குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கொரானா. Show all posts
Showing posts with label கொரானா. Show all posts

Friday, May 15, 2020

தமிழகம் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுகிறதா? ஒரு அலசல்

அண்ணா தன் ஆட்சிக்காலத்தில் தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது என்று சொன்னார். அவர் இறந்து போய் இன்றைக்கு ஐம்பது வருடங்கள் ஆயின. இன்றைக்கும் தெற்கு தேய்ந்து கொண்டே தான் இருக்கிறது.

கலைஞர் ஆட்சிக்கு பின்பு தமிழகத்தில் ஊழல்களுக்காக பாலங்கள் கட்டப்பட்டனவே தவிர எதிர்காலத்திற்காக இல்லை என்பது மனச்சாட்சி உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

சாலைகளும், பாலங்களும், அரசு கட்டிடங்களும் ஊழல்களின் ஊற்றுக் கண்களாகவே இருந்து வருகின்றன. சாலைகள் ஒவ்வொரு கட்சியினருக்கும் அள்ள அள்ளக் குறையா செல்வத்தை தந்து கொண்டிருக்கும் அட்சயபாத்திரம். போதாது என குடிமராமத்துப் பணி, 100 நாள் வேலைத்திட்டம் என அள்ள அள்ளக் குறையா அட்சய ஊழல் திட்டங்கள் மட்டுமே கடந்த வருடங்களாக செயலிலிருக்கின்றன.

இன்றைக்கு தமிழகத்தில் பணம் வைத்திருப்போர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் தான். தொழிலதிபர்களிடமும், மக்களிடமும் எந்தப் பணமும் இல்லை.

கடந்த பனிரெண்டு வருடமாக தமிழக தொழிலதிபர்கள் சொல்லொண்ணா துன்பத்தில் ஆழ்ந்து செய்யும் தொழிலை மீட்க உயிரைப் பணயம் வைத்து வருகின்றார்கள். ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். வடக்கின் அதிகாரத்தால் வங்கிகள் தொழிலதிபர்களின் கழுத்தை அறுக்க ஆரம்பித்தன.

மத்திய அரசும், மாநில அரசும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தை முன் வைத்து ஊழல், தனி இன பலன் ஆகியவற்றுக்காக தமிழக தொழில்களை முடக்கி வருவதை பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன.

சிங்கிள் விண்டோ சிஸ்டம் அனுமதி என்பார்கள்.அதில் ஆயிரம் உள்குத்துக்கள். காசு செலவாகாமல் அனுமதி கிடைக்காது. 

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக தமிழகத்தில் வட இந்தியர்கள் அனேகம் பேர் வேலை செய்ய வந்தனர். மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் இன்னும் அதிகமானோர் தமிழகம் தேடி வந்தனர். சமீபத்தில் நெய்வேலியில் பாய்லர் வெடித்ததில், அங்கு வேலை செய்த வட இந்தியர்களின் எண்ணிக்கையை பத்திரிக்கைகளில் படித்ததும் உண்மை என தெரிகிறது.

இந்த ஒன்பது வருட, காலகட்டத்தில் தமிழகத்தில் காணும் இடமெல்லாம் வட இந்தியர்கள் தெரிந்தார்கள். ஆங்காங்கே சண்டைகள், திருட்டுகள், கொலைகள், கொள்ளைகளை அவர்கள் செய்து வந்தார்கள் என்பதை தினசரி பத்திரிக்கைகள் வெளியிட்டன.

அவர்கள் அனைவரும் தமிழக தொழிற்சாலைகளில் பணியாளர்களாக பரவி தொழிலைத் திறம்பட கற்று வந்தனர். எல்லா தொழிற்சாலைகளிலும், எல்லா தொழில்களிலும் அவர்கள் இடம் பெற்றிருந்தனர். தொழிற்சாலைகள் மட்டுமல்ல, எல்லா தொழில்களையும் செய்து வந்தனர்.

தமிழர்கள் அந்த தொழிற்சாலைகளில் நிர்வாக பொறுப்புக்கு வந்தனர். தொழிலாளர் நிலையிலிருந்து, நிர்வாக வேலைக்கு பெரும்பாலான தமிழர்கள் உயர்ந்தனர். இதற்கிடையில் அம்மா அரசு, தன் தமிழக குழந்தைகளுக்கு (தமிழர்களுக்கு) சாராயத்தை புகட்டி (உபயம்: ஆனந்த விகடன் அட்டைப்படம்) அவர்களின் திறமை, கல்வி, உடல் திறன் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, விதவைகளை உருவாக்கியது தன் பங்குக்கு. போதாது என பிராமணீய இயக்குனர்கள் (இயக்குனர் சங்கர்-காதலன் திரைப்படம்) குடி குடும்பத்தோடு குடிக்க வேண்டியது என தமிழர்களுக்கு பாடம் எடுத்தனர்.

இப்படியான சூழலில் கொரானா உலகை ஆள ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட 50 நாட்கள் ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு. இந்த நாட்களில் தமிழகத்தில் வாழ்ந்த வட இந்தியர்கள் எவரும் பசியால், பட்டினியால் செத்துப் போகவில்லை என்பது டிவி செய்திகள் சொல்லின. ஆங்காங்கே ஒரு சிலர் உணவின்றி இருந்தால், அங்கு சமூக அன்பர்கள் சென்று உணவளித்து அவர்களைப் பாதுகாத்தனர். தமிழ் நாட்டில் வட இந்தியர் எவரும் பசியால் சாகவில்லை. பாதுகாப்பாக இருந்தனர். இன்னும் கொஞ்ச நாட்கள் இப்படியே இருந்தால் தொழிற்சாலைகளை இவர்களை வைத்து இயக்கி இருக்கலாம். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. சொல்லி வைத்தாற் போல அனைவரும் அவரவர் ஊர்களுக்கு கிளம்ப முயன்றனர்.

கொரானா தொற்றின் தீவிரம் அதிகமாகிக் கொண்டிருக்கின்ற வேளையில் வட இந்தியர்கள் அனைவரும் தங்கள் ஊருக்கு கிளம்புவதற்கு போராட்டங்களை அறிவிக்கின்றனர். தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தனர்.

மத்திய அரசு ரயில்களை இயக்கியது.  காங்கிரஸ் கட்சி அவர்களுக்கான ரயில் கட்டணத்தை தருவதாக அறிவித்தனர். நாடு இருக்கும் நிலையில் மத்திய அரசு உடனே 85 சதவீதம் கட்டணத்தை மத்திய அரசும், 15 சதவீதத்தை மாநில அரசும் ஏற்கும் என உத்தரவிட்டது.

கொடுமை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியிடம் இருக்கும் பணத்தை இந்த நேரத்தில் செலவு செய்கிறார்களே என நினைத்து அதற்கு ஒரு நன்றியைத் தெரிவித்து இருக்கலாம். மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் தான் தள்ளுபடி கொடுத்தார். நம் பிரதமரின் அரசியல் சாணக்கியதனம் எப்படியானது என்று பாருங்கள்?

காங்கிரஸ் கட்சியினரின் பணம் அங்கேயே இருக்கிறது. ஊர் கூடித் தேர் இழுக்கலாம். ஆனால் இழுக்க வருபவர்களையும் அரசியல் நோக்கில் தடுக்கும் மாபெரும் சிந்தனையாளரானார் நம் பாரதப் பிரதமர். கட்சியினர் செலவு செய்தால் அது ஊழல் பணம் என்பதாக நினைத்துக் கொண்டு வேண்டாம் என்று சொன்னார்களோ என்னவோ தெரியவில்லை.

தமிழகத்தில் வேலை செய்து வந்த வட இந்தியர்கள் பெரும்பாலானோர் பீகார், அசாம் போன்ற மாநிலங்களுக்கு சென்று விட்டனர். இங்கிருப்பதோ கொஞ்சம் பேர். இனி அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாகச் சென்று விடுவார்கள் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

கொரானா இருந்தாலும் தொழிற்சாலைகளை இயக்குங்கள் அதுவும் 33 சதவீதம் தொழிலாளர்களைக் கொண்டு என்று அறிவிக்கின்றார்கள் தமிழக ஆட்சியாளப் பெருந்தகைகள்.

சேவைத்துறையில் வேண்டுமானால் 33 சதவீதம் செல்லுபடியாகும். ஆனால் ஒரு தொழிற்சாலை இயங்க வேண்டுமெனில் கேட்-டு-கேட் ஆட்கள் வேலை செய்தால் இயக்க முடியும். வெறும் 33 சதவீதத்தினரை வைத்துக் கொண்டு எப்படி இயக்குவது? பாய்லர் வெடிக்கும். விபத்து தான் ஏற்படும். சமீபத்தில் ஆந்திராவில் அப்படித்தான் நடந்து மக்கள் செத்தார்கள்.

ஒரு அறிவிப்பின் இலட்சணம் இது. அதன் காரணமாக மக்கள் கொல்லப்படுகின்றார்கள் என்பது நிதர்சனம்.

வட இந்தியர்கள் அவரவர் ஊர்களுக்குச் சென்று சேர்ந்த பின்னர் மத்திய அரசு 20 லட்சம் கோடி (ரிவர்ஸ் பொருளாதாரம்) ரூபாய்க்கு திட்டத்தை அறிவிக்கிறது. அதற்கு பல்வேறு ரைடர்ஸ்களையும் சேர்க்கிறது.

இனி நிறுவனங்களுக்கு பணம் கிடைக்கும் என்கிறார்கள். வேலை துவங்கலாம் என நம்பிக்கை ஊட்டினார்கள். சரி, பணம் கிடைக்கும்? வேலை செய்ய ஆட்கள் எங்கே?

நிர்வாகத்தில் இருந்தவர்கள் கீழ் பணிகளை செய்வதற்கு உடனே சாத்தியமாகுமா என்றால் நிச்சயம் முடியாது. கிட்டத்தட்ட ஒன்பது வருடமாக தொழிலை நன்கு கற்றுக் கொண்ட வட இந்தியர்கள் இப்போது தமிழகத்தில் இல்லை. இனி தொழிற்சாலைகளை இயக்குவது எப்படி? புரிகிறதா நண்பர்களே?

