குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தர்மம். Show all posts
Showing posts with label தர்மம். Show all posts

Tuesday, June 28, 2022

தர்மம் தலைகாக்குமா? ஓர் உண்மைச் சம்பவம்

பிளாக்கைப் படித்து வருபவர்களுக்கு நானொரு திமுக உ.பி என்று நினைக்கத் தோன்றும். ஏனென்றால் பிஜேபியையும், நூலிபான்கள் என்று சொல்லக்கூடிய பிராமணீயத்தையும் பற்றி எழுதுகிறேன். எனக்கு பிஜேபி, பிராமணீயம் ஆகியவற்றின் மீது வெறுப்பெல்லாம் இல்லை. 

பிஜேபியின் திட்டம் தெளிவானது மதக்கலவரம், ஆட்சி அதிகாரம். 

பிராமணியத் திட்டம் தெளிவானது எப்போதும் போல ஆட்சி, அதிகாரம், கொள்ளை, தன் சாதி, தன் இன மக்கள் நலன். பிறரை கீழ்சாதி என்று அடிமைப்படுத்தி வைத்துக் கொள்வது. நூற்றாண்டு காலமாக இவர்கள் தொடர்ந்து செய்து வரும் அக்கிரமம்.

தேவர் இனத்துக்கும் பிராமணர்களுக்கும் ஒரு இணைப்பு எப்போதும் உண்டு. தேவரினத்தவர்கள் சாமி, சாமி என்று கொண்டாடுவது பிராமணர்களை மட்டுமே. நானும் சிறு வயதில் அப்படித்தான் இருந்தேன். இப்பவும் அப்படித்தான் இருக்கிறேன். பிராமணர்கள் என்றால் சாமி என்று தானாகவே அழைத்து விடுவேன். என்னளவில் கருவறை பிரச்சினை வந்ததில்லை. என்னை யாரும் தடுத்ததும் இல்லை. 

இளம் பிராயங்களில் பிராமணர்கள் பற்றி அதிகம் தெரியாது. புன்னியாசனம், தெவசம் போன்றவற்றுக்கு வீட்டுக்கு பெரியவர்கள் வருவார்கள். பின்னர் என் பார்ப்பன நண்பன் வந்தான். அவனுக்கும் எனக்கும் மந்திரங்கள் உச்சரிப்பதில் குழப்பம் வரும். டென்சனாவான். ’சும்மா இரேண்டா’ என்று திட்டுவான். அதெல்லாம் ஒரு காலம். இப்போது பிராமணிய சாதிய நரித்தனங்களை, அவர்கள் செய்யும் சூக்கும கொடுமைகளை உணர்ந்து கொள்ளும் பக்குவம் வந்து விட்டது. 

எல்லோரும் வாழ வேண்டும், விட வேண்டும், உதவ வேண்டும். இன்றிருப்பார் நாளை இல்லை என்கிற போது,  தன் இனம், மொழி, உணவு, உடை, கலாச்சாரம் மட்டுமே உயர்வானது என்கிற தற்குறித்தனத்தைப் பற்றி எழுத தான் வேண்டும். 

முற்காலங்களில் சிறார்களுக்குத் திருமணம் செய்து வைத்ததது பார்ப்பனியம். சிறுவன் இறந்து போனால் சிறுமிக்கு மொட்டை அடித்து, வெள்ளை உடை கொடுத்து முடங்க வைத்தது. ஆதாரம் இல்லாமல் அள்ளி விடாதே என்று நினைக்க வேண்டாம். செங்கோட்டை ஆவுடை அக்காள் ஒருவரே சாட்சி.

பார்ப்பனர்கள் காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் மாறவில்லை. வடமாநில கோவில்களில் சுவாமி சிலைகளை தொட்டு ஆராதிக்கும் போது ஆகமங்கள் எதுவும் குறுக்கே வருவதில்லை. தமிழகத்தில் உள்ள சுவாமி சிலைகள் மட்டும் ஆகமத்துக்கு உட்பட்டவை என்கிற பொய்யையும், புரட்டையும் நம்பிக் கொண்டிருக்கும் தமிழர்களைத் தான் காரணம் சொல்ல வேண்டும். 

