குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, June 19, 2026

இயக்குனர் பாரதிராஜா: இமயம் தொட்ட புகழும், வாழ்வின் நிழல் பக்கங்களும்

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவுக்குப் பின், ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் திரைத்துறையினரின் கருத்துக்களைக் காணும்போது, உலகமே கொண்டாடிய ஒரு மாபெரும் கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சிகரமானதாக இருந்திருக்கவில்லை என்பதை ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது. 

அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த கங்கை அமரன், "எல்லாரும் இவரைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே!" என்று ஆதங்கப்பட்ட வார்த்தைகள், பாரதிராஜாவின் இறுதிக்காலத் தனிமையை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

தமிழ் சினிமாவில் எத்தனையோ முகம் தெரியாத புதுமுகங்களை அறிமுகப்படுத்தி, அவர்களைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற பெருமை 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவுக்கு உண்டு. ஆனால், அத்தகைய சாதனையாளரால் தன் சொந்த மகனை வைத்து மக்கள் ரசிக்கக்கூடிய ஒரு வெற்றிகரமான திரைப்படத்தைக் கொடுக்க முடியாமல் போனது ஒரு பெரும் அவலமே.

தன் மகனைத் திரைத்துறையில் ஜெயிக்க வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவருக்குள் இருந்திருக்கலாம். 'இயக்குனர் இமயம்' என்ற உயரிய பட்டம் இருந்தும், தன் சொந்த மகனின் திரைவாழ்வை அவரால் செப்பனிட முடியவில்லை என்றால், அந்தப் பட்டத்தால் அவர் பெற்ற பலன் என்ன என்ற கேள்வி எழுகிறது. 

மகனின் மறைவுக்குப் பிறகு, அந்தத் துயரத்தின் காரணமாகவே அவர் திரைப்படப் பணிகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டார். இறுதிநாட்களில் உடல்நலனுக்குத் தேவையான மருந்துகளைக் கூட அவர் முறையாக உட்கொள்ளவில்லை என்று கூறப்படுவது, அவர் அடைந்த மனவேதனையின் உச்சத்தைக் காட்டுகிறது.

வாழ்வின் கணக்குகளும், காரண காரியங்களும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை.

அவருக்கு ஏன் இந்த நிலை? இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால், அவர் சினிமா துறையில் உச்சத்தில் இருந்தபோது நடந்த சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. 

ஒரு நேர்காணலில் அவரே குறிப்பிட்டது போல, புதுமுகங்களை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் பெயர்களை மாற்றும் வழக்கம் அவரிடம் இருந்தது. "பெயரை மாற்றுவதற்கு எனக்கு உரிமை கொடுத்தது  யார் என்ற எண்ணம் எனக்குள் ஒருமுறை தோன்றியது, அதன் பிறகே அதை நிறுத்தினேன்" என்று அவரே ஒப்புக்கொண்டார்.

இது ஒரு உதாரணம் மட்டுமே. இதேபோல அவருடைய திரைப்பயணத்தில் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கக்கூடும். உலகில் எந்தவொரு செயலும் காரண காரியமின்றி நடப்பதில்லை. 

அந்த வகையில், தன் வாழ்நாளில் யாரோ ஒருவருக்குச் செய்த செயலால் அல்லது யாரோ ஒருவரின் மனவருத்தத்தால் ஏற்பட்ட சாபமே, அவருடைய இறுதிக்காலத் துயரத்திற்குக் காரணம் என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான பாடம் என்னவென்றால்: "யார் மனதையும் புண்படுத்தக்கூடிய ஒரு தொழிலையோ, செயலையோ நாம் செய்யக் கூடாது; அப்படிச் செய்தால் அதற்கான பலனை நாம் இந்த வாழ்விலேயே அனுபவித்தே தீர வேண்டும்" என்பதுதான். 

இது பாரதிராஜாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக வரலாறும், மனித வாழ்க்கையும் நமக்கு உணர்த்தும் எதார்த்த உண்மை. யாரும் தப்பித்துப் போகவே முடியாது.

அவருடைய மறைவின்போது, "சினிமா உலகம் ஒரு மிகப்பெரிய ஆளுமையை இழந்துவிட்டது" என்று திரையுலகினர் கண்ணீர் வடித்தனர். பல முன்னணி நடிகர்கள் கதறி அழுததையும், அவரிடம் உதவி இயக்குனர்களாகப் பணிபுரிந்து இன்று பெரிய இயக்குனர்களாக இருக்கும் பலரின் நாடகத்தனமான அஞ்சலிகளையும் நாம் பார்க்க முடிந்தது.

நாளைக்கு இறக்கப் போகும் நபர்கள், இன்று அழுது கொண்டிருக்கிறார்கள் என்பார்கள். வந்தோமா, அஞ்சலி செலுத்தினோமா, சென்றோமா என்று இல்லாமல் பாரதிராஜாவின் செயல்களைப் பற்றி பெருமை பொங்க பேசிக் கொண்டிருந்தார்கள். அதாவது அவருடன் இவர்கள் இருந்தார்கள் என்பதுதான் பேச்சின் சாராம்சம்.

பவா செல்லத்துரை என்றொரு எழுத்தாளர் அஞ்சலிக்காக பேசிய போது பாரதிராஜா பற்றி டவுசர் போட்டுக்கிட்டு நின்றார், சாப்பிட்டார், தூங்கினார், பேசினார் என்பது போலவே தனி மனித செயல் துதியைப் பேசினார். அப்படிப் பேச அவருக்கு வெட்கம் கொஞ்சம் கூட இல்லை. அவர் நடந்தது, பார்த்தது, பேசியது, தின்றது, திட்டியது பற்றி விலாவரியாகப் பேசினார். இதை ரசித்துக் கேட்க ஒரு கூட்டம், கை தட்ட ஒரு கூட்டம். 

நாம் அவர் இயக்கிய முதல் மரியாதை படத்தை ஆராயலாம்.

வயதான சிவாஜிக்கும், இளம் பெண் ராதாவுக்கும் இடையே மலரும் காதல் தான் கதையின் கரு. 

இக்கதை இளையராஜாவுக்குப் பிடிக்கவில்லை என பாரதிராஜா பேட்டியில் சொல்லி இருக்கிறார். இளையராஜா வயதான ஹீரோவுக்கும், இளமையான ஹீரோயினுக்கும் காதல் டூயட் பாடல்களை இசையமைக்கவில்லையா என்று கேட்டால் என்ன சொல்வாரோ? அது ஒரு பக்கம் இருக்கும்.

இந்தப் படத்தில் பாரதிராஜா கையாண்ட ஓர் அருமையான விஷயம் இருக்கிறது. சிவாஜிக்கு அவரின் மனைவியுடன் இல்லற வாழ்க்கை கிடையாது. அவர் தனது மாமன் மகன் வேறு எவனுடனோ உறவு கொண்டதால் வயிற்றில் குழந்தை. மாமனின் வேண்டுகோளுக்காக அவளை திருமணம் செய்து கொண்டார். பிள்ளையும் பிறந்தது. அம்புட்டுதான் இருவரின் வாழ்க்கையும். சொத்து மாமன் கொடுத்தது. பெண்ணும் தான். குழந்தையோ தனக்கு உரிமையில்லாதது. ஒரு அவல வாழ்க்கையின் பிம்பமாக சிவாஜி. ஊருக்கு ராஜா, வீட்டுக்குள் கையாலாகாதவர். 

இந்த நிலையில் ஓடப் பெண் ராதா மீது அவர் கொண்ட காதல் நேர்தன்மை கொண்டது. 

மனைவி இருக்கையில் மற்றொரு பெண்ணுடன் காதல் கொள்வத் கள்ளக்காதல். பாரதிராஜா இக்கதையில் காதலை நேர்மைப்படுத்தினார்.

எந்தப் பெண்ணுடனும் உறவு கொள்ளாத ஹீரோ, தனக்குப் பிடித்த ஒரு பெண்ணின் அன்பின் காரணமாக காதல் கொள்வது என்பது எதார்த்தமே. வயது வித்தியாசமென்பது காதலுக்கு கிடையாது.

இதுதான் இயக்குனரின் திறமை. பாரதிராஜா இப்படத்தில் சொன்ன காதல் உண்மையான காதலே. 

அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமானவை. ஒன்றுடன் ஒன்று இணைக்க முடியாதவை.

