குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Wednesday, April 29, 2020

காயங்களின் கதாநாயகன் – ஜோசப்


முதலில் இந்தப் பாடலைப் பார்த்து விடுங்கள். பின்னர் படிக்கச் செல்லலாம்.

இது விமர்சனம் அல்ல. படம் பார்த்த போது எனக்குள் உண்டான எண்ணங்கள். விமர்சனம் என்றால் ஒப்பீடு. ஒப்பீடுகள் ஒரு சில இடங்களில் சிலாகிக்க முடியாது. எங்கு விமர்சனம் செய்ய வேண்டுமோ அங்கு அவசியம் கருதி விமர்சிக்க வேண்டும். சினிமா விமர்சனம் என்பது கத்தி மீது நடப்பது போல. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழலில் வாழ்ந்து கொண்டிருப்போம். அதற்கேற்ற அறிவுதான் இருக்கும். அதை வைத்து சரியான விமர்சனத்தை எழுத முடியாது. ஒவ்வொருவருக்கும் இருக்கும் அறிவின் தன்மையைப் போல அவரவர்களின் விமர்சனம் வரும். ஆனால் இது எல்லாவற்றையும் கடந்தது தமிழ் சினிமா. தமிழ் சினிமாவை விமர்சிக்க முடியாது. திட்டனும். ஏனென்றால் இன்று வரைக்கும் கிழவர்கள் குமரிகளை அதுவும் ரக ரகமான பாவைகளை காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் கைதி திரைப்படம் பார்த்தேன். கதாநாயகியே இல்லை. படம் நன்றாக ஓடியதாக கேள்விப்பட்டேன். கார்த்தியின் ஹீரோயிசத்தை சகித்துக் கொண்டால் ரசிக்க முடியும்.

நாமெல்லாம் பிறரின் ஹீரோயிசத்தைப் படித்து வளர்ந்தவர்கள் தானே. முளைக்கும் போதே தவறான வழிகாட்டல். அது காடு செல்லும் வரை தொடர்கிறது.

இந்த உலகில் ஒரே ஒரு அப்துல் கலாம் தான் இருக்க முடியும். அவரைப் போல வாழ்க்கையை இன்னொருவர் வாழவே முடியாது. ஆனால் நாமோ அவரைப் போல, இவரைப் போல என பேசி தன் சுயத்தை அழித்துக் கொள்கிறோம்.

இனி படம்.

கொலை நடந்த வீடு. எஸ்.பி யாரோ ஒருவருக்காக காத்திருக்கிறார். அவர் தான் இந்த ஜோசப். பழைய ஸ்கூட்டரில் வருகிறார். கொலை நடந்த இடத்தை ஒவ்வொரு பகுதியாக பார்வை இடுகிறார். பேசுகிறார். கொலையாளியைக் காட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விடுகிறார்.

ஆக்ஸிடெண்ட் என்று போனில் அழைக்கிறார் ஒருவர். ஹாஸ்பிட்டலில் ஸ்டெல்லா படுத்து இருக்கிறார். ஸ்டெல்லா இவரின் மனைவி. அழைத்தது ஸ்டெல்லாவின் இரண்டாவது கணவர்.

ஸ்டெல்லா உடனான வாழ்க்கை விரிகிறது. காவியம் போல. இடையில் ஒரு கிளைக்கதை. ஜோசப்பிற்கு முன்னால் காதலி ஒருத்தி உண்டு. அந்தக் காதல் நிறைவேறவில்லை. அவளை அவர் போலீஸாகி வேலை பார்க்கும் போது, ஒரு கொலை விசாரணைக்குச் சென்ற போது அழுகிய பிணமாகப் பார்க்கிறார்.

அதன் பாதிப்பில் மனைவியுடன் நெருக்கமாக இருப்பதை தவிர்க்கிறார். ஸ்டெல்லா ஜோசப் இன்னொரு பெண்ணுடன் சகவாசம் வைத்திருப்பதாக தவறாகப் புரிந்து கொண்டு மகளை ஜோசப்பிடம் விட்டு விட்டு சென்று விடுகிறார். இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் ஜோசப் திருமணம் செய்யாமலே வாழ்கிறார்.