நிறுவனங்களை ஆரம்பிக்கும் போது பூசை, ஹோமம் செய்யப்படுவது வாடிக்கை. அது எதையும் செய்யாது என்று கூட தெரியாத மடையர்கள் தமிழகத்தில் அதிகம். செய்யும் தொழிலே தெய்வம் அன்றி ஹோமமும், பூசையுமா தொழிலை நடத்தும்? உலகையே ஆட்டிபடைக்கும் அமெரிக்காவில் எந்த ஹோமம் நடத்துகிறார்கள்? ஆகமம் பேசும் நூலிபான்கள் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்கிறார்களே அந்தக் கம்பெனிகள் லாபம் ஈட்டாமலா இருக்கின்றன? 

கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டிருக்கும் மடையர்களால் மட்டுமே தமிழர்கள் முன்னேறாமல் முடங்கிக் கிடக்கின்றனர். 

பார்ப்பனர்கள் செய்யும் இந்த அக்கிரமங்களைத் தர்மம் தண்டிக்கிறதா என்றால் ஆம், தண்டிக்கிறது என்பதற்கான சாட்சிகள் என்னிடம் உண்டு. அவர்கள் தாங்களாகவே அழிந்து கொண்டிருக்கின்றனர். தெரிந்து கொள்ள நல்ல புகழ் பெற்ற பரிகார தல கோவில்களில் கவனியுங்கள். 

தர்மம் அது இதுவென்று உளறிக் கொண்டிருக்காதே? தர்மமாவது, புண்ணியமாவது என்று கேட்பது எனக்குத் தெரிகிறது.  

ஒரு உண்மைச் சம்பவத்தைப் படியுங்கள்.

கோவை பள்ளப்பாளையத்தில் விவேகானந்தர் அனாதை சிறுவர் இல்லம் இயங்கி வருகிறது. சுவாமி ஆத்மானந்தர் அவர்களால் நடத்தப்பட்டு வரும் இல்லத்தில் பல மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அரசு விதிகளுக்கு உட்பட்டு நீண்டகாலமாக நடந்து வருகிறது. கரூர் ஆசிரமத்தில் ஒரு ஆசாரி இருந்தார். ஆசிரமத்தில் உள்ள அத்தனை வேலைகளையும் அவர் தான் செய்வார். கணிணி துறைக்கு டேபிள்கள் செய்வதிலிருந்து எனக்குத் தனிப்பட்ட முறையில் அலுவலகம் அமைத்து தந்ததால் அவரை நன்கறிவேன். இவர் தன் உறவினர் பையனை அனாதை சிறுவர் இல்லத்தில் கொண்டு வந்து விடுகிறார். பையன் இங்கு தங்கிப் படிக்க முடியாது என்று மறுக்கிறான். அவனிடம் ஏதேதோ சொல்லி இல்லத்தில் விட்டுச் செல்கின்றனர்.

அன்று இரவு பையன் தூக்குப் போட்டுக் கொண்டான். விடிகாலையில் கண்ட நிர்வாகி அவசரப்பட்டு பையனை இறக்கி பார்க்க உயிரில்லை. உடனே கயிற்றை எரித்து விட்டு, இடத்தைச் சுத்தப் படுத்தி விட்டார். ஆசாரியிடம் விஷயத்தைச் சொல்லி, பையனை அவனது ஊருக்கு கொண்டு செல்ல முயன்ற போது, காவல்துறையில் புகார் கொடுத்து விட்டனர். 

காவல்துறை வருகிறது. விசாரனை ஆரம்பிக்கிறது. 

’கயிறு எங்கே?’, எரித்து விட்டார்கள், ‘ஏன் எரித்தீர்கள்?’ என்றால் பதில் இல்லை. சந்தேகம் விழுந்து விட்டது. தூக்கில் தொங்கிய இடமோ படு சுத்தமாக இருக்கிறது. பையனை அடித்து தூக்கில் தொங்க விட்டு விட்டனர் என்ற முடிவுக்கு வந்து விட்டது. சின்னப்பையன் தானாகவா வந்து தூக்கில் தொங்குவான்? இதில் மர்மம் இருக்கிறது. கொலையாக இருக்க 99 சதவீதம் சாத்தியக்கூறுகள் உள்ளன என்று காவல்துறை முடிவுக்கு வந்து விட்டது. 

சாட்சிகள் எல்லாம் எதிராய் இருக்கிறது. 

முப்பது ஆண்டுகாலம் வேலை செய்த ஆசாரி லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றிருக்கிறார். 

அவருக்கு நன்கு தெரியும் பையன் இருக்க முடியாது என்று சொல்லியும் விட்டுச் சென்றதால் அவன் அந்த முடிவினை எடுத்திருக்கிறான் என்பது. இருப்பினும் ஆசை விடவில்லை. 

