குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, November 21, 2023

ஆன்மீகம் என்றால் என்ன?

தெளிவான அறிவு பெற இருபது வருடங்கள் ஆகி விட்டன. அதற்குள் எத்தனை தவறான புரிதல்கள். அதனால் உண்டான இழப்புகள். இழந்தால் தான் பெற முடியும்.

வாழ்வின் மத்திய வயதில், மனிதர்களின் தேடல்கள் ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகம். இதை வைத்து தான் பல பிசினஸ் சாமியார்கள் கோடிகளாய் குவிக்கின்றார்கள். 

வேறு வழி பற்றி யாருக்கும் தெரியாது. 

யோகா நோய் தீர்க்கும் என்பார்கள். முயற்சித்துப் பார்ப்போம்.

மனம் நிம்மதி அடைந்தால் நோய் தீரும் என்பார்கள். டைனமோ தியானம் செய்வோம்.

நடந்தால் போதும் ஆரோக்கியமென்பார்கள் வியர்க்க வியர்க்க நடப்போம்.

பேலியோ டயட் என்பார்கள். 

காய்கறி மருத்துவம் என்பார்கள். 

காயகல்ப பயிற்சி என்பார்கள்.

சித்தா மருத்துவமென்பார்கள். 

ஆயுர்வேதம் மட்டுமே என்பார்கள். 

இல்லை இல்லை, இது அக்குபஞ்சர் மூலமே சரியாகும் என்பார்கள். 

அடடே, இது ஹோமியோ பதிக்கு மட்டுமே சரியாகும் என்பார்கள். 

இப்படி ஆரோக்கியத்தை மேம்படுத்த தேடல்கள் ஒருபுறம்.

அடுத்து குடும்ப பிரச்சினை.

மன நிம்மதி, திருமணம், பிள்ளைகள் பிரச்சினை, மாமியார் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை, கள்ளக்காதல்கள், குடிப் பிரச்சினை, மாமனார் பிரச்சினை, சொத்து விற்க முடியவில்லை, வீடு கட்ட முடியவில்லை, கடனாகி விட்டது என பல பிரச்சினைகள்.

ஜோதிடம் வந்து விடும்.

ஒன்றாமிடத்து அதிபதி நான்காமிடத்தினைப் பார்ப்பதால் வரும் கிரகக் கோளாறு. பரிகாரம் செய்தால் போதும். உடனடியாக கோவில் பயணம். அது இல்லைங்க இது கர்ம வினை, அனுபவித்துதான் ஆக வேண்டும். என்ன கொஞ்சம் எளிதில் கடக்கலாம். அந்தக் கோவிலுக்குச் சென்று வாருங்கள் சரியாகி விடும்.

எல்லாம் பார்த்தாச்சு. சரியாச்சா? இன்னும் இல்லைங்க.

கடவுளே என்னைக் கைவிட்டு விட்டாயே என்று புலம்பல்.

கடவுள் எப்போ கையைப் பிடிச்சாரு கையை விட. 

ஆனாலும் புலம்பல்.

ஆக்சுவலா யாரும் எந்தப் பிரச்சினையையும் சரி செய்வதில்லை. 

அவரவர் தான் சரி செய்து கொள்கிறார்கள். சமாதானமாகிறார்கள். அடங்கிப் போகிறார்கள். விதியேன்னு வாழப் பழகிக் கொள்கிறார்கள்.

இதுதான் எதார்த்தம். 

இதற்குள் எத்தனை ஜோசியம், கோவில்கள், செலவுகள், இழப்புகள்.

இந்த அறிவு வரும் போது வயது போய் இருக்கும்.

மறுபடியும் மனசு இதான் விதி என்று முனங்கலோடு புலம்பும்.

ஹோமம் செய்கிறவர்களுக்கு லாபம் - பிரச்சினை தீர வேண்டுபவனுக்கு மனப்பிராந்தி. 

இந்த பிராந்தி தெளிவற்ற மனதில் எப்போதுமே ஒட்டிக் கொள்ளும். 

சாராயம் பிராந்தி அயிட்டங்கள் உடம்பு நோகுதுன்னா விட்டு விடலாம். 

ஆனால் மனப்பிராந்தி செத்தா தான் போகும். அப்படி ஒரு போதைப் பிராந்தி அது.

அது பாட்டுக்கு சிந்திக்கும். ஒன்னோடு ஒன்னு முடிச்சு போடும். அழும். கதறும். சிரிக்கும். இப்படி பாடாய் படுத்தும்.

இந்தப் பிராந்தியை எப்படி விடுவது? 

தியானம்? யோகா? 

மண்ணாங்கட்டி. 

ஒரு எழவும் நடக்காது. 

அதுக்கு வழி இருக்கா? இருக்கு. 

ஒவ்வொருவருக்கும் ஒரு வழி உண்டு. 

நீங்களே கண்டுபிடிங்க.

மனப்பிராந்தி போய்டுச்சுன்னா, ஆன்மீகமே இல்லை. 

செத்தசவமாய் இருன்னா, சவத்து மேல தியானம் பண்ணும் பயித்தியக்காரத்தனம் ஆன்மீகம் என்றால் நம்பிக் கொள்வதில் பிராந்திக்கு எப்போதும் பிரச்சினை இல்லை. 

அதாங்க மனப்பிராந்திக்கு.





Thanks to Artist Mr.Himansu Srivatsava and Photo Providers


Thursday, September 28, 2023

நிலம் (112) - கோவை விளாங்குறிச்சியில் அதிமுக எம் எல் ஏ ஜெயராமன் மற்றும் பிஜேபி பாலாஜி ஆகியோரால் ஆக்கிரமிக்கப்பட்ட 45.82 ஏக்கர் அரசு நிலம் மீட்பு

அனைவருக்கும் வணக்கம். பணிச்சுமை காரணமாக தொடர்ந்து எழுத இயலவில்லை. 

ஆனால் இன்று இந்த விஷயத்தை உங்களுக்குத் தெரிவித்தே ஆக வேண்டிய கட்டாயம். ஏனெனில் உங்கள் உழைப்பினை திருட ஒரு கூட்டம் தயார் நிலையில் எப்போதும் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம். அதனால் இந்த பதிவினை எழுதியுள்ளேன். நிலம் பற்றி நூற்றிப் பதினோறு தலைப்புகளில் எழுதப்பட்டிருப்பதைப் படித்தாலே ஓரளவு புரிந்து கொள்ளலாம். இந்தப் பதிவினை முழுமையான தகவல்களுடன் எழுதியுள்ளேன். படித்துப் பயன் பெறுக. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தேவை எனில் அழைக்கவும். 

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியை தி இந்துவில் படித்தேன். இது நடக்கும் என முன்பே தெரியும்.

கோவை விளாங்குறிச்சியில் சீலிங்க் பூமி உள்ளது எனக்கு தெரியம். தவல்கள் என்னிடம் உள்ளது. இந்த பூமி அரசுக்குச் சொந்தமானது.

முறைகேடாக இந்த பூமியில் லேயவுட் போடப்பட்டு, அப்ரூவல் கொடுக்கப்பட்டு, பலரும் வாங்கி வீடுகள் கட்டினார்கள். பல நண்பர்களிடம் சொன்ன போது எவரும் கேட்பதாக இல்லை. பின்னர் எப்படி மனை அப்ரூவல்  கிடைக்கும் என்றெல்லாம் சட்டம் பேசினார்கள். 

தற்போது அதிமுக எம்.எல்.ஏவாக இருக்கும் ஜெயராமன் அவர்களால் லேயவுட் போடப்பட்டு இந்த சீலிங்க் நிலங்கள் விற்கப்பட்டன. இந்த இடத்தில் தற்போது கோவை மாவட்ட பிஜேபி கட்சி தலைவராக இருக்கும் பாலாஜி அவர்களுக்கு இடமுள்ளது என செய்திகள் சொல்கின்றன.

சுமார் 45.82 ஏக்கர் நிலங்கள், இதன் மதிப்பு ரூ.229 கோடி மதிப்புள்ள நிலங்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, கோயம்புத்தூர் நிர்வாகம் மீட்டெடுத்து உள்ளது. 

இனி வழக்குகள், மேல்முறையீடுகள் என்றெல்லாம் நடந்தாலும், அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது என்பது உண்மை.

செய்தி கீழே. படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


மேல்முறையீட்டு வழக்கு எண் : WP.29221/2018

தீர்ப்பு வழங்கிய தேதி : 07.09.2023, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணி

விளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள சர்வே எண்கள் : 444, 446, 447/1, 407/1, 407/2, 408,410, 369, 370 மற்றும் 375.

இதன் வார்டு எண் : 26, பிளாக் எண் 1, இதன் டவுன் சர்வே எண்களை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக இந்த வரைபடம் கீழே தருகிறேன். இதைப் போன்ற கிராம வரைபடங்கள், அதுமட்டுமின்றி ஆர்.எஸ்.ஆர் - கோவை மாவட்டம் முழுவதுமானதுக்கும், ஹவுசிங்க போர்டு நிலங்கள், சீலிங்க் பூமி விபரங்கள் அனைத்தும் உள்ளது. (லீகல் கட்டணம் தனி, இதர கட்டணங்கள் ஜி.எஸ்.டி வரி விதிப்புடன் தரப்படும்)



விளாங்குறிச்சி கிராம வரைபடத்தில் ஒரு பகுதி.

2016ம் ஆண்டு டிடிசிபி கோவை - 375 சர்வே எண் உள்ள இடத்திற்கு மனை அனுமதி வழங்கி இருக்கிறது. 



மேற்கண்ட உத்தரவுகள் ரெரா இணையத்தளத்திலும் கிடைக்கின்றன. கீழே இருக்கும் இணைப்பில் படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ரெராவில் அப்ரூவல் கொடுக்கப்பட்டு விட்டால், கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம் எனப் பலரும் பெருமை பேசிக் கொண்டிருப்பார்கள். 



