குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, May 29, 2022

96 வருட பாரம்பரிய விகடனுக்கு முதல்வர் ஸ்டாலினால் தூக்கம் வரவில்லை

உச்சிக் குடுமியை விகடன் நினைத்தாலும் மறைக்க முடிவதில்லை. ஏனென்றால் வித்து அப்படி. தமிழர்களுக்கு விரோதமான செய்திகளை நாசூக்காக வெளியிட்டு வருவதில் விகடனுக்கு நிகர் விகடன் அன்றி வேறு எவருமில்லை. 

இவ்வளவுக்கும் விகடன் டெலிவிஸ்டாஸ் சன் டிவியில் கல்லா கட்டி வருகிறது. வயிறு வளர்ப்பது தமிழர்களின் காசில். செய்வது எல்லாம் தமிழர்களுக்கு துரோகம்.

அப்படி என்ன செய்கிறது விகடன்?

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் நானும் எனது நண்பரும் ஒரு தென்னை தோப்பு விலைக்கு வாங்கச் சென்றிருந்தோம். சுற்றிப் பார்த்து விட்டு திரும்ப வரும் போது கனிமொழியின் சொத்து, ஏற்கனவே வாங்கி விட்டார் என்றார் எங்களை அழைத்துச் சென்றவர். 

தஞ்சைப் பகுதியில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் எனது உறவுக்கார பெண். அப்பெண் இந்தக் கல்லூரியையும் கனிமொழி வாங்கி விட்டாராம் என்றார்.

அந்த தோப்பு எனது மனைவியின் பெரியப்பாவின் உறவினருக்கு சொந்தம். இன்றும் அந்த தோப்பு அந்த உறவினரிடமே உள்ளது. அந்தக் கல்லூரியின் முதல்வரிடம் கேட்ட போது சிரித்தார். யார் கல்லூரிக்கு யாரய்யா ஓனர் என.

இப்படித்தான் திமுக ஆட்சிக்கு வந்த உடனே எல்லாச் சொத்துக்களையும் திமுகவும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மருமகன் கம்பெனிகளுக்கு சொத்து வாங்கிக் கொடுத்து கமிஷன் வாங்குகிறார் என்றும், சென்னையில் ஐந்து கோடிக்கு மேல் சொத்து வாங்கினாலே விற்றாலோ கமிஷன் கொடுத்தே ஆக வேண்டுமென்றும் புரளிகளை கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள் பல புரோக்கர்கள் மூலமாக அரசியல் கட்சிகள்.

எங்காவது கொலையோ, கொள்ளையோ, தவறோ நடந்தால் உடனடியாக வந்தேறிகளின் அடிமைகளும்,  முதுகெலும்பில்லா முட்டாள்களும் திமுக ஆட்சி வந்தால் இப்படித்தான் என்றும் விடியல் ஆட்சி என்றும் சோஷியல் மீடியாக்களில் கமெண்டுகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் சளைக்காமல். அவர்கள் எல்லோரும் ஃபேஸ்புக், டிவிட்டர் போலி ஹேண்டில்கள்.  ஒரே ஒரு ஆள் ஆயிரக் கணக்கில் போலி அக்கவுண்டுகளை உருவாக்கி போஸ்டுகளுக்கு பணம் வாங்கிக் கொண்டு இவ்வகையான போலிச் செய்திகளையும், வரன்முறை அற்ற வசவுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கிறான். 

அதிமுக ஆட்சியில் இருந்த போதும் திமுகவை வசைபாடிக் கொண்டிருந்தார்கள். 

