குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, January 29, 2020

சில்லுகருப்பட்டி சொல்லும் தமிழ் சினிமா பிசினஸ்

நெட்பிளிக்ஸில் சூர்யா தயாரித்த சில்லுகருப்பட்டி படத்தை நேற்று மாலையில் பார்த்தேன். நான்கு கதைகள். 


கதை ஒன்று: குப்பை பொறுக்கும் ஒரு சிறுவன் பிங்க் குப்பை பையில் கிடைக்கும் ஒரு போட்டோ அதைத் தொடர்ந்து ஒரு டேப் ரெக்காடர், அதைத் தொடர்ந்து கிடைக்கும் ஒரு வைர மோதிரம். அது ஒரு வளர் பருவ பெண்ணுக்கு சொந்தமானது. பிங்க் குப்பை போடப்படும் இடத்தைக் கண்டுபிடித்து அவளிடம் டேப் ரெக்காடரையும், மோதிரத்தையும் சேர்க்கிறான்.

கதை இரண்டு: பால்ஸ் (அது என்னா பால்ஸுன்னு எனக்குச் சத்தியமாக புரியவில்லை) கேன்சரால் பாதிக்கப்படு பையன். ஓலாவில் இணையும் ஒரு ஃபேஷன் டிசைனர் பொண்ணு. பால்ஸில் கேன்சரால் பேச்சு வார்த்தையோடு போன திருமணம். இருவரும் இணையும் கதை. காக்காவைக் காப்பாத்தினா அது பளபளன்னு மின்னும் பொருளைக் கொண்டு வந்து தினமும் அந்தப் பொண்ணு கிட்டே கொடுக்கிறது. இயக்குனரின் கற்பனை வளம் கண்ணதாசனை மிஞ்சுகிறது.

கதை மூன்று: வயதான இரண்டு பெருசுகள் அன்பு கொள்வது, பின்னர் சேர்வது. 

கதை நான்கு: கிட்டே இருந்து பார்த்தா தெரியாது. எட்டே இருந்து பார்த்தா கோபுரமா தெரியும் என தத்துவம் பேசும் சமுத்துரக்கனி. பொண்டாட்டியைத்தான் சொன்னார். அயல் நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு எல்லாம் அவரவர் சம்சாரங்கள் கோபுரங்களாகத் தெரிகின்றார்கள் என்ற புதிய விஷயத்தை கற்றுக் கொடுத்தது. அப்புறம் இன்ப செக்ஸ் கணவனுக்கும் மனைவிக்கும். 

படமே முடிந்தது. இனி கதாகாலட்சேபத்துக்கு வருவோம்.

குடும்ப வாழ்க்கையில் வேலைக்குப் போகும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சமைத்துப் போடுவது, வீட்டினைப் பராமரிப்பது பெரும் கொடுமையானவை என்கிறார்கள் பெண்கள். பிள்ளைகள் பெற்றெடுக்க இனி ஹாஸ்பிட்டல் போதுமென்கிறார்கள். அந்தளவுக்கு ஆண்களால் பயனில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் பெண்கள். டில்டோக்கள் விற்பனை இந்தியாவில் படு சூடாக நடக்கிறது என்கிறது ஒரு சர்வே.  அந்த அக்கப்போர் ஒரு பக்கம் இருக்கட்டும். 

இந்தக் கதையை ஏன் சூர்யா தேர்ந்தெடுத்து தயாரித்தார்? என்ன ரகசியம்? சூட்சுமத்தின் முடிச்சை கொஞ்சமே கொஞ்சம் அவிழ்க்கிறேன்.(இந்த வார்த்தை ஆபாசமானது அல்ல)

தமிழ் சினிமாவில் ரஜினி குரூப், கமல் குரூப், கவுண்டர் குரூப், மதுரை குரூப், ஐயர் குரூப் என தனித்தனி பிசினஸ் குரூப்புகள் பல உண்டு. 

ரஜினியுடன் தனுஷ், ரஜினியின் நண்பர் நடராஜ் மகளைக் கட்டி, ரத்துச் செய்த விஷ்ணு விஷால் போன்றோர்கள், அனிருத் சமாச்சாரங்கள் (இளையராஜா போல வருவாராம் இவர் என ரஜினி புகழாரம் சூட்டியது) இன்னும் பக்கத்து, தூர சொந்த பந்தங்கள் இவர் படங்களில் நடிப்பார்கள். அவ்வப்போது புரட்சிக்காக சில பல இயக்குனர்கள் படங்களில் நடிப்பது போன்ற அல்லுசில்லு வேலைகளை இவர்கள் செய்வார்கள்.

