குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Wednesday, December 16, 2020

2020ம் வருட மார்கழி மாதம் ஒன்றாம் தேதி

ஐப்பசி மாதம் மழை பெய்து கொண்டே இருக்கும். குளிர் எலும்பினை ஊடுறுவிச் செல்லும். தாத்தாவின் ஐ.என்.ஏ யூனிபார்ம் சட்டை ஒன்று இருக்கும். அதை எடுத்துப் போட்டுக் கொள்வேன். ஓட்டு வீடாகையால் குளிர் வீட்டுக்குள்ளே இறங்கும். விடிகாலைப் பொழுதில் தாதன் வாசலில் சிகண்டி அடித்து சங்கு ஊதிச் செல்வான். சிகண்டி கண்டு விழித்து விடுவேன். சரியாக பள்ளி வாசலில் இருந்து தொழுகைக்கு பாங்கு சொல்லி அழைப்பார்கள்.

கல் வேய்ந்த வாசல். கிராமத்திலேயே எங்கள் வீட்டில் தான் இருந்தது. வாசலைச் சுற்றி சிமெண்ட் பூசி, தண்ணீர் செல்ல வழி வைத்த சமமான கல்வாசல். நெல் காய வைப்பது, ஊறுகாய்கள், வத்தல், வடாம், உளுந்து இன்னும் என்னவெல்லாமோ வாசலில் தான் காய வைப்போம். மாலையில் சூடு கொப்பளிக்கும். நான்கைந்து வாளி தண்ணீர் தெளித்து சூட்டைக் குறைத்து, இரவில் வாசலில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு பாயைப் போட்டு தூங்குவதும் உண்டு. ஆகாயத்தில் நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருக்கும். அதை எண்ணிக் கொண்டே இருக்குங்கால் தூக்க தேவதை அழகாய் தழுவி விடுவாள்.

வீட்டின் இடது புறம் நீண்ட ஆண் பனைமரம் இருக்கும். தென் கிழக்கு மூலையில் நாவல் மரம் பெரியது. வாசலை ஒட்டி வண்டி செல்லும் வண்டிப்பாதை. வீட்டு வாசலின் நேராக ஒரு பூவரசு மரம். அம்மாச்சி செத்துப் போனப்போது அதற்கு பயன்படுத்திய பூவரசம் குச்சியை அம்மா வாசலின் நேராக ஊன்றி வைத்தார்கள். அது பிழைத்துக் கொண்டது. அம்மாச்சியைப் பார்ப்பது போல தினமும் அந்தப் பூவரச மரத்தை அம்மா வாஞ்சையோடு பார்ப்பார்கள்.

பூவரசு மரம் அதன் இலைகளைத் தைத்து சோறு போட்டுச் சாப்பிடுவார்கள் திடீரெனெ வீட்டுக்கு வரும் வேலைக்காரர்கள்.

தீபாவளி சமயங்களில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும். ஒரு மழை நாளில், தீபாவளி அன்று என் தோழியை முத்தமிட்ட சம்பவம் என் ஊடே மின்னல் என வந்துச் சென்று விட்டது. ஹா…

எனக்கு நிறைய மாமா பெண்கள் இருந்தார்கள். எனக்குப் பிடித்த சில மாமா பெண்களும், தோழிகளும் உண்டு. அது உள்ளூர இருக்கும் அன்புணர்வு. தீபாவளி நாட்களில் பலகாரங்களைக் கொடுத்து அன்பினை வெளிப்படுத்துவார்கள். அதெல்லாம் ஒரு காலம். எனக்கு நிரம்பவும் பிடித்த என்னை விட மூத்த வயது மாமா பெண் ஜெயம் மட்டுமே. மீதமுள்ளவர்களைக் கொஞ்சம் கொஞ்சம் பிடிக்கும்.

