குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, April 14, 2026

நரலீலைகள் (18) - காமுகர்களின் வேட்டைகள்

”சந்து, சந்து”

“என்ன மாயா?”

“வந்துட்டாரு ஆசிரியரு எழுத....!”

”அடப்போங்க மாயா...! இவரு எப்போ எழுதுவாரு, இந்த நாவலை எப்போது எழுதி முடிப்பாருன்னு தெரியவில்லை. எனக்கு செம கடுப்பா இருக்கு”

“அதென்ன அப்படி சொல்லிவிட்டாய் சந்து? நாவல் எழுதுவது என்பது என்ன அவ்வளவு எளிதா? இவரென்ன பின் நவீனத்துவ சாணி போல எழுத நவீன பின்புற எழுத்தாளரா? ஆட்டுப் புழுக்கை போல எழுதி குப்பைக் கூடைக்கு கூட உதவாத சுயமோகனா? அவர் எழுதும் போது எழுதட்டும்”

”மாயா, எழுதுவது என்ன அவ்வளவு சிரமமா?”

“ஆமாம் சந்து. பிகேபி, சுபா, ராஜேஷ்குமார் வகையறாக்கள் டெம்ப்ளேட் வெச்சு இருக்கிறார்கள். கொஞ்சம் அங்கே இங்கே பிச்சு போட்டு எழுதி விடுவார்கள். இலக்கிய எழுத்தாளர்கள் ஏழ்மைகளை விரிவாக எழுதி விடுவார்கள். மண் மனத்துடன் எழுதுவது என்பதும் அந்தந்த ஊரினைச் சேர்ந்தவர்களுக்கு கை வந்து விடும். அதுவல்லாம் எழுத்தே அல்ல சந்து”

“பின்னே?”

“பிறிதொரு நாள் சொல்கிறேன்,இப்போது ஆசிரியர் எழுதுவதைப் படிப்போம்”

* * *

இன்றைய தினகரன் செய்தியினைப் படித்து விடுங்கள்.

 


இதைப் படிக்கும் போது உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லை? ஏழ்மையாக இருப்பது சாபமா? 

இல்லை அது வரம். ஏழ்மையில் உழன்றவர்கள் தான் முன்னேறியிருக்கிறார்கள். ஆனால் ஏழ்மையான பெண்களின் நிலை?

ஏழை மாணவிகளுக்கு இலவச பஸ், மாதம் 1000 ரூபாய் கொடுத்ததைக் கிண்டல் செய்தானே எட்டப்பனும், நடிகைக் கற்பழிப்பாளனும். இவனுகளுக்கு அறம் என்றால் என்னவென்று தெரியுமா? சுய ஒழுக்கம், சுய ஒழுங்கு என்றால் என்னவென்றே தெரியாத உத்தம சிகாமணிகள் இவர்கள். இவர்களை நம்பி பின்னால் திரியும் ஒவ்வொருத்தரும் அப்பாவி அல்ல. கொடூர முகமூடி மாட்டியவர்கள்.

ஸ்டாலின் எதற்காக 1000 ரூபாய் கொடுத்தாருன்னு தெரியவில்லையா உங்களுக்கு? 

ஏழை மாணவிகள் படித்து முன்னேறி விடக்கூடாது என்பதில் பலருக்கு உள்ளூர இருக்கும் வன்மம். இவர்கள் தான் ஏழைகளின் படிப்புக்கு அரசு உதவினால் - அய்யோ இனாம், இலவசம், அது இதுவென்று அசிங்கப்படுத்துவதைப் போல பேசுவார்கள். 

அண்ணா பல்கலைக் கழகத்தில் அனுமதி கிடைத்துப் படிக்க, இந்த மாணவி எவ்வளவு துன்பப்பட்டிருப்பார்? எந்தளவு துயரங்களை அனுபவித்திருப்பார்? பல்கலைக் கழகத்துக்குள் வந்ததும் எப்படி இந்த ஞானவேல்பாபு அந்த மாணவியைத் தடம் மாற்றி அழித்து விட முனைந்திருக்கிறான் எனப் படித்துப் பாருங்கள்.

ஏழ்மையாக பிறப்பது கொடுமை அல்ல. ஏழ்மையானவர்கள் முன்னேறி விடக்கூடாது என்பதற்காக பல்வேறு தடங்கல்களை உருவாக்கும் அயோக்கியர்கள் தான் கொடுமையானவர்கள். படிக்கவே அனுமதிக்காமல் அந்தத் தேர்வு, இந்தத் தேர்வு என பல தடங்கல்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைத் தலைவர்கள் எனக் கொண்டாடும் நபர்களே ஆபத்தானவர்கள்.

