குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, May 31, 2026

மறக்க முடியாத சில பயணங்கள்

பயணம் என்றால் என்னவென்று தெரியும் தானே? ஒரு இடத்துக்குச் செல்வது. எல்லோருக்கும் பயணம் செல்வது பிடித்தமானது. ஒரே இடத்தில் இருப்பதை விட புதிய புதிய இடங்கள், மனிதர்களைப் பார்ப்பது என்பது மனதுக்குள் மலர்ச்சியை உண்டாக்கும். அலுத்துச் சலித்துப் போன ஒரே மாதிரியான வாழ்க்கையில், இவ்வகையான பயணங்கள் உற்சாகத்தை தரக்கூடியவை. சில பயணங்களால் வாழ்க்கையே மாறிப் போய் விடும். 

ஒரு சில பயணங்கள் மனதில் பதிந்து விடும். அப்படியாகத்தான் எனது இந்தப் பயணமும் இருந்தது. 

விடிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து குளித்து, உடைகள் உடுத்தி, மனைவியுடன் கோவை ஏர்போர்ட் சென்றேன். வீட்டிலிருந்து 45 கிலோ மீட்டர் தூரம் விமான நிலையம். இடையில் டிராபிக் என்றால் போச்சு என்பதால் சீக்கிரம் கிளம்பி விடுவதுண்டு.

ஏர்போர்ட்டில் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். காலை 6.10க்கு இண்டிகோ பிளைட்டில் சென்னைக்குப் பயணம்.  தனியாக வழக்கம் போல.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக விமானப் பயணங்களில் மனதில் பதிந்து விடுமளவுக்கு பிரமாதமான நிகழ்வுகள் கொண்ட நினைவுகள் ஏதுமில்லை. பல சினிமாக்காரர்களைப் பார்த்திருக்கிறேன். அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன். இவர்களை ஒருவர் கூட கண்டு கொள்ளவே மாட்டார்கள். செத்த பாம்பு போல சீட்டில் உட்காந்திருப்பார்கள்.

தமிழர்கள் பார்த்தாலே அலறிக் கொண்டிருப்பார்களே சினிமா நடிகைகள் - அவர்களை பலமுறை பயணத்தில் பார்த்திருக்கிறேன். யாராவது ஓரிருவர் செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். அவ்வளவுதான் தான். 

ஒரு சிலருக்கு விமானப்பயணத்தால் பெருமை பிடிபடாது. மன்னர்கள் போல பார்வைகளை பறக்க விடுவார்கள். ஒரு சிலர் விதியேன்னு உட்கார்ந்திருப்பார்கள். இதில் குழந்தைகள் இருந்தால் - அது என்னென்ன சேட்டை செய்யுமென முன்பே முடிவு செய்யமுடியாது. ஆனால் கேபின் க்ரூ - விமானப் பணிப்பெண்கள் (வேலைக்காரிகள்) பாடுதான் பெருசு. குழந்தையின் கன்னத்தில் தட்டிச் சிரிக்க வேண்டும். அதெப்படி இப்படி ஒரு டெம்ப்ளேட் சிரிப்பை முகத்தில் தேக்கி வைத்திருக்கிறார்களோ எனத் தெரியவில்லை. காசுன்னா எல்லாச் சங்கடங்களையும் சகித்துக் கொள்ளத்தானே வேண்டும்.

பஸ்ஸில் உரசினால் பட்டையைக் கிளப்பி விடுவார்கள். விமானத்தில் வேறு வழியே இல்லை. உரசல் இருந்தே ஆகும். எனக்கு அல்ல நண்பர்களே. என்னைக் கொண்டு போய் விஐபி சீட்டில் உட்கார வைத்து விடுவார்கள். ஒன்றையும் பார்க்க முடியாத ராசியில்லாதவன். 

ஒரு முறை ஹைதராபாத் சென்ற போது ஒரு இளம் பெண் உட்கார்ந்திருந்தார். சரியான மப்பு போல. சரக்கு வாடை. சீட்டில் மல்லாந்து கிடந்தது. இந்தப் பக்கமாய் ஒரு வயதான அரசு அதிகாரி பெண். இந்தம்மா சீட்டில் நெட்டைக் குத்தலா உட்கார்ந்திருந்தார். சேலை என் மீது பட்டு விட்டால், கற்பு பறிபோய் விடுமென பதைப்பில் இருந்தார் போல. அவ்வப்போது உடைகளை ஒதுக்கிக் கொண்டிருந்தார். நடுவில் நான். அவ்வளவுதான் என் அதிர்ஷடமெல்லாம். 