சமீபத்தில் தான் எனது நெருங்கிய நண்பன் மாரிமுத்துவுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஊரில் அவன் வீடுதான் மிகவும் பெரியது. வேலைப்பாடுகள் நிறைந்த அற்புதமான வீடு. வீடு என்றுச் சொல்வதை விட குட்டி அரண்மனை என்றுச் சொல்லலாம். அவனின் தாத்தா ஊரில் பெரிய வீட்டுக்காரர். ஆறாம் வகுப்பு படிக்கும் போது அவனுடன் நெருக்கம் அதிகமானது. வீட்டுக்கு அடிக்கடிச் செல்வேன். அவனின் அக்காக்கள், அவனின் அண்ணன் எல்லோரும் பார்ப்பதற்கு ராஜா வீட்டுப் பிள்ளைகள் போல இருப்பார்கள். நானோ சொங்கிப் போய் இருப்பேன். படிப்பதில் கொஞ்சம் கெட்டிக்காரத்தனமுண்டு என்னிடம். நானும் அவனும் கணக்குப் பாடங்களை எழுதுவது போன்ற படிப்புத் தொடர்பாக பழகினோம். அவன் வீட்டில் சாப்பிடுவதுண்டு.

பழைய நண்பனுடன் பேசும் போது மனக்கண்ணில் அந்தக் காலத்துக்கே சென்று விடுவோம் அல்லவா? அதைப் போல எனக்கும் நேர்ந்தது. கடந்த காலம் இனி வராது. என்னதான் செய்தாலும் அந்த நேரமும் பொழுதும் இனி கிடைக்காது. ஆனால் அதன் நினைவுகள் தரும் சுகமானது மகிழ்ச்சியை விட வேதனையைத் தந்து விடும் எல்லோருக்கும் அல்லவா? அன்றைக்கு டிவி இல்லை, மொபைல் இல்லை. தினசரிகள், மாதப் பத்திரிக்கைகள் தவிர வேறொன்றும் இல்லை. மனிதர்களைப் பார்ப்பதும், பேசுவதும், விளையாடுவதும் ஆன பொழுதுகள் இன்றைக்கு நம் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை.

மார்கழி மாதம் என்பது சாதாரணமானது அல்ல. இறைவனை நினைத்து போற்றக்கூடிய காலம் இது. காலம் காலமாக ஆண்டாளின் பாசுரங்களைப் பாடிக் கொண்டிருக்கிறோம். கண்ணன் மட்டுமா துயில் களைய வேண்டும்?

தமிழர்களும் துயில் களைய வேண்டும். இன்னும் சினிமாக்கனவுகளில் மூழ்கி தூங்கிக் கொண்டிருக்காமல் விழித்து எழ வேண்டிய நாள் இது. விழித்துக் கொள்ளுங்கள்.

கிழட்டு நரிகள் அழகிய இளம் பெண்களுடன் ஆடிப் பாடிக் களித்து அதைக் காட்டி கிளர்ச்சியுறச் செய்து ஓட்டு வாங்கி அதிகாரம் செய்ய, நரித்தனங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் சம்பளம் பெற்றுக் கொள்வது பணிக்காக. ஆனால் மக்களுக்கு வேலை செய்ய கையூட்டுப் பெற்றால் மட்டுமே வேலை செய்யும் போக்கினை மாற்ற வேண்டும். அதற்குக் காரணமான ஆட்சியை மண்ணுக்குள் தள்ளி மூட வேண்டும்.

பசியாற்றும் விவசாயிகள் டெல்லிச் சாலையிலே பனி மூட்டத்தின் ஊடே போராடிக் கொண்டிருக்கிறார்கள். வயிற்றுப் பசி தீர்த்தவர்களின் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் கார்ப்பொரேட் கூலியாக நின்று விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. விவசாயத்தைப் பிடுங்கி தன் அரசியல் நண்பர்களிடம் கொடுத்து விடத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவே விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.

எழுந்திருங்கள் தமிழர்களே…! எழுந்திருங்கள்…!!

சொந்தம் உற்றார், உறவினர், ஜாதி, இனம், மதம், மொழி, கட்சி என எதுவும் பார்க்க வேண்டாம். நம்மை வழி நடத்த, நாட்டை நல் வழியில் ஆள நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்லவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  

மார்கழித் திங்களில், இந்த நன்னாளில் நீராடும் போது, எண்ணங்களில் இருக்கும் இன, மத, மொழி, கட்சி விரோதங்களை அழுக்கோடு கழுவி விடுங்கள்.

உலகம் நம்மை வாழ வைத்தது. நாம் நம் சந்ததியினருக்கு அவ்வாறே விட்டுச் செல்ல வேண்டிய கடமை உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.

