குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, July 10, 2024

போன் கட்டண விலையேற்றம் - உண்மை என்ன?

ஜூலை 4 முதல் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் போன் ரீஜார்ஜ் மற்றும் கட்டணங்களை சுமார் 27 சதவீதம் அளவுக்கு விலையை உயர்த்தின. பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்காக கட்டணங்கள் உயர்த்தப்பட்டன என சோஷியல் மீடியாக்களில் பேசினார்கள். பிஜேபி தோற்றதற்காக இந்திய மக்களை பழிவாங்குவதற்காக இந்த நிறுவனங்கள் விலையை உயர்த்தின எனவும் பேசினார்கள். 

அரசியல், பழிவாங்கல் என்பதெல்லாம் பொதுமக்களின் பொதுப்பார்வை. இதற்குப் பின்னால் ஒரு மர்ம முடிச்சு உள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் லாபத்திற்காகத்தான் உருவாக்கப்பட்டன. பொதுமக்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு துறையில்  நிறுவனங்கள் முதலீடு செய்து விட்டு, இலவச சேவை செய்யமாட்டாரகள். லாபம் ஒன்றே அவர்களின் நோக்கம்.

இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு சொத்துக்கள் இருக்கும். அதை மூலதனமாக வைத்து தொழிலை ஆரம்பித்து, தங்களின் நிறுவனத்தை உருவாக்கி இருப்பார்கள். இந்த நிறுவனங்களுக்கு வங்கியில் கடன் இருக்கும். இந்தப் பணம் பொதுமக்களின் பணம். வங்கியில் இருக்கும் பணத்தை வட்டிக்குக் கொடுத்து, வங்கிகள் சம்பாதிக்கின்றன.

அடுத்து, பங்கு வர்த்தகத்தில் இவர்களின் நிறுவனம் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் என்பதால் பல முதலீட்டாளர்கள் இந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருப்பார்கள்.

இதற்கிடையில் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான சம்பளங்கள், அவர்களுக்கான சம்பள உயர்வுகள் மற்றும் இதர கட்டணங்கள், உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப நிர்வாகச் செலவுகள், கண்ணுக்குத் தெரியாத தொழில் போட்டியாளர்களைச் சமாளிப்பதற்கான செலவுகள், நடை முறைச் செலவுகள் என பல வகையான செலவுகளும் உண்டு.

இதையெல்லாம் சமாளித்து நிறுவனத்தை லாபத்தில் கொண்டு செல்ல வேண்டும். இதில் ஒரு இணைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பது நிறுவனங்கள் மட்டும் அல்ல. இந்திய மக்களின் வரிப்பணம் மற்றும் அவர்களின் முதலீடுகளும் இழக்கப்படும். இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ, ஷேர்கள் வைத்திருப்பவர்களோ கட்டண உயர்வை சரி என்பார்கள். ஏனெனில் அவர்கள் இந்த நிறுவனத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பொதுமக்களுக்கு கட்டண உயர்வு என்பது நஷ்டம். இவர்களுக்கு பெருத்த லாபமில்லை, ஆனால் நிறுவனம் லாபத்தில் இயங்க வேண்டும். அப்போதுதான் இவர்களால் பிழைக்க முடியும். இது அரசுக்குத் தெரியும். ஆகவே அவர்கள் வாய் மூடிக் கொள்வார்கள்.

போன் கட்டணம் உயர்ந்து லாபம் ஏற்பட்டால், இந்த நிறுவனங்களின் மீது முதலீடு செய்திருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இந்த நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தால் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படும். அதுமட்டுமல்ல வேலை இழப்பு உண்டாகும். பணியாளர்கள் நிறுவன சம்பளத்தை வைத்து வீட்டுக்கடனோ அல்லது கார்கடனோ எதுவோ வாங்கி இருப்பார்கள். வேலை இழந்தால் வங்கி ஜப்தி செய்து விடும். வங்கிக்கு இழப்பு உண்டாகும். இப்படி ஒரு சிக்கலான ஆனால் அவசியமான பொருளாதாரப் பிணைப்புகள் மக்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையில் உண்டு.

இதையெல்லாம் விட்டு வெளியேற முடியாது. இது தான் பொருளாதாரச் சங்கிலி. கட்டண உயர்வை நிறுத்தி வைக்க உத்தரவிட, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் முடியும். ஆனால் சிஸ்டம் அதைச் செய்ய அனுமதிக்காது. ஏனெனில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த நிறுவனங்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் செலவு செய்திருப்பார்கள். அவர்களுக்கு மக்களை விட நிறுவனங்களின் சாமர்த்தியம் தான் முக்கியமானது. மக்கள் எப்போதும் கட்டண உயர்வை எதிர்ப்பவர்கள். எதிராய்ப் பேசுவார்களே தவிர வேறு ஒன்றையும் மக்களால் செய்ய முடியாது என அரசுகளுக்கும், நிறுவனங்களுக்கும் தெரியும்.

இதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளனவா என்று நீங்கள் கேட்பீர்கள் எனத் தெரியும். இதோ கீழே த ரிப்போர்ட்டர்ஸ் கலெக்ட்வ் இணையதளம் வெளியிட்டுள்ள செய்திகள்.



மேலே இருக்கும் படங்களின் செய்திகள் இணைப்பு கீழே இருக்கிறது. இணைப்பைச் சொடுக்கி, படித்துக் கொள்ளுங்கள். ( Thanks : The Reporters Collective)


ஒவ்வொரு அரசுக்கும் மக்கள் நலன்கள் மீது அக்கறை இருக்காது. ஏனெனில் மக்கள் தேசமெனும் சங்கிலியில் கட்டப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் வரி கொடுத்தே ஆக வேண்டும். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நீங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் இருந்து அரசுகள் வரிகளைப் பிடுங்கிக் கொள்ளும். அதை உங்களால் நிறுத்த முடியாது. 

நாட்டின் நலன் முக்கியமாகும் போது, மக்களின் நலன் தியாகமாக்கப்படும். இதுதான் எல்லைகளுக்குள் உட்பட்ட ஒரு நாட்டில் வசிக்கும் மக்களின் எதார்த்த நிலை. நீங்கள் இந்தப் பூமியில் ஓரளவு சுகமாக வாழ வேண்டுமெனில் வரி கட்ட வேண்டும். எனக்கு அதெல்லாம் தேவையில்லை என்றால் பைத்தியமாக சாலைகளில் திரியலாம். அதற்கு மட்டும் அரசு அனுமதி உண்டு. பட்டினியாக கிடக்கலாம். அரசு ஏனென்று கேட்காது. அது தனி மனித சுதந்திரத்துக்குள் வந்து விடும்.  அனாதைகள், நாடோடிகள், பிச்சைககாரர்கள் ஆகியோரைப் பற்றி அரசுகள் எப்போதும் கண்டுகொள்வதில்லை. ஆனாலும் பல திட்டங்கள் இருக்கும். இருந்தாலும் அதையெல்லாம் அரசுகளால் நிர்வகிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் தன்மை அது. 

ஆகவே கட்டண உயர்வுகளை ஏற்றுக் கொண்டு, விதியேன்னு வாழ பழகிக் கொள்ள வேண்டும். யாரும் எதுவும் செய்யவும் மாட்டார்கள், செய்யவும் முடியாது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் உருவான கட்டமைப்பு என்ன தெரியுமா? இனி ஒரு அம்பானி, அதானி உருவாக முடியாது. அம்பானி ஒரு கட்சி என்றால் அதானி இன்னொரு கட்சியினால் வளர்க்கப்பட்டவர்கள். அரசியல் நடத்த இவர்கள் தேவை. இல்லையென்றால் நம்மிடம் எந்தக் கட்சியும் அரசியல் செய்ய முடியாது. நமது டிசைனுக்கு ஏற்றவாறு தான் கட்சிகளும் இருக்கும்.

அரசியல் என்றால் என்ன? மக்களுக்கு நாங்கள் நன்மை செய்வோ, மக்களின் வாழ்க்கையை உயர்த்தி, நல்ல நிலையில் வாழ வைப்போம், நாட்டை உயர்த்துவோம் என்பதுதான்.

ஆனால் இங்கு நடப்பது என்ன? எல்லாமே தலைகீழ் அல்லவா? இதுதான் எதார்த்தம். ஆகவே வாழப்பழகிக் கொள்ளுங்கள். 

நீங்கள் யாரும் உங்கள் வாழ்க்கையை வாழ்வதே இல்லை. நீங்கள் வாழ்வது அதிகார மிக்கவர்களால் உருவாக்கப்பட்ட வாழ்க்கை டிசைனுக்குள். உங்களுக்கு என தனிப்பட்ட வாழ்க்கை இங்கு இல்லவே இல்லை.

வளமுடன் வாழ்க.

10.07.2024

Tuesday, July 9, 2024

விதியே மதியா? சிலிர்க்க வைக்கும் ஓர் நிகழ்வு

அம்மணியின் மாதாந்திர செக்கப்புக்காக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு மூன்று மணி வாக்கில் உடன் சென்றிருந்தேன். ஒரே சத்தம். காதில் ஏர்போட்ஸ் மாட்டிக் கொண்டு, செக்கான் என்ற மலையாளப் படத்தில் மணிகண்டன் பெரும்பாடப்பு பாடிய பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். ஜூலை மாத காலச்சுவடு இதழைப் பிரித்தேன். பாட்டுக் கேட்டுக் கொண்டே படிப்பதில் எனக்கு அலாதி இன்பம்.