தமிழகத்தின் அத்தனை தொழில்களையும் கற்றுக் கொண்ட வட இந்தியர்கள் அவரவர் ஊர்களில் இருக்கின்றார்கள்.

இடையில் ஒரு சின்ன விஷயம்.

முன்பு கோவை, கரூர் பக்கம் நூல் மில்களில் வேலை செய்வதற்கு திண்டுக்கல் பக்கம் இருந்து ஆட்களை அழைத்து வருவார்கள். அடுத்த கட்டமாக ஏன் நாம் தொழிற்சாலைகளை திண்டுக்கல் பக்கம் கட்டக்கூடாது என நினைத்து, திண்டுக்கல் ஏரியாக்களில் நூல் மில்களை உருவாக்கினர். வேலை செய்ய ஆட்கள் இருக்கும் பகுதியில் தொழிற்சாலைகளை உருவாக்குவது என்பது புத்திசாலித்தனமானது. யார் வேண்டுமானாலும் தொழிற்சாலைகளை உருவாக்கலாம். ஆனால் வேலை செய்ய ஆட்கள் வேண்டுமல்லவா?

சரி மீண்டும் விட்ட இடத்திலிருந்து.

எம்.எஸ்.எம்.இகளுக்கு நிதி உதவி என்கிற மத்திய அரசின் பொருளாதார  மீட்டெடுப்பு அறிவிப்பு யாருக்குச் சாதகமாக இருக்கும்? வட இந்தியாவில் தொழில்களைக் கற்றுக் கொண்டவர்கள் உள்ளனர். இனி அங்கிருக்கும் தொழிலதிபர்கள் புதிய ஆலைகளை உருவாக்குவார்கள். வேலை வாய்ப்புகள் பெருகும். ஆளும் பிஜேபியினர் இனி தொழில்களை வட இந்தியாவில் உருவாக்குவார்கள். வங்கி வட்டி இல்லை, சொத்துக்கள் பிணை இல்லை. இப்படி பலப்பல பலன்களை மக்களின் வரிப்பணத்தில் வெகு இன்பமாக அனுபவிக்கப் போகின்றவர்கள் வட இந்தியர்கள்.

ஆனால் இங்கோ, ஸ்கில்டு லேபர்கள் இல்லாமல் தொழிற்சாலைகள் இயங்காமல் இருக்கும். இனி புதிய ஆட்களுக்குப் பயிற்சி கொடுத்து, நிர்வாகத்தில் இருந்தவர்களை கீழ்  நிலைப் பணிகளுக்கு பழக்கப்படுத்தி தொழிலை விரிவாக்குவது என்பது எவ்வளவு கடினமானது.

இருபது லட்சம் கோடி திட்டம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான பலன்களை அனுபவிக்கப் போவது வடக்கு. வழக்கம் போல தமிழகமும், அதன் தொழிலும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் தோன்றுவது இயல்பே. காலத்தின் கோலமாக என்னால் பார்க்க முடியவில்லை. தொடர்ந்து வடக்கிலிருந்து ஏவப்படும் ஒவ்வொரு அழிவாயுதமும் இங்கு பெரும் பாதிப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.

ஆட்சியிலிருப்பவர்களாலும், எதிர்கட்சிகளாலும் பேச முடியா ஊழல் மன்னிக்கவும் சூழலில் இருக்கின்றார்கள். எதிர்த்து ஒரு வார்த்தைப் பேசினால் ரெய்டு, கைது. அதற்கேற்ப மத்திய அரசு சட்டங்களை திருத்தி வைத்திருக்கிறது. எதிர்க்க வேண்டியவர்கள் தங்கள் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக தமிழகத்தைப் பலி கொடுக்கின்றார்கள். ரெய்டு, கைதுகளுக்கு பயப்படாத நேர்மையாளர்களாக இங்கு எந்த அரசியல்வாதியும் அதிகாரத்தில் இல்லை என்பது கொடுமை.

இதை எல்லாவற்றையும் தாண்டி எம் தமிழகம் துணிவு கொண்டு மீண்டு எழும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 

Saturday, May 9, 2020

இந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன?


நண்பர்களே,

தினக்கூலிகள் பற்றி நமக்குத் தெரியும். சாலைகளின் ஓரமாய் மேஸ்திரிக்காகவும், அவர் ஒதுக்கும் வேலைக்காகவும் காத்துக்கிடப்போரை நாமெல்லாம் பார்த்திருக்கிறோம். தினமும் வேலை செய்து கிடைக்கும் கூலியில் டாஸ்மாக் பறித்துக் கொண்டது போக, மீதி உள்ள காசில் சாப்பிடுபவர்கள் 130 கோடியில் 110 கோடிப் பேர் இருக்கிறார்கள் என்ற புள்ளி விபரங்களை நாமெல்லாம் படித்திருக்கிறோம். மீதி இருக்கும் 20 கோடியில் நாமும் ஒருவர் என்று மகிழ்ச்சி கொண்டிருப்போம்.

இந்தியாவின் கடன் தொகை 85 லட்சம் கோடி, தமிழகத்தின் கடன் தொகை 3.5 லட்சம் கோடி. ஒரே மாதம், வரி வருமானம் போதவில்லை என்ற உடனே இந்தியாவின் பிரதமர் டிவியில் உரை ஆத்த வரவில்லை. தமிழ்நாட்டிலோ சம்பளம் கட். இன்னும் ஒரு மாதம் வரி வருவாய் இல்லையென்றால் நாடு மூழ்கிப் போய் விடும். அரசு அதிகாரிகளுக்கு, பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. ராணுவ வீரர்களுக்கும் கொடுக்க முடியாது. என்ன ஆகும் அதன் பின்னால்? நாடு ஸ்தம்பித்துப் போய் விடும். ஆக தினமும் வரி வசூல் என்பது நாட்டின் மூச்சு. அதாவது ஒரு தினக்கூலி கதை.

இப்போது சொல்லுங்கள்.

யார் அன்றாடம் காய்ச்சி?

இதற்கிடையில் ஒரு விஷயம். இந்திய மக்கள் தொகையில் சுமார் பத்து லட்சம் பேரிடம் நமது பணமெல்லாம் முடங்கிக் கிடக்கிறது. கொங்குப்பக்கம் ஒரு சிலரிடம் ஐம்பத்தாயிரம் கோடிக்கும் மேல் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இந்தப் பணத்தைத் தோண்டி எடுத்தால் ஐந்து வருடங்கள் வரி வசூலிக்காமலே இந்தியாவை ஆளலாம். மக்கள் எல்லோரும் மகிழ்வாக இருப்பார்கள். அந்த பத்து லட்சம் பேர் யார் யார் என எல்லோருக்கும் தெரியும். வசூலிப்பதும் எளிதுதான்.

யார் செய்வது? செய்வார்களா? செய்யமாட்டார்கள்.

மக்களுக்கு வருமானமே இல்லை. ஆனால் அரசு விலையேற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்? இது எரியும் வீட்டில், ஆக்சிடெண்டில் பிடுங்கும் திருட்டு புத்தி அல்லவா? மக்கள் நலம் பற்றி நல்ல சிந்தனை உள்ளவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.

இந்த அக்கப்போர் ஒரு பக்கம் இருக்கட்டும். இனி முதலீட்டுக்கு வருவோம்.

உலகம் உள்ளங்கைக்குள் வந்து விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் விரல் நுனியில். கட்டுப்பாடுகளற்ற இணையவெளியில் கிடைக்காத விஷயங்களே இல்லை. ஒவ்வொரு நாட்டின் அத்தனை விபரங்களும் உட்கார்ந்த இடத்திலிருந்து பெற்று அதை ஒப்பீடு செய்து விடலாம்.

இந்தக் காலத்திலும் பொய்யாகப் பேசியே மக்களை ஏமாற்றும் ஏமாளிக்கூட்டம் திரிந்து கொண்டுதான் இருக்கின்றது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். எட்டு நாள் தேவையில்லை. எட்டு நொடி போதும் பொய்யா உண்மையா என தெரிந்து கொள்ள.

உலக நாடுகளில் பெரும்பான்மையாக இருப்பவை முஸ்லிம் நாடுகளும், கிறிஸ்துவ நாடுகளும். மற்றபடி இரண்டே இரண்டு இந்து(??) நாடுகள் மற்றும் மதம் சாரா ஒரு சில நாடுகள்.

இந்தியாவை ஆளும் பாஜக கொண்டு வந்திருக்கும் சமீபத்திய சட்டமான சிட்டிசன் சிப் அமெண்ட்மெண்ட் படி இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பும், இந்தியர்கள் கணக்கெடுப்பும் பல இடங்களில் பல வித சர்ச்சைகளையும், தொடர்ந்து போராட்டங்களையும் உருவாக்கியது. கொரானாவினால் இப்போதைக்கு அந்த இரு விஷயங்களுக்காக போராட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

போராட்டம் என்றாலே பிரிட்டிஷ்காரர்கள் இந்திய சுதந்திரபோராட்டத்தினை வெறி கொண்டு அடக்கியது போல ஜன நாயக அரசும் நடந்து கொண்டதை நாமெல்லாம் பல்வேறு டிவி செய்திகள் மூலம் ஏற்கனவே தெரிந்து இருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை இந்தியர்கள் கணக்கெடுப்பு வெகு முக்கியமானது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியர்கள், வெளிநாட்டினர், அகதிகள், தஞ்சமடைந்தவர்கள் எனும் துல்லிய கணக்கு விபரங்கள் தேவை. இந்த தரவுகள் இனி வரும் காலத்தில் அவசியம் தேவைப்படும், அதே நேரத்தில் அரசு கட்சி சார்பற்ற, அரசின் கட்டுப்பாடுகளற்ற சுதந்திர அமைப்பின் வழியாக இவற்றைப் பாதுகாத்திட சட்ட வரையறைகள் செய்தல் அவசியம். இல்லையெனில் அரசியல் பழிவாங்கல்களும், அரசியல் கொலைகளுக்கும் இத்தரவுகள் இடமளித்து விடும் அபாயம் நிச்சயம் உருவாகும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சுய நலமற்றர்களாக இருப்பார்கள் என்று மனிதகுலம என்றைக்கும் நம்பி விட கூடவே கூடாது.

