குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, July 24, 2023

சுவாமி ஆத்மானந்தர் - அஞ்சலி


1997ம் வருடம் கரூர் சுப்ரமணியம் அவர்கள் சுவாமி ஆத்மானந்தர் அவர்களிடம் என்னைச் சேர்ப்பித்தார். அன்றிலிருந்து 2001 வரை கரூர் ராமகிருஷ்ணர் ஆஸ்ரமத்தில் இருந்தேன். கணிணி ஆசிரியராகவும், இரண்டு கல்லூரிகளுக்கு கணிணி அசெம்பிளிங், சாஃப்ட்வேர் இன்ஸ்டாலேசன், நெட்வொர்க்கிங் வேலைகளை நானொருவனாகவே செய்து வந்தேன். சம்பளம் ஏதுமின்றி.

கல்லூரிகளுக்கு தேவையான கம்யூட்டர்கள் பாகங்களை சென்னை சென்று ரிச்சி ஸ்ட்ரீட்டில் வாங்கி வந்து அசெம்பிள் செய்து, ஆபரேட்டிங்க் சிஸ்டம், இன்னபிற சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து, அவைகளை நெட்வொர்க்கிங்கில் இணைப்பது, பிரிண்டர்கள் போன்றவைகள் வாங்க சுவாமியுடன் சென்னைக்குச் செல்வது என எப்போதும் வேலையாக இருப்பேன். மாலை வேலைகளில் சுமார் இரண்டு மணி நேரமாவது சுவாமிகளுடன் தனிமையில் பேசிக் கொண்டிருப்பது வாடிக்கை. தினமணிக்கு பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். அடியேன் தான் டைப் செய்து கொடுப்பேன். தினமணி ஆசிரியர் வைத்திய நாதனுடன் அவருக்கு நல்ல நட்பு இருந்தது.

அவர் பெரிய படிப்பாளி. எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். அவருக்குப் பிடித்த புத்தகம் தாயுமானசுவாமிகள் பாடல்கள். ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதோ ஒரு தாயுமான சுவாமிகள் பாடலைப் பற்றி விவரிப்பார். அப்போதெல்லாம் எனக்கு ஒன்றும் புரியாது. கேட்டுக் கொண்டிருப்பேன். இப்போது அடியேன் தாயுமான சுவாமிகள் எழுதிய பராபரக் கண்ணிக்கு விளக்க உரை எழுதிக் கொண்டிருக்கிறேன். இரு வரிகளுக்கான அர்த்தத்தை எழுதுவதற்குள் பெரும்பாடாக இருக்கிறது.

பரநாட்டத்தைப் பற்றியே பெரிதும் பேசுவார். ஆஸ்ரமத்தில் இருந்த போது பகவான் ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றினை எனக்குச் சொல்லிக் கொண்டே இருப்பார். அப்போது அது ஏதோ ஒரு கதை என்பது போலவே இருந்தது. இப்போது என்னால் தொடர்ந்து நான்கு பக்கங்கள் படிக்கமுடியவில்லை. மனது ஒன்றி விடுகிறது. தொடர்ந்து படிக்க இயலவில்லை. கண்ணீர் பெருகி விடுகிறது. பகவானின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவ்வளவு அர்த்தம் பொதிந்தவை. ஆன்றோர்கள், சான்றோர்கள், மகாபுருடர்களின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம் காலத்தினால் மட்டுமே கிடைக்கும். 

எனக்குத் தெரிந்து சுவாமி ஆத்மானந்தர் அவர்கள், சுமார் 3000 பிள்ளைகளுக்கு மேல் இலவசமாக உடையும், உணவும் கொடுத்து படிக்க வைத்திருக்கிறார். பெண் பிள்ளைகள் அனேகம். தாயைப் போல அவர்களைக் கவனித்துக் கொண்டார்.

எத்தனையோ பேர்கள் அவரிடம் பொருளுதவி பெற்றிருக்கிறார்கள். எத்தனையோ நபர்கள் அவரிடமிருந்து ஏமாற்றி பெரும் பொருளைத்திருடி இருக்கிறார்கள். நான் அங்கிருந்த காலத்தில் அத்தனைக்கும் சாட்சியாக இருந்திருக்கிறேன். ஆச்சரியம் என்னவென்றால் இது எதுவும அவரைப் பாதிப்பதே இல்லை. 