காலச்சுவடு இதழில் புத்தகப் பகுதியில் இசை எழுதிய ஒளவையாரின் கவித்துவ திரட்டு எனக் குறிப்பிட்டு வெளி வரப்போகும் ”களிநெல்லிக்கனி” என்ற புத்தகத்திலிருந்து ஒரு சில பகுதிகளை வெளியிட்டிருந்தார்கள்.  மூன்று வரிகள் கீழே.

// “விதியே மதி” என்கிறது ஒரு பாடல். துயர் பெருகி நிறையும் ஒரு வரி அது. எனில், எனக்கு இங்கு என்னதான் வேலை? என் குட்டிக்கரணங்களுக்கு என்னதான் பொருள்? நான் திட்டங்கள் தீட்டுகையில் பறக்கும் தீப்பொறி என்னுடையதில்லையா பாட்டி? // (நன்றி : காலச்சுவடு)

இசை கேட்டிருக்கும் இந்தக் கேள்வி நியாயமானதாகத் தோன்றியது எனக்கு. விதியே மதி எனில் வாழ்க்கையை சுலபமாகக் கடக்கலாமே என்றெல்லாம் எனக்குள் கேள்விகள் எழுந்தன.

செக்கான் பாடல் எனக்குள் ஒரு விதமான மோன நிலையைக் கொண்டு வந்தது. சிந்தனையற்று பாடலின் இசைக்குள் மூழ்கி இருந்தேன்.

அந்தப் பாடலை நீங்களும் கேளுங்கள்.


நிற்க.

ஒரு பிரபல அரசியல்வாதியால் ஞானி என்று புகழப்பட்டவர் எனது நண்பர். அவருக்கு ஏதோ பிரச்சினை. ஏதோ நினைவில் காரை எடுத்துக் கொண்டு அவர் தனியாக தங்கி இருக்க முயன்ற இடங்களுக்குச் சென்ற போதெல்லாம் ஏதேதோ தடைகள் வந்து, ஒரு வழியாக கோவைக்கு வந்து சேர்ந்தார். மதியம் போல வீட்டுக்கு வந்தார். 

ஜோதி சுவாமியைப் பார்க்க வேண்டுமென்றார். மாலையில் நானும் அவரும் சுவாமியைச் சந்திக்க கோசாலைக்குச் சென்றோம். 

குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது. சூரியனும் குளிருக்கு நடுங்கி மேகத்தின் போர்வையாக்கி மூடிக் கொண்டிருந்தான். வெள்ளிங்கிரி மலைகளில், தலையில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் வெண்ணிற முடி போல அருவிகள் கோடுகளாய் தெரிந்தன. பறவைகளின் சத்தம் ஆங்காங்கே கேட்டுக் கொண்டிருந்தன. கோசாலையில் ஏதோ ஒரு பசுங்கன்று ‘மே...மே’ என்று கத்தி அம்மாவைத் தேடிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஆசிரமத்திலிருந்து ஜோதி சுவாமி வந்தார். அவர் அப்போது மவுனத்தில் இருந்தார்.

நண்பர் சுவாமியிடம் தனது பிரச்சினைகளைப் பகிர்ந்தார். 

நானும் நண்பரும் ஜே.கிருஷ்ணமூர்த்தியை விரும்பிப் படிப்பவர்கள். நண்பர் பொருளாதாரத்தில் நிபுணர். உலகளவில் பெரும் புகழ் பெற்ற பொருளாதார ஆலோசகர்.  திருவண்ணாமலை ரமணர் மீது பக்தி கொண்டவர். 

நானும் அவரும் அடிக்கடி பல விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். அவரிடமிருந்து நான் கற்றது ஒன்று. பிரிவினை எதிலும் வேண்டாம் என்பார். அதன் அர்த்தம் எனக்குள் புதைந்து விட்டது. யாருடனும், எதுவுடனும் பிரிவினை அற்று இருப்பது என்பது துண்டிக்கப்பட்ட இயற்கையின் இழையோடு மனிதன் இசைவு கொள்ளும் நிலை அது. 

ஓஷோ மற்றும் ஜலாலுதீன் ரூமி, சூஃபிசம், ஜென் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பதால், கோவில்களுக்குச் செல்வதை நான் நிறுத்தி விட்டேன். அவரும் கூட அப்படித்தான்.

உருவ வழிபாட்டிலிருந்து விடுபட்டே ஆக வேண்டுமென்பதால் உள்ளுக்குள் உன்னைத் தேடு என்பதில் எனக்கு பெரும் அவா. அதற்காக எனது குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமி அருளிய “பேச்சைக் குறைத்து மூச்சைக் கவனி”யில் இருப்பவன். ஏதோ ஒரு சில நொடிகளில் ”நானை” இழக்கும் தன்மையில் இருக்கிறேன். அந்த நொடியில் நானுக்கும், அதை இழப்பதற்குமான பெரும் போராட்டத்திலிருந்து வெளியேற முடியாமல் தவிப்பவன். 

மனிதனுக்குள் எப்போதும் ஒரு ஆய்வு சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். அதனால் தான் அவன் அறிவியலில் இறைவன் பற்றிய மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க முனைந்து கொண்டிருக்கிறான்.

எனக்கும் அதே எண்ணம் தான். ஆய்வு மன நிலை. எனக்குள் ஒரு கேள்வி சலசலவென ஓடை போல சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. அது என்ன கேள்வி எனத் தொடர்ந்து படியுங்கள் தெரிந்து கொள்ளலாம்.

நண்பர்களே, ஓடை சத்தமிடுவதில்லை, தண்ணீரும் சத்தமிடுவதில்லை. 

கற்களுக்குள்ளும், தடைகளுக்குள்ளும் சென்று வெளியேறும் போது உண்டாவதினால் ஏற்படுவதே சலசலப்பு சத்தம் அல்லவா?

பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் மனிதனின் மனத்துக்குள் எழும் துன்பத்தின் விளைவாக பிதற்றுவதும் சத்தம் தானே?

நண்பரிடம் ஜோதி சுவாமி ஒரு சிவலிங்கத்தையும், அத்துடன் ஒரு நாகத்தையும் ஆற்றங்கரையோரம் நிறுவி பூசை செய்யுங்கள் என்று சொன்னார். ஏன் அவ்வாறு சொன்னார் என்பதற்கான காரணம் நண்பருக்கும் சுவாமிக்கும் மட்டுமே தெரியும் என்பதால் காரணத்தை விடலாம். 

திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன் பூண்டியில் சிவலிங்கமும், நாகமும் தயாராகி விட்டது. ஆற்றங்கரையோரம் நிறுவி பூசை செய்ய வேண்டுமே என்பதற்காக திட்டமிடல் செய்தார். ஓரிடத்தில் நிறுவ திட்டமிட்டு அதற்கான பீட வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு அரசியல்வியாதி அதை தடுத்திருக்கிறான். அதனால் வேறு பகுதியில் நிறுவ இடம் தேடி, அழகான அற்புதமான இடத்தில், வில்வமரத்தடியில் சிவலிங்கத்தையும், அருகில் நாகத்தையும் நிறுவி பூசை செய்து விட்டார்.

( நண்பர் நிறுவிய சிவலிங்கமும், நாகமும்)

ஏழு வரிகளில் விவரிக்கப்பட்ட இந்த நிகழ்வின் பின்னால் உள்ள உணர்வுகளை விவரிக்க முடியாது. சொற்களின் வழியாக மனிதனின் உணர்வுகளை முழுமையாக கடத்த முடியாது.  எழுத்துக்குள் மூழ்கும் போக்கு இப்போதெல்லாம் எவரிடத்தில் காண முடியவில்லை. சொற்களுக்குள் வாசம் செய்வது ஒரு மோன நிலை. சிவலிங்கத்தை நிறுவ நண்பர் பெரும் போராட்டத்தை நிகழ்த்தினார்.

சரி, ஏன் இந்தப் பதிவு என்பதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.

தற்போது சிவலிங்கம் இருக்கும் கோவிலின் பூசாரி - நான்கைந்து நாட்களுக்கு முன்பு - கோவிலில் சிவலிங்கம் ஒன்று பிரதிஸ்டை செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தாராம். அவரைச் சந்திக்க வந்த எவரோ ஒருவர், உன்னைத் தேடி ஒருவர் வருவார் என்று மட்டும் சொல்லி சென்றிருக்கிறார்.

இந்த நிகழ்வினை நண்பர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த போது, சிரித்து விட்டேன். நண்பருக்கு நான் ஏன் சிரித்தேன் என்று புரியவில்லை. அவரிடம் விளக்கம் சொன்னேன்.

காலச்சுவட்டில் நான் படித்த ‘விதியே மதி’ நினைவுக்கு வந்து விட்டது. மனிதனின் செயல்கள் ஒவ்வொன்றும் முன்பே நிர்ணயிக்கப்பட்டது என்பார் ஜோதி சுவாமி. ஒரு மனிதன் கை அசைத்தலும் கூட முன்பே நிர்ணயிக்கப்பட்டது என்பார் கூடுதலாக. அப்போதெல்லாம் இதென்ன கூத்து என நினைத்துக் கொள்வேன்.

ஜோதி சுவாமியும் நானும் ஆற்றுக்குள் குளிக்கச் செல்வதுண்டு. அப்போது மண்ணில் நானொரு சிவலிங்கத்தை உருவாக்குவேன். சுவாமி இலைகள் மற்றும் மலர்களைக் கொய்து வந்து தருவார். நீர் சொட்டும் நிலையில் ஆற்றங்கரையோரமாய் மண்ணால் உருவான சிவபெருமானுக்கு வழிபாடு செய்வது வழக்கம். குளித்து விட்டு வந்து விடுவோம்.

