குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, March 31, 2020

காவக்காரர்கள்

கிராமங்களின் எல்லைப்புறமாய் கருப்புசாமி கோவில் இருக்கும். ஊர் காவல் தெய்வம் என்பார்கள்.  அந்தக் காலங்களில் ஒவ்வொரு ஊருக்கும் காவல் இருக்க, கையில் கம்புடன், பந்தத்தை ஏந்தியபடி ஊர் எல்லைகளில் காவல் இருப்பார்கள் என படித்திருக்கிறோம்.

காவல்காரர்கள் ஒவ்வொருவருக்கும் ஊரிலிருந்து அவர்களுக்குத் தேவையானவை அனைத்தும் கொடுக்கப்படும். காவல்காரர்களாய் இருப்பவர்கள் சாமிகளாய் வணங்கப்பட்டார்கள்.

இதோ, இன்று தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள் நம் காவல் தெய்வங்கள். தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் கொரானாவை பரவ விடாமல் தடுக்க, ஐந்தறிவு படைத்த மனிதர்களுக்குப் புரிய வைப்பதற்காக கையில் தடியுடன் நின்று கொண்டிருக்கின்றார்கள்.

நடுவீதிகள், தெரு ஓரங்கள், வீடுகள், நிறுவனங்கள் என ஊன், உறக்கம் இன்றி 24 மணி நேரமும் அவர்கள் வேலை செய்கிறார்கள். வெயில், பனி, இரவு எனப் பாராமல் நின்று கொண்டிருக்கின்றார்கள். 

ஒருவர் கண்களில் கண்ணீருடன் வேண்டுகிறார். ஒருவர் பயமுறுத்தி தெருவுக்கு வராதே என்கிறார். ஒருவர் போதாத புத்திகாரர்களுக்கு பிரம்படி கொடுக்கிறார். 

இரவில் வீட்டுக்குச் சென்று தெருவில் கோணிப்பை விரித்து தூங்கி விட்டு, வீட்டின் பின்புறமாகச் சென்று குளித்து, துணிகளைத் துவைத்து, குடும்பத்தைப் பார்த்து விட்டு மீண்டும் காவல் பணிக்குத் திரும்புகிறார்கள்.

24 மணி நேரமும் பணி. மனசும், உடம்பு ஓய்வெடுக்க இயலா நிலையில் அவர்கள் படும் துயரங்கள், மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவருக்கும் இதயத்தில் ரத்தத்தை வரவைக்கும்.

அன்பு காவல்தெய்வங்களே...!

உங்கள் அனைவருக்கும் மனித சமூகம் சார்பாக எனது வணக்கத்தையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் காவலாய் இருக்கும் சூழலை எம்மைப் போன்றவர்கள் தான் உருவாக்கினோம். இனி அது நடக்காது.

உங்கள் தேவைகளை நிறைவேற்றிடவும், தர்மத்தின் தலைமகனாய் தலை நிமிர்ந்து வாழ்ந்திடவும், சட்டத்தையும், தர்மத்தையும் காக்கும் காவல்காரர்களாய் நிமிர்ந்து நடந்திட நாங்கள் நல்ல ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்.

எங்களை எப்போதும் காவல்காத்து வரும் தெய்வங்களான உங்களுக்கு எங்களால் முடிந்த சிறிய உதவியாக இனி அதைச் செய்வோம்.

சுய நலமும், ஜாதியும், மதமும் இனி எங்களைப் பீடித்து, தீயவர்களையும், கொடியவர்களையும், சுய நலகும்பல்களையும் கண்டுணர்ந்து இருக்கிறோம். அவர்களை ஆட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி, நல்லவர்களை, வல்லவர்களை, மனிதாபிமானம் மிக்கவர்களை, மக்கள் நலத்தில் சுய நலமின்றி பொது நலமிக்க நல்லோர்களையும் தேர்ந்தெடுக்கிறோம்.

தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் நலமுடனும், வளமுடனும் வாழ எல்லாம் வல்ல இயற்கைச் சக்தியை வணங்கி பிரார்த்திக்கிறோம்.

பல்லாண்டு வாழ்க எங்கள் தெய்வங்களே....!


Monday, March 30, 2020

சைவ ஈரல் குழம்பு செய்வது எப்படி?


