குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label மோடி. Show all posts
Showing posts with label மோடி. Show all posts

Thursday, February 29, 2024

மாணவர்களை படிக்க விடாமல் செய்கிறதா மோடி அரசு?

பாஜக ஆளும் மாநிலங்களில் B.A., B.Sc.,B.Com., ஆகிய படிப்புகளை நான்கு ஆண்டுகளாக மாற்றி விட்டார்கள். ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளை நான்கு ஆண்டுகள் அல்லது ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகளாக மாற்றி விட்டார்கள். சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு பொதுத்தேர்வு. 

பி.காம் படிப்புக்கு தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களின் மாணாக்கர்கள் மூன்று ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடித்திருப்பார்கள். ஆனால் பாஜக மாநிலங்களில் படித்த மாணவர்கள் நான்கு ஆண்டுகள் படித்திருப்பார்கள். வெளி நாடுகளில் மேற்படிப்புக்குச் செல்லும் மாணாக்கர்களுக்கு பெரிய பிரச்சினைக்கு வித்திடும். இந்த சிறு தெளிவு கூட இல்லாமல் இருக்கிறது மோடி அரசின் கல்வித்துறை.

இது மட்டுமல்ல மோடி அரசு பல நூற்றாண்டுகள் வரலாறு கொண்ட கல்வி நிலையங்களின் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது. பெயர் மாற்றத்தால் என்ன நடந்து விடப்போகிறதோ தெரியவில்லை. 

தேசிய தேர்வு முகமை என்ற ஒன்றிய அரசு நிறுவனம்,  ஐ.ஐ.டி(#IIT) மற்றும் என்.ஐ.டி(NIT) சேர்க்கைக்காக வருடம் தோறும் நடத்தும் நுழைவுத் தேர்வில் 12 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். ஒருவருக்கும் ரூ.500 கட்டணம் என வைத்துக் கொண்டால் ஒரு நுழைவுத் தேர்வுக்கு சுமார் 60 கோடி கட்டணத்தைக் கொள்ளை அடிக்கிறது தேசிய தேர்வு முகமை.

அதுமட்டுமல்ல தனியார் கல்வி நிறுவன கார்ப்பொரேட்டுகளுக்கு பயனளிக்கு விதமாக தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ.மெயின் தேர்வு ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் நடத்துகிறார்கள். 

ஏன் தெரியுமா? 

ஏப்ரல், மே மாதங்களில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வு முடிந்த பிறகு ஜே.இ.இ மெயின் தேர்வு வைக்கலாம். ஆனால் நுழைவுத் தேர்வு ஜனவரியில் நடத்தப்படுகிறது.

ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டிக்கான மாணவர் சேர்க்கை ஜூனில் தான் நடக்கிறது. 

அதற்குள் ஏன் அவசரப்படுத்துகிறது ஒன்றிய அரசு?

பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு முன்பு, நுழைவுத் தேர்வை நடத்தி, ரிசல்ட் வெளியாகும் போது, மதிப்பெண் குறைந்தால் மாணவர்களுக்கு பதற்றத்தையும், குழப்பத்தையும் உருவாக்குகிறது மோடி அரசு.

இதற்குப் பின்னால் பெரும் பிசினஸ் ஒளிந்திருக்கிறது. அது என்னவென்றால், ஜனவரி,பிப்ரவரியில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் பெரும்பாலும் தனியார் கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் பெற்றோர்களை மூளைச்சலவை செய்து, மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சீட் வாங்கச் செய்ய உதவும் மார்க்கெட்டிங் உத்திக்காகவே ஜனவரியில் நடத்துகிறார்கள்.