படித்து விட்டீர்களா? டிடிசிபி அனுமதி வழங்கும் போதே எனக்கும் நிலப் பிரச்சினைக்கும் தொடர்பில்லை என்பது  போலத்தான் அனுமதி தருவார்கள். அதே போல ரெரா விதிகளும் அதைத் தான் சொல்கின்றன. 

சரி, இனி தீர்ப்பினைப் படிக்கவும்.









இனி என்ன ஆகும்? மேல்முறையீடு செய்யப்படும். 

அரசுக்கு வேறு இடம் ஒதுக்கிக் கொடுக்கலாம் என்றுச் சொல்வார்கள். ரூ229 கோடி மதிப்பு நிலங்களை அரசுக்கு கொடுக்க வேண்டும். 

இந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் இடம் வாங்கியவர்களின் நிலையும், இந்தக் கட்டிடத்திற்கு கடன் அளித்த வங்கியின் பணமும் போயே போச்சு.

அதுமட்டுமின்றி இன்னும் பல பிரச்சினைகள் இனி வரவுள்ளன. 

ஆகவே நண்பர்களே, நல்ல லீகல் அட்வைசரிடம் கருத்துரு பெறுங்கள் இடம் வாங்குவதற்கு முன்பே. தொடர்புக்கு அழைக்கவும் : 960057755

Monday, July 24, 2023

சுவாமி ஆத்மானந்தர் - அஞ்சலி


1997ம் வருடம் கரூர் சுப்ரமணியம் அவர்கள் சுவாமி ஆத்மானந்தர் அவர்களிடம் என்னைச் சேர்ப்பித்தார். அன்றிலிருந்து 2001 வரை கரூர் ராமகிருஷ்ணர் ஆஸ்ரமத்தில் இருந்தேன். கணிணி ஆசிரியராகவும், இரண்டு கல்லூரிகளுக்கு கணிணி அசெம்பிளிங், சாஃப்ட்வேர் இன்ஸ்டாலேசன், நெட்வொர்க்கிங் வேலைகளை நானொருவனாகவே செய்து வந்தேன். சம்பளம் ஏதுமின்றி.

கல்லூரிகளுக்கு தேவையான கம்யூட்டர்கள் பாகங்களை சென்னை சென்று ரிச்சி ஸ்ட்ரீட்டில் வாங்கி வந்து அசெம்பிள் செய்து, ஆபரேட்டிங்க் சிஸ்டம், இன்னபிற சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து, அவைகளை நெட்வொர்க்கிங்கில் இணைப்பது, பிரிண்டர்கள் போன்றவைகள் வாங்க சுவாமியுடன் சென்னைக்குச் செல்வது என எப்போதும் வேலையாக இருப்பேன். மாலை வேலைகளில் சுமார் இரண்டு மணி நேரமாவது சுவாமிகளுடன் தனிமையில் பேசிக் கொண்டிருப்பது வாடிக்கை. தினமணிக்கு பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். அடியேன் தான் டைப் செய்து கொடுப்பேன். தினமணி ஆசிரியர் வைத்திய நாதனுடன் அவருக்கு நல்ல நட்பு இருந்தது.

அவர் பெரிய படிப்பாளி. எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். அவருக்குப் பிடித்த புத்தகம் தாயுமானசுவாமிகள் பாடல்கள். ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதோ ஒரு தாயுமான சுவாமிகள் பாடலைப் பற்றி விவரிப்பார். அப்போதெல்லாம் எனக்கு ஒன்றும் புரியாது. கேட்டுக் கொண்டிருப்பேன். இப்போது அடியேன் தாயுமான சுவாமிகள் எழுதிய பராபரக் கண்ணிக்கு விளக்க உரை எழுதிக் கொண்டிருக்கிறேன். இரு வரிகளுக்கான அர்த்தத்தை எழுதுவதற்குள் பெரும்பாடாக இருக்கிறது.

பரநாட்டத்தைப் பற்றியே பெரிதும் பேசுவார். ஆஸ்ரமத்தில் இருந்த போது பகவான் ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றினை எனக்குச் சொல்லிக் கொண்டே இருப்பார். அப்போது அது ஏதோ ஒரு கதை என்பது போலவே இருந்தது. இப்போது என்னால் தொடர்ந்து நான்கு பக்கங்கள் படிக்கமுடியவில்லை. மனது ஒன்றி விடுகிறது. தொடர்ந்து படிக்க இயலவில்லை. கண்ணீர் பெருகி விடுகிறது. பகவானின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவ்வளவு அர்த்தம் பொதிந்தவை. ஆன்றோர்கள், சான்றோர்கள், மகாபுருடர்களின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம் காலத்தினால் மட்டுமே கிடைக்கும். 

எனக்குத் தெரிந்து சுவாமி ஆத்மானந்தர் அவர்கள், சுமார் 3000 பிள்ளைகளுக்கு மேல் இலவசமாக உடையும், உணவும் கொடுத்து படிக்க வைத்திருக்கிறார். பெண் பிள்ளைகள் அனேகம். தாயைப் போல அவர்களைக் கவனித்துக் கொண்டார்.

எத்தனையோ பேர்கள் அவரிடம் பொருளுதவி பெற்றிருக்கிறார்கள். எத்தனையோ நபர்கள் அவரிடமிருந்து ஏமாற்றி பெரும் பொருளைத்திருடி இருக்கிறார்கள். நான் அங்கிருந்த காலத்தில் அத்தனைக்கும் சாட்சியாக இருந்திருக்கிறேன். ஆச்சரியம் என்னவென்றால் இது எதுவும அவரைப் பாதிப்பதே இல்லை. 

கரூர் ஆஸ்ரமத்தையும், சாரதா நிகேதன் கல்லூரியையும் திருப்பராய்த்துறை தபோவனம் அவரிடமிருந்து பிடிங்கிக் கொண்டது. அது அதர்மம் தான் என்னளவில். 

கரூர் சாரதா நிகேதன் கல்லூரியின் முன்பு இருக்கும் விவேகானந்தர் சிலை அமைக்கும் போது நான் அங்கிருந்தேன். அந்த மண்டபத்தில் இருக்கும் ஷாண்ட்லியர் ஒரு லட்ச ரூபாய். நான் தான் சென்னைக்குச் சென்று வாங்கி வந்தேன். கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் சிலையை உருவாக்கியவரே இந்தச் சிலையினையும் உருவாக்கினார். சுவாமிக்கு நிரம்பவும் பிடித்த இடம் அது. காலம் அவரை அங்கு இருக்கவிடவில்லை. 

காரைக்குடி அமராவதிபுதூரில் சாரதா சேவாஸ்ரமத்தின் அருகில் பெண்கள் கல்லூரியினை உருவாக்கினார். கல்லூரி கட்டடம் வேலை செய்து கொண்டிருந்த போது, இஞ்சினியருக்கு பணம் கொடுக்கச் செல்லும் போது நானும் சுவாமியுடன் செல்வதுண்டு, அவருடன் அவரது அறையிலேயே தங்கிக் கொள்வேன். கல்லூரி கட்டி முடித்தவுடன் 50 கம்யூட்டர்கள் உருவாக்கி லேப் செட்டப் செய்து கொடுத்தேன்.  

கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமம் அவரை விட்டுச் சென்ற பிறகு சேலத்தில் பெண்கள் கல்லூரியினை உருவாக்கினார். அங்கு சுவாமி நித்தியானந்தருடன் பிரச்சினை ஏற்பட்டு, கல்லூரி இன்னும் பெரிதாக வளரவில்லை.  தஞ்சாவூர் பால்சாமி மடம், கோவை குங்குமப்பாளையம் பள்ளி, சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் பின்னால் இருந்த ராமகிருஷ்ண ஆஸ்ரமம் ஆகியவை என்ன ஆனதோ தெரியவில்லை. தஞ்சாவூர் பால்சாமி மடத்தின் இருந்த நிலத்தில் விவசாயம் செய்து, அங்கிருந்து தான் அரிசி வரும். 

கோவை பள்ளப்பாளையம் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்துக்கு நானும் அவருடன் வருவதுண்டு. அவர் பிறந்த ஊர். பல ஊர்க்கதைகளை காரில் வரும் போது என்னுடன் பகிர்ந்து கொள்வார். காண்டசா கிளாசிக் கார் - பதிவெண் 1011 என்று நினைவு, அக்காரில் அவருடன் அதிக நேரம் பயணம் செய்திருக்கிறேன். 

அவருக்கு சென்னை ராமகிருஷ்ண மடத்துடன் நல்ல தொடர்பு இருந்தது. ராம நாதபுரத்தில் சுவாமி விவேகாந்தர் மன்னருடன் சந்தித்ததன் காரணமாக, அங்கு ராமகிருஷ்ணர் மடத்தை உருவாக்கி, அதனை ராமகிருஷ்ண மடத்திடம் ஒப்படைத்தார். அந்தளவுக்கு அவர் சுவாமி விவேகானந்தரின் மீது பக்தி கொண்டிருந்தார். 




ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தை கட்டி பேலூர் மத்திடம் ஒப்படைத்த போது பேசியது மேலே இருக்கும் வீடியோ

ஆன்றோர்களின் வார்த்தைகள் வீண் போவதில்லை என்பதற்கு இந்த மடம் ஒரு உதாரணம். சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளுக்கு எத்தனையோ ஆண்டுகாலம் சென்ற பிறகு வடிவம் பெற்றிருக்கிறது சுவாமி ஆத்மானந்தர் அவர்களால். ஆனால் கொடுமை என்னவென்றால் இந்த மடத்தின் இணைய தளத்தில் சுவாமிகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை.  இந்த வீடியோ மட்டும் இருக்கிறது.