பரிகாரமாய் இருக்கும் நிலையில் சுவாமி ஏன் சிலை செய்யச் சொன்னார்? என்றொரு கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.

அவ்வப்போது ஒளவையாரின் ‘விதியே மதி’ என்ற வார்த்தைகளும் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது.

நண்பர் பூசாரியின் விருப்பத்தைப் பற்றி என்னிடம் சொன்ன போது, என்னை அறியாமல் சிரித்து விட்டேன்.  எழுத்தாளர் இசை கேட்டிருந்த கேள்விக்கு விடையும் கிடைத்தது.

எழுத்தாளர் இசை கேட்டிருந்த கேள்விக்கு பதில் இதோ...!

இசையின் கேள்வி :

// “விதியே மதி” என்கிறது ஒரு பாடல். துயர் பெருகி நிறையும் ஒரு வரி அது. எனில், எனக்கு இங்கு என்னதான் வேலை? என் குட்டிக்கரணங்களுக்கு என்னதான் பொருள்? நான் திட்டங்கள் தீட்டுகையில் பறக்கும் தீப்பொறி என்னுடையதில்லையா பாட்டி? // (நன்றி : காலச்சுவடு)

இதற்கான பதில் : குட்டிக்கரணங்களும், திட்டங்கள் தீட்டுவதும் விதியே....!

நண்பர்களே, இந்த நிகழ்வின் பின்னாலே இருக்கும் மர்மத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

பூசாரியின் விருப்பத்துக்காகவா என் நண்பருக்கு பிரச்சினை உண்டானது?

அதற்காகவா சென்னையிலிருந்து கிளம்பிய அவரை, வேறு எங்கும் தங்க விடாமல் என்னை நோக்கி வர வைத்தது?

பூசாரியின் விருப்பத்துக்காகவா இல்லை நண்பரின் பிரச்சினை தீர்வதற்காகவா ஜோதி சுவாமியைச் சந்தித்தார்? இதில் எது சரியானது? நண்பரின் பிரச்சினையா? பூசாரியின் விருப்பமா? 

நண்பர் பிரச்சினையிலிருந்து விடுபட சிவலிங்கம் தயரானதா? இல்லை பூசாரியின் விருப்பத்திற்காக தயாரானதா?

இவ்வாறு கேள்விகள் எழுகின்றன அல்லவா?

இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் என்ன? 

விதியே மதி...!

ஒளவையார் பாட்டி சும்மா எழுதி வைக்கவில்லை. 

வளமுடன் வாழ்க ...! (இலக்கணப்படி இப்படித்தான் சொல்ல வேண்டுமாம்)

மீண்டும்

வளமுடன் வாழ்க..!

09-07-2024

* * *

Monday, July 1, 2024

நரலீலைகள் (16) - இந்தியர்களுக்கு தேர்தல் வெற்றிப் பரிசு

இதையெல்லாம் சாதாரணமாக கடந்து போய் விட வேண்டும்.  இப்படியான செய்திகள் ஒரு சில நாட்களுக்கு மட்டும் பாதிப்பை உண்டாக்கும். பின்னர் வழமைபோல கடந்து சென்று விடுவோம் என்பதை நினைவில் நிறுத்துக - நாவல் ஆசிரியர்.

இனி செய்தி ...!

ஜூலை 2015 - ஜூன் 2016 மற்றும் அக்டோபர் 2022 - செப்டம்பர் 2023 ஆகிய ஏழு ஆண்டுகளில்  கார்ப்பரேட் அல்லாத - உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள 18 லட்சம் நிறுவனங்கள் முற்றாக காணாமலே போயிருக்கின்றன. 54 லட்சம் வேலைகள் பறிபோயுள்ளன. 2015 - 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தேசிய புள்ளியியல் துறையின் 73வது சுற்று சர்வே விபரங்களுடன் ஒப்பிடப்பட்டு இந்த புதிய விபரங்கள் வெளி யிடப்பட்டுள்ளன.  2015-2016 காலக்கட்டத்தில் கார்ப்பரேட் அல்லாத உற்பத்தி நிறுவனங்கள்  1.97கோடி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 2022 - 2023 காலத்தில் 1.78கோடியாக குறைந்துள்ளது.  9.3 சதவீத வீழ்ச்சி ஆகும்.  வேலை செய்து வந்த  தொழிலாளர்களின் எண்ணிக்கை 3.60 கோடியிலிருந்து 3.06 கோடியாக - கிட்டத்தட்ட 15சதவீதம்  வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

கார்ப்பரேட் அல்லாத சிறு தொழிற்சாலைகள், தனிநபர் உரிமையாளராக இருந்து நடத்தும் தொழிற்சாலைகள், கூட்டுச்சேர்ந்து நடத்தும் தொழிற்சாலைகள் மற்றும் முறைசாரா துறை சார்ந்த பல்வேறு உற்பத்தி தொழிற்சாலைகள் தான் மிக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி வருபவை. 

ஈவிரக்கமில்லாமல் அமலாக்கிய பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி மற்றும் திட்டமிடப்படாத கோவிட் பொதுமுடக்கம் ஆகியவற்றால் சிறு, குறு, நடுத்தர தொழிற்துறையையும், கார்ப்பரேட் அல்லாத நிறுவனங்களையும் நிலைகுலைந்தன. இன்று வரையிலும் இந்த நிறுவனங்களால் விடுபட முடியவில்லை. இவ்வாறு தீக்கதிர் 30 ஜூன்,2024 தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாமானிய மக்கள் வேலையிழப்பினாலும், உயராத சம்பளத்தினாலும், கடுமையாக உயர்ந்த விலைவாசிகளாலும் பாதிக்கப்பட்டு நொந்து வேதனையில் உழல்கின்றனர்.



இந்திய தொலைத்தொடர்புத் துறையில் தனி ஆதிக்கம் செலுத்தி வரும் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி.ஐ ஆகிய தனியார் நிறுவனங்கள் - புதிய அரசு அமைந்தவுடன் முன்பிருந்த தொலைபேசிக் கட்டணத்தை 28 சதவீதம் வரைக்கும் உயர்த்தியுள்ளது. தேர்தல் வரைக்கும் மூச்சே காட்டாமல் இருந்த நிறுவனங்கள், மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறிப்போன தொலைபேசிக் கட்டணத்தை உயர்த்தி - தேர்தல் வெற்றிப் பரிசாக வழங்கி இருக்கின்றன.

யாரும் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் கேட்ட தொகையைக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இந்தியர்கள். தனியாருக்கு நிகராக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அரசு வளர்க்கவில்லை. 

இந்திய மக்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கிய பரிசைக் கீழே பாருங்கள். தேர்தலுக்குப் பிறகான வெற்றிப் பரிசை மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள்.

கேட்கக்கூடாத கேள்வி : தேர்தலுக்கு இந்த நிறுவனங்கள் ஏதும் டொனேசன் கொடுத்து இருக்குமோ என்றெல்லாம் கேள்விகள் மனதுக்குள் எழவே கூடாது. இது தொழில் நிமித்தமான விலை உயர்வு. அடுத்த வருடம் இலவச அழைப்புகள் நீக்கப்படுமோ என்ற கேள்வியும் எழக்கூடாது. 

வாழ்த்துகள்.



இத்துடன் கட்டுரை முடிந்தது.

விரைவில் அசாசிலின் ராதையுடனான காதல் தொடரும்...!


Sunday, June 23, 2024

மோடி கா பரிவாரை நீக்குங்கள் - மோடி வேண்டுகோள்

இந்தியாவின் ஆன்மாவை தேர்தல் கமிஷன் கொன்று விட்டது என்று இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் கண்கூடாக காட்டியது. தேர்தல் கமிஷனரைத் தேர்ந்தெடுக்கும் கமிட்டியில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியை ஒரு புதிய மசோதா (Chief Election Commissioner and Other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Act, 2023) மூலம் நீக்கினார் மோடி. 

எதிர்கட்சித் தலைவர், பிரதமர், பிரதமரால் நியமிக்கப்படும் ஒரு மத்திய மந்திரி இவர்கள் மூவரும் தேர்தல் கமிஷனரைத் தேர்ந்தெடுக்கலாம் என விதியை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவே மாற்றினார். 

அப்போதே தெரிந்து விட்டது இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜன யகத்துக்கும், தேர்தல் கமிஷனர்களுக்கும் இடையில் நடக்கப்போகும் யுத்தம் என.

இந்த யுத்தத்தில் மக்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிகாரத்தின் முன்னால் ஜனநாயகம் கொல்லப்படும் என்பது வரலாறு. ஆளும் கட்சிக்கு வசதியாக தேதிகள் அறிவித்தது கமிஷன். தேர்தல் சதித்திட்டம் வெற்றிகரமாக தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் பரப்புரைக்குச் சென்ற மோடி - மத வெறுப்புப் பேச்சுக்களைப் பேசினார். ஒரே ஒரு அறிக்கை மூலம் தேர்தல் கமிஷன் மெய் வாய் மூடிக் கொண்டது.

ஒருவர் பிஜேபிக்கு பல ஓட்டுக்களைப் போட்டதாக வீடியோ போட்டார். அவரைக் கைது செய்தார்கள். வீடியோ போடாத பலர்களின் ஓட்டுக்கள் பற்றி யாருக்குத் தெரியும். ஒரு எம்.பி வோட்டிங் மிஷினையே அடித்து நொறுக்கினார். முஸ்லீம்கள் ஓட்டுப் போட விடாமல் பெயர்களை நீக்கம் செய்தனர். அடித்து விரட்டப்பட்டனர்.

