குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Thursday, February 19, 2026

பக்தர்களின் வேண்டுதல்களை கடவுள் நிறைவேற்றுகிறாரா?

பிறந்ததிலிருந்து ஆரம்பித்து மரணம் வரை விடாமல் தொடர்வது- விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் - கடவுள். பல பெயர்களில் ஆண், பெண் கடவுளர்கள் பலர் இவ்வுலகில் உண்டு. 

குழந்தை பிறந்ததிலிருந்து கடவுள் தொடர ஆரம்பிக்கிறார். இறப்பின் சடங்கு வரையிலும் கடவுள் தொடர்கிறார். சாம்பலான பின்னாலும், புதைத்த பின்னாலும் வாரிசுகள் மூலம் கடவுள் தொடர்ந்து கொண்டே இருக்கிறார். செத்தாலும் கடவுள் யாரையும் விடுவதில்லை. 

இப்படி இருக்க, ஒவ்வொரு நொடியிலும், எங்கு நோக்கினும், ஒவ்வொருவர் வாழ்விலும் கடவுளர்கள் இல்லாமல் இருக்க முடியாது. சாப்பிடும் போதும், தூங்கும் போதும் கூட.

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளர்கள் ஒவ்வொரு மானிடரின் துயர, துக்க, துன்ப, இன்ப காலங்களில் கூடவே இருக்கிறார்கள். 

இப்படித்தான் ஒரு பக்தர் அவருக்குப் பிடித்த ஒரு கடவுள் மீது அன்பு கொண்டு - அவரில்லாமல் நானில்லை என்றே வாழ்ந்து வந்தார்.

அவருக்கொரு பிரச்சினை. அவரின் விருப்ப கடவுளரிடம் சென்று பிரார்த்தனை செய்தார். வாரம் தோறும் செல்வார், அவரின் பிரச்சினை தீர கண்களில் கண்ணீர் வழிய வழிய வேண்டுவார். அவரின் விருப்பக் கடவுள் அவரின் பிரச்சினையைத் தீர்த்து வைத்து விடுவார் என்று நம்பினார். அந்த நம்பிக்கை அவரின் பிராய காலத்திலிருந்து தொடர்கிறது. ஒவ்வொரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும் முன்பும் அவர் கடவுளிடம் வேண்டுவார். அந்தச் செயல் செவ்வனே நடக்கும்.

இப்படித்தான் அவர் கடவுளின் மீது அன்பு, பாசம், பக்தி, அதீத பக்தி வைத்திருந்தார். அவருக்கு கடவுளை விட உயர்ந்தவர், நட்பானவர் வேறு எவருமில்லை. அவருக்கு என்ன பிரச்சினை வந்தாலும் கடவுளின் புகைப்படத்தின் முன்பு நின்று கொண்டு பேசுவார். அவரின் கடவுள் போட்டோவில் உயிருடன் இருக்கிறார் என்று நம்பினார். 

நம்பிக்கைத்தானே வாழ்க்கை. 

இப்படித்தானே ஒவ்வொரு மானிடரும் ஒவ்வொருவர் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். பெற்றோர் பிள்ளைகள் மீது வைக்கும் நம்பிக்கை என நம்பிக்கைகள் பல வகைப்படும். பல தரத்திலும் நம்பிக்கைகள் உண்டு.

நம்புவதைத் தவிர மானிடருக்கு வேறு வழி இல்லையே. ஆகவே ஒவ்வொரிடமும் நம்பிக்கையானது உள்ளத்துக்குள் மறைந்து கிடக்கும். அவரவர் எண்ணத்துக்கு ஏற்ப அவர்கள் பலரின் மீதும், பல கடவுள்களின் மீது நம்பிக்கை வைப்பர்.

அந்த பக்தரும் விடாமல் கடவுளின் முன்பு நின்று கொண்டு பிரார்த்திக்கிறார், அழுகிறார், புரள்கிறார், கடவுளின் போட்டோவின் முன்பு நின்று பேசுகிறார். பூ வைக்கிறார், ஊதுபத்தி வைக்கிறார், கடவுளைப் புகழ்ந்து பாட்டுப் பாடுகிறார். இப்படி கடவுளுக்கு பிடித்தாற் போல பல வேண்டுதல்களை பல முறைகளில் செய்கிறார். ஆனாலும் வேண்டுதல் நிறைவேறவில்லை.

அவருக்குள் தன் வேண்டுதலில் ஏதோ குறையிருப்பது போலத் தோன்றுகிறது. சரியான முறையில் வேண்டுதல் செய்தால் கடவுள் நிறைவேற்றி விடுவாரே, இதுவரை வேண்டுதல் நிறைவேறவில்லையே? ஏதோ குறை இருக்கிறது. இப்படி எண்ணினார் பக்தர்.