இதற்குள் பத்திரிக்கையாளர்கள் வந்து விட்டனர். அனாதை இல்லத்தில் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டான் என்று தலைப்புச் செய்தி போட்டு விட்டனர். ஒரு சிலர் பணம் கேட்க ஆரம்பித்திருக்கின்றார்கள். 

ஆனால் நடந்தது என்ன? பையனுக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை. அவன் கோபத்தில் அவசர முடிவு எடுத்து விட்டான். இதை நிரூபிப்பது எப்படி?

அன்பு நண்பர்களே, உண்மைக்கு எப்போதும் ஒரு தன்மை உண்டு. தன்னை மிகச் சரியானதொரு நேரத்தில் வெளிப்படுத்திக் கொள்ளும். 

இந்தக் கொலைப் புகாரில் இருந்து வெளியே வந்தது அந்த அனாதை இல்லம்.

எப்படி?

அன்று மாலை வரை அங்கிருக்கும் சிசிடிவி கேமரா பற்றி எவருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் அது இருந்த இடம் அப்படி. சிசிடிவி கேமரா புட்டேஜ்களைக் கொண்டு போய் காவல்துறையில் கொடுக்கிறார்கள். 

அதில் அந்தச் சிறுவன் விடிகாலையில் கயிறு எடுத்துக் கொண்டு போய், பள்ளி வராண்டாவில் உள்ள வளையத்தில் மாட்டி, கழுத்தில் கட்டிக் கொண்டு, வரண்டாவிலிருந்து காலை விடுவித்து தொங்கியதை அட்சர சுத்தமாக பதிவு செய்திருக்கிறது கேமரா. அவன் தொங்கி நீண்ட நேரம் சென்ற பிறகு நிர்வாகி வந்து பார்ப்பதும், அவனை இறக்கி உயிர் இருக்கிறதா என்று பார்ப்பதும், பின்னர் இடத்தைச் சுத்தப்படுத்தியதையும் பார்த்த காவல்துறை அது தற்கொலை என்று வழக்கை முடிவுக்கு கொண்டு வருகிறது.

இல்லத்தின் மீது புகார் கொடுத்த ஆசாரி கையைப் பிசைந்து கொண்டு நின்றாராம். பத்திரிக்கைகள் மறுப்புச் செய்தி கூட போடவில்லை. அந்தளவுக்கு பிணங்களின் மீது பத்திரிக்கைகளுக்கு பிடிப்பு. எது உண்மை? எது பொய் என்று விசாரிப்பதில்லை. உடனே தலைப்புச் செய்தி, பரபரப்பு கிளப்பி பத்திரிக்கையை விற்று விட வேண்டும். 

அவ்வளவுதான். ஆசாரி, காவல்துறை, பத்திரிக்கைகள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்பதை தர்மம் உலகிற்கு உணர்த்தியது மீண்டும் மீண்டும்.

அந்த வீடியோ புட்டேஜ் மட்டும் இல்லையென்றால் இல்லம் மூடப்பட்டிருக்கும் இல்லையா?

நீதிமன்றமும், காவல்துறையும், பத்திரிக்கைகளும், ஆசாரியும் இணைந்து அந்த இல்லத்தை அழித்திருப்பார்கள் அல்லவா?

ஆனால் நடக்கவில்லை. ஏன் தெரியுமா? அந்த இடத்தில் சுவாமி ஆத்மானந்தா அவர்கள் செய்து வரும் தர்மம்.

தர்மம் என்றைக்கும் தலைகாக்கும்.

ஆனால் அக்கிரமக்காரர்களுக்கு தலையை எடுத்து விடும். ஒரே உதாரணம் யார்? நான் சொல்லியா தெரிய வேண்டும்?

வாழ்க வளமுடன்...!

Monday, June 29, 2020

தர்மத்தின் பாதையினை யார் அறிவார்?


அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம்.

நீண்ட நாட்களாகிப் போகின மீண்டும் எழுத. கொரானா லாக்டவுன் நாட்களில் வீட்டில் இருந்தேனல்லவா, அதை ஈடுபடுத்தும் விதமான ஏதாவது பொருளீட்டி விடலாமென்ற முனைப்பில் பல வேலைகளைச் செய்திருந்தேன். தமிழகத்தில் கொரானா சமூகப் பரவல் அதிகமாகியதால், அவைகள் மீண்டும் முடங்கிப் போயின.