இத்தரவுகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சி வசம் இருந்தால், அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் எதிர்கட்சி ஆட்களையோ அல்லது விமர்சனங்கள் செய்பவர்களையோ இல்லாமல் மாற்றி விடலாம். நான் இந்தியன் தான் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் தனிமனிதனிடம் வந்தால், அதை ஏற்கவோ நிராகரிக்கவோ அரசுக்கு அதிகாரம் இருந்தால் என்ன ஆகும்? அவன் அழிக்கப்படுவான் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படியான நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கும் என்பது 100 சதவீதம் உண்மை.

ஆனால் அகதிகள் விஷயத்தில் அரசு இன்னும் சில கவனமான ஊள்ளீடுகளை சேர்த்து, மதம், இனம், மொழி இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.

சிறுபான்மையினராக குறிப்பிடப்படும் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் இச்சட்டத்தினை ஆதரரிக்கவில்லை என்பது உண்மை. அதற்கான போராட்டங்களை அவர்கள் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் நடத்தி இருக்கிறார்கள்.

இப்படியான நிலை இருக்கையில் பெரும்பான்மை நாடுகளைக் கொண்ட முஸ்லிம் மதத்தைச் சார்ந்த தொழிலதிபர்களும், கிறிஸ்து மதத்தைச் சார்ந்த தொழிலதிபர்களும் எப்படி இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருவார்கள் என்று நம்ப முடியும்? முதலீட்டாளர்கள் பெருத்த லாபம் கருதி முதலீடுகள் செய்வார்கள். இருப்பினும் முதலீட்டாளர் தங்கள் முதலீடுகளைச் செய்யும் முன்பு பல்வேறு தரவுகளை ஆராய்வார்கள்.

ஒவ்வொரு மனிதனும் பிறப்பின் போது, அவனின் மதம் நிர்ணயிக்கப்பட்டு அதன் வழி வளர்க்கப்படுகிறான். மதச்சார்பு கொண்ட மனிதன், தன் மதத்தினருக்கு இந்தியாவில் வாழ அனுமதிப்பார்களா என்ற சூழல் இருக்கிறது என்று தெரிந்தபடியால், இந்தியாவில் எப்படி முதலீடுகள் செய்ய முன்வருவார்கள் என்று நினைக்க முடியும்? இந்தியாவை ஆளும் அரசுக்கு இனம், மொழி, மதம் முக்கியம் என்பது போல முதலீட்டாளர்களுக்கும் இருக்குமல்லவா?

அதற்கான சாத்தியக்கூறுகளை சிட்டிஷன்சிப் அமெண்ட்மெண்ட் சட்டம் குறைத்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டல்லவா?

பணக்காரனுக்கு அப்படியெல்லாம் மதம் சார்ந்த சிந்தனைகள் இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம். பெரும்பான்மையான நிறுவனங்களின் தலைவர்கள் என்ன இனமோ அந்த இனத்தினருக்கு வேலையில் முன்னுரிமை கொடுத்திருப்பது உலகிற்கே தெரிந்த விஷயம். சப்பைக்கட்டு கட்ட இப்படியெல்லாம் பேசுவார்கள். ஆனால் நிதர்சன உண்மை மதம், மொழி, இனம் சார்ந்த பணியாளர்கள் என்பது.

சைனாவில் முதலீடு செய்ய விரும்பாதவர்கள் இந்தியாவிற்கு எப்படி வருவார்கள் என்று எவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா? இந்தியாவில் முதலீடு செய்தால் தான் கொள்ளை லாபம் அடிக்கலாம் என்று நினைத்து வருவார்கள் என்றும் சொல்வார்கள். அதெல்லாம் சாத்தியமில்லாத வெற்றுக் கூச்சல்.

இரண்டு ரூபாய் பதிவாளர்களின் பதிவுகள்  இனி முதலீட்டாளர்களுக்கு இந்தியாதான் ஒரேஅ வழி என்று சொல்கின்றன?  

இரண்டு ரூபாய் கொடுக்கும் முதலாளி மதிகெட்டவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சிட்டிசன்ஷிப் அமெண்ட்மெண்ட் இப்போதைக்கு தேவையில்லாத ஆணி. இந்த ஆணியைப் பிடுங்கி விட்டு வேறொரு மேட்டரைச் செய்தால் போதும். நினைத்த காரியம் செவ்வனே நடந்திருக்கும்.

உங்களுக்கு என்ன சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக மாறி விடுகிறார்கள் என்பதுதானே பிரச்சினை? அதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது.

ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதி, இரண்டு குழந்தை பெற்றால் குழந்தைக்கு வரி கொடுக்க வேண்டுமென்று உத்தரவு போடுங்களேன். மேட்டர் ஓவர். சிறுபான்மையினர் எப்போதும் சிறுபான்மையினர் தான், பெரும்பான்மையினர் எப்போதும் பெரும்பான்மையினர்தானே?

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துகிறோம் பேர்வழி என சட்டம் ஒன்றினை போட்டால் மேட்டர் ஓவர். (எனக்கு எவ்வளவு கொடூர சிந்தனை என்று பாருங்கள். இதற்கு நான் பொறுப்பல்ல, வெறும் ஐடியாதான்)

கண்ணை மூடிக் கொண்டு நம்பி விட இன்னும் நாமெல்லாம் மூளையைக் கழற்றி வீசி விட்டு திரியவில்லை என்று நம்புகிறேன்.

இந்திய அரசின் இந்தச் சட்டங்கள், வெளிநாடு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்காது என நம்பலாம். ஏனெனில் உலகில் இந்தியா ஒரு சிறுபான்மை நாடு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களுக்கு இரத்தம் ஏற்றப்பட்டிருந்தால், அந்த இரத்தத்தில் முஸ்லிம், கிறிஸ்து, கீழ்சாதி இரத்தம் இல்லையென சொல்ல முடியுமா?

உலகம் ஒரே கொடைக்குள் வந்து விட்டது. இனம், மொழி, மதம் சார்ந்து அரசுகள் இயங்க முடியாது ஆளும் அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாய உத்தரவு.

இல்லை நாங்கள் இப்படித்தான் என்றால் காலுக்குதான் செருப்பே தவிர செருப்புக்கு கால் இல்லை என உலகம் நம்மை உதறி தள்ளிவிடும் அபாயம் உண்டு.

கொரானாவினால் பல நாடுகளிலும் வேலை இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இனி வேலைகள் அந்தந்த நாட்டின் பிரஜைகளுக்கே கிடைக்கும் என நம்பித்தான் ஆக வேண்டும். வெளி நாட்டில் வேலை எனும் கனவு கனவாகவே முடிந்து போகும்.

ஒவ்வொரு இந்தியருக்கும் மாதம் பத்தாயிரம் ரூபாய் சாத்தியமா? என்றால் சாத்தியம்தான். பைசா செலவில்லாமல் எல்லோருக்கும் பணம் கொடுக்கலாம். யாருக்கும் எந்த நட்டமும் வராது. நாட்டின் வருமானத்துக்கும் பிரச்சினை இருக்காது. அது எப்படி என்கின்றீர்களா? அது ரகசியம். எவன் கண்டுபிடிக்கின்றான் என பார்க்கலாம்.

Tuesday, April 28, 2020

கொரானா சொல்லப்படாத உண்மைகள்


அமெரிக்காவில் பத்து லட்சத்துக்கும் அதிகமாக கொரானாவில் பாதிப்படைந்து, அதில் 50000 பேர் உயிரிழப்பு நடந்திருக்கிறது என்கிறது செய்தி. இதை நம்பலாம். ஏனென்றால் அங்கு ஓரளவு பத்திரிக்கை முதலாளிகள் தைரியசாலிகள்.

ஆனால் தமிழகத்திலோ, இந்தியாவிலோ வரக்கூடிய செய்திகளை நம்பக் கூடிய அளவுக்கு மீடியாக்கள் இதற்கு முன்னால் உண்மையான செய்திகளை வெளியிடவில்லை. அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் சொன்னார்கள்.

கோவையில் உண்மையை வெளியிட்ட சிம்ப்ளிசிட்டி இணைய பத்திரிக்கையின் நிர்வாகி கைது அதை வெளிக் கொணர்ந்து இருக்கிறது. ஊருக்கு உண்மையைச் சொன்னால் கைது. தமிழக அரசின் கண் அசைவுகளுக்கு ஏற்ப தான் பத்திரிக்கைகளும், டிவிக்களும் செய்திகளை வெளியிடுகின்றன என்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் தேவையில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

என்ன உண்மை என உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சொல்லுங்களேன் என்று கேட்க தோன்றும். அந்தளவுக்கு தரவுகளை என்னால் திரட்ட முடியாது. செய்தி தாள்களில், இணையங்களில், அரசு உத்தரவுகளில் வரக்கூடிய ஒரு சில செய்திகளை படிக்கும் போது பூனைக்குட்டி வெளியில் வந்து விடுகிறது. உண்மையை மறைக்கலாமே தவிர முற்றிலுமாக தவிர்க்க முடியாது. அது உண்மையின் இயல்பு. பொய் பல அலங்காரங்களுடன் வெளியிடப்படும் போது, அந்தச் செய்தியில் உண்மை எங்கோ ஓரிடத்தில் ஒட்டிக் கொண்டு விடும். அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அம்மா உணவகம் மூலம் இலவச உணவு அளிக்கப்படுகிறது என்கிறது அரசு. அதைக் கிண்டல் செய்து கார்ட்டூன் வரைகிறது ஆர்.;பி.ஐ.இயக்குனரின் பத்திரிக்கை துக்ளக். மக்களுக்குப் பதிலாக திமுக என எழுதி இருக்கிறார்கள். எழுத்துப் பிழை அல்ல. கருத்துப் பிழை. உண்மை மக்கள் பட்டினியாக கிடக்கிறார்கள் என்பது.
நேற்று முதலமைச்சர்களுடன் பிரதமர் பேசிய போது, வரும் ஜூன், ஜூலை மாதங்களில் தொற்று அதிகரிக்கும் எனச் சொன்னதாக, ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பகிர்ந்து கொண்டதாகச் செய்திகள் படிக்க கிடைக்கின்றன. அப்போது இன்னும் இரண்டு மாதங்களுக்கு லாக் டவுன் இருக்கலாம் என சிந்தனை வருகிறது.