வீட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி நல்ல சத்தான உணவு சமைப்பதில் நம் தமிழர்கள் கில்லாடிகள். அப்படியான ஒரு குழம்பு தான் இந்த சைவ ஈரல் குழம்பு.


ஈரலுக்குத் தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு – ஒரு டம்ளர்
கொஞ்சம் உப்பு

மசாலாவுக்கு தேவையான பொருட்கள்:
தேங்காய் கால் மூடி
கசகசா – 1 ஸ்பூன்

குழம்பு வைப்பது எப்படி?

பச்சைப்பயற்றினை மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரையளவு உப்புச் சேர்த்து, இட்லி தட்டில் மாவினை ஊற்றி வேக வைக்கவும். பதினைந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். வெந்த இட்லிகளை பார்த்தால் ஈரல் போலவே இருக்கும். அதனை நறுக்கிக் கொள்ளவும்.

அரை மூடி தேங்காய் பூவுடன், ஒரு டீஸ்பூன் கசகசா சேர்த்து வதக்கி அரைத்து தனியே வைத்துக் கொள்ளவும்.

இஞ்சி ஒரு துண்டு, பத்துப் பற்கள் பூண்டினைச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு துண்டு பட்ட, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். 

இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதனுடன் இரண்டு தக்காளி நறுக்கியதைச் சேர்த்து கிளறவும். தக்காளி வதங்கியவுடன் மஞ்சள் தூள், மூன்று ஸ்பூன் மல்லித்தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் சோம்பு தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து கிளறி விட்டு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பாதியாக குழம்பு வற்றியவுடன், தேங்காய் அரைத்த விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் போது, வெட்டி வைத்த பாசிப்பயறு இட்லி துண்டுகளைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதித்தவுடன் இறக்கவும்,

முடிவில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்துக் கிளறி விட்டு இறக்கவும்.

மல்லித்தழை சேர்த்து கிளறி விடவும்,

சூடான சாதம், சூடான இடியாப்பம், அல்லது சப்பாத்தி ஆகியவைகளுக்கு மிகச் சரியான சைடு டிஸ். ஈரல் குழம்பு போலவே சுவை இருக்கும். அந்த பாசிப்பயறு துண்டுகள் மசாலாவில் ஊறி ஈரல் போலவே இருக்கும். மிகச் சரியான சரிவிகித குழம்பு இது.

முயற்சித்துப் பாருங்கள்.


உலகை உலுக்கிய கொரானா வழக்கு(2)

நீதிபதி சங்கருக்கு ஆற்றாமை தாங்க முடியவில்லை. இந்தக் கொரானா செய்த வேலையால் அவரின் இமயமலைப்பயணம் சீரழிந்து போனது பற்றி அவருக்குள் புழுங்கினார்.

சரியாக 22.03.2020 இந்தியா முழுக்க 144 தடை விதித்தது மத்திய அரசு. வேறு வழியே இல்லாமல் இமயமலை ஆன்மீக பயணம் கேன்சல் செய்யப்பட்டது. 

அய்யோ...அய்யோ என மனதுக்குள் வெம்பினார் நீதிபதி சங்கர். அருமையான சான்ஸ் போச்சே என நொந்தார். கொரானா என்ற பெயரைக் கேட்டாலே காண்ட் ஆகினார். 

பூஜா ஹெக்டேவை நினைத்து நினைத்து வேதனையில் ஆழ்ந்தார். 

“ஏய்! கொரானாவே, நானென்ன கேட்டேன். ரஜினிகாந்த் செல்வது போல ஒரு ஆன்மீகப் பயணம். இமயமலைக்கு. உதவிக்கு பூஜா ஹெக்டே. வேறு என்ன எதிர்பார்த்தேன்? தியானம் செய்தேனா? முதலமைச்சர் பதவி கேட்டேனா? இல்லை ராஜ்ய சபா எம்.பி பதவியைக் கேட்டேனா? எதுவும் இல்லையே. அட்லீஸ்ட் கவர்னர் போஸ்டாவது கேட்டிருக்கேனா? இல்லையே. இரண்டு நாள் இமயமலைச் சுற்றுப் பயணம் தானே கேட்டேன். அதற்காகவா என்னை இந்தப் பாடு படுத்துகிறாய். இரு உன்னை கூண்டில் ஏற்றி தூக்கு தண்டனை தராமல் விடப்போவதில்லை. மருத்துவ உலகம் உன்னை ஒழிக்கட்டும். அதுவரையில் நான் சும்மா இருக்கப் போவதில்லை. சட்டம் உன்னை விடவே விடாது” என தன் மனதுக்குள் கருவினார்.

