குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, October 29, 2011

மறக்க முடியாத தீபாவளி

ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில், தீபாவளி நாள் அன்று நண்பரைச் சந்திக்க சென்றிருந்தேன். நண்பர்களுடன் தீபாவளி வாழ்த்த்துக்களை பகிர்ந்து கொண்டு, இனிப்புகள் சாப்பிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது என்னிடம் படித்த ஆறாம் வகுப்பு பையன் ஒருவன் என்னைப் பார்த்துக் கையை ஆட்டினான்.

வண்டியை நிறுத்தி, அவனை அருகில் வரும்படி அழைத்தேன். 

“வீட்டுக்கு வாரீங்களா சார் !” என்றான்.

”வீடு எங்கேப்பா இருக்கு ?” என்று கேட்டு அவனை அழைத்துக் கொண்டு அவன் வீடு நோக்கி சென்றேன்.

குளிர்ச்சி தரும் தென்னை ஓலைகள் வேய்ந்த, அழகாய் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட வீடு. வீட்டின் முகப்பில் கோலமிட்டு இருந்தது. மாணவனின் அப்பாவும், அம்மாவும் வண்டிச் சத்தம் கேட்டு வெளியில் வர மாணவன் வண்டியில் இருந்து குதித்து அவர்கள் அருகில் ஓடி என்னை “அப்பா, எங்க இவருதான் கம்யூட்டர் சாரு” என்றான்.

இருவருக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அருகில் வந்து “வாங்க வாங்க” என்றழைத்தவர்கள் வீட்டிற்குள் அழைக்க தயக்கத்தோடு நின்றனர்.

”சாப்பிட ஏதாவது கிடைக்குமா? “ என்றேன். வண்டியை நிறுத்தி விட்டு, இறங்கி வீட்டுக்குள் சென்றேன்.

வழு வழுவென்று மெழுகிய தரைகள். அதன் மீது பாய் போடப்பட்டு அமர்ந்து கொண்டேன்.

இடதுபுறமாய் சமையலறை. மண்சட்டிகள் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மாவரைக்கும் கல்லில் அரைத்த மெதுவடை, சுழியம் இரண்டும் கொண்டு வந்து தந்தார்கள். வயிறு நிறைய சாப்பிட்டேன். அப்பா என்ன ஒரு சுவையாக இருந்தன தெரியுமா? என்னைப் பற்றி விசாரித்தார்கள்.மாணவனை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டே அவர்கள் இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தேன்.

“மதியம் என்ன சமைக்கப் போகின்றீர்கள்?” என்றேன்.

“சாம்பார், பாயசம் சார்” என்றான் மாணவன்.

”எனக்கும் கொஞ்சம் சேர்ந்து சமைத்து விடுங்களேன், இருந்து சாப்பிட்டு விட்டுப் போகிறேன்” என்றேன்.

நிகழ்காலத்தில் படித்த போது பாத்திரத்திப் பொறுத்தது உணவின் சுவையும் தரமும் படித்த போது என் மாணவன் வீட்டில் சாப்பிட்ட சாம்பாரின் சுவை நினைவுக்கு வந்தது. இதுவரை எத்தனையோ ஹோட்டல்களில் சாப்பிட்டு இருக்கிறேன். வித விதமாய் சமைத்துப் போடும் மனைவியின் கைப்பக்குவம் கூட மாணவன் வீட்டில் வைத்திருந்த சாம்பாருக்கு நிகராக இல்லை.

அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளிக்கும் எனக்கும் சேர்த்து சாப்பாடு தயார் செய்வார்கள். நான் ஆசிரியராக இருந்த காலம் முழுவதும் தீபாவளி தினங்களில் மாணவனின் வீட்டுச் சாப்பாடே எனக்கு அமிர்தமாய் இருந்தது. அம்மாணவன் இப்போது என்ன செய்கின்றானோ தெரியவில்லை. அவன் வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.