சோதிடக்காரரிடம் செல்லாமே என யோசித்தார். அவருக்கு ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டது. வேத சோதிடம், நாடி சோதிடம், கைரேகை சோதிடம், எண் கணித சோதிடம், பஞ்சபட்சி சாஸ்திரம், பிரசன்ன சோதிடம் இதில் எது நல்லது எனப் புரியாமல் குழம்பினார்.

முன்னோரிடம் கேட்கலாமே என வீட்டின் அருகில் இருந்த வயதான பெரியவரிடம் இது பற்றி விசாரித்தார். அவர் வேத சோதிடம் தான் உலகில் இருக்கும் சோதிடத்தில் எல்லாம் சிறந்தது என்றார். அவரின் வழிகாட்டுதல் படி ஒரு சோதிடக்காரரைச் சந்தித்தார்.

பக்தரின் சாதகத்தை ஆராய்ந்து சோதிடக்காரர் உங்கள் வழிபாட்டில் குறையுண்டு என்றுச் சொன்னார். பக்தருக்குப் புளகாங்கிதம். தாம் எண்ணியதை சோதிடரும் சரியாகச் சொல்கிறாரே என. முடிவில் சோதிடக்காரர் ஒரு பரிகாரத்தைப் பரிந்துரைத்தார். 

அதன்படி பக்தர் கடவுளுக்கு பரிகாரத்தை நிறைவேற்றி வேண்டுதலைச் செய்தார். ஆனாலும் கடவுள் பக்தரின் வேண்டுதலை நிறைவேற்றவில்லை.

பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை. 

அடுத்த உபாயமாய் திருவாசகத்துக்கு உருகாத தெய்வமும் உண்டோ என படித்தது நினைவிலாட, பாடினார் மாணிக்க வாசகரின் பாடலை இரவல் பெற்று.

வேண்டதக்கது அறியோய் நீ! 

வேண்ட முழுதும் தருவோய் நீ! 

வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ! 

வேண்டி என்னைப் பணி கொண்டாய்! 

வேண்டி நீ யாது அருள் செய்தாய்! 

யானும் அதுவே வேண்டின் அல்லால்! 

வேண்டும் பரிசொன்று உண்டென்னில்! 

அதுவும் உந்தன் விருப்பன்றே! (திருவாசகம்)

இப்படி ஓசியில் கிடைத்தப் பாடலைக் கண்ணீர் மல்க பல ராகங்களின் கலவையாகப் பாடி கடவுளரிடம் வேண்டினார். துடித்தார், விம்மினார், அயர்ந்தார், அயராது அழுதார், புரண்டார், துவண்டார், துயருற்றார். இருப்பினும் கடவுள் அவரின் நம்பிக்கையை - அவரின் வேண்டுதலை நிறைவேற்றவில்லை.

கடவுள் தன்னைக் கைவிட்டது எனப் புலம்பினார்.

என்ன செய்வது என்றே புரியாமல் அழுதபடியே தூங்கிப் போனார்.

அவர் தூங்கும் வரை கடவுள் அவரின் வேண்டுதலை நிறைவேற்றவில்லை.

ஏன் அவரின் வேண்டுதலை, அவருடைய பிரிய கடவுள் நிறைவேற்றவில்லை?

ஏதாவது காரணம் இருக்குமல்லவா? அது என்ன? 

இந்த வரி படிக்கும் வரை யோசித்திருக்கிறீர்களா?

கர்மவினை, முன் ஜென்ம பாவம், கிடைக்கிறது கிடைக்கும் கிடைக்காதது கிடைக்காது, லூசுப்பய கடவுளாவது, இப்படி பல சிந்தனைகள் உங்களுக்குள் வந்திருக்கும். வரணும், வர வேண்டும், வந்திருக்கும். ஆனால் எது சரியான காரணம்? தெரியாமல் குழம்பி இருப்பீர்கள்.

குழம்ப வேண்டாம். 

இனி தான் நாடகம் ஆரம்பம்.

பக்தர் அழுது, புரண்டு, கதறி, துடித்து வேண்டினார் அல்லவா? தொடர்ந்து அயர்ச்சியில் அயர்ந்து உறங்கி விட்டார்.

