குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ஆவணம். Show all posts
Showing posts with label ஆவணம். Show all posts

Saturday, October 8, 2011

பாவக்காய் மாமரத்தின் கதை





எங்கள் வீட்டில் மாமரங்களும், பலா மரங்களும், தென்னைகளும் அதிகம். மாமரம் என்றால் இப்போது இருக்கும் குச்சி போன்ற மரங்கள் அல்ல. மூன்று பேர் சேர்ந்து கட்டிப் பிடிக்கும் அளவுக்கு பெரிய மரம். ஏகப்பட்ட பொந்துகள் இருக்கும். கிளிகள் மற்றும் பல பறவைகள் கூடு கட்டியிருக்கும். ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு மரமாய் இருக்கும். அந்தளவுக்கு பெரிய மரம். மாங்காய் கார மாணிக்கதேவர் வீடு என்றால் பிரபலம். ஒவ்வொரு மாங்காய்களும் கிட்டத்தட்ட இரண்டு கிலோ இருக்கும். படுபயங்கர புளிப்பு சுவை. மரத்திலே பழுத்த பழமானால் இனிப்பு சும்மா தூக்கும்.

இம்மரத்தில் ஒரு முறை தேன் எடுத்த போது கிட்டத்தட்ட 10 லிட்டர் தேன் கிடைத்தது. வீட்டிற்குப் பின்புறமாய் இருந்த இடத்தில் பெரிய மாமரம் ஒன்றும், காசா லட்டு மாமரம் ஒன்றும், ஒட்டு மாமரம் ஒன்றும், பாவக்காய் மாமரம் ஒன்றும், குடத்தடி மாமரம் ஒன்றும் இருந்தது.

காசா லட்டு மாமரம் படர்ந்து விரிந்து கிடக்கும். ஒவ்வொரு மாங்காயும் லட்டுதான். மாங்காயைப் பறித்து வந்து வைக்கோல் போருக்குள் மூன்று நாள் வைத்திருந்து எடுத்தால் கமகம வாசனையுடன் கொழ கொழவென பழுத்து இருக்கும். அப்படியே சிமெண்ட் தரையில் வைத்து உருட்டி உருட்டி எடுத்து, முனையில் ஒரு கடி கடித்து ஓட்டை போட்டு உறிஞ்சினால் மாங்காய் ஜூஸ் சாப்பிட சாப்பிட அமிர்தம். எத்தனையோ மாம்பழங்களை சாப்பிட்டுக்கிறேன்.

அடுத்து ஒட்டு மாமரம். அது  இப்போது மார்க்கெட்டில் விற்கிறதே அது போல. அதற்கு எங்கள் வீட்டில் மவுசு இல்லை.

பாவக்காய் மாமரம் என்ற ஒரு மரம். பக்கத்து வீட்டின் நிலத்திற்கும் எங்கள் வீட்டின் நிலத்திற்கும் இடையில் இருக்கும் ஒற்றை நாடி மரம். இதன் மாங்காய் அசல் பாவக்காய் போலவே இருக்கும். எப்போதாவது ஒன்றோ இரண்டோ காய்க்கும். அதையும் பக்கத்து வீட்டு மாமா தெரியாமல் பறித்து விடுவார். இந்த மாமரத்திற்குப் பக்கத்தில் மாட்டினைக் கொண்டு வந்து கட்டி வைப்பார். அது மூத்திரமாகப் பேய்ந்து பேய்ந்து பாவக்காய் மாமரம் ஒரு நாள் உசிரை விட்டு விட்டது. அவர் நிலத்தில் மாடு கட்டி வைப்பதை நாம் எப்படி தடுப்பது. இந்த மாமா சரியான லொள்ளுப் பேர்வழி. சண்டைக்குப் போவெதென்றால் அவருக்கு அம்பூட்டு இஸ்டம். நம்ம வீட்டுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். இந்த மாமா கோபத்தில் மண்வெட்டியை எடுத்து வந்து தரையில் ஓங்கி ஓங்கி வெட்டுவார். பதிலுக்கு என் மாமா வெட்டுவார். ஒரே பேச்சு ரகளையாய் இருக்கும்.

இப்படியெல்லாம் அடித்துக் கொண்டாலும் கொஞ்ச நாட்களில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை.