* * *

Wednesday, October 26, 2011

ஷூட்டிங்கில் இருக்கும் திரைப்படத்தின் காட்சி

எங்களது மாடல் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் ஒரு ஸ்டில். படத்தின் இயக்குனரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது. இப்படத்தின் அடுத்த அடுத்த ஷூட்டிங் காட்சிகள் சிலவற்றை தொடர்ந்து வெளியிடுவோம்.

இளம் இயக்குனரின் கடின உழைப்பில் வளர்ந்து வரும் இப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

படத்தின் பெயர், டிரெயிலர் போன்றவை தொடர்ந்து வெளியிடப்படும்.


* * *


Tuesday, October 25, 2011

உறவுகளில் சிறந்தது எது?


”எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பார் எனது நண்பர். 

உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு.

தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது.

தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் பாதுகாவலனாய் இருப்பவன் தாய் மாமன்ம் மட்டுமே.

அண்ணன் தன் தங்கையை வாழ வைப்பான். அதுமட்டுமா தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான். 

தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது. அதுமட்டுமா கூடப்பிறந்தவனை எதிரியாக நினைக்கும் பெண்கள் சீரழிந்து போவார்கள்.

சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ கண்கள் குருடாகவோ, ஊனமாகவோ இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய் மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா?

உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.

அந்த வகையில் பாசமலர் என்ற திரைப்படத்தினை உதாரணமாய்ச் சொல்லலாம். உறவுகளில் எவராவது ஒருவர் தீய எண்ணமுடையவராக இருந்தால், அதன் பிறகு உருவாகும் பிரச்சினைகளில் சிக்கி சின்னாபின்னமாகும் அண்ணன், தங்கை பற்றிய அருமையான படம் தான் பாசமலர். இதுவரை இதைப் போன்ற தமிழ்ப்படத்தினை காண இயலவில்லை. 

அப்படத்தின் பாடல்களை ஒருமுறை கேட்டு வையுங்கள். 


பாடலில் வரும் சில வரிகள்

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்



வாழ்க நலமுடன்,வளமுடன் - கோவை எம் தங்கவேல்

* * *

Monday, October 24, 2011

காதல் என்பது என்ன?


”சார், எனக்கொரு பிரச்சினை, நீங்கள் தான் உதவ வேண்டும்” என்றது போன் குரல்.

“என்னவென்று சொல்லுங்கள், என்னால் ஆன உதவியைச் செய்ய முயல்கிறேன்” என்றேன்.

"சார், நான் சிங்கப்பூரில் இருக்கும் பெண் ஒருத்தியை காதலித்தேன். அப்பெண்ணும் என்னைக் காதலித்தாள். எனக்கு அங்கு வேலை கூட ஏற்பாடு செய்திருக்கிறாள். என் அப்பா, அம்மாவிடம் கூட பேசி இருக்கிறாள். நானொரு சேல்ஸ் மேன். இப்படியான நாட்களில் ஒரு நாள் அவள் கூட சின்ன சண்டை ஆகி விட்டது. மேலும் அத்துடன் அவள் என்னுடன் பேசவே இல்லை. நானும் என்னென்னவோ முயற்சிகள் செய்துபார்த்தேன். விடாமல் சில சுலோகங்களைச் சொன்னால் நினைப்பது நடக்குமென்றுச் சொன்னார்கள். அவ்வாறு சொல்லியும் பார்த்தேன். இதுவரை எதுவும் நடக்கவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. கோவில் கோவிலாய் ஏறி இறங்குகிறேன். அவள் இன்னும் என்னுடன் பேசவில்லை. ஒருமுறை என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது, என்னைத் திருமணம் செய்தால் உனக்கு நன்மை, ஆனால் எனக்கு என்ன நன்மை என்று கூட கேட்டாள். அதையெல்லாம் நினைவில்  வைத்துக் கொள்ளாமல் அவளை சின்சியராக லவ் பண்ணினேன். இதுவரை அவளிடமிருந்து ஒரு அழைப்பும் வரவில்லை” என்றார் படபடப்பாக.