அந்த நேரம் பார்த்து கோவை சரவணம்பட்டி போலீஸ் மூலம் இந்த வழக்கு வந்தது. உடனே விசாரிக்கப்படும் என உத்தரவு போட்டு நீதிமன்றத்தில் உட்கார்ந்து விட்டார்.

கொரானாவை கூண்டுக்குள் ஏற்றி தூக்கில் போட அவரால் ஆன சட்டத்தின் வழியை அவர் செயல்படுத்த துணிந்து விட்டார். ஆகவே முகத்தில் மாஸ்கை கட்டியபடி சட்டப்பணி ஆற்ற கோர்ட்டுக்கு வந்து விட்டார் மாண்புமிகு நீதிபதி.

இந்த இமயமலை டீலிங்கைக் கேள்விப்பட்ட எதிர்கட்சி உதவிதலைவர் தன் மாமா மகன் மூலம் நயன்தாராவை ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தார். நீதிபதி அவர் பாட்டுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து விட்டால்,  நம்மால் ஜெயிலில் கிடக்க முடியாதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். பூஜா ஹெக்டே நீதிபதியின் உள்ளம் கவர்ந்த கள்ளி என்பதை இவருக்கு யாரும் சொல்லவில்லை. 

நீதிபதி நயன் தாராவை கிழட்டு மூதி எனச் சொல்வது அவருக்குத் தெரியாது.  நல்லவேளை, இந்த டீலிங்கைச் சொல்லி இருந்தால், இமயமலை டீலிங்கை விட்டு விட்டு உடனடியாக கைது வாரண்டு பிறப்பித்து இருப்பார். 

அதற்குள் கொரானா வந்து எல்லாவற்றையும் கொலாப்ஸாக்கி விட்டது. எதிர்கட்சித் தலைவருக்கு நல்ல நேரம் தப்பித்துக் கொண்டார்.

இது எதுவும் தெரியாமல் பூஜா ஹெக்டேவும், நயன் தாராவும் அவரவர் வேலையில் இருந்தனர் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

டிவி பார்த்துக் கொண்டிருந்த உயர் நீதிமன்ற வக்கீல் அங்கு வந்த வேலனைப் பார்த்து டென்சனார். வேலன் அவராபீசில் கூட்டித் துடைக்கிறவன். அவனிங்கே என்ன செய்கிறான் என குழம்பினார் ராஜ்.

கொரானாவுக்கு ஆதரவாக வாதாட வேலன் ஆஜராகி இருப்பதை கோர்ட்டில் இருந்த அனைவரும் வச்ச கண்ணின் இமை மூடாமல் பார்த்தனர். மீடியாக்கள் வேலன் முகத்தை ஜூம் செய்தன. நீதிபதி சங்கர் கடுப்போடு வேலனைப் பார்த்தார். அங்கு பூஜா ஹெக்டே டான்ஸ் ஆடுவதைப் போல தோன்ற, மீண்டும் மீண்டும் எரிச்சலானார்.

”கணம் நீதிபதி அவர்களே, எனது கட்சிக்காரர் கொரானாவுக்கு ஆதரவாக வாதாட அனுமதி வழங்கியமைக்கு எனது நன்றிகள் கோடானு கோடியைத் தெரிவித்துக் கொண்டு தொடர்கிறேன்” என்றான் வேலன்.

“ம்.. ஆகட்டும். தொடருங்கள்” என்றார் நீதிபதி.

“சரவணம்பட்டி போலீஸார் பதிந்த குற்றப்பத்திரிக்கையிலே, எனது கட்சிக்காரர் கொரானா மக்களை கொன்று வருவதாகவும்,  பெரும் துன்பத்தைத் தருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அதாவது கணம் நீதிமான் பரம்பரையில் தோன்றிய ஆன்மீகத்தில் ஈடுபாடு உடைய நீதிபதி அவர்களே.....” 