கோவையில் குளிர் இல்லை. சில்லடிக்கும் குளிர் சுத்தமாக இல்லை. விடிகாலைப் பொழுதில் எழுந்து குளித்து விட்டு, நெற்றியில் விபூதியும், குங்குமமும் இட்டு வாசலில் வந்து அமர்ந்தேன். வாசல் தெளித்து, கூட்டிப் பெருக்கி விட்டு, கோலம் போட்டுக் கொண்டிருந்தார் மனையாள். தெருவில் எந்த வீட்டிலும் விளக்குப் போடவும் இல்லை, கோலம் போடவும் இல்லை. எங்கோ தூரமாக சாமிப் பாட்டு ஒலித்தது. மனையாளும் நானும் ஏதோ தனித்து விடப்பட்டவர்களாக தெரிந்தோம். மக்களின் மனோபாவம் மாறிப் போனது. ஒழுங்கும், நியதியும், சமூக வழக்கங்களும் மாறிப் போனதன் விளைவினை பூமி அனுபவிக்கிறது. பூமியை ஆதாரமாகக் கொண்ட மனிதனும் அதன் தொடர்ச்சியாக அனுபவிக்கிறான். 

ஊரில் இந்த நேரத்தில் மழையூர் சதாசிவம் சிவன் கோவிலில் திருவாசகத்தையும், அகவலையும் உருகி உருகிப் பாடிக் கொண்டிருப்பார். குழந்தைகள் கோவிலுக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இன்றைக்கு சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும்.

காலம் வசதி வாய்ப்புகளை மட்டும் தான் தந்தது. மனிதர்கள் அதற்காக தங்கள் வாழ்வியலை மாற்றி விட்டார்கள். ஆனால் பசியும் கோபமும் தாபமும் காமமும் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன என்பதை எல்லோரும் மறந்து போனார்கள்.

இந்த மார்கழி அன்று நாம் தமிழகத்தில் இருவரை முடக்க வேண்டுமென சபதம் கொள்வோம். எந்தத் தகுதியும் இல்லாமல் நம்மை ஆளத்துடிக்கும் அற்ப எண்ணமுள்ள நரிகளான, தமிழினத்துக்கு ஒரு கேடாக இருக்கும் கமலஹாசனையும், ரஜினி காந்தையும் முடக்கி அவரவர் வேலையச் செய்ய வைக்க வேண்டும்.  

கொரானா, பொருளாதாரச் சீரழிவு, துரோகிகளின் தமிழ் இன அழிப்பு சம்பவங்கள் எல்லாவற்றையும் கடந்து இனி தெளிவடைவது மட்டுமே முக்கியம். கடந்து போனவை போனதுதான், இனி அது திரும்பப் போவதில்லை. ஆனால் வரும் காலம் நமக்கானது. அதை நமக்கேற்றபடி எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை எவரும் மறந்து விடாதீர்கள்.

உங்கள் அனைவருக்கும் மார்கழி முதல் நாளன்று இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, October 25, 2016

தீபாவளியும் ஹிட்லரின் சதியும் ஒரு உண்மைச் சம்பவம்

வருடம் தோறும் தீபாவளி வருகிறது. வெடித்து விட்டுச் சென்று விடுகிறது. இப்படியான விழாக்கள் மக்களை செக்கு வாழ்க்கையிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. வளர் பிராயத்தினருக்கு வாழ்க்கையின் மீதான பிடிப்பினை உண்டாக்குகிறது. பிறக்கிறோம் இறக்கிறோம். இந்த இரண்டுக்கும் இடையில் வாழ்க்கையின் மீதான அழகியலை இது போன்ற விழாக்கள் தான் உருவாக்கி காலம் காலமாக மனித கட்டமைப்பை விரிசல் விடாது பாதுகாக்கின்றன.

(2011ம் வருடம் ராமேஸ்வரத்தின் பாம்பன் பாலத்தின் மீது அம்மு, ரித்தியின் அப்பத்தா குட்டியம்மாள் அவர்களுடன்)

இந்த வருடம் அடியேனுக்கு முறுக்குப் பிழிவதிலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்து விட்டது. பெண் அச்சில் முறுக்கு மாவைச் சேர்த்துக் கொடுக்க பையன் முறுக்கு பிழிய ஹிட்லர் அடுப்பில் முறுக்கைச் சுட நான் தீபம் நா.பார்த்தசாரதியின் நூலில் மூழ்கி விட்டேன். கடந்த ஞாயிறு அன்று மாலை நேரம் முறுக்குச் சுடுவதற்கான முஸ்தீபுகள் நடந்து கொண்டிருந்த போதே நான் நைசாக உடல் வலிக்கிறது என்றுச் சொல்லி பெட்ரூமில் படுத்து விட்டேன்.

