குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts
Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts

Wednesday, December 28, 2016

மாமனார் மருமகன்

உலக மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் அதற்கென்று சில காரியங்களைச் செய்தால் தான் அந்த மாபெரும் சிம்மாசனம் கிடைக்கும். கிடைத்த சிம்மாசனத்தை தக்க வைக்க பெரும் போராட்டங்களை செய்தால்தான் அந்த அடையாளம் தொடர்ந்து நீடிக்கும். இல்லையென்றால் நாளடைவில் மறந்து போவார்கள். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சினிமாக்காரர்களுக்கு முதல் சிம்மாசனம் கிடைக்கும்.

சினிமாவை தன் வாழ்வியலோடு வாழ்க்கைப் பாதையாக மாற்றிய சமூகம் இந்த உலகில் உண்டென்றால் அது நம் தமிழகம் தான். ஆந்திராவையும் விட்டு விட முடியாது. சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள் நாட்டை ஆள வந்து விடுகின்றார்கள். நாட்டையே தூக்கிக் கொடுத்து விடும் அளவுக்கு சினிமா ஹீரோக்களுக்கு சிம்மாசனம் கொடுத்திருக்கிறோம்.

சினிமாவில் ஹீரோ போடும் சட்டை,  அவர் தலைமுடியில் செய்யும் மாற்றம், ஹீரோயின் கட்டும் சேலை முதற்கொண்டு தமிழ் சமுதாயம் விடாது தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள். தன் பிள்ளைகள் இன்னார் ரசிகன் என்று சொன்னால் புளகாங்கிதமடைகின்றார்கள். அந்தளவுக்கு சினிமாவுக்குள் தங்கள் வாழ்க்கையை புகுத்திக் கொண்டிருக்கும் சமூகம் தமிழர் சமூகம்.

தானும் கெட்டு தன் தலைமுறைகளையும் கெடுத்து அழிவின் பாதைக்குத் தள்ளிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு சமூகம் தமிழர் சமூகம் மட்டுமே. இதில் எவருக்காவது மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டமிடவும். பதில் தருகிறேன். (கம்யூனிஸ்ட்வாதிகள் ஏன் சினிமா ஹீரோ கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவதைப் பற்றி ஒரு கேள்வி கூட கேட்கமாட்டேன் என்பது எனக்குப் புரியவே இல்லை. கம்யூனிஸம் என்பது சினிமாத் தொழிலாளிகளுக்கு இல்லையா?)

எழுத்தாளர்களுக்கு அந்த சிம்மாசனம் கிடைத்து விடுமா? என்றால் இதுவரைக்கும் யாருக்கும் கிடைக்கவில்லை. சினிமாவில் வசனம் எழுதலாம், சில கில்லாடி எழுத்தாளர்கள் சினிமா இயக்குனர்களானாலும், ஹீரோக்களுக்கு கிடைக்கும் சிம்மாசனம் போல அவர்களுக்குக் கிடைத்து விடுவதில்லை.

இரண்டு வருடங்களாக சாரு நிவேதிதாவின் எழுத்தினை முதல் வாசகனாகப் படித்து, பதிவேற்றி வந்த பழக்கத்தின் காரணமாக சுயசரிதைத் தன்மையான எழுத்துக்களே எனக்கு வசமாகி இருக்கின்றன. ஆனால் அந்த சுயசரிதை தன்மை எழுத்துக்களை எழுத்துலகம் அங்கீகரிப்பதில்லை என்பதை கொஞ்ச காலமாக அனுபவித்து வருகிறேன். மனதை வருடும் சம்பவங்களாக பல பத்திரிக்கைகளைக்கு எழுதி அனுப்பினேன். அனைத்தும் திரும்பி வந்து விட்டன. ஒரு பத்திரிக்கை ஆசிரியர் போனில் அழைத்து நீங்கள் எழுதுவது நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இது எழுத்து வடிவமல்ல என்றுச் சொல்லி நான் எழுதும் சுயசரிதைத் தன்மையான பதிவுகளை சிறுகதைகளாக்குவது எப்படி என்று விவரித்தார். ஆச்சரியமாக இருந்தது. 

(சாரு நிவேதிதாவின் பழைய இணைய வடிவமைப்பு பக்கம்)

சுயசரித பதிவுகளைப் படிக்கும் போது எழுதுபவர்களுடன் மன நெருக்கம் உண்டாகும் உணர்ச்சி இருக்கும். சிறுகதை படிக்கும் போது வெளியில் இருந்து வாசிப்பது போல இருக்கிறதே என அவரிடம் வினவினேன். அந்த உணர்ச்சி வேறுபாடு எழுதப்படும் போக்கில் இருக்கும் குறை என்றுச் சொன்னார்.

என்னை ஒரு நாவலைப் படிக்கச் சொன்னார். அந்த நாவல் பா.சிங்காரத்தின் ’புயலிலோ ஒரு தோணி’ மற்றும் ’கடலுக்கு அப்பால்’. மூன்று வாரங்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. அப்படியே உள் இழுத்துக் கொண்டு விடுகிறது அந்த நாவல். மீள நேரமாகின்றது. 

தமிழக நாவல் வரிசையில் இந்த நாவல் எவராலும் மறக்கமுடியாத நாவல் என்றாலும் பா.சிங்காரத்தை பெரும்பான்மையான தமிழர்களுக்குத் தெரியவே தெரியாது. ஆக மக்களின் மனதில் எப்படி எழுதினாலும் சிம்மாசனம் என்பது கிடைக்காது என்பது தெரிந்து போயிற்று.