கமலுடன் ரமேஷ் அரவிந்த் நிச்சயம், ஐயராத்து அம்பிக்களாகவும், மாமிகளாகவும் திரைப்படங்களில் நடிப்பார்கள். இவர் அவ்வப்போது சில பல ஸ்டண்டுகளை அடிப்பார். இனப்பாசம் அதிகம். அத்தனையும் ஒன்றுக்கும் ஆவாது போய் விடும்.

கவுண்டர் குரூப்பில் சூர்யா,கார்த்திக், சத்தியராஜ், சிபிராஜ், சத்யன், ஞானவேல் ராஜா, அவ்வப்போது நண்பர்கள் என தனி ஆவர்த்தனம்.

மதுரை குரூப்பில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிகுமார் இப்படி இன்னும் ஒரு சிலர் என இது கொஞ்சம் வித்தியாசமானது.

ஐயர் குரூப்பில் விசு (கிஸ்மு அவசியம்), சங்கர்( நண்பன் படத்தில் வரும் ஆஸ்துமா ஐயர்), மணிரத்னம் வகையறாக்களின் தனி ஆட்டம். 

சன் டிவி, ஒரு சில தயாரிப்பாளர்கள் எல்லாம் மேற்கண்ட க்ரூப்புகளோடு இணைந்து கொள்வார்கள். இன்றைய தினகரனில் ரஜினியும், பேர் கிரில்ஸும் போட்டோ ஷூட் செய்தியும், ரஜினி மீதான வருமான வரித்துறைச் செய்தியும் தடவிக் கொடுத்தபடியே வெளிவந்திருந்த மர்மங்கள் அது தனி ராஜ்ஜியம்.

விஜய், அஜித் சமாச்சாரங்கள் வேறு. அவர்கள் தங்களை பிராண்டாக மாற்றி வேஷம் கட்டிக் கொண்டார்கள். அஜித் ஐயராத்துக்காரர் என்பது தனிப்பட்ட விஷயம்.

ரெட்டி க்ரூப் விஷால், விஜய்சேதுபதி வகையறாக்கள் வேறு.
பெரும்பாலும் நல்ல சினிமாக்கள், கலெக்‌ஷன் ஆகும் சினிமாக்கள் எல்லாம் இவர்கள் தொடர்பானவர்களிடமிருந்தோ அல்லது இவர்களின் தயாரிப்பிலோ தான் வரும்.  கனவுகளோடு வரும் இயக்குனர்களின் அட்டகாசமான கதைகள் பற்றி இவர்களுக்குத் தெரியாமல் போகாது. இண்டஸ்ட்ரியில் அந்தளவுக்கு போட்டுக் கொடுக்கும் ஆட்கள் தடுக்கி விழுந்தால் லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி ஒரு படம் வெளி வந்து வெற்றி பெறுவது பெரும்பாலும் இல்லை எனலாம். 

விஜய் டிவி அலப்பரை நடிகர்கள். புதுமுக நடிகர்கள், இன்ன பிற அல்லுசில்லுகள் அவ்வப்போது எவராவது ஏமாந்த சோனகிரிகளின் தலையில் மிளகாய் அரைத்து ஹீரோக்களாக வேஷம் கட்டுவார்கள். பெரும்பாலும் ராமராஜன் கதையாக முடிந்து போவார்கள். இம்மாதிரி படங்களால் தான் தமிழ் சினிமா இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை சினிமாக்காரர்கள் சொல்வார்கள். 

இந்த ஐந்தாறு சினிமா குரூப்புகளுடன் இயைந்து செல்பவர்களால் தான் சினிமா தயாரித்து வெளியிட முடியும். தியேட்டர்கள் பெரும்பாலும் இந்த ஐந்தாறு குருப்களின் கண்ட்ரோலில் இருக்கும். இந்த குரூப்புகளுக்குள் தான் சண்டை சச்சரவுகள் நடக்கும். செய்திகளாகும், பரபரப்பாகும். இவர்களின் தொடர்பில் இருக்கும் வெளியீட்டாளர்களால் சினிமா வியாபாரமாகும். 

தனி ஒருவன் சினிமா தயாரிக்கவோ அல்லது ஹீரோவாக நடிக்கவோ விடவே மாட்டார்கள். அப்படி வந்து விட்டால் ஜெயிக்க வைத்து, மொத்தமாக ஜோலியை முடித்து விடுவார்கள். இங்கு ஜோலி என்பது வேலையை என்று அர்த்தம் கொள்ள வேண்டுமென்று சொல்லி விடுகிறேன். நமக்கெல்லாம் வக்கீலும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை. ஜோலி என்கிற வார்த்தைக்கு அவ்வளவு மகிமை.