இவர்களுக்கும் விகடன் நிறுவனத்துக்கு வேறுபாடு இல்லை. இணையதளத்தில் வெளியான செய்தியைத்தான் இப்போதெல்லாம் விகடன் கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பிரிண்ட் பத்திரிக்கைகள் பலவற்றை மூடி ஆகி விட்டது. வேறு வழி இன்றி ஆங்கிலேயர்களின் மன்னிப்புக் கேட்டுக் கதறிய டேஞ்சர் குற்றவாளி (D - Dangerous Prisoner - Click the link here https://thewire.in/history/bhagat-singh-and-savarkar-a-tale-of-two-petitions) சாவர்கர் பரம்பரை என்பதால் திமுக ஆட்சிக்கு வந்ததும் வயிறு எரிந்து, செத்துப் போன சோவின் நரித்தந்திரம் போல, எங்கிருந்தோ பெறப்பட்ட கொழுத்த நன்மைக்கு மக்களிடம் விஷ விதையைத் தூவ ஆரம்பித்துள்ளது.

இதோ ஆதாரங்கள்:-

இந்த வார ஜூனியர் விகடனின் அட்டைப்படத்தில் (01.06.2022) - தலை நகரில் தொடர் கொலைகள் - கேள்விகுறியாகும் சட்டம் - ஒழுங்கு என வெளியிட்டு வன்மத்தைக் காட்டி இருக்கிறது. தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டதாம். மக்களிடம் பயத்தை உருவாக்க வேண்டுமாம்.  

பிஜேபியில் முருகன் தலைவராக இருந்த போது ரவுடிகளை கட்சியில் சேர்த்து விட்டதாகவும், அவர்களுக்குள் கொலை செய்து கொள்வதால் நானா பார்க்க முடியும் என்று அடிமை ஆடு புலம்பியதாக இதே பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு இருந்தாலும் அட்டைப்படத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகும் என்று தமிழகமெங்கும் எங்கு நோக்கினும் கொலைகள் நடப்பது போல எழுதி இருப்பது விகடனின் நரித்தந்திரம்.

இந்த வன்மம் போதாது என்று மிஸ்டர் கழுகு பகுதியில் ஒரு தலைப்பு - ’மோடியின் ரோடு ஷோ - காத்திருந்த ஸ்டாலின்’ என்று எழுதி தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறது. அதன் உள்ளே ’முதல்வர் ஸ்டாலினை முந்திக் கொண்டார்கள் பழனிசாமியும், ஆளுநரும்’ என்று ஏதோ வாராது வந்த மாமழை போல மோடி வருவதாகவும், அவரை வரவேற்க போவதில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஏதோ பின்னடைவு ஏற்பட்டதாகவும், மோடியின் ரோடு ஷோவினால் மோடிக்காக முதல்வர் காத்திருந்ததாகவும் செய்தி வெளியிட்டு உள்ளூர சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறது.


நாடெங்கும் ராமர் கோவிலுக்கு செங்கல் வேண்டுமென்று கேட்டு ரதயாத்திரை செய்து பிஜேபியை வளர்த்த ஒரு தலைவர் துரோகத்தால் ஓரங்கட்டப்பட்டது  வரலாறு. காலையில் காலைப் பிடித்த துரோகி மாலையில் முதுகில் குத்தி விட்டு ஆட்சியில் அமர்ந்து தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து விட்டு ஐந்து லட்சம் கோடி கடனை தலையில் கட்டிச் சென்ற இனத் துரோகியின் ஆட்சியும் வரலாறு. துரோகம் துரோகத்தைச் சந்திப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. 

ஊழல், திருட்டு என்று முதலில் செய்தியை வெளியிட்டு மக்களிடம் பதிய வைப்பது. தவறான செய்தி என்றால் வாய் திறக்காமல் வேறு விஷயத்துக்குச் சென்று விடுவது. இந்த நச்சு வேலையை விகடன் தொடர்ந்து செய்து வருகிறது.

ஜி ஸ்கொயர் போல தமிழ் நாட்டில் பல நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றார்கள். வடநாட்டினர் பலர் லட்சக்கணக்கான கோடி ரூபாயில் முதலீடு போட்டு தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் செய்கிறார்கள். அவர்களில் பலர் பல அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள். அவர்களைப் பற்றி எல்லாம் விகடன் செய்தி வெளியிடாது. ஆனால் திமுக என்றால் வாயும் வயிறும் விகடன் குழுமத்துக்கு பற்றி எரியும். 