பக்தரின் அயர்ந்த தூக்கத்தில் - மயக்கும் உணர்வுகளால் உருவான கனவில் உதிக்கும் மாயாலோகத்தில் அவரின் பிரிய கடவுள் பக்தரின் முன்னால் தோன்றினார். பக்தருக்கு கடவுளைப் பார்த்ததும், அதுவும் தனது பிரிய கடவுளைப் பார்த்ததும், பயத்தில் வியர்த்து விறுவிறுத்து விட்டது. கடவுள் முன்பே வந்து சென்றிருந்தால் பயந்திருக்க மாட்டார். திடீரென முன்னால் வந்தால் யாருக்குத்தான் பயமிருக்காது? இருந்தாலும் கடவுளின் மீது கொண்ட அன்பால், கடவுளிடம் பேச முயன்றார். கடவுள் அவரை என்னுடன் வா என  சைகை காட்டினார்.

பக்தரும் கடவுளின் பின்னால் சென்றார்.

அது ஒரு கோவில். அந்தக் கோவிலில் பக்தரின் பிரிய கடவுள் சிலையாக நின்று அருள் பாலித்தார். பக்தர்களின் கூட்டம் முண்டியது. அங்கே கடவுள் ஒருவரை காட்டினார்.

பக்தரும் கடவுள் காட்டிய திசையில் நின்றிருந்தவரைப் பார்த்தார். 

அது பக்தர். 

அங்கே பார் என்பது போல சைகை செய்தார். பக்தரும் தன்னையே பார்த்தார்.

பக்தர் கடவுளரின் தரிசனத்துக்காக வரிசையில் நின்றார். வரிசையின் முன்பு ஒரு வயதான பாட்டி ஒருத்தி நின்றிருந்தார். வரிசை மெதுவாகச் சென்றது. பக்தருக்கோ அர்ஜெண்ட் அஜண்டா ஒன்று. ஆகவே விரைவில் செல்ல வேண்டுமென்ற ஆவலில் கண் பார்வை குறைபாடு இருக்கும் பாட்டி என நினைத்து, அவர் அசந்த நேரம் பார்த்து, தெரியவா போகிறது என அவருக்கு முன்பு சென்று வரிசையில் நின்று விட்டார். 

கடவுள் பக்தரிடம் ’வா போகலாம்’ என்றார். 

பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை. 

“கடவுளே, எனக்கு ஒன்றும் புரியவில்லையே? ஏன் நீங்கள் எனது வேண்டுதலை நிறைவேற்றி வைக்கவில்லை? காரணம் சொல்லுங்க” என வேண்டி நின்றார்.

சிரித்த கடவுள் ’அங்கே பார்!’ என்றார்

அடுத்த காட்சியை பார்த்தார் பக்தர்.

பாட்டிக்கு தூரப்பார்வை தான் பிரச்சினையே தவிர் கிட்டப்பார்வை துல்லியம்.

தன் முன்னால் நின்றவர், தனக்குப் பின்னால் நின்றவர் என பக்தரின் கால் கட்டை விரலைப் பார்த்துக் கண்டுபிடித்து விட்டார்.

பிறந்ததிலிருந்து, வயதான காலம் வரையிலும் விடாது கோவிலுக்கு வந்து கொண்டிருக்கும் பக்தை அவர் என்பதால் கடவுளுக்கு அந்தப் பாட்டி மீது கொஞ்சூண்டு பிரியம் அதிகம்.

பக்தரும் வரிசையில் நின்று தன் பிரிய கடவுளிடம் தனது வேண்டுதலைச் சொல்லி, அர்ச்சனை செய்யச் சொல்லி திருநீரு பெற்று நெற்றியில் இட்டுக் கொண்டார்.

பின்னால் வந்த பாட்டி கடவுளின் முன்னால் நின்று வேண்டினார் இப்படி

”எனக்குப் பின்னால் வந்த ஆள், என்னை ஏமாற்றி முன்னால் வந்து வேண்டினானே அந்த வேண்டுதல் நிறைவேறவே கூடாது இறைவா” என வேண்டியது பக்தருக்குச் சத்தமாகக் கேட்டது.

காலில் சில்லென்று ஏதோ பட விழித்தெழுந்த பக்தருக்கு கனவில் ஒன்றுக்குப் போய் விட்டோமே என நினைத்தார். 

பக்தரின் கனவில் வந்த கடவுளின் பிரசன்னத்தை மாயாலோகம் அவரின் நினைவிலிருந்து விலகியது.

நிதர்சன உலக மூத்திரம் நாற்றமடித்தது.

அம்புட்டுத்தான் நாடகமும், வசனமும் முடிவுற்றது.

சென்று வாருங்கள். 

பின்னொரு பதிவில் பார்க்கலாம்.

வளமுடன் வாழ்க....!