புகழின் உச்சியில் இருக்கும்போது மனிதர்களைக் கொண்டாடும் இந்த உலகம், தனிமையில் இருக்கும்போது கைவிட்டுவிடும் என்பதற்கு பாரதிராஜாவின் வாழ்க்கையே ஒரு சாட்சி.

வந்தார், வாழ்ந்தார், சென்றார். 

இயற்கையை வெல்ல எவராலும் முடியாது அல்லவா?


எல்லோருக்கும் எல்லாமும் - ஒரு சிறந்த ஜனநாயகத்திற்கான மக்கள் பங்களிப்பு (2)



"எல்லோருக்கும் எல்லாமும்" என்ற நிலையை எட்ட, ஒரு மிகச்சிறந்த ஜனநாயக நாட்டில் மக்களின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 

"மக்கள் எவ்வழியோ, மன்னன் அவ்வழி" என்பார்கள். அதைப்போல, மக்களின் தேவைகள், மனநிலை மற்றும் எண்ணங்கள் எவையோ, அவைதான் ஒரு மிகச்சிறந்த ஜனநாயகத்தை உருவாக்க முடியும்; அதற்கு அடிப்படையான காரணமாகவும் இருக்க முடியும்.

இந்த அடிப்படையில் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றை ஒன்றுதான்: முதலில் கதை கேட்பதையும், கதை சொல்வதையும் நிறுத்துங்கள். உலகிலேயே மிக மிக பிரபலமான, அதிகாரம் மிக்க, ஆனால் முழு உண்மையற்ற ஒரு விஷயம் உண்டென்றால் அது கதை சொல்வதும் கதை கேட்பதும்தான்.

மனிதர்கள் தோன்றி எத்தனையோ காலங்கள் ஆகிவிட்டன.

ஆரம்ப காலத்தில் மனிதர்களுக்கு எழுத்தறிவோ, இலக்கண அறிவோ எதுவுமே இருந்ததில்லை.

மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் பின்னரே ஒலிகள், குறிகள், மொழிகள், எழுத்துக்கள் போன்றவை உருவாகி, தொடர்ந்து செம்மைப்படுத்தப்பட்டு ஒரு முழுமையான வடிவத்தைப் பெற்றன.

இந்த வடிவங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்த்தவை கதைகள்தான்.

கதைகள் என்பவை சாதாரணமானவை அல்ல. அது ஒரு மிகச்சிறந்த, அதிகாரம் மிக்க, ஒவ்வொருவருக்குள்ளும் மிக அந்தரமாக ஊடுறுவும் தன்மை கொண்ட, மிக மிக வலுவான ஊடகம் (Medium) ஆகும்.

இந்தக் கதை கேட்பதையும் கதை சொல்வதையும் மனிதன் எப்போது நிறுத்துகிறானோ, அப்போதே அவன் பிறரின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

நாம் ஏன், எதற்கு என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால் கதைகளில் நாம் அவ்வாறு கேட்பதில்லை. அது கதை என்று நிறுத்தி விடுகிறோ. நிலாவில் பாட்டி கதை இன்றைக்கும் பலரின் மனதில் அச்சாணி போல பதிந்திருக்கும். இதை ஆராய்ந்து பார்த்திருக்கிறோமா என்றால் இல்லை. ஆனால் நிலாவைப் பார்த்ததும் பாட்டி கதை நினைவுக்கு வந்து விடும். இப்படித்தான் இந்தக் கதைகள் மனிதர்களின் வாழ்வியலை சீர்குலைக்க ஆரம்பித்தன.

ஒவ்வொருவரும் தாய், தந்தையரும் கதைகள் சொல்கிறார்கள். ஆனால் இந்தக் கதைகளின் உண்மை என்னவென்று யாருக்கேனும் தெரியுமா? என்றால்  தெரியாது. தேவையில்லை ஏனெனில் அது கதை. அப்படியான கதைகள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய அழிவை உண்டாக்கி இருக்கின்றன என வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

ஒரு நல்ல ஜனநாயகத்தையும், நல்லதொரு அரசாட்சியையும் நாம் உருவாக்க வேண்டும் என்றால், நாம் முதலில் இந்தக் கதை சொல்வதிலிருந்தும், கதை கேட்பதிலிருந்தும் விடுபட வேண்டும்.

உண்மையான ஜன நாயகம் என்பது ஒவ்வொரு மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் அப்படித்தான் ஜன நாயக ஆட்சி உருவாக்கப்பட்டிருக்கிறதா?

சிந்தியுங்கள் !

எல்லோருக்கும் எல்லாமும் - உண்மையான ஜனநாயகத்திற்கான தேடல் (1)




ஒரு நாட்டின் தலையாய கடமை என்பது, தன் நாட்டு மக்களுக்கு மிகச்சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தருவதாகும். 

நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் ஓர் அரசு, தன்னுடைய கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் மூலமாக மக்களுக்கு மிகச்சிறந்த வாழ்வியலைத் தர வேண்டும். 

அந்த நோக்கத்துடன்தான் அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கே வருகிறார்கள். 

அதற்காகவே மக்களிடம் சென்று தங்களுடைய கொள்கைகளை விவரித்து, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, உங்கள் வாழ்க்கையை வளப்படுத்துவோம்" என்று தேர்தல் வாக்குறுதி அளித்து வாக்குகளைப் பெறுகிறார்கள். இது ஜனநாயகத்தின் அடிப்படைத் தேர்தல் முறை என்பதை நாம் அறிவோம்.

ஆனால், ஓர் அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, (இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும்) அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு நிறைவான வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறதா என்று கேட்டால், "இல்லை" என்றே சொல்ல வேண்டும். 

ஒரு குறிப்பிட்ட சமூகமும், குறிப்பிட்ட சில பிரிவினரும் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். "எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்" என்ற கோட்பாடு இந்தியாவில் இதுவரை நிறைவேறவே இல்லை.

இதன் காரணத்தை யோசித்துப் பார்த்தால், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் ஆட்சியாளர்களின் தவறான வழிநடத்துதலே முதன்மைக் காரணமாகத் தெரிகிறது. 

மக்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகளைப் பற்றி அவர்கள் சிந்திப்பதே இல்லை; 

தங்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் மட்டுமே முக்கியம் என்று நினைக்கிறார்கள். இவர்களின் கொள்கைகள் மக்களின் அன்றாடப் பசியைத் தீர்க்கவோ அல்லது அவர்கள் நிம்மதியாக உறங்குவதற்குக் தங்குமிடம் (வீடு) தரவோ பயன்படவில்லை என்பதே உண்மை.

இதைச் சரி செய்ய முடியுமா என்றால், நிச்சயமாக முடியும். இந்த உலகத்தில் முடியாதது என்று எதுவுமே இல்லை. இதை எவ்வாறு சரி செய்வது என்பதை இனிவரும் பதிவுகளில் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.  

இப்பதிவைப் போலவே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட பலர், எழுதி இருக்கிறார்கள், எழுதி வருகிறார்கள். இந்தப் பதிவினால் என்ன பயன் என்று நினைக்க கூடும். 

இது பலர் எழுதிய பதிவல்ல. இது வித்தியாசமானது. வேறுபாடானது. அவசியம் தொடர்ந்து படியுங்கள்.

Sunday, May 31, 2026

மறக்க முடியாத சில பயணங்கள்

பயணம் என்றால் என்னவென்று தெரியும் தானே? ஒரு இடத்துக்குச் செல்வது. எல்லோருக்கும் பயணம் செல்வது பிடித்தமானது. ஒரே இடத்தில் இருப்பதை விட புதிய புதிய இடங்கள், மனிதர்களைப் பார்ப்பது என்பது மனதுக்குள் மலர்ச்சியை உண்டாக்கும். அலுத்துச் சலித்துப் போன ஒரே மாதிரியான வாழ்க்கையில், இவ்வகையான பயணங்கள் உற்சாகத்தை தரக்கூடியவை. சில பயணங்களால் வாழ்க்கையே மாறிப் போய் விடும். 

ஒரு சில பயணங்கள் மனதில் பதிந்து விடும். அப்படியாகத்தான் எனது இந்தப் பயணமும் இருந்தது. 

விடிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து குளித்து, உடைகள் உடுத்தி, மனைவியுடன் கோவை ஏர்போர்ட் சென்றேன். வீட்டிலிருந்து 45 கிலோ மீட்டர் தூரம் விமான நிலையம். இடையில் டிராபிக் என்றால் போச்சு என்பதால் சீக்கிரம் கிளம்பி விடுவதுண்டு.

ஏர்போர்ட்டில் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். காலை 6.10க்கு இண்டிகோ பிளைட்டில் சென்னைக்குப் பயணம்.  தனியாக வழக்கம் போல.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக விமானப் பயணங்களில் மனதில் பதிந்து விடுமளவுக்கு பிரமாதமான நிகழ்வுகள் கொண்ட நினைவுகள் ஏதுமில்லை. பல சினிமாக்காரர்களைப் பார்த்திருக்கிறேன். அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன். இவர்களை ஒருவர் கூட கண்டு கொள்ளவே மாட்டார்கள். செத்த பாம்பு போல சீட்டில் உட்காந்திருப்பார்கள்.

தமிழர்கள் பார்த்தாலே அலறிக் கொண்டிருப்பார்களே சினிமா நடிகைகள் - அவர்களை பலமுறை பயணத்தில் பார்த்திருக்கிறேன். யாராவது ஓரிருவர் செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். அவ்வளவுதான் தான். 

ஒரு சிலருக்கு விமானப்பயணத்தால் பெருமை பிடிபடாது. மன்னர்கள் போல பார்வைகளை பறக்க விடுவார்கள். ஒரு சிலர் விதியேன்னு உட்கார்ந்திருப்பார்கள். இதில் குழந்தைகள் இருந்தால் - அது என்னென்ன சேட்டை செய்யுமென முன்பே முடிவு செய்யமுடியாது. ஆனால் கேபின் க்ரூ - விமானப் பணிப்பெண்கள் (வேலைக்காரிகள்) பாடுதான் பெருசு. குழந்தையின் கன்னத்தில் தட்டிச் சிரிக்க வேண்டும். அதெப்படி இப்படி ஒரு டெம்ப்ளேட் சிரிப்பை முகத்தில் தேக்கி வைத்திருக்கிறார்களோ எனத் தெரியவில்லை. காசுன்னா எல்லாச் சங்கடங்களையும் சகித்துக் கொள்ளத்தானே வேண்டும்.

பஸ்ஸில் உரசினால் பட்டையைக் கிளப்பி விடுவார்கள். விமானத்தில் வேறு வழியே இல்லை. உரசல் இருந்தே ஆகும். எனக்கு அல்ல நண்பர்களே. என்னைக் கொண்டு போய் விஐபி சீட்டில் உட்கார வைத்து விடுவார்கள். ஒன்றையும் பார்க்க முடியாத ராசியில்லாதவன். 

ஒரு முறை ஹைதராபாத் சென்ற போது ஒரு இளம் பெண் உட்கார்ந்திருந்தார். சரியான மப்பு போல. சரக்கு வாடை. சீட்டில் மல்லாந்து கிடந்தது. இந்தப் பக்கமாய் ஒரு வயதான அரசு அதிகாரி பெண். இந்தம்மா சீட்டில் நெட்டைக் குத்தலா உட்கார்ந்திருந்தார். சேலை என் மீது பட்டு விட்டால், கற்பு பறிபோய் விடுமென பதைப்பில் இருந்தார் போல. அவ்வப்போது உடைகளை ஒதுக்கிக் கொண்டிருந்தார். நடுவில் நான். அவ்வளவுதான் என் அதிர்ஷடமெல்லாம். 

பேசக்கூட முடியாது. கெத்தாய் இருக்கனுமே. யாரும் தவறாய் நினைத்து விடக்கூடாதே. இப்படி பல கட்டுப்பாடுகள் நமக்குள்ளே இருக்கும். உடல் நமது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே?

எல்லாரும் எல்லாவற்றையும் பேசவும், செய்யவும் முடியாது. மரணம் வரையிலும் இப்படித்தான் போகும். படிக்க கஷ்டமாக இருக்குமே? அதுதான் எதார்த்தம்.

செக் இன் செய்து,போர்டிங் பாஸ் பெற்றுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அதிசயம் ஆனால் உண்மை. அன்றைய நாளில் சுமார் 50 பேர்தான் சென்னைக்கு சென்றோம். 

கேபின் க்ரூ நல்லபடியாக கவனித்துக் கொண்டார்கள். 😉

முகங்களைப் பார்ப்பது எனக்கு நிரம்பவும் பிடிக்கும். ஏனெனில் நானொரு நாவல் எழுத முயன்று கொண்டிருக்கிறேன். அந்த நாவலில் வரும் ஹீரோயினுக்கு என் மனதில் ஒரு வடிவம் கொடுத்திருக்கிறேன். அந்த வடிவம் கொண்ட ஒரு பெண் முகத்தை நானும் கடந்த நான்கைந்து வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. 

ஆனால் இந்தப் பயணம் வேறொரு முகத்தை எனக்குக் காட்டியது. நான் விரும்பியது ஒன்று, கிடைத்தது ஒன்று. 

கருங்குயிலுக்கு தோகையில்லை ஆனால் இனிய குரலுண்டு.

கொள்ளை அழகுடைய தோகை கொண்ட மயிலுக்கு இனிய குரலில்லை.

இப்படித்தான் இயற்கை உயிர்களைப் படைத்திருக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்குமென நினைத்துப் பார்க்கிறேன். விடை தெரியவில்லை.

ஒரு குறை, ஒரு நிறை - முழு வடிவம். இரவு பகல் போல. 

ஆனால் இரவும் பகலும் உயிர்களுக்குத்தானே தவிர இயற்கைக்கு இல்லை அல்லவா? காலம் என்பதும் இயற்கைக்கு இல்லை. இயற்கை படைத்திருக்கும் உயிர்களுக்கு மட்டுமே காலம். 

சரி போகட்டும் வேதாந்தம். 

மீட்டிங்க் முடித்து விட்டு அரக்கப் பரக்க மீண்டும் கோவை நோக்கி கிளம்பினேன். கத்திபாரா பாலம் அருகில் கையில் புறாவோடு நின்றிருப்பாரே நேரு அவரைச் சுற்றிலும் பாலங்கள். பாலங்களுக்கு கீழே அப்டவுன் என்றொரு நிறுவனத்தைப் பார்த்தேன். அரசிடம் உபயோகமாய் இல்லாத இடங்களில் பொழுது போக்கு மற்றும் உணவகம் நடத்துகிறார்கள் போல. 

அங்கே இருந்த ஒரு உணவகத்தில் இரண்டு சப்பாத்தியும், சைவ குருமாவும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு நான்கரை மணி வாக்கில் போர்டிங்க் பாஸுடன் கேட் நம்பர் 101 முன்னால் இருந்த சேரில் உட்கார வைக்கப்பட்டேன்.

விமானங்கள் சிட்டுக் குருவி போல பறந்து கொண்டிருந்தன. ஆட்கள் ஏறினார்கள், இறங்கினார்கள். சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

இடது பக்கமாய் ஒரு குரல் கேட்டது. 

திரும்பினேன்.

அவளைப் பார்த்தேன்.


அச்சு எடுத்தால் போல இதே முகம் தான். ஆனால் ஒரு சில மிஸ்ஸிங்க். நெற்றிப் பொட்டில் குங்குமம், மூக்கில் லோலாக்கு. கத்தரிப்பூ நிறத்தில் பார்டர் போட்ட காட்டன் சேலை. 

வயது முப்பத்தைந்து இருக்கும்.

அவள் என்னைப் பார்த்தாள். 

என்னுடன் விமானத்தில் பயணித்தாள். 

என் அதிர்ஷ்டம் தான் எனக்கு முன்னே நிற்குமே. 

நான் விஐபி சீட்டில், அவளோ விமானத்தின் பின் சீட்.

அந்தக் கண்களுக்குள் சிறை கொண்ட மனதைப் பிடித்து, எதார்த்தத்துக்கு கொண்டு வர இந்த நொடி வரை முயன்று கொண்டிருக்கிறேன்.

அந்தக் கண்கள். 


பாரசீக கவிஞன் சாதி ஷிராசி எழுதினானே இப்படி - ஒரு வேளை அவனும் என்னைப் போல கண்களைப் பார்த்திருப்பானோ???