ஒரு நண்பர் சொன்னார், தங்கம் எழுதுவதில் ஒரு கணக்கு இருக்கிறது. அதில் சிறந்தவர் ஜெயமோகன் பின்னர் ராமகிருஷ்ணன். உட்லாக்கடி எழுத்துக் கணக்குப்படி எழுதுபவர்கள் கமர்ஷியல் எழுத்துக்காரர்கள். ஒரு சிலர் ஏதோ ஒரு பவுண்டேஷனிடம் காசு வாங்கிக் கொண்டு எழுதுவார்கள். அவர்கள் ஒன்றிரண்டு புத்தகங்களோடு நின்று போவார்கள்.

பல வெற்றிகரமான எழுத்தாளர்களைப் பார்த்தீர்கள் என்றால் அவர்கள் அனைவரும் வருமானத்துக்கு குறைச்சல் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். இல்லையென்றால் ஏதாவதொரு கட்சி, பெரும் பணக்காரன் ஆகியோர்களை நண்பர்களாய் வைத்திருப்பார்கள். இந்தக் கணக்குச் சரியாக இருந்தால் தான் தொடர்ந்து எழுத முடியும். லெளகீக வாழ்க்கையின் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளா வண்ணம் இருப்பவர்களால் தான் தொடர்ந்து எழுதி வெற்றிகரமாக வலம் வர முடியும். 

அதன் படி இப்போது தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் என்று (வேறு எவரும் எழுதினால் எளிதாக படைப்புச் சரியில்லை என்று மறுதலித்து விடுவதும், ஏதோ இவர்கள் தான் எழுத்துலகத்தின் கடவுள்கள் போல கருதிக் கொண்டு பிற எழுத்தாளர்களை விமர்சிக்கும் காமெடியும் தொடர்ந்து எழுத்துலகத்தில் நடைபெற்றுக் கொண்டே வருவதை நாமெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம்) கருதிக் கொள்வோர்கள் உண்டல்லவா? என்றும் சொன்னார்.

நண்பரின் கூற்றுப்படி பார்த்தால் ஏதோ ஒரு பின்புலம் இருப்பவர்களால் தான் எழுத்துலகில் தொடர்ந்து பயணிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள முடியும். அந்தப் பின்புலங்களின் மனசு நோகா வண்ணம் எழுத வேண்டும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சினிமாவுக்குள் அரசியல் என்றால் எழுத்துலகில் அதை விடப் பெரிய அரசியல் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஒருவனின் குழந்தையை இன்னொருவன் பார்த்து கண் இப்படி இருக்கிறது, கால் இப்படி இருக்கிறது, கலர் சரியில்லை என்று விமர்சிப்பது போலத்தான் பிறரின் படைப்பை விமர்சிப்பது. அதை எவரும் புரிந்து கொள்வார் இல்லை. அவரவர் குழந்தை அவரவருக்குப் பெரிது. இதில் குறையென்ன காண்பது?  ஆக எழுதுவதில் ஒரு கணக்கு இருக்கிறது என்பது புரிந்தது. அந்தக் கணக்கின் விடையைப் போட்டு விட்டால் எழுத்துலகத்தின் கடவுள்களில் நாமும் ஒருவராக மாறி விடலாமா என்று யோசித்தால் வரிசை கட்டி நம் முன்னே நிற்கும் எழுத்தாளர்களைப் பார்த்தால் திகிலடிக்கிறது. நாமாவது அந்த வரிசைக்கு வருவதாவது? சாத்தியமே இல்லாத சாத்தியம். இருந்தாலும் ஒரு நப்பாசை. நரி திராட்சைக்கு ஆசைப்பட்டது போல.

ஆகையால் நானும் பலப் பல புத்தகங்களைப் படித்து மெருகேற்றி சிறுகதைகள் எழுத ஆரம்பிக்கலாம் என்று உட்கார்ந்தால் தொடர்ந்தாற் போல நான்கு பக்கங்களுக்கு மேல் எழுதவே முடியவில்லை. எழுதியதை மீண்டும் படித்துப் பார்க்கும் போது, பாதிக்குப் பாதி காணாமல் போய் விடுகிறது. இப்படியே தொடர்ந்து விடிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை முயற்சிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆறு மணிக்குப் பிறகு காய்கறி நறுக்கிச் சுத்தம் செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அன்றைய உணவு ஈயமாகி விடுகிறது.

அதன் பிறகு லெளகீக வாழ்க்கைப் பயணத்தின் தொடர்ச்சி நிகழ ஆரம்பித்து விடுகிறது. அடுத்த நாள் காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை மீண்டும் இதே கதை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மலைகள் இணைய இதழில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார்கள். இனி தொடர்ந்து பல இதழ்களில் வெளியிடலாமென்பதற்காக உலகத் தரத்துடன் (உலக  நாயகன் பாதிப்பு) எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இன்னொரு பக்கம் ஓஷோவும், பா.சிங்காரமும், சுஜாதாவும், ஜட்ஜ் பலராமய்யாவின் முப்பு குரு விஷயமும் இழுத்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமின்றி விகடன் குழுமத்தின் வயிற்றெரிச்சல் செய்திகள் வேறு இழுத்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே மாமனார் மருமகன் பதிவை இன்னொரு நாள் எழுதுகிறேன். 

இணையத்தில் படித்த இந்தக் கவிதையோடு இந்தப் பதிவை முடித்து வைக்கிறேன். இருந்தாலும் அந்த எழுத்துக்கடவுள்கள் வரிசை மட்டும் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கிறது. குஷ்பூவுக்கு கோயில் கட்டியது போல எவராவது ஒருவர் எனக்கு ஏதோ ஒரு மூலையில் கல்லாவது வைத்து மஞ்சள் தடவி அதன் மீது குங்குமம் வைத்து வழிபடமாட்டாரா என்ற ஆசை துரத்து துரத்துவென துரத்திக் கொண்டிருக்கிறது.

