குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, February 15, 2026

அன்னபூர்ணா சுந்தர்ராஜன் - நினைவஞ்சலி

கோவை என்றாலே ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கெளரிசங்கர் உணவுப் பிரியர்களுக்கு நினைவிலாடும். எண் சாண் உடலுக்கு உணவே பிரதானம். அன்னபூர்ணாவின் காஃபியைக் குடிக்காதவர்கள் ராசி இல்லாதவர்கள் எனலாம். எனது இனிய நண்பர் கோவையின் முன்னாள் கமிஷனரின் ஒவ்வொரு நாளையும் அன்னபூர்ணாவின் காஃபி தான் துவக்கி வைக்கும். ’அதென்னவோ தெரியவில்லை சார், அந்தக் காப்பியைக் குடிக்காமல் ஒரு நாள் பொழுது போவதில்லை’ என்பார்.

இப்படி இன்னும் எத்தனையோ பேர் அன்னபூர்ணாவிடம் சரணாகதி அடைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் கணபதி அன்னபூர்ணாவில் மாலை நேரம் கொழுக்கட்டையும், காஃபியுடன் தான் எனது அன்றைய நாள் முடியும். மதியம் போல ஒரு காஃபி.

ஒவ்வொரு பத்திரப்பதிவின் போதும் அன்னபூர்ணாவில் சாப்பிடுவது வாடிக்கை. இப்படி எத்தனையோ நாட்கள் உடலோடும், உணர்வோடும் ஒன்றியது அன்னபூர்ணா ஹோட்டலின் உணவு. 



அய்யாவுடன் எனக்கு முதலில் அறிமுகமானது நமது குருநாதரின் ஜீவசமாதியில் தான். சென்னையிலிருந்து வந்திருந்த ராசு என்ற நண்பரும் நானும் ஆசிரமம் சென்றிருந்தோம். இந்த ராசு என்பவர் இந்திய அளவில் மிக முக்கியமான பொருளாதார வல்லுனர் ஆவார். இவரும் அமமுக தலைவர் தினகரன் அவர்களும் கல்லூரித் தோழர்கள். அடியேனும் கூட.

காரில் அமர்ந்திருந்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அருகில் ஜோதி சுவாமிகளும், அக்காவும் இருந்தார்கள். அப்போது அய்யாவும், அம்மாவும் என்னுடன் அறிமுகமானார்கள். 

அம்மாவுடன் அவ்வப்போது பேசிக் கொள்வதுண்டு. அவர்கள் ஆசிரமம் வரும் போது பேசுவது என தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் ஒரு நிலம் விற்பனை தொடர்பாக ஆர்.எஸ்.புரத்திலிருக்கும் ஹோட்டலில் இரண்டவது தடவை சந்தித்தேன். ஒரு மணி நேரம் சென்றது. 

நானும் மகனும் வெளியில் வரும் போது, அவரிடம் கேட்டேன் ’சினிமாவில் முயற்சித்திருக்கலாமே? ஏன் விட்டு விட்டீர்கள்’ என.

’எனக்கு சினிமாவில் ஈடுபாடு இல்லை. இதுவரையிலும் நான் எந்தக் கிளப்பிலும் மெம்பராகவும் இல்லை’ என்றார். 

தகப்பனாருக்குப் பிறகு தொழிலில் கவனம் என அவர் முழு ஈடுபாட்டுடன் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டார். அவர் பல விஷயங்களை அன்று என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அவர் உயரத்தில் மட்டும் உ யர்ந்தவர் அல்ல.

அவரின் ஹோட்டலில் மூன்று தினமும் சாப்பிட்டு வந்தவருடன் அவர் அடிக்கடி பேசுவதுண்டு. அது இருவருக்கும் நல்ல நட்பாக இருந்தது. அந்த நபருக்கு வேலை போய் விட்டது. அதை இவருடன் சோகமாக பகிர்ந்து கொண்டார் அந்த நபர். உடனே சுந்தர்ராஜன் அவர்கள் அவருக்கு ஆட்டோ ஒன்றினை வாங்கிக் கொடுத்து அவரின் வாழ்க்கைக்கு உதவினார்.

அதுமட்டுமல்ல அவருடன் நட்பு பாராட்டிய ஒரு நண்பரின் சிரமத்தைத் தெரிந்து கொண்ட அவர், அவருக்கு ஒரு இனிப்பு பார்சலை அனுப்பி வைத்தார். அந்தப் பார்சலில் ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தது. இன்றைக்கு நினைத்துப் பாருங்கள். எந்த ஒரு நண்பராவது இப்படிச் செய்வார்களா?

1977ம் வருடம் இவரின் நண்பரின் திருமணச் செலவுகள் அனைத்தையும் செய்து திருமணம் நடத்தி இருக்கிறார். இதைப் போன்ற பல செய்திகளை அன்னபூர்ணா வேலுமணி அவர்கள் - எனது ஆதர்ச வழிகாட்டி என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

இரண்டாவது தடவையாக ஹோட்டலில் சந்தித்த போது,  மெலிந்திருந்தார். நோயின் வீச்சு அவரை சோர்வடைய வைத்திருந்ததைக் கண்டேன். நான் எத்தனையோ தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன். சுந்தர்ராஜன் - ரமா தம்பதியினரைப் போல வேறு எவரையும் கண்டதில்லை. ஆதர்ச தம்பதிகள் இருவரும். தயை,  கருணை, அன்பு நிறைந்த ரமா அம்மா அவர்களைப் பார்ப்பதே கடவுளைப் பார்ப்பது போல.

அய்யாவின் ஆரம்பகால ஹோட்டல் தொழில் பற்றி அம்மா, பல தடவை என்னிடம் பல செய்திகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். ஒரு மனிதர் உள்ளத்தளவில் உயர்வானவர் என்பது அவரின் செயல்களிலே தெரியும். அவர் தன்னை நம்பியவர்களுக்கும், தன்னுடன் பயணித்தவர்களுக்கும் பாதுகாவலராய், அரணாய் இருந்திருக்கிறார்.

தகப்பனாரின் மறைவுக்குப் பிறகு, இவரின் நிர்வாகத்தில் அன்னபூர்ணா செழித்து வளர்ந்து பல கிளைகளைப் பரப்பி நிற்கிறது. தற்போது இவரின் புதல்வர் ஜெகன் இந்தக் காரியத்தை தொடர்ந்து செவ்வனே நடத்தி வருகிறார். ஜெகனுக்கு எல்லாம் வல்ல குரு நாதரும், இறைவனும் உதவி செய்து - இன்னும் உயர்ந்த நிலையில் ஹோட்டல் தொழிலில் உயர வைக்க வேண்டுமென பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரின் நினைவுகள் - நாம் எப்படி வாழ வேண்டும் என நமக்குச் சொல்லித் தரும். வாழனும், வாழ உதவ வேண்டும். 

அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Saturday, February 14, 2026

நிலம் (122) - சென்னை அடுக்குமாடி குடியிருப்பு 2500 கோடி மோசடி

சென்னை கொரட்டூரில் கோவில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, சுமார் 10,000 பேரிடம் ரூ.2,500 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக ‘Urban Rise’  நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. நீதிமன்றம், இது கோயில் நிலம் எனத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, 2,036 வீடுகளை வாங்கிய மக்கள் கையறு நிலையில் காசை இழந்து நிற்கிறார்கள் என்ற செய்தி படிக்க கிடைத்தது.

நில மோசடி பல வகைப்படும். அதில் இது ஒரு வகை. இதெல்லாம் பில்டருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. 

இந்த மோசடியில் குற்றவாளிகள் யார்? மக்கள். ஏமாந்தது மக்கள். ஆகவே மக்களே குற்றவாளிகள். 

இந்திய ஜனநாயகத்தில் இதுவரையிலும் ஏமாந்து கொண்டே இருப்போர் இந்தியர்களே. அவர்களே குற்றவாளிகள். ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள், ஏமாறுபவர்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். இதையெல்லாம் சரி செய்யவே முடியாது. 