பேசக்கூட முடியாது. கெத்தாய் இருக்கனுமே. யாரும் தவறாய் நினைத்து விடக்கூடாதே. இப்படி பல கட்டுப்பாடுகள் நமக்குள்ளே இருக்கும். உடல் நமது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே?

எல்லாரும் எல்லாவற்றையும் பேசவும், செய்யவும் முடியாது. மரணம் வரையிலும் இப்படித்தான் போகும். படிக்க கஷ்டமாக இருக்குமே? அதுதான் எதார்த்தம்.

செக் இன் செய்து,போர்டிங் பாஸ் பெற்றுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அதிசயம் ஆனால் உண்மை. அன்றைய நாளில் சுமார் 50 பேர்தான் சென்னைக்கு சென்றோம். 

கேபின் க்ரூ நல்லபடியாக கவனித்துக் கொண்டார்கள். 😉

முகங்களைப் பார்ப்பது எனக்கு நிரம்பவும் பிடிக்கும். ஏனெனில் நானொரு நாவல் எழுத முயன்று கொண்டிருக்கிறேன். அந்த நாவலில் வரும் ஹீரோயினுக்கு என் மனதில் ஒரு வடிவம் கொடுத்திருக்கிறேன். அந்த வடிவம் கொண்ட ஒரு பெண் முகத்தை நானும் கடந்த நான்கைந்து வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. 

ஆனால் இந்தப் பயணம் வேறொரு முகத்தை எனக்குக் காட்டியது. நான் விரும்பியது ஒன்று, கிடைத்தது ஒன்று. 

கருங்குயிலுக்கு தோகையில்லை ஆனால் இனிய குரலுண்டு.

கொள்ளை அழகுடைய தோகை கொண்ட மயிலுக்கு இனிய குரலில்லை.

இப்படித்தான் இயற்கை உயிர்களைப் படைத்திருக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்குமென நினைத்துப் பார்க்கிறேன். விடை தெரியவில்லை.

ஒரு குறை, ஒரு நிறை - முழு வடிவம். இரவு பகல் போல. 

ஆனால் இரவும் பகலும் உயிர்களுக்குத்தானே தவிர இயற்கைக்கு இல்லை அல்லவா? காலம் என்பதும் இயற்கைக்கு இல்லை. இயற்கை படைத்திருக்கும் உயிர்களுக்கு மட்டுமே காலம். 

சரி போகட்டும் வேதாந்தம். 

மீட்டிங்க் முடித்து விட்டு அரக்கப் பரக்க மீண்டும் கோவை நோக்கி கிளம்பினேன். கத்திபாரா பாலம் அருகில் கையில் புறாவோடு நின்றிருப்பாரே நேரு அவரைச் சுற்றிலும் பாலங்கள். பாலங்களுக்கு கீழே அப்டவுன் என்றொரு நிறுவனத்தைப் பார்த்தேன். அரசிடம் உபயோகமாய் இல்லாத இடங்களில் பொழுது போக்கு மற்றும் உணவகம் நடத்துகிறார்கள் போல. 

அங்கே இருந்த ஒரு உணவகத்தில் இரண்டு சப்பாத்தியும், சைவ குருமாவும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு நான்கரை மணி வாக்கில் போர்டிங்க் பாஸுடன் கேட் நம்பர் 101 முன்னால் இருந்த சேரில் உட்கார வைக்கப்பட்டேன்.

விமானங்கள் சிட்டுக் குருவி போல பறந்து கொண்டிருந்தன. ஆட்கள் ஏறினார்கள், இறங்கினார்கள். சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

இடது பக்கமாய் ஒரு குரல் கேட்டது. 

திரும்பினேன்.

அவளைப் பார்த்தேன்.