அதுமட்டுமின்றி, ஜே.இ.இ.மெயின் தேர்வில் 2013 முதல் 2018 வரை கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் தலா 30 கேள்விகள் கேட்க்கப்பட்டது. இப்போது தலா 20 மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் மற்றும் 10 நியூமெரிக்கல் கேள்விகள் எனவும், இதில் ஐந்து கேள்விகளுக்குப் பதில் எழுதினால் போதும் என்கிறார்கள். 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு பாடத்திட்டம் இருக்கும் போது, இந்தக் கேள்விகளுக்கு ஒவ்வொரு மா நில மாணவர்கள் எப்படி சரியாக பதில் அளிக்க முடியும்? என்று யோசிக்க மாட்டார்களா? யோசிக்க மாட்டார்கள். 

தேசிய தேர்வு முகமை மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை வெளியிடுவதை சதவீதத்திலிருந்து சதவிகித முறைக்கு மாற்றி மக்களை ஏமாற்றுகிறது.

The key difference between percentage and percentile is the percentage is a mathematical value presented out of 100 and percentile is the per cent of values below a specific value. The percentage is a means of comparing quantities. A percentile is used to display position or rank.

ஆனந்த விகடனில் வெளியான JEE தேர்வு என்ற பெயரில் நடக்கும் மோசடி பற்றி தா. நெடுஞ்செழியன் அவர்களின் கட்டுரையை வாசித்த போது அதிர்ச்சி உண்டானது. அக்கட்டுரை எப்படி மோடி அரசு இந்திய மாணவர்களைப் படிக்க விடாமல் நுழைவுத் தேர்வு நடத்தி விரட்டி அடிக்கிறது என்ற அப்பட்டமான உண்மையை உரைத்தது. இதோ அவரின் கட்டுரையில் ஒரு பாரா மக்களுக்காக...!


மோடி அரசு என்ன சாதிக்க துடிக்கிறது? ஏன் இப்படியான குழப்பமான நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்க முயலுகிறது? இதற்குப் பின்னால் இருக்கும் நயவஞ்சக திட்டம் தான் என்ன? 

எதுவும் புரியவில்லை.

ஒரே நாடு, ஒரே கல்வி எப்படி மொழி வழி மாநிலங்களில் சரியாகும்? 

மாநிலத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த கல்வியை ஒன்றிய அரசு பிடுங்கிக் கொண்டு, இத்தனை அக்கிரமங்களை ஏன் நிகழ்த்துகிறது. 

பெற்றோர்களுக்கு ஏன் இத்தனை மன உளைச்சலைத் தருகிறது மோடி அரசு? 

ஏன்?

இதோ கீழே கட்டுரையாளரின் பதில்....!

நன்றி : ஆனந்த விகடன், நன்றி கல்வியாளர் திரு. நெடுஞ்செழியன். இப்பதிவு ஆனந்த விகடனின் கட்டுரை எல்லோருக்கும் சென்று சேர வேண்டுமென்று சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது.  முழுக்கட்டுரையை ஆனந்த விகடனில் படிக்கவும். 

வாழ்க வளமுடன்..!


கட்டுரை இணைப்பு :

https://www.vikatan.com/education/higher-education/karpathu-ulagalavu-educational-series-39-jee-exam-fraud?utm_source=magazine-page

Monday, June 29, 2020

தர்மத்தின் பாதையினை யார் அறிவார்?


அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம்.

நீண்ட நாட்களாகிப் போகின மீண்டும் எழுத. கொரானா லாக்டவுன் நாட்களில் வீட்டில் இருந்தேனல்லவா, அதை ஈடுபடுத்தும் விதமான ஏதாவது பொருளீட்டி விடலாமென்ற முனைப்பில் பல வேலைகளைச் செய்திருந்தேன். தமிழகத்தில் கொரானா சமூகப் பரவல் அதிகமாகியதால், அவைகள் மீண்டும் முடங்கிப் போயின.

காலம் எல்லாவற்றுக்குமான பதிலை தன்னுள் வைத்திருக்கும் என்ற தத்துவத்தை நினைத்து மனதை ஆற்றுப்படுத்திக் கொண்டாலும், ஆளும் ஆட்சியாளர்களின் திறமையற்ற தன்மையினால் இந்தியர்கள் அடையும் கொடுமைகளை எண்ணி வேதனைதான் அதிகப்படுகிறது.