கொற்றவை சிம்மாசனம் (கவிதை)
------------------------------------------------------

சிகப்பு கம்பளம் சிம்மாசனம்
சிதரடிக்கும் நட்சத்திரம் சிம்ம சொப்பணம்
செந்தமிழ் கொற்றவை கூர்வாளடா
நுனி நாக்கில் ஆங்கிலத்தைக் கொண்டாளடா

சிந்தையில் சிகரத்தைச் செலுத்தி நல்லறிவுடன்
பாட்டனும் பூட்டனும் பேசிய தமிழ்மொழி
அகரத்தின் ஆனிவேரில் ஓல்கா செம்புகழுடன்
பட்டினியில் பட்டறிவு பூசிய செம்மொழி
வென்றிட போர் விதம் பலவுண்டு
தலை நின்றிட சொற்குணம் கைகொண்டு
நித்தய நற்சோறு காணோம் இன்று

கலையில் கரைந்தவை நிற்பவை நிலைத்தவை
ஏட்டிலே வெடித்தவை கற்றவை சுரந்தவை
பாட்டிலே படர்ந்தவை கொற்றவை கொணர்ந்தவை
போரிட்டு முடித்துவை தூற்றிட தொடர்ந்து செய்
சிகப்பு கம்பளம் சிம்மாசனம்
சிதரடிக்கும் நட்சத்திரம் சிம்ம சொப்பணம்
செந்தமிழ் கொற்றவை கூர்வாளடா
நுனி நாக்கில் ஆங்கிலத்தைக் கொண்டாளடா

நன்றி: பூந்தளிர் ஆனந்தன்

Sunday, January 30, 2011

யுத்தம் செய் திரைப்படமும் சாரு (நிவேதிதாவும்)



சென்னையில் இருந்து வந்த நண்பருடன் வெளியில் சென்று விட்டு, வீட்டுக்குள் நுழைந்த போது நிவேதிதா அழுது கொண்டிருந்தார். என்னவென்று விசாரித்த போது, ஏதோ ஒரு குறும்புக்காக அம்மா பேசி விட்டார் என்பதால் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் நிவேதிதா. வழக்கம் போல மனைவிக்கு சில அர்ச்சனைகளை டீசண்டாக தூவினேன். கூட நண்பரும் அல்லவா இருக்கிறார்? சிறிது நேரம் கழித்து நிவேதிதா சாக்லேட் பாரை எடுத்துக் கொண்டு வர நான் மனைவியைப் பார்த்தேன். எனக்கு ஒன்றும் தெரியாது என்று சமையல் அறைக்குள் சென்று விட்டார் மனைவி.

நண்பர் சென்றதும், சாக்லேட் ஏன் கொடுத்தாய் என்று கேட்க, “ நான் அழுகையை நிறுத்தனும் என்றால் சாக்லேட் சாப்பிட்டாத்தான் அதுவா நிற்கும்” என்று நிவேதிதா சொன்னதாகவும், பேசிக் கொண்டிருப்பதால் அவளால் கவனம் சிதறி விடும் என்பதாலும் சாக்லேட்டைக் கொடுத்ததாகவும் சொன்னார் மனைவி.

இன்று காலையில், யுத்தம் செய் திரைப்படப்பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பின்னால் ஆடிக் கொண்டிருந்த நிவேதிதாவைத்தான் நீங்கள் கீழே இருக்கும் இணைப்பில் பார்க்கின்றீர்கள்.

சாரு நிவேதிதா நடித்த காட்சியை மிஷ்கின் பாடலில் இருந்து நீக்கி விட்டார் என்று கேள்விப்பட்டேன். அதைக் கேட்டு வருத்தத்தில் இருக்கும் சாருவின் ரசிகப் பெருமக்களுக்கு இருக்கட்டுமே என்று இவ்வீடியோவை அளிக்கிறேன்.

Tuesday, May 4, 2010

நன்றி மறவாமை

கரூர் ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் நிர்வாகத்தில் பல பள்ளிகளும், இரண்டு பெண்கள் கல்லூரிகளும் இருக்கின்றன. அத்தனை பள்ளிகள் மற்றும் இரண்டு கல்லூரிகளின் கணிப்பொறித் துறையின் மேற்பார்வையாளராகவும், ஆசிரியராகவும் நான்காண்டுகள் தொண்டு செய்து வந்த போது நடந்த சுவாரசியமான சம்பவம்தானிது. மேற்படி பள்ளி மற்றும் கல்லூரிகளின் தாளாளராக இருந்தவர் திரு ஆத்மானந்தா அவர்கள். அறுபது வயது இளைஞர். என் வாழ் நாளில் இவரைப் போன்ற மன உறுதி கொண்டவரைக் கண்டதே இல்லை. பத்து வருடங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் சொத்து மதிப்புக் கொண்ட நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

மாதந்தோறும் இரண்டு தடவையாவது சாமியுடன் காண்டசாவில் சென்னை சென்று வருவேன். சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருக்கும் சுப்ரீம் கம்யூட்டர் நிறுவனத்தில் தான் மொத்தமாக உதிரி பாகங்களை வாங்கி வந்து அசெம்பிள் செய்து கல்லூரியில் கணிணி நெட்வொர்க்கில் இணைப்பேன். அசெம்பிள் என்ற உடன் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் இந்த சம்பவம்.

ஒரு தடவை ஹிந்து முன்னனி தலைவர் திரு ராமகோபாலன் ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பெல்லாம் கொடுத்திருந்தார்கள். மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்த பிறகு தான் அவரைச் சந்திக்க முடியும். அவர் தங்கி இருந்த ஹெஸ்ட் ஹவுஸ்ஸின் இடது பக்கத்திலிருக்கும் அறையில் தான் அடியேனின் வாசம். அறை முழுதும் கணிணி பாகங்களாக இறைந்து கிடக்கும். புதிய ஆள் எவராவது பார்த்தால் தீவிரவாதி வெடிகுண்டு தயாரிக்கிறான் என்றே நினைத்து விடுவார்கள். எஸெம்பிஎஸ் மற்றும் பாக்ஸ்களும், மானிட்டர்களுமாய் அறை நிரம்பிக் கிடக்கும். அதனூடே தான் படிப்பது, தூங்குவது எல்லாம்.