காலம் எல்லாவற்றுக்குமான பதிலை தன்னுள் வைத்திருக்கும் என்ற தத்துவத்தை நினைத்து மனதை ஆற்றுப்படுத்திக் கொண்டாலும், ஆளும் ஆட்சியாளர்களின் திறமையற்ற தன்மையினால் இந்தியர்கள் அடையும் கொடுமைகளை எண்ணி வேதனைதான் அதிகப்படுகிறது.

சார்பற்ற நிலையில் யோசித்துப் பாருங்கள்.

திறமையற்ற ஆட்சித்திறனாலேதான் இந்தியாவில் இவ்வளவு இழப்புகளும் உண்டாகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது அல்லவா?

குஜராத்தில் மதக்கொலைகள் நடைபெற்ற போது வாளாயிருந்தார் அன்றைய சி.எம்.மோடி என்பதால் அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுத்த சம்பவத்தை நாமெல்லாம் படித்திருக்கிறோம். அதன் பிறகு அவர் சீனாவை நோக்கி தன் வர்த்தகப் பயணங்களை மேற்கொண்டார். இதுவரை எந்த ஒரு இந்திய தலைவரும் மேற்கொள்ளாத அளவு, சீன பயணங்கள் சென்றார். சமீபத்தில் கூட சீனா கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழகத்தில் சீன அதிபதிருடன் சந்திப்புகள் நிகழ்த்தி பல வியாபார ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். ஆனால் தற்போது நடந்து வருபவைகள் என்ன? சீனாவை நம்பிய பிரதமருக்கு ஏன் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன?

அதுமட்டுமல்ல, நம் தமிழ் நாட்டின் முதலமைச்சர் கொரானா தொற்று பற்றி பேசும் போது, எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது என்றுச் சொல்லி இருக்கிறார் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அதிகார பலமும், ஆட்சியும், அசுரபலமும் கொண்ட ஆட்சியாளர்கள் இன்று கைபிசைந்து நிற்கும் அவலம் ஏன் உண்டானது? என்ன காரணம்? இதைப் பற்றி அலசி ஆராய பல ஆட்கள் இருக்கின்றார்கள். அவரவர் சிந்தனைகளுக்கு ஏற்ப பல வழிகளில் அரசியல், பொருளாதாரம் போன்ற காரணிகளை வைத்து ஆராய்வார்கள் பெரும்பாலானோர்.

ஆனால் இதற்கெல்லாம் மூலகாரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? சுவாரசியமான அந்த காரணத்தைக் காணலாம் வாருங்கள் என்னுடனே!

இப்போது உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு கூறுகிறேன்.

கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.

நம் பாரத பிரதமர் இந்தியாவிற்கு பிரதமரான வரலாற்றினை மனதுக்குள் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். அதே போல தமிழக முதலமைச்சர், முதலமைச்சரான வரலாற்று  நிகழ்வுகளை ஒரு நிமிடம் யோசித்து விடுங்கள்.

கட்சி சார்பற்ற, மதச் சார்பற்ற நிலையில் மனதை தெளிவாக வைத்துக் கொண்டு யோசித்துப் பாருங்கள். செய்து விட்டீர்களா? இனி தொடர்ந்து படியுங்கள்.

நேர்மையாக இருக்கிறேன், கடுமையாக உழைக்கிறேன், எவருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை, யாரையும் கொல்லவில்லை, எவரையும் கொடுமைப்படுத்தியதில்லை, எல்லோருக்கும் நல்லதுதான் செய்கிறேன். ஆனால் எனக்கு மட்டும் கடவுள் ஏன் இப்படித் துன்பங்களையே தொடர்ந்து செய்கிறான் என்று கவலைப்பட்டிருக்காத மனிதர்களே இப்பூமியில் இருக்கமுடியாது. அதில் நீங்களும் ஒருவர்தான் என்பதில் உங்களுக்கு எந்த வித சந்தேகமும் இல்லையே? நீங்களும் ஒருவர் தான் என்றால் தொடர்ந்து படியுங்கள்.

ஒரு கதை சொல்கிறேன்.

இரவு கவிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மழையில் நனைந்து கொண்டே வந்த ஒருவர், எதிர்பட்ட சத்திரத்திற்குள் நுழைகிறார். அங்கே ஏற்கனவே இருவர் தங்கி இருப்பதைப் பார்க்கிறார்.

”நானும் உங்களுடன் தங்கிக் கொள்ளலாமா?” என்று கேட்கிறார். இருவரும் சம்மதிக்கின்றார்கள்.