நீ என்னை விட்டுப் பிரிந்து சென்றபோது,

என் கண்கள் உன்னையே பின்தொடர்ந்து வந்தன.

இப்போது என் கண்கள் வெறும் கண்ணீரால் மட்டுமே நிரம்பவில்லை,

உன் நினைவுகளால் உறைந்து போயிருக்கின்றன


என் பிரியத்துக்குரிய கவிஞன் ஜலாலுதீன் ரூமியின் கவிதை இதோ கீழே

உன் கண்களை மூடு,

அப்போதுதான் 

உன்னால் இதயத்தின் 

கண் கொண்டு பார்க்க முடியும்.


பயணங்கள் முடிவதில்லை. 

அவளை நான் இனி பார்க்க முடியாது. எனக்கு அது தேவையுமில்லை. அந்த நொடியில் நிகழ்ந்த ஒரு பார்வை. அவ்வளவுதான் வாழ்க்கை.

வாழ்க்கையில் எல்லாமே துன்பம் தான். ஏதோ ஒரு நொடியில் ஏற்படும் புன்னகையைத்தான் நாம் இன்பம் என்கிறோம்.

அந்த ஒரு நொடிக்காகத்தான் வாழ்கிறோம். அந்த வாழ்க்கை எப்போதும் துன்பமே..

புரியாதவர்கள் விலகி விடுங்கள். புரிந்தவர்கள் புன்னகை செய்வார்கள்.

அது இந்த நொடியில் மலரட்டும்.

வளமுடன் வாழ்க.


Wednesday, May 27, 2026

பிரதமர் மோடி ஆட்சியின் 12 ஆண்டுகள் பயணம் - ஒரு பார்வை



உலக அரசியலில் சில தலைவர்கள் தேர்தலை வெல்வார்கள். சிலர் ஆட்சியை நடத்துவார்கள். ஆனால் மிக அரிதான சிலர் மட்டும் — ஒரு தேசத்தின் மனநிலையையே மாற்றி விடுவார்கள். அப்படிப்பட்ட தலைமைத்துவத்தின் பெயர் நரேந்திர மோடி.

2014க்கு முன்பிருந்த இந்தியாவை நினைத்துப் பாருங்கள். ஊழல் குற்றச்சாட்டுகள், முடங்கிய நிர்வாகம், உலக அரங்கில் மந்தமான நிலை, மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை. “இந்தியா இப்படி தான்” என்ற விரக்தி பலரிடமும் இருந்தது. அந்த நேரத்தில் வந்தவர் மோடி. ஒரு அரசியல்வாதியாக அல்ல. இந்தியாவை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையின் உருவமாக.

அவர் முதலில் மாற்றியது அரசாங்கத்தை அல்ல — மக்களின் மனநிலையை.

அரசு அலுவலக வாசல்களில் அலைந்து திரிந்த ஏழை மக்களுக்கு, “உங்களுக்கு உரியது நேராக உங்கள் கைக்கே வரும்” என்ற நிலையை உருவாக்கியது அவர். முன்பு மானியம் எங்கே போகிறது என்று தெரியாது. இப்போது உதவித்தொகை நேராக வங்கி கணக்கில். அதுவே நிர்வாக மாற்றம்.

முத்ரா யோஜனா மூலம் வேலை தேடும் இளைஞர்களை, வேலை கொடுக்கும் நிலைக்கு கொண்டு செல்ல முயன்றார். ஒரு தேநீர் கடை, ஒரு சிறிய தொழில், ஒரு பெண்மணியின் சுயதொழில் — இவைகளையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பகுதியாக பார்த்தார்.

உஜ்வாலா திட்டத்தில் கிராமத்து பெண்களின் சமையலறையில் புகை குறைந்தது. தூய்மை இந்தியா திட்டத்தில் பெண்களின் அவமானம் குறைந்தது. முத்தலாக் தடைச் சட்டத்தில் பல பெண்களின் பயம் குறைந்தது.

அரசியல் என்பது வெறும் தேர்தல் அல்ல; மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வருவது என்பதை நிரூபித்த ஆட்சி இது.

UPI பற்றி உலகம் இன்று பேசுகிறது.

ஒரு காலத்தில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பார்த்து வியந்த இந்தியா, இன்று தனது தொழில்நுட்பத்தை உலகிற்கு காட்டுகிறது. ஒரு டீக்கடையிலும் QR Code. காய்கறி விற்கும் அம்மாவிடமும் டிஜிட்டல் பரிவர்த்தனை. இதெல்லாம் சாதாரண மாற்றமல்ல. இது சமூக மாற்றம். காலத்தின் அடுத்தடுத்த மாற்றங்களை அவதானித்து, அதை மக்களின் கையில் கொண்டு சேர்க்கும் திட்டத்தினைச் செயல்படுத்திவர் பிரதமர் நரேந்தர மோடி.

வந்தே பாரத் ரயில் பாய்வதைப் பார்க்கும் போது, அது வெறும் ரயில் போல தெரியவில்லை. “நாமும் முடியும்” என்று ஓடும் இந்தியா போல தெரிகிறது. நெடுஞ்சாலைகள் நீள்கின்றன. விமான நிலையங்கள் பெருகுகின்றன.சிறிய நகரங்களும் உலக வரைபடத்தில் இணைகின்றன. ஒரு தேசம் நகர்கிறது என்ற உணர்வு உருவாகியுள்ளது. உலக அரசியலிலும் இந்தியாவின் குரல் மாறியுள்ளது. முன்பு உலக நாடுகள் இந்தியாவை “ஒரு பெரிய சந்தை” எனப் பார்த்தன. இன்று “ஒரு முக்கிய சக்தி” என பார்க்கின்றன.

G20 Summit மாநாட்டில் இந்தியா காட்டிய தலைமைத்துவம் சாதாரண விஷயம் அல்ல. உலக சக்திகள் மத்தியில் தன்னம்பிக்கையுடன் நின்ற இந்தியா — அது கடந்த சில ஆண்டுகளில் உருவான புதிய காட்சி. கொரோனா காலத்தில் உலகமே தடுமாறிய போது, இந்தியா தன்னைத்தானே காத்ததோடு நிற்கவில்லை. பல நாடுகளுக்கும் தடுப்பூசி அனுப்பியது. அப்போது தான் உலகிற்கு புரிந்தது — இந்தியா வெறும் மக்கள் தொகை கொண்ட நாடல்ல; மனிதநேய சக்தியும் கொண்ட நாடு.

தேசிய பாதுகாப்பு விஷயத்தில் மோடி அரசின் அணுகுமுறை இன்னும் வேறுபட்டது. “தாக்கினால் பதில் வரும்” என்ற புதிய மனநிலையை இந்தியா உலகிற்கு காட்டியது. Article 370 நீக்கம் போன்ற முடிவுகள், பல ஆண்டுகளாக யாரும் தொடத் தயங்கிய விஷயங்கள். அதை செய்து காட்டிய துணிவு — ஆதரிப்பவர்களையும், எதிர்ப்பவர்களையும் ஒரே நேரத்தில் வியக்க வைத்தது.

ஒரு தலைவரின் உண்மையான வெற்றி என்ன?

அவர் சென்ற பிறகும், அவர் உருவாக்கிய நம்பிக்கை மக்களிடம் வாழ்ந்தால் — அதுதான் உண்மையான வெற்றி.

இன்று இந்தியாவின் சாதாரண மனிதனும், “நம் நாடு உலகத்தில் உயர முடியும்” என்று நம்புகிறான் என்றால், அதில் மோடி என்ற மனிதரின் தாக்கம் மிக அதிகம்.

12 ஆண்டுகள் என்பது கால அளவு மட்டும் அல்ல. ஒரு தேசத்தின் தன்னம்பிக்கையை மீண்டும் எழுப்பிய காலம்.

விமர்சனங்கள் இருக்கலாம்.அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை மறுக்க முடியாது.

நரேந்திர மோடி என்ற பெயர், இந்திய அரசியலில் ஒரு காலத்தை மட்டும் அல்ல — ஒரு மாற்ற மனநிலையையும் குறிக்கிறது.

வரலாறு சிலரை பதிவு செய்யும். சிலரை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளும்.

பிரதமர் மோடி — அந்த இரண்டாவது வகை.

