ஒரு நாட்டின் தலையாய கடமை என்பது, தன் நாட்டு மக்களுக்கு மிகச்சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தருவதாகும்.
நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் ஓர் அரசு, தன்னுடைய கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் மூலமாக மக்களுக்கு மிகச்சிறந்த வாழ்வியலைத் தர வேண்டும்.
அந்த நோக்கத்துடன்தான் அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கே வருகிறார்கள்.
அதற்காகவே மக்களிடம் சென்று தங்களுடைய கொள்கைகளை விவரித்து, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, உங்கள் வாழ்க்கையை வளப்படுத்துவோம்" என்று தேர்தல் வாக்குறுதி அளித்து வாக்குகளைப் பெறுகிறார்கள். இது ஜனநாயகத்தின் அடிப்படைத் தேர்தல் முறை என்பதை நாம் அறிவோம்.
ஆனால், ஓர் அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, (இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும்) அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு நிறைவான வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறதா என்று கேட்டால், "இல்லை" என்றே சொல்ல வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சமூகமும், குறிப்பிட்ட சில பிரிவினரும் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். "எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்" என்ற கோட்பாடு இந்தியாவில் இதுவரை நிறைவேறவே இல்லை.
இதன் காரணத்தை யோசித்துப் பார்த்தால், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் ஆட்சியாளர்களின் தவறான வழிநடத்துதலே முதன்மைக் காரணமாகத் தெரிகிறது.
மக்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகளைப் பற்றி அவர்கள் சிந்திப்பதே இல்லை;
தங்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் மட்டுமே முக்கியம் என்று நினைக்கிறார்கள். இவர்களின் கொள்கைகள் மக்களின் அன்றாடப் பசியைத் தீர்க்கவோ அல்லது அவர்கள் நிம்மதியாக உறங்குவதற்குக் தங்குமிடம் (வீடு) தரவோ பயன்படவில்லை என்பதே உண்மை.
இதைச் சரி செய்ய முடியுமா என்றால், நிச்சயமாக முடியும். இந்த உலகத்தில் முடியாதது என்று எதுவுமே இல்லை. இதை எவ்வாறு சரி செய்வது என்பதை இனிவரும் பதிவுகளில் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
இப்பதிவைப் போலவே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட பலர், எழுதி இருக்கிறார்கள், எழுதி வருகிறார்கள். இந்தப் பதிவினால் என்ன பயன் என்று நினைக்க கூடும்.
இது பலர் எழுதிய பதிவல்ல. இது வித்தியாசமானது. வேறுபாடானது. அவசியம் தொடர்ந்து படியுங்கள்.

0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.