சமீபத்தில் வீட்டுக்கு வருகை தந்தார். என் படுக்கையில் தான் படுப்பேன் எனச் சொல்லி படுத்து உறங்கினார். என் பையன் கார் ஓட்டனும் எனக்கு என்று கேட்டுக் கொண்டார். அவரை அருகில் வைத்து கார் ஓட்டி வந்தான் ரித்திக் நந்தா. அவரின் நினைவாக மகனின் பெயருடன் நந்தா இணைந்தது. அவருக்குப் பிடித்த நிவேதிதை பெயர் தான் என் மகளுக்கு வைத்திருக்கிறேன்.

அவரின் நண்பர்கள் மருத்துவமனையில் இருந்த போது என்னைப் பற்றிப் பேசும் போது, என் மகள் நிவேதிதா பெயரைச் சொல்லி, அவளின் அப்பா என்று சொல்வாராம். அவரின் சீடர் கோவைப்புதூர் ரங்கநாதன் அவர்கள் அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார்.  

சுவாமிகளின் சீடர் மருத்துவர் ஜெகன்நாதன் அவர்கள் அவரை நன்றாக கவனித்துக் கொண்டார். இரண்டொரு மாதங்களாக சுவாமிகள் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டார். நான் அவரைக் கடைசியாகச் சந்தித்த போது கூட என் கையை இருகப் பற்றிக் கொண்டு, முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் சாப்பிடுமாறு வேண்டினேன். கேட்கவே இல்லை. பர உலகை நாடிச் சென்று விட்டார்.

அவரால் வாழ்ந்தவர் கொஞ்ச நஞ்சமல்ல. அவரால் பயன் பெற்றவர் அனேகம். அவர் கடைசி வரை என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வார்த்தைகளுக்கு ஒப்பவே வாழ்ந்து வந்தார். 

https://www.amritapuri.org/5747/04karur.aum

மாதா அமிர்ந்தானந்த மயி அவர்கள் சாரதா கல்லூரிக்கு வருகை தந்த போது

ஒரு மாலை நேரம். கரூர் ஆஸ்ரமத்தில் இருந்த அவரது அறைக்குள் நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம் தனிமையில். படுக்கை அறைக்குள் சென்று காக்கி நிறத்தில் கிழிந்து போன அட்டை போட்ட ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். 

முருகானந்தம் என்ற அவரை சுவாமி ஆத்மானந்தர் ஆக மாற்றிய அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அன்றிரவு தூங்காமல் படித்து முடித்தேன். காலையில் அவரிடம் சென்று காலில் விழுந்து நமஸ்கரித்தேன். அந்தப் புத்தகத்தின் பெயர் “வாழ்க்கையில் வெற்றி” - அப்துற் றஹீம் எழுதியது.

என்னைப் பொறுத்தவர் சுவாமி விவேகானந்தர் தான் சுவாமி ஆத்மானந்தர் உருவெடுத்து நம்மிடையே வாழ்ந்து சென்றிருக்கிறார்.

* * *

சுவாமி ஆத்மானந்தர் தீட்சை வழங்கி, அவரது நேரடி சீடர்கள் அறுவர். இவர்களில் சொரூபானந்தர், பசுபதீஸ்வரானந்தர், பக்திரூபானந்தர் மற்றும் ஹரிசேசவானந்தர் ஆகியோர் காலமாகி விட்டனர். 

சுவாமி ஞானேஸ்வரானந்தர், சுவாமி யோகேஸ்வரானந்தர் மற்றும் மாதா சிவ ஞானப்பிரியம்பா பெண் துறவி ஆகியோரின் சீரிய மேற்பார்வையில் சுவாமிகளால் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் என நம்புகிறேன்.  இந்த நிறுவனங்கள் லாப நோக்கமின்றி மக்களுக்கு தொடர் பணியைச் செய்யும் எனவும் நம்புகிறேன்.



Monday, June 12, 2023

நிலம் (111) - அனுமதியற்ற மனைப்பிரிவு வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

அரசு, பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள், நீதிபதிகள், காவல்துறையினர், நுகர்வோர் மன்றங்கள் இப்படி எல்லாமும் இருக்கின்றன. இருந்தும் என்ன பயன்? 

மக்களை ஏமாற்றுபவர்கள் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். பஞ்சாயத்து போர்டு தலைவர்களால் ஏமாற்றப்பட்ட மக்கள் இன்னும் சாட்சிகளாய் இருக்கிறார்கள். ஆனால் அரசோ, நீதிமன்றமோ எதுவும் செய்யவில்லை. வேடிக்கை பார்ப்பது மட்டுமில்லை, ஏமாற்றப்பட்ட மக்களிடம் பணத்தைப் பிடுங்கும் வேலையை செய்கிறார்கள். 

அன் அப்ரூவ்டு மனைக்கு அனுமதி என்ற பெயரில் கோவையில் ஒரு சதுரடிக்கு எட்டு ரூபாய் லஞ்சம் வாங்கினார்கள் அரசியல்வியாதிகளுடன் அரசு அலுவலர்களும். தனி இணையதளம், அதற்கு கட்டணம் என அதிமுக அரசு மக்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கியது. அன் அப்ரூவ்டு மனைக்கு பதிவுக் கட்டணம் வேறு வாங்கிக் கொண்டு பதிவு செய்து கொடுத்தார்கள் துணைப்பதிவு அலுவலர்கள். சட்டத்துக்குப் புறம்பான செயலை அனைவரும் மனக் கூச்சமின்றிச் செய்தார்கள்.

பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு,  வீட்டு மனை அனுமதி வழங்கப்பட்டதாகப் பொய் சொல்லி ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளை அடித்தவர்களுக்கு எந்தத்தண்டனையும் இல்லை. பத்திரப்பதிவு செய்து கொடுத்தவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. ஆனால் ஏமாந்தவர்களுக்கு மட்டும் தண்டனையோ தண்டனை. ஏன்? 

கேட்க எவருமில்லாதவர்களாக,  நாதியற்றவர்களாக, அறிவற்றவர்களாக ஏழை மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கண் முன்னே நடக்கும் அக்கிரங்களை கண்டும் காணாதது போல உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரவருக்கு அவரவர் பிரச்சினை. இதில் பிறரின் பிரச்சினையை எங்கணம் பார்ப்பது? தற்போதைய உலகத்தின் தன்மை தான், தன் நன்மை என்பதாய் மாறி விட்டது. 

மின்சாரத்துறை அன் அப்ரூவ்ட் மனைகளுக்கான மின் இணைப்பைத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. இதோ ஒரு கடிதம்.

மனை விற்றவர்கள், மனைக்கு அனுமதி கொடுத்து விட்டதாய் சொன்ன பிரசிடெண்டுகள், மனையைப் பதிவு செய்து கொடுத்த பதிவாளர்கள், வரி போட்ட பஞ்சாயத்து போர்டுகள், மின் இணைப்பு கொடுத்தோர் - இவர்கள் எல்லோரும் நல்லவர்கள்.

ஏமாந்தவர்கள் தீயவர்கள்!

வாழ்க இந்திய ஜனநாயகம்!



துணைவேந்தர்களா? அரசியல்வாதிகளா? யார் நீங்கள்?

இன்றைய 12.06.2023 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஆளுநர் ரவிவும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் தனித்தனியாக துணை வேந்தர்களுடனான மீட்டிங்கை நடத்தியதாகவும், பங்கு பெற்ற துணை வேந்தர்கள் யார் சொல்வதைக் கேட்பது என்று புரியாமல் திணறுவதாகவும் செய்தி வெளியாகி இருந்தது.  தலைப்பு என்ன தெரியுமா? யார் உங்கள் பாஸ்? 


உச்ச நீதிமன்றம் தெளிவாக ஆளுநரின் பணி என்ன என்பது பற்றித் தெளிவாக விளக்கி உள்ளது. துணை வேந்தர்கள் அச்செய்தியைப் படித்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஆளுநர் என்பவர் ஐந்தாண்டு காலத்துக்கு ஒரு முறை மாற்றப்படுவார். 

ஆளுநர் ரவி தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடக்கூடாது என்ற பிஜேபியின் கொள்கையை செயல்படுத்தி வருபவர் என்றும் அனைவருக்கும் தெரியும். முடிந்தால் கலவரத்தையே உருவாக்கும் அளவுக்கு அவர் செல்வார் என்பதை அவரது கடந்த கால செயல்பாடுகள் மூலம் நாம் அறிந்திருக்கிறோம். இதுவெல்லாம் தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் கல்வியாளர்களுக்குத் தெரியாத ஒன்றா?

தேசியக் கல்வித் திட்டமானது ஒரே தேசம், ஒரே கல்வி என்ற நிலையை நோக்கி நகர்த்தும் அயோக்கியத்தனம் என்பது இவர்களுக்குத் தெரியாதா? மொழி வழி மாநிலங்களின் கூட்டாட்சியான இந்தியாவில் எப்படி ஒரே கல்வி சாத்தியமாகும் என்று கல்வியாளர்களான துணை வேந்தர்களுக்குப் புரியாத ஒன்றா?

இந்தியா என்பது யூனியன் ஆஃப் இந்தியா என்று கூட தெரியாத அளவிற்கா துணை வேந்தர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமே?

எது சரி? எது தவறு என்று புரியாத நிலையில் இருப்பவர்கள் ஏன் அந்தப் பதவியில் இருக்க வேண்டும்? வெளியே சென்று விடுங்கள்.

புனிதமான கல்விப் பணியில் இருக்கும் ஆசிரியர்களான இவர்கள் தங்கள் அறிவு கொண்டு தமிழ் நாட்டுக்கு எது நன்மை என ஆட்சியாளர்கள் சொல்வதை கேட்காமல், கை கால்களை ஆட்டும் பொம்மை என்கிற நிலையில் இருக்கும் ஆளுநர் ரவியின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? 