இதென்ன கூத்து? ஆன்மீக ஈடுபாடு என்கிறானே இவன்? இவன் ஆளும்கட்சி வக்கீலா? நம்ம டீலு இவனுக்கு எப்படித் தெரியும்? டவாலி போட்டுக் கொடுத்து விட்டானா? இல்லை ஆளும்கட்சியின் ராஜதந்திர வேலையா? எனத் தெரியவில்லையே எனக் குழம்பினார் நீதிபதி.

இது எதுவும் தெரியாமல் வேலன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..


”எம் கட்சிக்காரர் கொரானா அவர் பாட்டுக்கு சைனாவில் இருந்தார். அவராகவா இந்தியாவிற்கு வந்தார்? இல்லை உங்களைக் கேட்கிறேன். அவராகவா இந்தியாவிற்கு வந்தார். இல்லையே. அவர் சைனாவில் இருந்தார். சைனாவில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்தது கேரளாவைச் சேர்ந்த ஒருவர். அவரை உள்ளே விட்டு விட்டு, வேடிக்கை பார்ப்பது அரசாங்கம். அது மட்டுமல்ல, அவரின் இயல்பு என்னவோ அதைப் போலத்தான் அவர் இப்போதும் இருக்கிறார். அவரை தன் உடலுக்குள் விழ வைத்து, அவரின் வேலையை அதிகப்படுத்துவது நம்மைப் போன்றவர்கள். நம்மால் அவர் இரவு பகல் தூங்காமல் வேலை செய்கிறேன் எனப் புலம்புகிறார். அவர் யாரையும் கொல்லவும் இல்லை. கொலை செய்யவும் இல்லை.”

டிவியில் பார்த்துக் கொண்டிருந்த புள்ளிங்கோ குருப்பைச் சேர்ந்தவர்கள் உடனடியாக கொரானா புள்ளிங்கோ அமைப்பை உருவாக்கி டிஷர்ட்டுக்கு லோகோவைத் தயார் செய்தனர்.

ஒரு சிலர் தன் வக்கீலிடம், கொரானாவுக்கு ஆதரவாக எங்களையும் சேர்த்து விசாரிக்கும்படி மனுச் செய்யும்படி கேட்க, வழக்குகள் ஏதுமின்றி வீட்டுக்குள் கோவை தங்கவேல் எழுதிய அரிசி ரொட்டி செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வக்கீல்கள் சுறுசுறுப்பாயினர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அரசாங்க வக்கீல், டெல்லி வக்கீல் அமித்தை நக்கலாகப் பார்த்தார். அமித்துக்கு கொலை, கொள்ளை, அடிதடி என்றால் புரியும். இந்த கொரானா வழக்கு பற்றி தலையும் புரியாமல், வாலும் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்.

புதிய தலைமுறையில் பிரதிவாதி கொரானா நல்லவரா? கெட்டவரா? என்ற தலைப்பில் விவாதம் தொடங்கியது.



வேளைக்குப் பிறகு தொடரும்....

Sunday, March 29, 2020

உலகை உலுக்கிய கொரானா வழக்கு (1)


அந்த வளாகம் பரபரப்பாய் இல்லை. முகத்தில் மாஸ்க் கட்டியபடி அந்த அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர் இருவர்.  

மேஜைகள், நாற்காலிகள் போடப்பட்டன. கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் நீதிபதி சங்கர் வந்தார்.

டவாலி தன் கையில் இருக்கும் குச்சியை தள்ளிப் பிடித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தும் பயம் அவனுக்கு.

வழக்கு எண் சிபி1/2020, வாதி எப்படிச்சாவேன், பிரதிவாதி கொரானா என்று சத்தமாக அழைத்தான் டவாலி.

காவல்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர் ஆகியோருடன் எப்படிச்சாவேன் வாதி அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

வாதியின் வழக்கறிஞர் அமித் டெல்லியில் இருந்து ரகசியப் பயணமாய் தனி பிளைட் பிடித்து வந்திந்தார்.