திரு ராமகோபாலனுக்கு காவலுக்கு வந்த காவல்துறை அதிகாரி அறையை நோட்டம் விட்டு படக்கென்று கதவைத் திறந்து துப்பாக்கியை நெஞ்சை நோக்கி நீட்டினார் பாருங்கள். அரண்டு விட்டேன். அதன் பிறகு விபரம் சொல்லி ஒரு வழியாக தப்பித்தேன். அன்றிலிருந்து அந்த காவல்துறை அதிகாரிக்கு என்மேல் கொள்ளை அன்பு. சாப்பிட்டீர்களா என்று அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருப்பார்.

இதே போல நடு இரவில் ஒரு நாள் நெற்றியில் ரத்தச் சிவப்பில் குங்குமம் இட்ட ஒருவரும் அவருடன் மற்றொருவரும் வந்திருந்தனர். வேறு அறைகளில் தங்குவதற்கு இடமில்லாத காரணத்தால் என் அறையில் தங்கியிருக்குமாறு சொல்லியிருக்கின்றார்கள். இந்து முன்னணியின் ஏதோ ஒரு மாவட்ட தலைவராம் அவர். கூட வந்திருந்தவர் அவருக்கு துணையாக வந்திருப்பார் போல எண்ணிக் கொண்டிருந்த போது இடுப்பிலிருந்து கருப்புக் கலரில் துப்பாக்கியை எடுத்தார் பாருங்கள். நடு நடுங்கிப் போய் விட்டேன். என்னடா இது வம்பு என்று பயந்து கொண்டே அவரைப் பற்றி விசாரித்தேன். போலீஸ் என்று சொன்னார்.

இது போல எண்ணற்ற சம்பவங்கள் ஆஸிரம வாழ்க்கையில் நடந்தது. அதையெல்லாம் தனியாக நாவலாக எழுதலாமென்று இருக்கிறேன். மேலும் சாரு நிவேதிதாவுடன் மூன்று வருடங்களாக தொடரும் நட்பும் மிகப் பெரிய நாவலுக்கான விதையை ஊன்றி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகிறேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு பகவான் ராமகிருஷ்ணரை தரிசித்து விட்டு காரில் அமர்வோம். அதற்கு முன்பே சமையல்காரர் எழுந்து எனக்கும், சாமிக்கும், டிரைவருக்கும் தேவையான காலை உணவைத் தயார் செய்து காரின் பின்னால் வைத்து விடுவார். முதல் நாள் இரவே சென்னையிலிருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின்(பிராஞ்ச்) நிர்வாகியிடம் போனில் நானும் சாமியும் வருகிறோம் என்று சொல்லி வைத்து விடுவேன். எனக்குப் பிடித்த காலிபிளவர் சாம்பாரும், ரசம்(SUPER TASTY) மற்றும் பிற உணவுப் பொருட்களை திரு நாராயணனந்தா அவர்கள் தன் கைப்படவே சமைத்து வைத்திருப்பார். உணவின் ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

சரியாக ஏழு மணிக்கு கார் திருச்சி டூ சென்னை சாலையிலிருக்கும் ஒரு பத்ரகாளி அம்மன் கோவிலின் முன்னால் நிறுத்தப்படும். அங்குதான் எனக்கும், ஆத்மானந்தாவிற்கும் காலை உணவைப் பரிமாறுவார் டிரைவர். சாப்பிட்டு முடித்து விட்டு சற்று நேரம் உலாவுவார் ஆத்மானந்தா சாமி. நான் காரில் அமர்ந்திருப்பேன். கிளம்பும் தருவாயில் கோவிலுக்குச் சென்று நமஸ்கரித்து விட்டு உண்டியல் போட்டு விட்டு வருவார். பத்ரகாளி அம்மன் நமக்குச் சாப்பிட இடமும், நிழலும் தந்தார் அல்லவா அந்த நன்றிக் கடன் தான் இது என்றார் என்னிடம். சமீபத்தில் என் குடும்பத்தாருடன் ராமேஸ்வரம் சென்று வந்த போது ஒரு அம்மன் கோவிலில் காரை நிறுத்தி சாப்பிட்டோம். ரித்திக்கிடம் பணம் கொடுத்து உண்டியலில் சேர்க்கச் சொன்னேன். நிவேதிதாவையும், ரித்திக்கையும் அம்மனை தரிசிக்கச் சொன்னேன். என் நண்பர் என்னிடம் ஏன் இவ்வாறு செய்யச் சொல்கின்றீர்கள் என்று கேட்டார். அவருக்குத்தான் இந்தப் பதிவு.

Friday, December 19, 2008

சாரு நிவேதிதா - பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்பு நண்பர் சாரு நிவேதிதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


Wednesday, October 29, 2008

சாருவுக்கு கடவுளின் மொழி கட்டுரைக்காக எழுதிய கடிதம்

என் வசத்திலேயே இல்லை

வாத்தியாரே....

நான் இன்று என் வசத்திலேயே இல்லை. நான்ஸி அஜ்ரமின் குரலோடு மிதந்து கொண்டிருக்கிறேன். மிதந்து கொண்டிருக்கிறேன். காற்றோடு காற்றாக.. காற்றின் ஊடே மிதந்து கொண்டிருக்கிறேன். மனசு லேசாகி விட்டது. கண்ணை மூடினால் இசைவெள்ளம் என்னைச் சூழ்கிறது. மிதக்கிறேன்.. மிதக்கிறேன்..