அவர் நீண்ட ஆயுளுடன், நிலைத்த புகழுடன் வாழ இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

அவர் என்னளவில் ஒரு கடவுளின் அவதாரத்தினைப் போல எப்போதும் ஒரு ஹீரோ. இந்தியாவின் நாயகன்.

வளமுடன் வாழ்க. 


#12YearsOfModiEra #BuildingNewIndia #ViksitBharat2047

Saturday, May 16, 2026

இந்திய மாநிலங்களால் நிதித் தன்னாட்சியைப் பெற முடியுமா?

இந்தியாவின் நிதி கூட்டாட்சி கட்டமைப்பு கொண்டது. நாடு முழுவதும் உள்ள பல மாநில அரசுகள், மத்திய அரசைச் சார்ந்திருக்கும் தங்களின் வருவாய் நிலை குறித்து தொடர்ந்து பல கவலைகளை எழுப்பி வருகின்றன — குறிப்பாக ஜிஎஸ்டி (GST) இழப்பீடு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வரிப் பகிர்வு விகிதாசாரங்களின் ஏற்ற இறக்கங்கள், கடன் வரம்புகள் மற்றும் மாநில அளவிலான சீர்திருத்தங்களுக்கான நிர்வாக அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் ஆகியவை இதில் முதன்மையானவை.

ஆனால், அரசியல் விவாதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு முக்கியமான பொருளாதாரக் கேள்வி இதுதான்:

மத்திய அரசின் நிதிப் பகிர்வை மட்டுமே அதிகம் நம்பியிருக்காமல், இந்திய மாநிலங்கள் எவ்வாறு நிலையான, சுதந்திரமான வருவாய் கட்டமைப்பை உருவாக்க முடியும்?

மாநிலங்களை வெறும் "வரியைச் சார்ந்திருக்கும் நிர்வாகங்களாக" பார்க்காமல், "செல்வத்தை உருவாக்கும் பொருளாதார இயந்திரங்களாக" மாற்றுவதில்தான் எதிர்காலம் அடங்கியுள்ளது என VSJ அசோசியேட்ஸ் (VSJ Associates) நம்புகிறது. 

அதற்கான முக்கிய வழிகள் ஒரு சிலவற்றைப் பார்க்கலாம்.

சொத்துக்களைப் பணமாக்குதல் (Asset Monetization): மாநிலங்களிடம் பயன்படுத்தப்படாத பெருமளவிலான நிலங்கள், போக்குவரத்து சொத்துக்கள், தொழில்பேட்டைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் (PSU) உள்கட்டமைப்புகள் உள்ளன. முறையான குத்தகை, பொது-தனியார் கூட்டு (PPP) மாதிரிகள் மற்றும் மறுசீரமைப்பு மூலம் நீண்ட காலத் தொடர் வருவாயை ஈட்ட முடியும்.

டிஜிட்டல் மற்றும் கண்டுபிடிப்புப் பொருளாதாரங்கள் (Digital & Innovation Economies): உள்ளூர் பொருளாதார நடவடிக்கை மற்றும் வேலைவாய்ப்பை விரிவாக்க, ஃபிண்டெக் (Fintech), மின்சார வாகனங்கள் (EVs), செமிகண்டக்டர்கள், ஏஐ (AI), பசுமை ஆற்றல் மற்றும் டீப்-டெக் உற்பத்தி ஆகியவற்றில் மாநிலங்கள் பிரத்யேக கட்டமைப்புகளை உருவாக்கலாம்.

மாநில முதலீட்டு நிதியங்கள் (Sovereign-Style State Investment Funds): சுரங்கம், துறைமுகங்கள், எரிசக்தி அல்லது தொழில்துறைகளில் இருந்து கிடைக்கும் உபரி வருவாயை, உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கான எதிர்கால வருமானத்தை உருவாக்கும் வகையில் முதலீடு செய்யலாம்.

பசுமைப் பத்திரங்கள் மற்றும் காலநிலை மூலதனம் (Green Bonds & Climate Capital): உலகளாவிய ESG (சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை) மற்றும் காலநிலை நிதிச் சந்தைகள், மாநிலங்கள் தங்களின் நிலையான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நேரடியாக மூலதனத்தை திரட்டுவதற்கான பெரிய வாய்ப்புகளை வழங்குகின்றன.

வரி அல்லாத வருவாய் விரிவாக்கம் (Non-Tax Revenue Expansion): சுற்றுலா, தளவாடங்கள் (Logistics), துறைமுகங்கள், நகர்ப்புற சேவைகள், சுரங்க ராயல்டி, நீர் மேலாண்மை மற்றும் டிஜிட்டல் ஆளுகை சேவைகள் ஆகியவை பாரம்பரிய வரி விதிப்புக்கு அப்பாற்பட்டு மாநில நிதியை கணிசமாக வலுப்படுத்த முடியும்.

இருப்பினும், நிதித் தன்னாட்சிக்கு சட்டரீதியான அனுமதி அவசியமாகும். நிர்வாகத் தடங்கல்கள் மற்றும் தாமதங்களைத் தவிர்க்க, பொருளாதார சீர்திருத்தங்கள் சட்டப்பூர்வமாக வலுவானதாகவும், கொள்கை சார்ந்ததாகவும்  இருக்க வேண்டும். இந்திய கூட்டாட்சியின் அடுத்த கட்டம் வெறும் வரிப் பகிர்வால் மட்டும் தீர்மானிக்கப்படாது — மாநிலங்கள் எவ்வளவு திறம்பட சுதந்திரமான பொருளாதார மதிப்பை உருவாக்குகின்றன என்பதைக் கொண்டே அமையும்.

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பிற தொழில்மயமான மாநிலங்கள் இந்த மாற்றத்தை முன்னெடுப்பதற்கான கட்டமைப்பை ஏற்கனவே பெற்றுள்ளன.

மாநிலத்தின் நிதி ஆலோசகர்கள் மாநில வருவாய் இனங்களைப் பகுத்து பிரித்து - புதிய வரி விதிப்புகளை, புதிய முதலீடுகளை உருவாக்குவது சாத்தியமா? அது இந்தியக் கூட்டாட்சி சட்டமைப்புக்குள் வருகிறதா என ஆராய்ந்து அதற்கேற்ப திட்டமிடல் வேண்டும்.

இதைப் பற்றி இன்னும் விரிவாக எழுதலாமென்றால், படிக்கும் உங்களுக்கு போரடிக்கும் என்பதால் இத்துடன் முடித்து விடுகிறேன்.

நான் எழுதும் பொருளாதார ஆய்வுகள் பற்றிய பதிவுகளை எனது லிங்க்டு இன் தளத்தில் பார்க்கலாம். அது ஆங்கிலத்தில் இருக்கும்.

முடிந்தவரை தமிழில் மொழி பெயர்த்து இங்கும் பதிவு செய்ய முயல்கிறேன்.

வளமுடன் வாழ்க

Saturday, May 2, 2026

வளர்ச்சியா? விபரீதமா? - ஒரு கோவைவாசியின் ஆதங்கம்

கோயம்புத்தூரின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று விளாங்குறிச்சி. விமான நிலையம், தொழிற்சாலைகள் மற்றும் புகழ்பெற்ற கல்லூரிகளுக்கு மிக அருகில் அமைந்துள்ள இப்பகுதியில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது வீடு இருந்தது.

அப்போது எனது வீட்டிற்கு எதிரே ஒரு ஏக்கர் பரப்பளவில் செழிப்பான கீரைத் தோட்டம் ஒன்று இருந்தது. விதவிதமான கீரைகள் அங்கு பயிரிடப்படும். எனது அலுவலகம் கணபதி பகுதியில் இருந்ததால், தினமும் காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி, மாலை 5 மணிக்குத் திரும்புவேன்.

வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது, விநாயகபுரம் பகுதி வரை வெயில் உறைக்கும். ஆனால், அந்தப் பகுதியைக் கடந்தவுடன் காலநிலை சட்டென்று மாறிவிடும். ஜில்லென்று வீசும் காற்றில் உடலும் மனதும் குளிரும். அந்த கீரைத் தோட்டத்தைத் தாண்டி வீட்டிற்குள் நுழைந்தால், ஏதோ ஒரு மலைப்பிரதேசத்திற்குள் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்படும்.

