குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, May 30, 2010

வாழ்வின் சூட்சுமம் தெரிந்த நாள்


கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் மெட்ரிக் பள்ளியின் கணிணி ஆசிரியராகவும், இரண்டு சாரதா கல்லூரி மேலும் ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் அனைத்துப் பள்ளிகளின் கணிணி நிர்வாகியாகவும் பணி புரிந்த போது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களும் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட நிகழ்ச்சிகளும் நடந்தேறின.

ஊனத்தின் காரணமாய் எனக்குள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையின் காரணமாக திருமண வாழ்வு பற்றி நான் என்றைக்கும் எண்ணிப் பார்த்தது இல்லை. எதை வேண்டாமென்று எண்ணுகிறமோ அந்தச் சூழலில் தான் நீ வாழ வேண்டுமென்று கடவுள் நினைத்தானோ என்னவோ தெரியவில்லை நான் வேலை செய்தது மகளிர் கல்லூரியில். ஆனால் இருந்ததோ சாமியார்கள் அருகில்.

தனி அறையும் அட்டாச் பாத்ரூம் வசதியுடன் மிகவும் வசதியாக தங்கி இருந்தேன். அறையில் இரண்டு கட்டில்கள் இருக்கும். யாராவது கெஸ்ட் வந்தால் அவர்கள் என்னுடன் தங்கி இருப்பர். அப்படி ஒரு நாள் வந்தவர்தான் பசுபதீஸ்வரானந்தா அவர்கள். வயது 96 இருக்கும். கை கால்களும் ஒரு தாள லயத்தில் உதறிக் கொண்டிருந்தன. தலையோ நிற்காமல் அங்குமிங்கும் ஆடியபடியே இருந்தது. கண்களில் கண்ணாடி அணிந்திருந்தார். தலையாட்டத்தின் காரணமாய் கண்ணாடி கழன்று விடாமல் இருக்க அழுக்கேறிய கயிறு ஒன்று தலையைச் சுற்றி கட்டியிருப்பார்.

என்னைப் பற்றி விசாரித்தார். சொன்னேன். விடிகாலையில் நான்கு மணிக்கு ஏதோ சத்தம் கேட்டு விழிப்பு வந்தது. வலது காலின் கட்டை விரலை ஊன்றி லங்கோடுடன் சுமார் முக்கால் மணி நேரமாய் ஆடாமல் அசையாமல் கல்லில் வடித்த சிலைபோல நின்று கொண்டிருந்தார் பசுபதீஸ்வரானந்தா. ஆடிய தலையும், கைகால்களும் ஆடாமல் அசையாமல் இருந்தன. முக்கால் மணி நேரம் சென்ற பிறகு பத்து நிமிடம் நேரம் தியானத்தில் அமர்ந்தார். பின்னர் பாத்ரூமிற்குள் சென்று குளித்தார். விபூதி அணிந்தார். கட்டிலில் உட்கார்ந்தார். அதன் பிறகு தலையும், உடலும் ஆட்டம் போட்டன. போர்வைக்குள்ளிருந்து நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்டார். இல்லையென்றேன். அதைப் பற்றி யோசிக்கவே இல்லையென்றேன். உனக்கு திருமணம் நடக்கும். ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் இருப்பார்கள். தெய்வமே உனக்கு மனைவியாய் வரும் என்றார். சாமி, ஏன் சாமி இப்படி ரகளை செய்கின்றீர்கள் என்று கோபப்பட்டேன். நான் கடவுளைத் தரிசிக்க வேண்டுமென்றும் அதுதான் என் ஆசையென்றும் சொன்னேன். ஆத்மானந்தா சொன்னாரா என்று கேட்டு விட்டு தொடர்ந்தார்.

என் இளவயதில் நானும் கடவுளைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் சாமியாராய் மாறினேன். இமயமலை சென்றேன். ரிஷிகேஷ் சென்றேன். திருவண்ணாமலை சென்றேன். எனக்குத் தெரியாத யோகமும் தவமும் இல்லை. சாப்பிடாமலயே ஒரு வருடம் கூட இருப்பேன். தியானத்தில் ஆழ்ந்தால் எத்தனை நாட்களோ தெரியாது. அப்படிப்பட்டவன் உனக்கு ஒன்றைச் சொல்கிறேன் கேட்டுக் கொள் என்றுச் சொல்லி தொடர்ந்தார்.

