பத்தாம் வகுப்பு வரை ஆவணம் மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். மூன்று சக்கர சைக்கிள் உதவியுடன் பள்ளித் தோழர்களின் உதவியால் வீட்டுக்கும் பள்ளிக்கும் சென்று வருவது பிரச்சினையாக இல்லை. பனிரெண்டாம் வகுப்புக்கு கீரமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்க வேண்டி இருந்தது.
மச்சான் ஆத்மநாதன் அங்கு தான் படித்தான். இருவரும் பள்ளிக்கு சென்று வருவோம். இடையில் என் அம்மாவுக்கும், அவனது அம்மாவுக்கும் கிராமத்து சண்டை வர, அவன் என்னை சைக்கிளில் அழைத்து செல்ல மறுத்து விட்டான். ஒரு வாரம் லீவு.
ஒரு வழியாக நெடுவாசலில் இருந்து வரும் பாலநாதன் என்னை அழைத்துச் செல்வான். கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் தூரம். ஆவணம் கைகாட்டியில் இருந்து செல்லும் ஆனந்தனும் அழைத்துச் செல்வான். ஒரு கட்டத்தில் கீரமங்கலத்தில் தங்கும் அறையொன்றினை வாடகைக்குப் பிடித்து தங்கி விட்டேன்.
கீரமங்கலம் போலீஸ் ஸ்டேசன் பின்னால் தங்கும் அறை. மண்பானை விற்ற பள்ளித் தோழன் இப்ராம்ஷா உதவி. தினமும் காலையில் ஹோட்டலில் இட்லி, மதியம் பட்டினி, இரவில் ஒரு தோசை என ஏற்பாடு. அரசு ஹாஸ்டலில் தங்க எனக்கு அனுமதி கிடைத்தது. அது ஒரு நரகம். சாப்பாடோ கொடுமை.
இப்படித்தான் எனது உயர்நிலை பள்ளிக் கல்வி கடந்தது. பெரிய கொடுமையை அனுபவித்தேன். சாப்பாடு கிடைக்காது. இப்ராம்ஷா வரவில்லை எனில் அல்லது மறந்து விட்டாலோ பட்டினி. பள்ளிக்கும் போக முடியாது. அன்றைக்கு லீவு. இந்த லட்சணத்தில் எங்கே படிப்பது? ஒரு வழியாக முட்டி மோதி படித்துக் கொண்டிருந்தேன்.
அபூர்வம் சின்னம்மா பைங்கால். கீரமங்கலத்துக்கு பக்கத்து ஊர். சித்தப்பா நாகப்பன். அவர்களுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. என் அப்பாவின் தங்கையின் மகள். சித்தி கூட பிறந்தது வீரப்பன், குட்டியப்பன், வீரியம்மாள், சிவையாள், பாப்பாத்தி, அபூர்வம் மற்றும் நாகம்மாள் என ஏழு பேர்.
அம்மா சித்தியிடம் பேசி, பைங்காலில் தங்கிக் கொண்டு, நாகப்பன் சித்தப்பாவின் அண்ணன் மகன் நடராஜனுடன் கீரமங்கலம் பள்ளிக்கு சென்று வர ஏற்பாடு செய்தார்கள்.
பைங்கால் வாசி ஆகி விட்டேன். ரெஸ்ட் ரூம் பெரிய பிரச்சினை. குளிக்க ஆத்துக்கு நடராஜன் அழைத்து செல்வான். நினைத்தவுடன் ஒன்றுக்கு போக முடியாது. கிராமங்களில் கழிவறையெல்லாம் இருக்காது. ஒப்பன் கழிவறை. என் நிலையெல்லாம் நினைத்துப் பாருங்கள். வாழும் போதே நரகத்தை அனுபவித்தேன்.
சித்தி வீடு எனக்கு சொர்க்கம். சித்தப்பா பாலனின் மகள் மாலதி எனது தங்கை, அங்கையற்கண்ணி இன்னொரு தங்கை, ராமசாமி தம்பி, பாட்டி மற்றும் நடராஜன் என உறவுகள். விடிகாலையில் மாலதி ஒரு குவளை காப்பி தரும்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அபூர்வம் சித்தி எருமை பாலில் காப்பி தரும். தினமும் சூடான சாப்பாடு. மாலதி தினமும் வெண்ணெய் கொண்டு வந்து சோற்றுக்குள் வைக்கும். நெடுவாசலில் கட்டிக் கொடுத்த மாலதி, ஏதோ பிரச்சினையால் இறந்து போச்சு. இன்று வரை என்னால் மறக்கவே முடியாத தங்கை. மாலதி என யாரவது தெரிந்தால் போதும், கண்கள் கலங்கி விடும்.
