ஒவ்வொரு மனிதனுக்குள் உறைந்து கிடைக்கும் கருணையினால் இருவரின் வாழ்க்கை துவக்கி வைக்கப்படுகிறது என்பதன் ஒரு துளியை சிறைப்படத்தில் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் அப்பட்டமான அத்துமீறல் அயோக்கியத்தனங்களின் ஒரு சொட்டுவை இப்படத்தில் காணலாம். சிறுபான்மையாக இருப்பவர்களின் - அது எந்த ஒரு மதமாக இருந்தாலும் சரி - அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை இப்படம் காட்டுகிறது.
அசாமில் மியா முஸ்லிம்களை விரட்டி அடியுங்கள் என்று சொன்னவர் மீது சூமோட்டோ வழக்கு போடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம் போல நாமும் இது நாள் வரை வேடிக்கைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் இது பற்றிய தெளிவான பார்வையும் அதற்கான கல்வியும் பெரும்பான்மையோருக்கு கிடைப்பதில்லை. கல்வி மட்டுமே தெளிந்து அறியும் நுட்பத்தை ஒவ்வொருவருக்கும் அளிக்கும். அதை ஒவ்வொரு மனிதனும் அடைவதற்குள் அவன் அடையும் துன்பங்கள், துயரங்கள் கொஞ்சமல்ல.
நீதியும் சட்டமும் எப்போதும் வேறு வேறாக பயணிப்பவை. இதை சிறை திரைப்படம் தெளிவாக காட்டுகிறது.
பலர் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, மக்களிடம் கலவரத்தைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவருக்கும் மூளை நரம்பு வெடித்து சிதறி கையும் காலும் இழுத்துக் கொண்டு கிடக்கிறார். இவர்களுக்கு என்ன ஆகும் என்று தெரியவில்லை.
இது இயற்கையின் நீதி. சட்டத்துக்கும், நீதிக்கும் மேலாக இயற்கையின் நீதி என்ற ஒன்று இருக்கிறது. அது எப்போதும் தூங்குவதில்லை என்பது உண்மை என இந்த நிகழ்வின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
யாரும், எவரும் தப்பவே முடியாது. இயற்கை நீதியை மீறி இந்தப் பூமியில் வாழும் எவரும் வாழ்ந்து விட முடியாது.
அடாது செய்பவன் படாது போவான் சிறை படத்தின் ஹீரோயினின் தந்தை போல.
நானொரு லீகல் ஒப்பீனியன் கொடுத்த ஒரு வாடிக்கையாளரை பணபலத்தைக் காட்டி கைது செய்தார்கள். அவர்களை ஜாமீனில் எடுக்க முனைந்த போது நான் பெற்ற அனுபவங்கள் திகில் கிளப்புவை. சக மனிதனின் மீது நம்பிக்கையை சீர்குலைக்கும் வண்ணம் சட்டம் அயோக்கியர்களுக்கு துணை போகிறது.
கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீனுக்கு முயற்சிக்கிறேன். எதிர்வாதிகள் ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்ய, அவரை ஜெயிலுக்குள் முடக்கி, பயம் காட்டி தான் நினைத்ததை அடைந்து விட முயற்சித்தார்கள்.
என்ன செய்தார்கள் தெரியுமா?
பல வக்கீல்களை ஜெயிலுக்குள் அனுப்பி ஜாமீன் வக்காலத்தில் கையெழுத்து வாங்க முயற்சித்தார்கள். அப்படி அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்தால், ஒருவருக்கு பல வக்கீல்கள் ஜாமீன் கோருவார்கள்.
முதலில் யார் உண்மையான வாதியின் வக்கீல் என கோர்ட்டில் கேள்வி எழுந்திருக்கும். கோர்ட்டில் ஜாமீன் வழக்கு தள்ளிப் போயிருக்கும். அவர் ஜெயிலுக்குள்ளே கிடப்பார். அதை வைத்து அவர்களை மிரட்டி காரியம் சாதித்துக் கொள்ளலாம். இப்படியெல்லாம் நடக்குமா? ஆமாம் நடந்தது.
இந்தக் காரியத்தை வக்கீல்களே செய்தார்கள். அவர்களுக்கு அது அயோக்கியத்தனம் என்று தெரியும். தெரிந்தும் செய்தார்கள். இதை சட்டம் அனுமதிக்கிறது. சட்டத்தின் ஓட்டை இது. எளிதில் தப்பி விடுவார்கள்.
ஒருவரின் வாழ்க்கை மீது வக்கீல்களுக்கு அவ்வளவு எளக்காரம். எல்லா வக்கீல்களும் இதைச் செய்வதில்லை. கொலைக்கும் அஞ்சாத படுபாதகர்கள் வாழும் பூமி அல்லவா இது? என் மீது புகார் தெரிவித்தார் எனது ஒப்பீனியனால் பாதிக்கப்பட்டவர். என்னை முடக்கி விட வழக்கு. பொய் வழக்கு என நிரூபித்தேன். அவர் மீது நான் அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கலாம். ஆனால் அந்த நிலையில் எனக்கிருந்த மனநிலை வேறு. பிரச்சினையை முடிக்கத்தான் நினைப்பேன். வளர்த்தால் அது எவருக்கும் நல்லதல்ல.
ஒரே ஒரு நொடி யோசித்தேன். அவரை மன்னித்தேன். நான் வேறு மாதிரியான ஆள் என்றால் அவர் சாகும் வரை சிறைக்குள் கிடந்திருப்பார். எனக்கு அது தேவையில்லை. வாழ வைக்கணும் அது எவரானாலும் சரி. அதைச் செய்தேன்.