ஸ்டெல்லாவுக்கு மூளைச்சாவு ஏற்படுகிறது. உடலுறுப்புகள் தானம் கொடுக்கப்படுகிறது. ஜோசப் ஸ்டெல்லா ஆக்சிடெண்ட் ஆன இடத்தைப் பார்வையிடுகிறார். கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதைக் கண்டறிகிறார். அவரின் மகளும் இதே போல ஆக்சிடெண்டில் சிக்கி உயிரிழக்கிறார். அப்போது ஸ்டெல்லா இன்னொருவரின் மனைவி. அப்போது இருவரும் மகளின் உடலுறுப்புகளைத் தானம் செய்ய அனுமதிப்பார்கள். அடுத்த ஆக்ஸிடெண்ட் மரணம் ஸ்டெல்லா.

முதன் முதலாக காதலித்தவரும் கொலையாகிறார். மகளும், மனைவியும் இறந்து போகின்றார்கள். தன் மனவலியை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார் இப்படத்தில். அவரின் வலியை நாம் உள்ளுக்குள் உணரலாம்.

கொலைகளுக்கான காரணத்தைக் கண்டறிகிறார்.

தன்னையே, தன் உயிரை சாட்சியாக்கி விட்டு சாகிறார். கொலையாளிகள் சிக்குகிறார்கள்.

படம் முடிந்தது.

முதல் காதல் – மரணம் வரை மறையாத உணர்வு. ஜோசப் ஏழை என்பதற்காக அக்காதலை இழக்கிறார். காதலியோ இன்னொருவருடன் வாழ்கிறார்.

இரண்டாவது வாழ்க்கை. முதல் காதலியின் மரணத்தின் வலியால் மனைவியை இழக்கிறார். அதை அவளிடம் தாமதமாகச் சொல்கிறார். இருந்தும் என்ன பயன்? அவள் வேறொருவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பெண்கள் அவசர புத்திக்காரர்கள் என்பார்கள். ஆண்களின் உணர்வுகள் சினிமாத்தனமானவை அல்ல. ஒரு முழுமையான ஆண் தன் ஆசாபாசங்களைக் குறைத்துக் கொள்வான் காலத்தின் சூழலுக்கு ஏற்ப. ஆனால் பெண்களில் பலர் அவ்வாறு இருப்பதில்லை.

இன்றைக்கும் என் காதல் மனைவி தன் மகளிடம் ”உங்கப்பா, முன்ன போல இல்லை” என சொல்லிக் கொண்டிருப்பார்.. எனக்குள் ஆயாசம் தான் ஏற்படும். எப்போதும் சினிமா கதாநாயகர்களைப் போல காதலித்துக் கொண்டிருக்க முடியுமா?

மகள் பெரிய பெண்ணாகி விட்ட நாள் முதல் கொண்டு, மனைவியின் முகத்தை காதலுடன் பார்க்க் கூட முடியவில்லை. என் மனைவியின் மீதான காதல், என் மகளின் மீது அன்பாக மாறிப் போனது. அரும்பு மீசை தழுவ மகனைப் பார்க்கும் போது என்னால் வேறொரு பெண்ணை பார்க்கவே முடியவில்லை. வயது கூட கூட, உணர்வுகளும் மாற்றமடைகின்றன. ஆனால் பெண்களோ…??? அவர்களின் உணர்வுகளோ? என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது. அவர்கள் என்றைக்குமே உணர்ச்சிக் கொந்தளிப்பு கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள் தூங்கும் எரிமலை போல.

ஜோசப் பெரிய பெண்ணாகிய தன் மகளை அழைத்துக் கொண்டு, தன் முன்னாள் மனைவி இன்னொருவருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டின் வாசலில் விட்டு வருவார். அப்போது ஸ்டெல்லாவைப் பார்ப்பார். 

அந்தக் காட்சியைப் பார்த்த போது எனக்குள் எழுந்த வேதனையை என்னவென்று சொல்வது. பெண்களால் எப்போதுமே உண்மையானவைகளை அறிந்து கொள்ளவே முடியாதா? அந்தக் காட்சி என் மனதுக்குள் நின்று கொண்டு இரண்டு நாட்களாக பாடாய் படுத்தியது. அவசரம் ஸ்டெல்லாவுக்கு. ஜோசப் கடைசி வரையில் இன்னொரு பெண்ணை நினைத்துக் கூட பார்க்காமல் வாழ்வார்.

