குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, June 30, 2016

நிலம்(21) - சொத்தின் தன்மையும் வாரிசுகளின் பாகமும்

சமீபத்தில் ஒரு ஜர்னலில் ஒரு வழக்கினைப் படித்தேன். வெகு சுவாரசியமான வழக்கு தான் அது. சொத்தில் பாகம் குறித்த ஒரு முக்கியமான அவசியமான அனைத்து வழக்குகளுக்கும் முன்னுதாரமான வழக்கு தான் இது.

இனி வழக்கு விபரத்தினைப் பார்ப்போம். அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. கொஞ்சம் கவனமாகப் படியுங்கள்.

ஒரு கணவன் தன் மனைவியின் பெயரில் சொத்தினை வாங்குகிறார். அந்தச் சொத்து அவர்களது அனுபோகத்தில் இருந்து வருகிறது. திடீரென கணவன் இறந்து விடுகிறார். மனைவியானவள் தன் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். குழந்தைகள் பெரியவர்கள் ஆனவுடன் தன் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டும் சொத்தினை எழுதி வைக்கிறார். விஷயம் அவ்வளவுதான். இது ஒன்றும் தவறே இல்லை. அந்தப் பெண் தான் கிரையம் பெற்ற சொத்தினை யாருக்கு வேண்டுமானாலும் கிரையமோ தானமோ எழுதி வைக்க உரிமை கொண்டவர் ஆகிறார். அந்தப் பெண்ணின் இதர வாரிசுகளுக்குச் சொத்தில் உரிமை இல்லை. அவர்களால் அந்தச் சொத்தில் பாகம் கேட்க முடியாது.

இதுவரையிலும் நான் சொல்லி இருப்பது உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். ஒருவரின் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்தினை அவர் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். அது அவரின் உரிமை.

ஆனால் மேற்குறிப்பிட்ட சொத்தில் அந்தப் பெண்ணின் இதர வாரிசுகள் பாகம் பெற்றனர். எப்படி? 

கணவன் தனது மூதாதையர் சொத்தினை விற்று கிடைத்த பணத்தைக் கொண்டுதான் தன் மனைவியின் பெயரில் சொத்துக்களைக் கிரையம் பெற்றிருக்கிறார் என்பதனை அந்தப் பெண்ணின் இதர வாரிசுகள் கோர்ட்டில் தகுந்த ஆவணங்களுடன் நிரூபித்தார்கள். விஷயம் முடிந்தது.

இனி நீங்கள் சொத்து வாங்கும் போது கிரையம் பெற்ற சொத்துக்கள் வாங்க எப்படி பணம் வந்திருக்கும் என்றொரு கேள்வியை அவசியம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அது வெகுமுக்கியமான விஷயம் என்பது உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும்.

உங்களுக்காக ஒரு குறிப்பு :

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 என்பது இந்துக்களின் சொத்தில் பாகம் பிரிவதைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றது. 

இந்து வாரிசுரிமைச் சட்டம் முகம்மதியர், கிறிஸ்தவர், பார்சி அல்லாத இந்தியாவிலுள்ள மற்ற அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் மற்றும் ஒரு நாத்திகவாதிக்கும் கூட பொருந்தும்.

Sunday, June 19, 2016

மகள் நிவேதிதாவிற்கு கடிதம் - 19 ஜூன் 2016

என் பிரியத்துக்குரிய அன்பு மகளே!
எந்த வித கட்டளைக்கும் கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் கடந்து செல்லும் நாட்களின் ஊடே சில தருணங்கள் நெகிழ்வுகளை உண்டாக்கி விடும். மனிதர்களுக்கு அந்த தருணங்களே அனுபவங்களாக வாழ்க்கையின் அர்த்தங்களாக மனதோடு ஊடாடிக் கொண்டிருக்கும். இன்றைக்கு நீ விடிகாலையில் எழுந்த என்னிடம் கொடுத்த வாழ்த்து அட்டையைப் பிரித்த போது மீண்டும் உண்டானது.


(உனது வாழ்த்து அட்டை)


(வெள்ளிங்கிரி மலை யாத்திரையின் போது)


என் பாச மகளே! மருத்துவ மனையில் நர்ஸ் உன்னை சிறு குழந்தையாக என் கைகளில் கொடுத்தபோது நான் அடைந்த நெகிழ்வினை உனது பத்தாவது வயதில்  நான் மீண்டும் இன்று அடைந்திருக்கிறேன். அழகான அந்த வாழ்த்து அட்டையில் எனக்காக நீ எழுதி இருந்த அந்த வாசகங்கள் என்னை வெட்கம் கொள்ள வைத்தன. ஆமாம் நான் ஏதாவது வேலையில் இருக்கும் போது நீ என்னிடம் ஏதோ கேட்க வருவாய், நான் அப்புறம் பேசலாம் என்று மறுத்து விடுவேன். இது அடிக்கடி நடக்கும். அப்போது நான் அப்படி நடந்து கொண்டிருக்க கூடாது என்று எனக்கு ஆயாசமும் அசூசையும் ஏற்பட்டு விட்டது மகளே. இனி அவ்வாறு நடக்க இயலாமல் பார்த்துக் கொள்கிறேன்.