சார்பற்ற நிலையில் யோசித்துப் பாருங்கள்.

திறமையற்ற ஆட்சித்திறனாலேதான் இந்தியாவில் இவ்வளவு இழப்புகளும் உண்டாகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது அல்லவா?

குஜராத்தில் மதக்கொலைகள் நடைபெற்ற போது வாளாயிருந்தார் அன்றைய சி.எம்.மோடி என்பதால் அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுத்த சம்பவத்தை நாமெல்லாம் படித்திருக்கிறோம். அதன் பிறகு அவர் சீனாவை நோக்கி தன் வர்த்தகப் பயணங்களை மேற்கொண்டார். இதுவரை எந்த ஒரு இந்திய தலைவரும் மேற்கொள்ளாத அளவு, சீன பயணங்கள் சென்றார். சமீபத்தில் கூட சீனா கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழகத்தில் சீன அதிபதிருடன் சந்திப்புகள் நிகழ்த்தி பல வியாபார ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். ஆனால் தற்போது நடந்து வருபவைகள் என்ன? சீனாவை நம்பிய பிரதமருக்கு ஏன் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன?

அதுமட்டுமல்ல, நம் தமிழ் நாட்டின் முதலமைச்சர் கொரானா தொற்று பற்றி பேசும் போது, எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது என்றுச் சொல்லி இருக்கிறார் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அதிகார பலமும், ஆட்சியும், அசுரபலமும் கொண்ட ஆட்சியாளர்கள் இன்று கைபிசைந்து நிற்கும் அவலம் ஏன் உண்டானது? என்ன காரணம்? இதைப் பற்றி அலசி ஆராய பல ஆட்கள் இருக்கின்றார்கள். அவரவர் சிந்தனைகளுக்கு ஏற்ப பல வழிகளில் அரசியல், பொருளாதாரம் போன்ற காரணிகளை வைத்து ஆராய்வார்கள் பெரும்பாலானோர்.

ஆனால் இதற்கெல்லாம் மூலகாரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? சுவாரசியமான அந்த காரணத்தைக் காணலாம் வாருங்கள் என்னுடனே!

இப்போது உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு கூறுகிறேன்.

கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.

நம் பாரத பிரதமர் இந்தியாவிற்கு பிரதமரான வரலாற்றினை மனதுக்குள் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். அதே போல தமிழக முதலமைச்சர், முதலமைச்சரான வரலாற்று  நிகழ்வுகளை ஒரு நிமிடம் யோசித்து விடுங்கள்.

கட்சி சார்பற்ற, மதச் சார்பற்ற நிலையில் மனதை தெளிவாக வைத்துக் கொண்டு யோசித்துப் பாருங்கள். செய்து விட்டீர்களா? இனி தொடர்ந்து படியுங்கள்.

நேர்மையாக இருக்கிறேன், கடுமையாக உழைக்கிறேன், எவருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை, யாரையும் கொல்லவில்லை, எவரையும் கொடுமைப்படுத்தியதில்லை, எல்லோருக்கும் நல்லதுதான் செய்கிறேன். ஆனால் எனக்கு மட்டும் கடவுள் ஏன் இப்படித் துன்பங்களையே தொடர்ந்து செய்கிறான் என்று கவலைப்பட்டிருக்காத மனிதர்களே இப்பூமியில் இருக்கமுடியாது. அதில் நீங்களும் ஒருவர்தான் என்பதில் உங்களுக்கு எந்த வித சந்தேகமும் இல்லையே? நீங்களும் ஒருவர் தான் என்றால் தொடர்ந்து படியுங்கள்.

ஒரு கதை சொல்கிறேன்.

இரவு கவிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மழையில் நனைந்து கொண்டே வந்த ஒருவர், எதிர்பட்ட சத்திரத்திற்குள் நுழைகிறார். அங்கே ஏற்கனவே இருவர் தங்கி இருப்பதைப் பார்க்கிறார்.