பல டிவி சேனல்களின் கேமராக்கள் நீதிமன்றத்தை உற்று நோக்கின. நீதிபதிக்கு சினிமாவின் மீதும், சினிமா நடிகை பூஜா ஹெக்டேவின் மீது அபார மோகம். அதனால் இந்த வழக்கை உலகம் முழுவதும் பார்க்க வேண்டும் என்பதற்காக அனுமதி வழங்கி இருந்தார்.

டிவி ஆட்களும் எவன் வந்து தும்முவானோ, எப்படி வந்து ஒட்டிக் கொள்ளுமோ என்ற பயத்தில் இருந்ததால், தெருத்தெருவாய் அலைவதை விட, அறைக்குள் அமர்ந்து கொண்டிருக்கலாம் என்பதற்காக, உடனடியாக இந்த லைவ் புரோகிராமிற்கு ஆதரவு தெரிவித்து கேமராக்களையும், மைக்கையும் கொண்டு வந்து நீட்டி விட்டார்கள்.

போன மாதம் எதிர் கட்சி அரசியல் தலைவர் மீது, ஆளும் கட்சி சி.யெம்முக்காக வக்கீல் சொட்டையனால் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்தார் நீதிபதி சங்கர். ஆளும் கட்சி சார்பில் ‘என்ன வேண்டுமானாலும் செய்து தர தயார்’ என அரசு வழக்கறிஞர் பன்னி மூலம் செய்தி தரப்பட்டது.

சங்கர் போனவாரம் டி.ஜேன்னு ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார். ஹீரோயினைப் பார்த்ததும் அவரின் அல்லக்கை துடியாய் துடித்த வேதனை தாளாமல், ;கொஞ்சம் பொறு உனக்கு ஏதாவது வழி பிறக்கும்’ என சமாதானம் செய்து கொண்டார்.

’என்ன வேண்டுமானாலும்’ செய்தி காதுக்கு வந்ததும், டவாலி மூலம் பன்னிக்கு இமயமலையில் வழக்கு தொடர்பாக ஆன்மீக டிஸ்கசனுக்கு ஏற்பாடு செய்தால் அரஸ்ட் வாரண்ட் ரெடி என்று தகவல் தரப்பட்டது.

மறு நிமிடமே, பன்னி மூலம் டிஸ்கஸனுக்கு நாள் குறிக்கப்பட்ட விஷயம் நீதிபதிக்கு டவாலி வழியாக தெரிவிக்கப்பட்டது. அந்த நாள் தான் 22.03.2020.

நீதிபதியின் அல்லக்கை துடியாய் துடிக்க ஆரம்பித்தான். ’பொறுத்தார் பூமி ஆள்வார் என உனக்குத் தெரியாதா தம்பி. பொறுத்திரு. கடமையை முடிப்போம். பின்னர் கச்சேரியை வைப்போம்’ என்று சமாதானப்படுத்தினார் நீதிபதி. 

டிஸ்கஸனில் நடிகையின் அதை ஒரு கடி கடித்து விட்டு தான் அடுத்த வேலை உனக்கு என அல்லக்கையை குஷிப்படுத்திக் கொண்டிருந்தார்.

வாதியின் வழக்கறிஞர் ஒரு மாதமாக ரெஸ்ட்டில் இருந்தார். ஆகவே இது என்ன வழக்கு என புரிந்து கொள்ள இயலாமல் கசகசப்பாய் சரவணம்பட்டி காவல் அலுவலக ஏட்டு எழுதிய எஃப்.ஐ.ஆரை படித்துக் கொண்டிருந்தார்.

பிரதிவாதிக்கு ஆதரவாக ஆஜர் ஆக யார் வரப்போகிறார்கள் என்று இது வரையிலும் தெரியவில்லை. அரசின் வழக்கறிஞருக்கு எரிச்சலோ எரிச்சல். வழக்குப் போட்ட வாதி எப்படிச்சாவேனை கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

உலகமே டிவியின் முன்னால் உட்கார்ந்திருந்தது. கொரானாவுக்கு ஆதரவாக யார் ஆஜராகி வாதாடப்போகின்றார்கள் எனத் தெரியாமல் கண் இமை மூடாமல் கேமராக்கள் வழியே கேமராமேன்கள் பார்த்துக் கொண்டிருக்க, வளாகத்துக்குள் கார் ஒன்று வந்து நின்றது.