இரவு ஆகிறது. பசி நேரம். புதிதாக வந்தவர், ”எனக்குப் பசியாக இருக்கிறது. அவசரத்தில் உணவு கொண்டு வர மறந்து போனேன். உங்களிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்கிறார்.

முதலாமானவர் ”என்னிடம் மூன்று ரொட்டிகள் உள்ளன” என்றும், இரண்டாமாவர் ”என்னிடம் ஐந்து ரொட்டிகள் உள்ளன” என்றும் சொல்கிறார்கள்.

மூன்று பேர், எட்டு ரொட்டிகள் உள்ளன, சமமாகப் பிரித்து உண்டால் நன்றாக இருக்குமே, எப்படிப் பிரிப்பது என்று யோசிக்கிறார்கள். புதிதாக வந்தவர் ”ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டாக்கினால் மொத்தமாக இருபத்து நான்கு ரொட்டித் துண்டுகள் வரும். ஆளுக்கு எட்டுத் துண்டுகளாக உண்ணலாம்” என்று சொல்கிறார். மூவரும் அதன்படியே செய்து, உண்டு விட்டு உறங்கினர்.

மறுநாள், புதிதாக வந்தவர் மீண்டும் தன் பயணத்தை துவக்கிய போது இருவரிடமும் எட்டு தங்க காசுகளைக் கொடுத்து பிரித்துக் கொள்ளும்படி சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

முதலாமாவர் ”ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொள்ளலாம்” என்றார். 

இரண்டாமாவர் ”அதெப்படி சரியாக வரும்? நான் தானே அதிகம் கொடுத்தேன்? எனக்கு ஐந்து, உங்களுக்கு மூன்று என பிரித்துக் கொள்ளலாம்” என்றார். முதலாமாவரோ, ”என்னிடம் குறைவாக ரொட்டிகள் இருந்த போது கூட, நான் அவருக்கு உணவு கொடுத்தேன் அல்லவா? இருவரும் சேர்ந்து தானே அவருக்கு உணவு கொடுத்தோம். அவரின் பசி ஆற்றியதிலே இருவருக்கும் சமபங்கு உண்டுதானே? ஆகவே சமபங்காக பிரித்துக் கொள்ளலாம்” என்றார்.

எட்டு காசுகளைப் பங்கு பிரிப்பதில் இருவருக்கும் பிரச்சினை வந்து விட்டது.

மூன்று ரொட்டி வைத்திருந்தவருக்கு மூன்றும், ஐந்து ரொட்டி வைத்திருந்தவருக்கு ஐந்து தங்க காசும் பிரித்துக் கொடுப்பது சரியா?

மூன்றாவதாக வந்தவரின் பசிக்காக இருவரும் சேர்ந்து உணவு கொடுத்ததற்தாக தானத்தில் அளவு வித்தியாசம் பாராமல் சரி சமமாகப் பிரித்துக் கொடுப்பது சரியா?

இந்த இரண்டு தீர்ப்புகளில் ஒரே ஒரு தீர்ப்புதான் சரி அல்லவா? அது எது என்று யோசித்துப் பாருங்கள். முடிவெடுத்து விட்டீர்கள் அல்லவா?

ஆம் நாமெல்லாம் இந்த இரண்டு தீர்ப்பினை மட்டும் தான் யோசிப்போம்.

ஆனால் இந்தப் பிரச்சினைக்கு தர்மம் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இந்தப் பிரச்சினை அந்த நாட்டு மன்னனிடம் செல்கிறது. பிரச்சினையைக் கேட்டு மன்னன் குழம்பினான். அதே மனநிலையில் சென்று தூங்கிய போது, அவனது கனவில் அவன் வணங்கும் கடவுள் இப்பிரச்சினைக்கு ஒரு தீர்ப்பினை வழங்கினார்.

மறுநாள் அரசவை கூடியது. இருவரும் தீர்ப்புக்காக மன்னன் எதிரில் வந்து நின்றனர்.

”மூன்று ரொட்டி வைத்திருந்தவருக்கு ஒரு காசும், ஐந்து ரொட்டி வைத்திருந்தவருக்கு ஏழு காசும் கொடுக்கும்படி” மன்னர் தீர்ப்பு வழங்கினார். கூடியிருந்த சபையினருக்கு இந்த தீர்ப்பின் அர்த்தம் புரியவில்லை. எதன் அடிப்படையில் இந்த தீர்ப்பினை மன்னர் வழங்கினார் என்று குழம்பினர்.