இன்னும் சில வருடங்களில் நான் இறந்து போய் விடுவேன். நான் செய்த இத்தனை தவத்தினாலும் யோகத்தினாலும் இதுவரை கடவுள் எனக்கு காட்சி தரவே இல்லை. கடவுளைப் பார்க்காமல் விடமாட்டேன் என்று இமயமலையில் திரிந்து கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்ப்பட்ட சாமியார் சொன்னார் ” நீயே தெய்வம் ”

அன்றைக்கு புரிந்தது எனக்கு. என் கடந்து போன நாட்கள் இனிமேல் கிடைக்குமா? கிடைக்காது. இதோ என் வாழ்வையும் சேர்த்து நீ வாழ். நீ விரும்புகிறாயோ இல்லையோ உனக்கு திருமணம் நடக்கும். குழந்தைகள் பிறக்கும். ஒவ்வொரு கட்டமாய் நீ பக்குவப்படுவாய். வாழ்வின் அத்தனை சூட்சுமங்களையும் தெரிந்து கொள்வாய் என்று சொன்னார்.

இதோ எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். மனைவி என்னை தன் குழந்தை போல கவனித்துக் கொள்கிறாள். என் தாய் என் மனைவியைப் பார்த்து என்னிடத்தில் சொன்னார் “ நான் உன்னிடத்தில் எப்போதும் இருப்பேன்” என்று.

”நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை ” :- இயேசு நாதர்.

Friday, May 28, 2010

அண்ணனின் தவிப்பறியா மறைந்த தங்கையின் கதை

எனது இளமைக்காலம் கொடுமையானதாகவே இருந்தது. அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் எனது ஊனத்தின் காரணமாய் தட்டிக் கழிக்கப்பட்டன என்பது இன்றைக்கும் என்னால் மறக்க முடியாத ஒன்று. இதுவரையிலும் எந்த ஒரு கல்யாண வீட்டிலும் சாப்பிட்டது கிடையாது. காரணம் எனது ஊனம். இளமைக்கால வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியிலும் ஊனத்தை நினைவுபடுத்தும் சம்பவங்களே என்னைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டு கூடவே வந்தன. அதன் காரணமாய் நான் அடைந்த மனத்துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள நல்ல நட்பு ஏதுமின்றியே என் நாட்கள் கழிந்தன.

நட்பு என்பதும் உடலை முன்வைத்து வருபவையோ என்று கூட எனக்குச் சில சமயம் நினைக்கத் தோன்றும். அதற்கு சில சம்பவங்களும் சாட்சியாய் என் முன் வந்து நிற்கும். இப்படி நான் கடந்து வந்த வாழ்க்கையின் நாட்கள் இன்றைக்கும் எனது இரவுகளில் கனவுகளின் மீட்சியாய் என் முன்னே நின்று தன் எச்சத்தை என் மீது உமிழ்ந்து விட்டுச் சென்ற பிறகு தூக்கம் வராமல் அவதிப்படுவேன்.

எனது மேல் நிலைப் பள்ளிப் படிப்பு எனக்கு மிகவும் கசப்பானவையாக இருந்தது. காரணம் நான் விரும்பிய படிப்பு எனக்குக் கிடைக்கவில்லை. தஞ்சாவூரில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியும், புனல்வாசலில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியும் என் ஊனத்தை முன் வைத்து கணிப்பொறிக் கல்வியை தர முடியாது என்று சொன்னது. ஸ்டூலில் ஏறி உட்காரமுடியாது என்று அவர்களாக ஒரு முடிவெடுத்துக் கொண்டு என் ஆசையை நிராகரித்தார்கள். என் கனவு நிறைவேற நான் மேலும் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டி இருந்தது. இதற்கு நான் பட்டபாடு இருக்கிறதே அதை எழுத்தில் வடிக்க முடியுமா என்றால் மீண்டும் அந்த ஒரு துன்பத்தை அனுபவிக்க வேண்டுமா என்று மனது கேள்வி கேட்கிறது.