இல்லையென்றால் மூன்றுபடி மாவை ஒற்றை ஆளாக பிழிந்து கொடுப்பது என்றால் என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஏண்டி இப்படிப் படுத்தறே என்றால் சர்ர்ரீங்க்க நீ....ங்க..... போ......ய்ய்ய்ய் ரெஸ்ட் எடுங்.....க..... என்ற குரல் இழுத்துக் கொண்டே முகம் கோணலாய் மாறியபடி வரும். கைகள் இரண்டும் முறுக்கு அச்சினை அழுத்தியதால் உண்டாகும் எரிச்சல் வலியை விட இந்த இழுப்புச் சேட்டை அவஸ்தைப் படுத்தி விடும். வேறு வழி முழுவதும் முடிந்தால் தான் தற்காலிக விடுதலை கிடைக்கும்.

இதுவாவது பரவாயில்லை. தீபாவளி அன்று இரவில் மெதுவடைக்கு வெங்காயம் நறுக்கிக் கொடுக்க வேண்டும். சுழியனுக்கு சுக்கு, வெல்லம் உடைத்து தர வேண்டும். பாலப்பத்திற்கு கட்டி இல்லாமல் மாவு கரைத்துக் கொடுக்க வேண்டும். அன்றைக்கு என்று சுடும் அதிரசத்திற்கு கூட இருந்து உதவி செய்ய வேண்டும். இட்லிக்குச் சட்னி அரைக்க நான்கைந்து தேங்காய் துருவித் தர வேண்டும். விடிகாலையில் வெந்நீர் போட்டு பசங்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். இப்படி இன்னும் பல வேண்டும்கள் தீபாவளி அன்று வரிசை கட்டி நிற்கும். நான் செய்து கொடுப்பது சிறிய உதவிகள் தான். ஆனால் அதுதான் வண்டிக்கான அச்சாணி என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை. இந்த உலகம் அச்சாணிகளை மதிப்பதே இல்லை. மேலழகைத்தானே ஆஹா ஓஹோ என்கிறது. ஆம்பளைங்க விதியை ஆண்டவன் இப்படித்தான் எழுதி வைத்திருப்பான் போல.

சுழியத்துக்கு வெல்லத்தை இப்படியா பொடித்து தருவது என்று நக்கல் வேறு. வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு வார்த்தை வராது. எல்லாம் முடிந்த பிறகு தான் கிண்டல்கள் வரும். எத்தனை வருடமா சுழியத்துக்கு வெல்லம் பொடிக்கிறீங்க, கொஞ்சமாவது பொடிசா பொடிக்கிறீங்களா என்பார்கள் மாலை நேரத்தில். ஒவ்வொரு செயலையும் மாலையில் விமர்சித்தால் எப்படி இருக்கும்? கொதிக்கும் ரத்தம் பசங்க கையில் பலகாரங்களைப் பார்க்கையில் கொதிக்கும் பாலில் ஒரு துளி தண்ணீர் பட்டது போல அடங்கி விடும். ஆம்பளைங்களுக்குதான் அதிகம் ரத்தக் கொதிப்பு வரும் என்றுச் சொல்கிறார்கள். வராமல் என்ன செய்யும்? வராமல் என்ன தான் செய்யும்?

ஒரு வழியாக பலகார பிரச்சினை தீர்ந்தாலும் வெடிப்பிரச்சினைதான் பெரிது. வாசலில் உட்கார்ந்து ஒவ்வொரு பார்சலாய் பிரித்து எடுத்துக் கொடுக்க வேண்டும். மத்தாப்பூ வெடித்ததும் கம்பியைப்  பெற்று தனியாக வைக்க வேண்டும். இல்லையென்றால் காலில் சுட்டுக் கொள்வார்கள். பெண் இருக்கிறதே அவ்வளவுதான் ஊரையே கூட்டி கண்ணில் கங்கையைக் கொட்டி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய பெரிய பூகம்பமே கிளம்பி விடும். தேவையா இதெல்லாம் என கண் கொத்திப் பாம்பு போல பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

