய் விட்டது.

இனி அந்தக் கால பாரம்பரிய உணவு வகைகளை நாம் என்றைக்குமே சாப்பிட முடியாது என்று நினைக்கையில் வேதனை தான் மண்டுகிறது.

அன்னபூர்ணா கெளரிசங்கர் நிறுவனத்திற்கு மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் வேண்டுகோள் ஒன்றினையும் விடுக்கிறேன்.

”எதிர்கால சந்ததியினருக்கு நமது பாரம்பரிய உணவு வகைகளையும், அதன் சுவைகளையும் அறிமுகப்படுத்துங்கள். அதற்குரிய ஏற்பாடுகளை தனிமனிதனால் உருவாக்கிட முடியாது. அது உங்களைப் போன்ற பெரும் நிறுவனங்களால் தான் இயலும். தமிழர்களின் பாரம்பரியத்தை உங்களைப் போன்ற நிறுவனங்கள்தான் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க முடியும். எப்படி ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு தங்கள் பாரம்பரியத்தைக் கொண்டு சேர்க்கின்றாரோ அதைப் போல தாங்களும் இந்த தமிழர் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன். செய்வீர்கள் என்ற அசைக்க முடியாத பெரும் நம்பிக்கை எனக்கு உண்டு.”

Wednesday, September 28, 2016

அன்னபூரணி தாய்


கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் தங்கி விவேகாநந்தா மெட்ரிக் பள்ளியில் கணிணி ஆசிரியராகவும், சாரதா நிகேதன் சயின்ஸ் காலேஜ் ஃபார் விமன் கல்லூரியின் கம்யூட்டர் துறையில் சிஸ்டம் அனலிஸ்ட் மற்றும் அட்மினிஸ்ட்ரேசனாக வேலை செய்து வந்து கொண்டிருந்தேன். சுவாமி ஆத்மானந்தாவிடம் இரண்டு காண்டசா கிளாசிக் கார்கள் இருந்தன. அப்போது அம்பாசிடர் மற்றும் காண்டசாக்கள் மற்றும் மாருதி 800 கார்கள் பிரபலம்.

நானும் சாமியும் அடிக்கடி சாரதா கல்லூரிக்குச் செல்வோம். ஆஸ்ரமத்தில் இருப்போர் கடுப்புடன் பார்ப்பார்கள். அலுவலக கம்யூட்டர் அல்லது பிரிண்டர் அல்லது லேப் கம்யூட்டர் ஏதாவது பிரச்சினையில் இருக்கும். அத்துடன் வாரம் தோறும் கல்லூரிப் பெண்களுக்கு கணிப்பொறி கிளாஸ் எடுக்க வேண்டும். காரைக்குடி அமராவதிப்புதூரில் இருக்கும் சாரதா நிகேதன் பெண்கள் கல்லூரிக்கும் அடியேன் தான் கணிப்பொறியியல் துறைக்கு அட்மின்ஸ். அடிக்கடி சாமியுடன் காண்டசாவில் பயணிப்போம். 


(திருப்பராய்துறை தபோவனம் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர்)

திருச்சி செல்லும் சாலையில் சுவாமி சித்பவானந்தர் அமைத்திருக்கும் திருப்பராய்துறை தபோவனத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். அருகில் இருக்கும் ராமகிருஷ்ண  குடில் வேறு. தபோவனம் வேறு. தபோவனத்தில் இருந்த சித்பவானந்தரின் சீடர் பிரம்மசாரி ராமசாமி தான் குடிலின் நிறுவனர்.

(ராமகிருஷ்ணர் குடில் நிறுவனர் பிரம்மச்சாரி ராமசாமி அடிகளார்)

இரண்டு நிறுவனங்களுக்கும்  அப்போதே ஏதோ பிரச்சினை இருந்தது என்றுச் சொல்லிக் கொண்டார்கள். உண்மையா என்று தெரியவில்லை. சுவாமி சித்பவானந்தரின் இன்னொரு சீடர் தான் சுவாமி ஆத்மானந்தர். கரூருக்கு வந்து பசுபதிபாளையத்தில் ஐந்து பள்ளிகள் மற்றும் சாரதாபுரி எனும் இடத்தில் அமைந்த சாரதா நிகேதன் கல்லூரியையும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். அத்துடன் பெண்கள் கல்லூரியில் சுமார் 150 அனாதை பெண்களையும், ஆஸ்ரமத்தில் சுமார் 100 மாணவர்களையும் ஆதரித்து படிக்க வைத்து, உடை கொடுத்து வளர்த்து வந்தார். 

(சுவாம் ஆத்மானந்தர் - அமராவதிபுதூர் கல்லூரி விழாவின் போது)

சுவாமி சித்பவானந்தர் உயிருடன் இருக்கும் வரையில் பிரச்சினை இல்லை. அவர் காலமானதும் தபோவனத்துக்கும் சுவாமி ஆத்மானந்தருக்கும் பிரச்சினை ஆரம்பித்தது. சுவாமி ஆத்மானந்தர் அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை தபோவனத்தின் பெயரில் தான் பதிவு செய்து வைத்திருந்தார். மேற்படி நிறுவனங்களை பெரிய அளவில் வளர்த்து வைத்திருந்தார். ஆனால் உண்மையான உரிமையாளர்கள் தபோவனத்தினர். சட்டம் அதைத்தான் சொல்லும். அதைத்தான் சொல்லியது.

கரூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு நடந்து அது தபோவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு எழுதியது. சுவாமியைக் கைது செய்து விடும் அளவுக்கு நிலமை தீவிரமானது. ஆசிரமவாசிகள் பரபரப்பாயினர். என்ன நடக்குமோ என்று கவலையடையத் தொடங்கினர். அடியேனுக்கு சுவாமியை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பதற்கு அனுமதி உண்டு. அவர் எந்த வேலையிலிருந்தாலும் அடியேன் நேரடியாக சுவாமியின் அறைக்குச் சென்று விடுவேன். எனக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

சாமியைப் பார்க்கச் சென்றேன். 

“என்னப்பா! ஏதும் வேண்டுமா?” என்றார்.

”சாமி, கைது என்று பேசிக் கொள்கின்றார்களே?” என்றேன். 

சிரித்துக் கொண்டே,”அன்னபூரணி பார்த்துக் கொள்வாள், நீங்க போய் சாப்பிட்டு விட்டு தூங்குங்க” என்றுச் சொல்லி தேங்காய் லட்டு ஒன்றினை எனக்கு கொடுத்தார். 

பரபரப்பாய் இருந்த சுவடு அடுத்த நாள் இல்லை. அவரைக் கைது செய்ய யாரும் வரவில்லை. அன்று சுவாமி சொன்ன வார்த்தைப் பலித்தது.  

மிகவும் குறைந்த விலையில் தமிழகத்தில் உள்ள பல ஏழைகள் தினம் தோறும் வயிறார உணவு உண்கின்றார்கள். பத்து ரூபாய் இருந்தால் போதும் அம்மா உணவகத்தில் வயிறு நிறையச் சாப்பிட்டு விடலாம். ஒரு வெகு சாதாரணமான குடும்பம் வெகு சொற்பமான தொகையில் தங்களின் பசியைப் போக்கி விடலாம். 100 யூனிட் வரை மின்கட்டணம் கூட இல்லை. 

இருபத்தைந்து கிலோ அரிசி இலவசமாய் கிடைக்கிறது. முப்பது ரூபாய்க்கு துவரம் பருப்பு ரேசனில் கிடைத்து விடுகிறது. அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு அரசு தன்னால் முடிந்த வரை எத்தனையோ லட்சோப லட்சம் மக்களுக்கு பசிப்பிணியை தீர்க்கிறது. அதற்கு காரணமாய் இருப்பது நம்ம முதல்வர் அம்மா அவர்கள்.

காமராஜர் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து பெரும் புகழ் பெற்றார். ஆனால் அம்மா ஏழைகளுக்கு மட்டுமல்ல பள்ளிக் குழந்தைகளுக்கும் பல சுவை உணவளித்து வருகிறார். அன்னமிடுதல் என்பது அவ்வளவு சாதாரண காரியமில்லை. பசிப்பிணியை தினம் தோறும் தீர்த்துக் கொண்டிருக்கிறார். அம்மா என்ற சொல் அவருக்கு மட்டுமே பொருந்தும் என்றுதான் சொல்ல வேண்டும்.

அம்மா அவர்கள் வாழும் அன்னபூரணித் தாய். அன்னபூரணித்தாயின் பூரண நல் ஆசியுடன் விரைவில் நலம் பெறுவார் என பிரார்த்தனை செய்து கொள்வோம்.


Tuesday, September 27, 2016

சித்தர்கள் சாபம் பலிக்குமா? உண்மைச் சம்பவம்

ஆஸ்ரமத்திற்குச் நானும் மனையாளும் எட்டு மணி வாக்கில் கிளம்பினோம். செல்வபுரம் வழியாக பேரூர் சாலையில் பயணித்தோம். பள்ளிகள் விடுமுறையாதலால் வாகன நெருக்கடி இல்லை. ஆங்காங்கே அவசர கோலமாக சாலைகள் செப்பனிடப்பட்டுக் கொண்டிருந்தன. தேர்தல் வருகிறது அதுவும் உள்ளாட்சித் தேர்தல். ஆஸ்ரமம் சென்று சேர்ந்தோம்.

அருமையான அமைதி. அன்பர்கள் குறைவாக இருந்தனர். சாமியுடன் கொஞ்ச நேரம் இல்லற வாழ்வியல் சண்டைகள் போட்டு விட்டு, இரண்டு மணி நேரம் சுவாமியின் எதிரில் அமர்ந்து விட்டேன். மனதுக்கு அமைதி வேண்டும். எண்ணங்களே இல்லாத மனம் ஒரு துளி நேரம் இருந்தாலும் அதை விட இன்பம் ஏதுமில்லை. 

கண்ணை மூடி விட்டால் சினிமா நடிகையில் ஆரம்பித்து பக்கத்து வீட்டுப் பருவச் சிட்டு வரை சிந்தனை ஓடுகிறது. சிறிது நேரத்தில் ஒபாமாவுடன் உரையாட ஆரம்பித்து மன்மோகன் சிங்கிடம் 2ஜி கேள்விகள் கேட்கிறது. நேற்றுச் சாப்பிட்ட வடை சரியில்லை என்று இனி அந்தப் பக்கம் போகக் கூடாது என்று அடுத்த நொடியில் டீக்கடைக்குச் சென்று விடுகிறது மனசு. நொடிப்பொழுதும் ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் சிந்தனையை நிறுத்தி வெற்று மனதாகி விட்டால் இந்தப் பிரபஞ்சத்துடன் எப்படி ஒரு ஆலமரம் இணைந்து நிற்கிறதோ அது போல இணைந்து விட்டால். புத்தன் சும்மாவா ஆலமரத்தின் அடியில் உட்கார்ந்து ஞானம் பெற்றார்?

எழுத நன்றாக வருகிறது. ஆனால் இந்த மனதை அடக்கிட என்ன செய்தாலும் அது நம்மை அடக்கி விடுகிறது. நொடிப்பொழுதும் அடங்காது ஆட்டம் போடும் இந்தப் பொல்லா மனது குரு நாதரின் முன்னே மகுடிக்கு நின்றாடும் பாம்பு போல ஆடி அடங்கி விடும்.

சுவாமியிடம் பிரார்த்தனை செய்தால் போதும். ’அந்தப் பக்கமாகப் போ எல்லாம் சரியாகி விடும்’ என்று வழி காட்டி விடுவார். இல்லையென்றால் எவரையாவது கூட அனுப்பி கரை சேர்த்து விடுகிறார். அதற்கெல்லாம் பிராப்தம் வேண்டுமென நினைக்காதீர்கள். உங்களுக்கு மனது வேண்டும்.

ஜோதி சுவாமியுடன் வழக்கம் போல பேச ஆரம்பித்தேன். ஆஸ்ரமத்திற்கு வரும் ஒருவர் சமீபத்தில் அகால மரணம் அடைந்தார். அவருக்கு ரசவாதம் கைகூடி இருந்தது. ரசத்தைக் கட்டும் வித்தையை அவர் பழுதறக் கற்றிருந்தார். 

“ரசமும் மூலிகையும் வாங்க காசு கொடுங்கள். ஒரு கிலோ சுத்த வெள்ளிக்கட்டி தருகிறேன். விற்று சம்பாதித்துக் கொள்ளுங்கள்” என்று என்னிடம் அந்த அகால மரணம் அடைந்தவர் கேட்டார். மறுத்து விட்டேன்.

ரசக்கட்டு தெரிந்தவுடன் அந்த ஆள் தங்கம் வரைக்கும் செய்ய ஆரம்பித்து இருக்கிறார். வெளியில் நோய்க்கு மருந்து அளிக்கிறேன் என்றுச் சொல்லி ரகசியமாக இந்த ரசக்கட்டு வேலையைச் செய்து பணம் சம்பாதித்து, பெரும் பணத்தைச் சேர்த்து வந்திருக்கின்றார். பணம் வந்தால் பத்தும் பறந்து போகும். இவருக்குப் பதினொன்றும் போய் விட்டது.

சுவாமி ”இந்த வேலையெல்லாம் செய்யாதே” என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அவர் ”பின் ஏன் சித்தர்கள் ரசக்கட்டு வித்தையைச் சொன்னார்கள் ?” என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார். 

தபஸ் செய்யும் மனிதன் சிறு அளவில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அவனால் வேலை ஏதும் செய்ய முடியாது. அதற்காக குண்டுமணி அளவு தங்கம் செய்து அதை விற்று உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ரசக்கட்டு வித்தையைச் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் அதை வைத்து பொருள் தேடினால் அவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் அவர் கேட்கவில்லை.