கரூர் ஆஸ்ரமத்தையும், சாரதா நிகேதன் கல்லூரியையும் திருப்பராய்த்துறை தபோவனம் அவரிடமிருந்து பிடிங்கிக் கொண்டது. அது அதர்மம் தான் என்னளவில். 

கரூர் சாரதா நிகேதன் கல்லூரியின் முன்பு இருக்கும் விவேகானந்தர் சிலை அமைக்கும் போது நான் அங்கிருந்தேன். அந்த மண்டபத்தில் இருக்கும் ஷாண்ட்லியர் ஒரு லட்ச ரூபாய். நான் தான் சென்னைக்குச் சென்று வாங்கி வந்தேன். கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் சிலையை உருவாக்கியவரே இந்தச் சிலையினையும் உருவாக்கினார். சுவாமிக்கு நிரம்பவும் பிடித்த இடம் அது. காலம் அவரை அங்கு இருக்கவிடவில்லை. 

காரைக்குடி அமராவதிபுதூரில் சாரதா சேவாஸ்ரமத்தின் அருகில் பெண்கள் கல்லூரியினை உருவாக்கினார். கல்லூரி கட்டடம் வேலை செய்து கொண்டிருந்த போது, இஞ்சினியருக்கு பணம் கொடுக்கச் செல்லும் போது நானும் சுவாமியுடன் செல்வதுண்டு, அவருடன் அவரது அறையிலேயே தங்கிக் கொள்வேன். கல்லூரி கட்டி முடித்தவுடன் 50 கம்யூட்டர்கள் உருவாக்கி லேப் செட்டப் செய்து கொடுத்தேன்.  

கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமம் அவரை விட்டுச் சென்ற பிறகு சேலத்தில் பெண்கள் கல்லூரியினை உருவாக்கினார். அங்கு சுவாமி நித்தியானந்தருடன் பிரச்சினை ஏற்பட்டு, கல்லூரி இன்னும் பெரிதாக வளரவில்லை.  தஞ்சாவூர் பால்சாமி மடம், கோவை குங்குமப்பாளையம் பள்ளி, சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் பின்னால் இருந்த ராமகிருஷ்ண ஆஸ்ரமம் ஆகியவை என்ன ஆனதோ தெரியவில்லை. தஞ்சாவூர் பால்சாமி மடத்தின் இருந்த நிலத்தில் விவசாயம் செய்து, அங்கிருந்து தான் அரிசி வரும். 

கோவை பள்ளப்பாளையம் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்துக்கு நானும் அவருடன் வருவதுண்டு. அவர் பிறந்த ஊர். பல ஊர்க்கதைகளை காரில் வரும் போது என்னுடன் பகிர்ந்து கொள்வார். காண்டசா கிளாசிக் கார் - பதிவெண் 1011 என்று நினைவு, அக்காரில் அவருடன் அதிக நேரம் பயணம் செய்திருக்கிறேன். 

அவருக்கு சென்னை ராமகிருஷ்ண மடத்துடன் நல்ல தொடர்பு இருந்தது. ராம நாதபுரத்தில் சுவாமி விவேகாந்தர் மன்னருடன் சந்தித்ததன் காரணமாக, அங்கு ராமகிருஷ்ணர் மடத்தை உருவாக்கி, அதனை ராமகிருஷ்ண மடத்திடம் ஒப்படைத்தார். அந்தளவுக்கு அவர் சுவாமி விவேகானந்தரின் மீது பக்தி கொண்டிருந்தார். 




ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தை கட்டி பேலூர் மத்திடம் ஒப்படைத்த போது பேசியது மேலே இருக்கும் வீடியோ

ஆன்றோர்களின் வார்த்தைகள் வீண் போவதில்லை என்பதற்கு இந்த மடம் ஒரு உதாரணம். சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளுக்கு எத்தனையோ ஆண்டுகாலம் சென்ற பிறகு வடிவம் பெற்றிருக்கிறது சுவாமி ஆத்மானந்தர் அவர்களால். ஆனால் கொடுமை என்னவென்றால் இந்த மடத்தின் இணைய தளத்தில் சுவாமிகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை.  இந்த வீடியோ மட்டும் இருக்கிறது.

