குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, March 7, 2013

நிலம் (1) - நிலத்தை திருட முடியுமா?


எல்லா டாக்குமென்டுகளும் சரியாக இருக்கின்றன. வரி கட்டுகிறோம். நிலத்தின் அனுபவ பாத்தியமும் நம்மிடம் இருக்கிறது. நாம் தான் நிலத்தின் உரிமையாளர் என்று நம்பிக்கையோடு இருப்போம். எல்லா அனுபவ உரிமையும் நம்மிடம் இருந்தாலும் நம் நிலத்தை வேறொருவர் விற்க முடியுமா? என்று கேட்டால் ஆம் என்று சொல்ல முடியும். எப்படி சாத்தியம் என்கின்றீர்களா? 

இதோ எங்களிடம் வந்த ஒரு வழக்கின் விபரம் உங்களுக்காக.

சமூகத்தில் பிரபலமான ஒருவரின் நிலம் அது. தற்போதைய விலையோ கோடானுகோடி. அப்பிரபலம் காலமாகி விட அவரின் குடும்பத்தாருக்கு நிலம் இருக்கும் இடம் தெரியும். அத்துடன் விட்டு விட்டார்கள்.இப்படியான ஒரு சூழலில் வில்லாதி வில்லன் ஒருவன் இந்த நிலத்தின் மீது கண் வைக்கிறான். காரியங்கள் விறுவிறுவென நடக்க ஆரம்பிக்கின்றன.

அந்த இறந்து போன பிரபலத்தின் தாத்தாவின் பெயரும், வில்லாதி வில்லனின் தாத்தாவின் பெயரும் ஒன்றாக இருக்கிறது. இனிஷியலும் ஒன்றே. வில்லாதி வில்லன் அந்த நிலத்தை தன் தந்தையின் நிலம் என்றுச் சொல்லி, கோர்ட்டில் அதன் உரிமையாளர் என்று ஆர்டரும் வாங்கி விடுகிறான். அதன் பிறகு அந்த நிலத்தை வேறொருவரிடம் விற்றும் விடுகின்றான். நிலத்தின் உண்மையான உரிமையாளர் அவ்விடத்தில் இல்லாத காரணத்தால் அந்த நிலத்தை விற்று, அதை பிளாட் போட்டு விற்று விடுகின்றார்கள்.

இந்தச் சூழலில் பிரபலத்தின் வாரிசுகள் நிலத்தைப் பார்வையிட வந்த போது, வில்லாதி வில்லன் செய்து வைத்திருக்கும் வில்லத்தனத்தை அறிகின்றார்கள். எங்குச் சென்றாலும் அத்தனை டாக்குமெண்டுகளும் முற்றிலுமாய் மாற்றப்பட்டு இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

கோர்ட்டில் வழக்கு போட்டார்கள். (வழக்கு முடிய எத்தனை ஆண்டுகாலம் ஆகும் என்று நினைத்துப் பாருங்கள்) 

எப்படி இப்பிரச்சினையில் இருந்து வெளிவருவது? 

நிலம் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்குமா? 

இப்படியான ஒரு இக்கட்டான சூழலில் நம்மிடம் இந்தப் பிரச்சினை வருகிறது.

இந்தப் பிரச்சினையில் உண்மையான உரிமையாளரின் உரிமையை எப்படிக் கண்டுபிடித்து நிலை நாட்டுவது?

அதை சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து நிலத்தினை மீட்டெடுக்க உதவினோம். 

குறிப்பு : ரெவன்யூ சர்வே ரெக்கார்டு என்பது வெகு முக்கியமான நிலம் சம்பந்தப்பட்ட அரசு ஆவணமாகும். நிலத்தின் உரிமையாளர்களின் பெயர்கள் இந்த ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். தவறும் பட்சத்தில் இது போல பிரச்சினைகள் வரக்கூடும். எதிர்காலத்தில் நிலம் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்கின்றார்கள். ஆகவே நிலம் வைத்திருப்போர் அவசியம் கவனிக்க வேண்டியது இந்த ஆவணம்தான். வேறேதேனும் உதவிகள் தேவைப்பட்டால் என்னை அழைக்கவும். ஆலோசனைகள் நிச்சயம் தருவேன்.