மார்ச் 16 முதல் மே 30ஆம் தேதி வரை ரூ.1,100 கோடி மதிப்புள்ள ரொக்கமும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிடிபட்டதைக் காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். கடந்த மக்களவைத் தேர்தலில் ரூ.392 கோடியாக இருந்தது. டெல்லியிலும் கர்நாடக மாநிலத்திலுமே அதிக அளவில் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட ரூ.200 கோடி மதிக்கத்தக்க ரொக்கமும் தங்கமும் கைப்பற்றப்பட்டன. கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று சபதமெடுத்தவர்கள் வாய் மூடி நின்றனர். எல்லோரும் கள்ள மவுனம் காத்தனர்.

அரசு அமைப்புகள் மட்டுமின்றி காசுக்கு கூவும் மீடியாக்களும் பொய்களாகப் பேசிப் பேசி வங்கிக் கணக்குகளை நிரப்பிக் கொண்டனர். எங்கும் பணம், எதிலும் பணம், பணம் இல்லை என்றால் அதிகார மிரட்டல், ஊழல்வாதிகளை மோடி வாஷிங்க் மெஷின் மூலம் துவைத்தல் ஆகியவை நடைபெற்றது.

உலகமே வேடிக்கை மட்டுமே பார்த்தது. 

ஒவ்வொரு நோடியும் லட்சக்கணக்கான போலிச் செய்திகளை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டனர். சோஷியல் மீடியா அதிபர்கள் எதைக் காட்ட வேண்டும், எதைக் காட்ட கூடாது என்பதில் கவனமாய் இருந்து கல்லாவை நிரப்பினர். 

ஒவ்வொரு குடிமகனும் தேசத்தை நேசிப்பவராக இருக்க வேண்டும் என்று வாய் கூசாமல் பேசுவார்கள். ஆனால் அரசியல் கட்சிக் குடிமகன்கள் அரசமைப்பையே கொன்று கொண்டிருக்கிறார்கள்.

இந்ததேர்தல் 2024 இந்தியாவின் ஜனநாயகம் கொல்லப்பட்ட நாள். மக்கள் தேர்தல் கமிஷனர்களிடம் தோற்றுப் போன நாள் ஜூன் 7,2024. 

நடத்திய நாடகம் வெற்றி பெற்றதற்காக மோடி அவர்கள் விடுத்த வேண்டுகோள் இதோ !

மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் பிரசாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக 'மோடி கா பரிவார்' என்பதைச் சேர்த்துக்கொண்டனர். அதிலிருந்து நான் நிறைய பலம் பெற்றேன். இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்.

இதுவும் சாதனைதான். நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். இதன் மூலம் நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடகப் பக்கங்களின் பெயரிலிருந்து 'மோடி கா பரிவார்' என்பதை நீக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் பெயர் வேண்டுமானால் மாறலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரே பரிவார் என்ற நமது பிணைப்பு வலுவாகவும் உடைக்கப்படாமலும் இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இனி நாடகம் இனிதே தொடரும். 

வரிகள் உயரும், வரிப்பிடுங்கல் தொடரும், விலை வாசி உயரும், சட்டங்கள் திருத்தப்படும், உயர் சாதியினர் ஆட்டம் போடுவர், கோவில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படும், கீழ் சாதியினர் படிக்க முடியாது, படிக்க கடன் வாங்கவும் முடியாது, கல்வி படிக்க விடாமல் தடுக்கப்படுவர், இந்தியா மக்கள் கடனாளி ஆவர்.

எங்கெங்கும் உயிர்பலிகள் நடக்கும். இயற்கை மக்களைப் பலி வாங்கும். வேலை இருக்காது. வேலையும் கிடைக்காது. மோசடிகள் அதிகமாகும். இந்தியாவெங்கும் மக்கள் கடும் துயர்களை அனுபவிப்பர்.

இதெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டுமெனில் மக்கள் அற வழி நடக்க வேண்டும். அறத்தின் பாதையை தம் வாழ்க்கைப் பாதையாக கொள்ள வேண்டும். அறமற்றவர்களை அண்ட விடாமல் துரத்திட வேண்டும். எது அறம், எது உண்மை என கண்டறிய வேண்டும். இதெல்லாம் நடந்தால் இந்தியா மகிழும்.


மாணவர்களுக்கு மரணவலி தரும் நுழைவுத்தேர்வுகள்

இந்தியர்கள் நோயில் சிக்கி சின்னாபின்னமாக போக வேண்டுமென்பதற்காக கொண்டு வரப்பட்ட சதித்திட்டத்தின் பெயர் நீட். நீட் மருத்துவக் கல்வியை கோடீஸ்வரர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் உரித்தாக்குகிறது. நீட் மூலம் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பை எட்டாக் கனியாக்கி, ஏழைகளை பரம ஏழைகளாக, பஞ்சைப் பராரிகளாக வைத்திருக்க வேண்டுமென்பதில் எல்லையற்ற இன்பம் கொண்டிருக்கிறார்கள்.

ஏழைகள் இல்லாத இந்தியா உருவானால் உயர்ஜாதியினரைக் கேள்வி கேட்பார்கள் என்பதினால், நயவஞ்சகமாக கொண்டு வந்த நுழைவுத் தேர்வு தான் நீட். 

எந்த ஒரு ஏழையும் படிப்பின் மூலம் பொருளாதாரத்தில் முன்னேறி விடக்கூடாது. ஏழைகளுக்கு கல்வி எளிதாகக் கிடைத்தால் ஏழைகள் அற்றுப் போய் விடுவர் என்பதனால் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நயவஞ்சமாக திணித்து விட்டார்கள்.

பள்ளிப்படிப்பில் தேர்ச்சி பெறாத ஒரு மாணவர் நீட் தேர்வில் 720 முழு மதிப்பெண் பெற்றிருக்கிறான். எய்ம்ஸில் இலவசமாய் படிக்க காசைக் கொடுத்து 720 மார்க் வாங்கி விட்டால் படித்து விடலாம் என பேஜேபி ஆளும் மாநிலங்களில் நீட் வினாத்தாளை விற்பனைக்கு விட்டுள்ளனர். ஒரு சில நீட் தேர்வு மையங்களில் தேர்வு கண்காணிப்பாளரே கேள்விகளுக்கான பதிலை டிக் அடிப்பதற்கு பணம் வாங்கி இருக்கிறார்கள் எனச் செய்திகள் வருகின்றனர். நீட் தேர்வு அறைக்குள் தாலியைக் கூட பிடுங்கி வைத்துக் கொண்டு அனுமதித்திருக்கிறார்கள் என்ற செய்திகளையும் படித்தோம்

மத்திய சென்னையின் எம்.பி. தயா நிதி மாறன் அவர்கள் 12ம் வகுப்பில் இயற்பியல் தேர்வில் 1 மார்க் பெற்ற மாணவிக்கு நீட்டில் 720க்கு 720 மார்க் வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இது போல இன்னும் என்னென்ன மோசடிகளை பாஜக ஆளும் மா நிலங்களில் நடந்திருக்கிறதோ தெரியவில்லை. வெளியில் தெரிந்தவை இந்த மோசடிகள். தெரியாத மோசடிகள் எத்தனையோ?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் முறைகேடே நடக்கவில்லை என்றார். பின்னர் ஒப்புக் கொண்டார். அரசுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு மசோதா 2024 பிப்ரவரியில் நிறைவேற்றபட்டது. தற்போது கூடுதல் இணைப்பாக 10 ஆண்டு சிறை, 1 கோடி அபராதம் என்று இணைத்து சட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள்.  நீட் முறைகேட்டை ஒப்புக் கொண்டிருக்கிறது அரசாங்கம் என்பதற்கு சாட்சி இதுவே.

எவனோ ஒருவன் கசிந்த கேள்வித்தாள் மூலம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் - ரேங்க் பட்டியல் முறைகேடானது அல்லவா? ஆனால் உச்சநீதிமன்றம் அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நீட் தேர்வுக்கு தடை விதிக்க மறுத்திருக்கிறது. கண் முன்பு சாட்சி இருந்தும் குற்றத்தைப் பார்க்காமல் அரசின் கொள்கைக்கு சாதுர்யமாக ஒப்புதல் அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். தேசிய தேர்வாணையம் அக்கிரமமாக பலருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி இருக்கிறது. இதனை மட்டும் ரத்துச் செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். மறுபடியும் அவர்களுக்குத் தேர்வாம். பின்னர் ரேங்க். இப்படி போகிறது நீட் தேர்வு முறைகேடு. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வளவு பெரிய விஷயத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றனர்.

நீட் தேர்வு முறைகேடு மூலம் மதிப்பெண் பெற்றவர்களை எங்கனம் கண்டுபிடிப்பார்கள் சிபிஐயினர்? அதற்கு எத்தனை நாட்கள் பிடிக்கும் என்று தெரியாது. அதற்குள் மருத்துவக் கலந்தாய்வுக்கு அனுமதி அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இது சரியல்ல என்று நீதிபதிக்களுக்கு நன்கு தெரியும். ஆனாலும் நீதிமன்றம் வாய் மூடி மவுனமாக இருக்கிறது என்பது தான் வேதனை.