அச்சு எடுத்தால் போல இதே முகம் தான். ஆனால் ஒரு சில மிஸ்ஸிங்க். நெற்றிப் பொட்டில் குங்குமம், மூக்கில் லோலாக்கு. கத்தரிப்பூ நிறத்தில் பார்டர் போட்ட காட்டன் சேலை. 

வயது முப்பத்தைந்து இருக்கும்.

அவள் என்னைப் பார்த்தாள். 

என்னுடன் விமானத்தில் பயணித்தாள். 

என் அதிர்ஷ்டம் தான் எனக்கு முன்னே நிற்குமே. 

நான் விஐபி சீட்டில், அவளோ விமானத்தின் பின் சீட்.

அந்தக் கண்களுக்குள் சிறை கொண்ட மனதைப் பிடித்து, எதார்த்தத்துக்கு கொண்டு வர இந்த நொடி வரை முயன்று கொண்டிருக்கிறேன்.

அந்தக் கண்கள். 


பாரசீக கவிஞன் சாதி ஷிராசி எழுதினானே இப்படி - ஒரு வேளை அவனும் என்னைப் போல கண்களைப் பார்த்திருப்பானோ???

நீ என்னை விட்டுப் பிரிந்து சென்றபோது,

என் கண்கள் உன்னையே பின்தொடர்ந்து வந்தன.

இப்போது என் கண்கள் வெறும் கண்ணீரால் மட்டுமே நிரம்பவில்லை,

உன் நினைவுகளால் உறைந்து போயிருக்கின்றன


என் பிரியத்துக்குரிய கவிஞன் ஜலாலுதீன் ரூமியின் கவிதை இதோ கீழே

உன் கண்களை மூடு,

அப்போதுதான் 

உன்னால் இதயத்தின் 

கண் கொண்டு பார்க்க முடியும்.


பயணங்கள் முடிவதில்லை. 

அவளை நான் இனி பார்க்க முடியாது. எனக்கு அது தேவையுமில்லை. அந்த நொடியில் நிகழ்ந்த ஒரு பார்வை. அவ்வளவுதான் வாழ்க்கை.

வாழ்க்கையில் எல்லாமே துன்பம் தான். ஏதோ ஒரு நொடியில் ஏற்படும் புன்னகையைத்தான் நாம் இன்பம் என்கிறோம்.

அந்த ஒரு நொடிக்காகத்தான் வாழ்கிறோம். அந்த வாழ்க்கை எப்போதும் துன்பமே..

புரியாதவர்கள் விலகி விடுங்கள். புரிந்தவர்கள் புன்னகை செய்வார்கள்.

அது இந்த நொடியில் மலரட்டும்.

வளமுடன் வாழ்க.


Wednesday, May 27, 2026

பிரதமர் மோடி ஆட்சியின் 12 ஆண்டுகள் பயணம் - ஒரு பார்வை



உலக அரசியலில் சில தலைவர்கள் தேர்தலை வெல்வார்கள். சிலர் ஆட்சியை நடத்துவார்கள். ஆனால் மிக அரிதான சிலர் மட்டும் — ஒரு தேசத்தின் மனநிலையையே மாற்றி விடுவார்கள். அப்படிப்பட்ட தலைமைத்துவத்தின் பெயர் நரேந்திர மோடி.

2014க்கு முன்பிருந்த இந்தியாவை நினைத்துப் பாருங்கள். ஊழல் குற்றச்சாட்டுகள், முடங்கிய நிர்வாகம், உலக அரங்கில் மந்தமான நிலை, மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை. “இந்தியா இப்படி தான்” என்ற விரக்தி பலரிடமும் இருந்தது. அந்த நேரத்தில் வந்தவர் மோடி. ஒரு அரசியல்வாதியாக அல்ல. இந்தியாவை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையின் உருவமாக.

அவர் முதலில் மாற்றியது அரசாங்கத்தை அல்ல — மக்களின் மனநிலையை.

அரசு அலுவலக வாசல்களில் அலைந்து திரிந்த ஏழை மக்களுக்கு, “உங்களுக்கு உரியது நேராக உங்கள் கைக்கே வரும்” என்ற நிலையை உருவாக்கியது அவர். முன்பு மானியம் எங்கே போகிறது என்று தெரியாது. இப்போது உதவித்தொகை நேராக வங்கி கணக்கில். அதுவே நிர்வாக மாற்றம்.