அடுக்குமாடி குடியிருப்பு கட்ட சி.எம்.டி.ஏவில் அனுமதி வாங்குவார்கள். அப்போது ஒரு அரசு வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் வாங்குவார்கள் - அந்த வக்கீல் எங்கே போனார்? இந்த லீகல் ஒப்பீனியன் தான் - கட்டிட அனுமதி வழங்க பரிந்துரை செய்யும். அந்த லீகல் ஒப்பீனியன் கொடுத்த வக்கீல் யார்? 

அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் போது - வாங்கிய ஒவ்வொருவரும் லீகல் ஒப்பீனியன் பார்த்திருப்பார்களே - அந்த வக்கீல்கள் எங்கே? 

ஒரு நிலத்தின் வரலாற்றை எப்படி ஆராய வேண்டுமென இணையதளங்களில், சோஷியல் மீடியாக்களில் பலரும் பல செய்திகளை சொல்லி இருக்கிறார்கள். இதை ஒருவர் கூடவா பார்க்கவில்லை? லீகல் ஒப்பீனியன் பெறாமலா வாங்கி இருப்பார்கள்?  1912ம் ஆண்டின் சர்வே ரெக்கார்டு எடுத்துப் பார்த்திருக்கலாம். ஆவணப் பதிவுகளை கண்டுபிடிக்க வில்லங்கம் போட்டுப் பார்த்திருக்கலாம். 
நிலம் பற்றிய அத்தனை விபரங்களும் ஒவ்வொரு கலெக்டர் அலுவலகத்திலும் கிடைக்குமே? ஏன் பார்க்கவில்லை?

இந்த நிலத்தில் இருக்கும் பிரச்சினை என்னவென்று பார்க்கலாம். 

சென்னை, கொரட்டூர் கிராமத்தில் க.ச.எண் 590 மற்றும் 591ல் உள்ள சுமார் 95 செண்ட் நிலமானது சுவாமி கரப்பாத்திர சிவபிரகாச சித்தர் ஜீவசமாதிக்கு சொந்தமானது. 


கல்வெட்டு

கீழே இருப்பது சமீபத்திய கோர்ட் ஆர்டர்


செய்தி கீழே


இந்த நிலமானது சுவாமிகளின் ஜீவசமாதிக்கு வழிபாட்டுக்கு வரும் மக்களுக்கு அன்னதானம் செய்ய கொடுக்கப்பட்டது என்கிறார்கள்.

ரெவின்யூ ஆவணத்தினை ஆராயாமல் பட்டா கொடுத்தவர்கள் தப்பி விட்டார்கள்.  லீகல் ஒப்பீனியன் கொடுத்த வக்கீல்கள் தப்பி விட்டார்கள்(பிராக்டீஸ் செய்கிறார்கள் என்றுதான் சொல்வார்கள் - மருத்துவர்கள் போல).

இந்த அப்ரூவலே செல்லாது. ஏனென்றால் இந்த நிலத்தினைச் சேர்த்துதான் வீடுகட்ட பிளான் மற்றும் பொது உபயோக நிலம், பிரிபடாத பாக நிலம் ஆகியவற்றைக் கணக்கிட்டு இருப்பார்கள். ஆகவே இந்த அப்ரூவலில் இருந்து, கிரையம் செய்த ஆவணங்களில் இருந்து எல்லாமே செல்லாது.

சரி, இதைச் சரி செய்ய முடியுமா? 

அவ்வளவு எளிதானதல்ல. அரசு நினைத்தால் சரி செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்தால் அது சட்ட விரோதம். அப்பாவி மக்கள் என்ற கேட்டகரியில் இதை  சரி செய்யலாம் என்பார்கள். 

அது எப்படிச் சரியாக வரும்? 

ஒரு தவறைச் சரி செய்ய சட்டத்தை மாற்றினால், அல்லது வேறு வழி செய்தால், இதைப் போன்ற பல முறைகேடுகளை நிகழ்த்துபவர்களும், நிகழ்த்தியவர்களும் நிவாரணம் கேட்பார்களே?  

ஒரே ஒரு வழி - இந்த 95 செண்ட் நிலத்தின் மதிப்புக்கு ஏற்ப மற்றொரு நிலத்தை வாங்கிக் தருவது மட்டுமே சரியாகும். அதன் பிறகு அந்த மடத்திலிருந்து சம்மதப்பத்திரம் பதிய வேண்டும். இதை கோர்ட் செய்து தர வேண்டும். அரசு செய்யாது. கோர்ட் செய்யுமா என்றால் செய்யும். எப்போது முடியும் எனக் கேட்டால் அது யாருக்கும் தெரியாது.

அவ்வாறு தீர்ப்புக் கொடுத்தாலுமே கோர்ட்டில் இந்த வழக்கை சேலஞ்ச் செய்யலாம். அந்த ஒரு ஆபத்தும் உண்டு. 

இதை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம்? காலம் தான் பதில் சொல்ல முடியும். 

ஒவ்வொரு நிலம் வாங்கும் முன்பு அதைப் பற்றிய சரியான லீகல் கருத்துரு பெற சரியான நபர்களை - வக்கீல்களை அணுகவும். 

எங்களது நிறுவனம் - கிராஸ்பி லா அசோசியேட்ஸ் அதைச் செய்து தருகிறது. சட்ட உதவிக்குத் தொடர்பு கொள்ளவும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் எங்களது சட்ட நிறுவனம் இயங்கி வருகிறது.

வளமுடன் வாழ்க.

போட்டோக்கள் உதவி : https://veludharan.blogspot.com/2022/10/sri-karapaathira-sivaprakasa-swamigal.html - நன்றி

Wednesday, February 4, 2026

சிறை திரைப்படமும் எதார்த்தமும் - ஒரு அலசல்

ஒவ்வொரு மனிதனுக்குள் உறைந்து கிடைக்கும் கருணையினால் இருவரின் வாழ்க்கை துவக்கி வைக்கப்படுகிறது என்பதன் ஒரு துளியை சிறைப்படத்தில் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் அப்பட்டமான அத்துமீறல் அயோக்கியத்தனங்களின் ஒரு சொட்டுவை இப்படத்தில் காணலாம். சிறுபான்மையாக இருப்பவர்களின் - அது எந்த ஒரு மதமாக இருந்தாலும் சரி  - அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை இப்படம் காட்டுகிறது.

அசாமில் மியா முஸ்லிம்களை விரட்டி அடியுங்கள் என்று சொன்னவர் மீது சூமோட்டோ வழக்கு போடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம் போல நாமும் இது நாள் வரை வேடிக்கைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் இது பற்றிய தெளிவான பார்வையும் அதற்கான கல்வியும் பெரும்பான்மையோருக்கு கிடைப்பதில்லை. கல்வி மட்டுமே தெளிந்து அறியும் நுட்பத்தை ஒவ்வொருவருக்கும் அளிக்கும். அதை ஒவ்வொரு மனிதனும் அடைவதற்குள் அவன் அடையும் துன்பங்கள், துயரங்கள் கொஞ்சமல்ல.

நீதியும் சட்டமும் எப்போதும் வேறு வேறாக பயணிப்பவை. இதை சிறை திரைப்படம் தெளிவாக காட்டுகிறது.

பலர் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, மக்களிடம் கலவரத்தைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவருக்கும் மூளை நரம்பு வெடித்து சிதறி கையும் காலும் இழுத்துக் கொண்டு கிடக்கிறார். இவர்களுக்கு என்ன ஆகும் என்று தெரியவில்லை. 

இது இயற்கையின் நீதி. சட்டத்துக்கும், நீதிக்கும் மேலாக இயற்கையின் நீதி என்ற ஒன்று இருக்கிறது. அது எப்போதும் தூங்குவதில்லை என்பது உண்மை என இந்த நிகழ்வின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

யாரும், எவரும் தப்பவே முடியாது. இயற்கை நீதியை மீறி இந்தப் பூமியில் வாழும் எவரும் வாழ்ந்து விட முடியாது. 

அடாது செய்பவன் படாது போவான் சிறை படத்தின் ஹீரோயினின் தந்தை போல.

நானொரு லீகல் ஒப்பீனியன் கொடுத்த ஒரு வாடிக்கையாளரை பணபலத்தைக் காட்டி கைது செய்தார்கள். அவர்களை ஜாமீனில் எடுக்க முனைந்த போது நான் பெற்ற அனுபவங்கள் திகில் கிளப்புவை. சக மனிதனின் மீது நம்பிக்கையை சீர்குலைக்கும் வண்ணம் சட்டம் அயோக்கியர்களுக்கு துணை போகிறது.

கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீனுக்கு முயற்சிக்கிறேன். எதிர்வாதிகள் ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்ய, அவரை ஜெயிலுக்குள் முடக்கி, பயம் காட்டி தான் நினைத்ததை அடைந்து விட முயற்சித்தார்கள். 

என்ன செய்தார்கள் தெரியுமா?

பல வக்கீல்களை ஜெயிலுக்குள் அனுப்பி ஜாமீன் வக்காலத்தில் கையெழுத்து வாங்க முயற்சித்தார்கள். அப்படி அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்தால், ஒருவருக்கு பல வக்கீல்கள் ஜாமீன் கோருவார்கள். 

முதலில் யார் உண்மையான வாதியின் வக்கீல் என கோர்ட்டில் கேள்வி எழுந்திருக்கும். கோர்ட்டில் ஜாமீன் வழக்கு தள்ளிப் போயிருக்கும். அவர் ஜெயிலுக்குள்ளே கிடப்பார். அதை வைத்து அவர்களை மிரட்டி காரியம் சாதித்துக் கொள்ளலாம். இப்படியெல்லாம் நடக்குமா? ஆமாம் நடந்தது.

இந்தக் காரியத்தை வக்கீல்களே செய்தார்கள். அவர்களுக்கு அது அயோக்கியத்தனம் என்று தெரியும். தெரிந்தும் செய்தார்கள். இதை சட்டம் அனுமதிக்கிறது. சட்டத்தின் ஓட்டை இது. எளிதில் தப்பி விடுவார்கள். 

ஒருவரின் வாழ்க்கை மீது வக்கீல்களுக்கு அவ்வளவு எளக்காரம். எல்லா வக்கீல்களும் இதைச் செய்வதில்லை. கொலைக்கும் அஞ்சாத படுபாதகர்கள் வாழும் பூமி அல்லவா இது? என் மீது புகார் தெரிவித்தார் எனது ஒப்பீனியனால் பாதிக்கப்பட்டவர். என்னை முடக்கி விட வழக்கு. பொய் வழக்கு என நிரூபித்தேன். அவர் மீது நான் அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கலாம். ஆனால் அந்த நிலையில் எனக்கிருந்த மனநிலை வேறு. பிரச்சினையை முடிக்கத்தான் நினைப்பேன். வளர்த்தால் அது எவருக்கும் நல்லதல்ல. 

ஒரே ஒரு நொடி யோசித்தேன். அவரை மன்னித்தேன். நான் வேறு மாதிரியான ஆள் என்றால் அவர் சாகும் வரை சிறைக்குள் கிடந்திருப்பார். எனக்கு அது தேவையில்லை. வாழ வைக்கணும் அது எவரானாலும் சரி. அதைச் செய்தேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகளை வழங்குகிறது. காகிதத்தில் குறிப்பிட்டபடி, நாம் அனைவரும் கண்ணியத்துடன் வாழவும், சுதந்திரமாகப் பேசவும் ஒரே அளவிலான உரிமைகளை பெற்றிருக்கிறோம் என்பது உண்மை.  நடைமுறையில் நிலைமை வேறு.

அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து பல தசாப்தங்கள் கடந்தும், அதில் கூறப்பட்ட வாக்குறுதிகளுக்கும் மக்கள் வாழ்ந்து அனுபவிக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் இடைவெளி இருக்கிறது.

இதை வெளிப்படையாகச் சொல்ல நாம் தயங்கினாலும், அதன் பொருள் என்ன என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

சட்டமும் நீதியும் வேறு வேறு. சட்டம் என்பது எழுதப்பட்ட, கட்டமைக்கப்பட்ட மற்றும் நடைமுறையில் அமல்படுத்தப்படும் ஒரு அமைப்பு. நீதி என்பது ஒரு விளைவு — அது நெறிமுறையுடனும், நியாயத்துடனும்,  மனிதாபிமானத்துடனும் தொடர்புடையது.

சட்டம் செயல்படுத்தப்படுகிறது ஆனால் உண்மையான நீதி யாருக்கும் கிடைப்பதில்லை. சட்டம் உண்மையான நீதிக்கு தடையாக நிற்கிறது. இதற்காக பல உதாரணங்களைக் காட்டலாம். அதைப் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தால் - சட்டம் என்பது கொடூரங்களின் தொகுப்பு என்பதாய் நினைக்க வைத்து விடும். இந்தக் கொடூரங்களுக்கு இடையில் ஒரு துளி நீதி. அதைச் சிறை திரைப்படம் காட்டுகிறது.

ஒரு மசூதிக்குள் நுழைந்து அங்கிருக்கும் ஒரு தூணில் தீபமேற்ற உத்தரவிடுவது சட்டம். ஆனால் அதை நிறைவேற்றினால் கலவரம் ஏற்படும் என்பதால், தடை உத்தரவு போட்டு, கலவரம் ஏற்படாமல் தடுப்பத் நீதி. அரசு நீதி பரிபாலனம் செய்கிறது. சட்டம் அதை உடைக்கிறது.

இது அரசியலமைப்பை எதிர்க்கும் கருத்தல்ல; மாறாக, அதன் உயர்ந்த இலட்சியங்களை ஒரு வாழும் யதார்த்தமாக மாற்ற நாம் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதைக் குறித்து நேர்மையாக சிந்திக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிடுவது.

இந்த நடைமுறைகளை சிறைப்படம் தெளிவாக காட்டுகிறது. 

விசாரணைக் கைதிகள் - ஒன்றும் அறியாத அப்பாவிகள் இன்னும் சிறையில் இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கை? பற்றி யாருக்கேனும் கவலை உண்டா? இது பற்றி கவலைப்பட வேண்டிய சிறை அதிகாரிகள், நீதிமன்றங்கள் அமைதியாக இருக்கின்றன. சட்டத்தின் நடைமுறைகள்  காலதாமத்துக்கு காரணம்.

இங்கே யாருக்கும் எவரைப் பற்றியும் கவலை இல்லை.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருவருடன் சார்புடையவன். அவன் தனியாக வாழ்ந்து விட முடியாது. அதை ஒவ்வொருவரும் உணர மறுக்கிறார்கள். பசித்திருப்பவனுக்கு உணவிடுவது ஒவ்வொருவரின் கடமை. ஒவ்வொருவரின் துன்பத்திற்காக அவர்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவுவது வாழ்க்கை. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது. ஒரு உணவு டெலிவரி செய்பவரை - கீழ்மை செய்யும் நபர்கள் இங்கிருக்கிறார்கள். அவர்களால் யாருக்கும் எவருக்கும் நன்மை கிடைக்கவே கிடைக்காது.  இவர்களைப் போன்றவர்கள் மாற வேண்டும். 

மதமும், மொழியும் மனித வாழ்க்கையை செம்மைப்படுத்தி வாழ உருவானவை. இப்போது அவைகள் மனிதர்களின் அழிவுக்கான கருவியாக மாற்றப்பட்டிருக்கிறது. மாற்றியவர்கள் யார்? அவர்கள் ஏன் இங்கே? என்பது பற்றிய தெளிவான அறிவினை ஒவ்வொருவரும் பெற வேண்டியது அவ்சியம்.

அதற்கான ஒரு படி தான் கல்வி. கல்வி எல்லோருக்குமானவையாக எளிதில் கிடைப்பதாக செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. 

ஒரு படி முன்னேற வேண்டும். அதற்காக சக மனிதனின் துயரங்களில் பங்கெடுத்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும். அது ஆறறிவு பெற்ற மனிதனாலும் சரி. ஐந்தறிவு கொண்ட விலங்கினமாக இருந்தாலும் சரி. சக உயிர்களின் துன்பத்தை நாம் சற்றே உணர வேண்டும்.

இங்கு வாழத்தான் பிறந்தோமே ஒழிய, பிறரை அழிக்க அல்ல என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு சிறு செயல் - ஒரு வாழ்க்கையின் விதை - சிறையின் கதா நாயகி, கதா நாயகன் இருவரும் நம்மிடையே வாழும் பல கோடிக்கணக்கானவர்கள் தான். அவர்கள் மீது நாம் அக்கறை கொள்வோம்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கு நாமும் ஆதாரமாய் இருப்போம்.