உன்னையும் உன் சகோதரனையும் நல்ல குழந்தைகளாக, சமூக பிரக்ஞை உடையவர்களாக, நல்ல திடமும், செயலூக்கமும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக, சக மனிதர்களிடையே அன்பு கொண்டவர்களாக வளர்க்க வேண்டுமென்ற நினைப்பின் காரணமாகவும்,  மனசாட்சிக்கு விரோதமாக எந்த விதக் காரியத்திலும் ஈடுபட்டு எவரின் சாபமும் பெற்று விடக்கூடாது என்ற எனது எண்ணத்தின் காரணமாகவும் தொழிலில் நான் சந்திக்கும் பிரச்சினைகளால் உண்டாகும் வலியினால் சில நேரங்களில் உனது வேண்டுகோளினை கேட்க முடியாமல் போய் விடுகின்றன. வேறொன்றும் காரணமில்லை மகளே!

தத்தி நடை போட்டு நடந்த நீ இன்றைக்கு தனியாக வெள்ளிங்கிரி மலைக்கு யாத்திரை செல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறாய். என்னைப் போலவே உனக்கு தண்ணீரும், பசுமையும் நிறைந்த இடங்கள் பிடித்தவை என்று எனக்குத் தெரியும். நானும், ரித்தியும் உன்னுடன் வெள்ளிங்கிரி மலையிலிருந்து வடியும் மூலிகை ஆற்றில் ஆனந்தமாகக் குளித்து, ஆற்றில் செல்லும் மீனைப் பிடிக்க முயன்று தோற்று மீண்டும் பிடித்து குழி செய்து அதில் மீனை நீந்த விட்டு விளையாடுவது எனக்கு இப்போது நினைவில் வந்து செல்கிறது.

உனக்கு ஒரு சில விஷயங்களைச் சொல்லி விட எனது மனது துடிக்கிறது. சொல்லி விடுகிறேன். நீ பெரிய பெண்ணாக வளர்ந்து வருகையில் இணையத்தில் எனது இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்றால் படித்துப் பார்.

நீ எப்போதுமே தனியாள் என்பதை நினைவில் வைத்துக் கொள். உனது பிரச்சினையும், மகிழ்ச்சியும், வலியும் உன்னை மட்டுமே சார்ந்தது. அதை வேறு எவரும் உணர்ந்து கொள்ளக் கூட முடியாது. உன் வாழ்க்கைப் பயணத்தில் கூட வருபவர்கள் எவரும் நிரந்தரம் இல்லை என்பதை நீ முடிவு கட்டிக் கொள்ள வேண்டும். வேறு யாரும் உனக்கு எந்த வித காரியத்தையும் பயனின்றி செய்ய மாட்டார்கள் என்பதை நீ நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உலகம் கொடுத்துப் பெறுவதைதான் தான் அச்சாணியாக கொண்டு இயங்குகிறது. நண்பர்கள் என்று யாரும் இல்லை, உறவினர்கள் என்று எவரும் இல்லை. எல்லோரும் மனிதர்கள் என்பதை மறந்து விடாதே.

பணம் என்றொரு மாயத்தோற்றமும், பொறாமை என்றொரு மயக்கும் குணமும் மனிதர்களை விடாது துரத்திக் கொண்டிருக்கின்றன. அவைகளில் சிக்கிக் கொண்டு இன்னும் விடுபட முடியாமல் அவர்கள் தன் சக மனிதனுக்கு துன்பங்களைக் கொண்டு வந்து விடுகிறார்கள். ஆகவே உனக்குத் துன்பங்கள் ஏதும் வராமல் இருக்க வேண்டுமென்று விரும்பினால் சக மனிதர்களின் மீது கவனமாக இருக்க வேண்டும். இது அவசியமா? இது தேவையா? என்று உன்னைக் கேட்டுக் கொள்,  முடிவெடு, பிறகு செயல்படு. சக மனிதர்களால் உனக்கு பிரச்சினைகள் வராத வண்ணம் நீ செயல்பட்டாய் என்றால் என்றைக்கும் சந்தோஷமாக வாழலாம்.

