குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, December 16, 2010

தெய்வம் இருக்கிறதா? இல்லையா?

ஆத்தீகம் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நாத்தீகம் பற்றிய அனுபவ கதைகள் குறைவு என்பதாலும், நாத்தீகம் பேசிய தலைவர்கள் பிற்பாடு ஆத்தீகத்தின் பால் ஈடுபாடுடையவர்களாய் மாறிய கதைகளைக் கேட்டதாலும் நாத்தீகம் பற்றி நான் யோசிப்பதே இல்லை.

மார்கழி மாதம் இறை வழிபாட்டுக்கு உரிய மாதம் என்றுச் சொல்வார்கள். இம்மாதம் முழுவதும் நல்ல காரியங்களைச் செய்யமாட்டார்கள் என்றும் சொல்வார்கள். மார்கழி மாதத்தில் எங்கள் வீட்டில் முதல் தேதியன்றி தாதர் சங்கும், சிகண்டியும் அடித்துக்கொண்டு விடிகாலையில் வீடுதோறும் வருவார். அவர் முகத்தைக் காண நான் பல முறை முயன்றிருக்கிறேன். தைமாதம் நெல் வாங்க வரும்போதுதான் அவர் முகத்தைப் பார்க்க முடியும். போர்வை போர்த்திய உடல், கையில் சங்கு, சிகண்டியை அடித்துக் கொண்டே வீடுதோறும் வேக வேகமாய் நடந்து செல்வார். அம்மா, பரங்கிச் செடியின் பூவினைப் பறித்துக் கொண்டி, மாட்டுச் சாணத்தில் சொருகி வைப்பார். பிள்ளையார் பிடித்து அருகம்புல் வைத்து, கோலமிட்டு, அதன் மீது பூசணிப்பூவை வைத்து, பிள்ளையாருக்கு தூப தீபம் காட்டி சங்கினை முழக்குவார். நான் அவரருகில் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பேன்.
தினந்தோறும் பூசணிப்பூ வாசலில் மலர்ந்து இருக்கும். மாக்கோலமிடுவதால் வெயில் ஏறுகையில் எறும்புகள் படையெடுக்கும் சாரை சாரையாய். மார்கழி மாதம் முழுவதும் அம்மா இடும் கோலத்தைப் பார்க்க விடிகாலையில் எழுந்து விடுவேன். இப்படியே செல்லும் அந்த மார்கழி முழுவதும்.

நிற்க.

காதல் திருமணம் முடித்து வீட்டில் மனைவியை விட்டு விட்டு தொழில் பார்க்க வெளியூர் வந்து விட்டேன். அம்மாவிற்கும், சுற்றத்தாருக்கும் நான் வேற்று ஜாதி பெண்ணை மணந்ததில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. பிறப்பிலேயே முரட்டுக் குணமுடையவனாய் இருந்தால் என்னை மீறி எதுவும் செய்ய மாட்டார்கள்.அதுவுமின்றி ஒரே ஒரு ஆண்பிள்ளை என்பதாலும் கொஞ்சம் விட்டுக் கொடுப்பர்.

மனதுக்குகந்த மருமகள் என்றால் எல்லாம் கிடைக்கும். பிடிக்காத மருமகள் என்கிறபோது மண் சட்டியும் பொன் சட்டிதானே. பொன்னி அரிசி சாப்பிட்டு பழகிய மனைவிக்கு கோ 43 அரிசி சோற்றை வாயில் வைத்தாலே வாந்தி வந்து விடும். அவள் கர்ப்பினியாய் வேறு இருந்தாள். வாயில் வைப்பதும், பின்னர் அதை வெளியில் தள்ளுவதும்தான் வேலையாய் இருந்தாள்.

மனைவிக்கு விடிகாலையில் பசி வந்து விடுவாம். கிராமத்தில் எங்கே விடிகாலையில் சமைப்பார்கள்? சமையலுக்கு எட்டு ஒன்பது மணி ஆகி விடும். அதற்குள் பசி தாங்காமல் சுருண்டு விடுவாளே? பசிக்கிறது என்று சொல்லவும் பயம். என்ன செய்வது? மிகச் சரியாய் அந்த நேரத்தில் அவளுக்கு சாப்பாடு கொடுத்தது தெய்வம். எப்படி என்பதைச் சொல்கிறேன்.

மார்கழி மாதம் வந்தால் எங்கள் கிராமத்தில் பஜனை செய்வார்கள். விடிகாலையில் பஜனைப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தவழ ஆரம்பிக்கும். பஜனை முடிந்ததும் சுண்டலோ அல்லது பொங்கலோ சிறார்களுக்கு கொடுப்பார்கள். இவ்வழக்கம் ஆண்டாண்டு காலமாய் நடந்து வருகிறது. எனது மாமாவின் மகன் நாள்தோறும் தவறாமல் பஜனைக்குச் சென்று வருவான். வரும்போது அவன் கையில் பொங்கல் இருக்கும். அந்தப் பொங்கலைச் சாப்பிட்டு மார்கழி மாதம் முழுவதும் பசியாறி இருக்கிறாள் மனைவி. அப்பையன் தற்போது பெரிய ஆளாகிவிட்டான். அவ்வப்போது வீட்டுக்கு வரும்போதெல்லாம், விருந்து தடபுடலாய் நடக்கும்.

மகனுடன் எங்காவது வெளியில் சென்றால், கோவிலைப் பார்த்ததும் பய பக்தியுடன் இறங்கி வணங்கி விட்டு வருவான். அப்போதெல்லாம் நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொள்வோம்.

எங்கோ பிறந்து, வளர்ந்தவள் பசித்திருக்கும் போது, யார் மூலமாகவோ அவளுக்கும், அவள் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் உணவை அனுப்பி வைத்தது யார்?

இனி நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். தெய்வம் இருக்கிறதா? இல்லையா என்பதை.