நல்ல கதை வைத்திருக்கும் இயக்குனர் இந்தக் குரூப்பில் கதை சொல்ல வேண்டும். கதையில் ஒட்டுக்கள், வெட்டுக்கள், ஒரு சில இணைப்புகள் கோர்க்கப்பட்டு வேறு ஒருவரின் இயக்கத்தில் வெளிவரும். இப்போது கோர்ட்டுக்குப் போகின்றார்கள். அப்போதெல்லாம் அய்யோ பாவம் கதைதான். இப்போது ஆரம்பத்தில் இருந்து படியுங்கள் சூர்யா ஏன் இந்தக் கதையை தேர்ந்தெடுத்து தயாரித்தார் என்பதை...

சில்லுகருப்பட்டி திரைப்படம் சுட்டிக்காட்டும் தமிழ் சினிமா பிசினஸ் இதுதான். இதைச் சரி செய்ய இயலுமா? ஏன் முடியாது? ஆனால் ஒருவரும் செய்ய மாட்டார்கள். செய்யவும் விடமாட்டார்கள்.

புரிந்தவர்கள் சிரித்துக் கொள்ளுங்கள். ஆதர்சன ஹீரோக்களின் ரசிகசிகாமணிகள் அடியேனை மன்னித்து அருள்வீர்களாக. அவ்வளவுதான் இந்தப் பதிவு.

* * *

Friday, January 24, 2020

நிலம் (61) - வீடு கட்டலாம் வாங்க

அளவான ஒரு குடும்பத்தலைவரின் கனவு - வீடு, கார், ஓரளவு நிரந்தர வருமானம், பிள்ளைகள் படிப்பு, தனக்கும் பிள்ளைகளுக்கும் எதிர்கால பாதுகாப்புக்கு சேமிப்பு. இது இல்லாதவர் எவரேனும் உண்டா?

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள் தொகையில் பெரும்பான்மையான மக்களுக்கு வசிக்க நல்ல வீடு இல்லை. பொருளை ஈட்டும் பொருட்டு, நகரங்களுக்குச் சென்றவர்களுக்கு, அங்கு சொத்து வாங்கவோ, வீடு கட்டவோ அவற்றின் விலை மிக அதிகம் என்பது முக்கிய காரணமாய் உள்ளது.

அபார்ட்மெண்ட்களில் வீடு கிடைத்தாலும், அந்த வாழ்க்கை உவப்பாக இருப்பதில்லை. தண்ணீர் பிரச்சினையிலிருந்து, இன்னும் பலப்பல பிரச்சினைகளை தினமும் சந்திக்க வேண்டி இருக்கும்.  நிர்வாகச் செலவுகள் வாடகை போல தொடரும். அபார்ட்மெண்ட் வீடுகள் விலையேற்றம் என்பது கிடையாது. 

நகரங்களை ஒட்டிய இடங்கள், வீடுகள் காலப்போக்கில் விலையேறலாம். நகரங்களை ஒட்டிய வீடுகளை விலைக்கு வாங்குவது என்பது சாதாரண மக்களுக்கு எளிதானதல்ல.

கடன் பெற்று வீடு வாங்குவது மட்டுமே பெரும்பான்மை மக்களுக்கு இப்போதைய ஒரே வழி. வீடுகளின் விலைகள் உயர்ந்து உள்ளன. வாடகை கொடுக்கும் பணத்துக்கு, மாதா மாதம் டியூ கட்டி விடலாம் என்று நினைத்து கடன் வாங்கும் நபர்களுக்கு மாத வருமானம் சரியாக கிடைக்கவில்லை என்றால் கடன்காரர்களின் தொல்லைகள் பெரிய அவஸ்தையை உருவாக்கும். 

அரசு அலுவலர்கள் ஓரளவு சமாளிக்கலாம். பிள்ளைகள் படிப்பு, நோய், அவசரச் செலவுகள், விழாச் செலவுகள், உறவுகள் என்றெல்லாம் கண் முன்னே செலவுக்கான வழிகள் கைகட்டி நிற்கும் போது வீட்டுக்கடன் அடைக்க இயலாமல் போனால் வங்கி ஏலத்துக்கு கொண்டு வந்து விடும். நிம்மதியற்ற வாழ்க்கை கடன் பெற்று வீடு வாங்கியவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அமைந்து விடுகிறது.

