குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பா.சிங்காரம். Show all posts
Showing posts with label பா.சிங்காரம். Show all posts

Sunday, January 29, 2017

புயலிலே ஒரு தோணி நாவல் மற்றும் மாணிக்கம் என்ற கேரக்டர்

பா.சிங்காரம் அவர்களின் ’புயலிலே ஒரு தோணி நாவல்’ போன்ற ஒரு நாவலை இதுவரை படித்ததே இல்லை. கடல் தனக்குள்ளே விழுங்கும் மழை நீரைப் போல மனதை உள்ளே இழுத்துக் கொண்டது. அந்தக் கால தெருக்களும் மனிதர்களும் வட்டிக்கடைகளும் கண் முன்னே படம் விரிந்தது போல விரிந்தன. அந்தக் காட்சிக்குள்ளிலிருந்து வெளி வருவதற்கு பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது. சென்று கொண்டே இருந்த நாவலுக்குள் ’மாணிக்கம்’ என்றொரு பெயர் வர எனக்குள்ளே ஏதோ ஒரு சிறிய பொறி தட்டியது.

இந்திய தேசிய ராணுவத்தின் லெப்டினெண்டாக இருந்து பர்மா, சுமத்ரா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் போர் செய்தும் பின்னர் கைதாகி சிறையில் கிடந்து விடுதலையாகி ஊருக்கு வந்த என் அம்மா குட்டியம்மாளின் தகப்பனாரும், எனது தாத்தாவுமான மாணிக்கதேவரின் உருவம் கண் முன்னே வந்து நின்றது. எனது தாத்தாவுடன் அருணாசலத்தேவரும், தனுக்கோடிதேவரும், பைத்தவிடுதியைச் சேர்ந்த அண்ணாமலை உடையாரும் நினைவிலாடினார்கள். அடிக்கடி அருணாசலத்தேவர் தாத்தாவைத் தேடி வருவார். அண்ணாமலை உடையார் பைத்தவிடுதியிலிருந்து சைக்கிளில் தான் வருவார். ராஜாக்கண்ணு உடையார் ஆள் கெச்சலாக இருப்பார். ஐவரும் தமிழக அரசின் தாமிரப்பட்டயம் பெற்றார்கள். டெல்லியில் இந்திரா காந்தி அம்மையார் வழங்கிய இந்திய அரசின் தாமிரப்பட்டயத்தையும் பெற்றார்கள். மூவருக்கும் இந்திய விடுதலை தியாகிகள் பென்ஷன் பணம் வந்து கொண்டிருந்தது. 

அருணாசலம் மாமாவுக்குப் போன் செய்து பா.சிங்காரத்தைப் பற்றியும் நாவலைப் பற்றியும் சொல்லி விசாரித்தேன். இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றுச் சொன்னார். சிறு பிள்ளையாக இருந்த போது தாத்தா சின்னப்பிள்ளைப் பாட்டிக்கு எழுதிய கடிதங்கள், இந்திய அரசும், தமிழக அரசும் தாத்தாவுக்கு அனுப்பிய கடிதங்கள் ஆகியவற்றைப் படித்த நினைவுகள் வந்து சென்றன. இப்போது அண்ணாமலை உடையார் மட்டும் இருக்கிறார். அவரைச் சந்திக்கச் செல்ல வேண்டும். அவரின் பையன் குணசேகர் தாத்தா வீட்டிலிருந்துதான் படித்தார். குணம் என்று அழைப்பார்கள். அமைதியான சாந்தமே உருவானவர்.


ஒரு முறை நானும் என் தம்பி ஜெயபாலும் பக்கத்து வீட்டாரிடம் பிரச்சினை செய்து விட்டோம். அவர்கள் காவல்துறையில் கம்ப்ளைண்ட் கொடுத்து விட்டார்கள். அண்ணாமலை உடையார் வீட்டுத் தோட்டத்துக்குக் கிணற்றுச் சாளையில் தான் பதுங்கி இருந்தோம். போலீஸ் அங்கெல்லாம் நினைத்தால் கூட வர முடியாது. திகிலடிக்கும் காடுகள் நிறைந்தவை அந்த தோட்டம் இருந்த பகுதி. ஒரு வழியாக சமாதானம் பேசி வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

தாத்தாவுடன் இருந்த ஐவரில் நால்வர் காலமாகி விட்டனர். தாத்தா உயிரோடு இருந்திருந்தால் பா.சிங்காரத்தைப் பற்றி விசாரித்திருப்பேன். தாத்தாவின் முஸ்லிம் நண்பர் இஸ்மாயில் ராவுத்தரும் காலமாகி விட்டார். இவர் வட்டிக்கடையில் வேலை செய்தவர். அண்ணாமலை உடையார் இப்போதும் இருக்கிறார். ஆனால் எந்த நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. தாத்தாவுக்கும் பா.சிங்காரத்துக்கும் தொடர்பு இருந்திருக்குமா? நாவலில் வரும் மாணிக்கம் என்ற கேரக்டர் தாத்தா தானா? என்றொரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. 

ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் தாத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் வழங்கிய காக்கி உடையினை உடுத்தி தேசியக் கொடிக்கு சல்யூட் செய்வார். வயதாக அவரால் உடை உடுக்க முடியவில்லை. அந்தக் காக்கிச் சட்டையை நான் தான் குளிருக்கு இதமாய் போட்டுக் கொள்வேன். தாத்தா வைத்திருந்த கொலைகார கத்தி ஒன்றும் வீட்டில் இருந்தது. ஒரு சிறு பை ஒன்றும் இருந்தது. அது நீண்ட நாள் கழித்து மக்கிப் போனது. பா.சிங்காரத்தின் நாவலில் வரும் மாணிக்கம் என்ற கேரக்டர் எனது தாத்தாவா என்றுச் சொல்லிட இன்று யாரும் இல்லை. காலம் தனக்குள்ளே புதைத்துக் கொண்ட வரலாற்றுப் பக்கங்களில் இதுவும் ஒன்று. அண்ணாமலை உடையாருக்கு நினைவுகள் தப்பாமல் இருந்தால் கண்டுபிடித்து விடலாம்.  பார்க்கலாம்.

காலம் எத்தனை எத்தனையோ மனிதர்களை தனக்குள்ளே விழுங்கிக் கொண்டே இருக்கின்றது. பிறப்பதும் இறப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. வருகிறார்கள் மறைகிறார்கள். ஆனாலும் ஒரு சிலர் தான் தங்களின் இருப்பை வரலாற்றில் பதிய வைத்துச் சென்றிருக்கின்றார்கள். இந்த நாவலில் வரக்கூடிய ஒவ்வொரு மாந்தர்களும் அவர்களின் வாழ்க்கையும் எக்காலத்திலும் மறைந்து விடப்போவதில்லை. படிக்கும் ஒவ்வொரு வாசகனின் நினைவிலும் வந்து செல்லும்.

இந்த நாவல் காட்டும் மனிதர்களும், போர்க்களங்களும், மனித வாழ்க்கையும் புரிந்தும் புரிந்து கொள்ள முடியாத மர்மப்பக்கங்களைப் போல இருக்கின்றன. மனிதர்கள் ஏன் உழைக்கின்றார்கள்? ஏன் வெளி நாடுகளுக்குச் சென்று தங்கள் இளமையை இழந்து பொருளீட்டுகின்றார்கள்? அதன் பலன் என்ன? என்றெல்லாம் யோசிக்க வைத்து விடுகின்றன.  வாழ்க்கை எனும் கடலில் தோணி போலத்தான் மனிதனும் மிதக்கின்றானா என்ற புரியாத கேள்வியை எழுப்பி விடுகிறது. ஊரில் இருக்கும் தன் கடைசிப் பெண்பிள்ளை இறந்தது கேட்டு பித்துப் பிடித்தது போல ஆன ஒரு கேரக்டரும் உண்டு. ஏன் இந்தப் பித்து நிலை ஏற்பட்டது என்று எவராலும் கண்டு பிடிக்க முடியுமா? காரணத்தை அறிந்து கொள்ளத்தான் முடியுமா?

சுதந்திரம், சமத்துவம், சகோதரதத்துவம் எல்லாம் மாயக்கற்பனை என்றும், கற்பனை இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை, கொள்கை இல்லை, சமுதாயமில்லை என்றும் கற்பு எனும் கற்பனை இன்றேல் குடும்ப வாழ்க்கை அதாவது லட்சிய வாழ்க்கை இல்லை என்று விவரிக்கிறது நாவல்.

ஒவ்வொரு அறிவுக்கும் ஒவ்வொரு உண்மை புலப்படும். அவரவர் அறிவுப் போக்கில் சென்றால் குழப்பமும் அழிவுமே கிடைக்கும் என்றும் அறிவுக்கும் ஒரு முட்டுக்கட்டை போட்டாக வேண்டும் என்கிறது நாவல். அறிவதையே குறிக்கோளாக கொள்ளும் அறிவு அறிவாகாது. சமுதாய மொத்த நலனைக் கருத்தில் கொண்டே நல்லதெனும் தீயதெனும் அறியப்படுகிறது எனவும் நாவல் விவரிக்கிறது. 