Wednesday, March 6, 2013

புரியும் புதிர் ஒன்று


மனித வாழ்க்கையின் ரகசியம் 100 சதவீதம் என்றால் அதில் அரை சதவீதத்தைக் கூட அறிவியலாலும், பிற எந்த புற விஞ்ஞானத்தாலும் இது காறும் அறிந்து கொள்ள முடியவில்லை. இயற்கை என்பதே ஒரு மாயை. அந்த மாயைக்குள் தான் சக்தியே பிறக்கிறது. விலக்கல், ஈர்ப்பு சக்திகளிடையே பிறக்கிற மின்சாரம் மாயையிலிருந்து பிறக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் பொய் தோற்றங்களான ஏற்றம் இறக்கம், நன்மை தீமை, இன்பம் துன்பம், இரவு பகல் போன்ற மாயையிலிருந்து பிறப்பவை தான் மனித குல வாழ்வு. இந்த பொய் தோற்றங்கள் எப்போது ஒரு மனிதனை பாதிக்காது இருக்கின்றதோ அன்று அவன் படைப்பின் ரகசியத்தை அறிந்தவனாகின்றான். மனிதன் தன் வாழ்வு நிரந்தரமானது என்று நினைக்கிறான். ஆனால் அவனது வாழ்வு முடிதற்குரியது. அதை அவன் அறிந்திருந்தாலும் அவனைச் சுற்றி இருக்கும் மாயை அவனை அந்த உண்மையை அறியாவண்ணம் விலக்கி வைக்கின்றது.

வாழ்க்கை எனும் புதிரை விஞ்ஞானத்தால் விடுவிக்க முடியாது. இந்தச் செய்தி நம்பிக்கை இல்லாவிட்டால் உண்மையிலேயே பயங்கரமானதாகும். மனிதனின் எண்ணத்திற்கு முன்னால் இதுவரை வைக்கப்பட்ட நிலையான புதிர்களில் தலையானது வாழ்க்கை என்ற புதிரே - மார்கோனி

இந்திய ஆன்மீகப் பாரம்பரியத்தின் முக்கிய யோகியான பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு கதை ஒன்று.

அவர் இந்தியாவில் வித்யாலயா நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு சிறிய மான் குட்டி ஒன்றினை அவர் வளர்த்து வந்தார். அது அவருடனே வசித்து வந்தது. இப்படியான ஒரு நாளில் விடிகாலையில் பணி நிமித்தமாய் வெளியில் செல்லவதற்கு கிளம்பிய யோகியார், மான் குட்டிக்கு காலையில் உணவினைக் கொடுத்து விட்டுச் சென்று விட்டார். வித்யாலத்தில் பயின்று வந்த மாணவன் ஒருவன் அந்த மான் குட்டிக்கு மீண்டும் உணவளித்து விடுகிறான். அதன் காரணமாய் மான்குட்டி நோய்வாய்ப்பட்டு, படுத்தே இருந்திருக்கிறது. மாலையில் வித்யாலயாவிற்கு வரும் சுவாமி மான் குட்டியின் உயிர் ஊசலாடுவதைக் கண்டு வேதனையுறுகிறார். இறைவனிடம் வேண்டுகிறார். 

இறை அன்பின் காரணமாய் இறையின் மீது பற்றுக் கொண்டவர்களின் வேண்டுதலுக்கு இறைவன் உடனே செவி சாய்ப்பான் என்பது ஞானிகளுக்குத் தெரியும். “இறைவா, இம்மான் குட்டியின் உயிரைக் காத்து அருளுக” என்று பிரார்த்தித்த யோகியாரின் அன்றிரவு கனவில் அவருக்கு திருப்பம் ஒன்று ஏற்பட்டது.

அவரின் கனவில் வந்த அந்த மான் குட்டி, “சுவாமி, நான் இந்த உடலை விட்டு நீங்க விரும்புகிறேன், உங்கள் பிரார்த்தனை எனது விருப்பத்திற்கு இடையூறாய் இருக்கிறது” என்றது. திடுக்கிட்டு விழித்தெழுந்த யோகியார் மாபெரும் உண்மையை புரிந்து கொள்கிறார்.

நீங்களும் புரிந்து கொண்டீர்கள் அல்லவா? புரியாதவர்கள்  மீண்டும் படியுங்கள்.