”சரி, இதற்கு நான் என்ன உதவி செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?” என்றேன்.

”சார், நெட்டில் தேடிய போது உங்களின் பதிவைப் படித்தேன்” என்றார்.

அவர் எங்கே வருகிறார் என்று புரிந்து கொண்டேன். அவரிடம், “ நான் மந்திரவாதியுமில்லை, வசியமும் உண்மையில்லை “ என்று சில விளக்கங்களைச் சொல்லி கட் செய்தேன்.

எனக்குத் தெரிந்த ஒரு பையனின் நண்பன் பதினைந்து வயதுப் பெண்ணைக் காம வயப்படுத்தி வேறு ஊருக்கு வர வழைத்து விட்டான். பெண்ணின் பெற்றோர் படிக்காதவர்கள் என்பதால் ஒரு வழியாகச் செட்டில் செய்தார்கள். பெண் யாரோ ஒரு குடிகாரனுக்கு வாழ்க்கப்பட்டு செத்துக்கொண்டிருக்கிறாள். அதே பையன் மீண்டும் ஒரு பெண்ணை (வயதுக்கு வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை என்றான் நண்பன்) காம வயப்படுத்தி, அழைத்துக் கொண்டு ஓடி மீண்டும் அடிதடி ரகளையாகி பஞ்சாயத்தில் வந்து முடிந்திருக்கிறது. 

என் வீட்டின் அருகில் இருக்கும் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சிறுமி ஒருத்தி, கொட்டிக் கொண்டிருக்கும் மழையில் நனைந்து கொண்டே, யாரோ ஒரு கல்லூரி மாணவனுடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அதைப் பற்றி விசாரித்தேன். அவளுக்கு இது இரண்டாவது பாய் பிரண்டாம். காதல் எப்படி புரிய வைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.

காதல் என்பது என்ன?  என்பது பற்றிய புரிதல் இல்லாமல் வாழ்வதால் வரும் வினை இது. சினிமாக்களில் காதல் என்பது ”காதலைக் காட்டுதல்” என்ற வகையில் வருவது. காதல் காட்டப்படுவது அல்ல வாழ்ந்து காட்டுவது. சினிமாக் காதலுக்கும் நிஜ காதலுக்கும் 10000 மடங்கு வித்தியாசம் உள்ளது. அதை உண்மையான வாழ்க்கை வாழ்பவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சொல்லித் தெரிய வேண்டுமென்றால் அது காதலே அல்ல.

வசியம், மாந்திரீகம் பற்றி பலமுறை எழுதி விட்டேன். இனிச் சொல்ல ஒன்றுமில்லை. இருப்பினும் குறுக்கு வழியில் இன்பம் தேடும் சிலர் இருக்கும் போது, போலிச் சாமியார்கள் ஏமாற்றுவது நிற்கப் போவதில்லை. 

மனித குலத்தில் சினிமாக்களும், மீடியாக்களும் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் மிகக் குறைந்த அளவே வாழும் காலம் உள்ள மனிதன் வாழ்வில் மிகப் பெரும் அழிவுகளை உருவாக்கி வருகின்றன. புரிந்து கொண்டிருப்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். புரியாதவர்கள் மேற்கண்ட பையனைப் போல அலைவார்கள்.

வாழ்க நலமுடன், வளமுடன்

* * *


Saturday, October 8, 2011

பாவக்காய் மாமரத்தின் கதை





எங்கள் வீட்டில் மாமரங்களும், பலா மரங்களும், தென்னைகளும் அதிகம். மாமரம் என்றால் இப்போது இருக்கும் குச்சி போன்ற மரங்கள் அல்ல. மூன்று பேர் சேர்ந்து கட்டிப் பிடிக்கும் அளவுக்கு பெரிய மரம். ஏகப்பட்ட பொந்துகள் இருக்கும். கிளிகள் மற்றும் பல பறவைகள் கூடு கட்டியிருக்கும். ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு மரமாய் இருக்கும். அந்தளவுக்கு பெரிய மரம். மாங்காய் கார மாணிக்கதேவர் வீடு என்றால் பிரபலம். ஒவ்வொரு மாங்காய்களும் கிட்டத்தட்ட இரண்டு கிலோ இருக்கும். படுபயங்கர புளிப்பு சுவை. மரத்திலே பழுத்த பழமானால் இனிப்பு சும்மா தூக்கும்.