முத்ரா யோஜனா மூலம் வேலை தேடும் இளைஞர்களை, வேலை கொடுக்கும் நிலைக்கு கொண்டு செல்ல முயன்றார். ஒரு தேநீர் கடை, ஒரு சிறிய தொழில், ஒரு பெண்மணியின் சுயதொழில் — இவைகளையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பகுதியாக பார்த்தார்.

உஜ்வாலா திட்டத்தில் கிராமத்து பெண்களின் சமையலறையில் புகை குறைந்தது. தூய்மை இந்தியா திட்டத்தில் பெண்களின் அவமானம் குறைந்தது. முத்தலாக் தடைச் சட்டத்தில் பல பெண்களின் பயம் குறைந்தது.

அரசியல் என்பது வெறும் தேர்தல் அல்ல; மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வருவது என்பதை நிரூபித்த ஆட்சி இது.

UPI பற்றி உலகம் இன்று பேசுகிறது.

ஒரு காலத்தில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பார்த்து வியந்த இந்தியா, இன்று தனது தொழில்நுட்பத்தை உலகிற்கு காட்டுகிறது. ஒரு டீக்கடையிலும் QR Code. காய்கறி விற்கும் அம்மாவிடமும் டிஜிட்டல் பரிவர்த்தனை. இதெல்லாம் சாதாரண மாற்றமல்ல. இது சமூக மாற்றம். காலத்தின் அடுத்தடுத்த மாற்றங்களை அவதானித்து, அதை மக்களின் கையில் கொண்டு சேர்க்கும் திட்டத்தினைச் செயல்படுத்திவர் பிரதமர் நரேந்தர மோடி.

வந்தே பாரத் ரயில் பாய்வதைப் பார்க்கும் போது, அது வெறும் ரயில் போல தெரியவில்லை. “நாமும் முடியும்” என்று ஓடும் இந்தியா போல தெரிகிறது. நெடுஞ்சாலைகள் நீள்கின்றன. விமான நிலையங்கள் பெருகுகின்றன.சிறிய நகரங்களும் உலக வரைபடத்தில் இணைகின்றன. ஒரு தேசம் நகர்கிறது என்ற உணர்வு உருவாகியுள்ளது. உலக அரசியலிலும் இந்தியாவின் குரல் மாறியுள்ளது. முன்பு உலக நாடுகள் இந்தியாவை “ஒரு பெரிய சந்தை” எனப் பார்த்தன. இன்று “ஒரு முக்கிய சக்தி” என பார்க்கின்றன.

G20 Summit மாநாட்டில் இந்தியா காட்டிய தலைமைத்துவம் சாதாரண விஷயம் அல்ல. உலக சக்திகள் மத்தியில் தன்னம்பிக்கையுடன் நின்ற இந்தியா — அது கடந்த சில ஆண்டுகளில் உருவான புதிய காட்சி. கொரோனா காலத்தில் உலகமே தடுமாறிய போது, இந்தியா தன்னைத்தானே காத்ததோடு நிற்கவில்லை. பல நாடுகளுக்கும் தடுப்பூசி அனுப்பியது. அப்போது தான் உலகிற்கு புரிந்தது — இந்தியா வெறும் மக்கள் தொகை கொண்ட நாடல்ல; மனிதநேய சக்தியும் கொண்ட நாடு.

தேசிய பாதுகாப்பு விஷயத்தில் மோடி அரசின் அணுகுமுறை இன்னும் வேறுபட்டது. “தாக்கினால் பதில் வரும்” என்ற புதிய மனநிலையை இந்தியா உலகிற்கு காட்டியது. Article 370 நீக்கம் போன்ற முடிவுகள், பல ஆண்டுகளாக யாரும் தொடத் தயங்கிய விஷயங்கள். அதை செய்து காட்டிய துணிவு — ஆதரிப்பவர்களையும், எதிர்ப்பவர்களையும் ஒரே நேரத்தில் வியக்க வைத்தது.

ஒரு தலைவரின் உண்மையான வெற்றி என்ன?

அவர் சென்ற பிறகும், அவர் உருவாக்கிய நம்பிக்கை மக்களிடம் வாழ்ந்தால் — அதுதான் உண்மையான வெற்றி.