ஸ்டெல்லாவுடன் ஜோசப்பின் வாழ்க்கை ஒரு பாடலில் விரியும் அழகான ஆண் மயில் பெண் மயிலை ஈர்க்க விரிக்கும் இறகுகளைப் போல. ஒரு காட்சியில் ஸ்டெல்லா குளித்து விட்டு, கூந்தலில் எண்ணை மிளிரும் அழகோடு, பின்னாலே மல்லிகைச் சரத்தைச் சூடிக் கொண்டு, ஜோசப்பை திரும்பி பார்த்து, ஒரு பார்வை பார்ப்பார். அய்யோ….!!! இன்னும் அந்தப் பார்வையின் காதலை மறக்க முடியவில்லை. இயக்குனர் கலாரசிகன். என்ன ஒரு காட்சி? பாடல் இருக்கிறது யூடிப்பில் கீழே பாருங்கள். சொக்கிப் போவோம்.

ஆண்கள் எப்போதுமே காயங்களோடு தான் வாழ்வார்கள். ஆம் பெண்கள் தங்களிடம் இருக்கும் பல ஆயுதங்களால் ஒவ்வொரு ஆண்களையும் வீழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் வீசும் ஒவ்வொரு ஆயுதங்கள் ஏற்படுத்தும் காயங்கள் என்றைக்குமே ஆறாத தழும்பாய் ஆண்களிடம் பதிந்து விடும். நிராயுதபாணியான ஜோசப் இரண்டு பெண்களின் ஆயுதங்களால் தாக்கப்பட்டு முடிவில் தன்னையே அழித்துக் கொள்வார்.

சர்ச்சுகளில் ஒளி வீசிக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்திகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆண்களின் நினைவுகள் வந்துவிடும்.

ஜோசப்பின் வாழ்க்கை முழுவதையும் நம்முள் உணரலாம். அற்புதமான படைப்பு. எழுதிக் கொண்டே போகலாம். நான் ரசித்தவைகளை எழுத எழுத நான் படத்துக்குள் மூழ்கி விடுவேனோ என்ற பயம் ஏற்படுகிறது. 

என்னை ஈர்த்த அற்புதமான படங்களில் இது ஒன்று.

காயங்களின் கதாநாயகனாக ஜோசப்.

வாழ்க்கையின் அபத்த நாடகங்களை இந்த ஜோசப் திரைப்படம் ஒரு துளியாய் மின்னலடிக்க வைத்திருக்கிறது.

இயக்குனருக்கு என் பாராட்டுக்கள். ஜோஜு ஜார்ஜ் உங்களை வைத்து ஒரு படம் எடுக்க நினைக்கிறேன். பார்க்கலாம் காலம் கனியட்டும்.

அமைதியாக அமர்ந்து கொண்டு, இந்தத் திரைப்படத்தை அவசியம் பாருங்கள். வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்று அறியலாம்.

பல வகைகளில் நாமெல்லாம் காயங்களோடு அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காயங்கள் இல்லாத மனிதர்கள் இவ்வுலகில் உண்டா?

ஆம் நண்பர்களே….!

பாரதி சொன்னான் பாருங்கள்.

காதல் காதல் காதல்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல்

ஒரே ஒரு வலியோடு செத்துப் போவது மேல் அல்லவா?

Wednesday, March 6, 2013

சித்த வாழ்க்கை


மனித உயிர்கள் உருவான நாளில் இருந்து இந்த நாள் வரையிலும் கோடானு கோடிபேர் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். மனித சமூகம் அத்தனை நபர்களையும் நினைவில் வைத்துக் கொண்டாடியதில்லை. பாரதம் மட்டுமல்ல உலகெங்கும் நன்னெறிகளைப் போதித்தவர்களையும், நல்லவைகளைச்  செய்தவர்களையும், கொடுங்கோலர்களையும் தான் உலகம் மறவாமல் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது. ஏன் இப்படி? லோகாயதாய வாழ்க்கை நெறிகளில் பொருள் தேடும் வாழ்க்கையைத்தான் மாயை வாழ்க்கையின் அர்த்தமுள்ளதாக காட்டும். பணமில்லை என்றால் வாழ்க்கையில்லை என்கிறது லோகாயதாய வாழ்க்கை. இந்த வாழ்வின் பின்னால் செல்பவர்களை உலகம் மறந்து விடுகிறது.பொருள் பற்றிய எந்த வித பிரக்ஞையும் இன்றி வாழ்ந்தவர்கள் பின்னால் தான் பொருளைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள். நாட்டை ஆளும் அரசனின் அவையிலே காவி உடை உடுத்தியவருக்குத்தான் முதல் மரியாதை.. அங்கு செல்வத்திற்கு இடமில்லை. அருளுக்கு மட்டுமே இடமுண்டு.