முதலாமானவரோ ”இது அக்கிரமமான தீர்ப்பு” என்றுச் சொன்னார்.

மன்னர் அனைவரையும் நோக்கினார்.

முதலாமானவரைப் பார்த்து, ”உங்களிடம் இருந்த ரொட்டிகள் எத்தனை” என்று கேட்டார்.

”மூன்று” என்றார் அவர்.

”எத்தனை துண்டுகளாக பிரித்தீர்?”

”ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகளாகப் பிரித்தேன்” என்றார்.

”ஆக உங்களிடமிருந்த மூன்று ரொட்டிகளைப் பிரித்தால் ஒன்பது துண்டுகள் வந்திருக்கும். அதில் எட்டு துண்டுகளை நீங்களே சாப்பிட்டு விட்டீர்கள். ஒரே ஒரு துண்டை மட்டுமே புதிதாக வந்தவருக்கு தானம் செய்தீர்கள். ஆனால் இரண்டாமாவரோ ஐந்து ரொட்டிகளைப் பிரித்து, ஏழு துண்டுகளைத் தானம் செய்தார். அதன்படி உங்களுக்கு ஒரு தங்கக் காசு, அவருக்கு ஏழு தங்கக் காசு வழங்கும்படி ஆணையிட்டேன். தீர்ப்பு சரிதானே?” என்றார் மன்னர்.

நண்பர்களே,

தர்மம் வழங்கும் தீர்ப்பு உண்மை என்னவோ அதன்படிதான் இருக்கும். இப்போது யோசித்துப் பாருங்கள். நாம் ஒவ்வொருவருக்கும் நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் நாம் செய்த தான தருமங்களின் படியே நடத்தப்படும். அதன் பலன்களே நமக்கு கிடைக்கும் அல்லவா? அதிக நற்பலன்களைச் செய்தவர்களுக்கு கடவுள் அதிகமாகவும், குறைவான நற்பலன்களைச் செய்தவர்களுக்கு குறைவாகவும் கிடைப்பதுதானே அறம்? தர்மம்? அதுதானே சரியாக வரும்.

கடவுள் அதிகாரத்திற்குப் பயப்படுவதில்லை. யார் என்ன நற்பலன்களைச் செய்திருக்கின்றார்களோ அப்பலன்களுக்கு ஏற்ற நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும். பிரதமரானாலும் சரி, முதலமைச்சரானாலும் சரி அவர்களுக்கும் அவ்வாறே.

தர்மத்தின் தீர்ப்பு கட்சி சார்பற்றது. மதச் சார்பற்றது. என்றும் அழியாத உண்மையின் வழியில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு மனித வாழ்க்கையும் இப்படித்தான்.

கடவுள் என்பவர் உண்மையானவர். அவர் எப்போதும் யாரையும் தண்டிப்பதும் இல்லை. கணக்கு வழக்குகள் பார்ப்பதும் இல்லை. மனித வாழ்க்கையின் சாரம் தர்மத்தின் பால் அமைக்கப்பட்டிருக்கிறது.

யோசித்துப் பாருங்கள். உங்களுக்கும், எனக்கும் நடக்கும் ஒவ்வொரு நன்மை தீமைகளுக்கும் காரணம் நாமே….!

இல்லையென உங்களால் மறுக்க முடியுமெனில் எனக்கு எழுதுங்கள்.

வாழ்க நலமுடன்….!

Tuesday, September 20, 2016

பூம் பூம் மாட்டுக்காரன்

பெரிய வெங்கல அண்டாவில் நெல்லைக் கொட்டி தண்ணீர் சேர்த்து, அண்டாவின் அகன்ற வாய்ப்பகுதியில் கும்மலாய் குவித்து அதில் தண்ணீரைத் தெளித்து அதன் மீது ஈரச்சாக்கை போட்டு கீழே அடுப்பு மூட்டி எரிய விடுவார்கள். சூடு ஏற ஏற நெல் அவியும் வாசம் பரவும். நெல்மணிகள் வாய் விரித்து இருக்கும். பதம் வந்து விட்டது. தண்ணீரை வடித்து நெல்மணிகளை கல்வாசலில் கொட்டி பரப்பி விட்டால் வெயிலில் காயும். அடிக்கடி காலால் பிரட்டி விட வேண்டும். பின்னர் மதியம் போல குமித்து சாக்குப் போட்டு மூடி வைத்து விட வேண்டும். இப்படியே மூன்று நாட்கள் அவித்த நெல்மணிகள் ஈரம் காய்ந்து விடும். அதை மூட்டையில் கட்டி வடக்கித் தெரு சுப்பையாதேவர் மில்லுக்கு கொண்டு சென்றால் அங்கு அரவை செய்து தவிடு, அரிசி, குருணை என்று தனித்தனியாக சாக்கில் பிடித்து வீட்டுக்கு வந்து விடும்.