குறிப்பு : எனது புறா ஒன்று - அதன் அலகில் ஏற்பட்ட நோயால் அலகு உடைந்து போய், பட்டினியில் இறந்து போய் விட்டது. என்னால் அதைக் கவனிக்க முடியவில்லை. இரண்டொரு நாளாக வேதனையில் இருக்கிறேன்.

Saturday, May 3, 2025

கடவுள் இருக்கின்றாரா? மீண்டும் ஓர் ஆய்வு

என்னிடத்தில் ஒருவர் அவர் தொடர்பான பிரச்சினையை சொல்லி உதவும் படி கேட்டுக் கொண்டார். அதற்காக அவரிடத்தில் ஒரு ஆலோசனை அக்ரிமெண்ட் பெற்று அவருக்குத் தேவையான ஆவணங்களை எடுத்துக் கொடுத்தேன். 

இதைக் கண்ட அவரது எதிரி (கோர்ட் வார்த்தை) தொடர்ச்சியாக அவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்து, தமிழக அரசால் வழங்கப்பட்ட சுற்றறிக்கையை கவனத்தில் கொள்ளாத, ஒரு இன்ஸ்பெக்டர் வெள்ளிக்கிழமை இரவு அவரைக் கைது செய்து, சிறையில் அடைத்து விட்டார். 

அவருக்கு உடனடியாக உதவ யாரும் இல்லை. பெயில் எடுக்க வேண்டும். 

அவரைக் காவல்துறையில் விசாரணை செய்யும் போது, அதாவது கைது செய்யும் முன்பு சென்று பார்த்தேன். ஒரு வக்கீலை அறிமுகம் செய்து வைத்தேன். அதை அவர் நினைவில் வைத்திருந்தார். 

ஞாயிற்றுக் கிழமை காலை அவரைப் பார்க்க அவரது மகனுடன் நானும் ஜெயிலுக்கு சென்றிருந்தேன். அதற்குள் வேறு இருவர் மனு கொடுத்து உள்ளே சென்று விட்டனர்.

ஏன் தெரியுமா?

அவரிடம் இருந்து வேறு வக்கீல்கள் வக்காலத்தில் கையொப்பம் வாங்கினால், அவரின் உண்மையான வக்கீல், ஜாமீன் கோரி வாதாடும் போது, பல வக்கீல்கள் எழுந்து நான் தான் அவரின் வக்கீல் என ஆட்சேபனை தெரிவித்தால் ஜட்ஜ் அய்யா கடுப்பாகி ஜாமீன் கொடுக்க மாட்டார். 

நண்பரின் மீது புகார் கொடுத்தவரின் திட்டம் இது.  

அதற்காக இருவரை முன்பே அனுப்பி வைத்திருந்தார். ஒரு தடவை ஒருவரை பார்க்க அனுமதித்தால் மறுபடியும் அனுமதி கிடைக்காது. வெளியில் என்ன நடக்குது என அவருக்கு தெரியாமல் ஜாமீன் கொடுக்க வேறு வக்கீலை அனுப்பி இருப்பதாக நினைத்து வக்காலத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டால் அடுத்த 40 நாட்கள் ஜெயில் வாசம். அடுத்தும் இதேபோல செய்து தொடர்ச்சியாக ஜெயில் வைத்து விடலாம் என திட்டம்.

அதை நிறைவேற்ற வேறு ஆட்கள் உள்ளே சென்று விட்டார்கள். 

நானும் பையனும் செய்வதறியாது திகைத்து நின்றோம். 

அப்போது ஜெயில் பாதுகாப்பில் இருந்த ஒருவர் என்னிடம் வந்து விசாரித்தார். 

விபரம் சொன்னேன். இரத்த உறவுக்குதான் முதல் அனுமதி தருவோம். இது ஏதோ பிரச்சனை போல இருக்கு என சொல்லி, மனு கொடுத்து உள்ளே சென்ற இருவரையும் உடனடியாக தடுத்து நிறுத்தி, மீண்டும் அழைத்து வந்து விட்டார்.

வந்த இருவரும் என்னைப் பார்த்ததும் தலையை எடுத்து விடுவேன், கையை உடைத்து விடுவேன், நீ இப்படி இருந்து கொண்டு என்னெவெல்லாம் செய்கிறாய். உன்னை சும்மா விடமாட்டேன் என ஜெயில் வாசலிலில் நின்று கொண்டு மிரட்ட ஆரம்பித்தனர். 