சிறை திரைப்படத்தை அனைவரும் பாருங்கள். அது நம்மை செம்மைப் படுத்தும்.



பாஜக அரசின் கொடுமைகள்

2026 பிப்ரவரி மாத காலச்சுவடு மாத இதழில் ஆசிரியரின் தலையங்கத்தின் ஒரு சில பகுதிகளைப் படியுங்கள். இது நான் எழுதவில்லை. இலக்கிய உலகில் தனக்கென தனிப்பாதை அமைத்து நடந்து வரும் காலச்சுவட்டில் வெளியானது. 

மோடி அரசின் ஒவ்வொரு நிகழ்வையும் இக்கட்டுரை கேள்வி கேட்கிறது. சாகித்ய அகடெமியின் விருதுகள் ஏன் நிறுத்தப்பட்டன, இதன் பின்னால் நடக்கும் மொழி, இனவழிப்பு நடிவடிக்கைகள் பற்றிய விளக்கத்தை இந்தத் தலையங்கம் எடுத்து வைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பாஜக அரசு இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைப் பண்பாட்டை சீரழித்து வருகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இனி அந்தத் தலையங்கத்தில் ஒரு சில பகுதிகளைப் படியுங்கள்.

பாஜக அரசு அதிகாரமேற்ற நாள்முதலாகவே கடைப்பிடித்து வரும் கலாச்சார ஒடுக்குமுறையின் அப்பட்டமான உதாரணம் இது. வரலாற்றைத் திரிப்பது, பண்பாட்டு விழுமியங்களைச் சிதைப்பது, வரலாற்றுச் சின்னங்களையும் ஆளுமைகளையும் தனக்கு உவப்பான வகையில் முன்னிருத்துவது, ஒருமைப்பாட்டைக் குலைப்பது, ஜனநாயக மரபுகளை மறுப்பது முதலான ‘பாசிஸ’ நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே அரசு என்ற பொய்க் கனவைப் படிப்படியாகவும் அதிரடியாகவும் திணித்துவருகிறது. இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய அரசமைப்பின் உயிர் நாடியான கொள்கைக்கு விடப்பட்ட அறைகூவல். இது ஓர் அறிவார்ந்த சமூகம் உருவாகும் சூழலை அழிக்கிறது. இந்த ஆபத்தின் எளிய சான்றுதான் சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பில் நிகழ்ந்தேறியிருக்கிறது.  

இதுமட்டுமலல், கல்வியில் தனி அதிகாரத்தை செலுத்தி கல்வியை அழிக்கிறது என்கிறது தலையங்கம். 

அரசியல் அதிகாரத்தை மட்டுமன்றி கலாச்சார அதிகாரத்தையும் கைப்பற்றுவதில் இன்றைய அரசு முனைந்து செயல்பட்டுவருவது வெளிப்படை. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை ஏற்கெனவே கபளீகரம் செய்திருக்கிறது. பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் தன்னுடைய கொடுங்கரங்களை நுழைத்திருக்கிறது. தன்னாட்சி நிறுவனமான திரைப்படக் கல்லூரியை முடமாக்கியதும் திரைப்பட விழாக்களைத் தனக்குத் தோதானதாக மாற்றியதும் திரைப்பட விருதுகளில் பக்கச் சார்பை ஏற்படுத்தியதும் எடுத்துக் காட்டுகள். இந்த அத்துமீறலின் இன்னொரு பக்கமே சாகித்திய அகாதெமி விவகாரம். 

ஒரு மொழியை நீக்குவது என்பது எப்பேர்பட்ட அயோக்கியத்தனம்?  பாஜக அரசு என்ன செய்கிறது என்பதை படியுங்கள். 

2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதுகள் எல்லா மொழிகளிலும் நிறுத்தப்பட்டன. ஒரு படைப்புக்கு அல்லது படைப்பாளிக்குத் தேசிய அளவிலான கௌரவம் அறிவிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படாமல் போவது அந்தப் படைப்புக்கோ படைப்பாளிக்கோ இழைக்கப்படும் அவமதிப்பு மட்டுமல்ல. அந்த மொழிக்கே இழைக்கப்படும் அவமதிப்பு. எல்லா மொழிகளுக்கும் இணையான தகுதியுண்டு என்று அரசியலமைப்பு வரையறுத்திருக்கும் நன்னோக்கத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் அவமதிப்பு. முன்னர் 2024ஆம் ஆண்டு விருதுக்கான பரிசீலனையிலிருந்து வங்காள மொழி விலக்கப்பட்டது. அந்த மொழியில் அந்த ஆண்டு சிறப்பான ஒரு படைப்புக் கூடவா உருவாகாமலிருந்திருக்கும்? அந்த மொழி தேர்விலிருந்து புறக்கணிக்கப்பட்டது அரசியல் காரணங்களுக்காகவே என்பது வெளிச்சம்.

பாஜக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்கிறது என்கிறது இந்தத் தலையங்கம்.

இந்தியா ஆன்மீக பூமி. அறம் செழித்திருக்கும் பூமி. கடவுள் மீது நம்பிக்கை கொண்ட பூமி. இங்கு அயோக்கியர்களும், அயோக்கியதனங்களும் அடியோடு அழிக்கப்பட்ட வரலாறு இருக்கிறது. 

இந்தப் பதிவினைப் படித்த போது வேதனைதான் உருவானது. நாம் கடவுள் மீதும், இயற்கையின் மீதும் நம்பிக்கை கொள்வதைத் தவிர வேறொன்றினையும் செய்ய முடியாதவாது இந்தியா மாற்றப்பட்டிருக்கிறது என்பது கொடுமை. 

நன்றி : காலச்சுவடு மாத இதழ்

உண்மைகளை உரக்கச் சொல்லும் தலையங்கத்தின் இன்னொரு பகுதியை நான் குறிப்பிடவில்லை. காரணம் அது படைப்பாளிகளின் அரசியல். அது இங்கே தேவையில்லை என்பது எனது கருத்து.



Sunday, February 1, 2026

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியா? வீழ்ச்சியா?

சமீபத்தில் நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.

அதில், இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. வரும் ஆண்டுகளிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) நல்ல வளர்ச்சியை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதெல்லாம் கேட்க நன்றாகவே இருக்கிறது. ஆனால், களத்தின் நிலைமை வேறுபடுகிறது. இந்திய ரூபாய் தொடர்ந்து பலவீனமடைகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது.

ரூபாய் பலவீனமானால் என்ன நடக்கும்?

இறக்குமதி பொருட்கள் விலை உயரும்.

எரிபொருள் விலை உயரும்.

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறும்.

இதை நேரடியாக அனுபவிப்பவர்கள் சாதாரண மக்கள் தான்.

இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பெரிய அளவில் அரசுப் பத்திரங்களை வாங்கி வருகிறது. சந்தையில் அதிக பணத்தை செலுத்துகிறது.

இதன் அர்த்தம் என்ன?

  • வங்கிகளில் பணப்புழக்கம் குறைகிறது

  • அமைப்பு இயங்க கூடுதல் பணம் தேவைப்படுகிறது

  • வட்டி விகிதங்கள் மற்றும் கடன் செலவுகள் கடுமையான அழுத்தத்தில் உள்ளன

இங்கே ஒரு கேள்வி எழுகிறது.

பொருளாதாரம் உண்மையிலேயே வலுவாக இருந்தால், RBI ஏன் இவ்வளவு பணத்தை சந்தையில் விட வேண்டும்? 

வளர்ச்சி நன்றாக இருக்கிறதென்றால், ரூபாய் ஏன் தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கிறது?

இதுதான் முக்கியமான விஷயம்.

வளர்ச்சி கணிப்புகளுக்கும், மக்கள் சந்திக்கும் நிஜ நிலைக்கும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.

காகிதத்தில் இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சந்தைகளிலும் ஒவ்வொரு சாமானிய இந்தியனின் வீட்டிலும் இந்தியாவின் பொருளாதாரத்தின் உண்மை தெளிவாக தெரிகிறது.