ஆட்சிக்கு வந்ததும் டாலர் விலை 44 ரூபாய்க்கு மாற்றுவேன் என்று முழங்கியவரைப் பற்றி பேசாது. காணாமல் போய் கொண்டிருக்கும் 2000 ரூபாய் நோட்டைப் பற்றி எழுதாது. ஆர்.பி.ஐ ஒன்றிய அரசுக்கு பணவீக்கத்தைப் பற்றி எச்சரிக்கை செய்துள்ளதைப் பற்றி எழுதாது. உலகே வியந்த எல்.ஐ.சி பங்குகளை விற்கிறேன் பேர்வழி என சாதாரணப்பட்ட பல முதலீட்டாளர்களின் 80000 கோடி ரூபாயை காணாமல் அடித்ததைப் பற்றிப் பேசாது. 

(எல்.ஐ.சி பங்குகள் விற்பன் கிராப். டெய்லி டிரேடிங்க் செய்தவர்கள் பிழைப்பு என்ன ஆகி இருக்கும் என்று பாருங்கள். ஒரு அரசு செய்யும் வேலை இதுதானா என்று நினைத்துப் பாருங்கள்)

ஒன்றிய அரசு பணம் சம்பாதிக்க சாதாரண முதலீட்டாளர்களை  அழிக்கிறது பற்றி எழுதாது. இப்படி மக்களுக்கு கொடுமை நடப்பதைப் பற்றி எல்லாம் எழுதாமல் திமுக மீது சேற்றினை வாரி வீசுவது, பின்னர் பம்முவது போன்ற செயல்களைச் செய்து வரும் விகடன் குழுமத்தின் பத்திரிக்கைகளை  தமிழர்கள் புறக்கணித்து அறமற்ற அவர்களின் செயல்களுக்கு சரியான பாடம் புகட்டிட வேண்டும்.  

அறமற்ற எந்த ஒரு செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு என்பதை 96 வருட பத்திரிக்கைப் பாரம்பரியம் கொண்ட விகடன் குழுமம் உணரும் நாள் வந்தே தீரும்.

தமிழ் பூமி ஆன்மீக பூமி. அறத்தின் வழி நடக்கும் பூமி. அரசியலில் தைரியமிக்கவர் என்று சொல்லப்பட்ட ஜெவின் வாழ்க்கையை முடித்துக் கட்டியது அறம். அதிகாரமும், பணமும் ஒன்றும் செய்ய முடியவில்லை அறத்தின் முன்பு. 

விகடனின் நரித்தந்திரமும் அறத்தின் முன்னாலே தீர்க்கப்படும்.

* * *

நன்றி : விகடன், ஸ்கிரீனர் இணையதளம்

Wednesday, May 18, 2022

நிலம் (98) - நடிகர் சூரியை ஏமாற்றிய நில மோசடி வழக்கு

சவுக்கு ஆன்லைனிலும், ரெட்பிக்ஸ் யூடியூப் சானலிலும் சவுக்கு சங்கர் நடிகர் சூரியை சக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை முன்னாள் டிஜிபி ரமேஷ் ஏமாற்றிய விதத்தை தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

கட்டுரை இணைப்பு : நல்லா இருந்த நடிகரும் நாசமாக்கிய டிஜிபியும்


மேலே இருக்கும் இணைப்பினை கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். பேட்டியைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இனி பிரச்சினைக்கு வருவோம்.

சூரி டிஜிபியை நம்பினார். அதனால் தான் இந்தப் பிரச்சினை உருவானது. நம்பியவரை ஏமாற்றி விட்டனர். நம்பிக்கை மோசடி செய்து விட்டனர். பாதை இல்லாத பூமியை விற்று விட்டனர் என்பதுதான் வழக்கு. சூரியின் கிரையப் பத்திரம் கீழே.

சின்ன விஷயத்தைச் செய்யாத காரணத்தால் சூரி ஏமாந்தார். 