நகர வாழ்க்கை முறை வருடம் தோறும் புதுப்புது வைரஸை, நோயை உருவாக்கி மக்களை மரண பீதியடைய வைக்கிறது. தன்னளவில் பொருளாதார மேம்பாடு அடைய, மனிதர்கள் தங்களின் உடல் நலத்தை பணயம் வைப்பது,  சம்பாதித்து சேர்த்து வைப்பதில் பாதி நோய்க்காக, உடல்நலத்துக்காக செலவழிக்கப்படுகிறது. 50, 60களில் இருப்போரிடம் பேசிப் பார்த்தால் சொல்வார்கள்.

அந்தக் காலத்தில் கூரை - ஓடுகள் வேய்ந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள் 80, 90 வயது வரை நோயின்றி வாழ்ந்தார்கள். உடல் உழைப்பு மட்டுமல்ல வீடு என்பது முழு ஓய்வுக்கான இடமாக இருந்தது. கவலையற்ற வாழ்வு, அவர்கள் சுயசார்பு வாழ்க்கை முறையில் வாழ்ந்ததால் நோய்கள் அவர்களை அண்டாமல் இருந்தது. சுயசார்பு வாழ்க்கை என்றால் என்ன என கேட்கத் தோன்றும்

வீட்டில் இரண்டு தென்னை மரங்கள், ஒரு கொய்யா, கருவேப்பிலை, கொடத்தடிப் பக்கம் நான்கு கத்தரி, வெண்டைச் செடிகள், அவரை, பரங்கிச் செடி, புடலைச் செடி, பீர்க்குச் செடிகள், கீரைகள் இருந்ததால் உணவுக்காக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இவைகள் முழுச் சுகாதாரமான, உரங்கள் அற்ற சுத்தமான காய்கறிகள். நல்ல வெளிச்சம், காற்றோட்டமாய் வீடுகள் என கொசுக்கள் இல்லாத வீடுகளில் அவர்கள் வசித்தார்கள். மின்சாரத்துக்கும், தண்ணீருக்கும் மட்டுமே அவர்கள் அரசை நாடினார்கள். நோய்களுக்கு வீட்டில் உள்ள பொருட்களையே மருந்துகளாகப் பயன்படுத்தினார்கள். நல்ல செழிப்பும், வளமும், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். இன்றைக்கும் நகரங்களை ஒட்டிய கிராமங்களில் அவ்வாறுதான் வாழ்கிறார்கள்.

இப்போதைய நவ நாகரீக வாழ்க்கை முறை, நோய் இல்லாமல் இருப்பவர்கள் எங்கே உள்ளார்கள் என தேட வைத்திருக்கிறது. சுகர், பிரஷர் எல்லாம் ஃபேஷன் நோய்கள். அதற்கும் மருந்துச் செலவுகள் ஆகிக் கொண்டிதான் இருக்கின்றது. மக்கள் அதையும் ஏற்று வாழப் பழகிக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வேறு வழி இல்லை. 

இதையெல்லாம் யோசித்து, மிகக் குறைந்த விலையில் 30 வருட உத்தரவாதமளிக்கும் சுயச்சார்பு ஆரோக்கிய வீடுகளை ஏழை, எளிய மக்களுக்கும், மிடில் கிளாஸ் மக்களுக்கு வழங்கி, கடனற்ற வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டுமென்ற ஆவல் இதே ரியல் எஸ்டேட் துறையில் கடந்த 15 வருட அனுபவத்துடன் இருக்கும் எனக்கு ஏற்பட்டது.

இந்த ஆவலில் விளைந்ததுதான் ஆரோக்கிய வீடுகள் கட்டும் திட்டம். அதுவும் மிகவும் குறைந்த விலையில். மாதா மாதம் தவணைகள் இல்லா வாழ்க்கை முறை. சொர்க்கத்தை வழங்கும் இயற்கைசார் வீடுகள். வருமானமே வரவில்லை என்றாலும் மிகச் சொற்பமான செலவில் அமைதியாக வாழும் வீடுகள்.

விரைவில் வெளியிட இருக்கிறேன். எனது பிளாக்கிலும் எனது யூடியூப் சேனலான https://www.youtube.com/user/fortunebricksindia இணைந்திருங்கள். வெகு விரைவில் அவ்வகை வீடுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.

ஊட்டியில் 25 செண்ட் ஃபார்ம் ஹவுஸ் வீடுகள் விரைவில் விற்பனைக்கு வர உள்ளன. அதைப் பற்றியும் எனது பிளாக்கிலும், யூடியுப் சேனலிலும் தெரிந்து கொள்ளலாம்.