இன்று இந்தியாவின் சாதாரண மனிதனும், “நம் நாடு உலகத்தில் உயர முடியும்” என்று நம்புகிறான் என்றால், அதில் மோடி என்ற மனிதரின் தாக்கம் மிக அதிகம்.

12 ஆண்டுகள் என்பது கால அளவு மட்டும் அல்ல. ஒரு தேசத்தின் தன்னம்பிக்கையை மீண்டும் எழுப்பிய காலம்.

விமர்சனங்கள் இருக்கலாம்.அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை மறுக்க முடியாது.

நரேந்திர மோடி என்ற பெயர், இந்திய அரசியலில் ஒரு காலத்தை மட்டும் அல்ல — ஒரு மாற்ற மனநிலையையும் குறிக்கிறது.

வரலாறு சிலரை பதிவு செய்யும். சிலரை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளும்.

பிரதமர் மோடி — அந்த இரண்டாவது வகை.

அவர் நீண்ட ஆயுளுடன், நிலைத்த புகழுடன் வாழ இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

அவர் என்னளவில் ஒரு கடவுளின் அவதாரத்தினைப் போல எப்போதும் ஒரு ஹீரோ. இந்தியாவின் நாயகன்.

வளமுடன் வாழ்க. 


#12YearsOfModiEra #BuildingNewIndia #ViksitBharat2047

Saturday, May 16, 2026

இந்திய மாநிலங்களால் நிதித் தன்னாட்சியைப் பெற முடியுமா?

இந்தியாவின் நிதி கூட்டாட்சி கட்டமைப்பு கொண்டது. நாடு முழுவதும் உள்ள பல மாநில அரசுகள், மத்திய அரசைச் சார்ந்திருக்கும் தங்களின் வருவாய் நிலை குறித்து தொடர்ந்து பல கவலைகளை எழுப்பி வருகின்றன — குறிப்பாக ஜிஎஸ்டி (GST) இழப்பீடு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வரிப் பகிர்வு விகிதாசாரங்களின் ஏற்ற இறக்கங்கள், கடன் வரம்புகள் மற்றும் மாநில அளவிலான சீர்திருத்தங்களுக்கான நிர்வாக அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் ஆகியவை இதில் முதன்மையானவை.

ஆனால், அரசியல் விவாதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு முக்கியமான பொருளாதாரக் கேள்வி இதுதான்:

மத்திய அரசின் நிதிப் பகிர்வை மட்டுமே அதிகம் நம்பியிருக்காமல், இந்திய மாநிலங்கள் எவ்வாறு நிலையான, சுதந்திரமான வருவாய் கட்டமைப்பை உருவாக்க முடியும்?

மாநிலங்களை வெறும் "வரியைச் சார்ந்திருக்கும் நிர்வாகங்களாக" பார்க்காமல், "செல்வத்தை உருவாக்கும் பொருளாதார இயந்திரங்களாக" மாற்றுவதில்தான் எதிர்காலம் அடங்கியுள்ளது என VSJ அசோசியேட்ஸ் (VSJ Associates) நம்புகிறது. 

அதற்கான முக்கிய வழிகள் ஒரு சிலவற்றைப் பார்க்கலாம்.

சொத்துக்களைப் பணமாக்குதல் (Asset Monetization): மாநிலங்களிடம் பயன்படுத்தப்படாத பெருமளவிலான நிலங்கள், போக்குவரத்து சொத்துக்கள், தொழில்பேட்டைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் (PSU) உள்கட்டமைப்புகள் உள்ளன. முறையான குத்தகை, பொது-தனியார் கூட்டு (PPP) மாதிரிகள் மற்றும் மறுசீரமைப்பு மூலம் நீண்ட காலத் தொடர் வருவாயை ஈட்ட முடியும்.

டிஜிட்டல் மற்றும் கண்டுபிடிப்புப் பொருளாதாரங்கள் (Digital & Innovation Economies): உள்ளூர் பொருளாதார நடவடிக்கை மற்றும் வேலைவாய்ப்பை விரிவாக்க, ஃபிண்டெக் (Fintech), மின்சார வாகனங்கள் (EVs), செமிகண்டக்டர்கள், ஏஐ (AI), பசுமை ஆற்றல் மற்றும் டீப்-டெக் உற்பத்தி ஆகியவற்றில் மாநிலங்கள் பிரத்யேக கட்டமைப்புகளை உருவாக்கலாம்.