”நானும் உங்களுடன் தங்கிக் கொள்ளலாமா?” என்று கேட்கிறார். இருவரும் சம்மதிக்கின்றார்கள்.

இரவு ஆகிறது. பசி நேரம். புதிதாக வந்தவர், ”எனக்குப் பசியாக இருக்கிறது. அவசரத்தில் உணவு கொண்டு வர மறந்து போனேன். உங்களிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்கிறார்.

முதலாமானவர் ”என்னிடம் மூன்று ரொட்டிகள் உள்ளன” என்றும், இரண்டாமாவர் ”என்னிடம் ஐந்து ரொட்டிகள் உள்ளன” என்றும் சொல்கிறார்கள்.

மூன்று பேர், எட்டு ரொட்டிகள் உள்ளன, சமமாகப் பிரித்து உண்டால் நன்றாக இருக்குமே, எப்படிப் பிரிப்பது என்று யோசிக்கிறார்கள். புதிதாக வந்தவர் ”ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டாக்கினால் மொத்தமாக இருபத்து நான்கு ரொட்டித் துண்டுகள் வரும். ஆளுக்கு எட்டுத் துண்டுகளாக உண்ணலாம்” என்று சொல்கிறார். மூவரும் அதன்படியே செய்து, உண்டு விட்டு உறங்கினர்.

மறுநாள், புதிதாக வந்தவர் மீண்டும் தன் பயணத்தை துவக்கிய போது இருவரிடமும் எட்டு தங்க காசுகளைக் கொடுத்து பிரித்துக் கொள்ளும்படி சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

முதலாமாவர் ”ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொள்ளலாம்” என்றார். 

இரண்டாமாவர் ”அதெப்படி சரியாக வரும்? நான் தானே அதிகம் கொடுத்தேன்? எனக்கு ஐந்து, உங்களுக்கு மூன்று என பிரித்துக் கொள்ளலாம்” என்றார். முதலாமாவரோ, ”என்னிடம் குறைவாக ரொட்டிகள் இருந்த போது கூட, நான் அவருக்கு உணவு கொடுத்தேன் அல்லவா? இருவரும் சேர்ந்து தானே அவருக்கு உணவு கொடுத்தோம். அவரின் பசி ஆற்றியதிலே இருவருக்கும் சமபங்கு உண்டுதானே? ஆகவே சமபங்காக பிரித்துக் கொள்ளலாம்” என்றார்.

எட்டு காசுகளைப் பங்கு பிரிப்பதில் இருவருக்கும் பிரச்சினை வந்து விட்டது.

மூன்று ரொட்டி வைத்திருந்தவருக்கு மூன்றும், ஐந்து ரொட்டி வைத்திருந்தவருக்கு ஐந்து தங்க காசும் பிரித்துக் கொடுப்பது சரியா?

மூன்றாவதாக வந்தவரின் பசிக்காக இருவரும் சேர்ந்து உணவு கொடுத்ததற்தாக தானத்தில் அளவு வித்தியாசம் பாராமல் சரி சமமாகப் பிரித்துக் கொடுப்பது சரியா?

இந்த இரண்டு தீர்ப்புகளில் ஒரே ஒரு தீர்ப்புதான் சரி அல்லவா? அது எது என்று யோசித்துப் பாருங்கள். முடிவெடுத்து விட்டீர்கள் அல்லவா?

ஆம் நாமெல்லாம் இந்த இரண்டு தீர்ப்பினை மட்டும் தான் யோசிப்போம்.

ஆனால் இந்தப் பிரச்சினைக்கு தர்மம் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இந்தப் பிரச்சினை அந்த நாட்டு மன்னனிடம் செல்கிறது. பிரச்சினையைக் கேட்டு மன்னன் குழம்பினான். அதே மனநிலையில் சென்று தூங்கிய போது, அவனது கனவில் அவன் வணங்கும் கடவுள் இப்பிரச்சினைக்கு ஒரு தீர்ப்பினை வழங்கினார்.