நேற்றைக்கு காலையிலிருந்து போன் மேல் போன் வந்து அடுப்படியில் ஹிட்லரும் அவரது அம்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். சரி இன்றைக்கு நமக்கு டிரைவர் வேலை இருக்கிறது போல என நினைத்தால் சரிதான். இதற்குள் எனக்கு வங்கிக்குச் செல்ல வேண்டியபணி, அரசு அலுவலரைச் சந்திக்க வேண்டிய பணி, ஆடிட்டரைப் பார்க்க வேண்டிய பணி, வேறொரு வங்கிக்குச் செல்ல வேண்டிய பணி என வரிசை கட்டி நின்றிருந்தன. இருந்தாலும் தலையில் வலி வந்தால் உடம்பு முழுவதும் அல்லவா வலிக்கும். அது போல ஹிட்லர் வேலை என்றால் தலையில் வலி வந்ததாகத்தானே. அதற்காக நான் ஹிட்லரை தலைவலி என்றுச் சொல்லி விட்டேன் என்று நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

இப்போதெல்லாம் கோயம்புத்தூர் வெயில் வறுத்து எடுக்கிறது. எவ்வளவு வெயில் அடித்தாலும் குளிர்ச்சியாக இருக்கும் கோவை வெயில் இன்றைக்கு என பார்த்துக் கொதிக்கிறது. என்னைச் சுற்றி ஆண்கள் அதிகமிருந்தார்கள். அவர்களுக்கும் ரத்தக் கொதிப்பு இருக்குமோ என நினைத்தேன். நினைத்தால் என்ன ஆகி விடப்போகிறது. வறுபடல் வறுபடல் தான். அரை மணி நேரமாக கோவை சிங்காநல்லூர் என்.ஜி. மருத்துவமனை அருகில் நின்று கரூரிலிருந்து வரும் பஸ்ஸுக்காக காத்திருந்து அங்கிருந்து வந்த பார்சலை கண்டக்டரிடமிருந்து பெற்றுக் கொண்டு பிறகு ஒவ்வொரு வேலையாக முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்து பார்சலைப் பிரித்தார் ஹிட்லர்.

வருடா வருடம் கரூரிலிருந்து ஹிட்லரின் அம்மா காரபூந்தி செய்து தனியாகப் பார்சலில் அனுப்பி வைப்பார்கள். அத்துடன் திருவள்ளுவர் ஹோட்டலிலிருந்து நான்கு பரோட்டாக்களும் வரும். பலகாரங்களுடன் கரூர் போர்வை, கொசுவலை மற்றும் இன்னபிற தீபாவளி தொடர்பான வஸ்துகளும் வந்து விடும். இந்த வருடம் அடியேனுக்குப் பிடித்த காரபூந்தியைக் காணவில்லை.

பொசுக்கென்று ஆகிவிட்டது. என்ன இருந்தாலும் மாமியார் வீட்டுப் பலகாரம் என்றால் கொஞ்சம் குஷியாகத்தானே இருக்கும். இந்த வருடம் சோகமாகவே இந்தத் தீபாவளி போகும் போல. இது பற்றி நைசாக விசாரித்தால் அது ஹிட்லரின் சதி என்று கண்டுபிடித்தேன். நான் செய்து தருகிறேன் என்று ஆரம்பித்தார். விதி வலியது அல்லவா? மீண்டும் அடுப்பங்கரைக்குக்கு ஆளை வர வைத்தே ஆக வேண்டும் என்று சதி செய்தால் என்ன செய்வது? கிரேக்க வம்சத்து அடிமை மாதிரி இருப்பதைத் தவிர என்னதான் செய்ய முடியும்?

இந்த வருடம் டிவியை ஆன் செய்யக்கூடாது என முடிவெடுத்துள்ளேன். உண்மையான தீபாவளி டிவியை ஆஃப் செய்வதில் தான் உள்ளது.

இதெல்லாம் முடிந்து இரவில் படுக்கச் செல்லும் போது முகத்தில் புன்னகையுடன் காலையிலிருந்து கொண்டாடிய கொண்டாட்டத்தால் அசந்து தூங்கும் குழந்தைகளைப் பார்க்கும் போது அறியாமலே மனதுக்குள் மத்தாப்பூ பூக்கும். அதுதானே நமக்கு உண்மையான தீபாவளி இல்லையா?