சமீபத்தில் வீட்டுக்கு வருகை தந்தார். என் படுக்கையில் தான் படுப்பேன் எனச் சொல்லி படுத்து உறங்கினார். என் பையன் கார் ஓட்டனும் எனக்கு என்று கேட்டுக் கொண்டார். அவரை அருகில் வைத்து கார் ஓட்டி வந்தான் ரித்திக் நந்தா. அவரின் நினைவாக மகனின் பெயருடன் நந்தா இணைந்தது. அவருக்குப் பிடித்த நிவேதிதை பெயர் தான் என் மகளுக்கு வைத்திருக்கிறேன்.

அவரின் நண்பர்கள் மருத்துவமனையில் இருந்த போது என்னைப் பற்றிப் பேசும் போது, என் மகள் நிவேதிதா பெயரைச் சொல்லி, அவளின் அப்பா என்று சொல்வாராம். அவரின் சீடர் கோவைப்புதூர் ரங்கநாதன் அவர்கள் அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார்.  

சுவாமிகளின் சீடர் மருத்துவர் ஜெகன்நாதன் அவர்கள் அவரை நன்றாக கவனித்துக் கொண்டார். இரண்டொரு மாதங்களாக சுவாமிகள் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டார். நான் அவரைக் கடைசியாகச் சந்தித்த போது கூட என் கையை இருகப் பற்றிக் கொண்டு, முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் சாப்பிடுமாறு வேண்டினேன். கேட்கவே இல்லை. பர உலகை நாடிச் சென்று விட்டார்.

அவரால் வாழ்ந்தவர் கொஞ்ச நஞ்சமல்ல. அவரால் பயன் பெற்றவர் அனேகம். அவர் கடைசி வரை என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வார்த்தைகளுக்கு ஒப்பவே வாழ்ந்து வந்தார். 

https://www.amritapuri.org/5747/04karur.aum

மாதா அமிர்ந்தானந்த மயி அவர்கள் சாரதா கல்லூரிக்கு வருகை தந்த போது

ஒரு மாலை நேரம். கரூர் ஆஸ்ரமத்தில் இருந்த அவரது அறைக்குள் நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம் தனிமையில். படுக்கை அறைக்குள் சென்று காக்கி நிறத்தில் கிழிந்து போன அட்டை போட்ட ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். 

முருகானந்தம் என்ற அவரை சுவாமி ஆத்மானந்தர் ஆக மாற்றிய அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அன்றிரவு தூங்காமல் படித்து முடித்தேன். காலையில் அவரிடம் சென்று காலில் விழுந்து நமஸ்கரித்தேன். அந்தப் புத்தகத்தின் பெயர் “வாழ்க்கையில் வெற்றி” - அப்துற் றஹீம் எழுதியது.

என்னைப் பொறுத்தவர் சுவாமி விவேகானந்தர் தான் சுவாமி ஆத்மானந்தர் உருவெடுத்து நம்மிடையே வாழ்ந்து சென்றிருக்கிறார்.

* * *

சுவாமி ஆத்மானந்தர் தீட்சை வழங்கி, அவரது நேரடி சீடர்கள் அறுவர். இவர்களில் சொரூபானந்தர், பசுபதீஸ்வரானந்தர், பக்திரூபானந்தர் மற்றும் ஹரிசேசவானந்தர் ஆகியோர் காலமாகி விட்டனர். 

சுவாமி ஞானேஸ்வரானந்தர், சுவாமி யோகேஸ்வரானந்தர் மற்றும் மாதா சிவ ஞானப்பிரியம்பா பெண் துறவி ஆகியோரின் சீரிய மேற்பார்வையில் சுவாமிகளால் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் என நம்புகிறேன்.  இந்த நிறுவனங்கள் லாப நோக்கமின்றி மக்களுக்கு தொடர் பணியைச் செய்யும் எனவும் நம்புகிறேன்.



0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.