மாநில முதலீட்டு நிதியங்கள் (Sovereign-Style State Investment Funds): சுரங்கம், துறைமுகங்கள், எரிசக்தி அல்லது தொழில்துறைகளில் இருந்து கிடைக்கும் உபரி வருவாயை, உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கான எதிர்கால வருமானத்தை உருவாக்கும் வகையில் முதலீடு செய்யலாம்.

பசுமைப் பத்திரங்கள் மற்றும் காலநிலை மூலதனம் (Green Bonds & Climate Capital): உலகளாவிய ESG (சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை) மற்றும் காலநிலை நிதிச் சந்தைகள், மாநிலங்கள் தங்களின் நிலையான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நேரடியாக மூலதனத்தை திரட்டுவதற்கான பெரிய வாய்ப்புகளை வழங்குகின்றன.

வரி அல்லாத வருவாய் விரிவாக்கம் (Non-Tax Revenue Expansion): சுற்றுலா, தளவாடங்கள் (Logistics), துறைமுகங்கள், நகர்ப்புற சேவைகள், சுரங்க ராயல்டி, நீர் மேலாண்மை மற்றும் டிஜிட்டல் ஆளுகை சேவைகள் ஆகியவை பாரம்பரிய வரி விதிப்புக்கு அப்பாற்பட்டு மாநில நிதியை கணிசமாக வலுப்படுத்த முடியும்.

இருப்பினும், நிதித் தன்னாட்சிக்கு சட்டரீதியான அனுமதி அவசியமாகும். நிர்வாகத் தடங்கல்கள் மற்றும் தாமதங்களைத் தவிர்க்க, பொருளாதார சீர்திருத்தங்கள் சட்டப்பூர்வமாக வலுவானதாகவும், கொள்கை சார்ந்ததாகவும்  இருக்க வேண்டும். இந்திய கூட்டாட்சியின் அடுத்த கட்டம் வெறும் வரிப் பகிர்வால் மட்டும் தீர்மானிக்கப்படாது — மாநிலங்கள் எவ்வளவு திறம்பட சுதந்திரமான பொருளாதார மதிப்பை உருவாக்குகின்றன என்பதைக் கொண்டே அமையும்.

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பிற தொழில்மயமான மாநிலங்கள் இந்த மாற்றத்தை முன்னெடுப்பதற்கான கட்டமைப்பை ஏற்கனவே பெற்றுள்ளன.

மாநிலத்தின் நிதி ஆலோசகர்கள் மாநில வருவாய் இனங்களைப் பகுத்து பிரித்து - புதிய வரி விதிப்புகளை, புதிய முதலீடுகளை உருவாக்குவது சாத்தியமா? அது இந்தியக் கூட்டாட்சி சட்டமைப்புக்குள் வருகிறதா என ஆராய்ந்து அதற்கேற்ப திட்டமிடல் வேண்டும்.

இதைப் பற்றி இன்னும் விரிவாக எழுதலாமென்றால், படிக்கும் உங்களுக்கு போரடிக்கும் என்பதால் இத்துடன் முடித்து விடுகிறேன்.

நான் எழுதும் பொருளாதார ஆய்வுகள் பற்றிய பதிவுகளை எனது லிங்க்டு இன் தளத்தில் பார்க்கலாம். அது ஆங்கிலத்தில் இருக்கும்.

முடிந்தவரை தமிழில் மொழி பெயர்த்து இங்கும் பதிவு செய்ய முயல்கிறேன்.

வளமுடன் வாழ்க

Saturday, May 2, 2026

வளர்ச்சியா? விபரீதமா? - ஒரு கோவைவாசியின் ஆதங்கம்

கோயம்புத்தூரின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று விளாங்குறிச்சி. விமான நிலையம், தொழிற்சாலைகள் மற்றும் புகழ்பெற்ற கல்லூரிகளுக்கு மிக அருகில் அமைந்துள்ள இப்பகுதியில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது வீடு இருந்தது.