குடும்பத்துடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுங்கள். வெளி நாடு வாழ் தியாக உள்ளங்களே வரக்கூடிய நாட்களில் நீங்களும் உங்கள் குடும்பங்களுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ நான் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Saturday, October 29, 2011

மறக்க முடியாத தீபாவளி

ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில், தீபாவளி நாள் அன்று நண்பரைச் சந்திக்க சென்றிருந்தேன். நண்பர்களுடன் தீபாவளி வாழ்த்த்துக்களை பகிர்ந்து கொண்டு, இனிப்புகள் சாப்பிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது என்னிடம் படித்த ஆறாம் வகுப்பு பையன் ஒருவன் என்னைப் பார்த்துக் கையை ஆட்டினான்.

வண்டியை நிறுத்தி, அவனை அருகில் வரும்படி அழைத்தேன். 

“வீட்டுக்கு வாரீங்களா சார் !” என்றான்.

”வீடு எங்கேப்பா இருக்கு ?” என்று கேட்டு அவனை அழைத்துக் கொண்டு அவன் வீடு நோக்கி சென்றேன்.

குளிர்ச்சி தரும் தென்னை ஓலைகள் வேய்ந்த, அழகாய் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட வீடு. வீட்டின் முகப்பில் கோலமிட்டு இருந்தது. மாணவனின் அப்பாவும், அம்மாவும் வண்டிச் சத்தம் கேட்டு வெளியில் வர மாணவன் வண்டியில் இருந்து குதித்து அவர்கள் அருகில் ஓடி என்னை “அப்பா, எங்க இவருதான் கம்யூட்டர் சாரு” என்றான்.

இருவருக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அருகில் வந்து “வாங்க வாங்க” என்றழைத்தவர்கள் வீட்டிற்குள் அழைக்க தயக்கத்தோடு நின்றனர்.

”சாப்பிட ஏதாவது கிடைக்குமா? “ என்றேன். வண்டியை நிறுத்தி விட்டு, இறங்கி வீட்டுக்குள் சென்றேன்.

வழு வழுவென்று மெழுகிய தரைகள். அதன் மீது பாய் போடப்பட்டு அமர்ந்து கொண்டேன்.

இடதுபுறமாய் சமையலறை. மண்சட்டிகள் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மாவரைக்கும் கல்லில் அரைத்த மெதுவடை, சுழியம் இரண்டும் கொண்டு வந்து தந்தார்கள். வயிறு நிறைய சாப்பிட்டேன். அப்பா என்ன ஒரு சுவையாக இருந்தன தெரியுமா? என்னைப் பற்றி விசாரித்தார்கள்.மாணவனை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டே அவர்கள் இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தேன்.

“மதியம் என்ன சமைக்கப் போகின்றீர்கள்?” என்றேன்.

“சாம்பார், பாயசம் சார்” என்றான் மாணவன்.

”எனக்கும் கொஞ்சம் சேர்ந்து சமைத்து விடுங்களேன், இருந்து சாப்பிட்டு விட்டுப் போகிறேன்” என்றேன்.

நிகழ்காலத்தில் படித்த போது பாத்திரத்திப் பொறுத்தது உணவின் சுவையும் தரமும் படித்த போது என் மாணவன் வீட்டில் சாப்பிட்ட சாம்பாரின் சுவை நினைவுக்கு வந்தது. இதுவரை எத்தனையோ ஹோட்டல்களில் சாப்பிட்டு இருக்கிறேன். வித விதமாய் சமைத்துப் போடும் மனைவியின் கைப்பக்குவம் கூட மாணவன் வீட்டில் வைத்திருந்த சாம்பாருக்கு நிகராக இல்லை.

அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளிக்கும் எனக்கும் சேர்த்து சாப்பாடு தயார் செய்வார்கள். நான் ஆசிரியராக இருந்த காலம் முழுவதும் தீபாவளி தினங்களில் மாணவனின் வீட்டுச் சாப்பாடே எனக்கு அமிர்தமாய் இருந்தது. அம்மாணவன் இப்போது என்ன செய்கின்றானோ தெரியவில்லை. அவன் வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.

* * *