என் எம்எல்ஏ உறவினர் ஒருவரின் சிபாரிசில் தான் கணிப்பொறியியல் பட்டப்படிப்பு கிடைத்தது. அதையும் மறைந்த திருமெய்ப்பொருள் என்ற எனது கல்லூரி முதல்வர் மறுதலித்தார். ஆனால் பூண்டி புஷ்பம் கல்லூரியின் தாளாளர் திரு துளசி அய்யா வாண்டையார் எனக்கு கணிணி அறிவியல் துறைப்படிப்புக் கிடைக்கவும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொன்னார். அன்றைக்கு அய்யா கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் எனக்கு கம்ப்யூட்டர் படிப்பு கானலாகவே ஆகியிருக்கும். சரி போகட்டும் பழங்கதை.

எனது பனிரெண்டாம் வகுப்பு முடியும் தருவாயில் பைங்கால் என்ற கிராமத்திலிருக்கும் எனது சித்தியின் வீட்டில் தங்கிப் படித்தேன். என்னை அழைத்துச் செல்வது சித்தியின் மூத்த கொளுந்தனாரின் மகன். அவனும் என்னோடு கீரமங்கலத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்புப் படித்தான். சில உறவுகளின் நினைவுகள் இறக்கும் வரையிலும் மறக்க முடியாதவைகளாக இருக்கும். அப்படிப்பட்ட உறவுகளில் என் தங்கை ஒருத்தியை நான் இழந்து சில இரவுகளில் வரும் அவளின் நினைவுகளின் தொந்தரவால் தவித்திருக்கிறேன். அவள் பெயர் மாலதி. என்னை விட்டுப் பிரிந்த என் உயிருக்கும் மேலான என் அருமைத் தங்கை இவள்.

அடுத்த பகுதி விரைவில்

வாழ்விற்கு தேவை சந்தோஷமா? பணமா?


இன்றைய காலச் சூழலில் மனிதர்கள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். உடல் நலம், மன நலம் பற்றி மனிதர்கள் கொஞ்சம்கூட யோசிக்கும் திறமையற்றவர்களாய் காசுக்கு வேலை பார்க்கும் இயந்திரமாய் உலவிக் கொண்டிருக்கிறார்கள். லட்சங்களில் கொடுக்கப்படும் சம்பளம் பின்னர் மால்களின் மூலமாக வசூல் செய்து விடுகிறார்கள்.

வெறும் 200 ரூபாய் பொருமானமுள்ள சாதாரண டிசர்ட் 2000 ரூபாய்க்கு பிராண்ட் பெயரில் விற்கப்பட்டு கொள்ளை அடிக்கப்படுகிறது. பிராண்ட் மோகத்தில் அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் என்று தெரியாமலே, ஏமாளிகளாய் திரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் தனது ஈகோவினால் தனது உழைப்பை பிறர் திருடுகிறார்கள் என்பது தெரியாமல் ஏமாந்து போவதுதான் வேதனை.

வாழ்க்கை என்பது வேறு வகையானது. அது கொண்டாடப்பட வேண்டியது. மனித வாழ்க்கையின் தத்துவமே பிறருக்காக வாழ்வது தான். ஆனால் இன்றைய நவ நாகரீக மனிதர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

வெறும் பத்து செண்ட் நிலத்தில் தனக்குத் தேவையான பொருளைச் சம்பாதிக்கும் ஒரு விவசாயியின் பேட்டியைக் படித்துப் பாருங்கள். இந்த விவசாயிக்கு முதலாளி என்று எவரும் இல்லை. காலை 10 மணி இரவு 7 மணி என்ற கணக்கு இல்லை. தானே முதலாளி தானே தொழிலாளி என்று வாழும் இந்த விவசாயியை விடவா நீங்கள் சந்தோஷமாய் இருக்கின்றீர்கள்?



பசுமை விகடனில் வெளியான ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பகுதியும், விவசாயியின் புகைப்படமும். நன்றி பசுமை விகடன்

மயிலாடுதுறைக்கு அருகே உள்ள சிங்கான்ஓடையைச் சேர்ந்த பாஸ்கரன் சொல்கிறார்.