(சினிமா உலகிற்கு கலைச் சேவை செய்து, கலைமாமனி, பத்மஸ்ரீ போன்ற விருதுகளை எதிர்காலத்தில் வாங்கப் போகும் கலைத்தாய் பெற்ற மரகதம் பூஜா ஹெக்டே இவர் தான்)

இந்தக் கொரானா வழக்கு தன்னால் தான் நீதிமன்ற விசாரணைக்கே வந்தது என்றுத் தெரியாமல் பூஜா ஹெக்டே பெடிக்கியூர், மெனிக்கியூர் செய்து கொண்டிருந்தாள்.

விளம்பர இடைவேளை முடிந்ததும் தொடரும் வழக்கு விசாரணை…..


முக்கியமான குறிப்பு:
இது நகைச்சுவைக்காக எழுதப்படுகிற நாவல். இதன் கான்செப்ட் உரிமை எனக்கு மட்டுமே. மற்றபடி இது எவருக்கும் எதிரான நாவல் இல்லை. இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நாவல் எழுதும் போது புளொவில் வந்தது. ஆகவே எவராவது மனம் கோணினால் தாங்களே நேராக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த நாவலில் வரும் சம்பவங்களும் யாரையும், எவரையும் குறிப்பிடுவன இல்லை.

Saturday, March 28, 2020

அரிசி ரொட்டி எளிய மாலை நேர சிற்றுண்டி

சாலையில் அடிபட்டுக் கிடப்பவர்களைக் கண்டும் காணாதது போல வேலைக்குச் சென்ற உலக மகா கனவான்களை இயற்கை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்கும் நிகழ்வினை நடத்திக்காட்டுகிறது இயற்கை.

நீங்கள் தான் சக மனிதன் மீது இரக்கம் கூட காட்டாமல் முகம் திருப்பிச் செல்வீர்களே, இப்போது எல்லோரும் வீட்டுக்குள்ளே இருங்கள் என்று சொல்கிறார் இறைவன்.

நேரத்தைப் பார்த்தீர்களா? நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, பிறர் நன்மைக்காக ஒவ்வொருவரையும் வீட்டுக்குள் முடக்கி வைத்த இறைவனின் செயல் எப்படி இருக்கிறது பாருங்கள்.

எங்கே முயற்சித்துப் பாருங்களேன் வீட்டை விட்டு வெளி வர. தோலை உறித்து தொங்கப் போட்டு விடுவார்கள்.

இயற்கை மீறல். அழிவு என்பதன் அர்த்தம் கொரானா.

அன்பு, இரக்கம் எல்லாம் பணத்தின் முன்பு, நாகரீகத்தின் முன்பு காணாமல் போனது. இப்போது மீள் உருவாக்கம் நடக்கிறது. மனிதர்கள் திருந்த வேண்டும். இல்லையெனில் திருத்த வாய்ப்பு அளிக்கப்படும். திருந்தவில்லை எனில் அழிக்கப்படுவார்கள்.

நம்மை வாழ வைத்த சமூகத்திற்கு நாம் குறைந்த பட்சம் ஏதாவது செய்ய வேண்டும். சக மனிதர்கள் மீது அன்பு வையுங்கள். துரோகம் செய்யாதீர்கள். ஏமாற்றாதீர்கள். பொறாமைப் படாதீர்கள்.

நல்ல எண்ணங்களை மனதுக்குள் நிரப்புங்கள். அன்பினை பகிருங்கள்.

இனி அரிசி ரொட்டி செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

அக்கா ஜானகி எனக்கு அடிக்கடி செய்து தரும். நேற்று அம்மணியிடம் சொல்லி செய்து தரச் சொன்னேன். மிக அருமையாக இருந்தது. அதன் பக்குவம் பற்றிச் சொல்கிறேன். செய்து உண்ணுங்கள்.

ஒரு டம்ளர் புழுங்கல் அரிசி
ஒரு டீஸ்பூன் சோம்பு
கொஞ்சம் சின்ன வெங்காயம்
நான்கைந்து பச்சை மிளகாய்
உப்பு

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய அரிசியுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் நைசாக அரைத்து எடுக்கவும்.

இந்த மாவுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

மாவை கொஞ்சம் எடுத்து உப்பு டேஸ்ட் பார்க்கவும்.