இந்த நாவல் சொல்லும் வாழ்க்கை அழகானது அல்ல. அபத்தமானது. ஆறறறிவு கொண்ட மனிதனின் அறிவிலி வாழ்க்கையை விவரிக்கின்றது. தமிழர்கள் அனைவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நாவல் இது. வாழ்வின் நோக்கமென்ன என்பதை புரிய வைத்து விடும் இந்த நாவல்.

Wednesday, December 28, 2016

மாமனார் மருமகன்

உலக மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் அதற்கென்று சில காரியங்களைச் செய்தால் தான் அந்த மாபெரும் சிம்மாசனம் கிடைக்கும். கிடைத்த சிம்மாசனத்தை தக்க வைக்க பெரும் போராட்டங்களை செய்தால்தான் அந்த அடையாளம் தொடர்ந்து நீடிக்கும். இல்லையென்றால் நாளடைவில் மறந்து போவார்கள். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சினிமாக்காரர்களுக்கு முதல் சிம்மாசனம் கிடைக்கும்.

சினிமாவை தன் வாழ்வியலோடு வாழ்க்கைப் பாதையாக மாற்றிய சமூகம் இந்த உலகில் உண்டென்றால் அது நம் தமிழகம் தான். ஆந்திராவையும் விட்டு விட முடியாது. சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள் நாட்டை ஆள வந்து விடுகின்றார்கள். நாட்டையே தூக்கிக் கொடுத்து விடும் அளவுக்கு சினிமா ஹீரோக்களுக்கு சிம்மாசனம் கொடுத்திருக்கிறோம்.

சினிமாவில் ஹீரோ போடும் சட்டை,  அவர் தலைமுடியில் செய்யும் மாற்றம், ஹீரோயின் கட்டும் சேலை முதற்கொண்டு தமிழ் சமுதாயம் விடாது தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள். தன் பிள்ளைகள் இன்னார் ரசிகன் என்று சொன்னால் புளகாங்கிதமடைகின்றார்கள். அந்தளவுக்கு சினிமாவுக்குள் தங்கள் வாழ்க்கையை புகுத்திக் கொண்டிருக்கும் சமூகம் தமிழர் சமூகம்.

தானும் கெட்டு தன் தலைமுறைகளையும் கெடுத்து அழிவின் பாதைக்குத் தள்ளிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு சமூகம் தமிழர் சமூகம் மட்டுமே. இதில் எவருக்காவது மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டமிடவும். பதில் தருகிறேன். (கம்யூனிஸ்ட்வாதிகள் ஏன் சினிமா ஹீரோ கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவதைப் பற்றி ஒரு கேள்வி கூட கேட்கமாட்டேன் என்பது எனக்குப் புரியவே இல்லை. கம்யூனிஸம் என்பது சினிமாத் தொழிலாளிகளுக்கு இல்லையா?)

எழுத்தாளர்களுக்கு அந்த சிம்மாசனம் கிடைத்து விடுமா? என்றால் இதுவரைக்கும் யாருக்கும் கிடைக்கவில்லை. சினிமாவில் வசனம் எழுதலாம், சில கில்லாடி எழுத்தாளர்கள் சினிமா இயக்குனர்களானாலும், ஹீரோக்களுக்கு கிடைக்கும் சிம்மாசனம் போல அவர்களுக்குக் கிடைத்து விடுவதில்லை.

இரண்டு வருடங்களாக சாரு நிவேதிதாவின் எழுத்தினை முதல் வாசகனாகப் படித்து, பதிவேற்றி வந்த பழக்கத்தின் காரணமாக சுயசரிதைத் தன்மையான எழுத்துக்களே எனக்கு வசமாகி இருக்கின்றன. ஆனால் அந்த சுயசரிதை தன்மை எழுத்துக்களை எழுத்துலகம் அங்கீகரிப்பதில்லை என்பதை கொஞ்ச காலமாக அனுபவித்து வருகிறேன். மனதை வருடும் சம்பவங்களாக பல பத்திரிக்கைகளைக்கு எழுதி அனுப்பினேன். அனைத்தும் திரும்பி வந்து விட்டன. ஒரு பத்திரிக்கை ஆசிரியர் போனில் அழைத்து நீங்கள் எழுதுவது நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இது எழுத்து வடிவமல்ல என்றுச் சொல்லி நான் எழுதும் சுயசரிதைத் தன்மையான பதிவுகளை சிறுகதைகளாக்குவது எப்படி என்று விவரித்தார். ஆச்சரியமாக இருந்தது. 