''ஆரம்பத்துல நான் கடலை வியாபாரம்தான் பாத்துக்கிட்டுஇருந்தேன். அதுல பெருசா வருமானம் கிடைக்காததால விவசாயம் பண்ணிப் பாக்கலாம்னு 100 குழி (33 சென்ட்) நிலத்தை குத்தகைக்கு எடுத்து, புடலங்காயை நட்டு வெச்சேன். ஓரளவுக்கு வருமானம் கிடைக்கவே, புடலங்காய் விவசாயத்தையே தொடர ஆரம்பிச்சுட்டேன். விவசாயத்துக்கு வந்து இப்ப பதினாறு வருஷமாச்சு. குத்தகை நிலத்துல விளைஞ்ச புடலங்காயை வித்துக் கிடைச்ச வருமானத்துல, கொஞ்சம் கொஞ்சமா சேத்து வெச்சு ஆறு வருசத்துக்கு முன்ன ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன்.

நான் வாங்கின நிலம் கடலுக்குப் பக்கத்துல இருக்கறதால, ஒரு குளத்தை வெட்டி அதுல ஊறுற தண்ணியைத்தான் பாசனத்துக்காகப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இது மணல் பாங்கான நிலம். வருஷம் முழுக்க நிலத்தை சும்மா போடாம, இந்த நிலத்துக்கேத்த, கடலை, வெள்ளரி, கொத்தவரை, பாகல், நீளப்புடலைனு மாத்தி மாத்தி வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். ரெண்டு வருஷமாதான் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்கேன். ஆனா, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்னு எதையும் தயாரிச்சுப் பயன்படுத்தறது இல்லை. எரு, கடலைக் கொடி, கொளுஞ்சிச் செடி... இது மூணை மட்டுமே வெச்சுதான் முழு வெள்ளாமையும் செய்றேன். புடலையில காய்ப்பு ரொம்ப நல்லாவே இருக்குது. எப்பவும் சித்திரைப் பட்டத்துல அரை ஏக்கர்லயும், தை பட்டத்துல கம்மியாவும்தான் சாகுபடி செய்வேன்'' என்று முன்னுரை கொடுத்த பாஸ்கரன், பத்து சென்ட் நிலத்தில் புடலை சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்த பாடத்தை ஆரம்பித்தார்.

புடலைச் சாகுபடி செய்வது எப்படி என்பது நமக்கு இவ்விடத்தில் தேவையில்லை. பாஸ்கரனின் உழைப்பு என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. உடல் நலம், குடும்ப நலம், சந்தோஷம் போன்றவைகளுக்கு மொத்த குத்தகைதாரராக அல்லவா இருக்கிறார். எங்கே இந்த சந்தோஷமும் நிம்மதியும் உங்களிடம் இருக்கிறதா என்பதை சற்றே நிதானித்து ஆராய்ந்து பாருங்கள்.

அன்புடன் - தங்கவேல் மாணிக்கம்

Tuesday, May 11, 2010

பிரேமானந்தாவுடன் ஒரு நாள்

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் - அலங்கார வளைவுகள், கொடிகள், தோரணங்கள் என்று கல்லூரி அதகளப்பட்டது. வழக்கம்போல வகுப்பிற்கு சென்றிருந்தேன். பதினோறு மணிவாக்கில் அனைவரும் கல்லூரிக்குள் இருக்கும் மேடைக்கு வரும்படி சர்க்குலர் வந்தது. என்னவோவென்று நினைத்துக் கொண்டு கல்லூரிக்குள் இருக்கும் ஹாஸ்டலுக்கு மூன்று சக்கர சைக்கிளில் சென்றேன். கேட்டில் வாட்ச்மேன் நின்று கொண்டு உள்ளே விட மறுத்தார். ஏன் என்று கேட்க, அனைத்து மாணவர்களும் சுவாமி பிரேமானந்தாவின் மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டுமென்று நிர்வாகத்தினர் உத்தரவிட்டதால் ஹாஸ்டல் ஒரு மணிக்குப் பிறகுதான் திறக்கப்படும் என்றார். வேறு வழி இன்றி மாமரத்தின் அடியில் இருக்கும் பெஞ்சு ஒன்றின் மீது தஞ்சமடைந்தேன். சிலு சிலுவென காற்று வீசிக் கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பெரிய மீன் குளத்தில்( ஆராய்ச்சிக்காக வளர்க்கின்றார்கள்) பெரிய பெரிய சைஸில் மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. அதையடுத்து பச்சைப் பசேல் வயல்களில் பசுங்கதிர்கள் சலசலவென பேசிக்கொண்டிருந்தன. அதையும் தாண்டி நாகப்பட்டினத்திற்கு ரயில் ஒன்று ஓசையிட்டுக்கொண்டே சென்று கொண்டிருந்தது. 