இன்றைய இந்தியாவுக்கு தேவை:

  • பொருளாதார நிலையை நேர்மையாக மதிப்பீடு செய்வது

  • நிதிக் கொள்கை மற்றும் பணவியல் கொள்கை இரண்டும் ஒரே திசையில் செயல்படுவது

  • GDP எண்கள் மட்டுமல்ல, ரூபாய் நிலைத்தன்மை மற்றும் மக்களின் வாழ்க்கை மீதான தாக்கத்திலும் கவனம் செலுத்துவது

வளர்ச்சி என்பது அறிக்கைகளில் மட்டும் அழகாக இருக்கக் கூடாது.

அது மக்களின் வாழ்க்கையிலும் உண்மையாக உணரப்பட வேண்டும்.

பொய்களால் எப்போதும் மக்களின் பசியை தீர்த்திட முடியாது. அதே போலவே மதமும் மக்களுக்கு கிஞ்சித்தும் ஒரு நன்மை செய்வது கிடையாது. சமதர்ம சமுதாய வளர்ச்சியை நோக்கிய பொருளாதாரமே உயர்ந்தது. 

இந்தப் பூமியில் எல்லோரும் வாழத்தான் பிறக்கிறார்கள். அதற்கான வழிகளைச் செய்து தர வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் வேலை. அதை விடுத்து வேறு வழி சென்றால் காலம் அவர்களை முகவரி இல்லாமல் அழித்து ஒழித்து விடும்.


சமூக நீதியற்ற ஒன்றிய கல்வி நிறுவனங்கள் - துணை போகும் உச்ச நீதிமன்றம்

UGC 2026 புதிய விதிகளை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பது மிகவும் சந்தேகத்தைக் கிளப்புகிறது.

இந்த விதிகள் திடீரென வந்தவை அல்ல. உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடைபெறும் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக மாணவர்கள் பல ஆண்டுகள் போராடியதின் விளைவாகவே இவை உருவானவை. உச்ச நீதிமன்றத்தின் வழியாக ஒன்றிய அரசு உருவாக்கியது. ஆனால் அதே நீதிமன்றம் ஒரு சிறிய உயர்சாதி கும்பலின் போராட்டத்துக்கு இவ்வளவு கவலை கொள்வது உச்ச நீதிமன்றம் மக்களுக்கானதா இல்லை வேறு எவருக்கானது என்ற சந்தேகத்தை கிளப்புகிறது என பலரும் மீடியாக்களில் பேசி வருகிறார்கள்.

தீக்கதிர் செய்திதாளில் வெளியான தலையங்கத்தை வாசித்தேன். அதில், ரோஹித் வெமுலா, பயல் தத்வி போன்ற மாணவர்களின் மரணங்களுக்கு பிறகு உருவான நீண்ட ம் மாணவர்களின் போராட்டங்களும், கல்வி நிறுவனங்கள் உயர்சாதி மாணவர்களால் பாதிக்கப்பட்ட இதர சாதி மாணவர்களுக்கு குறைந்த பட்ச பாதுகாப்பு கூட வழங்காத அலட்சியமும் இந்த விதிகளுக்கான பின்னணியாக இருப்பது தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக வளாகங்களில் சாதி பாகுபாடு இன்னும் அன்றாட வாழ்க்கையாகவே இருக்கிறது. அதற்குத்தான் இந்த விதிகள் வகுக்கப்பட்டன.

தொழில்நுட்ப காரணம்” என்று சொல்லி இந்த விதிகளை நிறுத்துவது தவறான செய்தியை மக்களுக்கு சொல்லுகிறது. இந்த விதிகள் பொது வகுப்பினருக்கு எதிரானவை, பொய்ப் புகார்கள் வரும் என்று சிலர் பயப்படுகிறார்கள். 

ஆனால் அந்த பயம், தினமும் அவமானத்தையும் ஒடுக்குமுறையையும் சந்திக்கும் மாணவர்களின் அனுபவத்தைவிட முக்கியமாக பார்க்கப்படுகிறது. பாகுபாடு கற்பனை அல்ல; அது அதிகாரம் உள்ள இடங்களில் நடக்கும் உண்மை.

இந்த இடைக்காலத் தடை, பாகுபாட்டைத் தடுக்கவே முடியாத 2012-ல் வந்த பலவீனமான விதிகளுக்கு மீண்டும் நம்மை கொண்டு போகிறது.

இருந்தாலும் ஒரு சின்ன நம்பிக்கை தெரிகிறது. மாணவர் அமைப்புகள் இந்த 2026 விதிகளை ஒரு முதல் படியாக வரவேற்றுள்ளன. அதே நேரத்தில், இதில் குறைபாடுகளும் உள்ளன என்பதையும் அவர்கள் சொல்கிறார்கள். விசாரணைக் குழுக்களை துணைவேந்தர்களே நடத்தினால், நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. இந்தக் குழுக்கள் சுயாதீனமாகவும், தன்னாட்சியுடனும், மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளும் சேர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.

இப்போது மிகவும் தேவையானது வலுவான சட்டம். சாதியப் பாகுபாடு செய்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும். இந்த விதிகள், ஐஐடிகள் உட்பட எல்லா உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில், ஒரு முழுமையான “ரோஹித் சட்டமாக” மாற்றப்பட வேண்டும்.

ஒரு கசப்பான உண்மையையும் சொல்ல வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால், உடனே கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், சமத்துவ சீர்திருத்தங்களுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடினால், கைது நடப்பது அரிது. இதுதான் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

பல்கலைக்கழகங்கள் சமூக நீதியை காக்கும் ஜனநாயக இடங்களாக இருக்க வேண்டும். சமத்துவ நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவது, ஏற்கனவே இருக்கும் சாதி படிநிலைகளையே காப்பாற்றும். இந்த விதிகள் உண்மையில் செயல்படும் வலுவான சட்டமாக மாறும் வரை இந்த போராட்டம் தொடர வேண்டும். இப்படியாக அந்தத் தலையங்கம் விவரிக்கிறது.

நீதிக்கான் குரல்களை தொடர்ந்து எழுப்பி வரும் தீக்கதிர் தினசரிக்கு மனப்பூர்வமான நன்றி.

சாதிய படி நிலைகளை இது  நாள் வரை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு சில சிறிய குழுக்களின் மீதான சட்ட நடவடிக்கை எடுக்காத போது, இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அக்குழுவிலிருந்து உயர் பதவிக்குச் செல்லும் நபர்கள் - இந்தச் சாதிய படிமங்களை தங்கள் சுய நலத்துக்காக தொடர்ந்து பேணி வருகின்றனர். இவர்களைப் பொதுச் சமூக மக்கள் உதாசீனப்படுத்தி, விலக்கி வைக்காத வரை இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

Friday, January 2, 2026

தேர்தல் கமிஷனால் ஜனநாயகத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்

தேர்தல் கமிஷனின் தேவையில்லாத வேலையான வாக்காளர் அடையாள அட்டை புதிப்பிப்பின் போது, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, கேஸ் கனெக்‌ஷன் கார்டு, பாஸ்போர்ட் கொடுத்து பதிவு செய்த பின்னால், நேற்று மீண்டும் அழைத்து 2005ல் இருக்கும் ஆவணங்கள் வேண்டுமென கேட்கிறார்கள். நோட்டீஸ் வந்திருக்கிறது என்கிறார்கள்.

வாக்காளர் அடையாள அட்டையை உறுதிப்படுத்த அல்லது தக்கவைக்க 20 ஆண்டுகால முகவரிச் சான்றுக்கான தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை கடுமையான கவலைகளை எழுப்புகிறது.  

இந்தியா போன்ற ஒரு நாட்டில், மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் வேலை, கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்கின்றனர். மேலும் நிரந்தர சொத்து அவரகளால் சேர்த்து வைத்திருக்க முடியாது.  குத்தகைதாரர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள் மற்றும் பல நடுத்தர வர்க்க குடிமக்கள் கூட இரண்டு தசாப்தங்களாக தொடர்ச்சியான முகவரி ஆவணங்களை எவ்வாறு தயாரிக்க முடியும்? வாடகைதாரர்களாக இருப்பவர்களுக்கு நிரந்தர முகவரி எப்படி இருக்க முடியும்? பல வீடுகளுக்கு செல்பவர்களுக்கு நிரந்தரமான முகவரியோ அல்லது சான்றோ இருக்க இயலுமா?

