குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Sunday, October 23, 2022

அம்மா குட்டியம்மாள் - தீரா வலி - அஞ்சலி

விடிகாலை நான்கு மணி பள்ளிவாசலில் இருந்து தொழுகைக்கு வரச்சொல்லி அறிவிப்பார்கள். வாசலில் ’வறட் வறட்’ சத்தம் கேட்கும். அரை ஏக்கரில் பரந்து விரிந்த மனை. கல் பாவிய வாசலின் முன்பிருந்து - வீட்டுக்குப் பின்னால் வைக்கோல் போர் இருக்கும் வரை கூட்டிப் பெருக்க வேண்டும். ஈக்கு குச்சி விளக்குமாறால் கூட்டிக் கொண்டிருப்பார்.

கட்டுத்தறியில் மாடுகளின் சாணத்தை அள்ளி குப்பைக் கிடங்கில் போட்டு விட்டு, அவைகளுக்கு வைக்கோல் போட்டு விட்டு, குடத்தடிக்கு வந்து கைகால் அலம்பி, அடுப்பங்கரைக்குள் நுழைவார். அடுப்பில் சாம்பலை எடுத்து தட்டில் வைத்து விட்டு, சோற்றுப் பானையில் தண்ணீர் வைத்து அடுப்பை மூட்டுவார்.

குடத்தடிக்கு பாத்திரங்களைக் கொண்டு போய், தண்ணீர் தெளித்து விட்டு, அமர்ந்து சாம்பலால் பாத்திரங்களைக் கழுவி, பொக்கையில் நிரம்பி இருக்கும் நீரில் அலசி வீட்டுக்குள் வருவதற்குள், அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருக்கும்.

அரிசி களைந்து உலையில் போட்டு, அடுப்பைத் தூண்டி விட்டு, கட்டுத்தறிக்குச் சென்று பாலைக் கரந்து வருவார். பாலை இன்னொரு அடிப்பில் காய வைத்து விட்டு, தூரியில் தொங்கிக் கொண்டிருக்கும் மோர் பானையை இறக்கி மத்தை வைத்து கடைந்து வெண்ணெய் எடுப்பார். 

எதிரில் உட்கார்ந்து கொண்டிருக்கும் எனக்கு ஒரு உருண்டை வெண்ணெய். கொஞ்சம் மோர்.

சோறு பதம் பார்த்து விட்டு, கஞ்சி வடிக்க சோற்றுப்பானையை கவிழ்த்து விட்டு,  மீந்த குழம்பினை பால் காய்ந்த அடுப்பில் சுட வைத்து, கஞ்சி வடிந்த பானையை இறக்கு துணியால் சுற்றிலும் துடைத்து, பானை வாயில் சோற்றுப் பருக்கைகளை வழித்து உள்ளே போட்டு, பிருமனை மீது வைப்பார். 

காய்ந்த பாலை உரியில் வைத்து விட்டு, இரவு மீந்த குழம்பினை சூடு செய்வார். காலையில் யாரும் காப்பித்தண்ணி, டீத்தண்ணி குடிப்பதில்லை. தாத்தா மாணிக்கதேவர் கடைத்தெருவுக்கு டீத்தண்ணி குடிக்கச் சென்று விடுவார். மாமா அருணாசலம் அரசு அலுவலராதலால், ஆவணத்தான் குளத்துக்கு குளிக்கச் சென்று விடுவார்.

பெரிய மாமா குழந்தைவேல் விடிகாலையில் வயற்காட்டு உழச் சென்று இருப்பார்.  அவருடன் போஸும், ஜெயராசும் சென்று இருப்பார்கள். 

தவளைப் பானையில் வயலில் வேலை செய்யும் ஆட்களுக்கு கஞ்சி கலக்கி, பனை ஓலை எடுத்து, வெந்தய மாங்காய், வற்றல்கள், வடகங்கள் எடுத்துக் கொண்டு நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வயலுக்குச் தலையில் சும்மாடு கட்டி அதன் மீது சோற்றுத் தவளைப் பானையை வைத்துக் கொண்டு, இடது கையில் கூடையில் கஞ்சிக்கு கடிப்பவைகளை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்.

* * *


(தோற்றம் 01.04.1939 | மறைவு 04.10.2022)

மூன்று நாட்களுக்கு முன்பே சுவாமியிடமிருந்து தகவல் வந்து விட்டது. ஒவ்வொரு நாளும் எனக்கு மனச்சோர்வுடன் தூக்கமின்மையும் சேர்ந்து கொண்டது. பலப்பல எண்ணங்கள் மனதுக்குள். பல்வேறு சிந்தனை ஓட்டங்கள். அம்மாவைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன. சின்னக்கா ஜானகியும், மகன் பிரவீனும் தான் ஊரில் அம்மாவைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். தினமும் அம்மா என்ன சாப்பிட்டார்கள் என்று விசாரிப்பது என நாட்கள் சென்று கொண்டிருந்தன.

அன்று ஆயுத பூஜை, அக்டோபர் மாதம், நாலாம் தேதி விடிகாலை மூன்றரை மணி. ஊரில் இருந்து பிரவீன் அழைத்தான். 

அம்மா இறைவனடி சேர்ந்தார்கள்.

கோவையில் ஆறரை மணிக்கு கிளம்பினேன். சரியாக பதினொன்றரை மணிக்கு ஊர் சென்றேன்.

சின்னக்கா சொன்னார்கள்,”நான் சாகப் போறேண்டி, அழாதே” என்றுச் சொல்லி தலையைத் தடவிக் கொடுத்தாராம். தலை சாய்ந்து விட்டது என்று காலைக் கட்டிப்பிடித்து அழுதார்.