இக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே சிவப்புக் கலர் கார் ஒன்றும் தொடர்ந்து பல கார்களும் வந்தன. காரிலிருந்து இறங்கினார் சுருள் முடி பிரேமானந்தா. அதைத் தொடர்ந்து இறங்கினார் திவ்யா மாதாஜி. மஞ்சள் கலரில் சேலை. பார்த்தவுடனே பற்றிக் கொள்ளும் அழகு. இறங்கியவுடன் தன்னை வரவேற்ற கல்லூரியின் நிர்வாகிக்கு ஒரு ரோஜாவை வரவழைத்துக் கொடுத்தார். கல்லூரிப் பையன்களுக்கு திவ்யாவைப் பார்த்ததும் சுறு சுறுப்பு வந்து விட்டது. அடித்துப் பிடித்துக்கொண்டு மேடைக்குப் பறந்தனர். கவனிக்க பறந்தனர். கூட்டமெல்லாம் நமக்கு ஒத்து வராது என்ற நினைப்புடன் மெதுவாக ஹாஸ்டலுக்கு மீண்டும் சென்றேன். வாட்ச்மேன் கதவைத் திறந்து விட்டார். அறைக்குச் சென்று ரீகிரியேஷன் ஹாலுக்கு சென்று அங்கிருந்த பொறுப்பாளருடன் பேசிக் கொண்டிருந்தேன். சாமியார் வரப்போவதாக சொன்னார். சரி வரட்டும் என்று குமுதம் புத்தகத்தைக் கையெலெடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

சரியாக ஒரு மணி நேரம் சென்ற பிறகு பிரேமானந்தாவுடன் கல்லூரி நிர்வாகியும் அவர் கூடவே திவ்யா மாதாஜியும் வந்தனர். ரீகிரியேஷன் ஹாலைப் பார்த்தார். நான் பய பக்தியுடன் வணக்கம் சொன்னேன். பதிலுக்கு அவரும் வணக்கம் சொல்லி, ராஜா என்ன படிக்கிறாய் என்று கேட்டார். சொன்னேன். கண்ணை மூடினார் கையை தலைமீது கொண்டு சென்றார். விபூதியாய்க் கொட்டியது. நெற்றியில் கொஞ்சம் இட்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பக்தியுடன் பரவசத்தில் ஆழ்ந்தனர். நன்றாகப்படி என்று சொன்னார். அவர் அறையினை விட்டு வெளியே சென்ற பிறகு பின்னால் வந்த திவ்யா மாதாஜி அருகில் வந்து எந்த ஊர், என்ன படிக்கின்றீர்கள் என்றெல்லாம் விசாரிக்க நானும் பக்தியுடன் பதில்களை உதிர்த்தேன். சிரித்துக் கொண்டே ஒரு கையால் தலைமுடியைக் கலைத்து விட்டு அவசியம் ஆசிரமத்திற்கு வரும்படி சொல்லிச் சென்றார்.

அதன்பிறகு நடந்த விஷயம் தான் முக்கியமானது.

அவர்கள் சென்ற பிறகு அறைக்கு வந்த என் தோழர்களும், நண்பர்களும் என் தலைமீது கொட்டப்பட்டிருந்த விபூதியை எடுத்து பூசிக் கொண்டனர். ஆனால் வழக்கம்போல திவ்யாவைப் பாத்ரூமில் படம் வரைந்து பாகம் குறித்து விட்டனர் என்பது தான் மிகப் பெரிய சோகம். டெர்ம் எக்ஸாம் முடிந்து அனைவரும் வீட்டுக்குச் சென்று விட்டோம். லீவு முடிந்து வந்து பார்த்தால் அனைவரும் நக்கீரனும் கையுமாய் அலைந்து கொண்டிருந்தனர். என்ன விஷயமென்று பார்த்தால் பிரேமானந்தா மாட்டிக் கொண்டார். திவ்யா தூர தேசம் ஓடினார் என்பது தான். வகையாக என்னையும் நண்பர்கள் சற்று வறுத்தனர். நக்கீரனில் வெளியிடப்பட்டிருந்த நல்லம்மா என்ற அழகு தேவதையை அவர் கற்பழித்த விஷயம் தான் இன்னும் என் மனதை விட்டு அகல மாட்டேன் என்கிறது. நக்கீரனில் வெளியிட்டிருந்த அப்பெண்ணின் முகம் அப்படியே இன்னும் என் நினைவில் இருக்கிறது.




