குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts

Wednesday, January 29, 2020

சில்லுகருப்பட்டி சொல்லும் தமிழ் சினிமா பிசினஸ்

நெட்பிளிக்ஸில் சூர்யா தயாரித்த சில்லுகருப்பட்டி படத்தை நேற்று மாலையில் பார்த்தேன். நான்கு கதைகள். 


கதை ஒன்று: குப்பை பொறுக்கும் ஒரு சிறுவன் பிங்க் குப்பை பையில் கிடைக்கும் ஒரு போட்டோ அதைத் தொடர்ந்து ஒரு டேப் ரெக்காடர், அதைத் தொடர்ந்து கிடைக்கும் ஒரு வைர மோதிரம். அது ஒரு வளர் பருவ பெண்ணுக்கு சொந்தமானது. பிங்க் குப்பை போடப்படும் இடத்தைக் கண்டுபிடித்து அவளிடம் டேப் ரெக்காடரையும், மோதிரத்தையும் சேர்க்கிறான்.

கதை இரண்டு: பால்ஸ் (அது என்னா பால்ஸுன்னு எனக்குச் சத்தியமாக புரியவில்லை) கேன்சரால் பாதிக்கப்படு பையன். ஓலாவில் இணையும் ஒரு ஃபேஷன் டிசைனர் பொண்ணு. பால்ஸில் கேன்சரால் பேச்சு வார்த்தையோடு போன திருமணம். இருவரும் இணையும் கதை. காக்காவைக் காப்பாத்தினா அது பளபளன்னு மின்னும் பொருளைக் கொண்டு வந்து தினமும் அந்தப் பொண்ணு கிட்டே கொடுக்கிறது. இயக்குனரின் கற்பனை வளம் கண்ணதாசனை மிஞ்சுகிறது.

கதை மூன்று: வயதான இரண்டு பெருசுகள் அன்பு கொள்வது, பின்னர் சேர்வது. 

கதை நான்கு: கிட்டே இருந்து பார்த்தா தெரியாது. எட்டே இருந்து பார்த்தா கோபுரமா தெரியும் என தத்துவம் பேசும் சமுத்துரக்கனி. பொண்டாட்டியைத்தான் சொன்னார். அயல் நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு எல்லாம் அவரவர் சம்சாரங்கள் கோபுரங்களாகத் தெரிகின்றார்கள் என்ற புதிய விஷயத்தை கற்றுக் கொடுத்தது. அப்புறம் இன்ப செக்ஸ் கணவனுக்கும் மனைவிக்கும். 

படமே முடிந்தது. இனி கதாகாலட்சேபத்துக்கு வருவோம்.

குடும்ப வாழ்க்கையில் வேலைக்குப் போகும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சமைத்துப் போடுவது, வீட்டினைப் பராமரிப்பது பெரும் கொடுமையானவை என்கிறார்கள் பெண்கள். பிள்ளைகள் பெற்றெடுக்க இனி ஹாஸ்பிட்டல் போதுமென்கிறார்கள். அந்தளவுக்கு ஆண்களால் பயனில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் பெண்கள். டில்டோக்கள் விற்பனை இந்தியாவில் படு சூடாக நடக்கிறது என்கிறது ஒரு சர்வே.  அந்த அக்கப்போர் ஒரு பக்கம் இருக்கட்டும். 

இந்தக் கதையை ஏன் சூர்யா தேர்ந்தெடுத்து தயாரித்தார்? என்ன ரகசியம்? சூட்சுமத்தின் முடிச்சை கொஞ்சமே கொஞ்சம் அவிழ்க்கிறேன்.(இந்த வார்த்தை ஆபாசமானது அல்ல)

தமிழ் சினிமாவில் ரஜினி குரூப், கமல் குரூப், கவுண்டர் குரூப், மதுரை குரூப், ஐயர் குரூப் என தனித்தனி பிசினஸ் குரூப்புகள் பல உண்டு. 

ரஜினியுடன் தனுஷ், ரஜினியின் நண்பர் நடராஜ் மகளைக் கட்டி, ரத்துச் செய்த விஷ்ணு விஷால் போன்றோர்கள், அனிருத் சமாச்சாரங்கள் (இளையராஜா போல வருவாராம் இவர் என ரஜினி புகழாரம் சூட்டியது) இன்னும் பக்கத்து, தூர சொந்த பந்தங்கள் இவர் படங்களில் நடிப்பார்கள். அவ்வப்போது புரட்சிக்காக சில பல இயக்குனர்கள் படங்களில் நடிப்பது போன்ற அல்லுசில்லு வேலைகளை இவர்கள் செய்வார்கள்.