விளைவு சின்னஞ்சிறு வயதில் அகால மரணம். கோடி கோடியாய் சேர்த்து வைத்திருக்கும் சொத்தினால் என்ன பிரயோஜனம்? ஆடிய ஆட்டம் முடிந்தது. 

”சாமி, சித்தர்கள் சாபம் பலிக்குமா?” என்றேன்.

“ஆமாம் ஆண்டவனே, நிச்சயம் பலித்து விடும். மனித சமுதாயம் நல்வாழ்வு வாழ, நோய் நொடி இல்லாத ஆரோக்கிய வாழ்வு வாழத்தான் சித்தர்கள் எந்தப் பிரதிபலனும் பாராமல் சித்த ரகசியங்களை மனிதர்களுக்குச் சொல்லிச் சென்றார்கள். அதை வைத்து பொருள் தேட ஆரம்பித்தால் இப்படித்தான் ஆகும். இப்படி ஆரம்பித்தவர்கள் வாழ்க்கை எல்லாம் சீரழிந்து சிதைந்து போய் விடும் ஆண்டவனே!” என்றார்.

சித்தர்கள் சாபம் பலித்தே விட்டது. என் வாழ்க்கையில் நான் அனுபவ பூர்வமாக கண்டு கொண்ட உண்மைச் சம்பவம் இது.

சித்தர்கள் பெயரைச் சொல்லக்கூட தகுதி வேண்டும். வயிற்றுப் பிழைப்புக்கு சித்தர்கள் பெயர்களை அடைமொழியாக்கி பல்வேறு அக்கிரமங்கள் செய்கின்றார்கள். மருந்து விற்கின்றார்கள். மூலிகைகள் விற்கின்றார்கள். இந்த மூலிகைகளை காசு வாங்கிக் கொண்டா பூமி தருகின்றது? செய்யும் செயலில் தர்மம், நீதியும், நியாயமும் இருக்க வேண்டும், 

இன்றைய மருத்துவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையை விசாரித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் வாழ்வில் படும் துயரங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

சேலம் பக்கம் மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுப்பார்கள். அந்த மருந்து கொடுப்பவர்களுக்கு மறு நாள் அந்த நோய் பீடித்து விடும். அவர்கள் மருந்து சாப்பிட்டு நோய் தீரத் தீர மறுபடியும் மருந்து கொடுத்து வருகின்றார்கள். அவர்கள் கோடி கோடியாய் பணம் கேட்கவில்லை. 

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் என பல உண்மைச் சம்பவங்களை எழுதி இருக்கிறேன். தொடர்ந்து எழுத நினைத்தேன். முடியவில்லை. ஏனென்றால் அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் நீங்கள் எதிர்பார்க்கவே முடியாத கொடூரங்கள் கொண்டவை. என்ன தங்கம் இப்படி எழுதுகின்றாரே நம்பவா முடியும் என்று நீங்கள் கேட்பீர்கள். உதாரணம் சொல்கின்றேன்.

இரண்டு பெண்கள். இரண்டு அதர்மம். நடந்தது என்னவென்று மஹாபாரதத்தையும், இராமாயணத்தையும் படித்துக் கொள்ளுங்கள். முடிவு என்ன? பேரழிவு நடந்தது அல்லவா? 

இப்போது தர்மம் நின்று கொல்லாது. அன்றே கொல்கிறது! 

சித்தர்கள் பெயரைச் சொல்லி பொருள் பறிப்போர் சித்தர் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை அறிந்து கொள்ள இப்பதிவினை எழுதியிருக்கிறேன்.

Sunday, September 25, 2016

முருங்கை இலை சாம்பார் - சுத்தமான இயற்கை உணவு

எம்.ஜி.ஆர் ஆட்சி என்று நினைக்கிறேன். தமிழகத்தில் காலரா வந்த காலம். மழை விடாது ஷவர் போலக் கொட்டிக் கொண்டே இருந்தது. பெரிய ஓட்டு வீடு எங்களது. பக்கத்தில் மாடுகள் கட்டிக் கொள்ள பெரிய கொட்டகை ஒன்றும், நிலக்கடலை செடிகளை வேய்ந்து வைத்திருக்கும் பெரிய உயரமான படல் ஒன்றும் இருக்கும். ஆடுகள், மாடுகள், பசு மாடுகள், கன்றுகள் என்று பத்துப் பனிரெண்டு உறுப்படிகள் இருக்கும். எல்லாம் மழையில் நனைந்து கொண்டே இருந்தன. விடாமல் ஊற்றிக் கொண்டே இருந்ததால் ஓடெல்லாம் நீரில் நனைந்து ஊறி இருந்தது. குளிர் விடாது அடித்துக் கொண்டிருந்தது.

தொடர்ந்து பத்து நாட்கள் விடாது மழை பெய்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். ஊருக்கு கிழக்கே இருந்த வயல்களில் இருந்த பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கிக் கிடந்தன. கடைசி போய் கொண்டிருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள். காய்கறிகள், மீன் கடைகள் எல்லாம் மூடிக் கிடந்தன. கடைத்தெருவில் ஒரு கடைகூட திறக்கவில்லை. 


வடக்கத்தியார் மளிகைக் கடையும், நவாஸ் கடையும் கூடத் திறக்கவில்லை. நவாஸ் கடையில் கோடை லீவுக்கு என்னை வேலைக்கு அனுப்பி வைப்பார்கள். கல்லாப்பெட்டியில் காசு வாங்கிப் போடும் வேலை தருவார் நவாஸ். கணக்குப் போட்டு கல்லாப்பெட்டியைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் மேரி பிஸ்கட்டும், பேரிச்சம்பழமும் கொடுப்பார். கோடை லீவு முடிந்து பள்ளி ஆரம்பித்ததும் புத்தகப்பையும், நோட்டுகளும், பேனாக்களும் தருவார். அத்துடன் காசும் வேற. இப்போது எங்கிருக்கின்றாரோ தெரியவில்லை.

விடாது கொட்டிக் கொண்டிருக்கும் மழையில் வீட்டில் இருப்போர் சாப்பிட அரிசு சோறு இருக்கும். குழம்புக்கு அம்மா வீட்டின் பின்புறமிருக்கும் முருங்கை இலையை பறித்து வந்து உருவி எடுத்து பொருமா போட்டு கீரைப் பொறியல் செய்வார்கள். கீரையுடன் துவரம் பருப்புச் சேர்த்து முருங்கைக் கீரைச் சாம்பார் வைத்து தருவார்கள். சுவையாக இருக்கும்.


இப்போது மார்கெட்டுகளில் கிடைக்கும் கீரைகள் பூச்சி மருந்து எண்டோசல்பானோ என்ன இழவோ தெரியவில்லை அடித்து சும்மா பச்சைப் பசேல் என்று கொண்டு வந்து கொடுக்கின்றார்கள். இந்த எண்டோசல்பான் பூச்சி மருந்தினால் தான் புற்று நோய் வருகின்றதாம். களைக்கொல்லி ரவுண்ட் ஆஃப் மூலமும் பல்வேறு நோய்கள் வருகின்றதாம்,

கத்தரி, வெண்டை, உருளை, கேரட், பீன்ஸ் என அனைத்தும் மருந்து மயம். சுத்த சைவம் சாப்பிட்டாலும் எந்த வடிவில் நோய் வருமோ தெரியவில்லை. இத்தனைக் களேபரத்திலும் ஒரே ஒரு உணவு மட்டுமே இயற்கை சார்ந்ததாக இருக்கிறது. செடி முருங்கை இல்லை. சாதாரணமான முருங்கைக் கீரை மட்டுமே சுத்தமான இயற்கை உணவு. முருங்கை மரத்துக்கு யார் உரம் போடுகின்றார்கள்? பூச்சி மருந்து அடிக்கின்றார்கள்? நம்பி உண்ணக்கூடிய சுத்தமான இயற்கை உணவு அது.

இனி முருங்கை இலை சாம்பார் வைப்பது எப்படி என்றுக் குறிப்புத் தருகிறேன். வாரம் ஒரு முறை விடாது சாப்பிடுங்கள். மூட்டு வலி தீரவும், உடம்பு இளைக்கவும் முருங்கை இலை சூப் வைத்துச் சாப்பிடுங்கள். உடல் தெளிவாய் இருக்கும்.

முருங்கைக்கீரை சாம்பார் செய்யும் விதம் எப்படி எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-
===========================

1.முருங்கை இலை உருவி சுத்தம் செய்தது நான்கு பிடி கை கொள்ளாமல் அள்ளும் அளவு
2,துவரம் பருப்பு - 100 கிராம் அளவு
3.தக்காளி ஒன்று
4.சிறிய வெங்காயம் பத்து அளவுக்கு
5,பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன்
6.மஞ்சள் தூள் சிட்டிகை
7.பச்சை மிளகாய் நான்கு (அவசியம் சேர்க்கவும்)
8.புளி சின்ன எலுமிச்சை அளவு கரைத்து வைத்துக் கொள்ளவும்
9.மல்லித்தூள் (கடை மல்லித்தூள் ஆகாது. மல்லியுடன் சீரகம், சோம்பு, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, மஞ்சள், மிளகு, கொஞ்சம் அரிசி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்)

அரைத்துக் கொள்ள:-
=====================
சீரகம் அரை டீஸ்பூன்
சோம்பு அரை டீஸ்பூன்
மிளகு பத்து
பூண்டு நான்கு பற்கள்

இனி எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்

துவரம்பருப்புடன் மஞ்சள் தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் (மறந்து விடாதீர்கள் இல்லையென்றால் வயிற்றில் போய் விடும்) பெருங்காயத்தூள், தக்காளியை நறுக்கி தேவையான தண்ணீர் விட்டு நான்கு விசில் வரும்படி குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். வெந்த பருப்பை மசித்து விட வேண்டாம். இத்துடன் புளித்தண்ணீர், மல்லித்தூள் ஒன்றை டீஸ்பூன் அளவு, அறைத்து வைத்த மசாலா, தேவையான உப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

சட்டியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் பொறிந்தவுடன் வரமிளகாய் இரண்டும், தட்டிய பூண்டுப் பற்கள் நான்கையும் சேர்த்து எல்லாம் சிவந்தவுடன் கலந்து வைத்திருக்கும் பருப்பினை சேர்த்து ஒரே ஒரு கொதி வந்தவுடன், முருங்கைக் கீரையை சேர்த்து அது ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து மூடி போட்டு வைத்து விடவும். பத்து நிமிடம் கழித்து கிளறி விடவும், மீண்டும் மூடி விடவும். சூட்டில் தான் கீரை வேக வேண்டும்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் கீரை வெந்து சாப்பிடத் தயாராகி விடும். பருப்புக் கலவையை ஒரே ஒரு கொதியில் முருங்கைக் கீரையச் சேர்த்து விடவும். அடுத்த கொதி வந்தவுடன் அடுப்பை மறக்காமல் அடுப்பை அணைத்து விடவும். இல்லையென்றால் குழம்பு கடுத்துப் போய் விடும். 

முருங்கை இலையை தொட்டவுடன் பொசு பொசுவென்று இருக்கும். முகர்ந்து பார்த்தால் கீரை வாசம் அடிக்கும். இந்தக் கீரைதான் குழம்புக்கு நல்ல மணத்தையும், சுவையும் தரும்.  அடிக்கீரையைச் சேர்க்க வேண்டாம், கொழுந்துக் கீரை தான் வேண்டும்.

சுத்தமான ஆரோக்கியமான சாம்பார். வாரம் ஒரு முறை மறக்காமல் சாப்பிட்டு வாருங்கள்.

அடுத்து குண்டாக இருப்போர் உடல் இளைக்க எளிய முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

இந்தச் சூப் சாப்பிட்டவுடன் உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆகவே மாலை ஆறு மணிக்குள் பசி எடுப்போர் சாப்பிட்டுக் கொள்ளவும்.

இரவு எட்டு அல்லது ஒன்பது மணி வாக்கில் இந்தச் சூப்பை குடல் நிறையக் குடித்து விட்டுப் படுங்கள்.

இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரை, ஐந்து எண்ணிக்கை அளவு பச்சை மிளகாய், தேவையான உப்பு அத்துடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் சேர்த்து இரண்டே விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். விசில் நின்றவுடன் வடிகட்டி அந்தச் சூப்பை தினமும் இரவு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். குடிக்க முடிந்த அளவு குடித்துக் கொள்ளுங்கள். உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக இளைக்க ஆரம்பிக்கும். பத்தாயிரம் ரூபாய் கொடுத்து ஷேக் குடிக்கிறேன் பேர்வழி என உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

மூட்டு வலி பிரச்சினை இருப்போர் இந்தச் சூப்பை விடாது ஒரு பதினைந்து நாட்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். மூட்டு வலி ஓடிப்போய் விடும்.

சளி பிடித்திருக்கிறதா?  விடுங்கள் கவலையை. மேற்கண்ட சூப்பினை வைத்து இரவில் இரண்டு குவளை அளவில் நான்கைந்து நாட்கள் எடுங்கள். சளி என்ன ஆகும் என்று பாருங்கள். மாத்திரையும் வேண்டாம், ஆண்டிபயாட்டிக்கும் வேண்டாம்.  சொன்னால் புரியாது செய்து பாருங்கள். சளி பறந்து போய் விடும்.

முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

சரி இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை. ஓய்வாக இருக்க வேண்டிய நாள். வாக்காளர் அடையாள அட்டை முகவரி மாற்றம் செய்ய செல்ல வேண்டும். வரட்டுமா?