Thursday, January 23, 2020

நரலீலைகள் - அரசியல் என்றால் என்ன? (9)

பீமாவும் தங்கவேலும் சந்தித்தார்கள்.

”உன் பேச்சைக் கேட்டேன் தங்கம். மக்கள் சேவை என்றால் மகேசன் சேவை என்றுச் சொன்னாயே? மகேசன் வந்து உன்னிடம் சொன்னானா எனக்குச் சேவை செய் என்று”

“பீமா, மனிதனின் கடமை தான் என்ன? மக்களுக்குச் சேவை செய்வது தானே?”

“தங்கம், பூமியில் ஒரே ஒரு உண்மை மட்டுமே உண்டு. பசி. உன் பசியைத் தீர்த்துக் கொள்வதுதான் உனக்கு இயற்கை தந்திருக்கும் கடமை. பசி தீர்ப்பதற்காக பல வித உபாயங்களை உருவாக்கினார்கள். அந்த உபாயங்கள் மனிதர்களைத் தின்று கொண்டிருக்கிறது. உபாயங்களுக்குள் சிக்கிய மனிதர்கள் மீழ முடியாமல் மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கின்றார்கள்”

“என்ன சொல்கிறாய் பீமா? ஒன்றும் புரியவில்லையே?”

“உனக்கு புரிந்து விட்டால் இது போல பேசி இருப்பாயா? அரசியல் என்பது வேறு. வாழ்க்கை என்பது வேறு. அரசியல் பலி கேட்கும் போர்க்களம். இந்தப் போர்க்களத்தில் வெற்றியாளர்கள் எவரும் இல்லை. வெற்றி என்பதெல்லாம் அரசியலில் இல்லவே இல்லை.

அரசியல்வாதிகளின் முதன்மை எண்ணம் தன் நலம் மட்டுமே. தன் நலம் விரும்பாத ஒருவன் அரசியலுக்கு வரமாட்டான். துணியை உதறி தோளில் போட்டு விட்டு மனிதர்கள் இல்லாத இடத்துக்குச் சென்று விடுவான்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிறாய் நீ. யார் மக்கள்? அந்த மக்களின் தகுதி என்ன? அவர்களின் ஆசைகள் என்ன? அவர்களின் எண்ணங்கள் என்ன? இப்படி ஏதாவது தெரியுமா உனக்கு?

நீ அரசியலுக்கு வரலாம். வந்தால் நீயும் உன் வாரிசுகளும் பலி வாங்கப்படுவார்கள். அந்தக்கால மன்னர்களுக்கு இப்போது வாரிசுகள் இல்லை என்பதை நீ அறிவாய் தானே? அதே போலத்தான் அரசியல் தலைவர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் நடக்கும்.

அரசியலில் தர்மம் இல்லவே இல்லை. அறமும் இல்லை. தெளிந்த நீரோடை போலத் தெரியும் அரசியல் ஆற்றின் அடியில் கொடூரங்கள் நிறைந்து கிடக்கும். ஆசைப்படுபவன் மட்டுமே அரசியலுக்கு வருவான். நல்ல எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வரவே மாட்டார்கள். வரலாற்றினைப் புரட்டிப் பார் தங்கம். அதன் பிறகு அரசியலுக்கு வர முயற்சி செய்.

மக்களுக்குச் சேவை செய்கிறேன் பேர்வழி என பிதற்றி குழம்பி நிற்காமல் தெளிவாய் முடிவெடு. நீ சுகமாக இருக்க உழைக்க உன் எதிரில் இருக்கும் ஆயிரமாயிரம் வழிகளில் அரசியல் வழி ஒன்று. அரசியல் என்றால் அதிகாரம். அதிகாரம் என்றால் கட்டளை. கட்டளை என்றால் அகங்காரம். அகங்காரம் என்றால் அழிவு. இதைத்தான் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அனுபவித்து பின்னாலே, சேரும் இடம் சேர்கின்றார்கள். உனக்கும் அதுதான் வேண்டுமா? என்பதை நீ யோசித்து முடிவு செய்.

மகேசன் என்றாயே...! கோவில்கள் எல்லாம் இப்போது கோவில்களாகவா இருக்கின்றனவா? அவன் சொன்னான், இவன் சொன்னான், அந்த புத்தகத்தில் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது என்று எவரோ சொல்வதைக் கேட்டுக் கேட்டு, கோடானு கோடியாய் அடிமையாக வாழ்ந்து கொண்டிருப்பதை நீ அறியவில்லையா தங்கம்?”