மகளே இப்போது மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிச் சொல்லப் போகின்றேன். நீ இப்போது கல்வி என்ற பெயரில் படித்துக் கொண்டிருப்பதெல்லாம் பிறரால் உருவாக்கப்பட்ட அவர்களின் குப்பைகள். இந்தக் குப்பைகளை நீ உண்மை என்று நம்பி விடாதே. இது ஒரு பாதை என்றளவில் எடுத்துக் கொள்.

உனது வாழ்க்கைக்கு நீ பயிலும் கல்வி என்பது வழிகாட்டி மட்டுமே. அதை வைத்துக் கொண்டு உனக்கான வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள். நீ ஒரு வேலைக்காரனாக இருக்க வேண்டுமா? முதலாளியாக இருக்க வேண்டுமா? என்பதை நீ வளர்ந்து வருகையில் முடிவெடுத்துக் கொள். வெற்றி என்பது இங்கு நிரந்தரமில்லை என்பதையும், தோல்வியும் நிரந்தரமில்லை என்பதையும் நினைவில் மறக்காமல் வைத்துக் கொள்.

வெற்றி என்பதும் தோல்வி என்பதும் குதிரைக்கு முன்னால் கட்டித் தொங்க விடப்படும் புல் போன்றது மகளே. உனக்கு இதன் அர்த்தம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீ குதிரையாக இருக்க வேண்டாமென்பது எனது ஆசை. நீ அதை இயக்குபவராக இருக்க வேண்டும். புரிகிறதா?

உனது வாழ்த்துக்கு மிக்க நன்றி மகளே!

மிக்க அன்புடன் உனது அப்பா.

Saturday, June 18, 2016

நிலம் (20) - கோவையில் பஞ்சமி நிலங்கள் உள்ளனவா?

அன்பு அண்ணா, கோவையில் பஞ்சமி நிலங்கள் உள்ளனவா? அவ்வாறு பஞ்சமி நிலங்கள் என்று தெரியாமல் வாங்கி விட்டால் என்ன ஆகும்? என்று விபரமாக எழுதுங்கள். பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்பதால் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம் - மதியழகன், பொள்ளாச்சி.

மதியழகன் நிலம் (19)ல் எழுதிய விபரங்களைப் படித்தீர்கள் என்றால் விளங்கி விடும். பரவாயில்லை மீண்டும் விபரம் தருகிறேன்.

கோவை மாவட்டத்தில் கிட்டத்தட்ட பத்து வட்டங்களில் பஞ்சமி நிலங்கள் உள்ளன என்று தெரிய வருகிறது. எந்தெந்த ஊர் என்று தெரியவில்லை. தமிழகமெங்கும் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக உள்ளன. அவைகள் எந்தெந்த மாவட்டத்தில், வட்டத்தில், கிராமத்தில் உள்ள புல எண்கள் என்று அறிவது மிகவும் சிரமம். நிறைய பொருட்செலவும், நேரமும் எடுக்கும். இருப்பினும் நிலம் வாங்கும் போது எளிதில் கண்டுபிடித்து விடலாம். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அது எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் சூட்சுமம்.

பஞ்சமி நிலங்களை வேற்று வகுப்பினர் வாங்கினால் அது தானாகவே அரசுக்குச் சொந்தமாகி விடும். அரசு எந்த வித இழப்பீட்டினையும் தராது. அரசு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எந்த கோர்ட்டில் வழக்குப் போட்டாலும் ஒரே பதில் தான் அது  பஞ்சமி நிலம். தலித் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத் தவிர வேறு எவருக்கும் அந்த நிலத்தில் அனுபோக பாத்தியமோ எதுவுமோ கிடையாது. சுப்ரீம் கோர்ட் சென்றாலும் இதுதான் பதில்.

ஆகவே நிலம் வாங்கும் போது தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு வாங்குவது சாலச் சிறந்தது.

Friday, June 17, 2016

நிலம் (19) - பஞ்சமி நிலங்களை வாங்கலாமா?

இன்றைக்கு வெகு முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். சொத்துக்கள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது. பலரும் இதைக் கவனிப்பதில்லை. ஏனென்றால் இதைப் பற்றிய புரிதலும் விஷயமும் யாருக்கும் தெரிவதில்லை. 

சமீபத்தில் என்னுடைய நண்பர் தன்னுடன் ஒருவரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். விஷயம் என்னவென்று கேட்டேன். கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டார். சிறிது நேரம் அழட்டும் என்று விட்டு விட்டேன். பின்னர் விஷயத்தைக் கேட்டேன்.

தன் வாழ் நாள் சம்பாத்தியத்தில் அவர் சுமார் 4 ஏக்கர் நிலத்தினை கிரையம் பெற்றிருப்பதாகவும், கிரையம் பெற்று சுவாதீனத்தில் இருந்து வந்த சொத்தின் மீது தற்போது வழக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சொன்னார். 

“என்ன காரணம்?” என்றேன். 

