குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ஜனநாயகம். Show all posts
Showing posts with label ஜனநாயகம். Show all posts

Friday, June 19, 2026

எல்லோருக்கும் எல்லாமும் - ஒரு சிறந்த ஜனநாயகத்திற்கான மக்கள் பங்களிப்பு (2)



"எல்லோருக்கும் எல்லாமும்" என்ற நிலையை எட்ட, ஒரு மிகச்சிறந்த ஜனநாயக நாட்டில் மக்களின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 

"மக்கள் எவ்வழியோ, மன்னன் அவ்வழி" என்பார்கள். அதைப்போல, மக்களின் தேவைகள், மனநிலை மற்றும் எண்ணங்கள் எவையோ, அவைதான் ஒரு மிகச்சிறந்த ஜனநாயகத்தை உருவாக்க முடியும்; அதற்கு அடிப்படையான காரணமாகவும் இருக்க முடியும்.

இந்த அடிப்படையில் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றை ஒன்றுதான்: முதலில் கதை கேட்பதையும், கதை சொல்வதையும் நிறுத்துங்கள். உலகிலேயே மிக மிக பிரபலமான, அதிகாரம் மிக்க, ஆனால் முழு உண்மையற்ற ஒரு விஷயம் உண்டென்றால் அது கதை சொல்வதும் கதை கேட்பதும்தான்.

மனிதர்கள் தோன்றி எத்தனையோ காலங்கள் ஆகிவிட்டன.

ஆரம்ப காலத்தில் மனிதர்களுக்கு எழுத்தறிவோ, இலக்கண அறிவோ எதுவுமே இருந்ததில்லை.

மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் பின்னரே ஒலிகள், குறிகள், மொழிகள், எழுத்துக்கள் போன்றவை உருவாகி, தொடர்ந்து செம்மைப்படுத்தப்பட்டு ஒரு முழுமையான வடிவத்தைப் பெற்றன.

இந்த வடிவங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்த்தவை கதைகள்தான்.

கதைகள் என்பவை சாதாரணமானவை அல்ல. அது ஒரு மிகச்சிறந்த, அதிகாரம் மிக்க, ஒவ்வொருவருக்குள்ளும் மிக அந்தரமாக ஊடுறுவும் தன்மை கொண்ட, மிக மிக வலுவான ஊடகம் (Medium) ஆகும்.

இந்தக் கதை கேட்பதையும் கதை சொல்வதையும் மனிதன் எப்போது நிறுத்துகிறானோ, அப்போதே அவன் பிறரின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

நாம் ஏன், எதற்கு என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால் கதைகளில் நாம் அவ்வாறு கேட்பதில்லை. அது கதை என்று நிறுத்தி விடுகிறோ. நிலாவில் பாட்டி கதை இன்றைக்கும் பலரின் மனதில் அச்சாணி போல பதிந்திருக்கும். இதை ஆராய்ந்து பார்த்திருக்கிறோமா என்றால் இல்லை. ஆனால் நிலாவைப் பார்த்ததும் பாட்டி கதை நினைவுக்கு வந்து விடும். இப்படித்தான் இந்தக் கதைகள் மனிதர்களின் வாழ்வியலை சீர்குலைக்க ஆரம்பித்தன.

ஒவ்வொருவரும் தாய், தந்தையரும் கதைகள் சொல்கிறார்கள். ஆனால் இந்தக் கதைகளின் உண்மை என்னவென்று யாருக்கேனும் தெரியுமா? என்றால்  தெரியாது. தேவையில்லை ஏனெனில் அது கதை. அப்படியான கதைகள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய அழிவை உண்டாக்கி இருக்கின்றன என வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

ஒரு நல்ல ஜனநாயகத்தையும், நல்லதொரு அரசாட்சியையும் நாம் உருவாக்க வேண்டும் என்றால், நாம் முதலில் இந்தக் கதை சொல்வதிலிருந்தும், கதை கேட்பதிலிருந்தும் விடுபட வேண்டும்.