தங்கவேல் குழம்பி போய் பீமாவைப் பார்த்தான். பீமா சிரித்துக் கொண்டே விடை பெற்றான்.

* * *

”சந்து, கவனித்தாயா? அரசியலுக்கு ஒரு கேரக்டர் வரப்போகிறது என நினைத்தேன். அதையும் பீமா கேட்டைப் போட்டு பூட்டி விட்டான். இனி தங்கவேல் கதை என்ன ஆகப் போகின்றதோ தெரியவில்லையே?”

“மாயாண்ணே, நம்ம கதாசிரியர் என்ன மவுனியா, ஜானகிராமனா? ரெகுலர் கதை விட. இந்த ஆள் வேற... பார்க்கலாம் அண்ணே... என்னதான் எழுதுகிறார் என்று”

“ஆமாடா சந்து. உனக்கும் இன்னும் எழுதவில்லை. பார்க்கலாம்....!”

* * *

உண்மையான உயரம்
எப்போதும் தாழ்வானது,
உண்மையான வேகம் 
எப்போதும் மெதுவானது,
மிகவும் உணர்ச்சியுள்ளது
மரத்துப் போனது,
பெரிய பேச்சாளன், ஊமை
ஏற்ற  இறக்கம், ஒரே அலையில் தான்,
வழியில்லாதவனே, சரியான வழிகாட்டி,
மிகப் பெரியதென்பது
மிகச் சிறிதானது
எல்லாம் கொடுப்பவனே
எல்லாம் பெறுபவன் 
- The Book of Mirdad





தொடரும்............................

Saturday, January 11, 2020

அம்மாவின் உயிர்

மனிதனைப் போன்ற சுயநலவாதி இந்த உலகத்திலேயே வேறு எந்த உயிரும் இல்லை. உடலில் ரத்தத்தின் சூடு இருக்கும் வரை அவன் எதையும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. வயதான பிறகு ஞானோதயம் வந்து என்ன புண்ணியம். போனது போனதுதான்.

நண்பரொருவரின் உறவினர்கள் கோவை வடவள்ளி அருகில் இருக்கும் முதியோர்கள் தங்குமிடத்தில் தங்கி, தங்களின் கடைசிக் காலத்தை கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைப் பார்த்து விட்டு வரலாம் என நானும், நண்பரும் சென்றிருந்தோம்.

மதிய உணவு நேரம். எங்களுக்கும் அவர்கள் சாப்பிடும் உணவு கிடைத்தது. சாத்வீக உணவு. பூசணிக்காய் மோர்குழம்பு, உருளைப் பொறியல், டம்ளரில் ரசம் கொடுத்தார்கள். தயிருடன் மோரும். சீரக தண்ணீர் குடிக்க. அப்பளம். பச்சை அரிசிச் சோறு. என்னுடன் சுமார் 25க்கும் அதிகமான, வயதான ஆண்களும், பெண்களும் சாப்பிட்டார்கள். ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளக் கூட இல்லை. என்னை வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  சாத்வீக உணவு எனது ஃபேவரைட். கோவை நேரம் ஜீவா போல இருக்க கொடுத்து வைக்கணும். நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வருவதில்லை.

(பூசணிக்காய் மோர் குழம்பு - படம் உதவி கூக்கிளார்)

என்னுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் முகங்களில் சோகம் கப்பிக் கிடந்தது. மகிழ்ச்சியாக ஒருத்தரைக் கூட பார்க்கவில்லை. என்னுடன் வந்த நண்பரின் உறவினர் தன் மனைவியுடன் தங்கி இருக்கிறார். ஆகையால் அவர் குழந்தை போல சிரித்துப் பேசினார். அவரின் மனைவி அக்மார்க் லட்சுமி தேவி. முகத்தில் அவ்வளவு சாந்தம். ’நல்லா இருங்க, நல்லா இருங்க’ன்னு சொல்லிக் கொண்டே இருந்தார். மனைவியுடன் கடைசிக் காலங்களைக் கழிப்பதுக்கும் குடுப்பினை வேண்டும்.

பேரன் பேத்திகளுடன் விளையாடிக் கொண்டு, ஆசையாக பெற்று வளர்த்த மகனை பார்த்தபடி வாழும் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. கால ஓட்டத்தில் பணம் பூதாகாரமாய் கண் முன்னே நிற்க, உறவுகளைத் தொலைத்து விட்டு, அதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிற வாழ்க்கை முறையில் அம்மா, அப்பாவைப் பார்க்க முடியுமா? எவரோ ஒருவருக்கு வேலை செய்யணும், காசு வரும். சுகப்படுத்தனும் நம்பி வந்தவர்களை. இல்லையெனில் சமூகம் காறித் துப்பி விடும். காசு அளவுகோல் கொண்டு மனிதன் அளக்கப்படுகிறான். வாழ்க்கை எடை போடப்படுகிறது. மனிதனின் நல்லது கெட்டது அதை வைத்துப் பேசப்படுகிறது. காசில்லாத வாழ்க்கை என்பது கனவில் கூட வராது மாமனிதர்களுக்கு.