(சாரு நிவேதிதாவின் பழைய இணைய வடிவமைப்பு பக்கம்)

சுயசரித பதிவுகளைப் படிக்கும் போது எழுதுபவர்களுடன் மன நெருக்கம் உண்டாகும் உணர்ச்சி இருக்கும். சிறுகதை படிக்கும் போது வெளியில் இருந்து வாசிப்பது போல இருக்கிறதே என அவரிடம் வினவினேன். அந்த உணர்ச்சி வேறுபாடு எழுதப்படும் போக்கில் இருக்கும் குறை என்றுச் சொன்னார்.

என்னை ஒரு நாவலைப் படிக்கச் சொன்னார். அந்த நாவல் பா.சிங்காரத்தின் ’புயலிலோ ஒரு தோணி’ மற்றும் ’கடலுக்கு அப்பால்’. மூன்று வாரங்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. அப்படியே உள் இழுத்துக் கொண்டு விடுகிறது அந்த நாவல். மீள நேரமாகின்றது. 

தமிழக நாவல் வரிசையில் இந்த நாவல் எவராலும் மறக்கமுடியாத நாவல் என்றாலும் பா.சிங்காரத்தை பெரும்பான்மையான தமிழர்களுக்குத் தெரியவே தெரியாது. ஆக மக்களின் மனதில் எப்படி எழுதினாலும் சிம்மாசனம் என்பது கிடைக்காது என்பது தெரிந்து போயிற்று.

ஒரு நண்பர் சொன்னார், தங்கம் எழுதுவதில் ஒரு கணக்கு இருக்கிறது. அதில் சிறந்தவர் ஜெயமோகன் பின்னர் ராமகிருஷ்ணன். உட்லாக்கடி எழுத்துக் கணக்குப்படி எழுதுபவர்கள் கமர்ஷியல் எழுத்துக்காரர்கள். ஒரு சிலர் ஏதோ ஒரு பவுண்டேஷனிடம் காசு வாங்கிக் கொண்டு எழுதுவார்கள். அவர்கள் ஒன்றிரண்டு புத்தகங்களோடு நின்று போவார்கள்.

பல வெற்றிகரமான எழுத்தாளர்களைப் பார்த்தீர்கள் என்றால் அவர்கள் அனைவரும் வருமானத்துக்கு குறைச்சல் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். இல்லையென்றால் ஏதாவதொரு கட்சி, பெரும் பணக்காரன் ஆகியோர்களை நண்பர்களாய் வைத்திருப்பார்கள். இந்தக் கணக்குச் சரியாக இருந்தால் தான் தொடர்ந்து எழுத முடியும். லெளகீக வாழ்க்கையின் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளா வண்ணம் இருப்பவர்களால் தான் தொடர்ந்து எழுதி வெற்றிகரமாக வலம் வர முடியும். 

அதன் படி இப்போது தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் என்று (வேறு எவரும் எழுதினால் எளிதாக படைப்புச் சரியில்லை என்று மறுதலித்து விடுவதும், ஏதோ இவர்கள் தான் எழுத்துலகத்தின் கடவுள்கள் போல கருதிக் கொண்டு பிற எழுத்தாளர்களை விமர்சிக்கும் காமெடியும் தொடர்ந்து எழுத்துலகத்தில் நடைபெற்றுக் கொண்டே வருவதை நாமெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம்) கருதிக் கொள்வோர்கள் உண்டல்லவா? என்றும் சொன்னார்.

நண்பரின் கூற்றுப்படி பார்த்தால் ஏதோ ஒரு பின்புலம் இருப்பவர்களால் தான் எழுத்துலகில் தொடர்ந்து பயணிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள முடியும். அந்தப் பின்புலங்களின் மனசு நோகா வண்ணம் எழுத வேண்டும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சினிமாவுக்குள் அரசியல் என்றால் எழுத்துலகில் அதை விடப் பெரிய அரசியல் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஒருவனின் குழந்தையை இன்னொருவன் பார்த்து கண் இப்படி இருக்கிறது, கால் இப்படி இருக்கிறது, கலர் சரியில்லை என்று விமர்சிப்பது போலத்தான் பிறரின் படைப்பை விமர்சிப்பது. அதை எவரும் புரிந்து கொள்வார் இல்லை. அவரவர் குழந்தை அவரவருக்குப் பெரிது. இதில் குறையென்ன காண்பது?  ஆக எழுதுவதில் ஒரு கணக்கு இருக்கிறது என்பது புரிந்தது. அந்தக் கணக்கின் விடையைப் போட்டு விட்டால் எழுத்துலகத்தின் கடவுள்களில் நாமும் ஒருவராக மாறி விடலாமா என்று யோசித்தால் வரிசை கட்டி நம் முன்னே நிற்கும் எழுத்தாளர்களைப் பார்த்தால் திகிலடிக்கிறது. நாமாவது அந்த வரிசைக்கு வருவதாவது? சாத்தியமே இல்லாத சாத்தியம். இருந்தாலும் ஒரு நப்பாசை. நரி திராட்சைக்கு ஆசைப்பட்டது போல.