ஆளுநர் ரவியா உங்களுக்கு சம்பளம் தருகிறார்? அவருக்கும் சேர்த்து தமிழர்கள் தான் தண்டம் அழுகிறார்கள். சோறு போடும் தமிழர்களுக்கு துரோகம் ஒன்றே தொழிலாய் வைத்திருக்கும் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மண்ணுளிப் பாம்பாய் கிடப்பது ஏனோ? வெட்கமாக இல்லையா உங்களுக்கெல்லாம்? 

ஒரு கவளம் சோற்றினை எடுத்து உண்ணும் போது உங்களுக்குத் தெரியாதா இது சுப்பனும் குப்பனும் நமக்கு உழைத்துக் கொடுக்கும் வரிப்பணம் என்று? 

தமிழ்நாட்டு மக்கள் ரவியையா தேர்ந்தெடுத்தார்கள் ஆட்சி செய்ய? கொஞ்சமேனும் அறிவு இருப்பவர்கள் ஆளுநர் ரவியின் பேச்சினைக் கேட்பார்களா? எங்கள் அரசு என்ன செய்யச் சொல்கிறதோ அதைத் தான் செய்வோம் என்று சொல்லாமல், வாய் மூடி மவுனமாக இருந்தால் நீங்கள் துணை வேந்தர் அல்ல அரசியல்வாதிகள் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள்.

நீங்கள் அரசியல் செய்ய வேண்டுமெனில், பதவியை ராஜினாமா செய்து விட்டு, ரவியின் கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். துணை வேந்தர்களாக தமிழ் நாட்டு மக்கள் வேறு நபர்களை நியமித்துக் கொள்வார்கள்.

ஆளுநர் ரவி நாளை சென்று விடுவார். ஆனால் நீங்கள் தமிழ் நாட்டில் தான் வாழணும் என்பதை மறந்து போனீர்களா? தேசியக் கல்விக் கொள்கையை கொண்டு வந்த பிரதமர் மோடியும், பிஜேபி அரசும் நிரந்தரமானவர்கள் அல்ல. காங்கிரஸுக்கு ஏற்பட்ட நிலை, நாளை பிஜேபிக்கும் ஏற்படும். 

ஆகவே கல்வியாளர்களான நீங்கள் அரசியல்வாதிகளா? இல்லையா? என்பதினை மக்கள் மன்றத்துக்கு தெரியப்படுத்துங்கள். தமிழ் நாடு அரசு பெரும்பான்மை தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. ஆட்சிக்கு எதிராக ஆளுநர் ரவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, வாளாயிருப்பதாயிருந்தால் கல்வி நிலையங்களை விட்டு வெளியேறுங்கள். இல்லையெனில் மக்கள் உங்களை வெளியேற்றும் சூழல் உண்டாகும் என்பதை வருத்ததோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, May 28, 2023

நிலம் (110) - அடுக்குமாடி குடியிருப்பு டிரான்ஸ்ஃப்ர் கட்டணம் வசூலிக்க கூடாது

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அவர்களின் முன்பு விசாரணைக்கு வந்த மேல்முறையீட்டு மனு WP 27155/2016 மீது விசாரணை செய்து ஒரு அக்மார்க் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் துவக்கப்படும் சொசைட்டிகள் தன் இஸ்டத்துக்கு விதிகளை வகுத்துக் கொண்டு, வீட்டின் உரிமையாளர்களிடமிருந்து, வாடகைக்கு இருப்பவர்களிடமிருந்தும் கொள்ளை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். எனக்கும் அனுபவம் உண்டு. கொரானா காலத்தில் வெளியிலிருந்து யாரும் வரக்கூடாது என்று அனுமதி மறுத்தார்கள். நான்கு மாதம் பூட்டிக் கிடந்த வீட்டுக்கு தண்ணீர் கட்டணம் என லம்பாக கட்டணம் கேட்டார்கள். ஒவ்வொரு சொசைட்டியில் இருக்கும் ஆட்கள் ஹிட்லர் போல நடந்துகொண்டிருக்கிறார்கள்.

அடியேன் தான் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு சொசைட்டி ஆளை டீல் செய்தேன். அதன் பிறகு என் வழிக்கே வராமல் வேறு ஆட்களை வைத்து சகல அயோக்கியத்தனத்தையும் செய்தான். அதற்கும் ஒரு ஏற்பாடு செய்த பின்னால் தான் அடங்கினார்கள்.

இனி அந்த தீர்ப்பைப் பார்க்கலாம்.

கீழ்ப்பாக்கத்தில், 'அங்கூர் கிராண்ட்' அடுக்குமாடி குடியிருப்பில் 60 வீடுகள் உள்ளன. குடியிருப்புகளின் பராமரிப்புக்காக, சதுர அடிக்கு 25 ரூபாய் என, உரிமையாளர்களிடம் இருந்து தொகுப்பு நிதியை, குடியிருப்பு சங்கம் வசூலித்தது. பின் தொகுப்பு நிதியை, சதுர அடிக்கு 50 ரூபாய் என்ற அடிப்படையில் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த குடியிருப்பில் இருந்து ஒரு வீட்டை, ரோஷினி என்பவர் வாங்கினார். டிரான்ஸ்பர் கட்டணமாக 1.47 லட்சம் ரூபாயை சங்கத்துக்கு செலுத்தினார். ஆசிஷ் தவே என்பவர், மற்றொரு வீட்டை வாங்கினார். டிரான்ஸ்பர் கட்டணம் செலுத்தும்படி சங்கம் கேட்க, அவர் செலுத்தவில்லை. இதையடுத்து, டிரான்ஸ்பர் கட்டணத்தை திருப்பித் தர சங்கத்துக்கு உத்தரவிடவும், டிரான்ஸ்பர் கட்டணம் கோர வழிவகுத்த துணை விதியை எதிர்த்தும், மாவட்ட பதிவாளரிடம் ரோஷினி முறையிட்டார். சங்க விதி செல்லாது என்றும், டிரான்ஸ்பர் கட்டணத்தை திருப்பி வழங்கவும் மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் 'அங்கூர் கிராண்ட்' அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒவ்வொரு வீட்டின் மறு விற்பனைக்கும், டிரான்ஸ்பர் கட்டணத்தை குடியிருப்பு சங்கம் வசூலிக்கும் என்றால், பலமுறை கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு டிரான்ஸ்பர் கட்டணம் வசூலிப்பது, அனுமதிக்கத்தக்கது அல்ல. எந்த சட்ட விதிகளும் இல்லாத நிலையில், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம், டிரான்ஸ்பர் கட்டணத்தை வசூலிக்க முடியாது. வீட்டை விற்கும்போது, பராமரிப்பு கட்டணம் என்ற போர்வையில், டிரான்ஸ்பர் கட்டணத்தை சங்கம் விதிக்க முடியாது. குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம், லாபம் ஈட்டும் சங்கம் அல்ல. உரிமையாளர்கள், வீடுகளில் வசிப்பவர்களிடம் இருந்து, விகிதாச்சார அடிப்படையில் பராமரிப்பு தொகை வசூலிக்கலாம். இருவருக்கு இடையே நடக்கும் வீடு விற்பனைக்கும், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. வீட்டின் உரிமையாளர், தன் சொத்தை யாருக்கும் விற்க உரிமை உள்ளது. அதில் சங்கம் தலையிட முடியாது. வீடு பராமரிப்புக்கான கட்டணத்தை மட்டுமே சங்கம் கோரலாம். சதுர அடி அடிப்படையில் டிரான்ஸ்பர் கட்டணம் விதிப்பதற்கு, சட்டத்தில் இடமில்லை. அவ்வாறு வசூலிப்பது, சட்டவிரோதமானது. எனவே, நான்கு வாரங்களில் டிரான்ஸ்பர் கட்டணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். மாவட்ட பதிவாளரின் உத்தரவு, சட்டத்துக்கு உட்பட்டது தான். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவு இட்டார்.

அதாவது அடுக்குமாடி குடியிருப்பை வாங்குபவர் சங்கத்துக்கு டிரான்ஸ்பர் கட்டணம் செலுத்த வேண்டுமாம். இது சங்க விதியாம். 

ஏற்கனவே சம்பாதித்த காசுக்கு அரசுக்கு வரி கட்டணும். அடுத்து அரசுக்கு விற்பனைப் பதிவுக்கட்டணம் கட்ட வேண்டும். இது போதாது என்ற சொசைட்டி என்ற பெயரில் கொள்ளை அடிக்க இப்படி ஒரு வசூல் நடந்து கொண்டிருக்கிறது பல அடுக்குமாடி குடியிருப்புகளில்.

இனி எந்தச் சங்கத்துக்கும் எவரும் டிரான்ஸ்பர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தீர்ப்பு கீழே இருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கீழ்தரமான பத்திரிக்கை தினமணி - ஆதாரம் இதோ

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சோஷியல் மீடியாக்களில் திமுக பற்றிய போலிச் செய்திகள், மீம்ஸ்கள், ஃபேஸ்புக் பதிவுகள் என பச்சைப் பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில ஈனத்தனமாக அரசியல் செய்யும், இன்ஸ்டண்ட் அரசியல்வியாதிகள் பொறுப்பிற்கு வந்தால், தனது புத்தி எதுவோ அதே போலத்தான் அவர்களும் நடந்து கொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

ஆனால் நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் உப்பைத் தின்று கொழுத்துக் கொண்டிருக்கும் தினமணி ஆசிரியரும், அவர் குடும்பத்தாரும், கொஞ்சம் கூட வெட்கமின்றி செய்திகளை போலியாகப் புகுத்தி தற்போது வெளியிட்டு வருவதைப் பாருங்கள். ஏற்கனவே தினமணியின் கதி அதோகதியாகக் கிடக்கிறது.