Friday, May 7, 2010

பசு ஏறி காளை மரணம்

ஆபிதீன் அவர்ககளின் சிறுகதை “அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு” படித்த போது மட்டுமே நான் மிகச் சந்தோஷமாயிருந்தேன். சிறுகதையென்றால் சிறுகதைதான் போங்கள்.

அன்பு நண்பர்களே, உங்களுக்கும் நிச்சயமாய் சிரிப்பு வரும். படித்து விட்டு அவருக்கொரு பதிலெழுதிப் போடுங்கள். சுகமாயிருக்கும் அவருக்கு.

நன்றி ஆபிதீன் சார்.


link : http://www.thinnai.com/?module=displaystory&story_id=11005024&format=html

Tuesday, May 4, 2010

நன்றி மறவாமை

கரூர் ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் நிர்வாகத்தில் பல பள்ளிகளும், இரண்டு பெண்கள் கல்லூரிகளும் இருக்கின்றன. அத்தனை பள்ளிகள் மற்றும் இரண்டு கல்லூரிகளின் கணிப்பொறித் துறையின் மேற்பார்வையாளராகவும், ஆசிரியராகவும் நான்காண்டுகள் தொண்டு செய்து வந்த போது நடந்த சுவாரசியமான சம்பவம்தானிது. மேற்படி பள்ளி மற்றும் கல்லூரிகளின் தாளாளராக இருந்தவர் திரு ஆத்மானந்தா அவர்கள். அறுபது வயது இளைஞர். என் வாழ் நாளில் இவரைப் போன்ற மன உறுதி கொண்டவரைக் கண்டதே இல்லை. பத்து வருடங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் சொத்து மதிப்புக் கொண்ட நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

மாதந்தோறும் இரண்டு தடவையாவது சாமியுடன் காண்டசாவில் சென்னை சென்று வருவேன். சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருக்கும் சுப்ரீம் கம்யூட்டர் நிறுவனத்தில் தான் மொத்தமாக உதிரி பாகங்களை வாங்கி வந்து அசெம்பிள் செய்து கல்லூரியில் கணிணி நெட்வொர்க்கில் இணைப்பேன். அசெம்பிள் என்ற உடன் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் இந்த சம்பவம்.

ஒரு தடவை ஹிந்து முன்னனி தலைவர் திரு ராமகோபாலன் ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பெல்லாம் கொடுத்திருந்தார்கள். மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்த பிறகு தான் அவரைச் சந்திக்க முடியும். அவர் தங்கி இருந்த ஹெஸ்ட் ஹவுஸ்ஸின் இடது பக்கத்திலிருக்கும் அறையில் தான் அடியேனின் வாசம். அறை முழுதும் கணிணி பாகங்களாக இறைந்து கிடக்கும். புதிய ஆள் எவராவது பார்த்தால் தீவிரவாதி வெடிகுண்டு தயாரிக்கிறான் என்றே நினைத்து விடுவார்கள். எஸெம்பிஎஸ் மற்றும் பாக்ஸ்களும், மானிட்டர்களுமாய் அறை நிரம்பிக் கிடக்கும். அதனூடே தான் படிப்பது, தூங்குவது எல்லாம்.

திரு ராமகோபாலனுக்கு காவலுக்கு வந்த காவல்துறை அதிகாரி அறையை நோட்டம் விட்டு படக்கென்று கதவைத் திறந்து துப்பாக்கியை நெஞ்சை நோக்கி நீட்டினார் பாருங்கள். அரண்டு விட்டேன். அதன் பிறகு விபரம் சொல்லி ஒரு வழியாக தப்பித்தேன். அன்றிலிருந்து அந்த காவல்துறை அதிகாரிக்கு என்மேல் கொள்ளை அன்பு. சாப்பிட்டீர்களா என்று அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருப்பார்.