Saturday, September 24, 2016

நிலம் (31) - பட்டாவா? பத்திரமா? எது சரி?

’என்ன இது தங்கவேல் பிரச்சினைகளாகவே எழுதிக் கொண்டிருக்கின்றாரே? பிரச்சினைகளே இல்லாத பூமி இல்லையா”’ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அதெல்லாம் இருக்கிறது. பிரச்சினைகளை ஏன் எழுதுகிறேன் என்றால் நிலம் வாங்குபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எந்த வித பிரச்சினையும் இல்லாத பல கிரையங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. பிரச்சினைகள் இருப்பதால் தானே கோர்ட்டுகளும், காவல்துறையும் இருக்கின்றன? 

தெரிந்த ஒருவர் பூமி கிரையம் வாங்க முடிவு செய்து வில்லங்கங்களை எல்லாம் பரிசோதித்து விட்டு அட்வான்ஸ் தொகையும் செலுத்தி இருக்கிறார். லீகல் ஒப்பீனியனுக்காக என்னிடம் வந்தார்.

அனைத்தும் சரியானதாக இருந்தது. பத்திரத்தில் உள்ள இடத்தின் அளவும் பட்டாவின் இடத்தின் அளவும் வேறு வேறாக இருந்தது. அதைக் குறிப்பிட்டு பட்டாவில் இருக்கும் பூமிக்கு மட்டுமே பணம் கொடுங்கள் என்றுச் சொல்லி விட்டேன்.

இவர் பூமியின் உரிமையாளரிடம் சென்று நான் சொன்னதாகச் சொல்லி அவரை என்னிடம் ஏதும் சொல்லாமல் அழைத்துக் கொண்டு வந்து விட்டார். இது போன்ற பிரச்சினைகள் வேறு வரும். இதையும் சமாளிக்க வேண்டும்.

”பத்திரத்தில் நான் எழுதி வாங்கிய சொத்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்குத்தானே விலை பேசினோம். இப்போது பட்டாவில் இருக்கும் சொத்துக்கு மட்டும் தான் பணம் கொடுக்க வேண்டும் என்றுச் சொன்னீர்களாமே இது நியாயமா? இப்படிச் சொல்லலாமா?” என்று கோபத்துடன் பேசினார்.

அவரிடம் ”அய்யா பத்திரத்தில் அந்தச் சொத்தின் உரிமையாளர் நீங்கள் தான் என்று இருப்பது சரிதான். ஆனால் பட்டாவில் இவ்வளவு இடம் தானே உங்கள் பெயரில் இருக்கிறது? உள்ள இடத்திற்குத் தானே காசு கொடுக்க முடியும்? இல்லாத இடத்திற்குப் பணம் எப்படித் தருவது? என்று கேட்டேன். ”அதெல்லாம் முடியாது” என்று வம்பு செய்ய ஆரம்பித்து விட்டார். இதெல்லாம் திருந்தாத கேசு என நினைத்துக் கொண்டு, “சரிங்க, நீங்க பத்திரத்தில் உள்ளபடி பட்டாவை பெற்றுக் கொடுங்கள். முழுப் பணத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றுச் சொன்னேன்.

ஜெயித்து விட்ட நினைப்பில், ”இப்பச் சொன்னீங்களே, இது சரி, நான் பட்டாவுடன் வருகிறேன்” என்றுச் சொல்லி சென்று விட்டார். ஆயிற்று மூன்று மாதங்கள். 

ஆள் அரவமே இல்லாமல் இருக்க தெரிந்தவரை அழைத்து விசாரணை செய்தேன். ”இன்னும் இரண்டு நாட்களில் ஒப்பந்த தேதி முடிகிறது அதற்குள் அவரை உங்களிடம் அழைத்து வருகிறேன்” என்றுச் சொன்னார். அவர் மீண்டும் வந்தார். பட்டாவில் மாற்றம் செய்ய முடியவில்லையாம். ”என்னென்னவோ செய்து பார்த்து விட்டேன், முடியவில்லை” என்றார்.

ஆள் ஒன்றும் செய்திருக்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். கடைசி நேரத்தில் முழுப்பணத்தையும் பெற்று விடலாம் என்ற திட்டம் அவருக்கு. மீண்டும் சர்வே செய்து விடலாம் என்றொரு முடிவினை அவரிடத்தில் சொன்னேன். அவருக்கு முகமெல்லாம் மாறி விட்டது.  ”அதான் ஏற்கனவே அளந்து கொடுத்து விட்டேனே இனிமேலும் என்ன இருக்கிறது அளப்பதற்கு, என்னால் மீண்டும் செலவு செய்ய முடியாது” என்றார் அவர்.

”நாங்கள் செலவு செய்து அளக்கிறோம், நீங்கள் செலவு செய்ய வேண்டாம்” என்றவுடன் அவரால் மறுக்க முடியவில்லை.

மீண்டும் சர்வே செய்த போது பட்டாவில் குறிப்பிட்டுள்ள இடத்தினை விட மேலும் நில அளவு குறைந்தது. பாதைக்கு பூமியை எடுத்திருக்கிறார்கள். அதைக் கணக்கிடாமல் முன்பு அளந்த சர்வேயர் இருக்கும் அளவீடுகளின் படியே அளந்து கொடுத்து விட்டார். மேலும் பிரச்சினை ஆரம்பித்தது.

அவரிடம் ”பாதைக்கு கொடுத்த பூமிக்கு பணம் எப்படிக் கொடுப்பது? பட்டாவில் இருக்கும் பூமிதான் அனுபோக பாத்தியத்தில் இருக்கிறது அதற்குத்தான் பணம் கொடுக்க முடியும்” என்று படாதபாடு பட்டு புரியவைத்து அதன் பிறகு தான் கிரையம் செய்து கொடுத்தார்.

இந்தக் கிரையப் பத்திரத்தை கொஞ்சம் விஷயமாக எழுத வேண்டும். இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

ஆகவே பட்டாவில் இருக்கும் பூமி தான் அனுபோக பாத்தியதை உள்ளது. அதற்கு தான் பணம் கொடுக்க வேண்டும். பத்திரத்தில் உள்ள பூமியின் அளவுக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்பது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். பத்திரத்தில் இருக்கும் அளவும் பட்டாவில் இருக்கும் அளவும் ஒன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை.

நிலம் (30) - அன் அப்ரூவ்ட் மனைகளில் இருக்கும் பிரச்சினைகள்

அன் அப்ரூவ்ட் மனைகளைக் கிரையம் செய்ய கோர்ட் தடை உத்தரவைப் போட்டிருக்கிறது என்பதற்காக அன் அப்ரூவ்ட் சைட் விற்போரும், சைட்டுகள் வாங்கியவர்களும் கோபத்தில் இருக்கின்றார்கள். போராட்டங்களை நடத்தி இருக்கின்றார்கள். 

எல்பிஏ, சிஎம்டிஏ, டிடிசிபி அலுவலகங்கள் ஏன் உருவாக்கப்பட்டிருக்கின்றன? அன் அப்ரூவ்ட் என்றாலே இல்லீகல் என்று தானே அர்த்தம் வரும்? அந்த மனைகளை யார் வாங்கச் சொன்னது? அரசா அன் அப்ரூவ்ட் மனைகளை வாங்கச் சொன்னது? வீட்டு மனைகளை விற்பதற்கு தகுந்த அமைப்பில் விண்ணப்பம் கொடுத்து அனுமதி பெற்று விற்கச் சொல்கிறது அரசு. ஆனால் ஒரு சிலரின் ஆசைக்காக அரசிடம் எந்த வித அனுமதியும் பெறாமல் பூமியைச் சமப்படுத்தி சாலை போட்டு கல்லை நட்டு விட்டு மனை என்றுச் சொல்லி விற்க ஆரம்பித்தவுடன் சல்லிசாகக் கிடைக்கிறதே என்றுச் சொல்லித்தானே அனைவரும் வாங்கினார்கள். அன் அப்ரூவ்ட் மனைகளை விற்பதே தவறு. அதை விற்று விட்டு அரசுக்கும், கோர்ட் உத்தரவிற்கு எதிராகப் போராடுவது எந்த விதத்தில் சரி? என்று ஒருவர் என்னிடம் கேட்டார். மக்கள் திருந்தாத வரைக்கும் இதைப் போன்ற பிரச்சினைகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

என்னிடம் ஒரு பிரச்சினை வந்தது. பஞ்சாயத்து போர்டு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்றுச் சொல்லி ஒருவர் வீட்டு மனை ஒன்றினை வாங்கி இருக்கிறார். சில வருடங்கள் சென்றவுடன் காசு சேர்த்துக் கொண்டு அந்த மனையில் வீடு கட்டுவதற்காக சென்று சுத்தப்படுத்தி பூஜை போட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது வேப்பங்குச்சியில் பல் துலக்கியபடி ஒருவர் அங்கு வந்திருக்கின்றார். ”இங்கு என்ன செய்கின்றீர்கள்?” என்று வெகு சாதாரணமாக கேட்டிருக்கிறார். உடனே பூஜை போட்டுக் கொண்டிருந்தவர் ”இது என் வீட்டு மனை, நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், நீ யார் அதைக் கேட்க” என்று ஏக வசனத்தில் பேச ஆரம்பித்தவுடன் அவர் ஒன்றும் பேசாமல் திரும்பிச் சென்று விட்டாராம்.

போர் போட்டிருக்கின்றார்கள். மின் இணைப்புப் பெற்றிருக்கின்றார். வீடு கட்ட ஆரம்பித்து முழுவதையும் கட்டி முடித்து கிரகப் பிரவேசத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். வேப்பங்குச்சியால் பல் துலக்கிக் கொண்டே ஒருவர் வந்தார் அல்லவா அவர் அங்கு மீண்டும் வந்திருக்கிறார்.

வேப்பங்குச்சிக்காரர் மெதுவாக ஆவணங்களை எடுத்து அவரிடம் காட்டி வீடு கட்டியவரின் இடம் அதே பகுதியில் வேறு இடத்தில் இருக்கிறது என்பதைப் புரிய வைத்திருக்கிறார். ”இது என் இடம், மரியாதையாக வெளியே சென்று விடு இல்லையென்றால் நில அபகரிப்புப் புகாரில் உள்ளே தூக்கிப் போட்டு விடுவேன்” என்றுச் சொல்லி இருக்கிறார்.  இப்போது அந்த வீடு வேப்பங்குச்சிக்காரருக்குச் சொந்தம். ஆள் எப்படி என்று பார்த்தீர்களா?  பூஜை போட்டவுடன் தடுக்கச் சென்றவரிடம் எகத்தாளம் பேசினால் இப்படித்தான் ஆகும்.

இந்தத் தவறு எப்படி நடந்திருக்கிறது என்றால் அன் அப்ரூவ்ட் மனைகள் விற்பவர்கள் பிளானைப் போட்டு மார்கெட் செய்வார்கள். ஓரளவிற்கு மனைகள் விற்றவுடன் மீதமிருக்கும் மனைகளை விற்க முடியவில்லை என்றால் அதையெல்லாம் ஒன்றாக இணைத்து பூமியாகவோ அல்லது வேறு மனைகளாகவோ மாற்றி விடுவார்கள். ஒருவர் 10 செண்ட் மனை வேண்டுமென்று கேட்டால் அதற்கேற்றவாறு கற்களைப் பிடுங்கி விட்டு புது மனைகளை உருவாக்கி விடுவார்கள். ஆனால் அரசு அனுமதி பெற்ற மனைகளை அப்படிச் செய்ய முடியாது. அன் அப்ரூவ்ட் மனைகளில் இருக்கும் பொது வழிச் சாலைகளைக் கூட தானம் எழுதிக் கொடுக்க மாட்டார்கள். மனைகளில் விடப்பட்டிருக்கும் பொது இடத்தினைக் கூட விட மாட்டார்கள். பொது இடத்தில் குழந்தைகள் விளையாட உபகரணங்களை அமைத்திருப்பார்கள். அதை அடுத்த மனை ஆரம்பிக்கும் போது பிடுங்கி எடுத்துக் கொண்டு போய் புதிய மனையில் பதித்து விற்பனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதுமட்டுமில்லை மின் கம்பங்களைக் கூட விடமாட்டார்கள். இப்படி ஒரு குரூப் இருக்கிறது. ஆனால் இந்த அன் அப்ரூவ்ட் மனைகளை விற்போரில் பலர் இந்தக் காரியங்களைச் செய்யமாட்டார்கள். சொல்லித்தான் விற்பார்கள். 

கோவையில் ஓர் இடத்தில் அன் அப்ரூவ்ட் மனைப் பிரிவில் ஒரு சில மனைகள் விற்றவுடன் மீதமுள்ள மனைகளை விற்க முடியவில்லை. சாலையையும் சேர்த்து வேறொருவருக்கு விற்று விட்டார்கள். மனைக்குப் பாதை கேட்டு இப்போது அரசு அலுவலங்களில் விண்ணப்பம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் அந்த மனைகளை வாங்கியோரில் பலர். இதை எப்படிச் சரிசெய்வது? விதி! ஆகவே கவனம் கொள்ளுங்கள்.

அன் அப்ரூவ்ட் என்பது அப்ரூவ்ட் என்பதின் எதிர்ச்சொல் தானே?