மறுநாள் அரசவை கூடியது. இருவரும் தீர்ப்புக்காக மன்னன் எதிரில் வந்து நின்றனர்.

”மூன்று ரொட்டி வைத்திருந்தவருக்கு ஒரு காசும், ஐந்து ரொட்டி வைத்திருந்தவருக்கு ஏழு காசும் கொடுக்கும்படி” மன்னர் தீர்ப்பு வழங்கினார். கூடியிருந்த சபையினருக்கு இந்த தீர்ப்பின் அர்த்தம் புரியவில்லை. எதன் அடிப்படையில் இந்த தீர்ப்பினை மன்னர் வழங்கினார் என்று குழம்பினர்.

முதலாமானவரோ ”இது அக்கிரமமான தீர்ப்பு” என்றுச் சொன்னார்.

மன்னர் அனைவரையும் நோக்கினார்.

முதலாமானவரைப் பார்த்து, ”உங்களிடம் இருந்த ரொட்டிகள் எத்தனை” என்று கேட்டார்.

”மூன்று” என்றார் அவர்.

”எத்தனை துண்டுகளாக பிரித்தீர்?”

”ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகளாகப் பிரித்தேன்” என்றார்.

”ஆக உங்களிடமிருந்த மூன்று ரொட்டிகளைப் பிரித்தால் ஒன்பது துண்டுகள் வந்திருக்கும். அதில் எட்டு துண்டுகளை நீங்களே சாப்பிட்டு விட்டீர்கள். ஒரே ஒரு துண்டை மட்டுமே புதிதாக வந்தவருக்கு தானம் செய்தீர்கள். ஆனால் இரண்டாமாவரோ ஐந்து ரொட்டிகளைப் பிரித்து, ஏழு துண்டுகளைத் தானம் செய்தார். அதன்படி உங்களுக்கு ஒரு தங்கக் காசு, அவருக்கு ஏழு தங்கக் காசு வழங்கும்படி ஆணையிட்டேன். தீர்ப்பு சரிதானே?” என்றார் மன்னர்.

நண்பர்களே,

தர்மம் வழங்கும் தீர்ப்பு உண்மை என்னவோ அதன்படிதான் இருக்கும். இப்போது யோசித்துப் பாருங்கள். நாம் ஒவ்வொருவருக்கும் நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் நாம் செய்த தான தருமங்களின் படியே நடத்தப்படும். அதன் பலன்களே நமக்கு கிடைக்கும் அல்லவா? அதிக நற்பலன்களைச் செய்தவர்களுக்கு கடவுள் அதிகமாகவும், குறைவான நற்பலன்களைச் செய்தவர்களுக்கு குறைவாகவும் கிடைப்பதுதானே அறம்? தர்மம்? அதுதானே சரியாக வரும்.

கடவுள் அதிகாரத்திற்குப் பயப்படுவதில்லை. யார் என்ன நற்பலன்களைச் செய்திருக்கின்றார்களோ அப்பலன்களுக்கு ஏற்ற நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும். பிரதமரானாலும் சரி, முதலமைச்சரானாலும் சரி அவர்களுக்கும் அவ்வாறே.

தர்மத்தின் தீர்ப்பு கட்சி சார்பற்றது. மதச் சார்பற்றது. என்றும் அழியாத உண்மையின் வழியில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு மனித வாழ்க்கையும் இப்படித்தான்.

கடவுள் என்பவர் உண்மையானவர். அவர் எப்போதும் யாரையும் தண்டிப்பதும் இல்லை. கணக்கு வழக்குகள் பார்ப்பதும் இல்லை. மனித வாழ்க்கையின் சாரம் தர்மத்தின் பால் அமைக்கப்பட்டிருக்கிறது.

யோசித்துப் பாருங்கள். உங்களுக்கும், எனக்கும் நடக்கும் ஒவ்வொரு நன்மை தீமைகளுக்கும் காரணம் நாமே….!