இம்மரத்தில் ஒரு முறை தேன் எடுத்த போது கிட்டத்தட்ட 10 லிட்டர் தேன் கிடைத்தது. வீட்டிற்குப் பின்புறமாய் இருந்த இடத்தில் பெரிய மாமரம் ஒன்றும், காசா லட்டு மாமரம் ஒன்றும், ஒட்டு மாமரம் ஒன்றும், பாவக்காய் மாமரம் ஒன்றும், குடத்தடி மாமரம் ஒன்றும் இருந்தது.

காசா லட்டு மாமரம் படர்ந்து விரிந்து கிடக்கும். ஒவ்வொரு மாங்காயும் லட்டுதான். மாங்காயைப் பறித்து வந்து வைக்கோல் போருக்குள் மூன்று நாள் வைத்திருந்து எடுத்தால் கமகம வாசனையுடன் கொழ கொழவென பழுத்து இருக்கும். அப்படியே சிமெண்ட் தரையில் வைத்து உருட்டி உருட்டி எடுத்து, முனையில் ஒரு கடி கடித்து ஓட்டை போட்டு உறிஞ்சினால் மாங்காய் ஜூஸ் சாப்பிட சாப்பிட அமிர்தம். எத்தனையோ மாம்பழங்களை சாப்பிட்டுக்கிறேன்.

அடுத்து ஒட்டு மாமரம். அது  இப்போது மார்க்கெட்டில் விற்கிறதே அது போல. அதற்கு எங்கள் வீட்டில் மவுசு இல்லை.

பாவக்காய் மாமரம் என்ற ஒரு மரம். பக்கத்து வீட்டின் நிலத்திற்கும் எங்கள் வீட்டின் நிலத்திற்கும் இடையில் இருக்கும் ஒற்றை நாடி மரம். இதன் மாங்காய் அசல் பாவக்காய் போலவே இருக்கும். எப்போதாவது ஒன்றோ இரண்டோ காய்க்கும். அதையும் பக்கத்து வீட்டு மாமா தெரியாமல் பறித்து விடுவார். இந்த மாமரத்திற்குப் பக்கத்தில் மாட்டினைக் கொண்டு வந்து கட்டி வைப்பார். அது மூத்திரமாகப் பேய்ந்து பேய்ந்து பாவக்காய் மாமரம் ஒரு நாள் உசிரை விட்டு விட்டது. அவர் நிலத்தில் மாடு கட்டி வைப்பதை நாம் எப்படி தடுப்பது. இந்த மாமா சரியான லொள்ளுப் பேர்வழி. சண்டைக்குப் போவெதென்றால் அவருக்கு அம்பூட்டு இஸ்டம். நம்ம வீட்டுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். இந்த மாமா கோபத்தில் மண்வெட்டியை எடுத்து வந்து தரையில் ஓங்கி ஓங்கி வெட்டுவார். பதிலுக்கு என் மாமா வெட்டுவார். ஒரே பேச்சு ரகளையாய் இருக்கும்.

இப்படியெல்லாம் அடித்துக் கொண்டாலும் கொஞ்ச நாட்களில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை.

கொடைக்கானலுக்கு தாத்தா போய் வரும் போது வாங்கி வந்த அந்த பாவக்காய் மாமரம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒற்றை நாடியாய் சோம்பிப் போய் இருக்கும் அம்மாமரத்தின் இலைகள் பெரிது பெரிதாய் இருக்கும். ஜெனடிக்ட் மாடிபைடு மரம் என்று சொன்னார் மாமா.

