குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label யானிதேஷ். Show all posts
Showing posts with label யானிதேஷ். Show all posts

Wednesday, June 27, 2012

கரிசல் மண் திரைப்படத்தின் மனதை மயக்கும் பாடல்


மிகச் சமீபத்தில் எனது ஊர் பகுதியைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், சினிமா பட இயக்குனருமான சுப. தமிழ்வாணன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் சினிமா பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.

இவர் தற்போது “கரிசல் மண்” என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். பேராவூரணி பகுதி, கீரமங்கலம், பைங்கால், வேமங்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்.

இளையராஜாவிடம் வேலை செய்து கொண்டிருந்த திரு யானிதேஷ் என்ற புது இசையமைப்பாளர் தன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்றும், நீங்கள் அவசியம் திரைப்படப் பாடல்களை கேட்டு கருத்துச் சொல்ல வேண்டுமென்றும் சொன்னார்.

என்னைப் பொறுத்தவரை முதன் முதலில் ஒரு திரைப்படப்பாடலைக் கேட்கின்ற போது மனது பட்டென்று பாடலோடு ஒட்ட வேண்டும் என்று நினைப்பேன். அத்தகைய பாடல்கள் எப்போதாவது தான் தமிழ் சினிமாவில் வெளியிடப்படுகின்றன.

எனது தாத்தா மாணிக்கதேவர் இந்திய தேசிய ராணுவத்தில் வேலை செய்து, பின்னர் கைதாகி மலேசியா சிறையில் இருந்து வெளிவந்த போது வானொலிப் பெட்டி ஒன்றினை வாங்கி வந்திருந்தார். அதை நான் வெகு பத்திரமாக பாதுகாத்து வந்தேன். பெண்கள் கல்லூரி ஒன்றில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டராக பணி புரிந்து விட்டு, பத்து நாள் லீவில் தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

1997ம் வருடம் என்று நினைக்கிறேன். படப்பைக் கற்கள் பதிந்த வீட்டு வாசலில் குளிர் காலமொன்றின் சூரியன் உதிக்காத பொழுதில் செய்தி கேட்பதற்காக வானொலியை ஆன் செய்த போது, இளையராஜாவின் காதலுக்கு மரியாதை படத்தின் “என்னைத் தாலாட்ட வருவாளா?” பாடலை முதன் முதலாய் கேட்க நேர்ந்தது. வானொலி என்பதால் அதே பாட்டை அடுத்த தடவை உடனடியாக கேட்க இயலாதே. கேட்ட பொழுதே மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது பாடலும், ராகமும்.

அப்பாடலைக் கேட்பதற்காகவே வாக்மென் வாங்கி, கேசட்டில் அப்பாடலைப் பதிவு செய்து பலமுறை கேட்டிருக்கிறேன்.


அவரிடம் நிச்சயம் கேட்கிறேன் என்றுச் சொல்லி இருந்தேன். தற்போது வரக்கூடிய திரைப்படப்பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டுவதே இல்லை. அத்தி பூத்தாற்போல ஏதோ ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே மனதில் பதிகின்றன. 

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் ”ஏண்டி கள்ளச்சி” என்ற பாடல் என்னை அமைதியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதே போல நினைத்தாலே இனிக்கும் படத்தின் “அழகாய் பூக்குதே” என்ற பாடலு என்னைக் கவர்ந்த சமீபத்திய பாடல்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படியான ஒரு பாடலை “கரிசல் மண்” படத்தில் கேட்க நேர்ந்தது. நீங்களும் கேட்டு விட்டு பாடல் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். அபுதாபியைச் சேர்ந்த பாடகி வந்தனா இப்பாடலைப் பாடி இருக்கிறார். இயக்குனர் சுப.தமிழ்வாணனும், இசையமைப்பாளர் யானி தேஷ்க்கும், பாடகி வந்தனாவிற்கும், பாடலாசிரியர் சுப்ரமணிய நந்தி அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதோ அந்தப் பாடல்


- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்