வாக்களிக்கும் உரிமை என்பது ஒரு அரசியலமைப்பு உரிமை.

ஆவணங்கள் சரிபார்ப்பு செயல்முறைகள் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் - உண்மையான குடிமக்களை உரிமையை இழக்கச் செய்யும் கருவிகளாக மாறக்கூடாது.

நிர்வாக அமைப்புகள் அடிப்படை எதார்த்தங்களை கவனிக்க வேண்டும். ஆனால் தற்போதைய தேர்தல் கமிஷனின் நடைமுறைகள் மக்கள் உண்மையில் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதைப் புறக்கணிக்கிறது.

விளிம்புநிலை சமூகங்களை பாதிக்கின்றன. அவர்களின் வாழ்வாதாரத்துக்கே போராட்டமாக இருக்கும் போது, இத்தகைய ஆவண ஆய்வுச் சரிபார்ப்புகள் அவர்களை ஜன நாயகத்திலிருந்து விரட்டி அடிக்கும்

தேர்தல் கமிஷன் ஜன நாயகத்தைக் கொன்று புதைக்க ஆர்வமாக இருப்பது போலத் தெரிகிறது.  தேர்தல் சீர்திருத்தங்கள் மக்களை மையமாகக் கொண்டவை, உள்ளடக்கியவை மற்றும் அரசியலமைப்பு ரீதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய தடைகளால் அல்ல, பங்கேற்பால் ஜனநாயகம் பலப்படுத்தப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தன்னிச்சையாக இருக்கின்றன. அது யாருக்கும் பதில் தருவதில்லை. சர்வாதிகாரமாக ஜனநாயகத்தைப் பாதிக்கும் செயலை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு எப்போது அரசியல் சார்பு நிலையாக்கபப்ட்டதோ அன்றிலிருந்து தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்பது பலரின் கருத்துகள். பல அரசியல் கட்சித்தலைவர்கள் என்ன சொன்னாலும் எதையும் கேட்க முடியாது என்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர். 

தேர்தல் ஆணையரின் இந்த ஜன நாயகப் படுகொலைக்கான பதிலை அவரும், அவரின் அரசியல் சார்பு ஆட்களும் தந்தே தீர வேண்டும் என்பது அறம்.

ஜனநாயகத்தைப் படுகொலை செய்ய ஒரு அமைப்பு - அதுவும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு, மக்களின் உரிமையைக் கொன்றொழிக்கும் அமைப்பாக மாறி விட்டது.  கோர்ட்டும், பிற அரசியல் கட்சிகளும், பத்திரிக்கைகளும் கள்ள மவுனமாய் இருக்கின்றன. ஆளும் கட்சியை நிரந்தரமாக ஆட்சியில் வைக்க சதி நடக்கிறது என பல்வேறு எதிர்கட்சிகளின் தலைவர்கள் பேசுகிறார்கள்.

ஆனால் எதையும் நாங்கள் கேட்கப்போவதில்லை என்கிறார் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.

இவரின் தேர்வு சந்தேகத்துக்கு உட்பட்டது. இவர் அரசியல் சார்புடையவர் என்கிறார்கள் பல கட்சித் தலைவர்கள். 

யார் இதைக் கேட்பது? 


Wednesday, December 3, 2025

வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதியில் கார்த்திகை தீப விழா 2025

சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால், கோவை ரத்னபுரியிலிருந்த ஒருவர் - உன் குரு உனக்காக காத்திருக்கிறார் என்றார். 

”அவர் யாருங்க?” என்றேன்.

”நீங்களே உங்கள் குருவைத் தேடிக் கண்டுபிடிங்க” என்றார்.

விடாமுயற்சி எனது வழக்கம். விழுந்தால் உடனே எழுந்து அடுத்த வேலையைப் பார்க்கச் செல்வது வழக்கம் என்பதால் - தனியாக கிளம்பினேன்.

காட்டுக்குள் இருக்கிறார் அவர் என சொல்லி இருந்தார். கோதையை வீட்டில் இருக்கச் சொல்லி விட்டு, தனிப் பயணம்.

என்றைக்குமே தனிப்பயணம் தானே ஒவ்வொருவருக்கும்?

சேருமிடமும் தெரியாது. வழியும் தெரியாது. ஆனாலும் பயணித்தேன். 

அவரின் பெயர் மட்டுமே தெரியும். மற்ற எதையும் அவர் சொல்லவில்லை. 

பலர் சென்ற வழியில் நடப்பது எளிது. ஆனால் அந்த வழி தெரிந்திருந்தால் தானே?  

முள்ளங்காடு செக் போஸ்ட் அருகில் இருந்தவரிடம் சுவாமி பெயரைச் சொல்லிக் கேட்டேன். அப்படியெல்லாம் இங்கு யாருமில்லை என்றார் அவர்.

எனக்கென தனி வழி. யார் சொல்வதையும் கேட்டதே இல்லை. எனக்குப் பிடித்திருந்தால், என்னைப் பொறுத்தவரை சரியாக இருந்தால் கேட்பதுண்டு.

ஆகவே தெற்கு நோக்கி சென்றேன். புளியங்காட்டு மரங்களிடையே ஒரு சிறு கட்டிடம் கண்டேன்.

அங்கே என் குரு ஜோதி சுவாமி. என்னிடம் சொல்லிய பெயர் வெள்ளிங்கிரி சுவாமி. ஆனால் எனக்கோ ஜோதி சுவாமி குரு.

ஏன்? புரிந்தவர்களுக்கு நல்லது. புரியாதவர்களுக்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்.

அன்றிலிருந்து இந்த நொடி வரை - விடாது, விலகாது - எனக்கு எல்லாமும் அவரே.

ஒவ்வொரு நொடியும் செதுக்கப்பட்டேன் அனுபவங்களால். ஒவ்வொரு நொடியும் ஒவ்வொன்றை விட்டு விலகினேன். அவைகள் என்னைப் பிடித்திருந்தது.

விடுதலை பெறுதல் வெற்றிக்கு வழி. வெற்றி என்றால் நிம்மதியான வாழ்க்கை.  இன்பம் துன்பம் இரண்டுக்குமான வித்தியாசங்கள் இல்லாததை அறிந்தேன். 

இழப்புகள், துன்பங்கள், துயரங்கள் - வாழ்க்கைச் சாலையில் மைல் கற்கள் போல சென்றன. பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இத்தனைக்கும் யார் காரணம்?

ஜோதி சுவாமி சொல்வார் - ஒவ்வொரு அசைவுகளும் நிர்ணயிக்கப்பட்டவை என.

இதைப் படித்ததும் உங்களுக்குள் நிறைய கேள்விகள் எழும். விரைவில் நம் குரு நாதரின் பெயரில் ஒரு இணையப்பத்திரிக்கை வெளியாக இருக்கிறது.

அதில் காரணங்களை ஆராய்வோம். தெளிவோம். 


இன்றைக்கு குரு நாதரின் ஜீவசமாதியில் கார்த்திகை தீபமேற்றும் விழா நடக்கிறது.

நேற்று நடு இரவு நல்ல மழை. இரவில் வானம் கொட்டியது.  சோவென்ற சத்தம். பூமி குளிர்ந்து கிடக்கிறது. வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பக்தர்களே செய்து கொள்கிறார்கள். 

நம் குரு நாதரிடம் பக்தி கொண்ட பக்தர்கள் ஒவ்வொருவரும் எனக்கு குரு. அவர்களின் நெஞ்சங்களில் குருவானவர் நிறைந்திருக்கிறார். ஓடி ஓடி வேலை செய்கிறார்கள். சக பக்தர்களுக்கு சேவை செய்திட கடுமையாக பணியாற்றுகிறார்கள். அவர்கள் எல்லோருமே எனக்கு குரு நாதரை போலவே தெரிகிறார்கள். அவர்களுக்கு நன்மையும், மேன்மையும் கிடைத்திடுவதை நம் குருநாதர் பார்த்துக் கொள்வார்.