ஊரிலிருந்து நடு நிசி ஒன்றைரைக்கு போன் வந்திருந்தது. விடிகாலையில் பார்த்தேன். அழைத்தால், ”உன் பிணம் என் வீட்டில் கிடக்கிறது, வந்து தூக்கிட்டுப் போ” என்றார் மாமா. என் மூத்த அக்காவின் கணவர். எனக்கு தாய் மாமா. பிணமென்று சொன்னது என் அம்மாவை. அம்மாவுக்கு மூன்று மகள்கள் வேண்டாத உறவாக அடியேன். அம்மா எப்போதும் மகள்கள் மீது அதுவும் முதல் மகள் மீது பிரியமாய் இருப்பார்கள். முதல் மகளின் பசங்களின் மீது அவ்வாறே. தலைச்சன் பிள்ளை அல்லவா? பாசம் இருக்கத்தானே செய்யும்.

இடையில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். சுமார் 15 வருடத்துக்கு முன்பு, மனைவி கர்ப்பமாக இருந்த போது, காலையில் ஒன்பது மணிக்குத்தான் உணவு தருவார் அம்மா. பால் கூட எட்டு மணிக்குதான். என் அக்காவின் மகள் கர்ப்பிணியாக இருக்கும் போது காலை ஆறு மணிக்கே பால் கறந்து, காய்ச்சி கொடுப்பாராம் அம்மா. மனைவி ஊருக்குச் சென்றிருந்த போது பார்த்து விட்டு என்னிடம் ஆற்றாமையால் சொன்னார். மனைவியிடம் ”அது பேத்தி,  நீ வேறு வீட்டுப் பெண் அல்லவா, அப்படித்தான், இதையெல்லாம் கண்டு கொள்ளாதே” என்று அப்போதைக்குச் சொல்லி வைத்தேன்.

அம்மா ஊரில் இருக்கும் போது கையில் அருவாளால் வெட்டிக் கொண்டார். காயமேற்பட்டு காய்ச்சல் வந்து விட்டது. சமைக்க முடியவில்லை. கடையிலிருந்தும், அக்கா வீட்டிலிருந்து வந்த சாப்பாட்டில் ஏதோ பிரச்சினை. வயித்தால் எடுத்து விட்டது. மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தும் சரியாகவில்லை. டீ ஹைட்ரேட் ஆகி உடல் சோர்வடைந்து விட்டது. டிஸ் எண்ட்ரி நிற்காமல் தொடர்ந்திருக்கிறது.

மாமா வீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். உடம்பு ரொம்ப மோசமாகி விட பயந்து போனார் மாமா. 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் எனக்கு இப்படி ஒரு அழைப்பு. அன்றைக்கே கார் கொண்டு வந்து, என் தங்கை வீட்டில் கொண்டு போய் அம்மாவைப் போட்டு விட்டு வந்து விட்டார். தங்கையாலும் முடியாமல் மறுநாள், பேராவூரணியில் இருக்கும் தர்ஷணா மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். எனக்கு போன். பல வேலைகள் கிடக்க மனதுக்குள் அலாரம் அடிக்க ஆரம்பித்தது.

நானும் நண்பரும் கோவையிலிருந்து கிளம்பினோம். மதியம் 12க்கு பேராவூரணி சென்று விட்டேன். அது எலும்பு முறிவு மருத்துவமனை. அங்கு பெட்டில் குளுகோஸ் ஏறிக் கொண்டிருந்தது. படுக்கையில் புரண்டு கொண்டு உளறிக் கொண்டிருந்தார் அம்மா. அருகில் தங்கை கையைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தார்.