கமலுடன் ரமேஷ் அரவிந்த் நிச்சயம், ஐயராத்து அம்பிக்களாகவும், மாமிகளாகவும் திரைப்படங்களில் நடிப்பார்கள். இவர் அவ்வப்போது சில பல ஸ்டண்டுகளை அடிப்பார். இனப்பாசம் அதிகம். அத்தனையும் ஒன்றுக்கும் ஆவாது போய் விடும்.

கவுண்டர் குரூப்பில் சூர்யா,கார்த்திக், சத்தியராஜ், சிபிராஜ், சத்யன், ஞானவேல் ராஜா, அவ்வப்போது நண்பர்கள் என தனி ஆவர்த்தனம்.

மதுரை குரூப்பில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிகுமார் இப்படி இன்னும் ஒரு சிலர் என இது கொஞ்சம் வித்தியாசமானது.

ஐயர் குரூப்பில் விசு (கிஸ்மு அவசியம்), சங்கர்( நண்பன் படத்தில் வரும் ஆஸ்துமா ஐயர்), மணிரத்னம் வகையறாக்களின் தனி ஆட்டம். 

சன் டிவி, ஒரு சில தயாரிப்பாளர்கள் எல்லாம் மேற்கண்ட க்ரூப்புகளோடு இணைந்து கொள்வார்கள். இன்றைய தினகரனில் ரஜினியும், பேர் கிரில்ஸும் போட்டோ ஷூட் செய்தியும், ரஜினி மீதான வருமான வரித்துறைச் செய்தியும் தடவிக் கொடுத்தபடியே வெளிவந்திருந்த மர்மங்கள் அது தனி ராஜ்ஜியம்.

விஜய், அஜித் சமாச்சாரங்கள் வேறு. அவர்கள் தங்களை பிராண்டாக மாற்றி வேஷம் கட்டிக் கொண்டார்கள். அஜித் ஐயராத்துக்காரர் என்பது தனிப்பட்ட விஷயம்.

ரெட்டி க்ரூப் விஷால், விஜய்சேதுபதி வகையறாக்கள் வேறு.
பெரும்பாலும் நல்ல சினிமாக்கள், கலெக்‌ஷன் ஆகும் சினிமாக்கள் எல்லாம் இவர்கள் தொடர்பானவர்களிடமிருந்தோ அல்லது இவர்களின் தயாரிப்பிலோ தான் வரும்.  கனவுகளோடு வரும் இயக்குனர்களின் அட்டகாசமான கதைகள் பற்றி இவர்களுக்குத் தெரியாமல் போகாது. இண்டஸ்ட்ரியில் அந்தளவுக்கு போட்டுக் கொடுக்கும் ஆட்கள் தடுக்கி விழுந்தால் லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி ஒரு படம் வெளி வந்து வெற்றி பெறுவது பெரும்பாலும் இல்லை எனலாம். 

விஜய் டிவி அலப்பரை நடிகர்கள். புதுமுக நடிகர்கள், இன்ன பிற அல்லுசில்லுகள் அவ்வப்போது எவராவது ஏமாந்த சோனகிரிகளின் தலையில் மிளகாய் அரைத்து ஹீரோக்களாக வேஷம் கட்டுவார்கள். பெரும்பாலும் ராமராஜன் கதையாக முடிந்து போவார்கள். இம்மாதிரி படங்களால் தான் தமிழ் சினிமா இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை சினிமாக்காரர்கள் சொல்வார்கள். 

இந்த ஐந்தாறு சினிமா குரூப்புகளுடன் இயைந்து செல்பவர்களால் தான் சினிமா தயாரித்து வெளியிட முடியும். தியேட்டர்கள் பெரும்பாலும் இந்த ஐந்தாறு குருப்களின் கண்ட்ரோலில் இருக்கும். இந்த குரூப்புகளுக்குள் தான் சண்டை சச்சரவுகள் நடக்கும். செய்திகளாகும், பரபரப்பாகும். இவர்களின் தொடர்பில் இருக்கும் வெளியீட்டாளர்களால் சினிமா வியாபாரமாகும். 