உண்மையான ஜனநாயகம் என்பது ஒவ்வொரு மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் அப்படித்தான் ஜன நாயக ஆட்சி உருவாக்கப்பட்டிருக்கிறதா?

சிந்தியுங்கள் !

எல்லோருக்கும் எல்லாமும் - உண்மையான ஜனநாயகத்திற்கான தேடல் (1)




ஒரு நாட்டின் தலையாய கடமை என்பது, தன் நாட்டு மக்களுக்கு மிகச்சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தருவதாகும். 

நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் ஓர் அரசு, தன்னுடைய கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் மூலமாக மக்களுக்கு மிகச்சிறந்த வாழ்வியலைத் தர வேண்டும். 

அந்த நோக்கத்துடன்தான் அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கே வருகிறார்கள். 

அதற்காகவே மக்களிடம் சென்று தங்களுடைய கொள்கைகளை விவரித்து, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, உங்கள் வாழ்க்கையை வளப்படுத்துவோம்" என்று தேர்தல் வாக்குறுதி அளித்து வாக்குகளைப் பெறுகிறார்கள். இது ஜனநாயகத்தின் அடிப்படைத் தேர்தல் முறை என்பதை நாம் அறிவோம்.

ஆனால், ஓர் அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, (இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும்) அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு நிறைவான வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறதா என்று கேட்டால், "இல்லை" என்றே சொல்ல வேண்டும். 

ஒரு குறிப்பிட்ட சமூகமும், குறிப்பிட்ட சில பிரிவினரும் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். "எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்" என்ற கோட்பாடு இந்தியாவில் இதுவரை நிறைவேறவே இல்லை.

இதன் காரணத்தை யோசித்துப் பார்த்தால், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் ஆட்சியாளர்களின் தவறான வழிநடத்துதலே முதன்மைக் காரணமாகத் தெரிகிறது. 

மக்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகளைப் பற்றி அவர்கள் சிந்திப்பதே இல்லை; 

தங்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் மட்டுமே முக்கியம் என்று நினைக்கிறார்கள். இவர்களின் கொள்கைகள் மக்களின் அன்றாடப் பசியைத் தீர்க்கவோ அல்லது அவர்கள் நிம்மதியாக உறங்குவதற்குக் தங்குமிடம் (வீடு) தரவோ பயன்படவில்லை என்பதே உண்மை.

இதைச் சரி செய்ய முடியுமா என்றால், நிச்சயமாக முடியும். இந்த உலகத்தில் முடியாதது என்று எதுவுமே இல்லை. இதை எவ்வாறு சரி செய்வது என்பதை இனிவரும் பதிவுகளில் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.  

இப்பதிவைப் போலவே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட பலர், எழுதி இருக்கிறார்கள், எழுதி வருகிறார்கள். இந்தப் பதிவினால் என்ன பயன் என்று நினைக்க கூடும். 

இது பலர் எழுதிய பதிவல்ல. இது வித்தியாசமானது. வேறுபாடானது. அவசியம் தொடர்ந்து படியுங்கள்.

Monday, March 23, 2026

போலி கருத்துக்கணிப்புகள்


எனக்கு சமீபத்தில் சென்னையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு பெண், சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படிக்கும் மாணவி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.  

அரசியல் கட்சிகள் பற்றிய கருத்துக்கணிப்பிற்கு என்னிடம் இருந்து சில தகவல்கள் வேண்டும் என்றார். தொடர்ந்து நான் சிங்கநல்லூர் தொகுதியைச் சேர்ந்தவரா எனக் கேட்டார். 

இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. நான் உடனடியாக அவரிடம் உரையாடலை நிறுத்தச் சொன்னேன். பல்கலைக் கழகத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதை அறிந்தேன். 