35 வருடங்களுக்கு முன்பு  பெரும் குடி விவசாயிகள் தான் நெல்லைச் சேகரித்து வைத்து அரிசிச் சோறு உண்பார்கள். விவசாயக்கூலிகள் கூலியாக நெல்மணிகளை மரக்கால் கணக்கில் வாங்கிக் கொள்வார்கள். நானே அளந்து போட்டிருக்கிறேன். மரக்கால் என்றால் நான்கு படிகள் கொண்டவை. வீட்டில் வெங்கல மரக்கால் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெரிந்து நெல் வாங்குவது நின்று கூலியாகப் பணம் பெற்றுக் கொண்டார்கள். 

தினமும் வீட்டிற்கு நான்கைந்து தர்மம் பெறுபவர்கள் வருவார்கள். ”அம்மா தர்மம் போடுங்கம்மா” என்ற குரல் கேட்டு அடுக்களைக்குள் இருக்கும் அம்மா கிண்ணத்தில் இரண்டு கைப்பிடி அரிசியைக் கொண்டு வந்து போடுவார்கள். இது தினம் தோறும் நடைபெறும் சம்பவம். ஒரு சிலர் சாப்பாடு கேட்பார்கள். வீட்டின் பின்புறம் வரச்சொல்லி பழைய சோறு, பழைய குழம்புடன் மறக்காமல் வெந்தய மாங்காய் ஊறுகாய் வைத்துக் கொடுப்பார்கள். பூவரச இலையைக் கொய்து அதை விளக்குமாத்துக் குச்சியால் தைத்து இலைபோல தயாரிப்பார் தர்மம் கேட்பவர். அதில் தான் உணவு போடுவார்கள். ஒரு சிலர் அலுமினியத்தட்டுக்களைக் கொண்டு வருவார்கள்.

(பூம் பூம் மாட்டுக்காரர்)

பூம் பூம் மாட்டுக்காரன் எப்போதாவது வருவான். அழகான காளையை அலங்கரித்து தோளில் தொங்கும் மேளத்தின் இருபக்கமும் வளைந்த இரண்டு குச்சிகளினால் இழுப்பான். அது பூம் பூம் என்று சத்தமிடும். காளை மாட்டின் மீது மாட்டப்பட்டிருக்கும் மணிகள் சத்தமிடும். சிகண்டியை வேறு அடித்து வருவான். வாசலில் வந்து நின்றதும் ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விடுவான். பழைய துணிகள் இருந்தால் கேட்பான். தர்மம் கிடைத்ததும் சென்று விடுவான்.

சாமியார்கள் வருவார்கள், பெண்கள் வருவார்கள், வயதானவர்கள் வருவார்கள். “அம்மா, தர்மம் போடுங்கம்மா!” என்ற குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். கல்லூரிக்குச் சென்ற பிறகு அந்த தர்மம் கேட்ட குரல்களும், பூம் பூம் மாட்டுக்காரனையும் நான் இதுவரை பார்க்கவில்லை. இனிப் பார்க்கவும் முடியாது. தர்மம் போடுங்கம்மா என்ற குரலுக்கு இரண்டு கைப்பிடி அரிசியைத்தான் தர்மம் செய்வார்கள். அரிசி கொஞ்சம் கொஞ்சமாக தன் வயத்தை காலத்தின் போக்கில் இழந்து விட்டது.

ஊசி, பாசி என்ற குரல் வாரம் ஒரு முறை கேட்கும். குறத்திகள் அழகான பாவாடை கட்டி, குறுக்கே தாவணி போட்டுக் கொண்டு வருவார்கள். இடது கைப்பக்கமாக துணித் தூளியில் கைக்குழந்தையொன்று உட்கார்ந்திருக்கும். கண் மை, ஊசிகள்,காது குடையும் வஸ்து, பாசிமணிகள் விற்பார்கள். சின்னஞ் சிறு வயதாக இருக்கும் குறத்தி கையில் குழந்தை இருக்கும். நல்ல மஞ்ச மஞ்சளேன்னு இருப்பார்கள். சரோஜாதேவி, பானுமதி, காஞ்சனா என சினிமா பெயர்கள் தான் வைத்திருப்பார்கள். அரிசிக்கு தான் மேற்கண்டவைகளை விற்பார்கள். 