சமீபத்தில் ஏர்போர்ட் சென்றிருந்த போது, அங்கு தினமலர் பத்திரிக்கை படிக்க கிடைக்கிறது. இதர பத்திரிக்கைகளைக் காணவில்லை. ஒவ்வொரு ஏர்போர்ட்டுக்கும் தமிழ் பத்திரிக்கைகள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்ற கணக்குத் தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இதோ தினமணி செய்தியின் அயோக்கியத்தனத்தைப் பாரீர். 

மஞ்சள் வண்ணம் இட்டிருக்கும் பகுதியினையும், தலைப்பையும் படித்துப் பாருங்கள். தலைப்புக்கும் உள்ளே இருக்கும் செய்திக்கும் என்ன தொடர்பு இருக்கிறது எனப்பாருங்கள். எவ்வளவு கீழ்தரமான செய்தியை வெளியிடுகிறது என்று பாருங்கள்.



திமுக மீது இவ்வளவு வன்மம் கொண்டு, தமிழர்கள் ஆட்சியில் இருக்கவே கூடாது என்பதறகாக தினமலரும், தினமணியும் இப்படியான கேவலமான செய்திகளை வெளியிடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

தினமலரையும், தினமணி பத்திரிக்கையும் படிப்பதைத் தவிருங்கள். 

Thursday, May 18, 2023

நிலம் (109) - முதல் நிலை வாரிசுகள் தமிழ்நாடு அரசின் அப்டேட்

கோவை கொதிக்கிறது. ஒரு நல்ல ஜூஸ் கடை இல்லை. சொல்லி வைத்தாற்போல ஈக்கள். காசைக் கொடுத்து விஷம் குடிப்பது போல் ஆகிறது. இள நீரோ சூட்டில் வெந்து போய் கிடக்கிறது. இனிமேல் தான் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கிறது. என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை. ஆகவே கவனமாய் இருங்கள். 

2022ம் ஆண்டு தமிழ் நாடு அரசு முதல் நிலை வாரிசுகள் என்ற பட்டியலில் மாற்றங்கள் செய்திருக்கிறது. அதன் நகல்கள் கீழே இருக்கிறது. படித்துக் கொள்ளுங்கள். உபயோகமாய் இருக்கும்.

















Sunday, April 23, 2023

நிலம் (108 ) - முதல் நிலை இரண்டாம் நிலை வாரிசுகள் யார்?

துல்லியமான லீகல் ஒப்பீனியன் மற்றும் சர்வேக்கு அழைக்கவும். 

அனைவரும் சுகம்தானே...! 

எல்லோருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கொரானாவுக்கு பின்னால் மக்களின் மன நிலை முற்றிலுமாக மாறி விட்டது. பணத்துக்காக யாரை வேண்டுமானாலும் கழுத்தை அறுக்க வேண்டிய சூழல் இருந்தாலும் அறுக்கிறார்கள். மனசாட்சி, அறம் எல்லாம் காணாமல் போய் விட்டது.

பணம் கொடுத்தால் போதும், என்ன வேண்டுமானாலும் செய்ய பலர் துணிந்து விட்டனர். அவரவருக்கு அவரவர் சுகம் முக்கியம் என்று மாறி விட்டார்கள். இனி வரும் காலங்கள் நல்ல எண்ணமும், செயலும் கொண்டவர்களுக்கு மிகப் பெரிய சவலாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். 

கவனமாக இருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். காலம் எல்லாவற்றுக்கும் வித்தியாசமான தொனியில் ஹிட்லருக்கு கொடுத்தது போல கொடுத்தே தீரும் என்பதை மறந்து விட வேண்டாம்.

* * *

இனி தலைப்புக்கு போகலாமா?

எனக்குத் தெரிந்த ஒருவர் சமீபத்தில் லீகல் அட்வைசிங் தேவைக்காக அணுகினார். எனது கட்டணத்தை வங்கியில் செலுத்தி விட்டு, என்னைப் பார்க்க வந்தார். ஒரு இடம், பெரிய விலை. வக்கீல் கொடுத்த லீகல் ஒப்பீனியன் எல்லாம் ஓகே. அட்வான்ஸ் கொடுத்து விட்டார். கிரையத்துக்கு தேதியும் குறித்து விட்டார். ஆனால் அவருக்குள் ஏதோ ஒரு மன அழுத்தம் இருந்து கொண்டே இருந்ததாம். 

ஏதோ ஒரு நினைப்பில் நெட்டில் தேடிப்பார்த்துக் கொண்டிருந்தாராம். நமது பிளாக் கண்ணில் பட, மறுநாள் காலையில் நேரில் வந்து விட்டார். 

இறந்து போன ஒருவரின் சொத்து தொடர்பான உயில் ஏதும் இல்லாத பட்சத்தில் வாரிசு சான்றிதழை வைத்து தற்போது பட்டா மாற்றப்படுகிறது. இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, இந்து வாரிசுரிமை (தமிழ் நாடு திருத்தம்) சட்டம் 1989, இந்து வாரிசுரிமை (திருத்தம்) சட்டம் 2005 ஆகிய சட்டங்களின் படி இறந்து போன இந்து ஒருவரின் முதல் நிலை வாரிசுகள், இரண்டாம் நிலை வாரிகள் யார் என தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தற்போதைய தாசில்தார்கள், ஆர்.ஐக்கள், வி.ஏ.ஓக்கள் அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், சொத்துரிமையை முதல் நிலை வாரிசுகள் உயிருடன் உள்ள போதே, இரண்டாம் நிலை வாரிசுகளையும் சொத்துக்களின் பட்டாவில் சேர்த்து விடுகிறார்கள். இது தவறு. பெரும்பாலானாருக்கு இதைப் பற்றித் தெரியாது.

என்னை சந்திக்க வந்தவரின் ஆவணங்கள் வெகு தெளிவாக இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு பட்டா கொடுக்கப்பட்டு, பல்வேறு முறைகேடான ஆவணங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தேன். அவருக்கு நான் சொன்னது புரியவே இல்லை. பின்னர் சட்ட விதிகளைப் பற்றி விவரித்து, சட்டப்புத்தகத்தைக் காட்டியபின்பு தான் புரிந்து கொண்டார். அந்தளவுக்கு தமிழ் நாட்டில் பல்வேறு ஆவணக் குளறுபடிகள் நடக்கின்றன.

கிரையத்தை ரத்துச் செய்யப் போவதாகச் சொன்னார். நான் அதைத் தடுத்து, அதை எப்படிச் சரி செய்து கிரையம் பெறுவது என்ற வழியைச் சொல்லிக் கொடுத்தேன். அதன்படி சரி செய்து, ஒவ்வொரு ஆவணத்தையும் என்னிடம் சரி பார்த்து கிரையம் பெற்றார். சொத்தினை விற்றவர்கள் இவருக்கு நல் ஒத்துழைப்பு கொடுத்து இருக்கின்றனர் என்பது கூடுதல் விசேசம்.

சொத்துரிமை மாற்றம் செய்யப்படும் போது, வெகு கவனமாக சொத்தின் தன்மையை ஆராய வேண்டும்.

இந்து ஒருவர் இறந்து போனால், அவரின் சொத்தானது - அவர் ஏதும் ஆவணங்கள் எழுதி வைக்காத போது - அவரின் முதல் நிலை வாரிசுகளுக்கு மட்டுமே சேரும். முதல் நிலை வாரிசுகளில் எவரும் உயிருடன் இல்லாத போது மட்டுமே இரண்டாம் நிலை வாரிசுகளுக்குச் சேரும் என்பதை மறந்து விட வேண்டும்.

ஆனால் இறந்து போன இந்துவின் சொத்து அவருக்கு எப்படி வந்தது என்பது பற்றிய தெளிவான விபரம் வேண்டும்.

முதல் நிலை வாரிசுகள் யார் தெரியுமா?

மகன், மகள், மனைவி, தாய் - மற்றும் உறவுகளில் பலர் (தெரிந்து கொள்ள அழைக்கவும்)

இறந்து போன இந்து ஒருவருக்கு மேலே கண்ட மற்றும் இன்னும் சில வாரிசுகள் எவரும் இல்லாத போது மட்டுமே இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு பாகம் வரும்.

இரண்டாம் நிலை வாரிசுகள் யார் தெரியுமா?

தந்தை, தந்தை வழி சகோதரர், தந்த வழி சகோதரி மற்றும் பலர் (தெரிந்து கொள்ள அழைக்கவும்)

உங்களுக்காக ஒரு குறிப்பு : இந்த சட்டம் 39/2005 ஆல் இணைக்கப்பட்டது. 9.9.2005 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது.

மனம் போல வாழ்க....!


Sunday, April 9, 2023

நரலீலைகள் (15) - ராதே எங்கேயடி நீ!



ராதே....!

அலை மனத்தில் 

உன் பிம்பம்...!

ராவண தவத்தில்...!

வாக்கும் போனதடி...!

மனமும் செத்ததடி..!

செயலும் ஓய்ந்ததடி...!


ராதே...!

வாச மலர்கள் நகைக்கின்றன..!

வீசி வரும் தென்றல் அனலாய்...!

அருவிகளென புனலாடுகின்றன கண்கள்..!

வழிகிறது சொட்டுச் சொட்டாய் உயிரும் ...!


ராதே...!

காத்திருப்பதும் சுகமே..!

ஆனால்

காதல் காத்திருப்பதில்லை....!

ராதே....!


ராதே....!

மெல்லிய மாந்தளிர் சோலையிலே...!

உன்னை என் கைககள் சிறைப்பிடிக்க, 

உன் கூர்முலை என் மார்பைத் துளைக்க, 

கருமேகமென சூழ்ந்த குழலை கைகளால் இழுத்துப் பிடிக்க, 

நாணிச் சிவந்த உன் அதரங்கள் பற்களால் கடித்து, 

சட்டென்று துளிர்த்த ரத்தத் துளிகளை, 

உயிர் உறிஞ்சும் எமன் போல கன்னல் பிழிந்தாற் போல, 

அமுது அருந்த எப்போது என்னை அடையப் போகிறாய் ராதே..!