தனி ஒருவன் சினிமா தயாரிக்கவோ அல்லது ஹீரோவாக நடிக்கவோ விடவே மாட்டார்கள். அப்படி வந்து விட்டால் ஜெயிக்க வைத்து, மொத்தமாக ஜோலியை முடித்து விடுவார்கள். இங்கு ஜோலி என்பது வேலையை என்று அர்த்தம் கொள்ள வேண்டுமென்று சொல்லி விடுகிறேன். நமக்கெல்லாம் வக்கீலும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை. ஜோலி என்கிற வார்த்தைக்கு அவ்வளவு மகிமை.

நல்ல கதை வைத்திருக்கும் இயக்குனர் இந்தக் குரூப்பில் கதை சொல்ல வேண்டும். கதையில் ஒட்டுக்கள், வெட்டுக்கள், ஒரு சில இணைப்புகள் கோர்க்கப்பட்டு வேறு ஒருவரின் இயக்கத்தில் வெளிவரும். இப்போது கோர்ட்டுக்குப் போகின்றார்கள். அப்போதெல்லாம் அய்யோ பாவம் கதைதான். இப்போது ஆரம்பத்தில் இருந்து படியுங்கள் சூர்யா ஏன் இந்தக் கதையை தேர்ந்தெடுத்து தயாரித்தார் என்பதை...

சில்லுகருப்பட்டி திரைப்படம் சுட்டிக்காட்டும் தமிழ் சினிமா பிசினஸ் இதுதான். இதைச் சரி செய்ய இயலுமா? ஏன் முடியாது? ஆனால் ஒருவரும் செய்ய மாட்டார்கள். செய்யவும் விடமாட்டார்கள்.

புரிந்தவர்கள் சிரித்துக் கொள்ளுங்கள். ஆதர்சன ஹீரோக்களின் ரசிகசிகாமணிகள் அடியேனை மன்னித்து அருள்வீர்களாக. அவ்வளவுதான் இந்தப் பதிவு.

* * *

Thursday, August 16, 2012

அட்டகத்தி திரைப்படம்

அழகான, அற்புதமான ஒரு பாசச் சந்திப்பின் பின்பு நானும் எனது நண்பரும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கோவை சிங்காநல்லூரில் இருக்கும் அம்பாள் சினி தியேட்டர் கூட்டத்தால் நிரம்பிக் கொண்டிருந்தது. நண்பர், அட்டகத்தி பார்ப்போமா என்றார். 

தியாகராஜர் காலத்திலிருந்து இன்று வரை காதல் காதல் காதல் என்றே தமிழ் சினிமா உலகம் படமாய் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறது. தமிழனுக்கு காதல் செய்வதே முழு முதல் தொழிலாய் மாறி இருக்கிறது. சிறிய வயதில் இருந்து உனக்கு20 எனக்கு 40 என்பது வரையும், முதல் மரியாதை காதல் என்பதாகவும் தமிழ் சினிமா உலகம் காதல் போதையில் ஊறி ஊறி அதிலே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சின்னஞ் சிறு குழந்தையைக் கூட விட்டு வைக்காமல் குஷி படத்தில் இயக்குனர் காதலைக் காட்டி தன் இயக்குனர் திறமையை வெளிப்படுத்தினார். அந்த வகையில் வந்த மற்றொரு படம் தான் அட்டகத்தி.

விடலைப் பருவத்தில் பார்க்கும் பெண்களை எல்லாம் காதலிக்க முயல்வோம் அல்லவா அதை ஹீரோ செய்கிறார். ஃபுட்போர்டில் தொங்கிக் கொண்டே செய்கிறார். ஒரு பெண் கூட அவரைக் காதலிக்கவே இல்லை. இடைவேளைக்குப் பிறகு கல்லூரி செல்லும் ஹீரோ முன்பு தன்னை அண்ணன் என்றுச் சொல்லிய ஹீரோயினை மீண்டும் சந்திக்கிறார். ஹீரோயினின் சில சைகளை கண்டு அவள் தன்னைக் காதலிக்கிறார் என்று நினைத்து அவளின் மீது காதல் கொள்கிறார். முடிவில் பார்த்தால் தன் பெயரைக் கொண்ட வேறொருவரை அவள் திருமணம் செய்து கொள்கிறாள். விரக்தி அடையும் ஹீரோவை ஒரு பிச்சைக்காரன் என் பெண்ணைக் கட்டிக்கோ என்றுச் சொல்லும் போது ஹீரோ சிரிக்கிறார். அப்புறம் அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தையெல்லாம் இருக்கிறது. 