காலத்தின் போக்கில் மறைந்து போன இது போன்ற மனிதர்களும், குடியானவர்களின் தர்மம் செய்யும் போக்கும் இனி எந்தக் காலத்திலும் பார்க்க முடியாது. குடியானவன் வாழ்வில் தர்மம் ஒரு பகுதியாக இருந்தது. வீட்டு வாசலுக்கு வரும் எவரும் வெறும் கையோடு அனுப்ப மாட்டார்கள். 

”தர்மம் செய்யுங்கம்மா” என்ற குரல் இப்போது வீட்டின் வாசல்களில் கேட்பதில்லை. அந்தக்காலத்தில் சாமியார்கள், வயதானவர்கள் தர்மம் செய்யுங்கம்மா என்று கேட்டார்கள். இந்தக் காலத்தில் ஒவ்வொரு குடும்பமே கோவில்களில் இருக்கும் சாமிகளின் முன்னே நின்று கொண்டு “சாமி எனக்கு அதைக் கொடு இதைக் கொடு” என தர்மம் கேட்கின்றார்கள்.

தர்மம் கேட்பது நிற்கவில்லை. ஆட்கள் தான் மாறி விட்டார்கள்.


Wednesday, November 28, 2012

தர்மம் பேசுகிறது - ஒன்று



அம்புஜம் என்றொரு பெண்மணி. எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு ஒரு பெண், சற்றே பெருத்த சுமாரான அழகுடைய பெண். அம்புஜத்தின் கணவர் இருக்கும் இடம் தெரியாது. தன் பெண்ணிற்கு நல்ல மாப்பிள்ளையைத் தேடினார்கள். அவர் ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குனர். நல்ல குடும்பம். வெகு சுமாரான குடும்பத்தினைச் சேர்ந்த அம்புஜம் மகள் அப்பெரிய இடத்திற்கு மருமகளாய் சென்றார். வாழ்க்கை வெகு அழகாய்ச் சென்று கொண்டிருக்கிறது. அம்புஜமும், அவள் கணவனும் மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அம்புஜம் எங்குச் சென்றாலும் அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருப்பவள். அம்புஜத்தின் கணவரோ பேசுவது என்றால் என்ன என்று கேட்பவர். அதிர்ந்த சத்தம் வராது. அந்தளவிற்கு மென்மையானவர். அம்புஜத்தினால் அவர்கள் உறவினர்கள் வீட்டில் ஒரு பிரச்சினையும் வராது. சென்ற தடம் கூட தெரியாமல் வீடு திரும்பும் வழக்கமுடையவர் அம்புஜம்.

இப்படியான அம்புஜத்தின் வாழ்விலே துன்பத்தின் சாயல் கொஞ்சம் கூட படியவில்லை. சாதாரண குடும்பத்தினைக் கட்டிக் காத்து, வேறு எவர்களின் கோபத்திற்கோ, வேறு எந்த வித பிரச்சினைக்கோ ஆளாகாமல் வாழ்ந்து வரும் அம்புஜம் எப்போதும் மகிழ்வாகத்தானே வாழணும்? அவர் அப்படித்தான் வாழ்கிறார்.

தர்மம் என்பது சத்தியம். சத்தியம் என்பது உண்மை. உண்மை என்பது நன்மை. நன்மை என்பது பிறருக்கு தீங்கு நினையாமை.

மகாபாரதத்திலே தண்ணீர் என்று கருதி தரையில் வழுக்கி விழுந்த துரியோதனனைப் பார்த்துச் சிரித்தாள் பாஞ்சாலி. ஆன்றோர்களும் சான்றோர்களும் நிரம்பிய அரசவையிலே பலர் பார்க்க அவளை அவமானப்படுத்தினான் துரியோதனன். ஒரு சாதாரண கேவலச் சிரிப்பிற்கே கடவுள் இத்தனை பெரிய தண்டனையைக் கொடுக்கின்றான் என்றால் பெரிய தவறுகளுக்கு கடவுள் எத்தனை பெரிய தண்டனைகளைக் கொடுப்பான்?

இப்படித்தான் ஒருவர் பணம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்து வந்தார். அவரின் கதை என்ன? ..... ( அடுத்த பகுதியில் )