ஜார்கண்டில் ஐந்து பேரை நீட் முறைகேட்டுக்கென கைது செய்திருக்கிறார்கள். அதே போல ரவி அட்ரி கும்பல் உத்திரப் பிரதேசத்திலிருந்து ஜார்கண்ட் வழியாக பீகார் மாநிலத்திற்கும் கேள்வித்தாளை விற்பனை செய்திருக்கிறார்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

பள்ளியில் தேர்வு எழுதி முதல் மதிப்பெண் பெற்றாலும் நுழைவுத் தேர்வில் மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல நுழைவுத் தேர்வு மதிப்பெண் மட்டுமே தேர்ச்சிக்கான மதிப்பெண்ணாக இருப்பது மாணவர்களுக்கு இழைத்திருக்கும் கொடூரம். எத்தனை நுழைவுத் தேர்வுகளை எழுதுவது? நுழைவுத் தேர்வுக்கென எத்தனை ஆயிரங்களை கட்டணமாக கட்டுவது? தேசிய நுழைத்தேர்வு முகமை கோடிகளில் ஏழை மாணவர்களிடமிருந்து பணம் பறித்துக் கொண்டிருக்கிறது. 

என்றைக்கு பிஜேபி அரசு பதவிக்கு வந்ததோ அன்றிலிருந்து சாமானியனுக்கு எளிதில் கிடைக்க வேண்டிய - ஒரு அரசு செய்ய வேண்டிய கட்டாயப் பணியைச் செய்யாமல் - எதிர்கால இந்தியாவின் சந்திதகளை - அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி அழிக்கும் திட்டத்தினை வெகு நாசூக்காக - பதவிக்காக கூக்குரலிடும் நயவஞ்சகப் பேராசை பிடித்த நரிகளின் உதவியினாலும் - காசுக்காக சட்டத்தை விற்கும் - குரைக்கும் பல எச்சைகளின் உதவியாலும் மாணவர்களுக்கு மரணவலியைக் கொடுக்கிறார்கள்.

கல்வி ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டிய அரசாங்கம் மாணவர்களைப் படிக்க விடாமல் செய்யும் கொடுமையை உலகில் எங்கேயும் பார்க்க முடியாது. இந்தியாவில் மட்டுமே இப்பேர்பட்ட எமர்ஜென்சி போன்ற சட்டங்களைப் பார்க்கலாம். இந்திரா காந்தியின் எமர்ஜென்சி அரசியல் தொடர்பானது. ஆனால் இதுவோ இந்தியர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எதிரான கல்வி எமர்ஜென்சி.

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக நீட் மோசடிகள் தொடர்கின்றன. நயவஞ்சகர்களின் நரித்தனத்தை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த நரிகள் பல்வேறு வழிகளில் நுழைவுத் தேர்வுகளை நியாயப்படுத்தி வருகிறார்கள். 

இந்தியாவெங்கும் நீட் தேர்வுக்கு எதிரான மாணவ போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இதைத்தான் தமிழ் நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆரம்பகாலத்திலிருந்து சொல்லி வந்தார், போராட்டம் செய்தார், சட்ட மசோதா நிறைவேற்றினார். ஆனால் ஆளுநர் ரவி - பாஜகவின் சேவகராக நம் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு, பாஜகவின் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். அப்போதெல்லாம் வாய் மூடி கிடந்தவர்கள்,  ஒன்றிய அரசின் நரித்தனத்தை தற்போது உணர்ந்து போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

மாணவர்களின் கல்விக்குத் தடை போடும் அரசைக் கேள்வி கேளுங்கள். மணிப்பூரில் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போதும், வாய் மூடி மவுனியாக இருப்பவர்களால், மக்கள் கேட்கும் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கு 9000 கோடி விமானம் இருக்கிறது. செலவழிக்க மக்களின் வரிப்பணம் இருக்கிறது. கேள்விக்கு பதில் தர வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை.

இ.வி.எம் இருக்கும் வரையில் - ஆட்சித் திருடர்களால் மக்களிடமிருந்து பறிக்கப்படும் மக்கள் உரிமைகள் இனி கிடைக்கப் போவதில்லை என்பது மட்டும் உண்மை. ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் ஆணையத்தின் துணையோடு ஆட்சிகளைப் பறித்தார்கள் பாஜகவினர். அதை ஆளு நர் அங்கீகரித்திருக்கிறார்கள். மக்கள் போட்ட ஓட்டு எங்கள் கால் தூசுக்குச் சமம் என பாஜகவினரும், ஆளுநர்களும் கொக்கரிக்கின்றார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எமர்ஜென்சியை ஏவி விட்டிருக்கின்றார்கள்.

மருத்துவக் கல்வியும், உயர் கல்வியும் ஏழைகளுக்கு கிடைக்கவே கிடைக்காது. எந்தப் போராட்டமும் ஆட்சித் திருடர்களை ஒன்றும் செய்யாது. அவர்கள் அறம் அற்றவர்கள். ஆட்சியும் அதிகாரமும் வேண்டுமென்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். நீதிமன்றத்திலும் நுழைந்து விட்டார்கள். இனி இந்தியர்கள் இன்னொரு 500 வருடம் அடிமைகளாக வாழ வேண்டிய நிலையில் உள்ளார்கள் என்பது கொடுமை.

தற்போதைய செய்தி என்னவென்றால், சில போட்டித் தேர்வுகளின் நேர்மை குறித்து பல தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், ஜூன் 23 காலை நடைபெறவிருந்த நீட்-பிஜி நுழைவுத் தேர்வை “ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக” ஒத்திவைப்பதாக சுகாதார அமைச்சகம் அறிவித்தது. 

நீட்-யுஜி தேர்வு மற்றும் அது நடத்தும் பிற தேர்வுகளில் தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விமர்சனத்திற்கு உள்ளான தேசிய தேர்வு முகமையின் இயக்குநர் ஜெனரல் பதவியில் இருந்து சுபோத் குமார் சிங் நீக்கப்பட்டடார். 

கேபினட் நியமனக் குழு, இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பிரதீப் சிங் கரோலாவுக்கு, வழக்கமான பதவியில் இருப்பவரை நியமிக்கும் வரை, என்.டி.ஏ-வின் கூடுதல் பொறுப்பை அளித்து அறிவிப்பை வெளியிட்டது. தற்போதைய DG திரு. சிங், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் "கட்டாயக் காத்திருப்பில்" வைக்கப்பட்டுள்ளார்.

மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, மே 5-ம் தேதி நடைபெற்ற நீட்-யுஜி தேர்வில் முறைகேடு மற்றும் முறைகேடு புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

கடந்த ஒரு மாதமாக, 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைப் பாதித்த இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான NEET-UG-யில் முறைகேடுகள் தொடர்பான வரிசை தொடங்கி, ஏஜென்சி தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.  ஒரு லட்சம் மருத்துவப் படிப்புகளுக்கு 23 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் முறைகேட்டினை உச்ச நீதிமன்றமும் கண்டுகொள்ளவில்லை.

கூடுதல் செய்தி : அயோத்தியில் ராமர் கோவிலில் ராமரைப் பிரதிஸ்டை செய்த அர்ச்சகர் ஆச்சார்ய லட்சுமிகாந்த் தீட்சிதர் செத்துப் போய் விட்டார். அது மட்டுமல்ல 1800 கோடி ரூபாய் செலவழித்த ராமர் கோவில் கூரை ஒரே ஒரு மழையில் ஒழுகிக் கொண்டிருக்கிறது என அர்ச்சகர் கூறியிருக்கிறார்.





நன்றி : தீக்கதிர்

Monday, June 17, 2024

மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களின் கண்ணீர் வரலாறு


தாமிரபரணியில் நடந்த கொலைகள் - மாஞ்சோலை தொழிலாளர்கள்

1927ஆம் ஆண்டில் முதன் முதலாக இப்பகுதிக்கு வந்தபோது காட்டு மாமரங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், “மாஞ்சோலை” என்று பெயரிட்டனர் என்று சொல்லப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ளது கல்லிடைக்குறிச்சி. அங்கிருந்து மணிமுத்தாறு அணைக்கட்டினை கடந்து சுமார் 16 கிலோ மீட்டர் மலையேறினால் மாஞ்சோலை எஸ்டேட்டை அடையலாம். 

மாஞ்சோலை எஸ்டேட்டுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து பட்டியலின மக்களும், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்களும் தொழிலாளர்களாக, முதலாளிகளின் தரகர்களால் இங்கு அழைத்துவரப்பட்டனர். 

குறைந்த ஊதியம், அதிக வேலை என இருந்த எஸ்டேட்டில் அதை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன என்கிறது மாஞ்சோலையின் தொழிலாளர்கள் வரலாறு.

1999ம் வருடம் சூலை மாதம் 23ம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.100 கூலியாக வழங்க வேண்டுமென போராடினர். அப்போராட்டத்திற்கு ஆதரவாக கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் 17 பேர்  கொலை செய்யப்பட்டனர். 

மாஞ்சோலை வரலாறு என்ன?

திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா சிறுபிள்ளையாக இருக்கும் போது, அவரது தாயார் உமையம்மை ஆகிய இருவரும் உறவினர்களிடமிருந்து உயிர் தப்பிக்க மேற்கு மலைத்தொடர்ச்சியில் உள்ள பொதிகை மலையில் மறைந்து வாழ்ந்தனர். அங்கு காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகில் வாழ்ந்த சிங்கம்பட்டியார் என்பவரைச் சந்தித்து ஆதரவு கேட்டார்கள். அதன் பிறகு சிங்கம்பட்டியார் மார்த்தாண்ட வர்மாவுக்கு பல பயிற்சிகள் பயிற்று வித்து, அவர் வாலிப வயது அடைந்தவுடன் தன்னுடைய மகனுடன், படை ஆட்களை அனுப்பி, மார்த்தாண்ட வர்மனின் உறவினர்களை விரட்டி விட்டு, மீண்டும் திருவிதாங்கூர் அரியணை ஏற உதவி செய்தார். போரில் சிங்கப்பட்டியாரின் மகன் இறந்ததால் அதற்காக 18ம் நூற்றாண்ட்டில் 1706 மற்றும் 1758 ஆண்டுகளில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியையும், 5 கிராமங்களையும், காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் உட்பட 8 கோவில்களையும், 5 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களையும் தானமாக வழங்கினார் மார்த்தாண்ட வர்மா. இந்த நிலத்தை சிங்கம்பட்டி ஜமீன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரையாக அனுபவித்து வந்தனர்.