”கையில் ஒரு பைசா பணமில்லை. அதனால் எனக்கு வருத்தமில்லை. ஒரு லட்ச ரூபாய் இருக்கிறது அதனால் எனக்கு மகிழ்ச்சியில்லை. நாளைக்கு எனக்கு பணம் தேவை. ஆனால் என்னிடத்திலோ பைசா இல்லை. அவன் எங்கிருந்தோ பணம் வாங்கிக் கொடுப்பான். அது கடனாகக் கூட இருக்கலாம். அக்கடனைக் அவன் தான் கட்ட வேண்டும். இல்லையென்றால் அந்த அவமானம் அவனுக்குத்தான். இதுதான் சித்த வாழ்க்கை” என்றார்  எனது நண்பர்.

கிட்டத்தட்ட 90 கோடிக்கும் மேல் சொத்து அவருக்கு இருந்தது. வக்கீல் தொழில் செய்து வந்தார். வக்கீல்களுக்கு எப்போதுமே உண்மை பேச முடியாது. உண்மைக்கு எதிராய் தான் இருக்க முடியும். ஏதாவதொரு சந்தர்ப்பத்திலே உண்மை பேசலாம். ஆனால் பெரும்பாலும் உண்மைக்கு எதிராய்த்தான் தொழில் செய்ய முடியும். இப்படியான ஒரு தருணத்தில் இந்த வக்கீலுக்கு “காதறுந்த ஊசியும் வராது கடைக்கே” என்ற வாக்கியம் பட்டினத்தாருக்கு ஞானத்தை விழித்தெழச்செய்தது போல அவருக்கும் உண்மைக்கு எதிரான தொழில் விழிப்பு நிலையைத் தர, வீடு விட்டு குடிசையில் வாழ ஆரம்பித்தார். அங்கும் அவரின் உறவுகள் செல்ல ஆரம்பிக்க, யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்று விட்டார். நீண்ட நாட்கள் சென்றன. காசியிலிருந்து வக்கீலின் குடும்பத்தாருக்கு அழைப்பு வர, அங்குச் சென்று  பார்த்தால் ஒரு சாதாரண மனிதன் வாழ அருகதையற்ற ஒரு அறையில் வாழ்ந்து இறையடி சேர்ந்திருக்கிறார் அந்த வக்கீல். கோடி கோடியாய் சொத்து இருந்தும் ஏன் அவர் இப்படியான ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். மனித வாழ்வின் விடையே அவர்தான்.

மனிதனிடம் இருக்கும் எல்லாமும் அவனிடமிருந்து சென்று விடும். மனிதனுடன் என்றும் இருப்பது அவன் செய்த தர்மம் மட்டுமே.

இன்னும் வரும் .....

Tuesday, July 3, 2012

அம்மா என்றால் அசிங்கம்




மகளை அழைக்கச் சென்று வீடு திரும்பிய மனைவியின் முகம் பேயறைந்தந்தது போல இருந்தது. பள்ளியில் ஏதோ பிரச்சினை போலும் என்று நினைத்துக் கொண்டே விசாரித்தேன். பிரச்சினை பள்ளியிலோ அல்லது குழந்தைகளாலோ அல்ல.

மகளுடன் படிக்கும் தோழியை அழைக்க பாட்டி ஒருவரும் மனைவியுடன் செல்வாராம். நேற்றைக்கு கோவையில் லேசாக தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஆகவே குடை எடுத்துக் கொண்டுதான் பள்ளிக்குச் சென்றார்கள்.