கேரளா முதலமைச்சர் பி.எம்முக்கு லெட்டர் எழுதுகிறேன் எனச் சொல்லி, ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உங்களால் எங்களுக்கு எந்த வித நன்மையும் இல்லை என்பதற்காக அவர் நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லையோ என நினைப்பு வருகிறது.

கொரானா டெஸ்டிங்கை இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கிறோம் என தமிழக அரசு அறிவிக்கிறது. அப்போது அரசு அறிவிக்கும் தொற்று எண்ணிக்கை சரியானதாக இருக்காது என அறிவு சொல்கிறது. தொற்று எண்ணிக்கை எவ்வளவு எனத் துல்லியமாக அறிவிக்க டெஸ்ட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் தொற்று எண்ணிக்கை குறைவாகத்தானே இருக்கும்? ஆக தமிழக அரசின் அறிவிப்பின் மூலம் ஒரு முடிவுக்கு வர வேண்டி உள்ளது.

பிரதமர் மோடி அவர்கள், பசியோடு இருப்பவர்களுக்கு உதவுங்கள் என்று ஏழு கட்டளைகளைப் பின்பற்றும்படி ரேடியோவில் பேசுகிறார். ஆக மத்திய அரசு மக்களுக்கு உதவாது என்று சொல்லாமல் சொல்கிறார் என்று தெரிகிறது.

நாங்கள் வரியை மட்டும் வசூலிப்போம். அதை குறித்த காலத்துக்குள் மாநில அரசுக்கு கொடுக்க மாட்டோம். மக்கள் செத்துப் போனாலும் கூட நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஆனால் பெரிய நிறுவனங்கள் நடத்தும்  முதலாளிகளுக்கு வட்டி, வரிகளுக்கு தள்ளுபடி வழங்குவோம் என்று சொல்கிறாரோ என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.

எக்கனாமி நன்றாக இருக்கிறது என்று பேசுகிறார். நாமும் நம்புகிறோம். ஆனால் இந்தியாவில் மியூட்சுவல் ஃபண்ட் பிசினஸ் செய்யும் டெம்பிள்டான் நிறுவனத்திற்கு 50000 கோடி நிவாரணம் அறிவிக்கிறது ஆர்.பி.ஐ. நன்றாக இருக்கிறது எக்கனாமி என்று ஒரு பக்கம் பேசி முடிப்பதற்குள், இந்த செய்தி வெளி வருகிறது. மியூட்சுவல் ஃபண்ட்ஸ் அடிவாங்கினால் மொத்தமாக ஷேர் மார்க்கெட் படுத்து விடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை பின் ஏன் டெம்பிள்டானுக்கு ஆர்.பி.ஐ. நிவாரணம் வழங்குகிறது? ஆக இந்தியப் பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்கிறது என தெரிகிறது. இனி பிரதமர் சொல்வதை நம்பலாமா வேண்டாமா என்று அறிவு ஆராய்ச்சி செய்கிறது.
தமிழகத்தை பி.ஜே.பி தான் ஆள்கிறது என்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை என்பார்கள். பால்பாக்கெட் கெட்டுப் போனவுடன், அதை சி.எம்க்கு டிவீட் செய்கிறான். ஆஃப்டர் ஆல் ஒரு கூத்தாடிக்கு வீட்டுக்கே பால் பாக்கெட் கொண்டு போய் கொடுக்கப்படுகிறது. வாங்கியவன் பேசாமல் இருந்திருக்கலாம். வேண்டுமென்றே அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக, அதை டிவீட் போடுகிறான். ஒரு டிவீட்டுக்கு அரசு எனக்கு எவ்வாறு வேலை செய்கிறது எனப் பாருங்கள் என தற்பெருமைக்காக, கேவலப்படுத்துகிறோம் என்று தெரிந்தே அதைச் செய்கிறான் அவன். இப்போது நம் தமிழகத்தின் முதலமைச்சருக்கு நெட்டில் வேறு பெயர் வைத்து அழைக்கிறார்கள். இந்தச் சம்பவம் உண்மையில் சென்ஸார் போர்டில் உறுப்பினராக இருக்கும் ஒரு கூத்தாடிக்கு இந்த அரசு பயந்து கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆக பி.ஜே.பி தான் தமிழகத்தை ஆள்கிறது என்ற செய்தியில் உண்மை இருக்கிறது என்று நம்பிட வேண்டியிருக்கிறது.
இப்படித்தான் வெளியிடப்படும் செய்திகளில் இருக்கும் பொய்களைக் களைந்து உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் இதே கதைதான். ஏதோ இந்தியாவில் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று நினைத்து விட வேண்டாம்.

ஒரு நண்பர் என்னிடம், அரசு கொரானா இல்லை என்று அறிவித்த பிறகு, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று கேட்டார்.
கொரானாவுக்கு மருந்து இருக்கிறது என்று உறுதியாக தெரியும் வரையில் அனுப்புவதில் எனக்கு உவப்பில்லை. ஒரு வருடம் லீவ் போட்டு விட்டால் போச்சு. அரசுக்கு கொரானாவில் செத்தார் என்பது அது அறிவிக்கும் எண்ணிக்கையில் ஒரு எண் கூடும். அவ்வளவுதான். அது அவர்களுக்கு எண் மட்டுமே. ஆனால் நமக்கோ அது ஒரு உயிர். நம் வாழ்வின் துடிப்பு. நம் வாழ்க்கை. டிப்ளமேட்ஸ், அரசியல்வாதிகள் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் பிறரின் வாழ்க்கை? யாருக்கு யார் உத்தரவாதம் தர முடியும்? நாம் தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இனி என்னதான் செய்வது? பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? நம் எதிர்காலம் என்னவாகும்?

பசிக்கு உணவு அதற்காக உழைப்பு, உடலுக்கு உடை, இருக்க ஓர் இடம். இது போதும். கடவுள் மனிதனை இயற்கையோடு ஒன்றி வாழத்தான் படைத்தார். காசு சம்பாதிக்க அல்ல.

பின்னே இந்த அரசியல்வாதிகளை என்ன செய்யலாம்? இனி வரும் காலங்களிலும் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடலாம். எவனாது அரசு இயந்திரத்தை இயக்க வேண்டுமே?

நமக்குத்தான் தைரியம் இல்லையே. கேள்வி கூட கேட்க மாட்டோமே? தெருவில் இறங்கி நிற்க கூட தைரியமில்லையே? எக்கேடு கெட்டால் தான் நமக்கு என்ன? கூனிப் போய் விட்டது மனசும் உடம்பும் நமக்கு.

ஆக, அரசு தன்னால் இயன்றதைச் செய்யும். அது எல்லோருக்குமானதாக இருக்காது. மக்கள் தான் தங்களை காத்துக் கொண்டு உயிரோடு இருக்க வேண்டும். இல்லையென்றால் சுடுகாடு. மக்கள் உயிருடன் இருந்தால் ஓட்டுப் போட்டு ஜன நாயகத்தை நிலை நாட்டலாம். வரி கொடுக்கலாம். உயிருடன் இல்லாது செத்துப் போனால் அது அரசின் புள்ளி விபரங்களுக்கு உதவும். இத்தனை பேர் உயிருடன் உள்ளார்கள். இத்தனை பேர் இறந்து விட்டார்கள் என்று அரசு கணக்குகளை டிவியில் வெளியிடும். நிச்சயமாக இறப்பு விகிதம் குறைவாகத்தான் இருக்கும். உண்மைக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகமோ அதிகம்.

நீங்கள் புள்ளி விபரங்களில் எதுவாக இருக்க விரும்புகின்றீர்கள் என்பது உங்களின் அறிவுக்கு உட்பட்டது.

ஆகவே நண்பர்களே, இதுவும் கடந்து போகும் என்ற எதிர்மறைச் சிந்தனையில், விதி இதுதான், கடவுளின் விருப்பம் இது, இயற்கையின் சீற்றம் இது என்று வசதிக்கு ஏற்றபடி சிந்தித்து முடிவெடுப்போம்.

குறிப்பு : செய்திகளை உற்றுக் கவனியுங்கள். உண்மையை உணர்ந்து கொள்வோம். நம்மையும், நம் உறவுகளையும், நண்பர்களையும் காப்பாற்றுவோம்.

வாழ்க நலமுடன்…வளமுடன்…!!

Tuesday, April 7, 2020

கொரானாவைக் கொல்லுமா சித்தரத்தை?

அந்தக் காலத்தில் மளிகைக் கடைகளில் சித்தரத்தை வேர் ஒரு துண்டை வாங்கி வாயில் அடக்கிக் கொள்வார்கள். கல்லூரியில் படிக்கும் போது அம்மா, எனக்கு மாசிக்காய் என்ற ஒரு உருண்டையான வஸ்துக்கள் நான்கைந்து வாங்கித் தருவார்கள். பஸ்ஸில் ஏற்றி விடும் போது வாய்க்குள் ஒரு வஸ்துவை அடக்கிக் கொள்வேன்.

ஹாஸ்டல் சென்று சேரும் போது முற்றிலுமாக எச்சிலில் ஊறி, வயிற்றுக்குள் சென்று சேரும். வயிற்றுப் புண், வாய்ப்புண் எல்லாம் போயே போய் விடும்.

தாத்தா சித்தரத்தை வேர் வாங்கித் தருவார். வாய்க்குள் வைத்திருந்து துப்பி விடுவேன்.