இன்று மாலையில் பக்தர்களால் நம் குருவின் ஜீவசமாதியில் தீபமேற்றி வழிபாடு நடக்க இருக்கிறது. அனைவரும் கலந்து கொள்க.

இன்று நம் குரு நாதரின் ஜீவசமாதியில் ஒரு அற்புதம் நிகழவிருக்கிறது.

அது என்ன?  விதியை தலைகீழாக மாற்றும் நிகழ்வு அது. உற்றுக் கவனியுங்கள். என்னவென்று உங்களுக்கே புரியும்.


தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

திருமந்திரம் - பாடல் எண் : 139


வளமுடன் வாழ்க...!

Sunday, October 19, 2025

தீபாவளி நினைவுகள் - அம்மா

தீபாவளி வந்து விட்டது.  பலகாரம் சுட  ஏதோ ஒரு சந்தேகம் வர கோதை என்னிடம் கேட்டாள். பட்டென்று அம்மாகிட்டே கேளுன்னு சொல்லி விட்டு, கோதையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா இறந்து போய் இரண்டு வருடம் ஆகி விட்டது. மறந்து போய் விட்டது. அம்மா உயிருடன் இருப்பதாகவே நினைப்பு எனக்கு. 

”ஏங்க, முறுக்கு சுடணும், வாங்க” கோதை.

ஒவ்வொரு தீபாவளிக்கும் இதே வேலை. முறுக்கு, மடக்குப் பணியாரம், கெட்டி உருண்டை, மாமியார் ஸ்பெஷல் காராபூந்தி, ஓட்டுப் பக்கோடா செய்வது வழக்கம். காலை பத்து மணிக்கு எண்ணெய் சட்டியில் உட்கார்ந்து, பிழிந்து, வேக வைத்து எடுத்துப் போட்டு முடிக்க இரவு 7 மணி ஆகி விட்டது. 

இரவில் இருட்டுப்பள்ளம் பாட்டியம்மா இட்லி கடையில் கொஞ்சம் இட்லியும், பக்கத்து கடையில் ஒரு ரோஸ்டும் வாங்கி வந்து இரவு உணவு முடிந்தது. உடல் அசதியில் உறங்கி விட்டேன்.

இன்று காலையில் இட்லிக்கு மாவு அரைப்பாள். அதைத் தொடர்ந்து இரவு பத்து மணிக்கு மேல் பலகாரங்கள் செய்து, விடிகாலையில் எழுப்பி தலைக்கு நல்லெண்ணெய் வைத்து, அரப்புத் தேய்த்து குளிக்க வைத்து இப்படி எல்லா வீட்டிலும் நடப்பது போல தீபாவளி நாட்கள் கடக்கும்.

இந்த வருடம் பையன் வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றிருப்பதால் மனம் பாரமாகவே இருக்கிறது. பெற்ற மனசு பித்து.

அம்மு அந்தக் குறையைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார். பெரிய பெண்ணாகி விட்டார். அவர் குழந்தையாகவே இருந்திருக்க கூடாதா என அவ்வப்போது நினைவு. அவர் சிறு குழந்தையாக இருக்கும் போது, ஒரு சட்டியில் சோறு போட்டு தண்ணி ஊற்றி, கொஞ்சம் வாளைக் கருவாட்டை கொடுத்தால், காலை விரித்து உட்கார்ந்து கொண்டு, கஞ்சியை அள்ளி அள்ளித் தின்பார். கருவாட்டை எடுத்து வாய்க்குள் வைக்கும் போது ஒரு இச் சத்தம். பார்க்க பரவசமாய் இருக்கும். 

ஒரு சில நாட்கள் அசதியில் சாப்பிடாமல் தூங்கி விடுவேன். சாப்பாட்டை எடுத்து பிசைந்து தூக்கத்தில் ஊட்டி விட்டு, தண்ணீர் குடிக்கக் கொடுத்து விட்டு, போர்வையைப் போர்த்து விட்டு செல்வார் அம்மு. என் அம்மா தான்.

ஆனாலும் அம்மா நினைவு வந்து விடுகிறது. நெடுவாசலில் இருப்பது போலவே. எனக்கும் அம்மாவுக்கு அறவே ஆகாது. என்னைத் திட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். ஊரில் இருக்கும் சொத்துக்களைப் பார்க்கவில்லை என என் மீது கோபம். அக்காள்களும், தங்கையும் இருக்கிறார்கள். என்னவோ எனக்கு என் அப்பா சம்பாதித்த சொத்தின் மீது ஆர்வம் இருந்ததே இல்லை. சிறுவயது சொத்துப் பிரச்சினைகளால் நான் அதிகம் பாதிக்கப்பட்டது காரணமாக இருக்கலாம். என் அம்மாவின் வாழ்க்கையும் இந்தச் சொத்தினால் பாதிக்கப்பட்டது காரணமாக இருக்கலாம். 

இரண்டு மரக்கால் அதாவது எட்டுப்படி முறுக்கு மாவு அரைப்பார்கள். ஆறு படி மடக்குப் பணியார மாவு. நான்கு படி கெட்டி உருண்டை மாவு. நான்கு படி அதிரச மாவு. பதினைந்து லிட்டர் நல்லெண்ணெய். பெரிய இரும்பு வடைசட்டி. மாலையில் ஆரம்பிப்பார்கள் இரவு முடிந்து விடும். 

ஒரு அண்டா நிறைய முறுக்குகள், சின்ன அண்டா சட்டியில் மடக்குப் பணியாரம், பெரிய குவளைச் சட்டியில் கெட்டி உருண்டை. இன்னொரு பெரிய தேக்குசா பாத்திரத்தில் அதிரசம். 

தீபாவளி அன்று நல்லெண்ணெயில் சுடப்படும் நூற்றுக்கணக்கில் வடை, சுழியன்கள், சேமியாவில் கேசரி, நூற்றுக் கணக்கில் இட்லி, வெங்காயம், சோம்பு போட்டு அரைத்த தேங்காய் சட்னி. 

விடிகாலையில் பெரிய அண்டாவில் கொதிக்கும் சுடுதண்ணீரில் கொதிக்க கொதிக்க குளியல். ஜானகி அக்கா தான் குளிப்பாட்டுவார். சூட்டில் கதறும் என்னை அம்மாதான் வந்து சரி செய்வார். மேலெல்லாம் சிவந்து போய் விடும். ஜானகி அக்காவைக் கடிந்து கொள்வார். 

பட்டாசு வெடித்து, பலகாரங்கள் சாப்பிட்டு விட்டு, மதியம் போல அம்மாவின் கைப்பக்குவத்தில் தயாராகும் ஆட்டு இறைச்சிக் குழம்பு, வறுவல் என வயிறு நிறைய உண்டு விட்டு இரவில் அம்மாவின் அருகில் படுத்து இருக்கும் போது தலையைத் தடவி விட்டு, அருகில் அணைத்தாற் போல படுத்துக் கொள்வார். அம்மாவின் சேலை வாசத்தில் அசந்து தூங்குவேன். 

விடிகாலை நான்கு மணிக்கு பள்ளி வாசல் பாங்கு சத்தத்தில் விழிப்பேன். அம்மா வாசல் கூட்டிக் கொண்டிருப்பார்.

வெளியில் வந்தால், பனி கொட்டுது தங்கம், போய் படுத்துக்கோ என்பார். தாத்தா மாணிக்கதேவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில் இருந்த போது உடுத்திய ஒரு கரும் பச்சைக்கலர் சட்டை ஒன்று இருக்கும். அதை எடுத்து போட்டுக் கொண்டு பாயில் படுத்துக் கொள்வேன். நீண்ட நாட்களாய் தாத்தா கொடுத்த அந்தச் சட்டையைத்தான் குளிருக்குப் போட்டுக் கொள்வதுண்டு. அதில் எத்தனை பேரின் ரத்தம் நனைந்ததோ தெரியாது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் எனது தாத்தா கைது செய்யப்பட்டு, மூன்று வருடம் மலேசியா சிறையில் இருந்தார்.