தாத்தா இறக்கும் முன்பே அந்த மாமரமும் இறந்து போய் விட்டது. வீட்டின் பின்பக்கம் போவது என்றாலே எனக்கு கிலியடிக்கும்.

வீட்டின் எல்லையில் இருந்த பனைமரத்தில் ஒரு முறை முதன் முதலாய் ஆந்தையைப் பார்த்து விட்டேன். அது தலையை அப்படியே திருப்பியது கண்டு பயத்தில் நடுங்கிப் போய் விட்டேன். வேலைக்காரனை அழைத்து அதைக் காட்டியது போது, அதற்கு அவன் "தங்கம் அது பேய்" என்று சொல்லி விட்டான். தூரத்தே இருந்து பாவக்காய் மாமரத்தினைப் பார்ப்பதோடு சரி. வயது ஏற ஏற ஆந்தையின் மீதான் பயம் குறைந்து போய், அடிக்கடி பாவக்காய் மாமரத்தினைப் பார்க்க சென்று விடுவேன். எப்போதாவது காய்க்கும் மாங்காய்க்காக காத்திருந்து, பறித்து பழுக்க வைக்க முனைந்தேன். அது பழுக்கவில்லை. குழம்பில் போட்டு அம்மா தந்தார்கள். வெகு டேஸ்ட்டியாக இருந்தது.

பக்கத்து வீட்டு மாமாவிடம் ஒரு முறை கேட்டேன் "மாட்டை ஏன் மாமா இங்கே கட்டுகிறாய், மாமரம் பட்டுப் போய் விடும் பாரு" என்றேன்.

" போடா அதெல்லாம் உனக்குத் தெரியாது" என்றார்.

தாத்தா வைத்த மாமரம்,  பக்கத்து வீட்டு மாமாவின் கைங்கரியத்தால் பட்டுப்போய் விட்டது. ஒரு தலைமுறை மாங்காய் மரம் செத்துப் போய் விட்டது.

பக்கத்து வீட்டு மாமா, தாத்தாவின் தம்பியின் பையன் என்பதுதான் இக்கதையின் விசேஷம்.

* * *

Saturday, October 1, 2011

நன்றியும் ஒரு செய்தியும்

நேற்றோடு பத்து வருடங்கள் மணவாழ்க்கையின் நாட்கள் கடந்திருக்கின்றன. ஆரம்பகாலத்திலும் இன்றைக்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்னென்ன என்று யோசித்துப் பார்த்தேன்.

ஏதாவது தவற்றினைப் பார்த்தால் தலைக்கேறிய கோபம் இன்றைக்கு அறவே குறைந்து விட்டது. எதையும் ஆராய்ந்து பார்க்கும் திறன் கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது. தீய எண்ணமுள்ளவர்களை எளிதில் அடையாளம் ஓரளவு முடிகிறது. குடும்பத்தின் மீதான ஈடுபாடு அதிகரித்திருக்கிறது. உணவுக்கட்டுப்பாடு வந்திருக்கிறது. பேச்சில் நிதானம் ஓரளவு வந்திருக்கிறது. வாழ்க்கையின் ஓட்டம் ஒரளவு புரிபட்டிருக்கிறது. இன்பம் என்றால் என்ன, நன்மை என்றால் என்ன என்பதை உணர முடிகிறது. எந்த ஒரு பிரச்சினைக்கும் பல வழிகளில் தீர்வினைக் காணலாம் என்று புரிகிறது. அவசரப்படாத நிதானமான வேலைகள் வெற்றிகளைத் தரும் என்று தெரிய வருகிறது. 

துன்பத்தைத் தருபவர்களுக்கு இன்பத்தை தர மனது விழைகிறது. எதையும் ஆராய முடிகிறது. லட்சியம் பற்றிய பாதைகள் தெரிகின்றது. எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று தெரிகிறது. நேர்மைக்கும், பொய்மைக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. இன்னும் என்னென்னவோ? 

வாழ்க்கை மனிதனுக்கு கற்பிக்கும் அனுபவ பாடங்கள் பலருக்குப் புரிந்து கொள்ள முடியாமலே போய் விடும்.