தோசைக்கல்லை எடுத்து சூடாக்கி, கொஞ்சம் எண்ணை சேர்த்து அதன் மீது அரிசி உருண்டை எடுத்து கையால் ரொட்டி போல தோசைக்கல்லின் மீது வைத்து தட்டவும். ஓரளவுக்கு ரொட்டி போல வந்ததும், அதன் மீது நல்லெண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும். அடுப்பை மெதுவாக எரிய வைக்கவும்.

ரொட்டி வேகும் போது சோம்பு, அரிசி, சின்ன வெங்காயம் சேர்ந்து வேகும் வாசனை அடுப்படியை மூழ்கடிக்கும்.

நன்றாக வெந்தவுடன் எடுக்கவும். இதற்கு சைடு டிஸ் தேவை இல்லை. சுவையோ சுவையாக இருக்கும். ஆரோக்கியம் கூட.

முயற்சித்துப் பாருங்கள். 

விரைவில் கொரானா ரசம் பற்றிய பதிவு எழுதுகிறேன்.

Friday, March 27, 2020

மனிதர்களுக்கு கடவுளிடமிருந்து வந்த எச்சரிக்கை

ஊழல் செய்தவன் வைத்திருக்கும் பணமும், பணமே இல்லாதவனின் நிலையும் இன்றைக்கு ஒன்றே ஒன்று தான். 

உயிர் பயம். எல்லோருக்கும் ஒரே பயம். உயிர் மீதான ஆசை.

அரசியல்வாதிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி கிடக்கிறார்கள். 

பிரதம மந்திரியும், மந்திரிகளும் வாயில் துணி கட்டிக் கொண்டு மீட்டிங்க் போடுகின்றார்கள். ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை இல்லை.

யாரிடம் நோய் கிருமி ஒட்டி இருக்கும் என கணிக்கத் தெரியாத நிலை. மூன்றடி தள்ளி உட்கார்ந்திருக்கிறார்கள். சக மனிதர்கள் மீதான நம்பிக்கை அற்றுப் போனார்கள் தலைவர்கள் எனும் வினோதங்கள்.

ராஜதந்திரிகள் எங்கே போனார்கள் ? விலா எலும்பு ஆட்கள் எங்கே?

ஜாதி எங்கே? மதம் எங்கே? ஆண் எங்கே? பெண் எங்கே? கோவில்கள் எங்கே? சர்ச்சுகள் எங்கே? மசூதிகள் எங்கே?  பூஜைகள் எங்கே? பிரார்த்தனைகள் எங்கே? தொழுகைகள் எங்கே ?நாடெங்கே? மொழி எங்கே? யாகங்கள் எங்கே? ஒருவரையும் காணவில்லை.

அதர்மத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்காரர்கள் பீதியின் பிடியில் சிக்கி வீதியில் நின்று கொண்டிருக்கிறார்கள். யாரிடமிருந்து பரவும் என்று தெரியாத நிலையில் கதி கலங்கி நிற்கிறார்கள். 

கிளை, வட்டம், ஒன்றியம், மாவட்டங்கள் எல்லோரும் வீட்டிக்குள் ஒடுங்கிக் கிடக்கிறார்கள். கரை வேட்டிகள் கலங்கி நிற்கின்றன. இவர்கள் எல்லோரும் இப்போது எங்கே போனார்கள் என்று தேடிப்பாருங்கள்....

உலகெங்கும் நீதிமன்றங்கள் அரசியல்வாதிகளின் படுக்கையறைகளாகிய கொடுமைகளை ஒவ்வொருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். உலகிற்கே நீதி சொன்ன தமிழ் நாட்டில் துரோகம் வழக்கமானது. சட்டம் ஒழிக்கப்பட்டது. 

அரசின் உத்தரவுக்கு ஏற்ப நீதிபதிகள் நீதி வழங்கினார்கள். சட்டம் அழிக்கப்பட்டது. தர்மம் கொலை செய்யப்பட்டது.  

எல்லோருக்கும் ஒவ்வொரு நியாயம். அது பற்றிய ஆதாரங்களை தேடிப் பிடித்து, நாம் நம்பிக்கொண்டிருக்கும் நியாயத்துக்கு வக்காலத்து பேசிக் கொண்டிருந்தோம்.