ஒரு நல்ல லீகல் அட்வைசரிடம் கருத்துரு கேட்காமல், பெரிய தொகையினைக் கொடுத்து கிரையம் பெறுவது சூரியின் தவறு. 2015 பதிவு செய்து சொத்து, அதற்கு வட்டி, நிம்மதியற்ற நிலை, காவல்துறை வழக்கு, கோர்ட் வழக்கு, செலவு என தேவையற்ற செலவுகளைச் செய்து என்ன கிடைத்து விடப்போகிறது அவருக்கு?

முன்னாள் டிஜிபிக்குத் தெரியும் இந்த வழக்கினை எப்படி கையாள்வது என்று. காலம் தான் போய்க்கொண்டிருக்குமே தவிர வேறு ஒன்றும் நடக்காது. 

தன் ரிட்டயர்மெண்ட் காலம் வரை சூரியை ஏமாற்றி, சூது செய்தவருக்குத் தெரியாதா இந்த வழக்கை என்ன செய்ய வேண்டுமென்று?

இனி சூரி என்னதான் செய்வது?

எப்படி இந்தப் பிரச்சினையில் இருந்து வெளி வருவது? வழி இருக்கா?

இருக்கிறது. இந்த வழக்கு இப்படி நடத்தவே கூடாது. முதல் தவறு.

இரண்டாவது தவறு சூரி கோர்ட்டுக்குச் சென்றது.

அவர் கேட்டால் சொல்லலாம். பொதுவாகச் சொல்வது சரி வராது. இந்த வழக்கின் முடிவு என்ன தெரியுமா? 

ஒன்றும் நடக்காது. இழப்பு சூரிக்கு மட்டுமே நடக்கும்.

ஆகவே நிலம் வாங்கும் முன்பு நல்ல அட்வைசரிடம்  ஆலோசனை கேட்காமல் கிரையம் செய்யாதீர்கள்.

Monday, May 9, 2022

எமனோலையை மறுக்க முடியுமா? மரணத்தை வெல்ல முடியுமா? சாத்தியமா?

சனிக்கிழமையன்று அடிக்கடி நினைவில் வந்து கொண்டிருந்த சுவாமி ஆத்மானந்தர் அவர்களை போனில் அழைத்த போது என்னை யாரென்று தெரியவில்லை என்றுச் சொல்லியதும் பதட்டம் வந்து விட்டது.  கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் இருக்கும் ராமகிருஷ்ணர் ஆசிரமத்தில் இருப்பதாக சொன்னார். அருகில் தானே பள்ளப்பாளையம் என்று நினைத்து மகன், மகளுடன் அவரைச் சந்திக்க சென்றேன். வயதான பழுத்த ஆன்மீகவாதியாகி தன்னை முழுவதுமாய் இறைவனிடம் ஒப்படைத்து விட்ட நிலையில் இருந்தார் சுவாமி.

என்னைப் பார்த்ததும் தங்கவேல் என்று அழைக்க அப்பாடா என்று இருந்தது. அவருடன் ஐந்து ஆறு வருடங்கள் வாழ்ந்தேன். ஞான தகப்பன் என்றால் எனக்கு சுவாமி ஆத்மானந்தர் அவர்கள் தான். அவரால் உருவாக்கப்பட்ட சொத்துகளுக்கு எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. எனக்கு வேண்டியதுமில்லை. விரும்பியதுமில்லை. ஒரு சிலருக்கு புரிய வேண்டும் என்பதால் இதைப் பதிவு செய்கிறேன்.

எனக்குள் ஒரு ஆசை இருந்தது. நன் மனையாள், நற்குழந்தைகள்,  அற நெறி வழுவா ஆன்மீக வாழ்க்கை என இப்போது வாழ்ந்து வரும் வாழ்க்கைக்கு அச்சாரமிட்டுக் கொடுத்தவர் அவரே.  