தீபாவளி அன்று சுமார் ஏழு மணி வாக்கிலிருந்து அம்மா தர்மம் என்ற குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொருவருக்கும் இட்லி, சட்னி, கொஞ்சம் பலகாரங்கள் சாப்பிடக் கொடுப்பார். ஒரு சிலர் பையில் வாங்கிக் கொள்வார்கள். மாலை வரை அம்மா கொடுத்துக் கொண்டே இருப்பார். ஆட்கள் வந்தும் போயும் கொண்டிருப்பார்கள்.

வாசலில் உட்கார்ந்து கொண்டு, ஓலை வெடியினை வெடித்துக் கொண்டிருப்பேன். அம்மா வெடித்து மீதமிருக்கும் ஓலைகளைப் பெருக்கி குமித்திருப்பார்.

அது முடிந்ததும், அம்மா செய்து தந்த இரண்டு கையளவு இருக்கும் முறுக்கினை சாப்பிட்டுக் கொண்டிருப்பேன். 

அம்மா நெடுவாசலில் தான் இருக்கிறார். 

என்னால் தான் போக முடியவில்லை. 

ஏனெனில் எனக்கொரு அம்மா என்னோடு இருக்கிறார். அவரை விட்டு நானெங்கே போவது?

வளமுடன் வாழ்க!

தீபாவளி வாழ்த்துகள்.


Saturday, October 4, 2025

வீட்டுக்கு வந்த டிரம்ப் மற்றும் அஜித் தோவல் - தொடர்ச்சி

எலியார் பூனைகளுக்குப் பயப்படவில்லை. 

ஆகவே நான் இன்கம்டாக்ஸ் அல்லது இ.டி. வழியைத் தேர்ந்தெடுத்தேன்.

அதற்கு காரணம் நானல்ல. 

கனவில் வந்தவர்கள்.

வள்ளலார் கருணையைக் கொஞ்சம் தள்ளி வை எனக் கனவில் வந்து சொன்னார்.

காந்தி மகானோ அகிம்சை என்றால் பாதகம் என்றும் அந்தக் காலத்தில் மனசாட்சி உள்ளவர்கள் இருந்தார்கள். ஆனால் இந்தக் காலத்தில் கொலைகாரனை கூட அண்ணா என்றும், தலைவர் என்று அழைக்கும் படுபாதகர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் கருணையோ, பொறுமையோ காட்டினால் உன்னை அழித்து விடுவார்கள் என்றும், பிரதமர் மோடி அவர்கள் கூட என்னைப் பற்றி காந்தித் திரைப்படத்துக்குப் பின்பு தான் எல்லோருக்கும் தெரிய வந்தது என்று சொன்னார் அல்லவா? இதையெல்லாம் கவனத்தில் வை என்றும் கனவில் வந்து உபதேசித்தார்.

என் மூளை பல உபாயங்களைத் தேடியது. அதில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்தது.

எலியைப் பிடிக்கலாமே தவிர கொல்லக் கூடாது. அது சட்ட விரோதம் என பீட்டா வழக்குத் தொடுக்கும் அபாயம் வேறு இருக்கிறது. 

முதலில் வழக்கு, அதன் பிறகு விசாரணை, வக்கீல் செலவு என இத்தியாதிகள் நடந்து தீர்ப்பு வரும் வரை அது கொலையாக கருதப்படும் அபாயம் வேறு இருக்கிறது.

ஆகவே இந்த வழியைத் தேர்ந்தெடுத்தேன்.

மரண பயத்தைக் காட்டிட்டான் பரமா? - வசனம் நினைவிருக்கிறதா? 

எலிக்கு மரண பயத்தைக் காட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது.

கொலை அல்ல, மரண பயம்..! 

இதெல்லாம் தேவையா? பேசாமல் எலியைப் பிடிக்க உத்தரவு போடச் சொல்லி, டெல்லி கோர்ட்டில் வழக்கு போட்டு விடலாமா எனக் கூட நினைத்தேன். செலவு ரொம்ப ஆகும். ஆகவே அதை தள்ளி வைத்து விட்டேன்.

படுக்கையறையின் அருகில் இருக்கும் சிலாப்பில் எலியார் விடிகாலையில் வந்து விடுவதைக் கண்டுபிடித்தேன். அடுத்த நாள் திட்டத்தினைச் செயல்படுத்த வேண்டியது என முடிவெடுத்தேன்.

விடிகாலையில் எலியார் சிலாப்பிற்கு வந்து, தன் பற்கள் மூலம் சில்மிஷத்தில் இருந்தார். 

கோதையை எழுப்பி பெட்ரூம் கதவைச் சாத்தி விட்டு வெளியில் நில், கையில் ஒரு துண்டு அவசியம். தரையில் அடிப்பது திட்டம். எலியார் பாதித்து விடக்கூடாது என்பது முக்கியம் என திருதிருவென விழித்துக் கொண்டிருந்தவளிடம் விவரித்தேன்.

வழக்கம் போல மண்டையை ஆட்டி விட்டாள். 

லைட்டைப் போட்டவுடன், அறைக்கதவைச் சாத்தி விட்டு வெளியில் நின்றாள்.

என் கையில் ஒரு பிரம்பு. 

லைட்டைப் போட்டவுடன் எலியாருக்கு பீதியில் கிலி பிடித்து விட்டது. குடுகுடுவென பீரோ வழியாக இறங்கி கதவருகில் வந்தவருக்கு மூச்சே நின்று போனது.

சாத்தப்பட்ட கதவு. 

எலியாருக்கு திகில் கிளம்ப கட்டிலுக்குள் கீழ் ஓடி ஒளிந்தார்.

என் கையில் இருந்த பிரம்பால் ஒரு தட்டு.

எலியாருக்கு ஒன்றுக்கு ரெண்டுக்கு வந்திருக்கும் போல.
 
தட தடவென அங்குமிங்கும் ஒலிம்பிக் போட்டியில் ஓடுவது போல ஓடிக் கொண்டிருந்தார்.

இனி திட்டத்தின் அடுத்த பகுதி.

கோதை லேசாக கதவைத் திற எனக் கத்தினேன்.

சத்தம் கேட்ட கோதை கதவைத் திறக்க, எலியாருக்கு திருப்பதி சொர்க்க வாசல் திறந்த போல இருந்தது போல. கூட்டத்தினர் திருப்பதி பெருமாளை பார்க்க முண்டியடிப்பது போல கதவிடுக்கு வழியாக வரவேற்பறைக்குச் செல்ல, அங்கே தூக்கக் கலக்கத்தில் எழுந்த கோதை தலை விரி கோலத்துடன், கையில் துண்டுடன் பத்ரகாளி போல நிற்கிறாள்.

எலியாருக்கு எப்படி இருந்திருக்கும் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

சொர்க்கவாசலா? நரகவாசலா? 

எலியாருக்கு எந்த வாசல்?

ஓடி வந்த எலியாரின் அருகில் துண்டால் ஒரு தரையில் சாத்து சாத்தினாள் கோதை. 

எலியார் துள்ளிய துள்ளலைப் பார்த்தேன்.

உயரம் தாண்டுதலுக்கு ஒலிம்பிக் கமிட்டியார் எலிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பீட்டா அமைப்பினர் இதற்கெல்லாம் வழக்குத் தொடுக்க கூடாது. எலியாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு வேண்டுதல். அம்புட்டுத்தான்.

அன்றிலிருந்து எலியாரைக் காணவில்லை.

இன்கம்டாக்ஸ், என்ஃபோர்ஸ்மெண்ட் இண்டலிஜென்ஸ் ஆட்களைப் பார்த்து எதற்கு எலி அல்ல கிலி பிடித்தலைகிறார்கள் என எலியாருக்குப் புரிந்திருக்கும்.

வாலைச் சுருட்டிக் கொண்டு, பிள்ளையாரிடம் போய் விட்டார் போல எலியார். ஏனென்றால் பிள்ளையார் இந்துக் கடவுள் அல்லவா?

எலியாருக்கு அவரை விட்டால் வேறு போக்கிடம் இல்லையே. 

கனவு மூலமாக வந்த வள்ளலார் எலியை விரட்டி விட்டார் என்றும் வைத்துக் கொள்ளலாம். கடவுள் மனித ரூபாய் அல்ல ரூபாய நமஹ!

வளமுடன் வாழ்க.

04.10.2025