சரி அந்தப் பிரச்சினைக்கு வருவோம். வீடு கட்டியவர் மனை உரிமையாளர் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று காலில் விழுந்திருக்கிறார். வேறு வழி? ஒரு வழியாக இருவரும் பேசி முடிவெடுத்துக் கிரையம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கின்றார்கள். அடுத்த நாள் அன் அப்ரூவ்ட் மனைகளையோ அல்லது அதில் கட்டப்பட்ட வீடுகளையோ கிரையம் செய்ய தடை விதித்து கோர்ட் உத்தரவு போட உள்ளதும் போச்சே என்று நொந்து கொண்டிருக்கிறார்.

யாரோ ஒருவர் என்னைப் பார்க்கச் சொல்லி இருக்கிறார். போனில் விசாரித்து விட்டு என்னிடம் வந்தார். விஷயம் முழுவதையும் கேட்டுக் கொண்டேன். இந்தப் பிரச்சினைக்கு வழி என்ன? ஏதும் இருக்கிறதா? என்று அவரும் பலரிடம் கேட்டாராம். பதிவாளரிடமும் கேட்டிருக்கிறார். ஒன்றும் கிடைக்கவில்லை, பணம் செலவானாலும் பரவாயில்லை எனக்கு பிரச்சினை முடிய வேண்டும் என்றுச் சொல்லிக் கொண்டிருந்தார்.

சட்டத்திற்கு புறம்பாகவோ அல்லது கோர்ட் உத்தரவிற்கு எதிராகவோ இல்லாமல் வெகு சரியான துல்லியமான சொல்யூசன் ஒன்றினை அவருக்குப் பரிந்துரைத்தேன். ”இது மட்டும் நீங்கள் சொல்லியபடி சரியானால் எங்கள் குடும்ப தெய்வமே நீங்கள் தான் சார்” என்றுச் சொல்லி கண்ணீரை உகுத்தார்.

இது அவர் என்னிடம் கொண்டு வந்த அடுத்தப் பிரச்சினை.

எழுந்து கொண்ட அவரை உட்கார வைத்தேன்.

”சார், உங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. உங்கள் மனம் அதிலிருந்து விடுபட நினைக்கிறது. அதற்காக யார் மூலமாகவோ என்னைப் பார்க்க வந்திருக்கின்றீர்கள். நான் எனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைத் தீர்வாகச் சொல்லி இருக்கிறேன். விஷயம் அவ்வளவுதான். உங்கள் பிரச்சினையின் தீர்வுக்கு நீங்களே காரணம். பிர்ச்சினை தீர்ந்தால் அதற்கு முழுப்பொறுப்பும் உங்களுடையதே. இதில் நானெங்கே வந்தேன்? கடவுள் எங்கே வந்தார்?”

”இப்படித்தான், ஏதாவது பிரச்சினைகளில் இருப்போர் சாமியார்களிடம் செல்வார்கள். முகத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும். சாமியார் புன்னகையுடன் ஏதோ அருள்வாக்குச் சொல்வது போல, ”எல்லாம் சரியாகி விடும், கவலைப்படாதே, உனக்காகப் பூஜிக்கிறேன்” என்பார். பிரச்சினையில் சிக்கி இருப்போரின் மனம் அதிலிருந்து விடுபட துடித்துக் கொண்டிருக்கும். அதுவே அதற்கான தீர்வினைச் சொல்லியும் தரும். அதற்குள் மனிதன் யாராவது எனக்கு ஆறுதல் சொல்ல மாட்டார்களா என்று அலைய ஆரம்பித்து விடுகின்றான். சாமியாரிடம் சென்றவுடன் பிரச்சினை தீர்ந்தது என்று அவரைக் கடவுளாகக் கும்பிட ஆரம்பித்து விடுகின்றார்கள். எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு மனதுக்குள்ளே இருக்கிறது. யோசித்தால் கிடைத்து விடும். அப்படியும் தீரவில்லை என்றால் அதுபற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் மனமே அதற்குரிய ஆட்களை தன்னிடத்தில் இழுக்கும். எப்படியாவது தீர்வு கிடைத்து விடும். அதை விட்டு விட்டு சாமி கடவுள் என்று பேசிக் கொண்டிருக்காதீர்கள், போய் வேலையைப் பாருங்கள்” என்றுச் சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.

தெளிவடைந்ததைப் போலத் தெரிந்தது. நன்றாக இருந்தால் போதும். வேறென்ன வேண்டும்?


நிலம் (29) - கடைகள் வாங்கும் போது

இணையதளத்தினைப் படித்து வரும் வாசகர் ஒருவர் அவர் வாங்கப் போகும் சொத்தின் விபரத்தைக் குறித்து பல கேள்விகளைக் கேட்டார். பெரும்பான்மையானோருக்கு போனிலேயே எல்லாமும் தெரிந்து விட வேண்டும் என நினைப்பு இருக்கிறது. ஆனால் அது சொத்து விஷயத்தில் படு பயங்கர பாதகங்களைக் கொண்டு வந்து விடும் என்பது பிரச்சினையில் சிக்கினால் தான் புரியும். படித்தவர்கள் தான் இப்படியெல்லாம் செய்கின்றார்கள்.

முடிந்த வரை விளக்கினேன். போனில் எவ்வளவு நேரம் தான் பேசமுடியும். விட்டால் நாள் முழுக்க பேசுவார் போல. எனக்கு அடுத்தடுத்த வேலைகள் இருந்ததால் பிறிதொரு நாள் கூப்பிடுங்கள் பேசலாம் என்றுச் சொல்லி முடித்து விட்டேன்.

அடுத்த இரண்டாவது நாள் மீண்டும் அழைத்து அதே ராமாயணத்தை ஆரம்பித்தார். அவர் சொத்து வாங்குகிறார். சொத்து பற்றிய ஓரலான விஷயங்களை வைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் பேசுவது?  சொத்து பற்றிய ஆவணங்களை நேரில் கொண்டு வந்து கொடுத்து விடுங்கள். படித்து விட்டு அதன்பிறகு பேசலாம் என்றுச் சொன்னேன். உங்கள் கட்டணம் எவ்வளவு என்று ஆரம்பித்தார். சொன்னேன். அரண்டு போய் விட்டார்.”சார் என்னால் அவ்வளவு எல்லாம் முடியாது” என்று பேச ஆரம்பித்தார். என் வேலைக்கான சம்பளத்தை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்றும் வேறு இடத்தில் ஆய்வு செய்து கொள்ளுங்கள் என்றும் சொல்லி மறுத்து விட்டேன்.

விஷயம் முடிந்தது என்று நினைத்திருந்தேன். அடுத்த பத்தாவது நாளில் மீண்டும் அழைக்க ஆரம்பித்தார். ”சார் கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள், எனக்கு நீங்கள் தான் ஆவணங்களை தரவு செய்து தர வேண்டும் என நினைக்கிறேன்” என்றார். 

முன்பு ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு ஆய்வு முடிந்தவுடன் கட்டணம் பெறுவேன். இப்போது பலரும் சொல்லி வைத்தாற்போல ஆய்வு முடிந்து ஓகே சொன்னவுடன் காணாமல் போய் விடுகின்றார்கள். இல்லையென்றால் பணம் கொடுப்பதற்கு பல்வேறு சாக்குபோக்குகளைச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். ஆவணங்களுடன் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டுதான் ஆய்வுக்கான வேலையைத் தொடர்வது என்று முடிவு கட்டியதால் என்னால் அடுத்த பல வேலைகளைச் செய்ய முடிகிறது. எவ்வளவு நாள் தான் நானும் சும்மாவே வேலை செய்வது? 

அவர் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்றும் ஆய்வு முடிந்ததும் கட்டணம் தருகிறேன் என்றும் அடிக்கடி பேச ஆரம்பித்து விட்டார். மறுத்து விட்டேன். 

இப்படியே சென்று கொண்டிருந்த நாளில் ஒரு நாள் நேரில் வந்து அனைத்து ஆவணங்களையும் என்னிடம் கொடுத்தார். கேட்ட கட்டணத்தையும் கொடுத்தார். ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு அவரை என் முன்னால் அமர வைத்துக் கொண்டே பத்தாவது நிமிடத்தில் இந்த இடத்தினை வாங்க வேண்டாம் என்றுச் சொன்னேன். 

சார் என்றுச் சொல்லி பதட்டத்தில் எழுந்து விட்டார். மார்க்கெட் விலையை விட முக்கால் விலை என்று புரோக்கர் சொல்லியவுடன் ஆள் ஆசைப்பட்டு பெரும் தொகையினை அட்வான்சாகக் கொடுத்து பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட் ஒன்றினைப் போட்டு லீகல் பார்த்திருக்கிறார். அந்த சொத்தில் எந்த வித வில்லங்கமும் இல்லை  என அவர் வைத்திருந்த லீகல் ஒப்பீனியனும் சொன்னது. 

அவருக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. காரணத்தைக் கேட்டார். அவரின் முன்பு என்னிடம் இருந்த ஆவணத்தை எடுத்துப் போட்டேன். ”இதெல்லாம் உங்களுக்கு எப்படி சார் கிடைக்கிறது? படுபயங்கர மோசடியில் அல்லவா மாட்டிக் கொண்டேன்” என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்.

கோவையில் ஒரு பிரபலமான இடத்தில் இருக்கும் வியாபாரக் கடை அது. சல்லிசான விலையில் வருகிறது என்றவுடன் ஆள் ஆசைப்பட்டு விட்டார். கடையின் உரிமையாளர் எல்லாச் சொத்துக்களையும் விற்று விட்டு அமெரிக்கா சென்று அவர் மகனுடன் தங்கப்போவதாகவும், அதனால் மார்கெட் விலையை விட குறைந்த விலைக்கு விற்பதாகவும் புரோக்கர் சொல்லி இருக்கிறார். 

அந்தக் கடை இருக்கும் இடத்தில் சாலையினை அகலப்படுத்துவதற்காக நோட்டிபிகேசன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நோட்டிபிகேசனில் இந்தக் கடையின் முக்கால் பாகம் சென்று விடும். அதாவது சுவர் மட்டுமே மிஞ்சும். நோட்டிபிகேசன் அறிவித்த நாளுக்கு அடுத்த வாரத்தில் தான் நம்ம ஆள் அக்ரிமெண்ட் போட்டிருக்கிறார். சொத்தின் உரிமையாளர் அமெரிக்காவும் போகவில்லை ஆஃப்ரிக்காவும் போகவில்லை. புரோக்கருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பும் இருந்திருக்காது. 

”கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிட முடியுமா சார்?” என்று கேட்டார். அதை எப்படிப் பெறுவது என்று சொல்லிக் கொடுத்தேன்.

புரோக்கரை அழைத்துக் கொண்டு சொத்தின் உரிமையாளர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். நான் அவரிடம் கொடுத்த நோட்டிபிகேசன் நகலையும், புகார் ஒன்றினையும் அவரிடத்தில் கொடுத்துப் படிக்கச் சொல்லி இருக்கின்றார். அடுத்த அரை மணி நேரத்தில் கொடுத்த அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக் கொண்டு அக்ரிமெண்ட் காப்பியை அவர் முன்னால் கிழித்துப் போட்டு விட்டு வந்து விட்டேன் என்றுச் சொன்னார். புரோக்கர் நடுங்கிப் போய் விட்டாராம்.

இந்த விஷயம் எப்படித் தெரியும்? என்று புரோக்கர் அவரிடம் நச்சரித்துக் கொண்டிருக்கிறார் என்றுச் சொன்னார். அவரின் நன்றியைத் தெரிவிப்பதற்கு மேலும் அதிக கட்டணம் தருவதாகச் சொன்னார். என் வேலைக்கான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு விட்டேன். போதும் என்றுச் சொல்லி மறுத்து விட்டேன்.

ஆகவே கடைகள் வாங்கும் போது சாலை அகலப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்றும், ஏதேனும் நோட்டிபிகேசன் இருக்கிறதா என்றும் ஆராய்ந்து பார்த்துக் கொள்ளுங்கள். 

இப்படிப்பட்ட பிரச்சினையில் சிக்கி இருந்தால் தகுந்த ஆவணங்களை அனுப்பி வையுங்கள். மிகச் சரியான ஆலோசனையைத் தருகிறேன். என் முகவரி கேட்டால் கிடைக்கும். போனில் ஆலோசனை கேட்க வேண்டாம். அது துல்லியமாக இருக்க இயலாது.

Friday, September 23, 2016

ஜலாலுத்தீன் ரூமி கவிதையை முன்வைத்து ஓஷோவுடன் உரையாடல்

காதலன் தன்னுடைய காதலியின்
வீட்டுக் கதவைத் தட்டுகிறான்
உள்ளிருந்து குரல் வருகிறது
“யாரது?”
காதலன் கூறுகிறான்

”நான் உன் காதலன்
என்னைத் தெரியவில்லையா?
என்னுடைய காலடி
ஓசையை மறந்து விட்டாயா?
என்னுடைய குரலும்
உன் நினைவை விட்டு
நீங்கி விட்டதா?”

உள்ளிருந்து குரல் வருகிறது

“கதவு உனக்காகத் திறக்கப்படுவதற்கு
இன்னும் நீ தகுதி பெறவில்லை
இன்னும் உனக்கு
அந்த அதிகாரம் வரவில்லை”

அந்தக் காதலன் திரும்பிச்
சென்று விட்டான்.
பல வருடங்கள் திரிந்தலைந்தான்.
காதலைத் தேடுவதில்
அவன் முழு மூச்சுடன்
ஈடுபட்டான்
காதலைத் தெரிந்து கொள்ள
முயன்று
கொஞ்சம் கொஞ்சமாக
அவன் காதலைத் தெரிந்து கொண்டான்.

அவன் திரும்பி வந்தான்.
மீண்டும் அதே கதவைத் தட்டினான்.