வீட்டில் ஒரு பொழுதேனும் தங்கி இருந்து, ஒரு வேளை உணவு எடுத்தால் என் மனம் மகிழ்வுறுமே என பலமுறை அவரிடம் வேண்டுகோள் விடுத்தும் வருகிறேன் என்றுச் சொல்லியே காலம் தாழ்த்தி விட்டார்.

இனி விடக்கூடாது என்ற முடிவு செய்து கொண்டேன். தன்னை முழுமையாக இறைவனின் பாதத்தில் ஒப்படைத்து விட்ட தன்மையில் இருக்கும் சுவாமிகள் இன்றிரவு நான் வசிக்கும் வீட்டில் உணவு உட்கொள்ள வேண்டுமென்று எம் குருவினை வேண்டிக் கொண்டேன்.

அவரிடம் வேண்டினேன். வருவதாகச் சொன்னார். 

எனது குருநாதர் சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஆசிரமம் அழைத்துச் சென்றேன். குருநாதரைப் பார்த்த போது ”என்னை விட நான்கு மாதம் மூத்தவர் சாமி” என்று என்னிடம் சொன்னார். மேடையை வலம் வந்தார்.

உள்ளே இருக்கையில் ”நான் உன்னுடன் காரில் வர வேண்டும்” என்று கேட்டார். அதன் படியே என்னுடன் மகன் ரித்திக் நந்தா கார் ஓட்ட பூண்டி கோவிலின் அடியில் காரை நிறுத்தினான் மகன். மேலே செல்ல இயலாத காரணத்தால் காரில் அமர்ந்த படியே பூண்டி ஆண்டவரை வணங்கி வீட்டுக்கு வந்து விட்டோம்.

அடியேன் படுக்கும் படுக்கையில் நன்கு உறங்கி விழித்தார். வழமை போல மூன்று இட்லிகள், சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கொஞ்சம் மாம்பழம் எடுத்துக் கொண்டார். ஆசீர்வாதம் செய்து விட்டு பள்ளப்பாளையம் ஆசிரமம் சென்று விட்டார். 

எனக்குள் ஒரு நிம்மதி பரவியது.

அவரின் உழைப்பால் எத்தனையோ லட்சம் மக்கள் உணவு அருந்தினார்கள். எத்தனையோ பேர்களுக்கு கல்வி கொடுத்தார். இன்றும் கொடுத்து வருகிறார். அவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிலையங்களும், ஆசிரமங்களும் இன்றும் இயங்கி வருகின்றன. அப்பேர்பட்ட தொண்டு செய்தே பழுத்த சுவாமிகள் என் உழைப்பில் ஒரு வாய் உணவு எடுத்தால் அது எனக்கு மகிழ்ச்சியானது அல்லவா? அவர் தகுதிக்கு எனக்கு ஐந்து வருடம் உணவிட்டு எனக்கு தொண்டு செய்ய அனுமதி தந்தார். என் தகுதிக்கு ஒரு வேளை உணவு. சின்ன ஆசை தானே.

அவர் என்னிடம் கேட்டது மூன்று. ஒன்று வேதாரண்யத்தில் தாயுமானவர் சுவாமிகளின் பெயரில் கல்லூரி, கரூரில் பெரிய சுவாமி என்று அழைக்க கூடிய சித்பவானந்தர் சுவாமிகள் பெயரில் ஒரு பல்கலைக்கழகம், மற்றொன்று பள்ளப்பாளையத்தில் ஒரு கல்லூரி (சுவாமி ஆத்மானந்தர் கல்லூரி - என் நினைப்பு). 

என்னால் இத்தொண்டினைச் செய்ய முடியுமா? முடியாதா? என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் கேட்டார். செய்யலாம் சுவாமி என்று சொல்லி இருக்கிறேன். இறைவனின் எண்ணமெதுவோ அதுவே நடக்கும்.