என் மனசுக்கு இதமாய் ஹிந்துஸ்தானி இசையும், புல்லாங்குழலும் அதன் தனி இசையும் எங்கோ ஒரு அத்துவானக் காட்டில் ஒற்றையாய் பறந்து கொண்டிருக்கும் என் மனதில் கேட்கும் இசையாய் சிலிர்ப்பினை உண்டாக்கும். பிறந்து பத்து நாளேயான வெது வெதுப்பான சூட்டில் இருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பின் இசை போன்ற அனுபவத்தையும், பரவசத்தையும் தருகிறார் நான்சி அஜ்ரம். என் தாயின் மடியில் தலை வைத்து உறங்கும் அந்த வேளையில் அவளின் விரல்கள் தலைமுடிக்குள் அலைந்து கொண்டிருக்கும் போது உயிரையே தடவும் உணர்ச்சி உருவாகும். அவ்வித உணர்ச்சியினை உண்டாக்குகிறது நான்ஸி அஜ்ரமின் குரல். என் அன்பு மகளின் இதயத்துடிப்பினையே இதுவரை இசைக்கெல்லாம் இசையாக நினைத்திருந்தேன்.என்னைத் தாலாட்ட என் மனைவியின் நெஞ்சின் துடிப்பு ஒன்றே போதுமானதாயிருந்தது. அந்த வரிசையில் நான்ஸி அஜ்ரமின் பாடல்கள் சேர்ந்து விட்டன. நான்ஸி அஜ்ரமை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள்.

காதல்... காதல்... காதல்...
காதல் போயின் சாதல்.......... என்றான் பாரதி.

அவன் சொல்ல வந்த அர்த்தம் புரியவில்லை. இன்று தான் புரிந்து கொண்டேன்.

காதலின் வேதனையை நான்ஸி அஜ்ரம் பாடும் தொனி சித்ரவதைகள் எல்லாவற்றிலும் முதலிடத்தைப் பிடிக்கும் என்று என்னுள் உணர நேர்கிறது. சமீபத்தில் ஹாஸ்டல் என்ற திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. மனிதர்களைச் சித்ரவதைப் படுத்தும் படம். வேதனை... வேதனை... வேதனை... எழுத்தில் எழுத இயலா வேதனை... படமாக்கியிருக்கும் விதம் மனதில் ரத்தம் சொட்ட வைக்கும். சித்ரவதையின் உச்ச கட்டமாய் சிலிர்த்து நிற்கும் உடம்பு..... கூர்மையான ஊசியை வைத்து நறுக் நறுக்கென இதயத்தைக் குத்தி, இதயத்தில் இருந்து வழியும் சூடான ரத்தம் வழியும் போது உண்டாகும் வலியினை விட உச்சகட்டமானது நான்ஸி அஜ்ரமின் காதல் வேதனைக் குரல்.

காதல் கொண்டுள்ள மனிதன் தான் வேதனை உலகின் உச்சகட்ட வேதனையை அனுபவிக்கிறான்.... ரத்தமின்றி, ஆயுதமின்றி மனிதனை சித்ரவதை செய்யும் காதல் தான் அணு ஆயுதத்தை விட கொடுமையான ஆயுதம் என்பதில் வியப்பேதும் இல்லை.

அன்பன்,
தங்கவேல் மாணிக்கம், கோயமுத்தூர்.

Saturday, August 30, 2008

கேரளா, கஞ்சிக்கோட்டில் கோக், பெப்ஸிக்கெதிரான போராட்டத்தில் சாரு நிவேதிதாவுடன் !



( சாரு நிவேதிதாவுடன் என் மகன் ரித்திக் நந்தா )




மணி ஒன்பது முப்பது இருக்கும். சாருவிடம் இருந்து போன். நாளைக் காலையில் கேரளா செல்கிறேன் என்று சொல்லியிருந்தது நினைவுக்கு வர “சார் வந்துட்டீங்களா“ என்றேன்.

“இரயிலைத் தவற விட்டு விட்டேன் தங்கம். அதனால் காலையில் ஃபிளைட்டைப் பிடித்து அரை மணி நேரமாக வந்து நின்று கொண்டிருக்கிறேன் கார் வருகிறது என்று சொன்னார்கள். ஆனால் இன்னும் வரவில்லை “ என்று சொன்னார்.

“அப்படியா “ என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது மற்றொரு அழைப்பு வர, அந்த அழைப்பினைத் ஏற்று பேச சாருவின் வாசகர் ஒருவர் என்னைப் பார்க்க வருவதற்கு வீட்டுக்கு வழி கேட்டார். வழி சொல்லி முடித்தவுடன் சாருவிடமிருந்து மீண்டும் ஒரு அழைப்பு.

” தங்கம் கார் இன்னும் வரவில்லை” என்றார்.

“சார் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமா “ என்றேன்.

“ தங்கம், நான் எங்கிருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள்” என்று கேட்க, ” கேரளாவில்தானே “ என்று நான் கேட்க, “இல்லை தங்கம்..கோவை ஏர்போர்ட்டில் நிற்கிறேன் தங்கம் “ என்று சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

நம்ம ஓட்டை வண்டியில சாருவை ஏற்றிக் கொண்டு வந்தால் சாரு மறு ஜென்மத்திலும் பைக் சவாரியை மறந்து விடுவாரே என்று எண்ணிக் கொண்டிருந்த போது சாருவின் வாசகரின் கார், வீட்டின் வாசல் முன்பு வந்து நின்றது. சாருவின் வாசகர் திரு சிவா வீட்டின் முன்பு காரை நிறுத்தி லேப்டாப் மற்றும் சில பொருட்களை துணைவியாரிடம் கொடுத்துக் கொண்டிருக்க அவரிடம்,

“சார், வாங்க போலாம், சாரு ஏர்போர்ட்டில் நிற்கிறார் “ என்று சொல்ல அவரும் “ஆகா , ஆகா... “ என்றபடி காரை உயிர்பித்தார். பறந்தது கோவை ஏர்போர்ட்டை நோக்கி கார்.