இவர்களுக்கு எது நல்லது, எது கெட்டது எனக் கூடவா தெரியாது? அந்தளவுக்கா சிந்திக்கும் திறனில்லாமல் இருக்கிறார்கள்? அவர்களுக்கு எல்லாமும் தெரியும். தெரிந்தே கிண்டல் செய்கிறார்கள். விமர்சிக்கின்றார்கள். அந்தளவுக்கு வன்மும், கொடூரமமும் கொண்டவர்கள் இவர்கள். இவர்கள் சகோதரனாக, சகோதரியாக, அம்மாவாக, அப்பாவாக, உறவினராக, நண்பராக இருக்கலாம். இவர்களிடமிருந்து விலகியே இருங்கள். 

இவர்களின் பாவம் உங்களின் ஜென்மத்துக்கு உங்களையும், உங்கள் வாரிசுகளையும் தொடரும். 

உங்கள் மனதைப் பதை பதைக்க செய்யும் உண்மைச் சம்பவத்தைச் படியுங்கள்.

தமிழகத்தின் பிரபலமான ஊரில் இருக்கும் பழமையான கல்லூரி ஒன்றில் நடக்கும் அக்கிரமத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்.

பெரிய மனிதர்கள் (அப்படித்தான் சொல்கிறார்கள்) ஒன்று கூடுகையில் என்ன பேசுவார்கள் என நினைக்கிறீர்கள்? பொம்பளை இல்லை கிசு கிசு. இதைத் தவிர வேறொன்றினையும் பேசவே மாட்டார்கள். தான் சந்தித்த பெண்களை  நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவது. அவளுடனான அனுபவத்தைக் கொஞ்சம் கூட நாகரீகமில்லாமல் பலரிடமும் பேசிச் சிரிப்பது. இந்தக் கூட்டத்தில் நான் சொல்லப் போகும் நபர் இல்லை.

இவர் கொஞ்சம் வித்தியாசமானவர்.

ஒரு நாள் இவரின் நண்பருக்கு சொத்து தொடர்பான பிரச்சினை. நண்பருடன் பீமனாகிய நானும் அந்தச் சொத்தினைப் பார்க்க காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது கோவையின் ஒரு கல்லூரி வழியாகக் கார் சென்றது. கல்லூரியைப் பார்த்ததும் சிரித்தார்.

”இந்தக் கல்லூரியில் படிக்க வரும் ஏழைப் பெண்களில் யாரோ ஒருவர் வருடா வருடம் என் நண்பரின் மனைவியாக வாழ்கிறார் அண்ணே” என்றார்.

”அண்ணே, வருடா வருடம் இந்தக் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண் படிப்பினை முடித்து விட்டு வெளியே செல்வார், அப்போது அவர் இவருக்கு ஒரு ஏழைப் பெண்ணை அறிமுகம் செய்து வைப்பார். அந்த ஏழைப் பெண்ணின் படிப்புச் செலவு, உடைகள், புத்தகங்கள், கைச் செலவுக்கு பணம் என அனைத்தையும் அவர் செய்வார். அதற்கு கைமாறாக மாதா மாதம் ஹெஸ்ட் ஹவுஸுக்கு வந்து அவருடன் உறவு கொள்ள வேண்டும். டீசண்ட் ஆள் அவர். இப்படி எத்தனையோ பெண்களை அவர் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். எனக்குத் தெரிந்தது இந்தக் கல்லூரிச் சம்பவம் மட்டும். படித்து முடித்ததும் விரும்பினால் அவரின் நிறுவனத்தில் அந்தப் பெண்ணுக்கு வேலை. திருமணமும் செய்து வைத்து விடுவார். வேண்டாமென்றால் அத்துடன் உறவு துண்டிக்கப்பட்டு விடும்.”

“இது இந்த நாள் வரை தொடர்கதையாகத் தொடர்கிறது அண்ணா. தெளிவான திட்டமிடல், இளம் பெண்களை காசைக் காட்டி வலையில் வீழ்த்தி விடுகிறார்.பாவம் அந்த ஏழைப் பெண் என்னதான் செய்யும். பத்து ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் துன்பப்படும் அவர்கள் முன்னால் ஆயிரக்கணக்கில் பணத்தைக் காட்டியதும், எந்த வித வழியும் இன்றி மடங்கி விடுகிறார்கள்.”