ராதே....!

வாடிய கொடி 

போல 

காற்றில் அசையும்

இடை கண்ட.! 

நிலம் கண்ட மீனாய்

துடிக்கத் துடிக்க....!

நொடி பூரணத்தை எப்போது

எனக்குத் தருவாய் ராதே....!


ஓடி வா....!  வீசு தென்றலென....!

உன்னைக் காணாமல்

உன்னுடன் முயங்காமல்...!

எப்படி நான்..

காணாக் கடவுளைக் காண?

சொட்டுச் சொட்டாய் உதிர்கிறேன்....!

அழைக்கிறது பிரபஞ்சம்...!

ஓடி வா ராதே....!

ஓடோடி வா.....!


கலவியற்ற காமத்திலே...!

அந்த ஒரு நொடியில்...!

உணர்வற்ற அற்புதத்தை

தரிசிக்க வேண்டுமடி....!

ஓடோடி வா....!


வெள்ளிங்கிரி மலை

அடிவாரத்திலே....!

சலனமற்ற ஓடையோரமாய்....!

சலனத்துடன் உனக்காய்

காத்திருக்கிறேன்....!


ஓடோடி வா.... ராதே....!




Tuesday, March 28, 2023

நிலம் (107) - நத்தம் நிலங்கள் அரசுக்கு சொந்தமில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நத்தம் நிலத்தினை அரசு உரிமை கொண்டாட முடியாது. அரசு என்றால் அரசு அமைப்புகள் எல்லாவற்றையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கார்ப்பொரேஷன் ஆகியவை எந்த நிலையிலும் நத்தம் நிலத்தில் வசிப்பவர்களை வெளியேறக்கோரி உத்தரவு இட முடியாது.

ஆனால் சமீப காலமாக, ஊராட்சி தலைவர்கள் பலர் முறைகேடாக, லஞ்சம் வாங்கும் வி.ஏ.ஓக்கள் மூலம் தொடர்பில்லாதவர்களின் பெயர்களில் பட்டாக்கள் வாங்கி விடுகிறார்கள் என்றும் படிக்காத பாமரர்களை, நத்தம் புறம்போக்கு என்றுச் சொல்லி, நிலத்திலிருந்து வெளியேற்றி வருகிறார்கள் என்றும் பலர் எனக்கு அழைக்கும் போது தெரிந்து கொண்டேன். பல வி.ஏ.ஓக்கள் நத்தம் நில பட்டாக்களில் பல்வேறு முறைகேடுகளைச் செய்கிறார்கள் என்றும் தெரிந்தது. 

இது பற்றிய ஏதேனும் உதவி தேவைப்பட்டால், என்னை அணுகலாம். ஆலோசனை கட்டணம் உண்டு. 

நத்தம் நிலப்பிரச்சினை வந்தால் கவலைப்பட வேண்டாம். 

சென்னை உயர் நீதிமன்றம், நத்தம் நிலமெடுப்பிற்காக நில உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் வழங்கிய உத்தரவை ரத்துச் செய்தது. காரணம் நிலமெடுப்பின் போது கூட, அந்த நிலம் நத்தமாக இருக்கும் போது, அரசால் ஒன்றும் செய்யவே முடியாது.

வழக்கைப் பற்றிப் பார்க்கலாம்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக பூந்தமல்லியில் 456 சதுரமீட்டர் நிலத்தை எடுக்க முடிவு செய்து, ஆதிதிராவிடர் நத்தம் வகையைச் சேர்ந்த அந்த நிலத்தை காலி செய்யும்படி, அங்கு வீடு கட்டி வசித்து வந்த சாக்ரடீஸ் உள்பட ஐந்து பேருக்கு தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்தார். தாசில்தாரின் இந்த உத்தரவை எதிர்த்து ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஆதி திராவிடர் நத்தம் நிலம் என்பது அரசுக்கு சொந்தமான நிலமல்ல. அங்கு வசிக்கும் மனுதாரர்களை காலி செய்யக்கூறி, தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருப்பினும் பொது பயன்பாட்டுக்கு நிலம் தேவைப்படுவதால் உரிய இழப்பீடு வழங்கும்பட்சத்தில் நிலத்தை வழங்க தயாராக இருக்கிறோம்" என்று வாதாடினார்.

தமிழக அரசு மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், "அந்த நிலம் ஆதிதிராவிடர் நத்தம் நிலமாக இருந்தாலும், மனுதாரர்களுக்கு பட்டா ஏதும் வழங்கவில்லை என்றும் நத்தம் நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருக்க மட்டுமே முடியும். ஆனால் இவர்கள் கடைகள் கட்டி மாதம் 70 ஆயிரம் ரூபாய் வாடகை பெற்று நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துகிறார்கள் என்றும் எனவே, நிலத்தில் இருந்து மனுதாரர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் நத்தம் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும். நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது" என்றும் வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜா மற்றும் பரதசக்ரவர்த்தி ஆகியோர், ஆதிதிராவிடர் நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அங்கு வசித்தவர்களை, ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் வெளியேற்ற முடியாது எனக் கூறி, நிலத்தை காலி செய்யும்படி தாசில்தாரர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக வழங்க தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளதால், உரிய இழப்பீட்டை வழங்கி நிலத்தை அரசும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் பெற்றுக் கொள்ளலாம். உரிய சட்ட விதிகளை பின்பற்றி, நிலத்தை கையகப்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு 14.03.2023 அன்று வழங்கப்பட்டது. வழக்கு எண் : W.P.31688 of 2022 and W.M.P.Nos.31131 & 31132 of 2022.



ஆகவே நத்தம் நிலங்கள் குறித்து அரசோ அல்லது அரசு அமைப்புகளோ எந்த உத்தரவும் இடமுடியாது என்று அறிந்து கொள்க.

லீகல் டிரேசிங்க், சர்வே மற்றும் கோர்ட் வழக்குகளில் வெற்றி பெற ஆலோசனை பெற அழைக்கவும். மிகச் சரியான தீர்வு வழங்கப்படும்.

Friday, March 24, 2023

நாய் - மனிதன் - கடவுள்

நாய்கள் தங்களது வயிற்றுக்கு ஒவ்வாத உணவை உண்டு விட்டால், அருகம்புல்லையோ அல்லது ஏதோ ஒரு புல்லையோ தின்று, செரிமானத்தைச் சரி செய்து கொள்ளும். இதற்காக நாய் எந்த நீட் தேர்வும் எழுதவும் இல்லை. மெடிக்கல் கல்லூரியிலும் படிக்கவில்லை. 

அதற்கு அந்த அறிவு எப்படி வந்தது? ஐந்தறிவு பிராணியான நாய்க்கு, உடல் நோய் கண்டால், நோய்க்கு உகந்த மருந்தினைக் கண்டுபிடித்து உண்ணும் அறிவு எங்கிருந்து வந்தது? 

என்றாவது யோசித்தீர்களா? இதற்கு விடை என்ன தெரியுமா?

நாய்கள் இயற்கையுடன் இருக்கின்றன. அவை இயற்கையுடன் வாழ்கின்றன. வெள்ளிங்கிரி சுவாமி ஆஸ்ரமத்தில் பப்பி என்றொரு பெண் நாய் இருந்தது. அதற்கு ஏதாவது கொடுத்தால், அதை எடுத்துக் கொண்டு போய், பள்ளம் தோண்டி மண்ணைப் போட்டு மூடி வைத்து விட்டு வரும். நான் நேரில் கண்டது. பசிக்கும் போது, அங்கு வந்து படுத்துக் கொண்டு, எடுத்துச் சாப்பிடும். இந்த அறிவு அதற்கு எங்கணம் வந்தது?

அவைகள் இயற்கையுடன் வாழ்கின்றன.

ஆனால் மனிதனுக்கு நோய் வந்தால் அலோபதி, ஹோமியோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், அக்குபஞ்சர், வர்மம் போன்று பல வகையான மருத்துவத்தை எடுக்கிறான். நாயை விட ஆறறிவு கொண்ட மனிதனுக்கு ஏன் இந்த அறிவு இல்லை. நோய் தீர ஏன் பிறரை நாடுகிறான்?  அவனுக்கே அவன் உடம்பு தனியாகிப் போனது ஏன்? எப்போதேனும் யோசித்திருக்கின்றீகளா?

இதற்கொரு விடை காணலாம்.

முதலில் மதம் என்றால் மதம் தான் என்பதை அறியுங்கள். எனக்கு பல சாமியார்களுடன் சிறு வயதிலிருந்து பழகும் நாட்கள் இருந்தன. அவர்கள் மூலம் நான் கண்டது, கேட்டது, அறிந்தது எல்லாம் - கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதுதான். அதைத்தான் திருமூலரும் சொல்லி இருக்கிறார். 

மனிதனே கடவுள் என்பது தான் என் நினைப்பு. 

என்னில் இருப்பதுதான் உங்களிடமும் இருக்கிறது. நீங்கள் யாரோ நானும் அதே. உங்களையும் என்னையும் பிரிப்பது நம் அறிவு. 

உடலுக்கு வலி தெரியாது. மனதுக்குத்தான் வலி தெரியும் அல்லவா?

மதம் என்றால் மதம் தான். மதப்புராணத்தையெல்லாம் தூக்கி ஓரமாக வைத்து விடுங்கள். ஒரு சில விஷயங்களைப் புரிந்து கொள்வதற்காக பைபிளை எடுத்துக் கொள்வோம்.


பைபிளில் சொல்லப்பட்டபடி, ஆதாமை ஏவாள் தோட்டத்திலிருக்கும் ஆப்பிளை எடுத்து உண்ணச் சொல்வாள். ஆதாம் ஆப்பிளை உண்ட பிறகு - இருவரும் நிர்வாணமாக இருப்பதை அறிந்து ஆடை உடுத்த ஆரம்பித்தனர். அதாவது இருவருக்கும் அறிவு வந்து விட்டது என்று படித்திருக்கிறோம்.