”சரியான பசி. அதனால் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்து இங்கு சாப்பிட்டேன்” என்றார் சாரு. அப்போது மணி 10.50.

அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். எனது துணைவியாரும் சிவாவும் கோழிக் கடைக்குச் சென்று நாட்டுக்கோழிக் கறியினை வாங்கிக் கொண்டு வந்தனர். அதற்கிடையில் லேப்டாப்புக்குத் தேவையான சாஃப்ட்வேர்களை இணைத்து இயக்கும் சில வழி முறைகளைச் சாருவுக்குச் சொல்லித் தந்தேன்.

இடையில் கேரளாவில் இருந்து போன் வந்தது. நண்பர்களுடன் சரியாக மூன்று மணிக்கு வந்து விடுகிறேன் என்று சொன்னார்.

சிவாவும் சாருவும் சாப்பிட்டனர். என் மகள் நிவேதிதா கத்திக் கொண்டிருந்தாள். காய்ச்சல் வேறு. அத்துடன் பக்கத்து வீட்டுப் பெண் குழந்தையுடன் சண்டை. வீட்டில் ஒரே அழுகையும் சத்தமும். அவளை மடியில் போட்டுத் தட்டித் தூங்க வைத்தபடி சாப்பிட்டு முடித்தேன்.

காரில் கிளம்பினோம். காரில் செல்லும்போது கேரள முதல்வருக்கு அவர் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. மேடை போட்டு இருப்பார்கள். மாலை எல்லாம் போடுவார்கள் போலும். கூட்டமாக மக்கள் வேறு கூடி இருப்பார்கள். எனது வாழ்வில் முதன் முதலாக எழுத்தாளர் ஒருவர் சமூகப் பிரச்சினைக்காக அதுவும் வேறு மாநிலத்த்தில் பேசப்போகிறார் என்றும் நம்ம சாரு பேசப்போகிறாரே என்றும் எனக்குள் எதிர்பார்ப்பு கூடியபடி இருந்தது.

கஞ்சிக்கோடு. தோளில் தொங்க விட்ட பையுடன் ஒருவர் வழி மறித்தார். இன்னும் ஒரு மணி நேரமாகும் ஊர்வலம் வர என்று சொல்ல, சாருவுடன் கட்டஞ்சாயா குடித்தேன் ஊர்வலம் வந்து சேரும் இடைப்பட்ட நேரத்தில்.

இரண்டு நாட்களாக ஊர்வலத்தில் மக்கள் நடந்து வருகிறார்களாம். ஊர்வலம் கஞ்சிக்கோட்டில் இருக்கும் கோகோ கோலாவின் ஃபாக்டரி முன்பு முடிவு பெற வேண்டும். அங்கு இவர் உரை ஆற்ற வேண்டும் என்றும் சொன்னார்.

சிறிது நேரத்தில் நானூறு பேர் இருக்கும் போல. வரிசையாக கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்தனர். நான் காரிலேயே உட்கார்ந்து கொண்டேன்.

சாருவும், சிவாவும் சென்று விட்டனர். ஊர்வலத்தின் முன்புறம் சாலையில் நின்ற படியே ஒருவர் மைக்கில் முழங்கினார். மேடையும் இல்லை. மாலையும் இல்லை. எனக்குள் தமிழ் நாட்டின் அரசியல் மேடைகளும், போராட்டங்களும் நிழலாடின. உண்மைப்போராட்டம் அது. உணர்ச்சிப் போராட்டம் அது. தண்ணீர் கொள்ளையைத் தடுக்க, தண்ணீரைக் காப்பதற்கு போராட்டம். நாளைய சந்ததிகள் தண்ணீர் இன்றி துன்பப் படக்கூடாது என்பதற்கான போராட்டம். அமெரிக்க பகாசுர கம்பெனியினை எதிர்த்து அன்றாடம் காய்ச்சிகள் செய்யும் போராட்டம். ஏசிக்குள் அமர்ந்து கொண்டு குளுகுளுவென செல்லும் பணக்காரனுக்கும், எது நடந்தாலும் கிஞ்சித்தும் கவலைப்படாத மிடில் கிளாஸ் மக்களின் நலனுக்காக உடுத்த உடையின்றியும், சரியான உணவின்றியும் இருக்கும் ஏழை மக்களின் உணர்ச்சி மிகு போராட்டம் அங்கு நடந்தது.


அங்கு சிங்கமென கர்ஜித்தார் சாரு. அமைதியான குரல். குத்தீட்டிகள் போல கேட்பவர்களின் காதுகளையும் , நெஞ்சங்களையும் துளைத்தன அவரின் பேச்சு. ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவரின் உரையினைக் கேட்கக் கேட்க எனக்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது.