”கிட்னி பெயிலியர் ஆகி விட்டது. இன்றைக்கு இரவு தாங்காது” என்றார் டாக்டர். ரிப்போர்ட் கொண்டு வரச் சொல்லி பார்த்தேன். ரிப்போர்ட் பக்கா நார்மல். டி ஹைட்ரேட் ஆகி இருந்ததைக் கண்டேன். பிபி இல்லை, சுகர் இல்லை, பிற எல்லாம் நார்மல். ஆஹா ஏதோ சமாச்சாரம் போலத் தெரிகிறதே, விட்டு வைத்தால் டாக்டர் நீலகண்டன் முடித்து விடுவார் போல என நினைத்துக் கொண்டு, சில சீன்களை போட்டு விட்டு, கோவைக்கு வந்து விட்டேன். அம்மாவுக்கு அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை. நீர் உணவும், சத்தான உணவும் எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் எனத் தெரிந்தது.

மறு நாள், வீட்டுக்கு அனுப்பி விட்டார் டாக்டர் நீலகண்டன். ஒரு பில் இல்லை. வெறும் டோக்கன். அதில் அமவுண்ட் குறித்துக் கொண்டு, சீல் வைத்து தருகிறார்கள் இந்த மருத்துவமனையில். மக்களே, யாரையாவது முடிக்க வேண்டுமென்றால் இங்கு அழைத்துச் செல்லுங்கள். பரலோக பிராப்தி கேரண்டி. அப்படி ஒரு கைராசி டாக்டர் இவர். (உண்மையில் நடந்த சம்பவத்தை எழுதி இருக்கிறேன். பொய் இல்லை,புரட்டு இல்லை).

வீட்டுக்கு வந்தவுடன் எலும்பு ரசம் வைத்து, சாப்பாடு கொடுக்கச் சொன்னேன் சின்ன அக்காவிடம். கோவையிலிருந்து மீண்டும் ஊருக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றேன். நான்கு நாட்கள் அங்கு இருந்தேன், நேரத்துக்கு உணவு கொடுக்க ஆள் தயாராகி விட்டார். கோவைக்கு அழைத்து வந்து விட்டேன். அவர் பாட்டுக்கு நடக்கிறார். கண் தெரியவில்லை என்றார். அதற்கு சொட்டு மருந்து ஊற்றி வருகிறேன். இப்போது நன்றாகத் தெரிகிறது என்கிறார். நான் சுத்த சைவம். அம்மாவோ அசைவம். இதை மட்டும் தான் என்னால் சரி செய்ய முடியவில்லை. இருப்பினும் 86 வயதுக்கு சைவமே சரியானது என மனதை தேற்றிக் கொள்கிறேன்.

மாமாவுக்கும், அக்காவுக்கும் வயதாகி விட்டது. தங்கையோ அம்மாவுக்கு சிலாக்கியமில்லாத மகள். இரண்டாவது மகளோ எப்போதும் ஏதாவது வைது கொண்டே இருப்பவர். நேரத்துக்குச் சாப்பாடு, குளியல். அவருக்கு அவைகள் தன் மகள்களிடமிருந்து கிடைக்கவில்லை.

அவன் என்ன செய்கிறான், அவன் பொண்டாட்டி சொகுசாத்தானே இருக்கிறாள், கொண்டு போய் வைத்துப் பார்க்கட்டுமே என்ற பேராசை என் உடன் பிறந்தார்களுக்கு. ”இங்கே பாரு கோதை, உன் மாமியாளை இனி இங்கு கொண்டு வந்து விடாதே, என்னால் பார்க்க முடியாது” என கடுமையான உத்தரவு வேறு போட்டிருக்கின்றார்கள் அக்காக்கள்.

அம்மாவுக்குச் சோறிடுவதும், பணி செய்வதும் எவ்வளவு கொடுமையான பாவச் செயல் தெரியுமா?  அந்தக் கொடுமையை மகள்கள் செய்யலாமா? மகன் தானே செய்ய வேண்டும். வேண்டாத மருமகள் இப்போது தாயாய் மாறினாள். எம் மகள்கள் என்னைப் பார்த்துக் கொள்வார்கள் என்று ரகளை செய்த அம்மா, அமைதியாக இருக்கிறார். காலம் சொல்லிய பதிலை அவர் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அவருக்குத் தெரியவில்லை வயோதிகர்கள் காப்பகம் பற்றி.

காலையில் பேரன் பேத்தியுடன் அளாவளாவல், நேரத்துக்கு உணவு, மருந்துகள், குளியல், அமைதியான தூக்கம், பழங்கதைகள் என சுவாரசியமாய் செல்கிறது அவரின் வாழ்க்கை.

மூத்தமகளின் மகன் ”தேவசேனாதிபதி பொங்கலுக்கு வருகிறேன் என்றுச் சொன்னானே வந்து விட்டானா?” என்று நேற்று மனைவியிடம் கேட்டாராம்.

தலைச்சன் பிள்ளையாகப் பிறப்பதுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா?

* * *