அதேதான்..

இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தேன். ஆம், மனிதன் இயற்கையிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டுவிட்டான். அது எப்படி, எப்போது நிகழ்ந்தது என்று இன்றும் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். சரியான, துல்லியமான தகவல்கள் இன்னும் கிடைத்தபாடில்லை. 

கடவுள் யாரையும் படைப்பதும் இல்லை, கணக்கு வழக்கு பார்ப்பதும் இல்லை, வரவு செலவு கணக்குகள், பாவம் புண்ணியம் போன்றவைகள் எதையும் பார்ப்பதில்லை. 

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர் கையில் இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு வாழத்தான் தெரியவில்லை. ஒன்று எதிர்காலத்தில் வாழ்கிறான். இல்லையெனில் இறந்தகாலத்தில் வாழ்கிறான் என்கிறார்கள் அறிவாளர்கள்.

மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பினைத் துண்டித்ததில் பெரும் பங்கு வகிப்பது மனிதனின் அறிவு. அதை மனம் என்கிறார்கள். 

இதை மீண்டும் அடைவது எப்படி? அதைக் கண்டுபிடித்து விட்டால் இன்று நம்மிடையே வாழும் ஸ்ரீராம், ஜோதி சுவாமி போல மாறலாம்.

அவர் பெயர் ஸ்ரீராம். ஆந்திராவில் வசிக்கிறார் என்று நினைவு. இவரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை நடிகர் ராஜேஷ் யூடியூப் சேனலில் பார்த்தேன். அவர் காலத்தின் முன்பும் பின்பும் சென்று வருவதை ஒருவர் பகிர்ந்து கொண்டார். 

அதாவது அவர் தன் நண்பரிடம் ஒரு கவரைக் கொடுத்து, ஒரு வாரம் சென்ற பிறகு பிரித்துப் பார்க்கும் படி சொல்லி இருக்கிறார். அவ்வாறு பிரித்துப் பார்த்த போது, கடந்த வாரத்தில் நண்பருக்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அந்தக் கவருக்குள் இருந்த காகிதத்தில் எழுதி இருந்ததாம். இது உண்மை என்றால் எதிர்காலத்துக்குள் சென்று வந்திருக்கிறார் ஸ்ரீராம் என்று புரிந்து கொள்ளலாம்.

ஜோதி சுவாமி பல முறை விடிகாலையில் பேசும் போது, தூக்கத்தின் போது அவர் கேட்ட ஒலிகள், அசைவுகள், ஆட்கள் மீண்டும் தென்படுகிறார்கள் ஆண்டவனே என்று சொல்லி இருக்கிறார். எதிர்காலத்துக்கும் இறந்தகாலத்துக்கும் சென்று வருகிறார் என்று இப்போது புரிகிறது.

ஒரு தடவை சுவாமியும் நானும் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது, தேய்த்துக் குளிக்க ஏதாவது கிடைத்தால் பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த போது, புத்தம் புது பீர்க்கங்காய் குடலைக் கொடுத்தார். தேய்த்து விட்டு செடியோரம் வீசிய போது கண் முன்னாலே மறைந்து போனது கண்டு மண்டை காய்ந்தேன். அப்போதெல்லாம் உணர்ந்து கொள்ளும் தெளிவு எனக்கு வரவில்லை.

இதே போல ஸ்ரீராம் அவர்களும் போட்டோவில் இருந்து எலுமிச்சை பழத்தை எடுத்ததாகப் பேட்டியில் சொன்னார்கள். இது எப்படி சாத்தியமானது என்ற ரகசியம் தெரிந்து விடின் மனிதர்கள் எவரும் துன்பத்தில் உழன்று கிடக்கமாட்டார்கள்.

இயற்கையினுடனான தொடர்பினை மனிதன் இணைத்துக் கொள்வதற்கான வழி கிடைத்து விட்டால் எல்லாம் சுகமே.

இது பற்றி யோசித்துப் பாருங்கள். 

அவ்வளவுதான்.

Wednesday, March 15, 2023

பேராசியர்களுக்கு தகுதி குறைப்பு - யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷனின் அக்கிரமம்

இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வி என இந்தியா மாநிலங்களின் சுயாட்சிக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கும் இந்திய ஒன்றிய அரசின் கீழ் இயங்கும்  யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷனின் சேர்மன் மமிடாலா ஜகதீஷ் குமார் - ராவ்  ஒரு  நயவஞ்சகமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 

ஜகதீஷ் குமார் மீது 2017ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு கல்லூரியில் பணி செய்து வந்த சைத்ய பிரபா தாஸ் என்ற தலித் அசோசியட் புரபசரை, புரபசராக தகுதி உயர்த்த முடியாது என்றக் குற்றச்சாட்டு இருக்கிறது. ஜகதீஷ் குமார் ராவ் கம்யூனிட்டியைச் சேர்ந்தவர் என்றும், அவர் சாதி பார்த்துதான் தகுதி உயர்வு வழங்குகிறார் என்று கேரவன் மேகசின் கட்டுரை எழுதி இருக்கிறது. 

படிக்க மாணவர்களுக்கு பல நுழைவுத் தேர்வுகளை நடத்தி, அவர்களின் கனவுகளுக்கும், வாழ்விற்கும் வாய்க்கரிசி போட்டுக் கொண்டிருக்கிறது இந்திய ஒன்றிய அரசு பல ஆண்டுகளாக என்று எல்லோருக்கும் தெரியும். 

ஏழை மாணவர்கள் கல்வி கற்று, உயர் பதவிகளை அடைந்து விடக்கூடாது என்ற கொள்கைக்காக, கீழ்சாதி என்று காலம் காலமாக சொல்லிக் கொண்டிருக்கும் நாதாரிகளின் மனம் மகிழும் வண்ணம், ஏழைகளான இந்திய மக்களின் புதல்வர்களின் கல்வியை தடுப்பதற்காக, நரித்தனமாக நுழைவுத் தேர்வுகளை தகுதி என உருவாக்கி வைத்திருக்கிறது ஒன்றிய அரசு. 

பல மொழி, பல வகையான நிலப்பரப்புகள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒன்றிய மாநிலங்களின் கல்வியில் தலையிட்டு மாணவர்கள் பலரைக் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அனிதா ஒரு எடுத்துக்காட்டு.

கல்லூரியில் புரபஸராக தகுதி உயர்ந்த முன்பு இருந்த பி.ஹெச்.டி படிப்பு என்ற தகுதி தேவையில்லை என்கிறார் ஜகதீஷ் குமார் சேர்மன். 

மாஸ்டர் டிகிரி படித்தாலே போதும், புரபஸர். பி.ஹெச்.டி எல்லாம் தேவையில்லையாம்.

மாணவர்கள் படிக்க நுழைவுத் தேர்வு தகுதி எனில் கல்லூரி புரபசர்களுக்கு தகுதி தேவையில்லையா? 



Thursday, February 2, 2023

கவிஞர் முத்துலிங்கத்திற்கு கடுமையான கண்டனம் - தினமணி கட்டுரை

தமிழ் நாட்டு அரசின் அந்த நாள் அரசவைக் கவிஞர், இந்த நாளில் எவரும் அறியா கவிஞரான முத்துலிங்கம் 02.02.2023 தினமணியில் ’மொழிப்போர் தியாக வரலாறு’ என்ற கட்டுரையை எழுதி இருக்கிறார்.

கவிஞர்களுக்கு இப்போது புகழும் இல்லை, பெரிய கவிஞர்கள் என்ற பட்டமும் கிடைப்பதில்லை. ஏனென்றால் முன் காலத்தில் சமுதாய, அரசியல், வாழ்வியல் சீரழிவுகளை கூர்மையான வார்த்தைகளால் கவிதை நடையில் எழுதவென்றே ஒரு கூட்டம் இருந்தது. கவியரங்கங்கள் கூட நடத்தப்பட்டு, அவர்களுக்கு மரியாதையும், பொன்னாடையும், புகழாடையும் வழங்கப்பட்டன.

சினிமாக்களில் பாடல்கள் எழுதினார்கள். நல்ல சம்பாத்தியமும் கிடைத்தன. மக்களிடையே புகழும் கிடைத்தன. அதெல்லாம் ஒரு காலம்.

இப்போது வலிகளை, இன்பங்களை, துயரங்களை, சீர்கேடுகளை, அக்கிரமங்களை படித்த ஒவ்வொருவரும் எழுதி விடுகிறார்கள். அதாவது கவிஞர்களானார்கள் மக்கள். தனிப்பட்ட முறையில் இனி கவிஞர்கள் என்று சொல்ல முடியாது. 

அந்த வகையில் நாதியற்றுப் போன கவிஞர் முத்துலிங்கம், எதுக்காகவோ ஆசைப்பட்டு, அல்லது சொரிந்து விடுவதற்காகவும், தன் இருப்பை யாருக்கோ தெரிவிக்க வேண்டியும் பொய்களை அவிழ்த்து விட்டு, அதுவும் பார்ப்பனியர் சாதி வெறி பிடித்தலையும் தினமணியில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ் இல்லையாம். ஆங்கிலம் தான் இருக்கிறதாம். கவிஞர் கவிதைக்கு வேண்டுமானால் பொய் புனையலாம். இப்போது, அதுவும் தற்போதைய தமிழ் நாட்டு மக்களிடம் போகிற போக்கில் தமிழே தமிழ் நாட்டில் இல்லை என்பது போன்ற ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்.

பரிதாபத்துக்குரியவரானார் கவிஞர் முத்துலிங்கம். தமிழ் நாட்டில் மாணவர்கள் தமிழில் தான் படிக்கிறார்கள். ராஜாஜி மாணவர்களை ஹிந்தியில் படிக்க கட்டாயச் சட்டம் கொண்டு வந்தார். அதை எதிர்த்துதான் மொழிப்போர் நடத்தப்பட்டது. 