கொரானா நுரையீரலைத் தாக்கி, மூச்சு விட சிரமப்படுத்தி மரணிக்க வைத்து விடுகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

இதோ சித்தரத்தையின் மகத்துவம் என்னவென்று நெட்டில் வந்துள்ளதை கீழே தருகிறேன். படித்துப் பாருங்கள். சித்தரத்தைப் பொடி எனக்கு கிடைக்கவில்லை. உங்களுக்கு கிடைத்தால் விட்டு விடாதீர்கள்.



சித்தரத்தை (Alpinia officinarum) வேர் கிடைத்தால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஆஸ்துமா, சளி, காய்ச்சல் ஆகியவற்றுக்கு அரு மருந்து. இது கொரானாவை சரி செய்யுமா என்றெல்லாம் தெரியாது. ஆனாலும் சளிக்கும், நுரையீரலுக்கும் அது நல்லது செய்கிறது. 

நமது தேசத்திலிருந்து ஏற்றுமதியாகி, நமது நாட்டுக்கே திரும்பவும் மேலை மருந்துகளின் வழியே வரும் முக்கியமான மூலிகைகளில், ஒன்றுதான் சித்தரத்தை.

சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும்.

மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங் காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.

ஒரு காலத்தில் தென்னாடு எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இருமலின் தாக்கமும் இழுப்பும் குறைந்தது.

சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். இதன் நறுமணம் காரணமாக இதைப் பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு. ( நன்றி - உயிர் ஆன்லைன் இணையதளம்)

இதுபற்றிய மேலதிக விபரங்களை ஆயுர்வேத, சித்த மருத்துவர்கள் வியாபார நோக்கமின்றி ஆராய்ந்து சொன்னால் மக்களுக்கு நன்மை பயக்கும்.

Saturday, April 4, 2020

உலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)


மறுநாள் நீதிபதி சங்கர் கோர்ட்டுக்கு வந்து அமர்ந்தார். ஏகப்பட்ட வக்கீல்கள் முகக் கவசத்துடன் அக்மார்க் குரங்கு போலவே உட்கார்ந்திருந்தார்கள். என்னே ஒரு காட்சி? மனிதன் குரங்கிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும். எல்லோரும் குரங்குகள் போலவே இருக்கின்றார்கள். மனதுக்குள் சிரித்துக் கொண்டார். வக்கீல் அமித் இருக்கானா என்று பார்த்தார். ஆளைக் காணவில்லை. எங்கே போனானா அந்தக் கருமாந்திரம் புடிச்சவன், என்னை மாற்றப்போகிறானாமே, பார்ப்போம் இவன் என்ன கிழிக்கிறான்னு என மனதுக்குள் கருவிக் கொண்டார். ஒரு நீதிபதியையே மிரட்டுகிறானே அவன். அவனுக்கு ஒரு கொரானா பார்சல் செய்து விட வேண்டியதுதான்.

ஏதாவது எக்குத்தப்பாக இனி பேசினான் என்றால், கோர்ட்டை அவமதித்தான் எனச் சொல்லி கொரானா வார்டில் சுத்தம் செய்யப் போட்டு விடுகிறேன். அப்போதான் அவன் அடங்குவான் என மனதுக்குள் வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.

அன்றைக்குப் பார்த்து அமித்துக்கு காலையில் தும்மல் வந்து விட்டது. விடாமல் தும்மலாக போட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கோர்ட்டுக்கு வந்து, ஏற்கனவே நீதிபதியையே மிரட்டி இருப்பதால், அந்த ஆளு கொரானா டெஸ்ட் செய்த அறிக்கை வந்த பிறகு, கோர்ட்டுக்கு வா எனச் சொல்லி விட்டால், எந்த ஊரு ஆஸ்பத்திரியோ, எந்த வார்டோ? அதுவும் இது தமிழ்நாடு. இவனுக கையில் மாட்டினால் வச்சு செஞ்சுருவான்களே என்ற பயத்தில் தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு வீட்டிலேயே உட்கார்ந்து விட்டார்.

இங்கே கோர்ட்டில் ஒரு புதிய வக்கீல் எட்டப்பன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

மனுவைப் படித்த நீதிபதி சங்கருக்கு தலையே சுற்றியது. என்ன எழவு மனுடா இது? என்று கோபத்தில் கொந்தளித்து வக்கீல் எட்டப்பனைப் பார்த்தார். வக்கீல் எட்டப்பன் கோர்ட்டில் நிற்கவில்லை. குனிந்தபடியே கை இரண்டையும் கூப்பியபடி வைத்துக் கொண்டு, டைனோசார் தலையை நீட்டுவது போல நீட்டியபடி நீதிபதியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

”எட்டப்பன், நிமிர்ந்து நில்லுங்கள்” என்றார்.

”என்னால் முடியாது கனம் நீதிபதி அவர்களே, என் உடல் வாகுவே அதுதான். அது மட்டும் காரணம் அல்ல. நான் பிறரின் காலை வாரி விடுவதில் கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்தவன். ஆகவே குனிந்து கொண்டிருந்தால் தான் காலை வாரி விட முடியும். நான் பிறந்ததில் இருந்தே இப்படி இருப்பதால், என் உடல் வளைந்து போய் விட்டது. ஆகவே என்னால் நேராக நிமிர்ந்து நிற்க முடியாது ஆனர் அவர்களே…”

“ஓ… உங்கள் வழக்கமே அதுதானா? கொரானா வழக்கில் உங்களையும் இணைத்துக் கொள்ள மனுக் கொடுத்திருக்கின்றீர்களே? வழக்குப் போடச் சொன்னவர்கள் பெயர் தவறாக இருக்கிறதே, புரியும்படிச் சொல்கின்றீர்களா?”

கோர்ட்டில் டைப் செய்யும் பெண்மணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.
“கனம் நீதிபதி அவர்களே, எனது கிளையண்டுகள் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த அமைப்பின் பெயர் கள்ளக்காதலர் சங்கம். முறைப்படி பதிவு செய்யப்பட்டு, அரசிடம் அனுமதி பெறப்பட்டிருக்கிறது” என்றார் எட்டப்பன் வக்கீல்.

எல்லோரும் எட்டப்பனைப் பார்த்தனர். டிவி கேமராக்கள் அனைத்தும் எட்டப்பனை ஜூம் செய்தன. டிவி பார்த்துக் கொண்டிருந்த மக்களில் 90 சதவீதம் பேர் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தனர்.

(** இங்கு ஒரு விஷயத்தை உற்றுக் கவனித்தீர்களா வாசகர்களே. நிமிர்ந்து உட்கார்ந்தவர்கள் எல்லோரும் கள்ளக்காதல் சங்கத்தின் ரகசிய உறுப்பினர்கள். அவர்களின் வக்கீல் எட்டப்பனோ நிமிர்ந்து நிற்க முடியாதவர். கோவை தங்கவேல் தர்மம் தர்மம் என்றுச் சொல்லிக் கொண்டிருப்பார் அல்லவா? அவர் இந்த நாவலின் இந்த டிவிஸ்டை உற்று நோக்க வேண்டும். தர்மம் இல்லாத வக்கீல் கூனிப்போய் இருப்பதைக் கவனிக்க வேண்டும். ஆகவே அடியேனும் தர்மத்தைதான் இங்கு போதிக்கின்றேன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இராமாயணத்தில் ஒரு கூனி, இந்த நாவலில் ஒரு எட்டப்பன். சரியா மிஸ்டர் கோவை தங்கவேல் அவர்களே. **)

சரி இனி வழக்குக்கு வந்து விடுவோம்.

நீதிபதி சங்கருக்கு ஏண்டா, இந்த வழக்கை விசாரணை செய்ய எடுத்தோம் எனத் தோன்றியது. ஆனாலும் கட்டழகு டைப்பிஸ்ட் கவிதாவைப் பார்த்தார். கவிதாவின் கண்கள் சங்கரைப் பார்க்க, சங்கரின் கண்ணுக்குள் மின்னல் அடித்தது. விசாரியுங்கள் என்று கண்ணாலே அம்பு விட, அந்த அம்பு நீதிபதி சங்கரின்  விழிகளுக்குப் பாய்ந்து நின்றது.

“கனம் நீதிபதி அவர்களே, இந்தக் கொரானா மனித உரிமைகளை மீறுகின்றது. மனிதர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையைப் பறிக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் உரிமை தாம் விரும்புவதைச் செய்வது. எனது கிளையண்டுகள், அவரவர் கள்ளக்காதலிகளையும், காதலர்களையும் சந்திக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலிருந்து வெளி வர இயலாமல், தங்கள் கள்ளகாதலை வளர்க்க முடியாமல், எங்கே தங்கள் காதலின் புனிதச்செடி பட்டுப்போகுமோ என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். கொரானாஒ எல்லோரையும் வீட்டுக்குள் இருக்க வைத்து விட்டது. இதனால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகி உள்ளது தெரியுமா உங்களுக்கு?”

நீதிபதி சங்கருக்கு கூன் வக்கீல் எட்டப்பனின் வாதம் சுவாரசியமாக இருந்ததால் அவரும் நிமிர்ந்து உட்கார்ந்தார். டைப்பிஸ்ட் கவிதாவை ஒரு கண்ணால் லுக் விட்டு விட்டு, எட்டப்பனை நோக்கினார்.

எதேச்சையாக டிவியைப் பார்த்த பூஜா ஹெக்டேவுக்கு இந்த வழக்கின் லைவ் கன்னில் பட, டிவியில் அர்னாப் கோஸ்வாமி இந்தியாவே இந்த வழக்கை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்று லைவ் வர்ணனை செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து கேமரா நீதிபதி சங்கரைக் காட்டியது. அவரைப் பார்த்தவுடன் பூஜா ஹெக்டேவுக்கு பிடித்து விட்டது. நீதிபதி செல்வம் விரும்பிய பூஜா ஹெக்டேவுக்கே நீதிபதியைப் பிடித்துப் போன விஷயம் தெரியாமல், கோர்ட்டில் கூனன் வக்கீல் எட்டப்பனைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

(வாசகர்களே, உங்களின் பார்வை பூஜாவின் முகத்தில் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்)

இடைவேளைக்குப் பிறகு தொடரும்.... 