வீட்டைச் சுற்றி தென்னை மரங்கள், வாசலில் பிரம்மாண்டமான வேப்ப மரம் என பசுமை போர்த்திய சூழல் அது. நம்ப மாட்டீர்கள், இரவு நேரங்களில் மின்விசிறி (Fan) கூட போட முடியாது; அந்த அளவிற்கு குளிர் இருக்கும். விடியற்காலையில் நிலவும் கடுங்குளிரைத் தாங்க முடியாமல், வட இந்தியாவில் பயன்படுத்துவதைப் போன்ற தடிமனான கம்பளிகளை (Sweaters/Blankets) வாங்கிப் பயன்படுத்தினோம்.

காலப்போக்கில் அந்த கீரைத் தோட்டம் வணிக நோக்கத்திற்காக விற்கப்பட்டு, விவசாயம் நிறுத்தப்பட்டது. அங்கிருந்துதான் எங்களுக்கான அவதி தொடங்கியது. இன்று கோவையில் வெப்பநிலை 32°C முதல் 35°C வரை இருந்தாலும், புழுக்கத்தின் தாக்கம் அதைவிடப் பல மடங்கு அதிகமாக உணரப்படுகிறது.

அசுரத்தனமான தொழில் வளர்ச்சியின் காரணமாக எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள், அலுவலகங்கள் என கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன.

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பேரூர் முதல் வெள்ளியங்கிரி வரை இருந்த பல நூற்றாண்டு காலத்து மரங்கள் கருணையின்றி வெட்டி வீழ்த்தப்பட்டன.

இதன் விளைவாக, இன்று இரவு நேரங்களில் கூட வெப்ப அலை வீசுகிறது. இயற்கையான குளிர்ச்சியில் இருந்த எனது வீடு, மெல்ல மெல்ல ஒரு மைக்ரோவேவ் ஓவன் போல மாறத் தொடங்கியது. வேறு வழியின்றி குளிரூட்டி (A.C.) பொருத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். வெயிலின் தாக்கத்தைக் குறைக்க வீட்டின் கூரை மீது தென்னை ஓலைகளைப் பரப்பி, ஒரு நாளைக்கு மூன்று முறை தண்ணீர் தெளித்துப் பராமரிக்க வேண்டியதாயிற்று.

இன்றைய அபார்ட்மெண்ட் கலாச்சாரம் என்பது மனிதர்களை வெப்பக் கூண்டுகளுக்குள் அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலை போன்றது. வளர்ச்சி என்பது மனித வாழ்வியலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்ய வேண்டுமே தவிர, தீங்காக அமையக்கூடாது.

சுயநலத்தோடு நாம் மரங்களை அழித்துக் கொண்டே போனால், வரும் சந்ததியினருக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம்? உடல் வெப்பம் அதிகரித்தால் ஏற்படும் பாதிப்புகள் சொல்லொணாதவை.

இதைச் சரி செய்யப்போவது அரசாங்கம் மட்டுமல்ல, மக்களாகிய நாம்தான்.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை எதிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு வீடும் பசுமையை மீட்டெடுக்க முயல வேண்டும்.

வளர்ச்சி என்பது பொருளாதார வெற்றிக்காக மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்விற்காகவும் இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.

நமது பூமியை, அதன் இயற்கை வளங்களோடு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும்.


நீதிக்கு கண்கள் உண்டு


சமீபத்தில் ஒரு நீதிபதி பேசுகையில், "இந்தியாவில் உள்ள சட்டக் கல்லூரிகளில் அர்த்தசாஸ்திரம், மனுஸ்மிருதி உள்ளிட்ட வேதங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இது அவரது தனிப்பட்ட கூற்றாக இருந்தாலும், பல்வேறு நாளிதழ்களில் இது தலைப்புச் செய்தியாக வெளியானபோது சில ஐயங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்தியா இதுநாள் வரை ஒரு சமூக, சமதர்ம, மதச்சார்பற்ற நாடு என்றே அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. வானளாவிய அதிகாரம், கேள்வி கேட்க அவ்வளவு எளிதில் முடியாத அதிகாரத்தின் பின்னால் இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என வரலாறு சொல்கிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 'மதச்சார்பற்ற அரசு' என்ற கொள்கையே இங்கு ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாக்கிறது. 


"எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்" என்ற சமதர்ம நோக்கோடு இந்தியாவை உருவாக்குவதற்காக, நம் தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து விடுதலை பெற்ற பின் பெரும்பாடுபட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பல இன்னல்களையும் துயரங்களையும் கடந்து உருவாக்கிய ஜனநாயக நாட்டில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


ஆனால், தற்போதைய சூழலில் நாட்டை மீண்டும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் போக்கு நிலவுகிறது. ஆளும் அரசின் கீழ் நிர்வாகத்தில் இருக்கும் சில அமைப்புகளும், குறிப்பிட்ட மதம் மற்றும் மொழிப் பற்றுடைய அதிகாரிகளும் இணைந்து இத்தகைய கருத்துருவாக்கங்களை உருவாக்கி வருகின்றனர். 


இது இந்தியாவை ஒரு மிகப்பெரிய அழிவை நோக்கித் தள்ளும் என்பதே உண்மை. இன்னும் கல்வி முழுமையாக கிடைத்திடாத நிலையில் இருக்கும் இந்தியாவின் பாமரர்களுக்கு - இது என்னவென்றே புரியாது. கல்வி கற்றவர்களுக்கே புரியாத பல உண்டு.


படித்தவர்கள் மத்தியில் இது குறித்த தெளிவும் விழிப்புணர்வும் மிக அவசியம். மதமும், மொழியும், இனமும் நம்மை நல்வழிப்படுத்தவே இருக்கின்றனவே தவிர, வன்முறைப் பாதைக்கோ அல்லது மற்றவர்களைத் துன்புறுத்துவதற்கோ அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். 


அதிகாரத்தில் இருப்பவர்கள் இத்தகைய கருத்துகளைப் பேசும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். ஆனால், இந்தியாவைப் பழைய சாதியக் கட்டுப்பாடுகளுக்குள் கொண்டு சென்று, மீண்டும் ஒரு சில ஆதிக்க சக்திகளின் கீழ் தள்ளுவதே இவர்களின் மறைமுக நோக்கமாக இருக்குமோ என்ற அச்சம் எழுகிறது. 


ஆங்கில ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுவிக்கிறோம் என நீதி தேவதையின் கண்களில் கட்டப்பட்டிருந்த கருப்புத் துணி நீக்கப்பட்டது. பார்வையில் ஏழை, பணக்காரன், சாதி, மதம் தெரியும் என்பதால் நீதிக்கு காதுகள் மட்டுமே என சிம்பாலிக்காக இருந்தது இப்போது பார்வையும் உண்டு என மாற்றப்பட்டது. கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி செய்தியைப் படித்துக் கொள்ளவும்.


https://www.ndtv.com/india-news/lady-of-justice-goddess-of-justice-with-new-justice-statue-in-supreme-court-a-law-is-not-blind-message-6803654


சமீபத்திய நீதிமன்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது அரசியல்வாதிகளைப் போல அப்சர்வேஷன்கள் என்ற நிலையில் பல கருத்துக்களை நீதிமன்றங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அக்கருத்துக்கள் வழக்காகி மீண்டும் தடையாணைகள் பெறப்படுகின்றன.


இந்த யதார்த்தத்தை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


Tuesday, April 14, 2026

நரலீலைகள் (18) - காமுகர்களின் வேட்டைகள்

”சந்து, சந்து”

“என்ன மாயா?”

“வந்துட்டாரு ஆசிரியரு எழுத....!”

”அடப்போங்க மாயா...! இவரு எப்போ எழுதுவாரு, இந்த நாவலை எப்போது எழுதி முடிப்பாருன்னு தெரியவில்லை. எனக்கு செம கடுப்பா இருக்கு”

“அதென்ன அப்படி சொல்லிவிட்டாய் சந்து? நாவல் எழுதுவது என்பது என்ன அவ்வளவு எளிதா? இவரென்ன பின் நவீனத்துவ சாணி போல எழுத நவீன பின்புற எழுத்தாளரா? ஆட்டுப் புழுக்கை போல எழுதி குப்பைக் கூடைக்கு கூட உதவாத சுயமோகனா? அவர் எழுதும் போது எழுதட்டும்”

”மாயா, எழுதுவது என்ன அவ்வளவு சிரமமா?”