மொழி வழி மாநிலங்கள் பிரித்த போது, அதன்படி ஆட்சி நடத்தப்படுகிற போது, எதற்காகத் தமிழர்களின் பிள்ளைகள் ஹிந்தியில் பாடம் படிக்க வேண்டும் என கவிஞர் சொல்லுவாரா? 

தமிழ் நாடு அரசு தமிழில் தான் சட்டங்கள் வெளியிடுகிறது. ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க ஆங்கிலத்தில் சட்டங்கள் வெளியாகின்றன. ஒன்றிய அரசுப் பணியிலிருந்து மா நிலப் பணிக்கு வரும் அதிகாரிகளுக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அரசு சட்டங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதால், ஒன்றிய அரசின் இணைப்பு மொழியான ஆங்கிலத்திலும் சட்டங்கள் வெளியிடப்படுகின்றன.

தமிழில் படித்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வசதியாக மறந்து போனார் முத்துலிங்கம்.

நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழைக் கொண்டு வர முயற்சி செய்தபடியே தான் இருக்கிறார்கள். ஆனால் ஒன்றிய அரசு தமிழை வளரவே விடக்கூடாது என்பதற்காக அனுமதி தரவில்லை. இது ஏதும் தெரியாத தற்குறி இல்லை கவிஞர். ஆனாலும் பொய்யாக எழுதுகிறார்.

தமிழ் நாட்டில் மாணவர்கள் தமிழில் படிக்கிறார்கள். ஆங்கிலமும் படிக்கிறார்கள். ஆங்கிலம் படித்த காரணத்தால் உலகெங்கும் பணி செய்கிறார்கள். பல நிறுவனங்களின் தலைவர்களாக இருக்கிறார்கள். ஹிந்தி படித்து விட்டு, தமிழ் நாட்டுக்கு வேலைக்கு வரவில்லை.

சுமார் 80 வயதான நிலையில் செய்நன்றி மறந்து போய் இப்படியான பொய்களை பொது வெளியில் அவிழ்த்துக் கொட்டுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று தமிழன் என்ற வகையில் அவரைக் கேட்டுக் கொள்கிறேன். 

இந்தக் கட்டுரையின் இறுதியில் கவிஞர் முத்துலிங்கம் தெரிவித்திருக்கும் கருத்துக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி வன்மம் கொண்டு தமிழர்கள் மீதும் தமிழின் மீதும் சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. காலம் விரைவில் பதில் சொல்லும். 

கவிஞர் முத்துலிங்கம் எழுதிய - மொழிப்போர் தியாக வரலாறு கட்டுரை. இக்கட்டுரையின் இறுதி பத்தி கீழே. எவ்வளவு வன்மம் பாருங்கள் இவருக்கு?


நன்றி : தினமணி


Tuesday, January 31, 2023

ரஜினிகாந்த் பெயரைச் சொன்னால் குற்றம் - ரஜினியின் அறிக்கை

ரஜினிகாந்த் - பெயர் வைத்தது பாலச்சந்தர். சிகரெட் ஸ்டைலை படத்தில் பயன்படுத்தியது அவரே. ரஜினியின் ஒவ்வொரு ஸ்டலையும் யாரோ ஒரு இயக்குனர் உருவாக்கினார். அவருக்கான வசனத்தையும் யாரோ எழுதினர். எல்லாவற்றிலும் பலன் பெற்றது ஒரே ஒரு ஆள் - ரஜினிகாந்த். இறைவன் அவருக்கு கொடுத்திருக்கும் வரம் என்கிறார்கள். அது அப்படித்தான்  இருக்க வேண்டும். இறைவனின் செயலின் காரணத்தை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

பார்ப்பான் ரங்கராஜ்பாண்டே (கோவிலில் பூசாரி வேலை செய்து வந்தவர்களுக்கு பாண்டே என்று பெயர் வைப்பார்களாம்) இது பற்றி ஆராய வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் குடும்பம் நான்கு தலைமுறையாக நாயனம் வாசித்த்தால் தான் முதலமைச்சராக இருக்கிறார் என தர்மத்தின் பாதையைக் கண்டுபிடித்த புத்திசாலி ரஜினியையும் ஆராய வேண்டும். அதே போல பிரதமர் மோடி எப்படி பிரதமர் ஆனார் என்று கண்டுபிடித்தால் பிபிசிக்கு பதில் அளிக்கலாம். ஆகவே பார்ப்பான் ரங்கராஜ் பான்டே பூசாரி அது பற்றியும் ஆராய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ரஜினிக்காந்துக்காக ஒரு வக்கீல் பப்ளிக் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். கீழே இருக்கிறது பார்த்துக் கொள்ளுங்கள். 

ரஜினியின் ஃபேன் என்றுச் சொல்ல - இனி ரஜினிக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்க. ஒரு டிவி நிகழ்ச்சியில் வருகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது கமர்ஷியல் நிகழ்ச்சி அல்லவா? அந்த நிகழ்ச்சியில் நீங்கள் யார் ரசிகர் என்று கேள்வி கேட்கப்பட்டால் ரஜினிகாந்த் என்றுச் சொல்லக்கூடாது. ஏனென்றால் அப்படிச் சொன்னால் அது சட்டப்படி தவறு. அந்த நிகழ்ச்சி பணம் சம்பாதிக்கும் அல்லவா? கமர்ஷியல் நோக்கில் தன் பெயரைப் பயன்படுத்த ரஜினி காந்த் அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்கிறது அவர் வெளியிட்ட அறிக்கை.

ஆகவே நீங்கள் ரஜினி ரசிகர் என்று கூடச் சொல்லக்கூடாது. ரஜினி காந்த் அவர்கள் தன் ரசிகர்களுக்கு செய்யும் தொடர் நன்மைகளில் இதுவும் ஒன்று என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்.

”என்னங்க ரஜினி இப்படியெல்லாம் செய்கிறார்? அவருக்கு உருவமும், வாழ்க்கையும் அளித்த தமிழர்கள் - சம்பாதிக்கவே கூடாதா? இப்படியும் ஒரு தற்குறி இருப்பாரா என்றெல்லாம் சொல்லி வருத்தப்பட்டார் ஒருவர். 

”கிராமப்புற மேடை நடிகர்கள், பாடகர்கள் இனி என்ன செய்வார்கள்?” என்று கேட்டார்.

சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேறொருவருக்கு மாற்ற வேண்டியதுதான். சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிக்கு மட்டுமே குத்தகைக்கு எவரும் கொடுக்கவில்லை. ஆகவே இனி எவரையாவது சூப்பர் ஸ்டார் என்றுச் சொல்லிக் கொள்ளுங்கள். வக்கீல் கேஸ் போட்டால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றுச் சொல்லி வைத்தேன். சமாதானம் ஆகவில்லை அப்படியும் அவர்.

செய்நன்றி அற்றவர் என்று எவரும் ரஜினிகாந்த் அவர்களைச் சொல்லி விடக்கூடாது. அவர் மிகவும் நல்லவர். வல்லவர், திறமைசாலி மற்றும் மாபெரும் தியாகி. 

ஆகவே அவரின் அடுத்தடுத்த படங்களையும் பிரமோட் செய்யுங்கள். ஆனால் ஒன்று ரஜினிகாந்த் என்று பெயரை எங்கும் பயன்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாய் இருங்கள். 

டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும், யூடிப்பிலும் பணம் சம்பாதிக்கிறீர்கள் அல்லவா? இனி ரஜினிகாந்த பெயரை மேற்கண்டவற்றில் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது, இந்த அறிக்கையின் படி சட்டப்படி தவறு. ஆகவே வம்பு, வழக்கு என்று சிக்கிக் கொள்ள வேண்டாம்.



ரஜினிகாந்த் எவ்ளோ பெரிய தியாகி என்பதைச் சொல்லும் அவர் கடிதம் கீழே இருக்கிறது. படித்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. 

தன் ரசிகர் மன்றத்தின் மூலமாக எத்தனை போராட்டங்களை நடத்தி இருக்கிறார் அவர்? தமிழக மக்களுக்காக தமிழகமெங்கும் நடைபயணங்களை நடத்தி இருக்கிறாரா? குற்றம் எங்கு நடந்தாலும் ரசிகர் மன்றம் போராட்டம் செய்திருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் கேட்டு விடக்கூடாது. 

தமிழ்நாடே அவர் எப்போது முதலமைச்சர் ஆவார் என்று காத்துக் கிடந்தது. ஆனாலும் அவர் தனக்கு முதலமைச்சர் பதவியே வேண்டாமென்று உதறி தள்ளி தானொரு ஆன்மீகவாதி என்று நிரூபித்து விட்டார். அவரின் ஆன்மீகம் உண்மையானது.

போலி ஆன்மீகம் அல்ல என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். போலி ஆன்மீகம் என்றவுடன் ராசய்யா (அவரில்லை - இவர் வேற) நினைவுக்கு வந்து விடக்கூடாது உங்களுக்கு. அப்படியெல்லாம் நீங்கள் நினைத்தால் அது  தேச விரோதம். 

கீழே இருக்கும் கடிதம் மூலம் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த தானைத்தலைவர் ரஜினிகாந்த் என்பதை மறந்து விடாதீர்கள். ஆகவே மறந்தும் செய்து விடாத காரியம் என்னவென்றால் எங்கும் ரஜினிகாந்த் பெயரை உச்சரித்து விடக்கூடாது என்பதே. 



THANKS TO RAJINIKANTH TWITTER AND SRITHAR PILLAR TWITTER. 

தமிழக மக்களுக்கு ரஜினிகாந்த் அவர்களின் அறிக்கை சென்று சேர வேண்டுமென்ற காரணத்தால் கடிதம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்த் விரும்பினால் நீக்கி விடுகிறேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.