ஆகையால் நானும் பலப் பல புத்தகங்களைப் படித்து மெருகேற்றி சிறுகதைகள் எழுத ஆரம்பிக்கலாம் என்று உட்கார்ந்தால் தொடர்ந்தாற் போல நான்கு பக்கங்களுக்கு மேல் எழுதவே முடியவில்லை. எழுதியதை மீண்டும் படித்துப் பார்க்கும் போது, பாதிக்குப் பாதி காணாமல் போய் விடுகிறது. இப்படியே தொடர்ந்து விடிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை முயற்சிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆறு மணிக்குப் பிறகு காய்கறி நறுக்கிச் சுத்தம் செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அன்றைய உணவு ஈயமாகி விடுகிறது.

அதன் பிறகு லெளகீக வாழ்க்கைப் பயணத்தின் தொடர்ச்சி நிகழ ஆரம்பித்து விடுகிறது. அடுத்த நாள் காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை மீண்டும் இதே கதை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மலைகள் இணைய இதழில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார்கள். இனி தொடர்ந்து பல இதழ்களில் வெளியிடலாமென்பதற்காக உலகத் தரத்துடன் (உலக  நாயகன் பாதிப்பு) எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இன்னொரு பக்கம் ஓஷோவும், பா.சிங்காரமும், சுஜாதாவும், ஜட்ஜ் பலராமய்யாவின் முப்பு குரு விஷயமும் இழுத்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமின்றி விகடன் குழுமத்தின் வயிற்றெரிச்சல் செய்திகள் வேறு இழுத்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே மாமனார் மருமகன் பதிவை இன்னொரு நாள் எழுதுகிறேன். 

இணையத்தில் படித்த இந்தக் கவிதையோடு இந்தப் பதிவை முடித்து வைக்கிறேன். இருந்தாலும் அந்த எழுத்துக்கடவுள்கள் வரிசை மட்டும் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கிறது. குஷ்பூவுக்கு கோயில் கட்டியது போல எவராவது ஒருவர் எனக்கு ஏதோ ஒரு மூலையில் கல்லாவது வைத்து மஞ்சள் தடவி அதன் மீது குங்குமம் வைத்து வழிபடமாட்டாரா என்ற ஆசை துரத்து துரத்துவென துரத்திக் கொண்டிருக்கிறது.

கொற்றவை சிம்மாசனம் (கவிதை)
------------------------------------------------------

சிகப்பு கம்பளம் சிம்மாசனம்
சிதரடிக்கும் நட்சத்திரம் சிம்ம சொப்பணம்
செந்தமிழ் கொற்றவை கூர்வாளடா
நுனி நாக்கில் ஆங்கிலத்தைக் கொண்டாளடா

சிந்தையில் சிகரத்தைச் செலுத்தி நல்லறிவுடன்
பாட்டனும் பூட்டனும் பேசிய தமிழ்மொழி
அகரத்தின் ஆனிவேரில் ஓல்கா செம்புகழுடன்
பட்டினியில் பட்டறிவு பூசிய செம்மொழி
வென்றிட போர் விதம் பலவுண்டு
தலை நின்றிட சொற்குணம் கைகொண்டு
நித்தய நற்சோறு காணோம் இன்று

கலையில் கரைந்தவை நிற்பவை நிலைத்தவை
ஏட்டிலே வெடித்தவை கற்றவை சுரந்தவை
பாட்டிலே படர்ந்தவை கொற்றவை கொணர்ந்தவை
போரிட்டு முடித்துவை தூற்றிட தொடர்ந்து செய்
சிகப்பு கம்பளம் சிம்மாசனம்
சிதரடிக்கும் நட்சத்திரம் சிம்ம சொப்பணம்
செந்தமிழ் கொற்றவை கூர்வாளடா
நுனி நாக்கில் ஆங்கிலத்தைக் கொண்டாளடா

நன்றி: பூந்தளிர் ஆனந்தன்