“ஆமாம் சந்து. பிகேபி, சுபா, ராஜேஷ்குமார் வகையறாக்கள் டெம்ப்ளேட் வெச்சு இருக்கிறார்கள். கொஞ்சம் அங்கே இங்கே பிச்சு போட்டு எழுதி விடுவார்கள். இலக்கிய எழுத்தாளர்கள் ஏழ்மைகளை விரிவாக எழுதி விடுவார்கள். மண் மனத்துடன் எழுதுவது என்பதும் அந்தந்த ஊரினைச் சேர்ந்தவர்களுக்கு கை வந்து விடும். அதுவல்லாம் எழுத்தே அல்ல சந்து”

“பின்னே?”

“பிறிதொரு நாள் சொல்கிறேன்,இப்போது ஆசிரியர் எழுதுவதைப் படிப்போம்”

* * *

இன்றைய தினகரன் செய்தியினைப் படித்து விடுங்கள்.

 


இதைப் படிக்கும் போது உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லை? ஏழ்மையாக இருப்பது சாபமா? 

இல்லை அது வரம். ஏழ்மையில் உழன்றவர்கள் தான் முன்னேறியிருக்கிறார்கள். ஆனால் ஏழ்மையான பெண்களின் நிலை?

ஏழை மாணவிகளுக்கு இலவச பஸ், மாதம் 1000 ரூபாய் கொடுத்ததைக் கிண்டல் செய்தானே எட்டப்பனும், நடிகைக் கற்பழிப்பாளனும். இவனுகளுக்கு அறம் என்றால் என்னவென்று தெரியுமா? சுய ஒழுக்கம், சுய ஒழுங்கு என்றால் என்னவென்றே தெரியாத உத்தம சிகாமணிகள் இவர்கள். இவர்களை நம்பி பின்னால் திரியும் ஒவ்வொருத்தரும் அப்பாவி அல்ல. கொடூர முகமூடி மாட்டியவர்கள்.

ஸ்டாலின் எதற்காக 1000 ரூபாய் கொடுத்தாருன்னு தெரியவில்லையா உங்களுக்கு? 

ஏழை மாணவிகள் படித்து முன்னேறி விடக்கூடாது என்பதில் பலருக்கு உள்ளூர இருக்கும் வன்மம். இவர்கள் தான் ஏழைகளின் படிப்புக்கு அரசு உதவினால் - அய்யோ இனாம், இலவசம், அது இதுவென்று அசிங்கப்படுத்துவதைப் போல பேசுவார்கள். 

அண்ணா பல்கலைக் கழகத்தில் அனுமதி கிடைத்துப் படிக்க, இந்த மாணவி எவ்வளவு துன்பப்பட்டிருப்பார்? எந்தளவு துயரங்களை அனுபவித்திருப்பார்? பல்கலைக் கழகத்துக்குள் வந்ததும் எப்படி இந்த ஞானவேல்பாபு அந்த மாணவியைத் தடம் மாற்றி அழித்து விட முனைந்திருக்கிறான் எனப் படித்துப் பாருங்கள்.

ஏழ்மையாக பிறப்பது கொடுமை அல்ல. ஏழ்மையானவர்கள் முன்னேறி விடக்கூடாது என்பதற்காக பல்வேறு தடங்கல்களை உருவாக்கும் அயோக்கியர்கள் தான் கொடுமையானவர்கள். படிக்கவே அனுமதிக்காமல் அந்தத் தேர்வு, இந்தத் தேர்வு என பல தடங்கல்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைத் தலைவர்கள் எனக் கொண்டாடும் நபர்களே ஆபத்தானவர்கள்.

இவர்களுக்கு எது நல்லது, எது கெட்டது எனக் கூடவா தெரியாது? அந்தளவுக்கா சிந்திக்கும் திறனில்லாமல் இருக்கிறார்கள்? அவர்களுக்கு எல்லாமும் தெரியும். தெரிந்தே கிண்டல் செய்கிறார்கள். விமர்சிக்கின்றார்கள். அந்தளவுக்கு வன்மும், கொடூரமமும் கொண்டவர்கள் இவர்கள். இவர்கள் சகோதரனாக, சகோதரியாக, அம்மாவாக, அப்பாவாக, உறவினராக, நண்பராக இருக்கலாம். இவர்களிடமிருந்து விலகியே இருங்கள். 

இவர்களின் பாவம் உங்களின் ஜென்மத்துக்கு உங்களையும், உங்கள் வாரிசுகளையும் தொடரும். 

உங்கள் மனதைப் பதை பதைக்க செய்யும் உண்மைச் சம்பவத்தைச் படியுங்கள்.

தமிழகத்தின் பிரபலமான ஊரில் இருக்கும் பழமையான கல்லூரி ஒன்றில் நடக்கும் அக்கிரமத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்.

பெரிய மனிதர்கள் (அப்படித்தான் சொல்கிறார்கள்) ஒன்று கூடுகையில் என்ன பேசுவார்கள் என நினைக்கிறீர்கள்? பொம்பளை இல்லை கிசு கிசு. இதைத் தவிர வேறொன்றினையும் பேசவே மாட்டார்கள். தான் சந்தித்த பெண்களை  நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவது. அவளுடனான அனுபவத்தைக் கொஞ்சம் கூட நாகரீகமில்லாமல் பலரிடமும் பேசிச் சிரிப்பது. இந்தக் கூட்டத்தில் நான் சொல்லப் போகும் நபர் இல்லை.

இவர் கொஞ்சம் வித்தியாசமானவர்.

ஒரு நாள் இவரின் நண்பருக்கு சொத்து தொடர்பான பிரச்சினை. நண்பருடன் பீமனாகிய நானும் அந்தச் சொத்தினைப் பார்க்க காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது கோவையின் ஒரு கல்லூரி வழியாகக் கார் சென்றது. கல்லூரியைப் பார்த்ததும் சிரித்தார்.

”இந்தக் கல்லூரியில் படிக்க வரும் ஏழைப் பெண்களில் யாரோ ஒருவர் வருடா வருடம் என் நண்பரின் மனைவியாக வாழ்கிறார் அண்ணே” என்றார்.

”அண்ணே, வருடா வருடம் இந்தக் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண் படிப்பினை முடித்து விட்டு வெளியே செல்வார், அப்போது அவர் இவருக்கு ஒரு ஏழைப் பெண்ணை அறிமுகம் செய்து வைப்பார். அந்த ஏழைப் பெண்ணின் படிப்புச் செலவு, உடைகள், புத்தகங்கள், கைச் செலவுக்கு பணம் என அனைத்தையும் அவர் செய்வார். அதற்கு கைமாறாக மாதா மாதம் ஹெஸ்ட் ஹவுஸுக்கு வந்து அவருடன் உறவு கொள்ள வேண்டும். டீசண்ட் ஆள் அவர். இப்படி எத்தனையோ பெண்களை அவர் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். எனக்குத் தெரிந்தது இந்தக் கல்லூரிச் சம்பவம் மட்டும். படித்து முடித்ததும் விரும்பினால் அவரின் நிறுவனத்தில் அந்தப் பெண்ணுக்கு வேலை. திருமணமும் செய்து வைத்து விடுவார். வேண்டாமென்றால் அத்துடன் உறவு துண்டிக்கப்பட்டு விடும்.”

“இது இந்த நாள் வரை தொடர்கதையாகத் தொடர்கிறது அண்ணா. தெளிவான திட்டமிடல், இளம் பெண்களை காசைக் காட்டி வலையில் வீழ்த்தி விடுகிறார்.பாவம் அந்த ஏழைப் பெண் என்னதான் செய்யும். பத்து ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் துன்பப்படும் அவர்கள் முன்னால் ஆயிரக்கணக்கில் பணத்தைக் காட்டியதும், எந்த வித வழியும் இன்றி மடங்கி விடுகிறார்கள்.”

ஸ்டாலின் இந்த ஏழைப் பெண்களுக்கு ரூ.1000 கொடுத்ததும் யாரெல்லாம் விமர்சிக்கின்றார்களோ அவர்களும் இப்படிச் செய்து கொண்டிருந்திருக்கலாம். சாத்தியங்கள் உண்டு அல்லவா? கல்விக்கு அரசு காசு கொடுப்பதை விமர்சிப்பவர்கள், எவ்வளவு குரூரமானவர்கள் எனச் சிந்தியுங்கள்.