அட்டகத்தியை கீழே வரும் பாடலில் அடக்கி விடலாம்.

”ஆள்வார்ப்பேட்டை ஆளுடா அறிவுரையைக் கேளுடா, ஒரே காதல் ஊரில் இல்லையடா” - என்ற கமல்ஹாசனின் பாடல் தான் படத்தின் ஒன் லைன்.

ஒரு காலத்தில் காதல் காதல் என்று உருகி உருகிக் காதலித்த கமல்ஹாசன் தான் (தேரே மேரே பீஜ்ஜுமா பாடல் நினைவில் இருக்கிறதா உங்களுக்கு) மேலே இருக்கும் பாடலைப் பாடி இருக்கிறார்.

காலம் மாறுகிறது. மாறிக் கொண்டே இருக்கிறது. காதலுக்கு ஒவ்வொரு காலத்திலும் டெஃபனிஷன் மாறிக் கொண்டே வருகிறது.

படத்தின் முதல் பாதி சுவாரஸியமாய் இருக்கிறது. அடுத்த பாதியை சொதப்பி விட்டார் இயக்குனர் என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. அடுத்த பாதியை பார்த்துக் கொண்டிருந்த நண்பர் கிளைமேக்ஸ் சோகமாய் இருக்கப் போகிறது என்றார். படத்தின் அடுத்த அடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்கப் போகிறது எனபதையும், கிளைமேக்ஸை எளிதில் ஊகித்து விடும் திரைக்கதையும் படத்தின் பிளாக்மார்க்.

காலத்தால் அழிக்கவே முடியாத எத்தனையோ பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம். ரீமிக்ஸ் கூட பழைய பாடல்கள் இன்றைக்கும் ஹிட் அடிக்கின்றன. கானா பாடல்களில் புரட்சி செய்த இசையமைப்பாளர் தேவா இன்றைக்கு இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால் இளையராஜா இருக்கிறார். இன்றைக்கும் அவரின் பாடல்கள் தான் ஹிட்டோ ஹிட். இப்படத்தின் பாடல்கள் பற்றி எழுத ஒன்றுமில்லை. பின்னணி இசை சுமார் ரகம். கிடாரின் இசைக் கோர்ப்பு எரிச்சலைத் தருகிறது. குப்பத்து களத்தில் கிடார் இசையும், ஆங்காங்கே சில பழைய ட்யூன்களும் வருகின்றன. படத்தில் ஒட்டவே ஒட்டாத, தனியாக தெரிகிறது.

காதல் படங்களையும், ரவுடியிசத்தையும், ஒரே ஆள் நூறு பேரை அடிக்கும் படங்களையும் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகப் பெருமக்கள் மாறாத வரை இப்படியான படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

ஏன் இது போன்ற படங்களே வந்து கொண்டிருக்கின்றன என்று யோசித்தால் ஒரு காரணம் தெளிவாய் தெரிகிறது.

பிரம்மனுக்கு அடுத்தபடியாக, ஒரு தாய்க்கு அடுத்த படியாக இருக்கும் படைப்பாளியான இயக்குனர்கள், ஹீரோ வரும் போது மெய்பொத்தி எழுந்து நின்று சலாம் போடும் போக்கினை மாற்றாத வரை எந்த ஒரு படைப்பும் முழுமையானதாக இருக்க முடியாது. 

* * *

Wednesday, June 27, 2012

கரிசல் மண் திரைப்படத்தின் மனதை மயக்கும் பாடல்


மிகச் சமீபத்தில் எனது ஊர் பகுதியைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், சினிமா பட இயக்குனருமான சுப. தமிழ்வாணன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் சினிமா பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.

இவர் தற்போது “கரிசல் மண்” என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். பேராவூரணி பகுதி, கீரமங்கலம், பைங்கால், வேமங்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்.

இளையராஜாவிடம் வேலை செய்து கொண்டிருந்த திரு யானிதேஷ் என்ற புது இசையமைப்பாளர் தன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்றும், நீங்கள் அவசியம் திரைப்படப் பாடல்களை கேட்டு கருத்துச் சொல்ல வேண்டுமென்றும் சொன்னார்.