ஸ்டாலின் இந்த ஏழைப் பெண்களுக்கு ரூ.1000 கொடுத்ததும் யாரெல்லாம் விமர்சிக்கின்றார்களோ அவர்களும் இப்படிச் செய்து கொண்டிருந்திருக்கலாம். சாத்தியங்கள் உண்டு அல்லவா? கல்விக்கு அரசு காசு கொடுப்பதை விமர்சிப்பவர்கள், எவ்வளவு குரூரமானவர்கள் எனச் சிந்தியுங்கள்.

இதைப் போன்ற பல கதைகளை நாம் தினசரிகளில் படித்துக் கொண்டே இருக்கிறோம். 

பி.எச்.டி படிப்பு பற்றிய ஆராய்ச்சிகளில் மெண்டராக இருக்கும் பல கல்லூரி பேராசிரியர்கள் கதைகளைப் படித்திருப்பீர்கள்.

ஒவ்வொரு நொடியும் எங்கோ யாராலோ யாரு ஒரு ஏழ்மையான பெண் ஏதாவது ஒரு வகையில் பாலியல் துன்பத்துக்கு ஆட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறாள் என்கிறது பல பத்திரிக்கை செய்திகள்.

நான் உங்களிடம் வேண்டுவது ஒன்றே ஒன்று தான். கல்விக்கு உதவி செய்யும் அரசு பெண்களின் துயரத்தினை ஓரளவு களையும் படி உதவுகிறது. அதை நக்கல் செய்யாதீர்கள்.

இதோ ஒன்றிய அரசின் நிதியமைச்சர் உழவர்களுக்கு உதவி செய்யாதே என கடிதம் எழுதுகிறார். இந்தக் கொடுமையெல்லாம் எந்த நாட்டிலும் நடக்காது. ஆனால் இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு நிதியமைச்சர் செய்கிறார் என்கிறது செய்திகள்.

இதற்கெல்லாம் விடிவுகாலம் தான் என்ன?

அது உங்கள் முடிவில்.

* * *

”மாயா, படிக்கவே மனம் பதறுதே. இது உண்மையாக இருக்குமோ?”

”சந்து, இது கதை தானே? இதை நம்புவதும், நம்பாததும் அவரவர் முடிவு. ஆனால் இடையில் ஆங்காங்கே நடப்புச் செய்திகளையும் இணைத்து விடுகிறார் ஆசிரியர்”

“மாயா, அடுத்து எப்போ?”

“அது நாவலின் கையில் இருக்கிறது”




Saturday, April 4, 2026

கதைகளை நம்பாதீர்கள் - அடிமைத்தனத்தின் ஆரம்பம் கதை

யுவால் நோவா ஹராரியின் நெக்ஸஸ் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கான அடிக்குறிப்புகளுடன் நம்மைச் சுற்றி நடக்கும் சதிகளை விவரிக்கிறது நெக்ஸஸ். 

அவ்வகையான சதிகளில் ஒன்று கதை. 

பல நூற்றாண்டுகளாக குழந்தைகளுக்கு பெற்றோர் கதை சொல்லுதல் என்பது தொன்று தொட்டு வரும் வழக்கம். இதை நாம் எளிதில் கடந்து விடுகிறோம். ஆனால் இதற்குப் பின்னால் மாபெரும் அடிமைத்தனத்தின் விதை ஊன்றப்படுகிறது என்பதை அந்தப் புத்தகம் விரிவாக எடுத்துரைக்கிறது.

ஒரு விவரக் கணக்கை மனதில் வைத்திருப்பது என்பது எளிதல்ல. ஆனால் அதையே ஒரு கதையாக மாற்றி விட்டால் - கதை எளிதில் மனதில் பதிந்து விடும். உங்களுக்குப் புரிகிறதா?

தமிழில் புராதனம் என்ற சொல்லே புராணமென்று மாறியது என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள். 

புராணங்களின் சாரங்கள் பல விதக் கிளைக்கதைகளின் தொகுப்பாக இருப்பதை நாமெல்லாம் படித்திருப்போம். செவி மூலம் ஒவ்வொருவரிடமும் கடத்தப்பட்ட, ஆராயப்படாத, உண்மையிருக்கிறதா என ஆய்வுக்கு உட்படுத்தாத வகையில் இவ்வகைக் கதைகள் உருவாக்கப்பட்டு, பல நூற்றாண்டுகளாக, பல ஜென்மங்களாய் ஒவ்வொரிடமும் கடத்தப்பட்டு, எழுத்துகள் உருவான பின்னே அவை புத்தகங்களாக பதிக்கப்பட்டிருக்கின்றன. கதைக்கு நதிமூலம் கேட்கக்கூடாது என்று சப்பைக்கட்டு வேறு உண்டு.