சேலத்தைச் சேர்ந்த தங்கவேல் என்ற சுவாமிகளின் அன்பர் எனக்கு இப்பிறப்பே இறுதி பிறப்பு என்று சொன்னதாகவும், ஆனால் எனக்கு அப்படி எல்லாம் வேண்டாம் நான் மீண்டும் மீண்டும் மனிதனாகவே பிறந்து தொண்டு செய்ய வேண்டுமென்று விரும்புவதாக அவரிடம் சொன்னதாகவும் என்னிடம் அடிக்கடிச் சொல்வார்.  இறைத்தொண்டாற்றிட மீண்டும் மீண்டும் மனிதபிறவி எடுத்தல் வேண்டுமென்ற ஆவல் அவரிடம் நிரம்பி இருந்தது. மேலோர் எப்போதும் மேன்மையாக சிந்திப்பர் அல்லவா?

எனது ஞானத்தந்தையார் எப்போதும் என்னைப் போன்ற லட்சோப லட்சம் அன்பர்களின் நினைவுகளில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டே இருப்பார். 

இறைதொண்டு என்றால் அவர் சுவாமி ஆத்மானந்தர் ஒருவரே.

என் ஞானத் தந்தையான சுவாமி ஆத்மானந்தர் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன். 

சரி விஷயத்துக்கு வருகிறேன்.

குருநாதரின் ஆசிரமத்தில் சுவாமி ஆத்மானந்தருக்கு ஜோதி சுவாமி சீரக நீர் ஆற்றிக் கொடுத்தார். அப்போது ஜோதி சுவாமி என்னிடம் சொன்னது இப்பாட்டு. 

தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன

தன்பிறவியுறவு கோடி

தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன

தாரணியையாண்டுமென்ன

சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன

சீடர்கள் இருந்துமென்ன

சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்

செய்தென்ன நதிகளெல்லாம்

ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை

ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ!

இதுவெல்லாம் சந்தை உறவென்று தான்

உந்தனிருபாதம் பிடித்தேன்

யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக்

கண்பார்வையது போதுமே

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே! 

இந்தப் பாடல் நடராஜர் பத்து என்ற தொகுப்பில் உள்ளது. சிறுமணவூர் முனுசாமி அவர்களால் பாடப்பெற்றது இப்பாடல்.

நீங்களும் பாடலைப் படித்துப் பாருங்கள்.

படித்து விட்டீர்களா?

எமனின் ஓலையைத் தடுப்பார் எவருண்டு இதுவெல்லாம் சந்தை உறவு என்பதால் தான் உன் பாதம் பிடித்தேன் ஈசனே என்கிறது பாடல்.

இன்றைக்கு எனக்குள் கேள்வி எழுந்தது. ஜோதி சுவாமியை அழைத்தேன்.

“சாமி, என்ன செய்தாலும் மரணத்தை ஜெயிக்க முடியாதே, பின்னே ஏன் நடராஜர் பாதத்தைப் பற்றிப் பிடிக்கணும், தேவையில்லை அல்லவா?” என்றொரு கேள்வியை வீசினேன்.

அதற்கு அவர்,” ஆண்டவனே, உள்ளே ஓடும் மூச்சு தான் சிவம், சிவம் போனால் சவம். முச்சினை வெளியே விடாமல் உட்புறமாகச் செலுத்தி பயிலும் கால், உடலின் கூறுகளைப் பிணைத்திருக்கும் கொக்கிகளை நீக்கினால் பட்டினத்தார் போல நவகண்ட சித்து தன்மையில் காற்றில் கரைத்து பிரபஞ்சத்தோடு கலந்து விடலாம். வள்ளலார் ஒரு படி மேலே சென்று ஒளிதேகமாய் மறைந்தார். அது போலவே மரணத்தை வெல்லலாம். அதுவே சர்மார்க்கி என்பதாகும். அதுவே சீவனறிவு. பிறவறிவெல்லாம் அறிவல்ல.” என்றார்.

எமனோலையை மறுக்கலாம் என்று புரிந்து கொண்டேன். ஆகவே மரணத்தை வெல்லலாம் என்று அறிக.

பட்டினபிரவேசம் - மீண்டும் ஏமாந்தாரா மன்னன் - உண்மை என்ன?