பயத்தில் உடலெல்லாம் நடுங்கி வியர்த்து வழிந்து அய்யோ என்னை விட்டு விடுங்க என அவரிடத்தில் கதறி விட்டேன். ஓட கூட முடியாது. என் நிலையை பார்த்தீர்களா? அவர்கள் இருவரிடமும் மன்னிப்பு கேட்டேன். இனி வரவே மாட்டேன் அய்யா என கதறி விட்டேன். நானென்ன ஹீரோ பாலகிருஷ்ணாவா? சவால் விட்டு, ஒரே உதையில் இருவரையும் பறக்க விட? இல்லை பனையூர் பண்ணையாரா? பயந்து தானே ஆகனும்?

ஆனால் அவர்கள் கொடுத்த மனு  ரத்து செய்யப்பட்டு நானும் அவரின் பையனும் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தோம். சனிக்கிழமை அன்றே ஒரு சில வக்கீல்கள் உள்ளே சென்று வக்காலத்கில் கையெழுத்து கேட்டிருக்கிறார்கள். அவர் முடியாது என சொல்லி விட்டார். அந்த கடுப்புக்காக அவரை மிரட்ட தான் இவர்கள் வந்திருக்கிறார்கள்.

வெளியில் வந்ததும் அவர்கள் இருவரும் ஜெயிலின் வாசலில் காத்துக் கொண்டிருந்தனர். இனி அவரின் வழக்கில் தலை இட கூடாது என மிரட்டினார்கள். நானும் இனி அவர் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்து விட்டு வந்தேன். நானென்ன அரிச்சந்திரனா சத்தியத்தைக் காப்பாற்ற? அடியேன் புனர்பூச நடசத்திரத்தில் பிறந்த கிருஷ்ணர் அவதாரம். (மன்னிக்கவும் - பழக்க தோஷம் விடாது கருப்பு போல தொடர்கிறது)

திங்கள் கிழமை பெயில் எடுத்து - நான் ஜாமீன் கொடுத்தேன். அவர்கள் சுமார் பதினைந்து பேர்கள் வந்திருந்தனர். நாக்கை நீட்டி மிரட்டினார்களாம், கொலை செய்து விடுவேன் என கையால் கழுத்தில் காட்டினார்களாம். 

ஜாமீன் கிடைத்த பிறகு கூட இருந்த நண்பர் என்னிடத்தில் சொன்னார். அன்றைக்குப் பார்த்து கண்ணில் கோளாறு. ஆகையால் அவர்களை பார்க்க முடியவில்லை. 

செவ்வாய் கிழமை அவரை வீட்டில் விட்டு வீடு வந்தேன். மாலையில் தான் ஜாமின் ஆர்டர் கிடைத்தது. அதற்குள் ஜெயிலில் ஜாமீன் விடுவதற்கான நேரம் முடிந்தது.

இங்கே கடவுள் எங்கே வந்தார் என கேட்கின்றீர்களா? புரியவில்லை எனில் தொடருங்கள்.

என்னை விசாரிக்க வந்தார் அல்லவா ஒரு காவல்துறை அலுவலர், அவரே தான். 

ஒரு காவலர் உள்ளே போடுகிறார். ஒரு காவலர் உதவுகிறார். இது என்ன விதமான செயல்பாடு? இதற்கும் கடவுளுக்கும் தொடர்பு உண்டா? 

கேள்விகள், கேள்விகள். 

விடை சொல்ல முடியாத பல கேள்விகளில் இதுவும் ஒன்றா? 

நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றா? இது எது? 

இதற்கெல்லாம் பதில் என்னிடத்தில் இருக்கிறது. ஆனால் அதை சொல்ல முடியாது. 

ஏனெனில் அதன் தத்துவம், அதன் அர்த்தம் நாம் வாழும் வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவத்தில் கிடைக்காது. 

நம்மிடத்தில் இருக்கும் அறிவு பிறரால் புகுத்தப்பட்டது. இந்த அறிவு அடிமைக்கானது. அடிமை வாழ்வுக்கானது. அதுவே உன்னதமானது என சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை நம்மால் விட முடியாது. உண்மையை உணரவும் முடியாது.

வளமுடன் வாழ்க.

Friday, March 24, 2023

நாய் - மனிதன் - கடவுள்

நாய்கள் தங்களது வயிற்றுக்கு ஒவ்வாத உணவை உண்டு விட்டால், அருகம்புல்லையோ அல்லது ஏதோ ஒரு புல்லையோ தின்று, செரிமானத்தைச் சரி செய்து கொள்ளும். இதற்காக நாய் எந்த நீட் தேர்வும் எழுதவும் இல்லை. மெடிக்கல் கல்லூரியிலும் படிக்கவில்லை. 