மக்களிடம் இருந்து தகவல்களை சேகரிக்க, அடையாளம் தெரியாத நபர்களால் பணம் கொடுத்து செய்யப்படும் முயற்சி போல் தெரிகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றே நான் நினைக்கிறேன்.

சமீபகாலமாக, எனக்கு இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் வருகின்றன. மேலும் சமூக வலைதளங்களில் தனிமனித ஒழுக்கம் மீதான தாக்குதலும், வன்முறையான செய்திகளும், போலியான செய்திகளும் ஒவ்வொரு கட்சித் தலைவர்களைப் பற்றி பரப்பபடுகின்றன. அவர்களில் ஒரு சிலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பரப்பிய வதந்தியும், பொய்யும் அப்படியே தான் இருக்கும்.

பல இலட்சக்கணக்கான போலி ஐடிக்கள் மூலம் மக்களிடம் எளிதில் ஊடுவுகின்றார்கள் இவ்வகையான போலி தொழிலாளர்கள். தனி மனித தாக்குதல், கட்சிகள் மீதான அவதூறுகள், தலைவர்களின் மீதான போலிச் செய்திகள் என உலகெங்கும் பொய்களையும், வதந்திகளையும் பரப்பி வருகிறார்கள் ஒரு சில தேர்தல் தொடர்பான நிறுவனங்கள். இது அனுமதிக்கப்பட கூடாது. 

சமீப காலமாக தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் இதர தன்னாட்சி அமைப்புகள் அரசியல் அதிகாரத்தினால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாகவும் அல்லது கட்டுப்படுத்தப்படுவதாகவும்  பல செய்திகள் மூலம் தெரிகிறது. இது இந்தியாவில் நடக்கும் தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் ஜனநாயகத்தின் செயல்பாடுகள் குறித்து பெரும் கவலைகளை எழுப்புகிறது. பல எதிர்கட்சிகளின் கோரிக்கைகளை இடது கையால் புறம் தள்ளுகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் என்கிறது பல செய்திகள்.  ஆளும் கட்சிக்குச் சாதகமான பல சதி வேலைகளையும் செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் யாருக்கும் எந்தப் பதிலையும் தராது கள்ள மவுனத்தில் இருக்கிறது தேர்தல் கமிஷன் என்கிறார்கள் பல அரசியல் பார்வையாளர்கள். 

இதனால் இந்திய குடிமக்கள் ஜனநாயகத்தின் மீதான நிச்சயமற்ற தன்மையை உணர்வதோடு, இந்திய அரசிலமைப்பின் மீது நம்பிக்கையை இழக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலை மேம்படும் என்றும் எதிர்காலத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் மீட்டெடுக்கப்படும் என்றும் நம்புகிறேன்.

ஆகவே போனில் யாரேனும் அழைத்து கருத்துக் கணிப்பு எனக் கேட்டால் தவிர்த்து விடுங்கள். நாம் சொல்லும் ஒவ்வொரு செய்தியும், மறைந்திருந்து நம்மை அழிக்க வரும் போலிச் செய்திகளைப் பரப்பும் நயவஞ்சகக் கூட்டத்தின் நரித்தனமான வியாபாரம். சோஷியல் மீடியாக்கள் அதைத்தான் செய்கின்றன. யாருக்கும் எவரைப் பற்றியும் கவலையே இல்லை. ஆகவே வெகு கவனமாக எது நல்லது, யார் நல்லவர் என்பதில் கவனம் கொள்ளுங்கள்.

அரசியல் சார்பு அற்று நடு நிலையோடு சிந்தியுங்கள். இது நமது எதிர்கால சந்ததியினரின் நலனுக்கானது. 

மதமும், சாதியும் யாருக்கும் ஒரு சிறு பருக்கை கூட தராது. மனிதாபிமானும், கருணையுமே உலகினை என்றும் இயக்குபவை என்பதை மறந்து விடாதீர்கள்.

போலிச் செய்திளிடமிருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.

வளமுடன் வாழ்க.