அப்போது எனது வீட்டிற்கு எதிரே ஒரு ஏக்கர் பரப்பளவில் செழிப்பான கீரைத் தோட்டம் ஒன்று இருந்தது. விதவிதமான கீரைகள் அங்கு பயிரிடப்படும். எனது அலுவலகம் கணபதி பகுதியில் இருந்ததால், தினமும் காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி, மாலை 5 மணிக்குத் திரும்புவேன்.

வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது, விநாயகபுரம் பகுதி வரை வெயில் உறைக்கும். ஆனால், அந்தப் பகுதியைக் கடந்தவுடன் காலநிலை சட்டென்று மாறிவிடும். ஜில்லென்று வீசும் காற்றில் உடலும் மனதும் குளிரும். அந்த கீரைத் தோட்டத்தைத் தாண்டி வீட்டிற்குள் நுழைந்தால், ஏதோ ஒரு மலைப்பிரதேசத்திற்குள் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்படும்.

வீட்டைச் சுற்றி தென்னை மரங்கள், வாசலில் பிரம்மாண்டமான வேப்ப மரம் என பசுமை போர்த்திய சூழல் அது. நம்ப மாட்டீர்கள், இரவு நேரங்களில் மின்விசிறி (Fan) கூட போட முடியாது; அந்த அளவிற்கு குளிர் இருக்கும். விடியற்காலையில் நிலவும் கடுங்குளிரைத் தாங்க முடியாமல், வட இந்தியாவில் பயன்படுத்துவதைப் போன்ற தடிமனான கம்பளிகளை (Sweaters/Blankets) வாங்கிப் பயன்படுத்தினோம்.

காலப்போக்கில் அந்த கீரைத் தோட்டம் வணிக நோக்கத்திற்காக விற்கப்பட்டு, விவசாயம் நிறுத்தப்பட்டது. அங்கிருந்துதான் எங்களுக்கான அவதி தொடங்கியது. இன்று கோவையில் வெப்பநிலை 32°C முதல் 35°C வரை இருந்தாலும், புழுக்கத்தின் தாக்கம் அதைவிடப் பல மடங்கு அதிகமாக உணரப்படுகிறது.

அசுரத்தனமான தொழில் வளர்ச்சியின் காரணமாக எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள், அலுவலகங்கள் என கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன.

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பேரூர் முதல் வெள்ளியங்கிரி வரை இருந்த பல நூற்றாண்டு காலத்து மரங்கள் கருணையின்றி வெட்டி வீழ்த்தப்பட்டன.

இதன் விளைவாக, இன்று இரவு நேரங்களில் கூட வெப்ப அலை வீசுகிறது. இயற்கையான குளிர்ச்சியில் இருந்த எனது வீடு, மெல்ல மெல்ல ஒரு மைக்ரோவேவ் ஓவன் போல மாறத் தொடங்கியது. வேறு வழியின்றி குளிரூட்டி (A.C.) பொருத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். வெயிலின் தாக்கத்தைக் குறைக்க வீட்டின் கூரை மீது தென்னை ஓலைகளைப் பரப்பி, ஒரு நாளைக்கு மூன்று முறை தண்ணீர் தெளித்துப் பராமரிக்க வேண்டியதாயிற்று.

இன்றைய அபார்ட்மெண்ட் கலாச்சாரம் என்பது மனிதர்களை வெப்பக் கூண்டுகளுக்குள் அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலை போன்றது. வளர்ச்சி என்பது மனித வாழ்வியலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்ய வேண்டுமே தவிர, தீங்காக அமையக்கூடாது.

சுயநலத்தோடு நாம் மரங்களை அழித்துக் கொண்டே போனால், வரும் சந்ததியினருக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம்? உடல் வெப்பம் அதிகரித்தால் ஏற்படும் பாதிப்புகள் சொல்லொணாதவை.

இதைச் சரி செய்யப்போவது அரசாங்கம் மட்டுமல்ல, மக்களாகிய நாம்தான்.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை எதிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு வீடும் பசுமையை மீட்டெடுக்க முயல வேண்டும்.

வளர்ச்சி என்பது பொருளாதார வெற்றிக்காக மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்விற்காகவும் இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.