Thursday, April 2, 2020

உலகை உலுக்கிய கொரானா வழக்கு(3)


வேலனின் வாதம் முடிந்தது.

வக்கீல் அமித் எழுந்தார்.

”நீதிபதி அவர்களே, குற்றம் சுமத்தப்பட்ட கொரானாவின் வக்கீல் சொல்லிய அனைத்து விஷயங்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. இதுவரையில் நான் அரசியல்வாதிகளுக்கு எதிராக வாதிட்டு இருக்கிறேன். அவர்கள் ஊழல் செய்வார்கள், அதற்காக இன்கம்டாக்ஸை வைத்து மிரட்டுவோம், பின்னர் தீர்ப்பையே நான் தான் எழுதி தருவேன். அதைத்தான் நீதிபதியும் படிப்பார். இந்தக் கோவை நீதிமன்றமும், நீங்களும் எனக்குப் புதிது. இன்னும் இந்த கோர்ட்டின் நடைமுறைகள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் வழக்கின் நீதிபதியா இருக்க வேண்டுமா? இல்லை என் தீர்ப்பினை படிக்கும் நீதிபதியை இங்கு கொண்டு வர வேண்டுமா? என யோசிக்க வேண்டும். ஆகவே எனக்கு ஒரு நாள் கூடுதல் அவகாசம் தேவை என உங்களுக்கு உத்தர விடுகிறேன்”

“என்ன, உத்தரவா?” என்று சொல்லியபடி நாற்காலியில் அமர்ந்த அமித்தை கோபப்பார்வை பார்த்தார் நீதிபதி சங்கர்.

நீதிபதியை அவர் கண்டு கொள்ளவே இல்லை. செமகாண்டான நீதிபதி உன்னை வச்சு செய்யப்போறேண்டா அமித்து என்றுக் கருவிய படி எழுந்து சென்றார். கோர்ட் கலைந்தது.

தலைமைச் செயலர் நன்கு தூங்கிக் கொண்டிருந்தார். கொரானா வந்தாலும் வந்தது தூக்கம் போச்சு அவருக்கு. இந்தப் பயல்களை வீட்டுக்குள் இருங்கள் என்றுச் சொன்னால் ஒருவனும் கேட்க மாட்டேன் என்கிறார்கள். லேசாக அடித்தால் அய்யோ குய்யோ எனக் கத்துகிறார்கள். பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் படம் போட்டு விடுகிறார்கள். அந்தப் படங்களைப் பார்க்கும் எனக்கே பீதியைக் கிளப்புகிறார்கள். நான் செய்து கொண்டிருக்கும் ஊழல் சமாச்சாரங்கள் நாளைக்குத் தெரியவந்தால், என் நிலைமை என்ன ஆகுமோ தெரியவில்லையே எனக் கலங்கினார். காவல்துறையினர் இப்படியெல்லாம் அடிப்பார்களா எனத் தெரிந்ததும் குலை நடுக்கம் ஏற்படுகிறதே என்று எண்ணிப் பயந்தபடியே தூங்கச் சென்றார்.

அவரின் மனைவியோ இந்த மாதம் கூடுதல் பணம் வரவில்லையே என தூக்கம் வராமல் வீட்டுக்குள்ளேயே உலாவிக் கொண்டிருந்தார்.
இந்த சி.எம் என்ன செய்கிறார். புதிய டெண்டர்களை விட்டால் தானே 30 பர்செண்டேஜில் கொஞ்சமாவது வரும். சாலைகளைக் கழுவி விட மாம்பழப்பட்டி பார்ட்டிக்கு டெண்டர் விட்டிருக்கலாம். கழுவிய பிறகு கிருமி நாசினி தெளிக்க, நம் தம்பியின் கம்பெனிக்கு டெண்டர் தரலாம். கழுவியதாக கணக்கு காட்டினால் போதும். சொளையாக கிடைக்குமே பெட்டி பெட்டியாக என நினைத்த போதே அவருக்கு நாக்கில் எச்சில் சொட்டியது. நாளைக்கு சி.எம்மின் மனைவியிடம் சொல்லி விட்டால் காரியம் ஆகி விடும் என  நினைத்துக் கொண்டே பெட்டி வராத சோகத்தில் அலைந்து கொண்டிருந்தார். கொரானா என்ற வார்த்தையைக் கேட்டாலே கொதிக்க ஆரம்பித்தது தலைமைச் செயலர் மனைவிக்கு.

இது எது பற்றியும் தெரியாமல் தூக்கத்தில் இருந்த தலைமைச் செயலர் கனவு கண்டார். அக்கனவில் வந்தது சாட்சாத் கிருஷ்ண பரமாத்மா.

ஊழல் செய்து மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தலைமைச் செயலர் கனவில் பரிசுத்தமான கடவுள் எப்படி வருவார் என உங்கள் அனைவருக்கும் வியப்பாக இருக்கும்.

நல்லவர்களும், நல்ல எண்ணங்களும், செயல்களும் உடையவர்களுக்கு கடவுள் தேவையே இல்லை. ஆனால் அயோக்கிய சிகாமணிகளுக்கு கடவுள் அவசியம் தேவை.

செய்யும் குற்றங்களுக்கு ஏற்ப உண்டியலில் காசு போட்டு, பரிகாரம் செய்து விட்டால் கடவுள் மன்னித்து விடுவார் அல்லவா? ஆகவே கடவுளுக்கும் காசு தேவை என்பதால் கடவுள் அயோக்கியர்களின் கனவில் தான் வந்து கொண்டிருக்கிறார் ஒவ்வொரு யுகங்களாக என்பதை புராணங்கள் வழியே நாமெல்லாம் படித்திருக்கிறோம் என்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்ளுங்கள்.

பூஜா ஹெக்டே அன்றைக்குப் பார்த்து கிருஷ்ணரை வணங்கினார். 

தலைமைச் செயலர் கனவில் வந்த கிருஷ்ண பரமாத்மா அவரிடம் என்ன சொன்னார்?

இடை வேளைக்குப் பிறகு தொடரும்…

Tuesday, March 31, 2020

காவக்காரர்கள்

கிராமங்களின் எல்லைப்புறமாய் கருப்புசாமி கோவில் இருக்கும். ஊர் காவல் தெய்வம் என்பார்கள்.  அந்தக் காலங்களில் ஒவ்வொரு ஊருக்கும் காவல் இருக்க, கையில் கம்புடன், பந்தத்தை ஏந்தியபடி ஊர் எல்லைகளில் காவல் இருப்பார்கள் என படித்திருக்கிறோம்.

காவல்காரர்கள் ஒவ்வொருவருக்கும் ஊரிலிருந்து அவர்களுக்குத் தேவையானவை அனைத்தும் கொடுக்கப்படும். காவல்காரர்களாய் இருப்பவர்கள் சாமிகளாய் வணங்கப்பட்டார்கள்.

இதோ, இன்று தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள் நம் காவல் தெய்வங்கள். தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் கொரானாவை பரவ விடாமல் தடுக்க, ஐந்தறிவு படைத்த மனிதர்களுக்குப் புரிய வைப்பதற்காக கையில் தடியுடன் நின்று கொண்டிருக்கின்றார்கள்.

நடுவீதிகள், தெரு ஓரங்கள், வீடுகள், நிறுவனங்கள் என ஊன், உறக்கம் இன்றி 24 மணி நேரமும் அவர்கள் வேலை செய்கிறார்கள். வெயில், பனி, இரவு எனப் பாராமல் நின்று கொண்டிருக்கின்றார்கள். 

ஒருவர் கண்களில் கண்ணீருடன் வேண்டுகிறார். ஒருவர் பயமுறுத்தி தெருவுக்கு வராதே என்கிறார். ஒருவர் போதாத புத்திகாரர்களுக்கு பிரம்படி கொடுக்கிறார். 

இரவில் வீட்டுக்குச் சென்று தெருவில் கோணிப்பை விரித்து தூங்கி விட்டு, வீட்டின் பின்புறமாகச் சென்று குளித்து, துணிகளைத் துவைத்து, குடும்பத்தைப் பார்த்து விட்டு மீண்டும் காவல் பணிக்குத் திரும்புகிறார்கள்.

24 மணி நேரமும் பணி. மனசும், உடம்பு ஓய்வெடுக்க இயலா நிலையில் அவர்கள் படும் துயரங்கள், மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவருக்கும் இதயத்தில் ரத்தத்தை வரவைக்கும்.

அன்பு காவல்தெய்வங்களே...!

உங்கள் அனைவருக்கும் மனித சமூகம் சார்பாக எனது வணக்கத்தையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் காவலாய் இருக்கும் சூழலை எம்மைப் போன்றவர்கள் தான் உருவாக்கினோம். இனி அது நடக்காது.

உங்கள் தேவைகளை நிறைவேற்றிடவும், தர்மத்தின் தலைமகனாய் தலை நிமிர்ந்து வாழ்ந்திடவும், சட்டத்தையும், தர்மத்தையும் காக்கும் காவல்காரர்களாய் நிமிர்ந்து நடந்திட நாங்கள் நல்ல ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்.

எங்களை எப்போதும் காவல்காத்து வரும் தெய்வங்களான உங்களுக்கு எங்களால் முடிந்த சிறிய உதவியாக இனி அதைச் செய்வோம்.

சுய நலமும், ஜாதியும், மதமும் இனி எங்களைப் பீடித்து, தீயவர்களையும், கொடியவர்களையும், சுய நலகும்பல்களையும் கண்டுணர்ந்து இருக்கிறோம். அவர்களை ஆட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி, நல்லவர்களை, வல்லவர்களை, மனிதாபிமானம் மிக்கவர்களை, மக்கள் நலத்தில் சுய நலமின்றி பொது நலமிக்க நல்லோர்களையும் தேர்ந்தெடுக்கிறோம்.

தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் நலமுடனும், வளமுடனும் வாழ எல்லாம் வல்ல இயற்கைச் சக்தியை வணங்கி பிரார்த்திக்கிறோம்.

பல்லாண்டு வாழ்க எங்கள் தெய்வங்களே....!