அதற்கு அந்த அறிவு எப்படி வந்தது? ஐந்தறிவு பிராணியான நாய்க்கு, உடல் நோய் கண்டால், நோய்க்கு உகந்த மருந்தினைக் கண்டுபிடித்து உண்ணும் அறிவு எங்கிருந்து வந்தது? 

என்றாவது யோசித்தீர்களா? இதற்கு விடை என்ன தெரியுமா?

நாய்கள் இயற்கையுடன் இருக்கின்றன. அவை இயற்கையுடன் வாழ்கின்றன. வெள்ளிங்கிரி சுவாமி ஆஸ்ரமத்தில் பப்பி என்றொரு பெண் நாய் இருந்தது. அதற்கு ஏதாவது கொடுத்தால், அதை எடுத்துக் கொண்டு போய், பள்ளம் தோண்டி மண்ணைப் போட்டு மூடி வைத்து விட்டு வரும். நான் நேரில் கண்டது. பசிக்கும் போது, அங்கு வந்து படுத்துக் கொண்டு, எடுத்துச் சாப்பிடும். இந்த அறிவு அதற்கு எங்கணம் வந்தது?

அவைகள் இயற்கையுடன் வாழ்கின்றன.

ஆனால் மனிதனுக்கு நோய் வந்தால் அலோபதி, ஹோமியோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், அக்குபஞ்சர், வர்மம் போன்று பல வகையான மருத்துவத்தை எடுக்கிறான். நாயை விட ஆறறிவு கொண்ட மனிதனுக்கு ஏன் இந்த அறிவு இல்லை. நோய் தீர ஏன் பிறரை நாடுகிறான்?  அவனுக்கே அவன் உடம்பு தனியாகிப் போனது ஏன்? எப்போதேனும் யோசித்திருக்கின்றீகளா?

இதற்கொரு விடை காணலாம்.

முதலில் மதம் என்றால் மதம் தான் என்பதை அறியுங்கள். எனக்கு பல சாமியார்களுடன் சிறு வயதிலிருந்து பழகும் நாட்கள் இருந்தன. அவர்கள் மூலம் நான் கண்டது, கேட்டது, அறிந்தது எல்லாம் - கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதுதான். அதைத்தான் திருமூலரும் சொல்லி இருக்கிறார். 

மனிதனே கடவுள் என்பது தான் என் நினைப்பு. 

என்னில் இருப்பதுதான் உங்களிடமும் இருக்கிறது. நீங்கள் யாரோ நானும் அதே. உங்களையும் என்னையும் பிரிப்பது நம் அறிவு. 

உடலுக்கு வலி தெரியாது. மனதுக்குத்தான் வலி தெரியும் அல்லவா?

மதம் என்றால் மதம் தான். மதப்புராணத்தையெல்லாம் தூக்கி ஓரமாக வைத்து விடுங்கள். ஒரு சில விஷயங்களைப் புரிந்து கொள்வதற்காக பைபிளை எடுத்துக் கொள்வோம்.


பைபிளில் சொல்லப்பட்டபடி, ஆதாமை ஏவாள் தோட்டத்திலிருக்கும் ஆப்பிளை எடுத்து உண்ணச் சொல்வாள். ஆதாம் ஆப்பிளை உண்ட பிறகு - இருவரும் நிர்வாணமாக இருப்பதை அறிந்து ஆடை உடுத்த ஆரம்பித்தனர். அதாவது இருவருக்கும் அறிவு வந்து விட்டது என்று படித்திருக்கிறோம்.

அதேதான்..

இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தேன். ஆம், மனிதன் இயற்கையிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டுவிட்டான். அது எப்படி, எப்போது நிகழ்ந்தது என்று இன்றும் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். சரியான, துல்லியமான தகவல்கள் இன்னும் கிடைத்தபாடில்லை. 

கடவுள் யாரையும் படைப்பதும் இல்லை, கணக்கு வழக்கு பார்ப்பதும் இல்லை, வரவு செலவு கணக்குகள், பாவம் புண்ணியம் போன்றவைகள் எதையும் பார்ப்பதில்லை. 

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர் கையில் இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு வாழத்தான் தெரியவில்லை. ஒன்று எதிர்காலத்தில் வாழ்கிறான். இல்லையெனில் இறந்தகாலத்தில் வாழ்கிறான் என்கிறார்கள் அறிவாளர்கள்.

மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பினைத் துண்டித்ததில் பெரும் பங்கு வகிப்பது மனிதனின் அறிவு. அதை மனம் என்கிறார்கள். 

இதை மீண்டும் அடைவது எப்படி? அதைக் கண்டுபிடித்து விட்டால் இன்று நம்மிடையே வாழும் ஸ்ரீராம், ஜோதி சுவாமி போல மாறலாம்.