கொடைக்கானலுக்கு தாத்தா போய் வரும் போது வாங்கி வந்த அந்த பாவக்காய் மாமரம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒற்றை நாடியாய் சோம்பிப் போய் இருக்கும் அம்மாமரத்தின் இலைகள் பெரிது பெரிதாய் இருக்கும். ஜெனடிக்ட் மாடிபைடு மரம் என்று சொன்னார் மாமா.

தாத்தா இறக்கும் முன்பே அந்த மாமரமும் இறந்து போய் விட்டது. வீட்டின் பின்பக்கம் போவது என்றாலே எனக்கு கிலியடிக்கும்.

வீட்டின் எல்லையில் இருந்த பனைமரத்தில் ஒரு முறை முதன் முதலாய் ஆந்தையைப் பார்த்து விட்டேன். அது தலையை அப்படியே திருப்பியது கண்டு பயத்தில் நடுங்கிப் போய் விட்டேன். வேலைக்காரனை அழைத்து அதைக் காட்டியது போது, அதற்கு அவன் "தங்கம் அது பேய்" என்று சொல்லி விட்டான். தூரத்தே இருந்து பாவக்காய் மாமரத்தினைப் பார்ப்பதோடு சரி. வயது ஏற ஏற ஆந்தையின் மீதான் பயம் குறைந்து போய், அடிக்கடி பாவக்காய் மாமரத்தினைப் பார்க்க சென்று விடுவேன். எப்போதாவது காய்க்கும் மாங்காய்க்காக காத்திருந்து, பறித்து பழுக்க வைக்க முனைந்தேன். அது பழுக்கவில்லை. குழம்பில் போட்டு அம்மா தந்தார்கள். வெகு டேஸ்ட்டியாக இருந்தது.

பக்கத்து வீட்டு மாமாவிடம் ஒரு முறை கேட்டேன் "மாட்டை ஏன் மாமா இங்கே கட்டுகிறாய், மாமரம் பட்டுப் போய் விடும் பாரு" என்றேன்.

" போடா அதெல்லாம் உனக்குத் தெரியாது" என்றார்.

தாத்தா வைத்த மாமரம்,  பக்கத்து வீட்டு மாமாவின் கைங்கரியத்தால் பட்டுப்போய் விட்டது. ஒரு தலைமுறை மாங்காய் மரம் செத்துப் போய் விட்டது.

பக்கத்து வீட்டு மாமா, தாத்தாவின் தம்பியின் பையன் என்பதுதான் இக்கதையின் விசேஷம்.

* * *

Thursday, December 16, 2010

தெய்வம் இருக்கிறதா? இல்லையா?

ஆத்தீகம் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நாத்தீகம் பற்றிய அனுபவ கதைகள் குறைவு என்பதாலும், நாத்தீகம் பேசிய தலைவர்கள் பிற்பாடு ஆத்தீகத்தின் பால் ஈடுபாடுடையவர்களாய் மாறிய கதைகளைக் கேட்டதாலும் நாத்தீகம் பற்றி நான் யோசிப்பதே இல்லை.

மார்கழி மாதம் இறை வழிபாட்டுக்கு உரிய மாதம் என்றுச் சொல்வார்கள். இம்மாதம் முழுவதும் நல்ல காரியங்களைச் செய்யமாட்டார்கள் என்றும் சொல்வார்கள். மார்கழி மாதத்தில் எங்கள் வீட்டில் முதல் தேதியன்றி தாதர் சங்கும், சிகண்டியும் அடித்துக்கொண்டு விடிகாலையில் வீடுதோறும் வருவார். அவர் முகத்தைக் காண நான் பல முறை முயன்றிருக்கிறேன். தைமாதம் நெல் வாங்க வரும்போதுதான் அவர் முகத்தைப் பார்க்க முடியும். போர்வை போர்த்திய உடல், கையில் சங்கு, சிகண்டியை அடித்துக் கொண்டே வீடுதோறும் வேக வேகமாய் நடந்து செல்வார். அம்மா, பரங்கிச் செடியின் பூவினைப் பறித்துக் கொண்டி, மாட்டுச் சாணத்தில் சொருகி வைப்பார். பிள்ளையார் பிடித்து அருகம்புல் வைத்து, கோலமிட்டு, அதன் மீது பூசணிப்பூவை வைத்து, பிள்ளையாருக்கு தூப தீபம் காட்டி சங்கினை முழக்குவார். நான் அவரருகில் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பேன்.
தினந்தோறும் பூசணிப்பூ வாசலில் மலர்ந்து இருக்கும். மாக்கோலமிடுவதால் வெயில் ஏறுகையில் எறும்புகள் படையெடுக்கும் சாரை சாரையாய். மார்கழி மாதம் முழுவதும் அம்மா இடும் கோலத்தைப் பார்க்க விடிகாலையில் எழுந்து விடுவேன். இப்படியே செல்லும் அந்த மார்கழி முழுவதும்.