இல்லையென உங்களால் மறுக்க முடியுமெனில் எனக்கு எழுதுங்கள்.

வாழ்க நலமுடன்….!

Tuesday, April 28, 2020

கொரானா சொல்லப்படாத உண்மைகள்


அமெரிக்காவில் பத்து லட்சத்துக்கும் அதிகமாக கொரானாவில் பாதிப்படைந்து, அதில் 50000 பேர் உயிரிழப்பு நடந்திருக்கிறது என்கிறது செய்தி. இதை நம்பலாம். ஏனென்றால் அங்கு ஓரளவு பத்திரிக்கை முதலாளிகள் தைரியசாலிகள்.

ஆனால் தமிழகத்திலோ, இந்தியாவிலோ வரக்கூடிய செய்திகளை நம்பக் கூடிய அளவுக்கு மீடியாக்கள் இதற்கு முன்னால் உண்மையான செய்திகளை வெளியிடவில்லை. அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் சொன்னார்கள்.

கோவையில் உண்மையை வெளியிட்ட சிம்ப்ளிசிட்டி இணைய பத்திரிக்கையின் நிர்வாகி கைது அதை வெளிக் கொணர்ந்து இருக்கிறது. ஊருக்கு உண்மையைச் சொன்னால் கைது. தமிழக அரசின் கண் அசைவுகளுக்கு ஏற்ப தான் பத்திரிக்கைகளும், டிவிக்களும் செய்திகளை வெளியிடுகின்றன என்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் தேவையில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

என்ன உண்மை என உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சொல்லுங்களேன் என்று கேட்க தோன்றும். அந்தளவுக்கு தரவுகளை என்னால் திரட்ட முடியாது. செய்தி தாள்களில், இணையங்களில், அரசு உத்தரவுகளில் வரக்கூடிய ஒரு சில செய்திகளை படிக்கும் போது பூனைக்குட்டி வெளியில் வந்து விடுகிறது. உண்மையை மறைக்கலாமே தவிர முற்றிலுமாக தவிர்க்க முடியாது. அது உண்மையின் இயல்பு. பொய் பல அலங்காரங்களுடன் வெளியிடப்படும் போது, அந்தச் செய்தியில் உண்மை எங்கோ ஓரிடத்தில் ஒட்டிக் கொண்டு விடும். அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அம்மா உணவகம் மூலம் இலவச உணவு அளிக்கப்படுகிறது என்கிறது அரசு. அதைக் கிண்டல் செய்து கார்ட்டூன் வரைகிறது ஆர்.;பி.ஐ.இயக்குனரின் பத்திரிக்கை துக்ளக். மக்களுக்குப் பதிலாக திமுக என எழுதி இருக்கிறார்கள். எழுத்துப் பிழை அல்ல. கருத்துப் பிழை. உண்மை மக்கள் பட்டினியாக கிடக்கிறார்கள் என்பது.
நேற்று முதலமைச்சர்களுடன் பிரதமர் பேசிய போது, வரும் ஜூன், ஜூலை மாதங்களில் தொற்று அதிகரிக்கும் எனச் சொன்னதாக, ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பகிர்ந்து கொண்டதாகச் செய்திகள் படிக்க கிடைக்கின்றன. அப்போது இன்னும் இரண்டு மாதங்களுக்கு லாக் டவுன் இருக்கலாம் என சிந்தனை வருகிறது.


கேரளா முதலமைச்சர் பி.எம்முக்கு லெட்டர் எழுதுகிறேன் எனச் சொல்லி, ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உங்களால் எங்களுக்கு எந்த வித நன்மையும் இல்லை என்பதற்காக அவர் நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லையோ என நினைப்பு வருகிறது.