உள்ளிருந்து அதே குரல் கேட்கிறது
“யாரது?”
அதற்கான பதில் தருகிறான்
” நீயே தான்!”
உடனே கதவு திறக்கிறது.

ஜாலாலுத்தீன் ரூமியின் கவிதை இது. ஓஷோ இந்தக் கவிதை முடிவடையவில்லை என்கிறார். இன்னும் நான்கு வரிகள் சேர்ந்திருந்தால் நலமாயிருக்கும் என்கிறார். நீ என்றால் கதவு திறந்திருக்கக் கூடாது என்கிறார் ஓஷோ.

( ஜலாலுதீன் முகமது ரூமி - 1207 - 1273ல் வாழ்ந்த மிகச் சிறந்த கவிதையாளர்)

நீயும் நானும் எதிரெதிர் பதங்களே, ‘நீ’ என்பதன் முழு அர்த்தமும் ‘நான்’ என்பதிலேயே அடங்கியுள்ளது. எதுவரை ‘நான்’ உள்ளதோ அதுவரை ‘நீ’ யிலும் அர்த்தமுண்டு. ‘நான்’ என்பதே இல்லை என்றாகும் போது ‘நீ” என்பது யார்? என்கிறார் ஓஷோ. காதலனும் இருக்கக்கூடாது காதலியும் இருக்ககூடாது என்று முடித்து விடுகிறார் ஓஷோ. 


(ஓஷோ - தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மிகச் சரியான மனிதர்)

ஜலாலுத்தீன்  ரூமியை நீங்கள் சந்தித்தீர்களோ இல்லையோ ஓஷோ, இந்தக் கவிதைக்கு ஒரே ஒரு வார்த்தையில் முடிவுரை எழுதிவிடலாம் என நினைக்கிறேன். நீங்கள் சொல்ல வந்தது இதுவாகக் கூட இருக்கலாம் அல்லவா ஓஷோ?

மீண்டும் அந்தக் கவிதை...............!


அவன் திரும்பி வந்தான்.
மீண்டும் அதே கதவைத் தட்டினான்.

உள்ளிருந்து அதே குரல் கேட்கிறது
“யாரது?”
அதற்கான பதில் தருகிறான்
”காதல்”
உடனே கதவு திறக்கிறது.

சரிதானே ஓஷோ?

நன்றி : ஓஷோவின் நாரதரின் பக்தி சூத்திரம் மற்றும் ரூமி

Thursday, September 22, 2016

இப்படியும் ஒரு தாய்

”தலைவரே எனக்கு பெண் பிறந்திருக்கிறாள்” என்றார் நண்பர். ”இதோ வந்து விடுகிறேன்” என்றுச் சொன்னேன். ஆனால் மாலையில் ஓஷோவின் “நாரதரின் பக்தி சூத்திரத்தில்” மூழ்கியதால் அந்த நினைப்பே வரவில்லை. மணி ஏழாயிற்று. இனி விசிட்டர்ஸ் அனுமதி இல்லையென்றுச் சொல்லி விடுவார்கள் என்பதால் மறு நாள் செல்வதற்கு முடிவு செய்து கொண்டேன்.

மறு நாள் மாலை. வெயிலொன்றும் அதிகமில்லை. குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. கே.எம்.சி.ஹெச்சிற்குச் சென்றேன். கையில் நண்பரின் அம்மா தூங்கிக் கொண்டிருந்த அந்த அற்புதத்தை என்னிடம் தந்தார். அது அழகாக கண் மூடி துயிலிருந்தது. மலர்ந்த ரோஜாவைப் போல. சின்னஞ்சிறு கைகள் மூடி இருந்தன. கமலக் கண்கள் திரையிட்டிருந்தன. வெதுவெதுப்பான துணியில் ஒளி வீசும் மரகதமாய் துயில் கொண்டிருந்தது அந்த உயிர். அங்கு இவருக்கு மட்டும் தான் மதிப்பு. பெற்றவர்களுக்கு அவர் தான் சந்தோஷம். புதிய உயிரை உலகிற்கு தந்த பெரும் மகிழ்வில் அந்தத் தாயும் தகப்பனும் முகம் மலர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சுகப் பிரசவம் ஆகி இருக்கிறது எனக் கேள்விப்பட்டேன்.

என் மகளை என்னிடம் கொண்டு வந்த கொடுத்த போது அருகிலிருந்த அம்மாவிடம், ”என்னம்மா இவ்ளோ வெள்ளையா இருக்குது?” எனக் கேட்டேன். ”தண்ணிக்குள்ளே கிடந்துச்சுல்ல, அது அப்படித்தான் இருக்கும். காது மடலைப் பார் அந்தக் கலர் தான்” என்றார்.

என் மகன் பிறந்த போது கண்களை திறந்து கொண்டே தான் இருந்தான். பிறக்கும் குழந்தையின் கண்கள் நன்றாகத் தெரியும் என்றுச் சொல்லி செம்போத்து என்கிற செண்பகக் குருவியைக். கிராமத்திலிருந்து என் நண்பன் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்தான். உடனே கிளம்பி விடாதீர்கள். அது கிராமப்புற நம்பிக்கை. அவ்வளவுதான்.


(செண்பகம் என்று அழைக்கும் செம்போத்துக் குருவி)

குழந்தைப் பிறந்ததும் ஒரு வருடத்திற்கு கண்ணை இமை காப்பது  போலக் காப்பாற்ற வேண்டும். அசந்து தூங்க முடியாது அந்தத் தாயால். தவழ ஆரம்பித்தவுடன் மேலும் கவனம் வேண்டும். எதையாவது எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும். ஐந்து வருடம் வரை குழந்தையை நோய்களிலிருந்தும், பிற பிரச்சினைகளிலிருந்தும் காப்பாற்ற ஒரு தாய் படும்பாடு சொல்லிக் கொள்ள முடியாது. இப்படித்தான் காவிரி நீருக்காக தீக்குளித்த விக்னேசையும், எவராலோ கொல்லப்பட்ட இந்தியாவின் இருபது ராணுவ வீரர்களையும் அவர்களின் பெற்றோர்கள் பெற்று வளர்த்திருப்பார்கள்.

ஒரு உயிரைக் கொல்வதை எளிதாகச் செய்து விடுகின்றார்கள். அந்தளவுக்கு மிருக குணம் கொண்டு கொலை செய்து விட்டு என்ன சாதிக்கப்போகின்றார்கள் என்பது தான் விளங்கவில்லை. ஏன் சக மனிதனிடம் இத்தனை வன்மம்? 

டிவி சானல்களில் யாருக்காகவோ அனைவரும் அடித்துக் கொள்கின்றார்கள். விட்டால் லைவ்வாக கொலை கூட செய்து கொள்வார்கள். ஏன் இப்படிப்பட்ட வாக்குவாதங்களைச் செய்கிறோம் அதனால் சமூகப் பெறப்போவது என்ன என்று கூடவா சிந்திக்க மறந்து போனார்கள் இவர்கள்? பெயர்களின் கீழே பார்த்தீர்கள் என்றால் ‘சமூக ஆர்வலர்’ என்று குறிப்பிடுவார்கள். கொடுமை!

மருத்துவமனையில் நண்பரின் அம்மா என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் தன் கிட்னியை தன் மகளுக்கு தானம் கொடுத்திருக்கிறார். அருகில் அவரின் பெண் இருந்தார். 

“உங்களுக்கு என்ன காரணத்தினால் கிட்னியில் பிரச்சினை வந்தது?” எனக் கேட்டேன்.

குழந்தைப் பிறப்பதற்கு தாமதமானதால் ஒரு பிரபலமான சோப்பு, ஷாம்பு, வாசிங் மற்றும் உணவூட்டப் பொருட்களை விற்கும் கம்பெனியின் மாத்திரையைச் சாப்பிட்டால் கரு தரிக்கும் என்றுச் சொல்லி இருக்கின்றார்கள். இந்தப் பெண் குழந்தை பெறும் ஆசையில் மாத்திரையை வாங்கி விழுங்கி இருக்கிறார். கிட்னி போச்சு. இனி வாழ் நாள் முழுவதும் அந்தப் பெண்ணின் நிலைமை. அந்தக் கம்பெனிக்கு காசு கிடைத்து விட்டது. உலகப் பெரும் கோடீஸ்வரக் கம்பெனிகளில் அதுவும் ஒன்றாக இருக்கும்.

கிட்னி டோனரிடம் பலவிதமாய் பேசுவார்களாம். பயமுறுத்துவார்களாம். கிட்னி தானத்தில் உறுதியாக இருக்கின்றார்களா என்று பல சோதனைகளைச் செய்வார்களாம். அதன் பிறகு தான் கிட்னி தானம் நடக்குமாம். 

”நான் மருத்துவரிடம் சொல்லி விட்டேனுங்க. என் இரண்டு கிட்னிகளையும் எடுத்து அவளுக்கு வைத்து விடுங்கள். நான் என் குழந்தைகளுக்காகத்தான் வாழ்கிறேன், அவர்களுக்காக இறப்பது எனக்கு மகிழ்ச்சியே” என்றுச் சொன்னேன் என்றார் அந்தத் தாய்.

(இந்தத் தாய் சொல்லும் மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கும் ரஜினி காந்த் சொன்ன மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் புரிகிறதா உங்களுக்கு)

சார் நீங்க இதைப் படித்தே ஆகணும்

நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. 

NEW DELHI: Judges do not need certificates from anybody, the Supreme Court on Tuesday said while rejecting a PIL seeking setting up of a "public body", independent of the executive and judiciary, to ensure fair appointment of judges in High Courts and the apex court.

"We don't need a certificate from anyone on earth," a bench comprising justices Arun K Mishra and U U Lalit said.The observation came when it was alleged that there has been nepotism in the appointment of judges in High Courts and the apex court.

The bench disagreed with the plea of National Lawyers' Campaign for Judicial Transparency and Reforms that a body independent of executive and judiciary to select Judges to the higher judiciary was needed, as those talented amongst a vast majority of lawyers were never considered by the collegium for selection as Judges.

"We are dismissing it. We see no merit in this petition ...Your ideas may be good or bad, we are not commenting. But what all you are asking cannot be done without quashing certain constitutional provisions," the bench said.

When advocates Mathew J Nedumpara and A C Philip, appearing for the lawyers' body, referred to the ongoing vetting by the Centre of the Memorandum of Procedure (MoP) to govern judges' appointments, the bench said "we will not comment on MoP. Can a proposed MoP be questioned? Let it be crystallised. Let it come out ...then we will see".

The bench said the setting up of such a body would amount to amending the Constitution which cannot be done by the apex court.

The lawyers' body has contended that an independent judge selection body was needed to end the alleged control of the "elite section" over judiciary.

The selection of kith and kin of serving and former judges and senior advocates as Judges in higher judiciary should and must stop, the lawyers' body said in its plea.

The PIL has alleged that the "common deserving lawyers" are usually not considered for appointment as judges in the higher judiciary and only those close to the judges of the Supreme Court and High Courts or politicians or big industrial houses got chosen.

செய்தி உதவி :

செய்தியைப் படித்து விட்டீர்களா? இனி கீழே இருக்கும் படத்தைக் கிளிக் செய்து படியுங்கள்.


கர்நாடகாவில் நேற்று காவிரி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை நிறைவேற்ற இயலாதவாறு சட்டசபைக் கூட்டத்தினைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பப் போகின்றார்கள் என்றொரு செய்தியை டிவி சானல்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. உச்ச நீதிமன்றம் இனி என்ன செய்யும்? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பார்ப்போம்!

இந்தக் கர்நாடகக்காரர்களின் போராட்டத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. காவிரி நீரினைப் பெறுவது மூன்று  மாநிலங்கள். கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகம். ஆனால் அடி விழுவது தமிழனுக்கு மட்டும். கேரளாக்காரர்களும், புதுச்சேரிக்காரர்களும் புண்ணியவான்களா? காலம் காலமாக இந்தப் பிரச்சினை தமிழர்களுக்கு எதிராக மட்டுமே கிளப்பப்படுகிறது. இது என்னவிதமான அரசியல் என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை.


Tuesday, September 20, 2016

பூம் பூம் மாட்டுக்காரன்

பெரிய வெங்கல அண்டாவில் நெல்லைக் கொட்டி தண்ணீர் சேர்த்து, அண்டாவின் அகன்ற வாய்ப்பகுதியில் கும்மலாய் குவித்து அதில் தண்ணீரைத் தெளித்து அதன் மீது ஈரச்சாக்கை போட்டு கீழே அடுப்பு மூட்டி எரிய விடுவார்கள். சூடு ஏற ஏற நெல் அவியும் வாசம் பரவும். நெல்மணிகள் வாய் விரித்து இருக்கும். பதம் வந்து விட்டது. தண்ணீரை வடித்து நெல்மணிகளை கல்வாசலில் கொட்டி பரப்பி விட்டால் வெயிலில் காயும். அடிக்கடி காலால் பிரட்டி விட வேண்டும். பின்னர் மதியம் போல குமித்து சாக்குப் போட்டு மூடி வைத்து விட வேண்டும். இப்படியே மூன்று நாட்கள் அவித்த நெல்மணிகள் ஈரம் காய்ந்து விடும். அதை மூட்டையில் கட்டி வடக்கித் தெரு சுப்பையாதேவர் மில்லுக்கு கொண்டு சென்றால் அங்கு அரவை செய்து தவிடு, அரிசி, குருணை என்று தனித்தனியாக சாக்கில் பிடித்து வீட்டுக்கு வந்து விடும்.