அவர் பெயர் ஸ்ரீராம். ஆந்திராவில் வசிக்கிறார் என்று நினைவு. இவரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை நடிகர் ராஜேஷ் யூடியூப் சேனலில் பார்த்தேன். அவர் காலத்தின் முன்பும் பின்பும் சென்று வருவதை ஒருவர் பகிர்ந்து கொண்டார். 

அதாவது அவர் தன் நண்பரிடம் ஒரு கவரைக் கொடுத்து, ஒரு வாரம் சென்ற பிறகு பிரித்துப் பார்க்கும் படி சொல்லி இருக்கிறார். அவ்வாறு பிரித்துப் பார்த்த போது, கடந்த வாரத்தில் நண்பருக்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அந்தக் கவருக்குள் இருந்த காகிதத்தில் எழுதி இருந்ததாம். இது உண்மை என்றால் எதிர்காலத்துக்குள் சென்று வந்திருக்கிறார் ஸ்ரீராம் என்று புரிந்து கொள்ளலாம்.

ஜோதி சுவாமி பல முறை விடிகாலையில் பேசும் போது, தூக்கத்தின் போது அவர் கேட்ட ஒலிகள், அசைவுகள், ஆட்கள் மீண்டும் தென்படுகிறார்கள் ஆண்டவனே என்று சொல்லி இருக்கிறார். எதிர்காலத்துக்கும் இறந்தகாலத்துக்கும் சென்று வருகிறார் என்று இப்போது புரிகிறது.

ஒரு தடவை சுவாமியும் நானும் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது, தேய்த்துக் குளிக்க ஏதாவது கிடைத்தால் பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த போது, புத்தம் புது பீர்க்கங்காய் குடலைக் கொடுத்தார். தேய்த்து விட்டு செடியோரம் வீசிய போது கண் முன்னாலே மறைந்து போனது கண்டு மண்டை காய்ந்தேன். அப்போதெல்லாம் உணர்ந்து கொள்ளும் தெளிவு எனக்கு வரவில்லை.

இதே போல ஸ்ரீராம் அவர்களும் போட்டோவில் இருந்து எலுமிச்சை பழத்தை எடுத்ததாகப் பேட்டியில் சொன்னார்கள். இது எப்படி சாத்தியமானது என்ற ரகசியம் தெரிந்து விடின் மனிதர்கள் எவரும் துன்பத்தில் உழன்று கிடக்கமாட்டார்கள்.

இயற்கையினுடனான தொடர்பினை மனிதன் இணைத்துக் கொள்வதற்கான வழி கிடைத்து விட்டால் எல்லாம் சுகமே.

இது பற்றி யோசித்துப் பாருங்கள். 

அவ்வளவுதான்.

Wednesday, July 15, 2015

கடவுளைப் பார்க்க முடியுமா?

”கடவுளைக் கண்ணால் பார்க்க முடியுமா? ” உலக மாந்தர்களின் உள்ளத்தே விடை தெரியா கேள்வியாய் காலம் காலமாய் உதித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் எவராலும் விடை சொல்ல முடியவில்லை. 

ஞானிகளைக் கேட்டால் ”அவர் உன்னுள்ளே இருக்கிறார்” என்கிறார்கள். போகிகளைக் கேட்டால் ”கடவுளா? அவர் அந்தக் கோவிலில் இருக்கிறார், இந்தக் கோவிலில் இருக்கிறார்” என்று சொல்கிறார்கள். நாத்திகர்களைக் கேட்டால்,”கடவுள் இல்லை, கல் தான் உண்டு” என்கிறார்கள்.

எவரைக் கேட்டாலும் பதில் கிடைக்கிறது. ஆனால் கடவுளைக் காணமுடியவில்லை. அன்பர்களே, சீர்காழி கோவிந்தராஜனின் இந்தப் பாடலைத் தனிமையில் கேளுங்கள் ! கேட்டு விட்டு மனதூடே ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். ஏன் கடவுளைப் பார்க்க முடியவில்லை என்று உங்களுக்குப் புரிய வரும். அப்படியும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் ....