பள்ளி விட்டதும் பாட்டி தன் பேத்தியையும், மனைவி என் மகளையும் அழைத்துக் கொண்டு கேட் தாண்டி நான்கு அடி தூரம் வந்திருப்பார்களாம். பாட்டியின் மகன் காரில் வந்திருக்கிறார். காரில் அவருடன் மனைவி மட்டும் இருந்தாராம். காரை நிறுத்தி தன் மகளை மட்டும் ஏற்றிக் கொண்டவர், பாட்டியை நடந்து வா என்றுச் சொல்லி விட்டுச் சென்று விட்டாராம். பாட்டிக்கு கண்ணில் கண்ணீர் துளிர்த்து நின்றதாம். 

“ஐந்து வயதில் கணவர் இறந்து போய் விட்டார். இவனை படித்து ஆளாக்குவதற்கு இருந்த சொத்தையெல்லாம் விற்று படாத பாடு பட்டு படிக்க வைத்து வேலையையும் வாங்கிக் கொடுத்தேன். என்னதான் சொல்லுங்க, கணவன் இருந்தால் என்னை இப்படி விட்டு விட்டுப் போவாரா? ஏதோ உசிர் இருக்கும் வரை அப்படியே இருந்துவிட்டு போக வேண்டியதுதான்” என்று சொல்லி அழுதிருக்கின்றார்.

என் மனைவி ஏதோதோ சொல்லி சமாளித்து அவரை ஆறுதல் படுத்தி இருக்கிறார். 

ஆசை ஆசையாய் பெற்று வளர்த்து கண்ணுக்குள் வைத்து காப்பாற்றி படிக்க வைத்து, நேரத்திற்கு உணவு கொடுத்து, வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்து வரும் பிள்ளைகளில் நூற்றுக்கு 99 சதவீதம் மேலே கண்ட மகனைப் போலத்தான் இருக்கின்றார்கள்.

ஏன்?

எல்லாவற்றுக்கும் ஒரு பெண் தான் காரணம்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.

எனது குடும்பத்தில் என் சின்னம்மா பசங்க மூவர். என்னுடன் சேர்த்து நால்வர். நால்வரும் ஒன்று சேர்ந்தால் அன்றைக்கு ஒரே கொண்டாட்டம் தான். மட்டன், சிக்கன், முட்டை என்று கூத்தும் கும்மாளமுமாய்த் தான் இருக்கும். 

முதல் குழந்தையின் போது மனைவி வாமிட் எடுத்துக் கொண்டே இருப்பாள். அதை வாங்கிக் கொண்டு போய் வெளியில் கொட்டி தண்ணீர் கொடுத்து, அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருவது நடுத்தம்பி.

மூத்த தம்பி பிரவசத்தின் போது மருத்துவமனையிலேயே என் அம்மாவுக்குத் துணையாகவும், வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு செல்வது என்று இருப்பான். 

இப்படி இருந்தவர்கள் இன்றைக்கு வருடத்திற்கு ஒரு முறை என்னுடன் பேசுவது அரிது. காரணம் அவர்களின் திருமணம்.

சரியாகச் சொன்னால் பெண்கள். மூவரும் மூன்று திசைகள். மெட்டீரியல்ஸ் வாழ்க்கைக்கு அடிமைப்பட்டுப் போன நுகர்வுப் பெண்களாய் வாழ்க்கையில் ஆசைக்கும், நிதர்சனத்திற்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் அற்பங்களாய் இருக்கின்றார்கள்.

வாழ்க்கையின் நிதர்சனம் புரிவது ஐம்பது வயதுக்கும் மேல். அப்போது எவராலும் ஏதும் செய்ய இயலாது. இயலாமையால் வெந்து வெந்து வேதனைப்படத்தான் முடியும்.

பாட்டியின் மகனுக்கும் இதே சூழல் வரத்தான் செய்யும். அப்போது வருந்தி என்ன ஆகப் போகின்றது. சாகின்ற வரையில் தன் மகனைப் பற்றி நினைத்து நினைத்து வேதனையில் அல்லவா அப்பாட்டி இறந்து போகும்? 

கணவன் இல்லையென்றால் மனைவியும், மனைவி இல்லையென்றால் கணவனும் கேட்பாரற்றுப் போவார்கள் என்பதுதான் நிதர்சனம். எத்தனை அன்பாக பிள்ளைகள் இருந்தாலும் அது எதற்குமுதவாது.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்