இதே போல நடு இரவில் ஒரு நாள் நெற்றியில் ரத்தச் சிவப்பில் குங்குமம் இட்ட ஒருவரும் அவருடன் மற்றொருவரும் வந்திருந்தனர். வேறு அறைகளில் தங்குவதற்கு இடமில்லாத காரணத்தால் என் அறையில் தங்கியிருக்குமாறு சொல்லியிருக்கின்றார்கள். இந்து முன்னணியின் ஏதோ ஒரு மாவட்ட தலைவராம் அவர். கூட வந்திருந்தவர் அவருக்கு துணையாக வந்திருப்பார் போல எண்ணிக் கொண்டிருந்த போது இடுப்பிலிருந்து கருப்புக் கலரில் துப்பாக்கியை எடுத்தார் பாருங்கள். நடு நடுங்கிப் போய் விட்டேன். என்னடா இது வம்பு என்று பயந்து கொண்டே அவரைப் பற்றி விசாரித்தேன். போலீஸ் என்று சொன்னார்.

இது போல எண்ணற்ற சம்பவங்கள் ஆஸிரம வாழ்க்கையில் நடந்தது. அதையெல்லாம் தனியாக நாவலாக எழுதலாமென்று இருக்கிறேன். மேலும் சாரு நிவேதிதாவுடன் மூன்று வருடங்களாக தொடரும் நட்பும் மிகப் பெரிய நாவலுக்கான விதையை ஊன்றி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகிறேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு பகவான் ராமகிருஷ்ணரை தரிசித்து விட்டு காரில் அமர்வோம். அதற்கு முன்பே சமையல்காரர் எழுந்து எனக்கும், சாமிக்கும், டிரைவருக்கும் தேவையான காலை உணவைத் தயார் செய்து காரின் பின்னால் வைத்து விடுவார். முதல் நாள் இரவே சென்னையிலிருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின்(பிராஞ்ச்) நிர்வாகியிடம் போனில் நானும் சாமியும் வருகிறோம் என்று சொல்லி வைத்து விடுவேன். எனக்குப் பிடித்த காலிபிளவர் சாம்பாரும், ரசம்(SUPER TASTY) மற்றும் பிற உணவுப் பொருட்களை திரு நாராயணனந்தா அவர்கள் தன் கைப்படவே சமைத்து வைத்திருப்பார். உணவின் ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

சரியாக ஏழு மணிக்கு கார் திருச்சி டூ சென்னை சாலையிலிருக்கும் ஒரு பத்ரகாளி அம்மன் கோவிலின் முன்னால் நிறுத்தப்படும். அங்குதான் எனக்கும், ஆத்மானந்தாவிற்கும் காலை உணவைப் பரிமாறுவார் டிரைவர். சாப்பிட்டு முடித்து விட்டு சற்று நேரம் உலாவுவார் ஆத்மானந்தா சாமி. நான் காரில் அமர்ந்திருப்பேன். கிளம்பும் தருவாயில் கோவிலுக்குச் சென்று நமஸ்கரித்து விட்டு உண்டியல் போட்டு விட்டு வருவார். பத்ரகாளி அம்மன் நமக்குச் சாப்பிட இடமும், நிழலும் தந்தார் அல்லவா அந்த நன்றிக் கடன் தான் இது என்றார் என்னிடம். சமீபத்தில் என் குடும்பத்தாருடன் ராமேஸ்வரம் சென்று வந்த போது ஒரு அம்மன் கோவிலில் காரை நிறுத்தி சாப்பிட்டோம். ரித்திக்கிடம் பணம் கொடுத்து உண்டியலில் சேர்க்கச் சொன்னேன். நிவேதிதாவையும், ரித்திக்கையும் அம்மனை தரிசிக்கச் சொன்னேன். என் நண்பர் என்னிடம் ஏன் இவ்வாறு செய்யச் சொல்கின்றீர்கள் என்று கேட்டார். அவருக்குத்தான் இந்தப் பதிவு.