ஆசை ஆசையாய் பெற்று வளர்த்த குழந்தையைத் திடீரென்று காணவில்லை என்றால் குழந்தையைக் காண்பதற்காக மனது துடிதுடிக்குமே! அழுது புலம்புமே ! அலறுமே ! உடல் சோர்ந்து போமே ! இதயம் வலித்து வலித்து கண்களில் கண்ணீர் வழிந்தோடுமே ! உடல் செயலற்றுப் போய் இடிந்து போகுமே? செத்துப் போய் விடலாமே! என்று துடித்து துடித்து துன்பத்தில் உழலுமே ! ஒரு குழந்தையைக் காணாவிடில் இப்படியெல்லாம் வேதனையில் வீழ்ந்து வெம்பி வெந்து துயரத்தில் ஆழ்ந்து அழுகின்ற மனிதர்கள் என்றாவது ஒரு நாள் கடவுளைக் காண இப்படித் துடித்ததுண்டா? அழுததுண்டா? ( கேள்வி கேட்டவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்).

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

Monday, September 24, 2012

கடவுள் நம்மைக் காப்பாற்றுவாரா?


கோவில்களுக்குச் செல்வது, பூஜைகள் செய்வது, அபிஷேகம் செய்வது, கோவில் பணிகள் செய்வது, தளம் போடுவது, விளக்குகள் வாங்கிக் கொடுப்பது, பூக்கள் வாங்கிக் கொடுப்பது போன்ற இறைப்பணிகளைச்  செய்பவர்களைக் கடவுள் காப்பாற்றுவாரா? 

அவ்வாறு திருப்பணி செய்பவர்கள் எல்லாம் கோடிகளில் அல்லவா மிதக்க வேண்டும்? அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே?. நோய் நொடி இல்லாமல் அல்லவா வாழ வேண்டும். ஆனால் அப்படி யாருக்கு கடவுள் ஆசி வழங்குவதில்லையே? 

அதுமட்டுமா? கடவுளுக்கு நாள்தோறும் பூஜை,புனஸ்காரங்களைச் செய்து வரும் பூஜாரிகளும், ஐயர்களும் கோடீஸ்வரராய் அல்லவா மாறி இருக்க வேண்டும்? இன்றைக்கும் ஐந்து, பத்து தட்டுகளில் விழுகிறதா என்றல்லவா பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் இவர்கள்?  இவர்களுக்கு நோய் நொடி வந்தால் மருத்துவரிடம் அல்லவா செல்கின்றார்கள்? கடவுளுக்கு நாள்தோறும் தொண்டு செய்பவர்களுக்கே இந்த நிலை என்றால் அவ்வப்போது கோவில்களுக்குச் சென்று வருபவர்களின் நிலை பற்றி கேட்கவே வேண்டாம்.

ஏன் கடவுள் வேண்டி நிற்போருக்கு உடனுக்குடன் எதுவும் செய்வதில்லை? கல் மனதாய் இருக்கின்றானே ஏன்? இந்தக் கடவுள் நம்மைக் காப்பாற்றுவானா? இது போல இன்னும் என்னென்னவோ கேள்விகள் இருக்கின்றன. இக் கேள்விகளுக்குப் பதில் தான் என்ன?

மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழ்பவர்களில் சில நாடுகளில் இருப்போர் மாயா உலகின் உச்சபட்ட இன்ப வாழ்வினை வாழ்கின்றார்கள். அவர்கள் என்றைக்கும் கோவில்களுக்கோ, சர்ச்சுகளுக்கோ செல்வதில்லை. அழகான வீடு, கார், மனைவி, வற்றவே வற்றாத பொருளாதாரம், ஆரோக்கிய வாழ்க்கையை வாழ்கின்றார்கள். கடவுளை தினம் தோறும் வணங்குபவனை விட, கடவுளைப் பற்றி சிந்தித்தே பாராதவர்கள் இன்ப வாழ்வில் திளைக்கின்றார்களே எப்படி?

நமக்கு முன்பு வாழ்ந்து சென்றவர்கள் சில அனுபவங்களைப் பாடல்களாய் பாடி வைத்திருக்கின்றார்கள். அப்பாடலில் இரண்டு பாடலை முதலில் படியுங்கள்.

கோயிலாவது ஏதடா? குளங்க ளாவது ஏதடா? 
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே - சிவவாக்கியர்

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியைக் கட்ட வேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே – அகத்தியர்

மேலே இருக்கும் இரண்டு பாடல்களை ஊன்றி கவனித்துப் படித்துப் பாருங்கள். கடவுளின் தந்திரம் புரியும். 

Tuesday, September 11, 2012

முழுமையான கடவுள் எது?

இந்து சமயத்தில் பல கடவுள்கள் இருப்பதை பலரும் கிண்டல் அடித்திருப்பார்கள். அதற்கான பதிலை ஒரு புத்தகத்தில் படித்தேன். எனக்கு அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் இருந்ததால் விரைவில் அப்பதிவு வெளியிடப்படும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்