"மனைவிக்கு சேலை வாங்கிக் கொடுத்தீர்களா? பூ வாங்கிக் கொடுத்தீர்களா? எங்காவது போய் வரலாமா?" என்று நண்பர் போனில் கேட்டார். எனக்கு வெளியில் செல்வதை விட வீட்டில் இருப்பது தான் பிடிக்கும் என்றேன். அவர் ஒன்றும் பேசவில்லை.

எத்தனையோ பெற்றோர், காதல், முதியோர், அப்பா, அம்மா தினங்கள் வருகின்றன. போகின்றன. மீண்டும் வருகின்றன. எனக்கு அந்த தினங்களில் நம்பிக்கை இருப்பதில்லை. காதல் என்பது சேலையிலோ, பூவிலோ தான் இருக்கவில்லை என்று மட்டும் தெரியும்.

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் இல்லை. கொடுத்துக் கொண்டே இருப்பது தான் என்னளவில் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். எதைக் கொடுப்பது? 

தீரவே தீராது அன்பினை தான் பிறருக்கு கொடுக்க வேண்டும். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி. 

அமுதாஸ் ஹோட்டலில் காருக்குள் இருந்து தயிர்சாதமும், கொஞ்சம் காய்கறிகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ வந்த இரண்டு அரவாணி சகோதரிகள் என்னருகில் வந்து “ நீங்கள் நீண்ட ஆயுளோடு, நூறாண்டுகள் வளமோடு வாழ வேண்டும்” என்று வாழ்த்தினார்கள். காசு ஒன்றும் என்னிடம் கேட்கவில்லை. வாழ்த்தி விட்டுச் சென்று விட்டார்கள். சுற்றும் முற்றும் பார்த்தேன். அவர்களைக் காணவில்லை. டிரைவரிடம் விசாரித்தேன். ”சார் அப்படி யாரும் இங்கே தென்படவில்லையே” என்றார்.

திடீரென தோன்றி மறைந்த அந்த அரவாணிகளுக்கு என் நன்றி. நேற்று போனில் வாழ்த்துக்களும், மெயில் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களுக்கு நன்றி. 

ஒரு கட்சியில் அமைப்பாளர் பதவியில் இருப்பவர் என் நண்பர். எதேச்சையாக என்னைப் பார்த்து விட “ தங்கம், ஒரு கப் டீ சாப்பிடலாமா?” என்று பிடித்துக் கொண்டார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

இன்றைக்கு இந்திய நீதித் துறை வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்றிருக்கும் “வாச்சாத்தி தீர்ப்பு” வழங்கிய நீதிபதி நண்பரின் நெருங்கிய உறவினர். ”கடவுள் போன்றவர்கள் மனிதர்கள் ரூபத்தில் வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், இப்போது உணருகிறேன்” என்றுச் சொன்னேன். 

ஒரு நிமிடம் யோசித்து, பின் திகைத்தார். சிரித்து விட்டு விடை பெற்றுக் கொண்டேன்.

மாலையில் வீடு திரும்பினேன். சிலருக்கு சாப்பாடு போடச் சொல்லி இருந்தேன். அதைப் பற்றி விசாரித்தேன். நன்றாகச் சாப்பிட்டார்கள் என்றுச் சொன்னார் மனைவி. அவ்வார்த்தை மனதுக்கு இதமாய் இருந்தது. 

மீண்டும் நண்பர் போனில் அழைத்து “இரண்டு முழம் மல்லிகைப்பூவாது வாங்கிக் கொடுங்கள் ” என்றார்.

நண்பரிடம் சொன்னேன், “பூவுக்கு எதற்கு பூ”. மனைவியைப் பார்த்தேன். கண் சிமிட்டிச் சிரித்தாள். அதில் காதல் தெரிந்தது. 

இனி வரப் போகும் நாட்களில் திருமண நாள் கொண்டாடப்போகும் சகோதர, சகோதரிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்

* * *