சிங்கம்பட்டி ஜமீன் இளவரசர் சிவசுப்ரமணிய சங்கர தீர்த்தபதி சென்னையில் படித்துக் கொண்டிருந்த போது கொலை வழக்கில் சிக்கினார். வழக்குச் செலவுகளுக்காக் 1929ம் ஆண்டில் சுமார் 8500 ஏக்கர் நிலத்தினை பி.பி.டி.சி நிறுனத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கினார். 


பி.பி.டி.சி நிறுவனம் செய்த அபகரிப்பு செயல்கள் என்ன?

இந்த இடத்தினை பி.பி.டி.சி நிறுவனம் அபகரிக்கச் செய்த செயல்களைப் பற்றிப் பார்க்கலாம். 

BBTC நிறுவனம் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்ட நிறுவனமாகும். குத்தகைக்கு நிலத்தை எடுத்த BBTC நிறுவனம் குறிப்பிட்ட வனப்பகுதிகளை செம்மைப்படுத்தி தேயிலையைப் பயிரிட்டது. குத்தகை காலம் 2028 வரை அமலில் உள்ளது. அனுமதிக்கப்பட்ட 99 ஆண்டு குத்தகை காலத்தில் BBTC நிறுவனம் மாஞ்சோலை நிலத்தில் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்திருக்கிறது. 

1952 ஆம் வருடம்  குத்தகைக்கு விடப்பட்ட டீ எஸ்டேட் உட்பட அனைத்து சிங்கம்பட்டி 22000 ஹெக்டேர் ஜமீன் காடுகளை  ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்தின் மூலம் அரசு தன் வசம் எடுத்தது. ஆனால், பிபிடிசி நிறுவனம் தனது 99 வருடக் குத்தகையைத் தொடரலாம் என அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசு அனுமதித்தது. 1977 ஆம் வருடம் அரசு மேற்கண்ட 22000 ஹெக்டர் பரப்பளவு கொண்ட சிங்கம்பட்டி காட்டை காப்புக் காடாக மாற்றத் தமிழ் நாடு வனச்சட்டம் மூலம் அறிவிக்கை செய்தது. ஆனால் பிபிடிசி நிறுவனம் தன்னுடைய குத்தகை நிலத்தைக் காப்புக்காடாக மாற்றக் கூடாது எனவும் தனக்கு ரயத்வாரி பட்டா வழங்க வேண்டும் என்றும் பல்வேறு வகையில் கடிதங்கள் மூலமும், நீதிமன்றம் மூலமும் முட்டுக்கட்டை போட்டது. இதனால் இந்த வனப்பகுதியைக் காப்புக்காடாக மாற்ற முடியாமல் வன நிர்ணய அலுவலர், வனத்துறையினர் மிகவும் சிரமப்பட்டார்கள். 

ரயத்வாரி பட்டா என்றால் என்ன?

ஜமீன்தார் யாருக்கு நிலத்தைக் குத்தகைக்கு கொடுத்திருக்கிறாரோ அந்தக் குறிப்பிட்ட நிலங்களை அரசு கையகப்படுத்தும் போது  அந்நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டிருந்தால் அந்த நிலங்களுக்குக் கொடுக்கப்படும் பட்டாவின் பெயர் ரயத்வாரி. 

இந்தப் பட்டாவை கேட்டுத்தான் வனத்துறைக்கு எதிராக BBTC நிறுவனம் வழக்குத் தொடுத்தது.  

2010 ஆம் வருடம் (6.1.2010) வன நிர்ணய அலுவலர் மேற்கண்ட 22000 எக்டர் (பிபிடிசி குத்தகை நிலம் உட்பட) காட்டைக் காப்புக்காடாக மாற்றலாம் என உத்தரவு பிறப்பித்தார். பிபிடிசி நிறுவனம் இந்த உத்தரவுக்குத் தடை ஆணை பெறாமல் கேவியட் மனுவை மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது வனத்துறை. ஆகவே அப்போது பிபிடிசி நிறுவனத்தால் தடை ஆணை ஏதும் பெறமுடியவில்லை. ஆனால், வன நிர்ணய அலுவலர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பிபிடிசி நிறுவனம் 2010 இல் மாவட்ட நீதிமன்றம் , திருநெல்வேலியில் மேல் முறையீடு வழக்கு தொடர்ந்தது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு 2015ம் வருடம் மாவட்ட நீதிமன்றம் பிபிடிசி நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து  உத்தரவு பிறப்பித்தது. பிபிடிசி நிறுவனம் மதுரை உயர் நீதி மன்றத்தில் மறு சீராய்வு மனு செய்தது. 01.09.2017ம் தேதியன்று அந்த வழக்கையும் தள்ளுபடி செய்து நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நீதிமன்ற உத்தரவில்  'குத்தகை  ஒப்பந்த காலம் முடியும்வரை, நிலத்தை நிறுவனம் அனுபவித்துக் கொள்ளலாம். ஒப்பந்த காலம் முடிவடையும் வரை மனுதாரருக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. மனுதாரர் தற்போது அனுபவித்துவரும் அனுமதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் சாகுபடி செய்யலாம். அதைத் தவிர்த்து, பரப்பளவை விரிவாக்கம் செய்யக் கூடாது. குத்தகை ஒப்பந்த விதிகளை மீறினால், அதை ரத்து செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை உள்ளது எனத் தீர்ப்பளித்திருக்கிறார்கள். மேற்கண்ட இந்த நிகழ்வு நடைபெற 40 வருடங்கள் ஆகியுள்ளது.

சமீபத்தில் பிபிடிசி நிறுவனம் மாஞ்சோலை எஸ்டேட்டை மூடுவதற்கு முடிவு செய்து, எஸ்டேட்டில் இருந்து மக்களை வெளியேறச் சொல்லி இருக்கிறார்கள். இந்த எஸ்டேட்டின் குத்தகை 2028ம் ஆண்டு வாக்கில் முடிவுக்கு வர உள்ளது. 

மாஞ்சோலை எஸ்டேட்டில் 1959ல் “மீண்ட சொர்க்கம்”, 1974ல் “மன்னவன் வந்தானடி”, 1990ல் “நிலா பெண்ணே”, 1991ல் “சார் ஐ லவ் யூ”, 1996ல் “பூமணி”, “சுந்தர புருஷன்”, 2008ல் “பேராண்மை”, 2009ல் “ஆனந்த தாண்டவம்” போன்ற  திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

இந்த எஸ்டேட்டில் பிபிடிசி கம்பெனியின் மாஞ்சோலை குருப் ஆபீஸ், தேயிலைத் தொழிற்சாலை,  பெரிய மருத்துவமனை, மருத்துவர் இல்லம், கம்பெனியின் கண்காணிப்பாளர் இல்லம், தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி, மாணவர் விடுதி, காவல் நிலையம், வாக்கி டாக்கி நிலையம், தபால் நிலையம், சிறந்த சுவையான டீ ரஸ்க் தயாரிக்கும் எஸ்டேட் பேக்கரி, இந்து, கிறித்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்கள் எனப் பலவும் மாஞ்சோலையில் அமைந்துள்ளன. 

எஸ்டேட் மூடப்பட்டு அப்பகுதிகள் காப்புக்காடாக மாற உள்ளது. இதனால் அங்கு பல தலைமுறைகளாக தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து, வாழ்ந்து வந்த மக்கள் கனத்த இதயத்துடன் தங்கள் குடியிருப்புகள், கோயில்கள், வாழ்வாதாரங்களை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

தொழிலாளர்களுக்கு எந்த உலகத்திலும் நிரந்தரமான இடமுமில்லை, அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியும் இல்லை. இலங்கைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேட்பார் யாருமில்லை. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டதற்காக கொல்லப்பட்டனர். வரலாறு முழுக்க தொழிலாளர்களின் வாழ்க்கை அவலமாக உள்ளது. அதிகாரத்துக்கும் பணத்திற்கும் பேராசைக்கும் இடையில் சாமானிய தொழிலாளர்கள் தொடர்ந்து பலியாகிக் கொண்டிருப்பது காலம் காலமாக தொடரும் அவலம். மனிதன் மிருகத்தை விட கேவலமானவன் என்பதன் இன்னொரு வரலாறு தான் மாஞ்சோலை எஸ்டேட்டும் அதன் தொழிலாளர்கள். உழைப்பவனுக்கு இந்த உலகில் வாழ இடமில்லை என்பதே உண்மை. 

* * *

Friday, May 24, 2024

இர்பானுக்கு மன்னிப்பு - சட்டம் பிரபலமானவர்களின் காலடியில் புதைக்கப்படுமா?

இர்பான் என்ற ஒரு தனி நபர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை கேலிக்கு ஆட்படுத்தி இருக்கிறார். பிரபலமாக இருப்போர் தன் செயலைப் பலரும் கவனிப்பார்கள் என்ற நினைவு இல்லாமல் இருப்பார்கள் என்று நம்ப நாமொன்றும் முட்டாள்கள் இல்லை.