நமது பூமியை, அதன் இயற்கை வளங்களோடு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும்.


நீதிக்கு கண்கள் உண்டு


சமீபத்தில் ஒரு நீதிபதி பேசுகையில், "இந்தியாவில் உள்ள சட்டக் கல்லூரிகளில் அர்த்தசாஸ்திரம், மனுஸ்மிருதி உள்ளிட்ட வேதங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இது அவரது தனிப்பட்ட கூற்றாக இருந்தாலும், பல்வேறு நாளிதழ்களில் இது தலைப்புச் செய்தியாக வெளியானபோது சில ஐயங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்தியா இதுநாள் வரை ஒரு சமூக, சமதர்ம, மதச்சார்பற்ற நாடு என்றே அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. வானளாவிய அதிகாரம், கேள்வி கேட்க அவ்வளவு எளிதில் முடியாத அதிகாரத்தின் பின்னால் இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என வரலாறு சொல்கிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 'மதச்சார்பற்ற அரசு' என்ற கொள்கையே இங்கு ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாக்கிறது. 


"எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்" என்ற சமதர்ம நோக்கோடு இந்தியாவை உருவாக்குவதற்காக, நம் தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து விடுதலை பெற்ற பின் பெரும்பாடுபட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பல இன்னல்களையும் துயரங்களையும் கடந்து உருவாக்கிய ஜனநாயக நாட்டில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


ஆனால், தற்போதைய சூழலில் நாட்டை மீண்டும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் போக்கு நிலவுகிறது. ஆளும் அரசின் கீழ் நிர்வாகத்தில் இருக்கும் சில அமைப்புகளும், குறிப்பிட்ட மதம் மற்றும் மொழிப் பற்றுடைய அதிகாரிகளும் இணைந்து இத்தகைய கருத்துருவாக்கங்களை உருவாக்கி வருகின்றனர். 


இது இந்தியாவை ஒரு மிகப்பெரிய அழிவை நோக்கித் தள்ளும் என்பதே உண்மை. இன்னும் கல்வி முழுமையாக கிடைத்திடாத நிலையில் இருக்கும் இந்தியாவின் பாமரர்களுக்கு - இது என்னவென்றே புரியாது. கல்வி கற்றவர்களுக்கே புரியாத பல உண்டு.


படித்தவர்கள் மத்தியில் இது குறித்த தெளிவும் விழிப்புணர்வும் மிக அவசியம். மதமும், மொழியும், இனமும் நம்மை நல்வழிப்படுத்தவே இருக்கின்றனவே தவிர, வன்முறைப் பாதைக்கோ அல்லது மற்றவர்களைத் துன்புறுத்துவதற்கோ அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். 


அதிகாரத்தில் இருப்பவர்கள் இத்தகைய கருத்துகளைப் பேசும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். ஆனால், இந்தியாவைப் பழைய சாதியக் கட்டுப்பாடுகளுக்குள் கொண்டு சென்று, மீண்டும் ஒரு சில ஆதிக்க சக்திகளின் கீழ் தள்ளுவதே இவர்களின் மறைமுக நோக்கமாக இருக்குமோ என்ற அச்சம் எழுகிறது. 


ஆங்கில ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுவிக்கிறோம் என நீதி தேவதையின் கண்களில் கட்டப்பட்டிருந்த கருப்புத் துணி நீக்கப்பட்டது. பார்வையில் ஏழை, பணக்காரன், சாதி, மதம் தெரியும் என்பதால் நீதிக்கு காதுகள் மட்டுமே என சிம்பாலிக்காக இருந்தது இப்போது பார்வையும் உண்டு என மாற்றப்பட்டது. கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி செய்தியைப் படித்துக் கொள்ளவும்.


https://www.ndtv.com/india-news/lady-of-justice-goddess-of-justice-with-new-justice-statue-in-supreme-court-a-law-is-not-blind-message-6803654


சமீபத்திய நீதிமன்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது அரசியல்வாதிகளைப் போல அப்சர்வேஷன்கள் என்ற நிலையில் பல கருத்துக்களை நீதிமன்றங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அக்கருத்துக்கள் வழக்காகி மீண்டும் தடையாணைகள் பெறப்படுகின்றன.


இந்த யதார்த்தத்தை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.