இந்த வகையில் பரப்பிய கதைகளின் நாயகர்கள் இன்று கடவுளர்களாய் வணங்கப்பட்டு வரும் நவீன காலக் கல்வியின் அசிங்கமான இயலாமையை நாமெல்லாம் கண்டு வருகிறோம். கல்வி உண்மையை உரைத்தல் வேண்டும். ஆனால் உண்மையே இல்லாத கல்வியைக் கற்றுக் கொடுக்கிறது நவீன நவநாகரீக உலகம். மதங்களின் அடிமைக் கூட்டத்தினை உருவாக்க கல்வி மிக நுட்பமாக பயன்படுத்தப்படுகிறது.

கதைகள் என்பவை செலவற்ற முறையில், பெரும் பிரயத்தனமற்ற வகையில், மிகச் சிறந்த ஊடக கடத்தியாக இருக்கிறது. செய்திகளை விட கதைகளும், அதைச் சுற்றிய கிசுகிசுக்களும் ஒளியை விட வேகமாகப் பரவி, அவை மக்களின் மனதில் பதிய வைக்கப்படுகின்றன.

இன்றைக்கு வைரல் என்ற வார்த்தையை நாமெல்லாம் கேட்டிருப்போம். கதையின் நவீன, குறுகிய வடிவம் தான் வைரல்.

இந்த வைரல் செய்திகளின் உண்மைத்தன்மையை எவரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. பலருக்கும் பகிரப்படும் இந்த வைரல் செய்திகள் பல உண்மைகளை மறைத்து விடும். இந்தியா இப்போது சந்தித்து வரும் சமையல் எரிவாயு பிரச்சினைக்கு இந்த போலியான வைரல் செய்திகளே காரணம். நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். தகுதியற்றவர்களை ஹீரோக்களாக மாற்றி விடுகின்றன இந்த வைரல் செய்திகள்.

போலிச் செய்திகள் போலி பிம்பங்களை உருவாக்கி, உண்மையை மறைத்து விடும். 2ஜி செய்திகள் அத்தனையும் புரட்டு, பொய்கள் என்பதை நாமெல்லாம் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிறகே, நீண்ட காலத்துக்குப் பின்னால் புரிந்து கொண்டோம். 

அதே போல டெல்லியில் அரவிந்த் கேஜரிவால் மீது போடப்பட்ட மதுக் கொள்கை திட்டமிடல் வழக்கு - ஆதாரமில்லாமல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதையும் படித்திருக்கிறோம். 

ஆம் ஆத்மி ஆட்சியில் இல்லாமல் செய்யப்பட்டது. இதை அரசின் அத்தனை அதிகாரங்களும் ஒன்றினைந்து செய்த சதிச் செயல் என்று பலரும் எழுதி வருகிறார்கள்.

இதைப் போல நம்மைச் சுற்றி வரும் ஒவ்வொரு செய்திகளும், கதைகளும் ஆராயப்படாமல் நம்பப்படுகின்றன. இன்றைக்கு எந்த தகுதியுமில்லாத, மக்களுக்கு ஒரு துளி வியர்வை சிந்தாதவர்கள் எல்லாம் தலைவர்கள் என்று அழைக்கப்படும் வித்தையை இந்த வைரல் செய்திகள் உருவாக்கி இருக்கின்றன. இதை நம்பும் பலரின் வாழ்க்கை அவர்களிடத்தில் இல்லாமல் எவனோ ஒருவனின் கையில் இருப்பதைக் கூட அறிந்து கொள்ளா இயலாத அறிவிலிகளாய் இருக்கிறார்கள்.

கதை சொல்லல் என்பது நம்மை அடிமைப்படுத்தும் ஆரம்பப் புள்ளி என்பதை மறந்து விடாதீர்கள். 

நீங்கள் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றிலும் நடப்பவைகளை புரிந்து கொண்டால், வாழ்க்கைப் பாதையை செவ்வனே பராமரித்து, இன்பமாக வாழலாம். 

ஆகவே உங்கள் அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் புத்தகம் - 

யுவால் நோவா ஹராரியின் - நெக்ஸஸ்.

தமிழில் கிடைக்கிறது வாங்கிப் படித்துப் பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் உலகம் உடைத்து சுக்கு நூறாக்கப்படும்.