உலகெங்கும் சுற்றிச் சுற்றி சாப்பிட்டு - அது சரியில்லை, இது சரியில்லை, இங்கே நல்லா இருக்கு, அங்கே நல்லா இருக்கு என பல ஹோட்டல்கள் நடத்தியவர் போலவும், சமையல் கலையில் உலகளவில் தேர்ந்தவர் போலவும் - பல வீடியோக்களைப் போட்டு காசு பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நபர் - தான் செய்த செயல் சட்டத்துக்கு விரோதமானது என்று தெரியாமல் வீடியோ போட்டார் என்று மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் - அதை சட்டம் ஏற்றுக் கொண்டால் - சட்டம் செத்துப் போனது போல் ஆகும்.

இர்பான் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர். வீடியோ எடுக்கும் போது அவருடன் இருந்தவர்கள் எவருக்கும் ஜெண்டர் பற்றி அறிவிக்க கூடாது என்ற சட்டம் பற்றித் தெரியாதா? 

இவரின் மனைவி மருத்துவமனைக்கு ஆலோசனைக்குச் சென்றிருப்பாரே அப்போது ஜெண்டர் பற்றி அறிவிக்க கூடாது என்று தெரியாமலா வீடியோ எடுத்தனர்.

தெரியாமல் செய்து விட்டேன். மன்னிப்பு  தாருங்கள் என்றால் - சட்டம் இவருக்கு மன்னிப்பு வழங்கினால் - இனி எல்லோருக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு மன்னிப்பே தண்டனை என்றால் சிறைச்சாலை எதற்கு? 

காவல்துறை எதற்கு? 

வக்கீல்கள் எதற்கு? 

நீதிமன்றம் எதற்கு? 

நீதிபதி எதற்கு? 

விசாரணை எதற்கு? 

எதுவும் தேவையில்லையே. தேவையற்ற வகையில் மக்களின் வரிப்பணத்தினை ஏன் செலவு செய்ய வேண்டும்.

தெரியாமல் ஹெல்மெட் போடவில்லை - போக்குவரத்துக் காவல்துறை மன்னிக்குமா?

போர்சே காரை தெரியாமல் எடுத்து இருவரைக் கொன்று விட்டேன் - மன்னிக்குமா சட்டம்?

தெரியாமல் ஊழல் செய்து விட்டேன் - மன்னிக்குமா சட்டம்?

தெரியாமல் கொலை செய்து விட்டேன் - மன்னிக்குமா சட்டம்?

இவருக்கு மன்னிப்பு வழங்கினால் சட்டம் தன் மதிப்பை இழக்கும். நீதிமன்றம் தன் மாண்பை இழக்கும். சட்டசபைகளில் சட்டம் இயற்றி, ஆளுநர்களிடம் போராடி சட்டமியற்றினால் இர்பான் போன்றவர்கள் அதை மீறினால் சட்டசபைக்கு என்ன மரியாதை? 

சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஜனாதிபதிக்கு என்ன மரியாதை?

ஏன் மக்கள் ஓட்டுப்போட வேண்டும்? சட்டசபை எதற்கு? ஜனாதிபதி எதற்கு? எல்லாவற்றையும் நீக்கி விடலாமா?

இர்பானின் திமிர் இது. 

தன்னை மீடியாவில் பேசுபொருளாக மாற்றவும், எப்போதும் தனக்கொரு ஹைப் இருக்க வேண்டுமென்பதற்காகவும் - இதைப் போன்ற சட்டத்தினை மீறும் வீடியோவை இர்பான் போட்டிருக்கிறார்.

இவருக்கு சட்டம் கடுமையான தண்டனை கொடுக்கவில்லை எனில் தமிழக அரசும், நீதிமன்றமும், காவல்துறையும் இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கருதப்படும் நிலை உண்டாகும்.

என்ன வேண்டுமானாலும் செய்வேன் - செய்து விட்டு மன்னிப்புக் கேட்பேன்  என்றால் அவனுக்கு சட்டம் என்ன செய்யும் என்று சட்டப்படி காட்ட வேண்டும். இல்லையெனில் சட்டம் பிரபலங்களின் காலடியில் புதைக்கப்படும்.

இவரைப் பாலோ செய்யும் இளம் தலைமுறையினருக்கு சட்டத்தை மீறினால் - மன்னிப்புக் கேட்டால் போதும் என்ற எண்ணம் ஏற்படும். அது சட்டம் ஒழுங்கை மட்டுமல்ல சமுதாயத்தில் தேவையற்ற அமைதியின்மையை உண்டாக்கும்.

தமிழக அரசு கவனிக்க வேண்டும். இவர் மீது சட்டப்படியான கடுமையான தண்டணையைப் பெற்றுத் தர வேண்டும்.

உணவுகளைப் பற்றி வீடியோக்களில் பேசும் இர்பான் - என்ன படித்திருக்கிறார்? உணவுகள் பற்றியும், அந்த உணவுகளில் இருக்கும் ரசாயனங்கள் பற்றியும் - அதன் பின் விளைவுகள் பற்றியும் தெரிந்திருக்கிறாரா? பின் எப்படி அந்த உணவு நன்றாக இருக்கிறது, இது சுமாராக இருக்கிறது என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார்? 

இவரின் வீடியோக்களில் காட்டப்படும் உணவகங்களை - தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆராய்ந்திருக்கிறதா?  இப்படி பல்வேறு சிக்கல்களை உருவாக்கி வரும் இவருக்கு மன்னிப்பு வழங்கினால் - சட்டத்தினை மீறும் அனைவருக்கும் - அரசு மன்னிப்பு வழங்க வேண்டும்.

சவுக்கு சங்கரும் ஃபெலிக்ஸும் மன்னிப்பு கேட்டால் விட்டு விடுமா சட்டம்? இவருக்கு மன்னிப்பு வழங்கினால் - இவர்கள் இருவருக்கும் மன்னிப்புக் கொடுக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்...!


Wednesday, May 22, 2024

சவுக்கு சங்கர் - ஃபெலிக்ஸ் ஜெரால்டு - உண்மை என்ன?

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. சவுக்கு சங்கரும், ஃபெலிக்ஸ் ஜெரால்டும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, காவல்துறையில் பணிபுரியும் பெண்களைப் பற்றி தவறாகப் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள்.

எப்படி என்கிறீர்களா?

சங்கரின் ஆரம்பகாலத்திலிருந்து நான் அவரைக் கவனித்து வருகிறேன். அவரின் கட்டுரைகளைப் படித்தும் வருகிறேன். முன்னாள் நீதிபதி செல்வத்தைப் பற்றி எழுதிய கட்டுரையிலிருந்து, த ரிப்போர்ட்டர்ஸ் கலக்டிவ் எனும் இணையதளத்தில் வெளியாகும் ஆங்கிலக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து, சவுக்கு ஆன்லைனில் பதிப்பித்த போதெல்லாம் படித்திருக்கிறேன்.

சங்கர் தன்னை ஒரு பிராண்டாக உருவாக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை ஊழல் உளவு அரசியல் புத்தகத்தைப் படித்த போது அறிய முடிந்தது. இந்தப் புத்தகத்தை அவன் பட்டும்படாமல், சொல்ல வந்த எதையும் சொல்லாமல், ஒப்புக்குச் சப்பாணியாக வெளியிட்டிருந்தான். படித்த போதே தெரிந்தது தன்னை நிலை நிறுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறான் இவன் என்பது.

தொடர்ந்து அவனின் அடுத்த கட்டம் அரசியலை நோக்கியும், தனியார் செய்திகளில் அடிபட்ட பணக்காரர்கள் பக்கம் திரும்பியது. சோர்ஸ் என்றொரு வார்த்தையை வைத்துக் கொண்டு, பலரையும் வாய்க்கு வந்தவாறு பேசிக் கொண்டிருந்ததை நாமெல்லாம் பார்த்தோம்.

ஒரு வருடத்திற்கு முன்பு, நினைவில் இல்லாத ஏதோ ஒரு சம்பவம் தொடர்பாக ஃபெலிக்ஸிடம் பேசிய போது, நானொரு ஏழை என்று என்னிடம் சொன்னான்.  ஆனால் இப்போது கோடிக்கணக்கில் சொத்துக்களை அதுவும் ஒருவருடத்திற்குள் வாங்கி வைத்திருக்கிறான் ஃபெலிக்ஸ் என்று செய்தி வெளியாகி உள்ளது.

ஃபெலிக்ஸின் யூடியூப் சானலில் சங்கர் பேசிய போது, இதன் பின்னால் ஏதோ திட்டமிருக்கிறது என்று புரிந்தது. அன்றிலிருந்து அவனது வீடியோவைப் பார்ப்பதுமில்லை. அவனது இணையதளத்தினைப் படிப்பதும் இல்லை.

ஒவ்வொரு தேர்தலும் தான் இவனைப் போன்றவர்களுக்கு டார்கெட். 

தேர்தல்களின் போது சோஷியல் மீடியா மூலம் அரைகுறை அல்லு சில்லுகளை இவர்களால் டார்கெட் செய்யப்படும் கட்சிகளுக்கு ஓட்டுப்போட விடாமல் செய்யலாம் என்ற திட்டத்திற்காக, வாட்சப் வாலிப வாலிபிகளை மூளைச் சலவை செய்வதற்காக - இவர் தன்னை ஒரு உண்மை பத்திரிகைகாரராக பதிவு செய்து வந்திருக்கிறார். வாட்சப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

சமீபத்தில் கார்டியன் பத்திரிக்கையில் ஃபேஸ்புக் மெட்டா நிறுவனம் போலி செய்திகளை விளம்பரமாக்கியதை அனுமதித்துள்ளது என்ற கட்டுரை வெளியாகி உள்ளது.


https://www.theguardian.com/world/article/2024/may/20/revealed-meta-approved-political-ads-in-india-that-incited-violence#:~:text=Revealed%3A%20Meta%20approved%20political%20ads%20in%20India%20that%20incited%20violence,-Exclusive%3A%20Ads%20containing&text=The%20Facebook%20and%20Instagram%20owner,shared%20exclusively%20with%20the%20Guardian.