அட ஆமாம். அவர் பாட்டுக்கு கேரள முதல்வர் அச்சுதானந்தனை விட்டுக் கிழி கிழியென்று கிழிக்கிறார். மாத்ருபூமியில் அவர் எழுதிய கட்டுரையின் கேள்விகளுக்கு நிருபர்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் என்று முதல்வர் அச்சுதானந்தன் அவர்களை கேட்டால் ஓடி ஒளிந்து கொள்கிறார் என்று அவர் பாட்டுக்கு பேசுகிறார். விடமாட்டேன். வருவேன்... வருவேன்.. மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பேன்.. பதில் சொல்... பதில் சொல் என்று கர்ஜிக்கிறார். அந்த இடத்தில் என் மனதில் வீர வசனம் பேசிய சினிமா ஹீரோவெல்லாம் தூசு தூசாகிவிட்டனர். தைரியமென்றால் அப்படி ஒரு தைரியம். எதிரில் ஆளும்கட்சியின் அடியாட்களாகிய போலீஸை வைத்துக் கொண்டு முதல்வரை வாங்கு வாங்குன்னு பேசுவதற்கெல்லாம் தைரியம் வேண்டும். தமிழ் நாட்டில் ஏதாவது போலீஸ் பிரச்சினை செய்தால் ஏதாவது செய்யலாம். ஆனால் இவரோ கேரளாவில் முதல்வருக்கு எதிராகப் பேசுகிறார். ரொம்ப தைரியம் தான் இவருக்கு. அவரின் தைரியம் எனக்கு அதைரியத்தை உருவாக்கியது. மனுஷன் விடாமல் பட்டயக் கிளப்புறாரு. அனில்ங்கிறாரு. அம்பானிங்கிறாரு.. அய்யோ சாமிகளா அதையெல்லாம் இங்கு எழுதினால் அப்புறம் நமக்கு ஆப்புத்தான்.

இப்படி அவர் பேசப் பேச எனக்கு அய்யய்யோ போலீஸ்காரங்க காரைப் பார்த்துட்டு போனாங்களே. இவரு பாட்டுக்கு சிம்மம் போல கர்ஜிக்கின்றாரே கடுப்பாகி கூட்டத்துக்குள் புகுந்து லத்தியால ஒரு போடு போட்டானா என்ன பண்றது. அவர் கூட வந்து காரில படுத்துக் கிடக்கிற இவனுக்கு ரெண்டு சேர்த்துப் போடனும்னு போட்டா செத்துல போய்விடுவோம் என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன்.

ஒரு வழியாக பேசி முடித்தார். மீண்டும் ஊர்வலம் ஆரம்பித்தது. மைக்கில் சாரு நிவேதிதா, சாரு நிவேதிதா என்று கதறிக் கொண்டிருந்தனர். நானும் சிவாவும் காரில் ஊர்வலத்தின் பின்பாக சென்று கொண்டிருந்தோம். ஊர்வலத்தின் இடையில் சாருவை அழைத்துக் கொண்டு பெப்சிக் கம்பெனி எங்கிருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு சென்று பார்த்தால் கம்பெனிக்கு முன்பாக ஒரு பஸ், ஜீப் நின்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது போலீசார் இருப்பார்கள் என நினைக்கிறேன். 15 அடி தூரத்தில் காரை நிறுத்த காரின் முன்புற சீட்டில் அமர்ந்திருந்த என்னையே போலீஸ்காரர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

” தங்கம், போலீஸார் எல்லோரும் உங்களையே பார்த்துக்கிட்டு இருக்காங்க “ என்று வேறு சொல்லி பயமுறுத்தினார்.

எத்தனை நேரம்தான் தைரியமா இருக்கிற மாதிரி நடிக்கிறது. சரி இன்னிக்கு பொங்கல் தான் சட்னிதான் என்று நினைத்து சகதர்மினியிடம் போனில் ”இப்படி இப்படி என்ன செய்றது” என்று கேட்டேன். இங்கே பாருங்க சாரு நம்ம வீட்டு விருந்தாளி. அவரைக் கைது செய்தாங்கன்னா நீங்களும் அவரு கூடவே போய் ஜெயில்ல இருந்துட்டு வாங்க என்று சொல்லி எரியுற நெருப்பில என்னய (எண்ணெய்) வார்த்தா. அவளுக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை.

ஊர்வலம் அந்த இடத்தின் முன்பு வருவதற்குள் காரை வேறு இடத்தில் நிறுத்தி விட்டு, ” சூழ்நிலை சரியில்லை தங்கம். என் செல்போனை வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது நடந்தா பதட்டப் படாதீங்க. பத்திரிக்கைகளுக்கு கூப்பிட்டுச் சொல்லுங்க, நண்பர்களிடம் சொல்லுங்க” என்று சொல்லியபடி மீண்டும் ஊர்வலத்தின் முன்புறம் சென்று கூட்டத்தில் கலந்து விட்டார்.

வெகு சூடாக பேச்சுக்குரல்களும், தள்ளு முள்ளும் நடந்தது. ஒருவர் மைக்கில் கோகோ கோலாவின் தண்ணீர் கொள்ளையை எதிர்த்து முழங்கினார். அதைத் தொடர்ந்து சாரு பேசினார். “போலீஸார் நமக்கு எதிரியில்லை. எதிரி வேறு ஆள்” என்று சொல்லி காட்டமாக பேசினார். ஆனால் நிதானத்துடன் பேசினார். அந்த இடத்தில் தேவை நிதானம். உணர்ச்சி வசப்பட்டால் லத்தி அடி நிச்சயம் தொடர்ந்து கைதும் செய்யப்படும் என்ற சூழ்நிலையிலும் வெகு ஜாக்கிரதையாகப் பேசி ஊர்வலத்தை அமைதியாக முடிவு பெற வைத்தார். தொடர்ந்த முழக்கத்தினிடையே அந்த ஊர்வலம் அமைதியாக கலைந்தது.

இதே வேறு எவராக இருந்தாலும் கொந்தளிப்பாக பேசி, மக்களின் உணர்ச்சியினைக் கிளப்பி விட்டு தடி அடி நடத்த வைத்து, கலவரம் செய்து செய்தி தாளில் செய்தியாக்கி இருப்பார்கள். ஆனால் சாரு செய்தது....???

சாருவும், சிவாவும் வர, காரில் கோவைப் பயணம் தொடர்ந்தது.