35 வருடங்களுக்கு முன்பு  பெரும் குடி விவசாயிகள் தான் நெல்லைச் சேகரித்து வைத்து அரிசிச் சோறு உண்பார்கள். விவசாயக்கூலிகள் கூலியாக நெல்மணிகளை மரக்கால் கணக்கில் வாங்கிக் கொள்வார்கள். நானே அளந்து போட்டிருக்கிறேன். மரக்கால் என்றால் நான்கு படிகள் கொண்டவை. வீட்டில் வெங்கல மரக்கால் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெரிந்து நெல் வாங்குவது நின்று கூலியாகப் பணம் பெற்றுக் கொண்டார்கள். 

தினமும் வீட்டிற்கு நான்கைந்து தர்மம் பெறுபவர்கள் வருவார்கள். ”அம்மா தர்மம் போடுங்கம்மா” என்ற குரல் கேட்டு அடுக்களைக்குள் இருக்கும் அம்மா கிண்ணத்தில் இரண்டு கைப்பிடி அரிசியைக் கொண்டு வந்து போடுவார்கள். இது தினம் தோறும் நடைபெறும் சம்பவம். ஒரு சிலர் சாப்பாடு கேட்பார்கள். வீட்டின் பின்புறம் வரச்சொல்லி பழைய சோறு, பழைய குழம்புடன் மறக்காமல் வெந்தய மாங்காய் ஊறுகாய் வைத்துக் கொடுப்பார்கள். பூவரச இலையைக் கொய்து அதை விளக்குமாத்துக் குச்சியால் தைத்து இலைபோல தயாரிப்பார் தர்மம் கேட்பவர். அதில் தான் உணவு போடுவார்கள். ஒரு சிலர் அலுமினியத்தட்டுக்களைக் கொண்டு வருவார்கள்.

(பூம் பூம் மாட்டுக்காரர்)

பூம் பூம் மாட்டுக்காரன் எப்போதாவது வருவான். அழகான காளையை அலங்கரித்து தோளில் தொங்கும் மேளத்தின் இருபக்கமும் வளைந்த இரண்டு குச்சிகளினால் இழுப்பான். அது பூம் பூம் என்று சத்தமிடும். காளை மாட்டின் மீது மாட்டப்பட்டிருக்கும் மணிகள் சத்தமிடும். சிகண்டியை வேறு அடித்து வருவான். வாசலில் வந்து நின்றதும் ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விடுவான். பழைய துணிகள் இருந்தால் கேட்பான். தர்மம் கிடைத்ததும் சென்று விடுவான்.

சாமியார்கள் வருவார்கள், பெண்கள் வருவார்கள், வயதானவர்கள் வருவார்கள். “அம்மா, தர்மம் போடுங்கம்மா!” என்ற குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். கல்லூரிக்குச் சென்ற பிறகு அந்த தர்மம் கேட்ட குரல்களும், பூம் பூம் மாட்டுக்காரனையும் நான் இதுவரை பார்க்கவில்லை. இனிப் பார்க்கவும் முடியாது. தர்மம் போடுங்கம்மா என்ற குரலுக்கு இரண்டு கைப்பிடி அரிசியைத்தான் தர்மம் செய்வார்கள். அரிசி கொஞ்சம் கொஞ்சமாக தன் வயத்தை காலத்தின் போக்கில் இழந்து விட்டது.

ஊசி, பாசி என்ற குரல் வாரம் ஒரு முறை கேட்கும். குறத்திகள் அழகான பாவாடை கட்டி, குறுக்கே தாவணி போட்டுக் கொண்டு வருவார்கள். இடது கைப்பக்கமாக துணித் தூளியில் கைக்குழந்தையொன்று உட்கார்ந்திருக்கும். கண் மை, ஊசிகள்,காது குடையும் வஸ்து, பாசிமணிகள் விற்பார்கள். சின்னஞ் சிறு வயதாக இருக்கும் குறத்தி கையில் குழந்தை இருக்கும். நல்ல மஞ்ச மஞ்சளேன்னு இருப்பார்கள். சரோஜாதேவி, பானுமதி, காஞ்சனா என சினிமா பெயர்கள் தான் வைத்திருப்பார்கள். அரிசிக்கு தான் மேற்கண்டவைகளை விற்பார்கள். 

காலத்தின் போக்கில் மறைந்து போன இது போன்ற மனிதர்களும், குடியானவர்களின் தர்மம் செய்யும் போக்கும் இனி எந்தக் காலத்திலும் பார்க்க முடியாது. குடியானவன் வாழ்வில் தர்மம் ஒரு பகுதியாக இருந்தது. வீட்டு வாசலுக்கு வரும் எவரும் வெறும் கையோடு அனுப்ப மாட்டார்கள். 

”தர்மம் செய்யுங்கம்மா” என்ற குரல் இப்போது வீட்டின் வாசல்களில் கேட்பதில்லை. அந்தக்காலத்தில் சாமியார்கள், வயதானவர்கள் தர்மம் செய்யுங்கம்மா என்று கேட்டார்கள். இந்தக் காலத்தில் ஒவ்வொரு குடும்பமே கோவில்களில் இருக்கும் சாமிகளின் முன்னே நின்று கொண்டு “சாமி எனக்கு அதைக் கொடு இதைக் கொடு” என தர்மம் கேட்கின்றார்கள்.

தர்மம் கேட்பது நிற்கவில்லை. ஆட்கள் தான் மாறி விட்டார்கள்.


Sunday, September 18, 2016

430 ரூபாயும் கம்மங்கூழும்

காலையில் கணிப்பொறியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த போது கருகும் வாடை அடித்தது. கணிப்பொறியில் எஸ்.எம்.பி.எஸ்ஸில்  இருந்த ஃபேன் ஓடவில்லை. ஹீட் காற்றை வெளித்தள்ளும் அந்த ஃபேன் ஸ்ட்ரைக் செய்திருந்தது. உடனடியாக கணிப்பொறியை நிறுத்தி கழட்டினேன். 

கிட்டத்தட்ட 3000 கணிப்பொறிகளை வடிவமைத்த அனுபவம் இருக்கிறது. நாவல் நெட்வேர் (Novel Netware), விண்டோஸ் எண்டி ( Windows NT) போன்ற நெட்வொர்க் சாஃப்ட்வேர்களை இணைத்து சாரதா நிகேதன் சயின்ஸ் காலேஜ் ஃபார் விமன் கல்லூரியில் பெண்களுக்கு கணிணிப்பாடம் எடுத்திருக்கிறேன். அமராவதிப்புதூர் பெண்கள் கல்லூரியில் 20 கணிணிகளை வடிவமைத்து புது லேப்பையே உருவாக்கிய அனுபவம் வேறு. அக்குவேறு ஆணி வேராக பிரித்து மேய்ந்து விடும் பழக்கம் உண்டு. 

பூண்டி கல்லூரியில் படித்த போது புரபசர் நீலமேகம் அவர்களிடம் மதர்போர்டு டிசைன் செய்யப் பாடம் படித்தேன். அப்போதெல்லாம் 1992களில் விண்டோஸ் 3.1 தான் வெளிவந்திருந்தது. விண்டோஸ் பற்றி எழுத ஆரம்பித்ததும்  சமீபத்தில் நம்ம பில்கேட்ஸ் ஆப்பிளிடமிருந்து காப்பியடித்த கிராபிக்கல் யூசர் இண்டர்ஃபேஸ் கான்செப்ட் பற்றி ஏதோ ஒரு டிவியில் பார்த்த புரோகிராம் நினைவுக்கு வந்து விட்டது. பில்கேட்ஸ் கூட ஆப்பிளின் கான்செப்டை பார்த்து மிரண்டு காப்பியடித்துதான் விண்டோஸ் என்றார்கள். அது கிடக்கட்டும். ஜெயித்தவனை மட்டும் தான் இந்த உலகம் பாராட்டுகிறது. எப்படி ஜெயித்தான் என்பது பற்றி யாரும் பேசுவதில்லை. பணத்தினை மட்டுமே வைத்து இந்த உலகம் மனிதனின் தரத்தை எடை போடுகிறது.


காலையில் நூறடி ரோட்டில் இருக்கும் கடைகள் ஒவ்வொன்றாய் ஃபேன் வாங்க விசாரிக்க ஆரம்பித்தேன். அனைவரும் முன்பெல்லாம் வந்தது இப்போது வருவதில்லை என்ற பதிலையே டெம்ப்ளேட்டாகச் சொல்ல ஆரம்பித்தனர். பத்து கடைகள் விசாரித்தேன். கிடைக்கவில்லை. பின்னர் வெரைட்டிஹால் ரோட்டிலிருக்கும் எலக்ட்ரானிக்ஸ் கடைகளுக்குச் சென்று விசாரித்தால் அனைவரும் ஒரே பதிலைத்தான் சொன்னார்கள். ஐம்பது ரூபாய் ஃபேனுக்கு 500 ரூபாய் செலவழிக்க வேண்டுமா என்ற யோசனையில் மீண்டும் மீண்டும் முயற்சித்தேன். கிடைக்கவே இல்லை. 

வெயில் வேறு, டிராபிக் வேறு. கசகசவென வியர்வை கொட்ட ஆரம்பித்தது. எரிச்சலில் மரைக்கடைப்பாலம் ரோட்டில் வண்டியைத் திருப்பினேன். குமரன் எண்டர்பிரைசஸ் என்றொரு கடையைப் பார்த்தேன். ஏதோ ஒரு ஆர்வத்தில் அங்கு விசாரித்தால் அந்த ஃபேன் அங்கு இருந்தது. விலை 70 ரூபாய் என்றார்கள். தப்பித்தது 430 ரூபாய். வீணாக 430 ரூபாய் ஏன் செலவு செய்ய வேண்டும்? தேவையில்லை அல்லவா?

வீட்டுக்கு வந்து எஸ்.எம்.பி. எஸ்ஸைப் பிரித்து ஃபேனை மாட்டினேன். அட்டகாசமாக காற்றினை வெளித்தள்ளியது. முடிந்தது பிரச்சினை. இனி ஒரு வருடத்திற்கு பிரச்சினையில்லை. 

புதிய எஸ்.எம்.பி.எஸ்ஸுக்கு 500 ரூபாய் கேட்டார்கள். ஒரு சிறிய ஃபேன் தான் பிரச்சினை. அதை மாற்றி விட்டால் போதும். தேவையற்று ஏன் அனாவசிய செலவு செய்ய வேண்டும்? இந்தச் செலவினை அவசியம் செய்து தான் தீர வேண்டுமா? என்று யோசித்தாலே போதும். தேவையற்ற செலவுகளைக் குறைக்கலாம்.


( நன்றி பட உதவி : கோவை நேரம் ஜீவா)

வரும் போது காந்திபுரம், பவர்ஹவுஸ் அருகில் இருந்த பாண்டியன் கம்மங்கூழ் கடையில் ஒரு கப் கம்மங்கூழ் குடித்தேன். புளிக்காத தயிரை ஊற்றி வெங்காயம் போட்டு அதில் கொழ கொழவென கம்மங்கூழை ஊற்றித் தருகிறார். அருமையாக இருந்தது. அவசியம் அந்தப் பக்கம் யாராவது செல்ல நேர்ந்தால் குடித்துப் பாருங்கள். கூட்டம் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. மோர் கூட புளிக்காது இருந்தது. இந்தப் பெப்ஸி, கோக் குடிப்பதற்கு இந்தக் கூழைக் குடித்துப் பாருங்கள். நல்ல இரும்புச் சத்து.

Thursday, September 15, 2016

குறுஞ்செய்தி இதழில் இணையாசிரியர் அனுபவம்

எனது நண்பரின் நண்பர் திரு.மாதேஷ் என்பவர் புகைப்படக்கலைஞர். நடிகை ஹீராவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர். பிளாக்கில் இருக்கும் புகைப்படத்தினை எடுத்தவர் அவர் தான். மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர். 

ஒரு நாள் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்டினார். குறுஞ்செய்தி என்ற தலைப்பினைப் பதிவு செய்து ரெஜிஸ்டர் ஆஃப் நியூஸ்பேப்பர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதம் அது. 

அவருக்குப் பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினால் தலைப்பினைப் பதிவு செய்து விட்டார். 

“சார் எனக்கு எதுவும் தெரியாது. இந்தப் புத்தகம் வெளியிடுவது நீங்கள் தான், நீங்கள் என்ன முடிவு செய்தாலும் எனக்கு முழுச்சம்மதம். புத்தகம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தால் போதும், நீங்கள் தான் முழுவதும் பார்க்க வேண்டும்” என்று என்னிடம் விடாது கேட்டுக் கொண்டிருந்தார். என்னிடம் நான்கு வருட நட்பில் இருந்ததால் அவருக்கு உதவுகிறேன் என்றுச் சொல்லி விட்டேன். மாதமிருமுறை இதழ் அது. எனக்குத் தெரிந்த நன்கு அறிமுகமான நண்பர்களை ஆசிரியர் குழுவில் இணைத்து ஒரு குழுவினையும் உருவாக்கினேன்.

இதழ் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கோரல்டிராவில் டெம்ப்ளேட் தயார் செய்து ஒவ்வொரு பதிவுகளாக ஏற்றி டிசைன் செய்தேன். கருத்துப் பெட்டகமாக, கொஞ்சம் கிளுகிளுப்பாக (வியாபாரத்திற்காக) இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் கட்டுரைகளை இணைத்தேன். இதழ் பெயர் குறுஞ்செய்தி. ஆகவே அதற்கேற்ற வகையில் செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்ற நினைவில் முதன் முதலாக பத்திரிக்கையை டிசைன் செய்யும் ஆர்வத்தில் முழு ஈடுபாட்டுடன் செய்தேன். குறுஞ்செய்தி புத்தகத்தினை இரண்டே நாட்களில் வடிவமைத்தேன்.