இது ஒரு கதை. யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல.

அந்தக் காலத்தில் ஒரு மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட ஆதீனங்களில் இறைப்பணி செய்து வந்த மடாதிபதிகள் (மடத்தின் அதிபதி) பல்லக்கில் மனிதர்கள் சுமக்க பட்டினப் பிரவேச வீதியுலா வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். 

இந்தப் பிரவேசத்தைப் பற்றிக் கேள்வியுற்ற மன்னன் அதற்கு தடை விதித்தான். இப்போது தமிழக அரசு தடை விதித்தது போல.

உடனே அந்த குரு மஹா சன்னிதானங்கள் அவர்களிடத்தே பொருள் மற்றும் இன்னபிற சுகானுபவங்களைப் பெற்ற ஆன்மீக அன்பர்கள் மன்னனிடம் சென்று தடையகற்ற கோரிக்கை விடுத்தனர். அது மரபு என்று குரு சீடர்கள் பரம்பரை என்றும் தர்மம் உரைத்தனர்.

அதனைக் கேட்ட மன்னனும் ஒரு நிபந்தனையுடன் அனுமதி தரலாமென்றான்.

அந்த நிபந்தனை என்னவென்றால் கடவுளர் திருவுருங்களைப் பல்லக்கில் சுமந்து செல்வது ஏற்பவையே. ஆனால் அதற்கு நிகராக இந்த மானிடர்களைச் சுமப்பது சரியல்லவே. இருப்பினும் ஆன்மீக அன்பர்களின் வேண்டுகோளுக்காக கடவுளருக்கு நிகரான குரு என்று சொல்லப்படும் இந்த மஹா சன்னிதானங்கள் நான் இரண்டாக வெட்டிப் போடும் மாட்டினை மீண்டும் உயிர்ப்பித்தால் அனுமதி வழங்கப்படும் என்றான்.

கடவுள் நிகர் குரு எனில் வெட்டி கொல்லப்பட்ட மாட்டின் இருபாகங்களை உயிரோடு எழுப்பினால் குருவும் கடவுளுக்கு நிகரானவர் என்று ஒப்புக் கொண்டு பல்லக்கில் பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி அளிப்போம் என்பதாகும் மன்னனின் நிபந்தனை.

ஆன்மீக அன்பர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இதனை குரு மகா சன்னிதானங்களிடம் தெரிவிக்க, இதற்கு நாங்கள் ஏன், இதைச் செய்ய வேறொருவர் இருக்கிறார் என்று சொல்லி, சீடரே வெட்டப்பட்ட மாட்டினை உயிர்ப்பிப்பார் என்று சொல்லி அனுப்பினர்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி வரும். 

மன்னன் கேட்டதோ பல்லக்கில் பவனி வர துடித்துக் கொண்டிருக்கும் மகா சன்னிதானங்கள் மாட்டினை உயிர்ப்பிக்க வேண்டுமென்பதாம். ஆனால் மகா சன்னிதானங்கள் சொன்னதோ யாரோ ஒரு சீடர் அதைச் செய்வார் என்று என்பதால் நாங்கள் உயிர்ப்பிக்க வேண்டியதில்லை என்று.

என்ன காரணத்தினால் மன்னன் இந்த பதிலை ஏற்றுக் கொண்டான் என்பதறிய இயலவில்லை.

அதன்படி மகா சன்னிதாங்கள் வீர சைவ சீடர் ஒருவரிடம் செய்தி சொல்லி அனுப்புகின்றார்கள். மன்னனின் நிபந்தனையை நிறைவேற்றி பட்டினப் பிரவேசம் நடத்த ஏதுவாக மாட்டினை உயிர்ப்பிக்க வேண்டுமென்று கேட்க, அதற்கு அவர் எம் குருவின் அனுமதி கிடைத்தால் நிறைவேற்றி தரவியலும் என்று உரைத்தார்.