காரில் வரும்போது, “தங்கம், கோழிக்கறி பஞ்சு பஞ்சா இருந்தது சாப்பிட, குக்கரில் வேக வைப்பாரா பூங்கோதை? ” என்று கேட்டார்.

”ஆமாம் சார். இஞ்சியுடன் குக்கரில் வேக வைத்துதான் பின்னர் மசாலா சேர்ப்பார் “ என்றேன்

“ சென்னையில் நாட்டுக்கோழி சாப்பிட்டால் கட்டி கட்டியாக இருக்கும்” என்றார்.

காரின் சீட்டில் சாய்வாக படுத்துக் கொண்டேன். ஒரு மேல் நாட்டு கம்பெனி குளிர் பானம் தயாரிக்கின்றேன் என்று சொல்லி பூமியின் ஆதாரமான தண்ணீரை ராட்சதப் போர்கள் மூலம் உறிஞ்சி எடுத்து பதினைந்து லிட்டர் தண்ணீரைச் சுத்திகரித்து ஒரு பாட்டில் குளிர் பானமாக்கி விற்கிறது. தண்ணீருக்காக மாநிலங்கள் ஒவ்வொன்றும் அடித்துக் கொண்டு இருக்கின்றன. நம் மாநிலத்தின் நீர் வளம் கொள்ளை போகிறதே என்று கவனிக்காமல் ஓட்டுப் பொறுக்கிகள் இப்படி மக்களுக்கு துரோகம் செய்கிறார்களே இவர்களை யார் தான் தட்டிக் கேட்பது. கேரளத்தில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் காம்ரேடுகள் கார்பொரேட் ஆட்களாகி விட்டனர் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

அந்த ஊர்வலத்தில் நடந்து வந்த ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் ஏழைகள். இரண்டு நாட்களாக நடந்து வருபவர்களை சாலையில் செல்லும் எவரும் பாரட்டவும் இல்லை. கண்டு கொள்ளவும் இல்லை. கடைக்குள் இருப்போர் சற்றுக் கவனித்துப் பார்த்தார்கள். அவ்வளவுதான்.

இப்படிப்பட்ட மக்களுக்காக ஏழைகள் நடக்கிறார்கள். காவல் துறையினரின் லத்தி அடிகளை வாங்கவும் தயாராகி போராடுகிறார்கள். மிடில்கிளாஸ் எனும் சூடு சொரனையற்ற மக்களோ எவனோ எதுக்கோ போராடுகிறான் என்ற அளவில் இருக்கின்றார்கள். புழு கூட துன்புறுத்தினால் சிறிதாவது முண்டிப் பார்க்குமே என்றெல்லாம் எண்ணங்கள் என்னைச் சூழ்ந்தன. அதற்குள் வீடு வந்து விட,

டெக்கான் கிரானிக்கிள்ளுக்கு ஆர்ட்டிக்கிள் டைப் செய்து கொடுக்க, சாரு எடிட் செய்தார். அந்தக் கட்டுரையினை அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும்போது தோசையும், கறிக்குழம்பும் சாப்பிட்டு முடித்தார் சாரு. சிவா திருப்பூர் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

கோவை ரயில் நிலையத்துக்குச் சென்றால் சென்னை செல்லும் இரயில் போத்தனூரில் தான் நிற்குமெனவும் இங்கு வராது எனவும் சொல்ல சிவா, சாருவை சடுதியில் போத்தனூர் சென்று சேர்த்தார்.

சாரு இரயில் ஏறிவிட்டார். போனில் அழைத்து இரவு வணக்கம் சொல்லி விட்டு, சிவாவிடம் திருப்பூர் சென்று சேர்ந்தவுடன் குறுஞ்செய்தி அனுப்பவும் என்று சொல்லியிருந்தேன். இரவு 11.00 மணிக்கு குறுஞ்செய்தி வந்து சேர அயர்ந்து தூங்க ஆரம்பித்தேன்.

Monday, August 4, 2008

மகாராஜாக்களின் பிம்பங்கள்

கடந்த காலத்தின் வரலாற்றை புரட்டினால் ராஜாக்களால் ஆளப்பட்ட ராஜ்ஜியங்களும், நடத்தப்பட்ட போர்களும் விரவிக் கிடக்கும். பொதுவாக ராஜாக்கள் என்றாலே மகுடம், உடல் முழுதும் நகைகள், உயர்ந்த ரகத்தில் துணி, ஒரு விதமான செருப்பு என்று தான் மனக்கண்ணில் வந்து செல்வார்கள்.

யாருக்கு என்ன கோபமோ, வெறியோ தெரியவில்லை. யாரால் இப்படிப் பட்ட வழக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டதோ தெரியவில்லை. இன்றைய நாளில் அந்த மகாராஜாக்களின் பிம்பங்கள் மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டல்களின் வாயில் கதவினை திறந்து விட்டு சல்யூட் அடிக்க நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால், யானை கட்டி போரடித்த, சாலைதோறும் மரங்களை நட்டு வைத்த அந்தக் கால ராஜாக்களை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது. வரலாற்றுக்கும் இன்றைய நிதர்சனத்துக்கும் இடையேயான இடைவெளியில் நடக்கும் மாற்றங்களில் ராஜாக்களின் பிம்பங்களின் நிலை கூட மாற்றம் கண்டு விடுவதை எண்ணினால் வாழ்வின் நிச்சயமற்ற தன்மை உறைக்கிறது அல்லவா.

மிகச் சமீபத்தில் சாரு நிவேதிதா அவர்களின் வாசகர் சந்திப்பு நடந்த ஹோட்டலில் வாயிற் கதவினை திறந்து விடுபவரைக் கண்டபோது மனதில் தோன்றியவை. என்ன ஒரு விசித்திரமான உலகம் பாருங்கள்....