நிற்க.

காதல் திருமணம் முடித்து வீட்டில் மனைவியை விட்டு விட்டு தொழில் பார்க்க வெளியூர் வந்து விட்டேன். அம்மாவிற்கும், சுற்றத்தாருக்கும் நான் வேற்று ஜாதி பெண்ணை மணந்ததில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. பிறப்பிலேயே முரட்டுக் குணமுடையவனாய் இருந்தால் என்னை மீறி எதுவும் செய்ய மாட்டார்கள்.அதுவுமின்றி ஒரே ஒரு ஆண்பிள்ளை என்பதாலும் கொஞ்சம் விட்டுக் கொடுப்பர்.

மனதுக்குகந்த மருமகள் என்றால் எல்லாம் கிடைக்கும். பிடிக்காத மருமகள் என்கிறபோது மண் சட்டியும் பொன் சட்டிதானே. பொன்னி அரிசி சாப்பிட்டு பழகிய மனைவிக்கு கோ 43 அரிசி சோற்றை வாயில் வைத்தாலே வாந்தி வந்து விடும். அவள் கர்ப்பினியாய் வேறு இருந்தாள். வாயில் வைப்பதும், பின்னர் அதை வெளியில் தள்ளுவதும்தான் வேலையாய் இருந்தாள்.

மனைவிக்கு விடிகாலையில் பசி வந்து விடுவாம். கிராமத்தில் எங்கே விடிகாலையில் சமைப்பார்கள்? சமையலுக்கு எட்டு ஒன்பது மணி ஆகி விடும். அதற்குள் பசி தாங்காமல் சுருண்டு விடுவாளே? பசிக்கிறது என்று சொல்லவும் பயம். என்ன செய்வது? மிகச் சரியாய் அந்த நேரத்தில் அவளுக்கு சாப்பாடு கொடுத்தது தெய்வம். எப்படி என்பதைச் சொல்கிறேன்.

மார்கழி மாதம் வந்தால் எங்கள் கிராமத்தில் பஜனை செய்வார்கள். விடிகாலையில் பஜனைப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தவழ ஆரம்பிக்கும். பஜனை முடிந்ததும் சுண்டலோ அல்லது பொங்கலோ சிறார்களுக்கு கொடுப்பார்கள். இவ்வழக்கம் ஆண்டாண்டு காலமாய் நடந்து வருகிறது. எனது மாமாவின் மகன் நாள்தோறும் தவறாமல் பஜனைக்குச் சென்று வருவான். வரும்போது அவன் கையில் பொங்கல் இருக்கும். அந்தப் பொங்கலைச் சாப்பிட்டு மார்கழி மாதம் முழுவதும் பசியாறி இருக்கிறாள் மனைவி. அப்பையன் தற்போது பெரிய ஆளாகிவிட்டான். அவ்வப்போது வீட்டுக்கு வரும்போதெல்லாம், விருந்து தடபுடலாய் நடக்கும்.

மகனுடன் எங்காவது வெளியில் சென்றால், கோவிலைப் பார்த்ததும் பய பக்தியுடன் இறங்கி வணங்கி விட்டு வருவான். அப்போதெல்லாம் நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொள்வோம்.

எங்கோ பிறந்து, வளர்ந்தவள் பசித்திருக்கும் போது, யார் மூலமாகவோ அவளுக்கும், அவள் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் உணவை அனுப்பி வைத்தது யார்?

இனி நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். தெய்வம் இருக்கிறதா? இல்லையா என்பதை.