இன்னும் வரும் ..... 
கட்டுரை ஆக்கத்திற்கு உதவி : ஒரு யோகியின் கதை ( நன்றி )

சித்த வாழ்க்கை


மனித உயிர்கள் உருவான நாளில் இருந்து இந்த நாள் வரையிலும் கோடானு கோடிபேர் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். மனித சமூகம் அத்தனை நபர்களையும் நினைவில் வைத்துக் கொண்டாடியதில்லை. பாரதம் மட்டுமல்ல உலகெங்கும் நன்னெறிகளைப் போதித்தவர்களையும், நல்லவைகளைச்  செய்தவர்களையும், கொடுங்கோலர்களையும் தான் உலகம் மறவாமல் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது. ஏன் இப்படி? லோகாயதாய வாழ்க்கை நெறிகளில் பொருள் தேடும் வாழ்க்கையைத்தான் மாயை வாழ்க்கையின் அர்த்தமுள்ளதாக காட்டும். பணமில்லை என்றால் வாழ்க்கையில்லை என்கிறது லோகாயதாய வாழ்க்கை. இந்த வாழ்வின் பின்னால் செல்பவர்களை உலகம் மறந்து விடுகிறது.பொருள் பற்றிய எந்த வித பிரக்ஞையும் இன்றி வாழ்ந்தவர்கள் பின்னால் தான் பொருளைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள். நாட்டை ஆளும் அரசனின் அவையிலே காவி உடை உடுத்தியவருக்குத்தான் முதல் மரியாதை.. அங்கு செல்வத்திற்கு இடமில்லை. அருளுக்கு மட்டுமே இடமுண்டு.

”கையில் ஒரு பைசா பணமில்லை. அதனால் எனக்கு வருத்தமில்லை. ஒரு லட்ச ரூபாய் இருக்கிறது அதனால் எனக்கு மகிழ்ச்சியில்லை. நாளைக்கு எனக்கு பணம் தேவை. ஆனால் என்னிடத்திலோ பைசா இல்லை. அவன் எங்கிருந்தோ பணம் வாங்கிக் கொடுப்பான். அது கடனாகக் கூட இருக்கலாம். அக்கடனைக் அவன் தான் கட்ட வேண்டும். இல்லையென்றால் அந்த அவமானம் அவனுக்குத்தான். இதுதான் சித்த வாழ்க்கை” என்றார்  எனது நண்பர்.

கிட்டத்தட்ட 90 கோடிக்கும் மேல் சொத்து அவருக்கு இருந்தது. வக்கீல் தொழில் செய்து வந்தார். வக்கீல்களுக்கு எப்போதுமே உண்மை பேச முடியாது. உண்மைக்கு எதிராய் தான் இருக்க முடியும். ஏதாவதொரு சந்தர்ப்பத்திலே உண்மை பேசலாம். ஆனால் பெரும்பாலும் உண்மைக்கு எதிராய்த்தான் தொழில் செய்ய முடியும். இப்படியான ஒரு தருணத்தில் இந்த வக்கீலுக்கு “காதறுந்த ஊசியும் வராது கடைக்கே” என்ற வாக்கியம் பட்டினத்தாருக்கு ஞானத்தை விழித்தெழச்செய்தது போல அவருக்கும் உண்மைக்கு எதிரான தொழில் விழிப்பு நிலையைத் தர, வீடு விட்டு குடிசையில் வாழ ஆரம்பித்தார். அங்கும் அவரின் உறவுகள் செல்ல ஆரம்பிக்க, யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்று விட்டார். நீண்ட நாட்கள் சென்றன. காசியிலிருந்து வக்கீலின் குடும்பத்தாருக்கு அழைப்பு வர, அங்குச் சென்று  பார்த்தால் ஒரு சாதாரண மனிதன் வாழ அருகதையற்ற ஒரு அறையில் வாழ்ந்து இறையடி சேர்ந்திருக்கிறார் அந்த வக்கீல். கோடி கோடியாய் சொத்து இருந்தும் ஏன் அவர் இப்படியான ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். மனித வாழ்வின் விடையே அவர்தான்.

மனிதனிடம் இருக்கும் எல்லாமும் அவனிடமிருந்து சென்று விடும். மனிதனுடன் என்றும் இருப்பது அவன் செய்த தர்மம் மட்டுமே.

இன்னும் வரும் .....