கொரானா டெஸ்டிங்கை இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கிறோம் என தமிழக அரசு அறிவிக்கிறது. அப்போது அரசு அறிவிக்கும் தொற்று எண்ணிக்கை சரியானதாக இருக்காது என அறிவு சொல்கிறது. தொற்று எண்ணிக்கை எவ்வளவு எனத் துல்லியமாக அறிவிக்க டெஸ்ட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் தொற்று எண்ணிக்கை குறைவாகத்தானே இருக்கும்? ஆக தமிழக அரசின் அறிவிப்பின் மூலம் ஒரு முடிவுக்கு வர வேண்டி உள்ளது.

பிரதமர் மோடி அவர்கள், பசியோடு இருப்பவர்களுக்கு உதவுங்கள் என்று ஏழு கட்டளைகளைப் பின்பற்றும்படி ரேடியோவில் பேசுகிறார். ஆக மத்திய அரசு மக்களுக்கு உதவாது என்று சொல்லாமல் சொல்கிறார் என்று தெரிகிறது.

நாங்கள் வரியை மட்டும் வசூலிப்போம். அதை குறித்த காலத்துக்குள் மாநில அரசுக்கு கொடுக்க மாட்டோம். மக்கள் செத்துப் போனாலும் கூட நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஆனால் பெரிய நிறுவனங்கள் நடத்தும்  முதலாளிகளுக்கு வட்டி, வரிகளுக்கு தள்ளுபடி வழங்குவோம் என்று சொல்கிறாரோ என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.

எக்கனாமி நன்றாக இருக்கிறது என்று பேசுகிறார். நாமும் நம்புகிறோம். ஆனால் இந்தியாவில் மியூட்சுவல் ஃபண்ட் பிசினஸ் செய்யும் டெம்பிள்டான் நிறுவனத்திற்கு 50000 கோடி நிவாரணம் அறிவிக்கிறது ஆர்.பி.ஐ. நன்றாக இருக்கிறது எக்கனாமி என்று ஒரு பக்கம் பேசி முடிப்பதற்குள், இந்த செய்தி வெளி வருகிறது. மியூட்சுவல் ஃபண்ட்ஸ் அடிவாங்கினால் மொத்தமாக ஷேர் மார்க்கெட் படுத்து விடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை பின் ஏன் டெம்பிள்டானுக்கு ஆர்.பி.ஐ. நிவாரணம் வழங்குகிறது? ஆக இந்தியப் பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்கிறது என தெரிகிறது. இனி பிரதமர் சொல்வதை நம்பலாமா வேண்டாமா என்று அறிவு ஆராய்ச்சி செய்கிறது.
தமிழகத்தை பி.ஜே.பி தான் ஆள்கிறது என்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை என்பார்கள். பால்பாக்கெட் கெட்டுப் போனவுடன், அதை சி.எம்க்கு டிவீட் செய்கிறான். ஆஃப்டர் ஆல் ஒரு கூத்தாடிக்கு வீட்டுக்கே பால் பாக்கெட் கொண்டு போய் கொடுக்கப்படுகிறது. வாங்கியவன் பேசாமல் இருந்திருக்கலாம். வேண்டுமென்றே அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக, அதை டிவீட் போடுகிறான். ஒரு டிவீட்டுக்கு அரசு எனக்கு எவ்வாறு வேலை செய்கிறது எனப் பாருங்கள் என தற்பெருமைக்காக, கேவலப்படுத்துகிறோம் என்று தெரிந்தே அதைச் செய்கிறான் அவன். இப்போது நம் தமிழகத்தின் முதலமைச்சருக்கு நெட்டில் வேறு பெயர் வைத்து அழைக்கிறார்கள். இந்தச் சம்பவம் உண்மையில் சென்ஸார் போர்டில் உறுப்பினராக இருக்கும் ஒரு கூத்தாடிக்கு இந்த அரசு பயந்து கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆக பி.ஜே.பி தான் தமிழகத்தை ஆள்கிறது என்ற செய்தியில் உண்மை இருக்கிறது என்று நம்பிட வேண்டியிருக்கிறது.
இப்படித்தான் வெளியிடப்படும் செய்திகளில் இருக்கும் பொய்களைக் களைந்து உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் இதே கதைதான். ஏதோ இந்தியாவில் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று நினைத்து விட வேண்டாம்.