ஃபேஸ்புக்கில், டிவிட்டரில் கமெண்ட் போடுவதை எதிர்ப்பாய் காட்ட வைக்கப்பட்டோம்.  உலக அரங்கில் டிவிட்டர், ஃபேஸ்புக் இரண்டும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே சாளரம் வீசின. அரசு அலுவலர்கள் அடங்கிப் போனார்கள். இல்லையென்றால் அடக்கப்பட்டார்கள். அதர்மம் தலை விரித்து ஆடியது.

மீடியாக்காரர்கள் ஒவ்வொருவரும் ஊழலின் ஒட்டு மொத்த விசிறிகளாய் மாறினார்கள். அவர்கள்ள மதம், இனம், மொழி, அரசியல், கட்சி கண்ணாடிகள் வழியாக செய்தி வெளியிட வேண்டியவர்கள் ஆனார்கள். 

உலக மனிதர்கள் அனைவரும் யாரோ ஒருவனின், ஒரு கூட்டத்தின் ஆசைக்காக மாறினார்கள். மாற்றப்பட்டார்கள். இது எதுவும் தெரியாமல் நாமெல்லாம் தர்மம் இது, பாவம் இது, புண்ணியம் இதுவென வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருந்தோம். 

ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயமாய் மாறி மனதுக்குள் மிருகங்களாய் மாறினோம். தோற்றத்தில் நாகரீக மனிதர்களாய் நடித்துக் கொண்டிருந்தோம்.

கடமையை நாம் செய்யத் தவறினோம். தன் இயல்பு மறந்தோம். காசேதான் கடவுள் என்று அலைந்தோம். வெளி நாடு வாழ்க்கை இனித்தன நமக்கு. ஆனால் இப்போது வெளி நாடு என்றாலே அலறுகிறோம். என்ன ஒரு விசித்திரம் பாருங்கள். ஒரு மாதம் முன்பு வரை இப்படி ஒரு நிலை வரும் என்று கனவு கூட கண்டிருக்கமாட்டோம். ஆனால் எல்லாமும் நடக்கிறது. மனிதர்கள் சக மனிதர்களை அழிக்க ஆயுதங்களை உருவாக்கினார்கள். அவைகள் இப்போது என்ன செய்கின்றன? கொரானாவின் மீது உலக போலீஸ் அமெரிக்கா அணுகுண்டைப் போடுமா? 

கடவுள் இன்றும் நம்மைக் கைவிடவில்லை. 

அவர் நம் முன்னால் விதித்த கட்டளை இருக்கிறது. 

சுய கட்டுப்பாடும், சுய ஒழுங்கும், சமுதாயத்தின் மீதான அன்பும் காட்டப்படவில்லை எனில் எல்லோரும் அழிக்கப்படுவீர்கள் என்கிறார் கடவுள்.

அதர்மத்தை வேடிக்கை பார்ப்பதை விட்டு விடுங்களென்று ஒரே ஒரு எச்சரிக்கை மட்டும் விடுத்திருக்கிறார் கடவுள் எனுமியற்கை.

மனிதர்களிடத்தில் அதர்மத்தின் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்க, அதிகரிக்க இறைவன் மனிதர்களுக்கு பாடம் புகட்டி விரும்பியதன் விளைவு தான் கொரானா.

இனியும் திருந்தவில்லை எனில் முற்றிலுமாய் பூமியில் இருந்து துடைத்து எறியப்படுவோம் என்பதனை எவரும் மறந்து விடாதீர்கள். நம் வாரிசுகளும் சொத்துக்களும் ஒன்றுமே இல்லாமல் தூசியாகிப் போவார்கள்.

தர்மத்தைக் காக்க துணிவு கொள்ளுங்கள்.

அன்பை விதையாய் விதைப்போம். அதை அன்பு மலர் மலரும் மரமாய் வளர்த்தெடுப்போம்.

உலகிற்கு தேவை மனிதாபிமானம் மிக்க தலைவர்கள். அவர்களை நாம் தேர்ந்தெடுப்போம் கட்சி பேதங்கள் இன்றி.

உலகிற்கு அன்பினை பரிசளிப்போம். 

போனதெல்லாம் போகட்டும் இனி வரும் காலம் வசந்தமாய் மலரட்டும்.