இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகளை வழங்குகிறது. காகிதத்தில் குறிப்பிட்டபடி, நாம் அனைவரும் கண்ணியத்துடன் வாழவும், சுதந்திரமாகப் பேசவும் ஒரே அளவிலான உரிமைகளை பெற்றிருக்கிறோம் என்பது உண்மை. நடைமுறையில் நிலைமை வேறு.
அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து பல தசாப்தங்கள் கடந்தும், அதில் கூறப்பட்ட வாக்குறுதிகளுக்கும் மக்கள் வாழ்ந்து அனுபவிக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் இடைவெளி இருக்கிறது.
இதை வெளிப்படையாகச் சொல்ல நாம் தயங்கினாலும், அதன் பொருள் என்ன என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
சட்டமும் நீதியும் வேறு வேறு. சட்டம் என்பது எழுதப்பட்ட, கட்டமைக்கப்பட்ட மற்றும் நடைமுறையில் அமல்படுத்தப்படும் ஒரு அமைப்பு. நீதி என்பது ஒரு விளைவு — அது நெறிமுறையுடனும், நியாயத்துடனும், மனிதாபிமானத்துடனும் தொடர்புடையது.
சட்டம் செயல்படுத்தப்படுகிறது ஆனால் உண்மையான நீதி யாருக்கும் கிடைப்பதில்லை. சட்டம் உண்மையான நீதிக்கு தடையாக நிற்கிறது. இதற்காக பல உதாரணங்களைக் காட்டலாம். அதைப் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தால் - சட்டம் என்பது கொடூரங்களின் தொகுப்பு என்பதாய் நினைக்க வைத்து விடும். இந்தக் கொடூரங்களுக்கு இடையில் ஒரு துளி நீதி. அதைச் சிறை திரைப்படம் காட்டுகிறது.
ஒரு மசூதிக்குள் நுழைந்து அங்கிருக்கும் ஒரு தூணில் தீபமேற்ற உத்தரவிடுவது சட்டம். ஆனால் அதை நிறைவேற்றினால் கலவரம் ஏற்படும் என்பதால், தடை உத்தரவு போட்டு, கலவரம் ஏற்படாமல் தடுப்பத் நீதி. அரசு நீதி பரிபாலனம் செய்கிறது. சட்டம் அதை உடைக்கிறது.
இது அரசியலமைப்பை எதிர்க்கும் கருத்தல்ல; மாறாக, அதன் உயர்ந்த இலட்சியங்களை ஒரு வாழும் யதார்த்தமாக மாற்ற நாம் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதைக் குறித்து நேர்மையாக சிந்திக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிடுவது.
இந்த நடைமுறைகளை சிறைப்படம் தெளிவாக காட்டுகிறது.
விசாரணைக் கைதிகள் - ஒன்றும் அறியாத அப்பாவிகள் இன்னும் சிறையில் இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கை? பற்றி யாருக்கேனும் கவலை உண்டா? இது பற்றி கவலைப்பட வேண்டிய சிறை அதிகாரிகள், நீதிமன்றங்கள் அமைதியாக இருக்கின்றன. சட்டத்தின் நடைமுறைகள் காலதாமத்துக்கு காரணம்.
இங்கே யாருக்கும் எவரைப் பற்றியும் கவலை இல்லை.
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருவருடன் சார்புடையவன். அவன் தனியாக வாழ்ந்து விட முடியாது. அதை ஒவ்வொருவரும் உணர மறுக்கிறார்கள். பசித்திருப்பவனுக்கு உணவிடுவது ஒவ்வொருவரின் கடமை. ஒவ்வொருவரின் துன்பத்திற்காக அவர்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவுவது வாழ்க்கை. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது. ஒரு உணவு டெலிவரி செய்பவரை - கீழ்மை செய்யும் நபர்கள் இங்கிருக்கிறார்கள். அவர்களால் யாருக்கும் எவருக்கும் நன்மை கிடைக்கவே கிடைக்காது. இவர்களைப் போன்றவர்கள் மாற வேண்டும்.
மதமும், மொழியும் மனித வாழ்க்கையை செம்மைப்படுத்தி வாழ உருவானவை. இப்போது அவைகள் மனிதர்களின் அழிவுக்கான கருவியாக மாற்றப்பட்டிருக்கிறது. மாற்றியவர்கள் யார்? அவர்கள் ஏன் இங்கே? என்பது பற்றிய தெளிவான அறிவினை ஒவ்வொருவரும் பெற வேண்டியது அவ்சியம்.
அதற்கான ஒரு படி தான் கல்வி. கல்வி எல்லோருக்குமானவையாக எளிதில் கிடைப்பதாக செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
ஒரு படி முன்னேற வேண்டும். அதற்காக சக மனிதனின் துயரங்களில் பங்கெடுத்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும். அது ஆறறிவு பெற்ற மனிதனாலும் சரி. ஐந்தறிவு கொண்ட விலங்கினமாக இருந்தாலும் சரி. சக உயிர்களின் துன்பத்தை நாம் சற்றே உணர வேண்டும்.
இங்கு வாழத்தான் பிறந்தோமே ஒழிய, பிறரை அழிக்க அல்ல என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு சிறு செயல் - ஒரு வாழ்க்கையின் விதை - சிறையின் கதா நாயகி, கதா நாயகன் இருவரும் நம்மிடையே வாழும் பல கோடிக்கணக்கானவர்கள் தான். அவர்கள் மீது நாம் அக்கறை கொள்வோம்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கு நாமும் ஆதாரமாய் இருப்போம்.
சிறை திரைப்படத்தை அனைவரும் பாருங்கள். அது நம்மை செம்மைப் படுத்தும்.