”என்னவோ பஞ்சமி நிலங்கள் என்கிறார்கள்” என்றார். 

“நான் கிரையம் பெற்ற போது லீகல் ஒப்பீனியன் பார்த்துதான் தான் வாங்கினேன் என்றார்”. 

”வக்கீல் பஞ்சமி நிலங்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மட்டுமே அனுபவிக்க முடியும் என்றும் வேறு எந்த வகுப்பினரும் பயன்படுத்த முடியாது என்றும் சொல்கிறார்” என்றார். ”என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று மீண்டும் கண்ணீர் விட ஆரம்பித்தார்.

அவரிடம் கவலைப்பட வேண்டாம், உங்கள் பணத்தை முழுவதுமாகப் பெற்று விடலாம் எனவும், அதற்கு பல வழிகள் இருக்கின்றன எனவும் சொல்லி சமாதானப்படுத்தினேன். 

”பஞ்சமி நிலங்கள் என்றால் என்ன சார்? விளக்கம் தர முடியுமா?” என்றார்.

”கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம்?  அது அவர் தவறல்ல, ஏதோ  மாட்டிக் கொண்டார் சரி செய்து கொடுத்து விடலாம்” என்று நினைத்துக் கொண்டேன்.

இனி பஞ்சமி நிலங்கள் என்றால் என்ன என்பது பற்றிப் பார்க்கலாம்.

1981 ஆம் வருடம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்ட்ராக இருந்த டெரமென் ஹீர் என்பவர் தலித் தாழ்த்தப்பட்ட மக்களின் வெகு மோசமான வாழ்க்கைத் தரத்தினையும், நிலச் சுவான் தார்களால் அவர்கள் கொத்தடிமையாக வாழும் கொடுமையும், தலித் வகுப்பினரை முன்னேறச் செய்வதற்கு ஒரு திட்ட அறிக்கையைத் தயாரித்து பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி வைத்தார். பெரும் நிலக்கிழார்களால் கொத்தடிமையாக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வந்த தலித் மக்களின் வாழ்வாதாரத்தினையும், சமூகத்தில் அவர்களுக்கு தகுந்த மரியாதை கிடைப்பதற்காகவும் 1892ம் வருடம் பிரிட்டிஷ் அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் சுமார் 12,00,000 ஏக்கர் நிலத்தினை வழங்குவதற்காக டிப்பரஸ்டு கிளாஸ் லேண்ட் ஆக்ட் 1892 (Depressed Class Land Act 1892) பிரிட்டிஷ் பார்லிமெண்டில் சட்டம் கொண்டு வந்தது. இந்த நிலத்தினைத்தான் பஞ்சமி நிலங்கள் என்று  சொல்கிறோம்.

இந்த பஞ்சமி நிலங்களை பத்து ஆண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, லீசுக்கு விடவோ, மாற்றம் செய்யவோ கூடாது. பத்து ஆண்டுகள் கழித்து தலித் வகுப்பினருக்கு மட்டுமே மாற்றம் செய்து கொடுக்கலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் வேற்று வகுப்பினருக்கு விற்கவோ, லீசுக்கோ, குத்தகைக்கோ முடியாது. அவ்வாறு செய்தால் அந்த ஒதுக்கீடு ரத்துச் செய்யப்பட்டு அரசு கையகப்படுத்தி விடும் என்று சில கண்டிஷன்கள் அந்தச் சட்டத்தில் இருந்தன. அவ்வாறு திரும்பப் பெறப்படும் நிலத்திற்கு அரசு எந்த வித இழப்பீடும் கொடுக்காது என்பது மேலும் ஒரு முக்கியமான விஷயம்.

இந்த நிலத்தினை வேறு எவரும் வாங்கவோ விற்கவோ முடியாது. ஆனால் என்ன நடக்கிறது? இது பற்றிய விபரங்கள் தெரியாதவர்களைப் பயன்படுத்திப் பத்திரங்களை உருவாக்கி கிரையம் செய்து கொடுத்து விடுகின்றனர். ஒரு சிலர் தெரிந்தே இந்த வேலையில் ஈடுபடுகின்றனர். பெரும்பான்மையான மக்களுக்கு பஞ்சமி நிலங்கள் என்றால் என்னவென்றே தெரியாது. தெரியாத காரணத்தால் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல ஒரு சில விஷமிகள் போலிப் பத்திரங்களை உருவாக்கி விடுகின்றார்கள். அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விட முடியாதவாறு பல்வேறு ஆவணங்களை உருவாக்கி விடுகின்றனர். விளைவு பிரச்சினை வந்து விடுகின்றது.

ஆகவே நண்பர்களே சொத்துக்கள் வாங்கும் முன்பு வெகு கவனமாக ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க.