ஒரு சில நண்பர்களிடம் கட்டுரைகளை பெற்று இணைத்தேன். முழு வடிவமைப்பும் செய்தேன். தலையங்கமும் நானே எழுதினேன். அனைத்தும் முடிந்து புத்தகப்பதிப்பாளரைத் தேடிப்பிடித்து முப்பத்தைந்து பக்கங்கள் வெறு மூன்று ரூபாய்க்கு ஒரு புத்தகத்தினைப் பதிப்பிக்க கட்டணம் பேசி ஆயிரம் புத்தகங்களுக்கு ஆர்டரும் கொடுத்தேன். 


(முதல் இதழ்)


(இரண்டாம் இதழ்)

பின் அட்டை விளம்பரத்தை திருப்பூர் யுவராஜ் அவர்கள் பெற்று அதற்குரிய கட்டணத்தையும் கொண்டு வந்து கொடுத்தார்.

முதல் புத்தகத்தினை எனக்கும் மாதேசுக்கும் நட்பு வட்டத்தில் இருந்த நண்பரை வெளியிடச் செய்தேன். ஆயிரம் புத்தகங்கள் பிரிண்ட் செய்து வெளிவந்தது. அனைவருக்கும் கொடுத்தேன்.

ஒரு புத்தகத்தை வடிவமைக்கு பக்கத்துக்கு ரூபாய் 500 கேட்டார்கள். 35 பக்கத்துக்கு கிட்டத்தட்ட 15000 ரூபாய் கொடுக்க வேண்டும். அதை இவரால் கொடுக்க முடியாது. புத்தகத்தினை பிரிண்ட் செய்வதற்கு தனியே கட்டணம் வேறு கொடுக்க வேண்டும்.எழுதுபவர்கள் இலவசமாக எழுதினால் கூட மொத்தச் செலவும் கிட்டத்தட்ட ரூபாய் 20000 ஆகும். இதையெல்லாம் நானே எந்த விதக்கட்டணமும் இன்றிச் செய்தேன்.

என்னால் ஒரு இதழை வெகு குறுகிய காலத்திற்குள் வடிவமைத்து, பதிப்பித்து வெளியிட முடியும் என்கிற தைரியம் வந்து விட்டது. அரசிடம் அனுமதி பெறுவது எப்படி? என்ற அனுபவமெல்லாம் கிடைத்து விட்டது. 

முதல் இதழுக்காக ஒரு வாரம், அடுத்த இதழுக்காக மூன்று நாட்கள் அவ்வளவுதான் விஷயம். பிரிண்ட் ஆக இரண்டு நாட்கள். இதழை வெளியிட வைத்து விட்டேன்.

பத்திரிக்கைத் தொழில் என்பது அவ்வளவு எளிதானதல்ல என்று புரிந்து கொண்டேன். எதிர்காலத்தில் என் மனதுக்குள் இருக்கும் அட்டகாசமான மாத இதழ் கான்செப்டை உருவாக்கம் செய்ய இந்த அனுபவம் எனக்கு கைகொடுக்கும்.

ரகசிய வன்முறை - உயிரோசையில் வெளிவந்த பதிவு - மீள்பார்வை

நானும் எனது நண்பரும் சென்னை செல்ல இரயிலில் டிக்கட் பதிவு செய்தோம். எனக்கு நடக்க இயலாது என்பதால் கன்செஸன் சர்டிஃபிகேட் மூலம் டிக்கெட் பதிவு செய்தேன். மூன்றாம் வகுப்பு ஏசி. அதென்னவோ தெரியவில்லை. கன்செஸன் என்றால் சன்னலோரம் தான் இடம் கிடைக்கும். நடைபாதையின் ஓரமாக நடப்போர் எல்லோரும் இடித்து இடித்து ஒரு வழியாகி விடுவோம். ஊனமுற்றோருக்கு மத்திய அரசின் தொடர் வண்டித்துறை செய்யும் உபகாரம் இது.

இரவு உணவு அருந்தலாம் என்று பார்த்தால், கைகழுவ இயலவில்லை. சன்னல்கள் எல்லாம் அடைபட்டு இருந்தது. கழிவறை சென்று கழுவி வந்தால், மீண்டும் கையை கீழே வைக்க வேண்டும். சரிப்பட்டு வராது என்றபடியால் வாழைப்பழமும் பாலும் சாப்பிட்டுவிட்டு படுத்தாகிவிட்டது. நடுநிசி ஒரு மணி இருக்கும். இயற்கை உபாதை அழைக்க, மெதுவாகத் தவழ்ந்து கழிவறை சென்றேன். அங்கே.... மூத்திரமும், மலமும் சந்தனம் போல ஒட்டிய பாத்ரூம். சாக்கடை போல பார்த்ததும் வாந்தி வருவது போல இருந்தது. அதற்குள் எப்படிச் செல்வது. உபாதையைக் கழிப்பது? நொந்து கொண்டேன்.

வருத்தத்துடன் படுக்கைக்குத் திரும்பி வந்து, இயற்கை உபாதையைக் கழிக்க இயலாமல் தூங்கவும் இயலாமல் நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும். ஒரு மணியிலிருந்து விடிகாலை வரை அடிவயிறு கட்டிக் கொண்டு விண் விண்ணென்று வலி உசிரை எடுத்தது. விடிகாலையில் சென்னைக்கு வந்தாகி விட்டது. இரயில் நின்ற பிளாட்பாரத்திலிருந்து வெளியில் செல்ல வேண்டும். போர்டரை அழைத்து சக்கர நாற்காலி கிடைக்குமா என்றார் என் நண்பர். அது எங்கோ இருக்கும். எனக்குத் தெரியாது என்றார். நண்பருக்கு டென்ஷனாகி விட்டது. ஸ்டேசன் மாஸ்டரிடம் கேட்கலாம் என்று சென்றார். நான் அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்துவிட்டேன். விடிகாலைக் குளிர் உடம்பில் பட்டு சில்லிப்பை ஏற்படுத்தியது. ஆனால் வலியின் காரணமாக எப்போது வெளியில் செல்வோம் இயற்கை உபாதையைக் கழிப்போம் என்ற அவஸ்தைதான் என்னைப் பீடித்திருந்தது. சேரைத் தேடிப்போன நண்பர் வெறுங்கையோடு வந்தார். சார் ஒருத்தரும் பதிலே பேச மாட்டேன் என்கிறார்கள் என்றார். போர்ட்டரைக் கூப்பிட்டு அவருக்கு ஏதாவது காசு கொடுங்கள். சேரைக் கொண்டு வந்து தருவார் என்றேன்.

போர்ட்டரிடம், "என்ன கேட்கிறீங்க?" என்றார் நண்பர். அம்பது ரூவாய் கேட்டார். நண்பர் சரி என்று சொல்ல, எங்கோ இருந்த நாற்காலி சடக்கென்று என் முன்னே வந்தது. நமக்கு அதில் உட்கார்ந்து அனுபவம் இல்லையாதலால், போர்ட்டரின் அன்பு மிரட்டல்களை வாங்கிக் கொண்டு எழும்பூர் இரயில் நிலையத்தின் வாசலில் இறக்கப்பட்டேன்.

ஊனமுற்றோருக்கென வைக்கப்பட்டிருக்கும் சக்கர நாற்காலிகளை காசு கொடுக்காமல் கண்ணிலேயே காட்ட மாட்டார்கள் ரயில்வே போர்ட்டர்கள். ஏதாவது ஒரு புண்ணியவான் சக்கர நாற்காலியினைக் கொடுத்தால் போர்ட்டர்கள் வந்து பிடுங்கிக் கொள்வார்கள். அடையாள அட்டையைக் காட்டு. டிக்கெட்டைக் காட்டு. பணம் கொடுத்துவிட்டு எடுத்துச் செல் என்றெல்லாம் பேசுகின்றனர் ரயில்வே ஸ்டேஷனில்.

ஊருக்குத் திரும்பும் பொருட்டு நான் சென்ற வேலைகளை முடித்துக் கொண்டு மீண்டும் எழும்பூர் இரயில் நிலையத்துக்கு வந்து ஏழு மணி அளவில் வந்து சேர்ந்து, ரயில் நிலையத்தின் படியில் அமர்ந்தேன். இரயிலில் ஏற, கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். எனது நண்பர் சக்கர நாற்காலியினை எங்காவது பிடித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார். பத்து மணிக்கு இரயில் புறப்பட்டுவிடும். அதற்குள் ரயிலில் ஏறிவிட வேண்டும். மணி ஒன்பது இருபது அதுவரையிலும் சக்கர நாற்காலியினைத் தேடிச்சென்ற நண்பர் வரவில்லை. எங்கே சென்றாரிவர் என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு ஓட்டை நாற்காலியினை வியர்க்க விறுவிறுக்கத் தள்ளிக் கொண்டு வந்தார் நண்பர். நாற்காலி கிடைத்த கதையினைச் சொன்னார்.

யாரோ ஒரு ஸ்டேசன் மாஸ்டரிடம் நாற்காலி வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். தருகிறேன் என்று சொல்லி ஒரு நல்ல நாற்காலியினைக் கொடுத்து இருக்கிறார். அதற்குள் போர்ட்டர் வந்து எதுக்கு நாற்காலியினை எடுக்கின்றீர்கள் என்று எடுக்க விடாமல் தடுத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் டெபுட்டி ஸ்டேசன் மாஸ்டர் உயர்திரு பாஸ்கர் என்பவர் நண்பரிடம் இந்த நாற்காலி விஐபிக்கு மட்டும் தான் தருவோம் என்று சொல்லி எடுத்த நாற்காலியினைப் பிடுங்கி உள்ளே வைத்துவிட்டாராம். அந்தச் சமயத்தில் அங்கு வந்த வேறொரு போர்ட்டர் அந்த நாற்காலியினை எடுத்துச் சென்று விட்டாராம். அதற்கு டெபுட்டி ஸ்டேஷன் மாஸ்டர் பாஸ்கர் ஒன்றும் சொல்ல வில்லையாம். நண்பருக்கு என்ன செய்வது என்று தடுமாற்றம். அப்போது அங்கு வந்த விஜயகுமார் என்ற ஸ்டேசன் சிக்னல் இன்சார்ஜ் ஒரு ஓட்டை நாற்காலியினைத் தந்து இருக்கிறார். கால் ஒடிந்த நாற்காலி கால்கள் இல்லாத எனக்குக் கிடைத்தது. என்னைப் போலவே அந்த நாற்காலியும் ஊனமுற்றது. அதில் என்னை அமர வைத்து, நண்பர் இரயில் நிற்கும் பிளாட்பாரத்துக்கு தள்ளிச் சென்றார். நண்பர் வியர்வையில் குளித்து இருந்தார். நாற்காலியின் சக்கரம் சுழலாமல் சண்டித்தனம் செய்தது. தள்ளி வரும் போது பாதையில் விலகாமல் இருந்த ஒருவரின் மீது இலேசாக இடித்து விட அவர் சண்டைக்கு வந்துவிட்டார். அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு பயணத்தைத் தொடர்ந்தார் எனது நண்பர், இரு ஊனமுற்றவர்களுடன். ஒரு வழியாக இரயிலில் இருவரும் ஏறிவிட்டோம்.

இந்திய அரசு மக்களால் மக்களுக்காக நடத்தப்படுகிறது, மக்களே தங்களின் தேவைகளுக்காகப் பணிசெய்யும் ஆட்களைத் தேர்வு செய்து எங்களுக்குத் தேவையான வசதிகளை நாங்கள் கொடுக்கும் வரிப்பணத்தின் மூலமாக செய்து தாருங்கள் என்றும், அப்படிச் செய்யும் வேலைக்கு எங்களது வரிப்பணத்திலிருந்து சம்பளமும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்கிறார்கள். அப்படி என்ன வரி கொடுக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்பீர்கள். இருந்தாலும் சொல்லுகிறேன் கேளுங்கள் உயர்திரு பாஸ்கர் அவர்களே.... கேளுங்கள்.....!

புரபஸனல் டாக்ஸ், சேல்ஸ் டாக்ஸ், கஸ்டம் டியூட்டி, இன்கம் டாக்ஸ், முனிஸபல் டாக்ஸ், ஃபயர் டாக்ஸ், எக்ஸைஸ் ட்யூட்டி, ஸ்டாஃப் புரபஸனல் டாக்ஸ், டர்னோவர் டாக்ஸ், கேஷ் ஹேண்ட்லிங்க் டாக்ஸ், ஃபுட் அண்ட் எண்டர்டெயின்மெண்ட் டாக்ஸ், ஃப்ரிஞ் பெனிஃபிட் டாக்ஸ், சர்வீஸ் டாக்ஸ், கிஃப்ட் டாக்ஸ், வெல்த் டாக்ஸ், எண்டர்டெயின்மெண்ட் டாக்ஸ், ஸ்டாம்ப் டுயூட்டி, ரெஜிஸ்ட்ரேஷன் டாக்ஸ், சர் சார்ஜ், எடுகேஷனல் டாக்ஸ், சொத்து வரி என்று தொட்டதுக்கெல்லாம் டாக்ஸ், டாக்ஸ்.... வரி.. வரி...வரி.... முட்டை வாங்கினாலும் வரி... புண்ணாக்கு வாங்கினாலும் வரி. இப்படி எங்களது உழைப்பில் கிடைக்கும் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் பெருவது அரசு ஊழியர்களாகிய நீங்கள்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? மக்களாகிய எங்களின் வரிப்பணத்தில் இரயில்கள் எங்களுக்காக விடப்படுகிறது. அதை நிர்வாகம் செய்ய உங்களைப் போன்றவர்களை நாங்கள் எங்களுடைய வேலைக்காரராகப் பணி அமர்த்துகிறோம். அப்படிப்பட்ட பொதுமக்களின் வேலைக்காரராகிய தாங்கள் விஐபிக்கு என்று ஒரு சட்டமும், சாதாரண மக்களுக்கு என்று ஒரு சட்டமும் இருப்பதாகச் சொல்வது என்ன நியாயம்? அந்தச் சட்டத்தையும் இயற்றுவது நாங்கள்தான் என்பது தெரியுமா உங்களுக்கு. மந்திரியாகட்டும், பிரதமராகட்டும் அவரெல்லாம் பொதுமக்களின் வேலைக்காரர்கள். பொதுமக்களுக்குப் பணி செய்ய பொது மக்களால் அமர்த்தப்பட்டவர்கள். டெபுட்டி மாஸ்டரும் பொது மக்களின் ஊழியர்தான் என்பதில் உங்களுக்குச் சந்தேகம் ஏதேனும் இருக்கிறதா?

நாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை டாக்ஸ் என்ற போர்வையில் வசூலித்து வரும் பணத்தில் சம்பளம் வாங்கி உங்கள் குடும்பத்துக்குச் சோறு போடும் நீங்கள் எங்களுக்குச் செய்யும் கொடுமைக்கு அளவே இல்லையா?

விஐபின்னா யாருங்க? தலையில் மூன்று கண்களும், ஐந்து கால்களும் மூன்று வயிறுகளும் உடைய விநோத ஜந்துவா? அந்த விஐபியும் எங்களால் தான் விஐபியாகி இருக்கின்றார் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா ?

மஹாத்மா காந்தியைத் தேசத்தலைவராகக் கருதும் இந்தியாவில் பொதுமக்களாகிய கஸ்டமர் என்ற எங்களைப் பற்றியும் நீங்கள் எங்களுக்கு யார் என்பது பற்றியும் சொல்லி இருப்பது மத்திய அரசு ஊழியராகிய உங்களுக்குத் தெரியுமா? தெரியாது எனில் கீழே படித்துப் பாருங்கள்.

A customer is the most important visitor on our premises.
He is not dependent on us.
We are dependent on him.
He is not an interruption of our work.
He is the purpose of it.
He is not an outsider to our business.
He is part of it.
We are not doing him a favour by serving him.
He is doing us a favour by giving us the opportunity to do so.
- மஹாத்மா காந்தி

எங்களுக்கு உதவத்தானே அரசாங்கப் பணியாளர்களாகிய நீங்கள் இருக்கின்றீர்கள். அரசியல் சட்டத்தில் விஐபிக்கு ஒரு நடை முறையும் என்னைப் போன்ற ஊனமுற்றோருக்கென ஒரு நடை முறையும் பின்பற்ற வேண்டும் என்று எழுதப்பட்டு இருக்கின்றதா? சொல்லுங்கள் எழும்பூர் நிலைய டெபுட்டி ஸ்டேஷன் மாஸ்டர் பாஸ்கர் அவர்களே... சொல்லுங்கள். 

உங்கள் மகனோ அல்லது மகளோ என்னைப்போல இருந்து எனது அனுபவம் போல அவர்களுக்கு நடந்தால் தாங்கள் மகிழ்ச்சியாய் இருப்பீர்களா? சொல்லுங்கள்.. தர்மம் சூட்சுமமானது அய்யா. நின்று கொல்லும். உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். என்னை வதைத்த தாங்கள், உலகையே படைத்து ஆண்டு கொண்டிருக்கும் இறைவனால் வதைக்கப்படுவது நிச்சயம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று படித்ததை எல்லாம் மறந்து விட்டீர்களா டெபுட்டி ஸ்டேஷன் மாஸ்டர் அவர்களே. ஹிட்லர், முஸொலினி நிலை எல்லாம் என்ன? வரலாற்றைப் படித்திருப்பீர்களே... மறந்துவிட்டீர்களா ?

பொதுமக்களில் நானும் ஒருவன் என்ற முறையில் என்னைத் துன்பத்தில் ஆழ்த்திய பாஸ்கர் அவர்களை அவர் எனது பணியாளர் என்ற வகையில் ஏதாவது செய்யத்தான் இயலுமா? ஏதாவது கம்ப்ளைண்ட் கொடுத்தால் நடவடிக்கைதான் எடுப்பார்களா? இந்திய அரசு பொதுமக்களின் அரசு என்று எழுத்தளவில் தான் இருக்கின்றது. நடைமுறை என்பது வேறாக இருக்கிறது. சட்டங்கள் சட்டப்புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சட்டங்களை சினிமாவில் ஹீரோக்கள் காப்பாற்றுவார்கள். எங்கே? யாராவது ஒருவர் ஒரு அரசு ஊழியரைக் குற்றம் சுமத்திப் பாருங்கள். கம்ப்ளெயிண்ட் கொடுத்தவருக்கு என்னென்ன தொல்லைகள் கொடுக்க முடியுமோ அத்தனை தொல்லைகளையும் தருவார்கள் வேறு வேறு ரூபத்தில்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாற்றி எழுதப்பட வேண்டும். இல்லையெனில் உங்களைப் போன்ற மக்களின் வேலைக்காரர்கள் எஜமானர்களாகிய எங்களை வதைப்பது என்றும் மாறப்போவதில்லை.

சாதாரண பொது மக்களையே உதாசீனப்படுத்தும் அரசு ஊழியர்கள் ஊனமுற்றோருக்குச் செய்யும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. வாயில்லா ஜீவன்களைத் துன்பத்தில் ஆழ்த்தினால் அதைக் கேட்கவும் ஒரு இயக்கம் இருக்கிறது. ஆனால் ஊனமுற்றவர்களுக்கு என்ன இருக்கிறது? எண்ணற்ற துறைகள் அரசால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை எல்லாம் என்ன செய்து கிழித்து விட்டன. அந்த அனுபவத்தையும் சொல்கிறேன் கேளுங்கள் பாஸ்கர் அவர்களே.....

கல்லூரியில் படிக்கும் போது சமூக நலத்துறை மூன்று சக்கர நாற்காலி வழங்கியது. அலுவலகம் எங்கோ ஓரிடத்தில் இருந்தது. அதைச் சென்றடையவே ஏகப்பட்ட காசும், உடல் துன்பமும் பட்டேன். கொடுத்த வண்டியின் மூன்று சக்கரங்களில் காற்றும் இல்லை ஒழுங்காக இணைக்கப்படவும் இல்லை. வண்டியைக் கொடுத்துவிட்டு மாலையில் விழா நடக்கவிருக்கும் விழாத் திடலுக்கு வந்துவிடுமாறும், அங்கு வண்டியினை மந்திரிகள் தருவார்கள் என்றும் சொன்னார்கள். சமூக நல அலுவலகத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரம் இருந்தது. வண்டியினை அருகில் இருக்கும் சைக்கிள் கடைக்காரரிடம் கொடுத்து ரிப்பேர் செய்து தரச் சொல்லி அதை உருட்டிக் கொண்டு அந்த விழா நடந்த இடத்திற்குச் சென்ற பின்பு அங்கு வந்த சில அதிகாரிகள் வண்டியைப் பூட்டி சாவியினை எடுத்துச் சென்றுவிட்டனர். மாலை நான்கு மணியிலிருந்து இரவு பன்னிரண்டு மணி வரை வண்டியிலேயே உட்கார்ந்து கொண்டு இயற்கை உபாதை, பசி, இடுப்பு வலி எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு காத்திருந்தேன். என் அருகில் பெண் ஒருவர் வண்டியின் மீது அமர்ந்திருந்தார். அவரின் நிலைமையை எண்ணிப் பாருங்கள் வாசகர்களே. மந்திரிகள் வந்தார்கள். பேசினார்கள். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். சென்றுவிட்டார்கள். அதிகாரிகள் வந்து சாவியினைக் கொடுத்துவிட்டு மந்திரிகளுக்கு வேறு வேலைகள் இருப்பதால் சென்றுவிட்டார்கள் என்று சொல்லிச் சென்றார்கள். அதன் பிறகு வண்டியினை எடுத்துக் கொண்டு ஊர் சென்று சேர வேண்டும். எப்படி முடியும். ஊரே உறங்கிக் கொண்டிருக்கும். யாரைப் பிடித்து என்ன செய்ய இயலும். கிடைத்த இடத்தில் நான் படுத்துக் கொள்வேன். என்னுடன் வந்த அந்தப் பெண்ணின் நிலைமை? இப்படி எங்களை வதைத்த இரு மந்திரிகளின் நிலைமை என்ன ஆனது தெரியுமா? இன்று அவர்கள் அரசியல் அனாதைகளாக்கப்பட்டு மண்ணுக்குள் சென்றுவிட்டார்கள்.

இன்னுமொரு சம்பவத்தில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கணிப்பொறி உதவியாளர் பணி இடம் இருப்பதாகக் கேள்விப்பட்டு மனு கொடுக்கச் சென்ற போது, அங்கிருந்த அதிகாரிகள் அப்படி ஏதும் இல்லை என மறுத்துவிட்டனர். அந்தப் பதவி காலியாய் இருக்கிறது என்று அங்கு வேலை செய்யும் நண்பர் ஒருவர் சொன்னார். அரசாங்கப் பதவிகளையும் விலைக்கு விற்கின்றீர்களே... இதெல்லாம் நியாயமாகப் படுகிறதா உங்களுக்கு...

ஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்க வருமாறு அறிவிப்பு செய்தனர். நண்பருடன் சென்ற போது, போட்டோ எடுக்கப் பணம் கேட்டனர். அதற்கென்று தனியார் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் வந்திருந்தார். பணம் கொடுத்தாகிவிட்டது. அட்டையில் பெயர் எழுதிய பின்னர், கலெக்டர் ஆஃபீஸில் இருந்து ஆறு கிலோமீட்டர் தாண்டி இருக்கும் அரசு மருத்துவ மனையில் இருக்கும் எலும்பு முறிவு மருத்துவரிடம் சென்று கையெழுத்து வாங்க வேண்டுமாம். அதன் பின்னர் தான் அட்டை செல்லும் என்று கூசாமல் சொல்கின்றனர்.. எங்கு சென்றாலும் கஸ்டப்படுத்தப்படும் , உதாசீனப்படுத்தப் படும் ஊனமுற்றவர் என்ன பாவம் செய்தார்கள். அரசு அதிகாரிகளே, என்னைப் போன்றோரைப் பார்த்தால் கொஞ்சம் விஷம் கொடுத்து விடுங்களேன். புண்ணியமாகப் போகும்.

இப்படி அரசால் துரத்தித் துரத்தி அடிக்கப்படும் என்னைப் போன்றவர்களின் மனத்துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. ஊனமாகப் பிறந்ததுதான் குற்றமா ? குற்றமெனில், அரசாங்கமே எங்களைக் கருணைக் கொலை செய்து விடலாம் அல்லவா ? உயிரோடு வைத்து வேதனை செய்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லாமல் கொல்லுவதுதான் அரசாங்கத்துக்கு வாடிக்கையா ?

ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்தாராம். வரலாறு சொல்கிறது. அது உடல் துன்பம் பாஸ்கர் அவர்களே. அது உடல் துன்பம். மனத்துன்பம் இருக்கிறதே அது நரகம் அய்யா... நரகம்.. மனவேதனை மனிதனின் உச்சக்கட்ட துன்பம் பாஸ்கர் அவர்களே....

உயர்திரு பாஸ்கர் அவர்களே, உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு, மக்கள் சேவைக்கு வந்து வசதியாக அதை மறந்து விட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்யும் உங்களைக் குற்றம் சொல்லி இனி என்ன ஆகப்போகிறது. ஒன்றும் இல்லை. நான் பட்ட வேதனை வேதனைதான். ஆனால் அந்த வடு இன்னும் மாறவில்லை. இனிமேலாவது என்னைப் போன்றவர்கள் வந்தால் அவருக்கு நாற்காலி கொடுத்து உதவி செய்யுங்கள். அதுதான் எனக்குத் தேவை.

இந்தப் பதிவைப் படிக்கும் எனதருமை நண்பர்களே....

பாவத்தின் சுமைகளை சுமந்து கொண்டு, அரசால் புறக்கணிக்கப்பட்ட, எந்தச் சுகத்தையும் அனுபவித்தும் பார்க்க முடியாத, வேதனையிலும் வெந்து கொண்டு, என்று சாவு வரும் என்று காத்துகொண்டு இருக்கும் ஊனமுற்ற உள்ளங்கள் தவழ்ந்து வரும் போது, பாதையில் குறுக்கிடாமல் சற்று விலகி நின்று அவர்கள் செல்ல வழி விட்டால், எனது இந்தக் கட்டுரைக்கு ஒரு அர்த்தம் உண்டு. என்ன செய்வீர்களா ?

குறிப்பு : பொத்தாம் பொதுவாகக் குற்றம் சொல்வது எனக்குப் பிடிக்காது என்பதால் எனக்குத் துன்பமிழைத்த பாஸ்கர் அவர்களின் பெயரைக் குறிப்பிடும்படி அமைந்து விட்டது.


08-12-2008 அன்று எழுதப்பட்ட பதிவு.

இந்தப் பதிவிற்கு “ரகசிய வன்முறை” என்று தலைப்பிட்டு உயிரோசையில் வெளியிட்ட மனுஷ்யபுத்திரனுக்கு நன்றி.