இதைப் போன்ற பல கதைகளை நாம் தினசரிகளில் படித்துக் கொண்டே இருக்கிறோம். 

பி.எச்.டி படிப்பு பற்றிய ஆராய்ச்சிகளில் மெண்டராக இருக்கும் பல கல்லூரி பேராசிரியர்கள் கதைகளைப் படித்திருப்பீர்கள்.

ஒவ்வொரு நொடியும் எங்கோ யாராலோ யாரு ஒரு ஏழ்மையான பெண் ஏதாவது ஒரு வகையில் பாலியல் துன்பத்துக்கு ஆட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறாள் என்கிறது பல பத்திரிக்கை செய்திகள்.

நான் உங்களிடம் வேண்டுவது ஒன்றே ஒன்று தான். கல்விக்கு உதவி செய்யும் அரசு பெண்களின் துயரத்தினை ஓரளவு களையும் படி உதவுகிறது. அதை நக்கல் செய்யாதீர்கள்.

இதோ ஒன்றிய அரசின் நிதியமைச்சர் உழவர்களுக்கு உதவி செய்யாதே என கடிதம் எழுதுகிறார். இந்தக் கொடுமையெல்லாம் எந்த நாட்டிலும் நடக்காது. ஆனால் இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு நிதியமைச்சர் செய்கிறார் என்கிறது செய்திகள்.

இதற்கெல்லாம் விடிவுகாலம் தான் என்ன?

அது உங்கள் முடிவில்.

* * *

”மாயா, படிக்கவே மனம் பதறுதே. இது உண்மையாக இருக்குமோ?”

”சந்து, இது கதை தானே? இதை நம்புவதும், நம்பாததும் அவரவர் முடிவு. ஆனால் இடையில் ஆங்காங்கே நடப்புச் செய்திகளையும் இணைத்து விடுகிறார் ஆசிரியர்”

“மாயா, அடுத்து எப்போ?”

“அது நாவலின் கையில் இருக்கிறது”




Saturday, April 4, 2026

கதைகளை நம்பாதீர்கள் - அடிமைத்தனத்தின் ஆரம்பம் கதை

யுவால் நோவா ஹராரியின் நெக்ஸஸ் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கான அடிக்குறிப்புகளுடன் நம்மைச் சுற்றி நடக்கும் சதிகளை விவரிக்கிறது நெக்ஸஸ். 

அவ்வகையான சதிகளில் ஒன்று கதை. 

பல நூற்றாண்டுகளாக குழந்தைகளுக்கு பெற்றோர் கதை சொல்லுதல் என்பது தொன்று தொட்டு வரும் வழக்கம். இதை நாம் எளிதில் கடந்து விடுகிறோம். ஆனால் இதற்குப் பின்னால் மாபெரும் அடிமைத்தனத்தின் விதை ஊன்றப்படுகிறது என்பதை அந்தப் புத்தகம் விரிவாக எடுத்துரைக்கிறது.

ஒரு விவரக் கணக்கை மனதில் வைத்திருப்பது என்பது எளிதல்ல. ஆனால் அதையே ஒரு கதையாக மாற்றி விட்டால் - கதை எளிதில் மனதில் பதிந்து விடும். உங்களுக்குப் புரிகிறதா?

தமிழில் புராதனம் என்ற சொல்லே புராணமென்று மாறியது என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள். 

புராணங்களின் சாரங்கள் பல விதக் கிளைக்கதைகளின் தொகுப்பாக இருப்பதை நாமெல்லாம் படித்திருப்போம். செவி மூலம் ஒவ்வொருவரிடமும் கடத்தப்பட்ட, ஆராயப்படாத, உண்மையிருக்கிறதா என ஆய்வுக்கு உட்படுத்தாத வகையில் இவ்வகைக் கதைகள் உருவாக்கப்பட்டு, பல நூற்றாண்டுகளாக, பல ஜென்மங்களாய் ஒவ்வொரிடமும் கடத்தப்பட்டு, எழுத்துகள் உருவான பின்னே அவை புத்தகங்களாக பதிக்கப்பட்டிருக்கின்றன. கதைக்கு நதிமூலம் கேட்கக்கூடாது என்று சப்பைக்கட்டு வேறு உண்டு.

இந்த வகையில் பரப்பிய கதைகளின் நாயகர்கள் இன்று கடவுளர்களாய் வணங்கப்பட்டு வரும் நவீன காலக் கல்வியின் அசிங்கமான இயலாமையை நாமெல்லாம் கண்டு வருகிறோம். கல்வி உண்மையை உரைத்தல் வேண்டும். ஆனால் உண்மையே இல்லாத கல்வியைக் கற்றுக் கொடுக்கிறது நவீன நவநாகரீக உலகம். மதங்களின் அடிமைக் கூட்டத்தினை உருவாக்க கல்வி மிக நுட்பமாக பயன்படுத்தப்படுகிறது.

கதைகள் என்பவை செலவற்ற முறையில், பெரும் பிரயத்தனமற்ற வகையில், மிகச் சிறந்த ஊடக கடத்தியாக இருக்கிறது. செய்திகளை விட கதைகளும், அதைச் சுற்றிய கிசுகிசுக்களும் ஒளியை விட வேகமாகப் பரவி, அவை மக்களின் மனதில் பதிய வைக்கப்படுகின்றன.

இன்றைக்கு வைரல் என்ற வார்த்தையை நாமெல்லாம் கேட்டிருப்போம். கதையின் நவீன, குறுகிய வடிவம் தான் வைரல்.

இந்த வைரல் செய்திகளின் உண்மைத்தன்மையை எவரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. பலருக்கும் பகிரப்படும் இந்த வைரல் செய்திகள் பல உண்மைகளை மறைத்து விடும். இந்தியா இப்போது சந்தித்து வரும் சமையல் எரிவாயு பிரச்சினைக்கு இந்த போலியான வைரல் செய்திகளே காரணம். நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். தகுதியற்றவர்களை ஹீரோக்களாக மாற்றி விடுகின்றன இந்த வைரல் செய்திகள்.

போலிச் செய்திகள் போலி பிம்பங்களை உருவாக்கி, உண்மையை மறைத்து விடும். 2ஜி செய்திகள் அத்தனையும் புரட்டு, பொய்கள் என்பதை நாமெல்லாம் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிறகே, நீண்ட காலத்துக்குப் பின்னால் புரிந்து கொண்டோம். 

அதே போல டெல்லியில் அரவிந்த் கேஜரிவால் மீது போடப்பட்ட மதுக் கொள்கை திட்டமிடல் வழக்கு - ஆதாரமில்லாமல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதையும் படித்திருக்கிறோம். 

ஆம் ஆத்மி ஆட்சியில் இல்லாமல் செய்யப்பட்டது. இதை அரசின் அத்தனை அதிகாரங்களும் ஒன்றினைந்து செய்த சதிச் செயல் என்று பலரும் எழுதி வருகிறார்கள்.

இதைப் போல நம்மைச் சுற்றி வரும் ஒவ்வொரு செய்திகளும், கதைகளும் ஆராயப்படாமல் நம்பப்படுகின்றன. இன்றைக்கு எந்த தகுதியுமில்லாத, மக்களுக்கு ஒரு துளி வியர்வை சிந்தாதவர்கள் எல்லாம் தலைவர்கள் என்று அழைக்கப்படும் வித்தையை இந்த வைரல் செய்திகள் உருவாக்கி இருக்கின்றன. இதை நம்பும் பலரின் வாழ்க்கை அவர்களிடத்தில் இல்லாமல் எவனோ ஒருவனின் கையில் இருப்பதைக் கூட அறிந்து கொள்ளா இயலாத அறிவிலிகளாய் இருக்கிறார்கள்.

கதை சொல்லல் என்பது நம்மை அடிமைப்படுத்தும் ஆரம்பப் புள்ளி என்பதை மறந்து விடாதீர்கள். 

நீங்கள் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றிலும் நடப்பவைகளை புரிந்து கொண்டால், வாழ்க்கைப் பாதையை செவ்வனே பராமரித்து, இன்பமாக வாழலாம். 

ஆகவே உங்கள் அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் புத்தகம் - 

யுவால் நோவா ஹராரியின் - நெக்ஸஸ்.

தமிழில் கிடைக்கிறது வாங்கிப் படித்துப் பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் உலகம் உடைத்து சுக்கு நூறாக்கப்படும்.