Monday, March 30, 2020

உலகை உலுக்கிய கொரானா வழக்கு(2)

நீதிபதி சங்கருக்கு ஆற்றாமை தாங்க முடியவில்லை. இந்தக் கொரானா செய்த வேலையால் அவரின் இமயமலைப்பயணம் சீரழிந்து போனது பற்றி அவருக்குள் புழுங்கினார்.

சரியாக 22.03.2020 இந்தியா முழுக்க 144 தடை விதித்தது மத்திய அரசு. வேறு வழியே இல்லாமல் இமயமலை ஆன்மீக பயணம் கேன்சல் செய்யப்பட்டது. 

அய்யோ...அய்யோ என மனதுக்குள் வெம்பினார் நீதிபதி சங்கர். அருமையான சான்ஸ் போச்சே என நொந்தார். கொரானா என்ற பெயரைக் கேட்டாலே காண்ட் ஆகினார். 

பூஜா ஹெக்டேவை நினைத்து நினைத்து வேதனையில் ஆழ்ந்தார். 

“ஏய்! கொரானாவே, நானென்ன கேட்டேன். ரஜினிகாந்த் செல்வது போல ஒரு ஆன்மீகப் பயணம். இமயமலைக்கு. உதவிக்கு பூஜா ஹெக்டே. வேறு என்ன எதிர்பார்த்தேன்? தியானம் செய்தேனா? முதலமைச்சர் பதவி கேட்டேனா? இல்லை ராஜ்ய சபா எம்.பி பதவியைக் கேட்டேனா? எதுவும் இல்லையே. அட்லீஸ்ட் கவர்னர் போஸ்டாவது கேட்டிருக்கேனா? இல்லையே. இரண்டு நாள் இமயமலைச் சுற்றுப் பயணம் தானே கேட்டேன். அதற்காகவா என்னை இந்தப் பாடு படுத்துகிறாய். இரு உன்னை கூண்டில் ஏற்றி தூக்கு தண்டனை தராமல் விடப்போவதில்லை. மருத்துவ உலகம் உன்னை ஒழிக்கட்டும். அதுவரையில் நான் சும்மா இருக்கப் போவதில்லை. சட்டம் உன்னை விடவே விடாது” என தன் மனதுக்குள் கருவினார்.

அந்த நேரம் பார்த்து கோவை சரவணம்பட்டி போலீஸ் மூலம் இந்த வழக்கு வந்தது. உடனே விசாரிக்கப்படும் என உத்தரவு போட்டு நீதிமன்றத்தில் உட்கார்ந்து விட்டார்.

கொரானாவை கூண்டுக்குள் ஏற்றி தூக்கில் போட அவரால் ஆன சட்டத்தின் வழியை அவர் செயல்படுத்த துணிந்து விட்டார். ஆகவே முகத்தில் மாஸ்கை கட்டியபடி சட்டப்பணி ஆற்ற கோர்ட்டுக்கு வந்து விட்டார் மாண்புமிகு நீதிபதி.

இந்த இமயமலை டீலிங்கைக் கேள்விப்பட்ட எதிர்கட்சி உதவிதலைவர் தன் மாமா மகன் மூலம் நயன்தாராவை ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தார். நீதிபதி அவர் பாட்டுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து விட்டால்,  நம்மால் ஜெயிலில் கிடக்க முடியாதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். பூஜா ஹெக்டே நீதிபதியின் உள்ளம் கவர்ந்த கள்ளி என்பதை இவருக்கு யாரும் சொல்லவில்லை. 

நீதிபதி நயன் தாராவை கிழட்டு மூதி எனச் சொல்வது அவருக்குத் தெரியாது.  நல்லவேளை, இந்த டீலிங்கைச் சொல்லி இருந்தால், இமயமலை டீலிங்கை விட்டு விட்டு உடனடியாக கைது வாரண்டு பிறப்பித்து இருப்பார். 

அதற்குள் கொரானா வந்து எல்லாவற்றையும் கொலாப்ஸாக்கி விட்டது. எதிர்கட்சித் தலைவருக்கு நல்ல நேரம் தப்பித்துக் கொண்டார்.

இது எதுவும் தெரியாமல் பூஜா ஹெக்டேவும், நயன் தாராவும் அவரவர் வேலையில் இருந்தனர் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

டிவி பார்த்துக் கொண்டிருந்த உயர் நீதிமன்ற வக்கீல் அங்கு வந்த வேலனைப் பார்த்து டென்சனார். வேலன் அவராபீசில் கூட்டித் துடைக்கிறவன். அவனிங்கே என்ன செய்கிறான் என குழம்பினார் ராஜ்.

கொரானாவுக்கு ஆதரவாக வாதாட வேலன் ஆஜராகி இருப்பதை கோர்ட்டில் இருந்த அனைவரும் வச்ச கண்ணின் இமை மூடாமல் பார்த்தனர். மீடியாக்கள் வேலன் முகத்தை ஜூம் செய்தன. நீதிபதி சங்கர் கடுப்போடு வேலனைப் பார்த்தார். அங்கு பூஜா ஹெக்டே டான்ஸ் ஆடுவதைப் போல தோன்ற, மீண்டும் மீண்டும் எரிச்சலானார்.

”கணம் நீதிபதி அவர்களே, எனது கட்சிக்காரர் கொரானாவுக்கு ஆதரவாக வாதாட அனுமதி வழங்கியமைக்கு எனது நன்றிகள் கோடானு கோடியைத் தெரிவித்துக் கொண்டு தொடர்கிறேன்” என்றான் வேலன்.

“ம்.. ஆகட்டும். தொடருங்கள்” என்றார் நீதிபதி.

“சரவணம்பட்டி போலீஸார் பதிந்த குற்றப்பத்திரிக்கையிலே, எனது கட்சிக்காரர் கொரானா மக்களை கொன்று வருவதாகவும்,  பெரும் துன்பத்தைத் தருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அதாவது கணம் நீதிமான் பரம்பரையில் தோன்றிய ஆன்மீகத்தில் ஈடுபாடு உடைய நீதிபதி அவர்களே.....” 

இதென்ன கூத்து? ஆன்மீக ஈடுபாடு என்கிறானே இவன்? இவன் ஆளும்கட்சி வக்கீலா? நம்ம டீலு இவனுக்கு எப்படித் தெரியும்? டவாலி போட்டுக் கொடுத்து விட்டானா? இல்லை ஆளும்கட்சியின் ராஜதந்திர வேலையா? எனத் தெரியவில்லையே எனக் குழம்பினார் நீதிபதி.

இது எதுவும் தெரியாமல் வேலன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..


”எம் கட்சிக்காரர் கொரானா அவர் பாட்டுக்கு சைனாவில் இருந்தார். அவராகவா இந்தியாவிற்கு வந்தார்? இல்லை உங்களைக் கேட்கிறேன். அவராகவா இந்தியாவிற்கு வந்தார். இல்லையே. அவர் சைனாவில் இருந்தார். சைனாவில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்தது கேரளாவைச் சேர்ந்த ஒருவர். அவரை உள்ளே விட்டு விட்டு, வேடிக்கை பார்ப்பது அரசாங்கம். அது மட்டுமல்ல, அவரின் இயல்பு என்னவோ அதைப் போலத்தான் அவர் இப்போதும் இருக்கிறார். அவரை தன் உடலுக்குள் விழ வைத்து, அவரின் வேலையை அதிகப்படுத்துவது நம்மைப் போன்றவர்கள். நம்மால் அவர் இரவு பகல் தூங்காமல் வேலை செய்கிறேன் எனப் புலம்புகிறார். அவர் யாரையும் கொல்லவும் இல்லை. கொலை செய்யவும் இல்லை.”

டிவியில் பார்த்துக் கொண்டிருந்த புள்ளிங்கோ குருப்பைச் சேர்ந்தவர்கள் உடனடியாக கொரானா புள்ளிங்கோ அமைப்பை உருவாக்கி டிஷர்ட்டுக்கு லோகோவைத் தயார் செய்தனர்.

ஒரு சிலர் தன் வக்கீலிடம், கொரானாவுக்கு ஆதரவாக எங்களையும் சேர்த்து விசாரிக்கும்படி மனுச் செய்யும்படி கேட்க, வழக்குகள் ஏதுமின்றி வீட்டுக்குள் கோவை தங்கவேல் எழுதிய அரிசி ரொட்டி செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வக்கீல்கள் சுறுசுறுப்பாயினர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அரசாங்க வக்கீல், டெல்லி வக்கீல் அமித்தை நக்கலாகப் பார்த்தார். அமித்துக்கு கொலை, கொள்ளை, அடிதடி என்றால் புரியும். இந்த கொரானா வழக்கு பற்றி தலையும் புரியாமல், வாலும் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்.

புதிய தலைமுறையில் பிரதிவாதி கொரானா நல்லவரா? கெட்டவரா? என்ற தலைப்பில் விவாதம் தொடங்கியது.



வேளைக்குப் பிறகு தொடரும்....

Saturday, March 28, 2020

அரிசி ரொட்டி எளிய மாலை நேர சிற்றுண்டி

சாலையில் அடிபட்டுக் கிடப்பவர்களைக் கண்டும் காணாதது போல வேலைக்குச் சென்ற உலக மகா கனவான்களை இயற்கை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்கும் நிகழ்வினை நடத்திக்காட்டுகிறது இயற்கை.

நீங்கள் தான் சக மனிதன் மீது இரக்கம் கூட காட்டாமல் முகம் திருப்பிச் செல்வீர்களே, இப்போது எல்லோரும் வீட்டுக்குள்ளே இருங்கள் என்று சொல்கிறார் இறைவன்.

நேரத்தைப் பார்த்தீர்களா? நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, பிறர் நன்மைக்காக ஒவ்வொருவரையும் வீட்டுக்குள் முடக்கி வைத்த இறைவனின் செயல் எப்படி இருக்கிறது பாருங்கள்.

எங்கே முயற்சித்துப் பாருங்களேன் வீட்டை விட்டு வெளி வர. தோலை உறித்து தொங்கப் போட்டு விடுவார்கள்.

இயற்கை மீறல். அழிவு என்பதன் அர்த்தம் கொரானா.