மேலே இருக்கும் இணைப்பினைச் சொடுக்கி கட்டுரையைப் படித்துக் கொள்ளுங்கள்.

இப்படி பலரைப் பற்றியும் வதந்திகளையும், போலி செய்திகளையும் பரப்பி, உண்மையை தெரிந்து கொள்ள விடாமல் செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் கொடுக்கும் காசுக்கு தன்னை நம்பிய மக்களின் முதுகில் குத்தியிருக்கிறார்கள் இந்த இருவரும்.

உள் அரசியல் பற்றி அறிந்து கொள்ள முடியாத, தெரியாத மக்களை சப்ஸ்கிரைப் செய்ய வைத்தும், இன்னும் பல ரகசியமான வேலைகளைச் செய்து, பாலோயர்களை அதிகப்படுத்தியும் வந்திருக்கிறார்கள் இருவரும்.

இவர்களுக்கு மக்களிடம் அமோக ஆதரவு உண்டு என்பது போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி, அதன் காரணமாக கட்சிகளிடம் பணம் பெற்றிருக்கிறார்கள் என்கிறது செய்திகள்.

ஒரு துரோகியின் கட்சியும், ஒரு இனத்துரோகியின் கட்சியும் இவனுக்கு கோடிக்கணக்கான ரூபாயை - திமுகவைப் பற்றி அவதூறு பேசவும்,  ஓட்டுக்கள் கிடைக்கா வண்ணம், சாமர்த்தியமாக போலிச் செய்திகளைப் பரப்ப வேண்டும் என்பதற்காக கொடுத்திருக்கிறார்கள் என்று பத்திரிக்கைகள் மற்றும் பல யூடியூப் சேனல்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

ஆனால் விதி வேறு மாதிரி வேலை செய்து விட்டதை அறிந்த பின்னால், காசு கொடுத்தவர்கள் கணக்கு கேட்டால் சொல்ல வேண்டுமே என்பதற்காக, பக்காவாக பிளான் போட்டு, ஒரு அவதூறு வீடியோவை வெளியிட்டு, கைது செய்ய வைத்து, காவல்துறைப் பாதுகாப்புடன் ஜெயிலுக்குள் அடைக்கலமாகி விட்டனர் என்றே நம்பத் தோன்றுகிறது.

யாரை வேண்டுமானாலும் நம்பலாம். இவர்களைப் போன்ற மக்களை ஏமாற்றி போலிப் பிம்பத்தை உருவாக்கி, அதன் மூலம் துரோகத்தையே தொழிலாக மாற்றிக் கொண்டவர்களை நம்பவே கூடாது.

திருடனுக்கு தேள் கொட்டியது போல அந்த இரு கட்சி துரோகிகளும் கள்ள மவுனத்தில் இருப்பர். இவர்கள் இருவரும் கணக்கு கொடுக்காமல், எல்லாம் செலவாகி விட்டது என்றுச் சொல்லி விடுவார்கள்.

அடுத்த தேர்தலுக்கு மற்றொரு கட்சியிடமிருந்து பணம் பெற்று, வழக்கம் போல அறியாமையால் கிடக்கும் மக்களை ஏமாற்றுவர்.

மேலும் இதோ தீக்கதிர் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி. படித்து வையுங்கள்.

Monday, May 20, 2024

நீதியின் அநீதி - இரண்டாவது நூல்

 அன்பு நண்பர்களே!

அனைவருக்கும் வணக்கம்.  குறுஞ்செய்தி மாத இதழில் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்த போது எழுதிய தொடர் “நீதியின் அநீதி”.

இந்தியாவில் நடந்த மதம் தொடர்பான கலவரங்களின் பின்பு மனிதர்கள் தன் சக மனிதர்களைக் கொன்றொழித்ததன் இரத்தம் படிந்த இந்திய வரலாற்றின் மனம் பதற வைக்கும் படுகொலைகளைப் பற்றி எழுதி இருக்கிறேன்.

இந்த புத்தகத்தை அமேசானில் வெளியிட்டிருக்கிறேன். விருப்பமிருப்பவர்கள் கீழே இருக்கும் இணைப்பைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்.

கிண்டில் அன்லிமிடெட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு இலவசம. வரும் மூன்று நாட்களுக்கு இலவசமாய் படிக்க புரோமோசன் இருக்கிறது. படித்துப் பார்த்து விட்டு, மெயில் அனுப்புங்கள். 

தங்கவேல் மாணிக்கம்

20.05.2024


இணைப்பு : நீதியின் அநீதி

Saturday, May 4, 2024

இந்திய ஊடகங்கள் அழிக்கப்பட்டன - பத்திரிக்கை துறை விலைக்கு வாங்கப்பட்டது

இந்தியாவின் பத்திரிக்கை துறை அழிக்கப்பட்டது டிசம்பர் 30, 2022ம் ஆண்டு என்று ஆரம்பிக்கிறது ஆர்.சீனிவாசன் அவர்களின் கட்டுரை. 

அன்றைய தினம் மிகவும் மதிக்கப்படும் மற்றும் மதிப்பிற்குரிய செய்தி நிறுவனமான என்டிடிவியின் முழு கட்டுப்பாட்டையும் செல்வாக்குமிக்க - மற்றும் பலராலும் சர்ச்சைக்குரிய நிறுவனராக விமர்சிக்கப்படும் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, அப்போது உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆன அவரது அதானி எண்டர்பிரைசஸ் மூலம், என்.டி.டி.வியின்  27.26 சதவீத கூடுதல் பங்குகளை வாங்கிய பிறகு, முழுவதுமாக எடுத்துக் கொண்டார். பிரபல செய்தியாளர் பிரனாய் ராய் வெளியேற்றப்பட்டார்.

அவரிடம் என்.டி.டிவியின் நிறுவனப் பங்குகளில் 64.71 சதவீதம் உள்ளது. என்.டி.டி.வியை கொல்லைப்புறமாக ஆக்கிரமித்த அதானி, சில மாதங்களுக்கு முன்பு, இவரின் ஊடக நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ், புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அரசாங்க நட்பு ஊடகவியலாளர்களை பணியமர்த்தியது.

அதானியின் அடுத்த டார்கெட் தி குவிண்ட் பத்திரிக்கை. இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு விட்ட ஐந்தாண்டுகளுக்குப் பிறகு குயிண்டில்லியன் பிசினஸ் மீடியாவின் 49 சதவீத பங்குகளை அதானியின் ஏஎம்ஜி நிறுவனம் வாங்கியது. 

பதினைந்து வருடங்களாக, பத்திரிக்கைத் துறையில் தனி ஆதிக்கம் பெற்ற நிறுவனங்களை பல வித உபாயங்களைப் பயன்படுத்தி அதானி மற்றும் அம்பானி நிறுவனங்கள் விலைக்கு வாங்கின. இதற்கு மோடி அரசு உறுதுணையாக இருந்தது என்கிறது அக்கட்டுரை. கட்டுரையின் ஆங்கில மூலம் கீழே உள்ளது. கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல இந்த ஊடகங்கள் மூலம் எவ்வளவு அளவு பணம் புரளுகிறது என்ற துல்லியமான கணக்குகள் உள்ளன. ஊடகங்களை அரசும், அரசு சார்பு நிறுவனங்களும் ஏன் விலைக்கு வாங்கி ஆக்கிரமிக்கப்படுகின்றன எனில் எந்த ஒரு உண்மையும் இந்தியர்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்ற நரித்தந்திரத்தினை தவிர வேறொன்றும் இல்லை. இந்தியர்கள் அடிமைப்படுத்தப்பட வேண்டுமென்ற பேராசையால் இத்தகைய அறமற்ற செயல்களை செயல்படுத்துகிறார்கள்.


இந்தியாவில் தற்போதுள்ள பெரும்பான்மையான ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது கார்பொரேட் நிறுவனங்களும், மோடியின் அரசும். தனிப்பட்ட கருத்து சுதந்திரத்தை முற்றிலுமாக ஒழித்து விட்டார் மோடி என்கிறது இந்தக் கட்டுரை. 

இனி ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளில் போலிகளும், பொய்களும் தான் இருக்கும். உண்மையைப் பேசக்கூடிய ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகிறார்கள் இந்தியாவில் என்கிறது மேலும் இந்தக் கட்டுரை.

மிக மோசமாக கருத்துச் சுதந்திரத்தை மோடி அரசு நசுக்கி, இந்திய மக்களைப் பயத்தில் வைத்திருக்கிறது என்கின்றன பல பத்திரிக்கைச் செய்திகள். கருத்துக்கு எதிர்கருத்துச் சொன்னால் - தேசத்துரோகி முத்திரை குத்தப்பட்டு, சிபிஐ, இடி, வருமான வரித்துறையினர், போலிச் செய்திகள் மூலம் நசுக்கப்படுகிறார்கள் என்கிறார்கள் பல ஊடகவியலாளர்கள்.

எது எப்படி இருந்தாலும் உண்மை என்றும் உறங்குவதில்லை. எது உலகை இயக்கி வருகிறதோ அது ஒவ்வொரு செயலுக்குமான பலனைக் கொடுத்தே தீரும் என்பதை வரலாற்றில் படித்து வருகிறோம்.

பார்க்கலாம் அறம் வெல்லுமா? இல்லை அதிகாரப்பணம் வெல்லுமா? என.

வாழ்க வளமுடன்...!

நன்றி : திரு.சீனிவாசன் மற்றும் 360இன்ஃபோ இணையதளம்