என்னைப் பொறுத்தவரை முதன் முதலில் ஒரு திரைப்படப்பாடலைக் கேட்கின்ற போது மனது பட்டென்று பாடலோடு ஒட்ட வேண்டும் என்று நினைப்பேன். அத்தகைய பாடல்கள் எப்போதாவது தான் தமிழ் சினிமாவில் வெளியிடப்படுகின்றன.

எனது தாத்தா மாணிக்கதேவர் இந்திய தேசிய ராணுவத்தில் வேலை செய்து, பின்னர் கைதாகி மலேசியா சிறையில் இருந்து வெளிவந்த போது வானொலிப் பெட்டி ஒன்றினை வாங்கி வந்திருந்தார். அதை நான் வெகு பத்திரமாக பாதுகாத்து வந்தேன். பெண்கள் கல்லூரி ஒன்றில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டராக பணி புரிந்து விட்டு, பத்து நாள் லீவில் தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

1997ம் வருடம் என்று நினைக்கிறேன். படப்பைக் கற்கள் பதிந்த வீட்டு வாசலில் குளிர் காலமொன்றின் சூரியன் உதிக்காத பொழுதில் செய்தி கேட்பதற்காக வானொலியை ஆன் செய்த போது, இளையராஜாவின் காதலுக்கு மரியாதை படத்தின் “என்னைத் தாலாட்ட வருவாளா?” பாடலை முதன் முதலாய் கேட்க நேர்ந்தது. வானொலி என்பதால் அதே பாட்டை அடுத்த தடவை உடனடியாக கேட்க இயலாதே. கேட்ட பொழுதே மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது பாடலும், ராகமும்.

அப்பாடலைக் கேட்பதற்காகவே வாக்மென் வாங்கி, கேசட்டில் அப்பாடலைப் பதிவு செய்து பலமுறை கேட்டிருக்கிறேன்.


அவரிடம் நிச்சயம் கேட்கிறேன் என்றுச் சொல்லி இருந்தேன். தற்போது வரக்கூடிய திரைப்படப்பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டுவதே இல்லை. அத்தி பூத்தாற்போல ஏதோ ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே மனதில் பதிகின்றன. 

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் ”ஏண்டி கள்ளச்சி” என்ற பாடல் என்னை அமைதியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதே போல நினைத்தாலே இனிக்கும் படத்தின் “அழகாய் பூக்குதே” என்ற பாடலு என்னைக் கவர்ந்த சமீபத்திய பாடல்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படியான ஒரு பாடலை “கரிசல் மண்” படத்தில் கேட்க நேர்ந்தது. நீங்களும் கேட்டு விட்டு பாடல் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். அபுதாபியைச் சேர்ந்த பாடகி வந்தனா இப்பாடலைப் பாடி இருக்கிறார். இயக்குனர் சுப.தமிழ்வாணனும், இசையமைப்பாளர் யானி தேஷ்க்கும், பாடகி வந்தனாவிற்கும், பாடலாசிரியர் சுப்ரமணிய நந்தி அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதோ அந்தப் பாடல்


- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Saturday, April 28, 2012

மனதுக்கு வலி தரும் காதல்

மூளை முதல் கொண்டு நரம்புகள் அனைத்தும் விரைத்து இதயம் துடி துடிக்க, உதிர அணுக்கள் எல்லாம் காதலியின் பெயரை உச்சரித்துக் கொண்டு உடம்பெல்லாம் பரவ, உதிரச் சூட்டின் வலி தாளாமல் உடல் சோர்ந்து வீழ, மனது வெந்து வெதும்பி வீழ, காதலியின் வருகைக்காக வரும் வழி பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துப் போக, காதலியின் குரல் கேளாமையால் காதுகள் எல்லாம் பஞ்சடைத்து போக மொத்தத்தில் அவளின் நினைவாலே உருமாறிப் போய் நிற்கும் காதலனின் தவிப்பை கமல் இக்காட்சிகளின் வழியே உருவகப்படுத்துவார்.

இதோ அந்தப் பாடலும் காட்சியும் உங்களுக்காக.



- ப்ரியங்களுடன் 
கோவை எம் தங்கவேல்