அன்பு, இரக்கம் எல்லாம் பணத்தின் முன்பு, நாகரீகத்தின் முன்பு காணாமல் போனது. இப்போது மீள் உருவாக்கம் நடக்கிறது. மனிதர்கள் திருந்த வேண்டும். இல்லையெனில் திருத்த வாய்ப்பு அளிக்கப்படும். திருந்தவில்லை எனில் அழிக்கப்படுவார்கள்.

நம்மை வாழ வைத்த சமூகத்திற்கு நாம் குறைந்த பட்சம் ஏதாவது செய்ய வேண்டும். சக மனிதர்கள் மீது அன்பு வையுங்கள். துரோகம் செய்யாதீர்கள். ஏமாற்றாதீர்கள். பொறாமைப் படாதீர்கள்.

நல்ல எண்ணங்களை மனதுக்குள் நிரப்புங்கள். அன்பினை பகிருங்கள்.

இனி அரிசி ரொட்டி செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

அக்கா ஜானகி எனக்கு அடிக்கடி செய்து தரும். நேற்று அம்மணியிடம் சொல்லி செய்து தரச் சொன்னேன். மிக அருமையாக இருந்தது. அதன் பக்குவம் பற்றிச் சொல்கிறேன். செய்து உண்ணுங்கள்.

ஒரு டம்ளர் புழுங்கல் அரிசி
ஒரு டீஸ்பூன் சோம்பு
கொஞ்சம் சின்ன வெங்காயம்
நான்கைந்து பச்சை மிளகாய்
உப்பு

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய அரிசியுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் நைசாக அரைத்து எடுக்கவும்.

இந்த மாவுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

மாவை கொஞ்சம் எடுத்து உப்பு டேஸ்ட் பார்க்கவும்.

தோசைக்கல்லை எடுத்து சூடாக்கி, கொஞ்சம் எண்ணை சேர்த்து அதன் மீது அரிசி உருண்டை எடுத்து கையால் ரொட்டி போல தோசைக்கல்லின் மீது வைத்து தட்டவும். ஓரளவுக்கு ரொட்டி போல வந்ததும், அதன் மீது நல்லெண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும். அடுப்பை மெதுவாக எரிய வைக்கவும்.

ரொட்டி வேகும் போது சோம்பு, அரிசி, சின்ன வெங்காயம் சேர்ந்து வேகும் வாசனை அடுப்படியை மூழ்கடிக்கும்.

நன்றாக வெந்தவுடன் எடுக்கவும். இதற்கு சைடு டிஸ் தேவை இல்லை. சுவையோ சுவையாக இருக்கும். ஆரோக்கியம் கூட.

முயற்சித்துப் பாருங்கள். 

விரைவில் கொரானா ரசம் பற்றிய பதிவு எழுதுகிறேன்.

Friday, March 27, 2020

மனிதர்களுக்கு கடவுளிடமிருந்து வந்த எச்சரிக்கை

ஊழல் செய்தவன் வைத்திருக்கும் பணமும், பணமே இல்லாதவனின் நிலையும் இன்றைக்கு ஒன்றே ஒன்று தான். 

உயிர் பயம். எல்லோருக்கும் ஒரே பயம். உயிர் மீதான ஆசை.

அரசியல்வாதிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி கிடக்கிறார்கள். 

பிரதம மந்திரியும், மந்திரிகளும் வாயில் துணி கட்டிக் கொண்டு மீட்டிங்க் போடுகின்றார்கள். ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை இல்லை.

யாரிடம் நோய் கிருமி ஒட்டி இருக்கும் என கணிக்கத் தெரியாத நிலை. மூன்றடி தள்ளி உட்கார்ந்திருக்கிறார்கள். சக மனிதர்கள் மீதான நம்பிக்கை அற்றுப் போனார்கள் தலைவர்கள் எனும் வினோதங்கள்.

ராஜதந்திரிகள் எங்கே போனார்கள் ? விலா எலும்பு ஆட்கள் எங்கே?

ஜாதி எங்கே? மதம் எங்கே? ஆண் எங்கே? பெண் எங்கே? கோவில்கள் எங்கே? சர்ச்சுகள் எங்கே? மசூதிகள் எங்கே?  பூஜைகள் எங்கே? பிரார்த்தனைகள் எங்கே? தொழுகைகள் எங்கே ?நாடெங்கே? மொழி எங்கே? யாகங்கள் எங்கே? ஒருவரையும் காணவில்லை.

அதர்மத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்காரர்கள் பீதியின் பிடியில் சிக்கி வீதியில் நின்று கொண்டிருக்கிறார்கள். யாரிடமிருந்து பரவும் என்று தெரியாத நிலையில் கதி கலங்கி நிற்கிறார்கள். 

கிளை, வட்டம், ஒன்றியம், மாவட்டங்கள் எல்லோரும் வீட்டிக்குள் ஒடுங்கிக் கிடக்கிறார்கள். கரை வேட்டிகள் கலங்கி நிற்கின்றன. இவர்கள் எல்லோரும் இப்போது எங்கே போனார்கள் என்று தேடிப்பாருங்கள்....

உலகெங்கும் நீதிமன்றங்கள் அரசியல்வாதிகளின் படுக்கையறைகளாகிய கொடுமைகளை ஒவ்வொருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். உலகிற்கே நீதி சொன்ன தமிழ் நாட்டில் துரோகம் வழக்கமானது. சட்டம் ஒழிக்கப்பட்டது. 

அரசின் உத்தரவுக்கு ஏற்ப நீதிபதிகள் நீதி வழங்கினார்கள். சட்டம் அழிக்கப்பட்டது. தர்மம் கொலை செய்யப்பட்டது.  

எல்லோருக்கும் ஒவ்வொரு நியாயம். அது பற்றிய ஆதாரங்களை தேடிப் பிடித்து, நாம் நம்பிக்கொண்டிருக்கும் நியாயத்துக்கு வக்காலத்து பேசிக் கொண்டிருந்தோம்.

ஃபேஸ்புக்கில், டிவிட்டரில் கமெண்ட் போடுவதை எதிர்ப்பாய் காட்ட வைக்கப்பட்டோம்.  உலக அரங்கில் டிவிட்டர், ஃபேஸ்புக் இரண்டும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே சாளரம் வீசின. அரசு அலுவலர்கள் அடங்கிப் போனார்கள். இல்லையென்றால் அடக்கப்பட்டார்கள். அதர்மம் தலை விரித்து ஆடியது.

மீடியாக்காரர்கள் ஒவ்வொருவரும் ஊழலின் ஒட்டு மொத்த விசிறிகளாய் மாறினார்கள். அவர்கள்ள மதம், இனம், மொழி, அரசியல், கட்சி கண்ணாடிகள் வழியாக செய்தி வெளியிட வேண்டியவர்கள் ஆனார்கள். 

உலக மனிதர்கள் அனைவரும் யாரோ ஒருவனின், ஒரு கூட்டத்தின் ஆசைக்காக மாறினார்கள். மாற்றப்பட்டார்கள். இது எதுவும் தெரியாமல் நாமெல்லாம் தர்மம் இது, பாவம் இது, புண்ணியம் இதுவென வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருந்தோம். 

ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயமாய் மாறி மனதுக்குள் மிருகங்களாய் மாறினோம். தோற்றத்தில் நாகரீக மனிதர்களாய் நடித்துக் கொண்டிருந்தோம்.

கடமையை நாம் செய்யத் தவறினோம். தன் இயல்பு மறந்தோம். காசேதான் கடவுள் என்று அலைந்தோம். வெளி நாடு வாழ்க்கை இனித்தன நமக்கு. ஆனால் இப்போது வெளி நாடு என்றாலே அலறுகிறோம். என்ன ஒரு விசித்திரம் பாருங்கள். ஒரு மாதம் முன்பு வரை இப்படி ஒரு நிலை வரும் என்று கனவு கூட கண்டிருக்கமாட்டோம். ஆனால் எல்லாமும் நடக்கிறது. மனிதர்கள் சக மனிதர்களை அழிக்க ஆயுதங்களை உருவாக்கினார்கள். அவைகள் இப்போது என்ன செய்கின்றன? கொரானாவின் மீது உலக போலீஸ் அமெரிக்கா அணுகுண்டைப் போடுமா? 

கடவுள் இன்றும் நம்மைக் கைவிடவில்லை. 

அவர் நம் முன்னால் விதித்த கட்டளை இருக்கிறது. 

சுய கட்டுப்பாடும், சுய ஒழுங்கும், சமுதாயத்தின் மீதான அன்பும் காட்டப்படவில்லை எனில் எல்லோரும் அழிக்கப்படுவீர்கள் என்கிறார் கடவுள்.

அதர்மத்தை வேடிக்கை பார்ப்பதை விட்டு விடுங்களென்று ஒரே ஒரு எச்சரிக்கை மட்டும் விடுத்திருக்கிறார் கடவுள் எனுமியற்கை.

மனிதர்களிடத்தில் அதர்மத்தின் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்க, அதிகரிக்க இறைவன் மனிதர்களுக்கு பாடம் புகட்டி விரும்பியதன் விளைவு தான் கொரானா.

இனியும் திருந்தவில்லை எனில் முற்றிலுமாய் பூமியில் இருந்து துடைத்து எறியப்படுவோம் என்பதனை எவரும் மறந்து விடாதீர்கள். நம் வாரிசுகளும் சொத்துக்களும் ஒன்றுமே இல்லாமல் தூசியாகிப் போவார்கள்.

தர்மத்தைக் காக்க துணிவு கொள்ளுங்கள்.

அன்பை விதையாய் விதைப்போம். அதை அன்பு மலர் மலரும் மரமாய் வளர்த்தெடுப்போம்.

உலகிற்கு தேவை மனிதாபிமானம் மிக்க தலைவர்கள். அவர்களை நாம் தேர்ந்தெடுப்போம் கட்சி பேதங்கள் இன்றி.

உலகிற்கு அன்பினை பரிசளிப்போம். 

போனதெல்லாம் போகட்டும் இனி வரும் காலம் வசந்தமாய் மலரட்டும்.