குரு அனுமதி தந்து விட்டதாக சீடரிடம் தகவல் சொல்ல அவர் திருவண்ணாமலை வரைக்கும் ஒரு காதம் தாண்டி கொதிக்கலன்கள் அமைக்கும்படியும் அதற்குள் ஆணியால் வேயப்பட்ட காலணிகள், தண்டம் இவைகளை வைக்கும்படியும் கேட்டுக் கொண்டார். 

அதன்படியே செய்ய, சீடரும் கொதிகலனுக்குள் இருந்த ஆணி செருப்பு அணிந்து கையில் தண்டம் கமண்டலமேந்தி ஒரு காதம் தூரம் நடந்து அங்கிருந்த மற்றொரு கொதிகலனில் மேற்படிகளை நீக்கி, புதியன அணிந்து மாடு வெட்டிக் கிடந்த இடத்தருகே வருகிறார். 

மன்னனும் வருகிறான்.

கையில் இருந்த ஒரு வெள்ளித் தண்டத்தினால் வெட்டுப்பட்ட மாட்டின் இருபாகங்களைத் தட்ட மாடு உயிர் பெறுகிறது. மன்னனுக்கோ அதிசயம். 

இருப்பினும் மாயா வித்தையாக இருக்குமோ என்று நினைத்து, கல் நந்தியை உயிர்பிக்கலாமே என்று கேட்க, சீடரும் அதன்படி வெள்ளித் தண்டத்தால் கல் நந்தியை தட்ட அதுவும் உயிர் பெற்று ஓடியது.

மன்னன் மிக மகிழ்ந்து பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி கொடுத்ததாக ஒரு கதை ஒன்று உண்டு.

அதன் பிறகு கடவுளர் திரு உருவங்கள் முன்னே பல்லக்கில் வர, பின்னாலே மகா சன்னிதானங்கள் பல்லக்கில் உலா வந்தனர் என்றும் சொல்லப்படுவதுண்டு.

இந்தக் கதையை சித்தர் பீடம் 200 என்ற நூலில் படித்துக்கொள்ளுங்கள்.

அன்றைக்கு நடந்த நிகழ்வு இன்றைக்கு வேறு வழியில் நடைபெற உள்ளது. காலம் தான் மாறி இருக்கிறது. சம்பவங்கள் மாறவில்லை.

ஆகவே மரபினை மதித்து அனுமதி தரும் அரசாங்கம் #உடன்கட்டை ஏறுவதை தடை செய்த சட்டத்தை நீக்கி அனுமதிக்கும் காலம் வரும் என்று நம்பலாம்.

ஏனென்றால் இது மரபாகும். 

மரபினை மாற்ற எவருக்கும் இங்கு அனுமதி இல்லை. அங்கனம் செய்வது ஆன்மீக அன்பர்களின் மனத்தை வருத்தமுடையச் செய்யும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

மனிதனை மனிதன் சுமப்பது மரபு என்றால் இதுவும் மரபேயாம்.

அதாவது கணவன் இறப்பின் அவன் மனைவி உயிரோடு சிதையில் உடன் கட்டை ஏறி எரிந்து அவனோடு சாம்பலாக வேண்டுமென்பது மரபு.

அதுமட்டுமல்ல, சினிமா பாடல் புகழ் #சின்மயி அவர்களின் தாயார் கூறியதைப் போல, புகழ் பெற்ற கோவில்களில் #தேவதாசி மரபினை மீண்டும் கொண்டு வருதலும் மரபேயாம். அவ்வாறு தேவதாசி முறை கொண்டு வந்தால் அது கோவிலில் இறைவனுக்கு தொண்டாற்றும் ஆன்மீக அன்பர்களின் காம நோய் தீர தேவதாசிகள் பயனாயிருப்பர் என்பதும் மரபே. ஆகவே அரசுகள் மேற்கண்ட இரண்டு மரபுகளுக்கும் மனம் உவந்து தடை நீக்கி சட்டமியற்றி ஆன்மீக மரபுகளை காத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க ஆன்மீகம், தழைக்கட்டும் மரபுகள்.