ஒரு நண்பர் என்னிடம், அரசு கொரானா இல்லை என்று அறிவித்த பிறகு, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று கேட்டார்.
கொரானாவுக்கு மருந்து இருக்கிறது என்று உறுதியாக தெரியும் வரையில் அனுப்புவதில் எனக்கு உவப்பில்லை. ஒரு வருடம் லீவ் போட்டு விட்டால் போச்சு. அரசுக்கு கொரானாவில் செத்தார் என்பது அது அறிவிக்கும் எண்ணிக்கையில் ஒரு எண் கூடும். அவ்வளவுதான். அது அவர்களுக்கு எண் மட்டுமே. ஆனால் நமக்கோ அது ஒரு உயிர். நம் வாழ்வின் துடிப்பு. நம் வாழ்க்கை. டிப்ளமேட்ஸ், அரசியல்வாதிகள் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் பிறரின் வாழ்க்கை? யாருக்கு யார் உத்தரவாதம் தர முடியும்? நாம் தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இனி என்னதான் செய்வது? பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? நம் எதிர்காலம் என்னவாகும்?

பசிக்கு உணவு அதற்காக உழைப்பு, உடலுக்கு உடை, இருக்க ஓர் இடம். இது போதும். கடவுள் மனிதனை இயற்கையோடு ஒன்றி வாழத்தான் படைத்தார். காசு சம்பாதிக்க அல்ல.

பின்னே இந்த அரசியல்வாதிகளை என்ன செய்யலாம்? இனி வரும் காலங்களிலும் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடலாம். எவனாது அரசு இயந்திரத்தை இயக்க வேண்டுமே?

நமக்குத்தான் தைரியம் இல்லையே. கேள்வி கூட கேட்க மாட்டோமே? தெருவில் இறங்கி நிற்க கூட தைரியமில்லையே? எக்கேடு கெட்டால் தான் நமக்கு என்ன? கூனிப் போய் விட்டது மனசும் உடம்பும் நமக்கு.

ஆக, அரசு தன்னால் இயன்றதைச் செய்யும். அது எல்லோருக்குமானதாக இருக்காது. மக்கள் தான் தங்களை காத்துக் கொண்டு உயிரோடு இருக்க வேண்டும். இல்லையென்றால் சுடுகாடு. மக்கள் உயிருடன் இருந்தால் ஓட்டுப் போட்டு ஜன நாயகத்தை நிலை நாட்டலாம். வரி கொடுக்கலாம். உயிருடன் இல்லாது செத்துப் போனால் அது அரசின் புள்ளி விபரங்களுக்கு உதவும். இத்தனை பேர் உயிருடன் உள்ளார்கள். இத்தனை பேர் இறந்து விட்டார்கள் என்று அரசு கணக்குகளை டிவியில் வெளியிடும். நிச்சயமாக இறப்பு விகிதம் குறைவாகத்தான் இருக்கும். உண்மைக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகமோ அதிகம்.

நீங்கள் புள்ளி விபரங்களில் எதுவாக இருக்க விரும்புகின்றீர்கள் என்பது உங்களின் அறிவுக்கு உட்பட்டது.

ஆகவே நண்பர்களே, இதுவும் கடந்து போகும் என்ற எதிர்மறைச் சிந்தனையில், விதி இதுதான், கடவுளின் விருப்பம் இது, இயற்கையின் சீற்றம் இது என்று வசதிக்கு ஏற்றபடி சிந்தித்து முடிவெடுப்போம்.

குறிப்பு : செய்திகளை உற்றுக் கவனியுங்கள். உண்மையை உணர்ந்து கொள்வோம். நம்மையும், நம் உறவுகளையும், நண்பர்களையும் காப்பாற்றுவோம்.

வாழ்க நலமுடன்…வளமுடன்…!!