பள்ளிக்கு பத்து பைசா வாங்கி செல்லும் அங்கையற்கண்ணி, ஒரு மிட்டாய் வாங்கி உள்ளங்கைக்குள் வைத்து கொண்டு, மாலையில் பள்ளியில் இருந்து வரும் எனக்கு ஈரத்தால் கசிந்து போனதை தரும். ராமசாமி இரவில் என்னுடன் படுத்துக் கொள்வான். கொல்லைப்பக்கம் போக எனக்கு உதவி செய்வான்.
மாலையில் பாட்டியின் படுக்கையில் தான் படுத்திருப்பேன். தூங்கி விடுவேன். பாட்டி தனது சேலையால் போர்த்தி விட்டு, சத்தம் காட்டாமல் இருப்பார்கள். அபூர்வம் சித்தி ஒன்பது மணிபோல எழுப்பி வேறு அறையில் தூங்க வைக்கும்.
நாகப்பன் சித்தப்பா கீரமங்கலம் தியேட்டருக்கு படம் பார்க்க சென்று திரும்பி வரும் போது, பலகாரம் வாங்கி வருவார். இரவில் எழுப்பி சாப்பிட சொல்வார். தூக்க கலக்கத்துடன் சாப்பிட்டு விட்டு, தூங்கி விடுவேன். பாப்பாத்தி சித்தி, அவ்வப்போது வீட்டில் ஏதாவது ஸ்பெஷல் செய்தால் கொண்டு வந்து தரும்.
அபூர்வம் சித்தியின் கைப்பக்குவம் போல யாருக்கும் வாய்க்காது. இறால் குழம்பும், வறுவலும், மீன் குழம்பும், மீன் வறுவலும், சாம்பாரும், வற்றல் குழம்பு, ரசம் - சொல்லால் எழுத முடியாது. வாரா வாரம் பேராவூரணிக்கு சென்று வரும் சித்தி, எனக்கு பலகாரகங்கள் வாங்கி தரும். ஒரு வாரம் பலகாரகங்கள் சாப்பிட வரும்.
கெச்சலான உடல். திருத்திய முகம் என தெய்வாம்சம் பொருந்திய சித்தி இன்றைக்கு இல்லை. அவர் இறைவனை நாடி சென்று விட்டார். பல்வேறு பணி சுமைகளால் என்னால் அவர் உடல் நிலை சரியில்லாத நிலையில் சென்று பார்க்க முடியவில்லை. நேற்றைக்கு முதல் நாள் இரவு 11 மணிக்கு காலமாகி விட்டார் என அண்ணன் கேசவன் சொன்னார்.
அபூர்வம் சித்தி - நாசூக்கானவர். அவரின் உடை உடுத்தும் விதம், மற்றவர்களுடன் உரையாடும் விதம், பேசும் விதம் எல்லாம் கெத்தாக இருக்கும். வீரப்பன் மாமா, குட்டியப்பன் மாமா - அபூர்வம் சித்தி மூவரும் ஒரே மாதிரி இருப்பார்கள். இறந்து போன எனது தாய்மாமா அருணாசலத்துக்கும், என் அம்மாவுக்கும் பிடித்தவர்.
விடிகாலையில் எழுந்து வாசல் பெருக்கி, மாடுகளுக்கு தீவனம் போட்டு, சாணக் கழிவுகளை எடுத்து, பால் கறந்து, உலை வைத்து சோறு பொங்க அடுப்பை தூண்டி விட்டு, எனக்கு காப்பி போட்டுக் கொடுத்து விட்டு, வயல்காட்டுக்கு சென்று, வேலையாட்களை பார்த்து விட்டு, சித்தப்பாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு என பம்பரம் தோற்றுப் போய் விடும். நினைத்துப் பார்க்க முடியாது. ஓயாது ஒழியாது வேலை வேலை என ஓடிக் கொண்டே இருப்பார்கள்.
மூன்று மாதங்கள் என நினைவு. சித்தி வீட்டில் இருந்து பள்ளி சென்று வந்து பனிரெண்டாம் வகுப்பு முடித்தேன். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவை வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். ஊருக்கு சென்று வரும் போதெல்லாம் சித்தப்பாவையும், சித்தியையும் பார்த்து விட்டு வருவேன். இனி?
சித்தப்பாவுடன் கல்யாணத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது - டிவிஎஸ் பைக்கின் பின்புறம் அமர்ந்து இருந்தவர் பின்னால் விழுந்து விட்டார். தலையில் அடி. சித்தப்பா பெரிய செலவு செய்து சிகிச்சை கொடுத்தார். சித்திக்கு சரியாகவில்லை.
எல்லோருக்கும் பிடித்த அவர் இன்று இல்லை. அவரை இழந்து வாடும் சித்தப்பாவுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் தகாது. சித்தியின் மகன் நீதிக்கு என்ன ஆறுதல் சொல்வது எனவும் தெரியவில்லை.
என்னால் இந்த இழப்பில் இருந்து மீள முடியவில்லை. அம்மா, அப்புறம் சித்தி என இயற்கையின் செயலால் உண்டான இழப்புகள் என்னை வாட்டி வதைக்கிறது.
09.05.2024 (5.25AM)