அம்மாவின் காலடியில் அமர்ந்தேன். தொண்ணூறு வயது வரை ஓடி ஓடி, நடந்து நடந்து, தேய்ந்த கால்கள் தட்டையாய் கிடந்தன. பேசாமல், இயங்காமல் படுத்திருந்தார். எனக்குள் குருதி கொதித்துக் கொண்டிருந்தது.

அம்மாவின் உயிரற்ற உடல் கண்ணாடிப் பெட்டிக்குள் படுக்க வைக்கப்பட்டிருந்தது.

நெடுவாசல் கோவிலில் அன்று கொலுவின் இறுதி நாள் என்பதால், இரண்டு மணிக்கு அம்மா தகனம் செய்யப்பட்டார்.

பெற்றெடுத்த தாயின் தலைப்பக்கமாய் எதிரில் திரும்பி நின்று, பின்பக்கமாய் நெருப்பினை அவர் தலைமாட்டின் மீது வைத்தேன். 

’திரும்பிப் பார்க்காமல் போங்க’ என்று வெட்டியான் வேலை செய்து கொண்டிருந்தவர் சொன்னார்.

வீடு திரும்பினேன்.

என்னைப் பெற்றெடுப்பதற்காக, பாழாய் போன சொத்துக்காக, என் பாட்டி சின்னப்பிள்ளையால் அழிக்கப்பட்டவர் என் தாய் குட்டியம்மாள். அம்மாவுக்கு திருமணம் ஆன போது 20 வயது, அப்பாவுக்கு 50 வயது. அந்தக் கால வழக்கமாம்.

பலருக்கு அம்மாக்கள் சந்தோஷ நிகழ்வுகளாய் இருப்பர். 

என்னளவில் தீரா வலியாக அம்மாவின் நினைவுகள் என் நெஞ்சுக்குள் நிறைந்து கிடக்கிறார். 

* * *


அம்மாவின் இறப்புச் செய்தி 11.04.2022ம் தேதியன்று தினந்தந்தியில் வெளியானது

Saturday, January 11, 2020

அம்மாவின் உயிர்

மனிதனைப் போன்ற சுயநலவாதி இந்த உலகத்திலேயே வேறு எந்த உயிரும் இல்லை. உடலில் ரத்தத்தின் சூடு இருக்கும் வரை அவன் எதையும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. வயதான பிறகு ஞானோதயம் வந்து என்ன புண்ணியம். போனது போனதுதான்.

நண்பரொருவரின் உறவினர்கள் கோவை வடவள்ளி அருகில் இருக்கும் முதியோர்கள் தங்குமிடத்தில் தங்கி, தங்களின் கடைசிக் காலத்தை கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைப் பார்த்து விட்டு வரலாம் என நானும், நண்பரும் சென்றிருந்தோம்.

மதிய உணவு நேரம். எங்களுக்கும் அவர்கள் சாப்பிடும் உணவு கிடைத்தது. சாத்வீக உணவு. பூசணிக்காய் மோர்குழம்பு, உருளைப் பொறியல், டம்ளரில் ரசம் கொடுத்தார்கள். தயிருடன் மோரும். சீரக தண்ணீர் குடிக்க. அப்பளம். பச்சை அரிசிச் சோறு. என்னுடன் சுமார் 25க்கும் அதிகமான, வயதான ஆண்களும், பெண்களும் சாப்பிட்டார்கள். ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளக் கூட இல்லை. என்னை வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  சாத்வீக உணவு எனது ஃபேவரைட். கோவை நேரம் ஜீவா போல இருக்க கொடுத்து வைக்கணும். நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வருவதில்லை.

(பூசணிக்காய் மோர் குழம்பு - படம் உதவி கூக்கிளார்)

என்னுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் முகங்களில் சோகம் கப்பிக் கிடந்தது. மகிழ்ச்சியாக ஒருத்தரைக் கூட பார்க்கவில்லை. என்னுடன் வந்த நண்பரின் உறவினர் தன் மனைவியுடன் தங்கி இருக்கிறார். ஆகையால் அவர் குழந்தை போல சிரித்துப் பேசினார். அவரின் மனைவி அக்மார்க் லட்சுமி தேவி. முகத்தில் அவ்வளவு சாந்தம். ’நல்லா இருங்க, நல்லா இருங்க’ன்னு சொல்லிக் கொண்டே இருந்தார். மனைவியுடன் கடைசிக் காலங்களைக் கழிப்பதுக்கும் குடுப்பினை வேண்டும்.

பேரன் பேத்திகளுடன் விளையாடிக் கொண்டு, ஆசையாக பெற்று வளர்த்த மகனை பார்த்தபடி வாழும் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. கால ஓட்டத்தில் பணம் பூதாகாரமாய் கண் முன்னே நிற்க, உறவுகளைத் தொலைத்து விட்டு, அதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிற வாழ்க்கை முறையில் அம்மா, அப்பாவைப் பார்க்க முடியுமா? எவரோ ஒருவருக்கு வேலை செய்யணும், காசு வரும். சுகப்படுத்தனும் நம்பி வந்தவர்களை. இல்லையெனில் சமூகம் காறித் துப்பி விடும். காசு அளவுகோல் கொண்டு மனிதன் அளக்கப்படுகிறான். வாழ்க்கை எடை போடப்படுகிறது. மனிதனின் நல்லது கெட்டது அதை வைத்துப் பேசப்படுகிறது. காசில்லாத வாழ்க்கை என்பது கனவில் கூட வராது மாமனிதர்களுக்கு.

ஊரிலிருந்து நடு நிசி ஒன்றைரைக்கு போன் வந்திருந்தது. விடிகாலையில் பார்த்தேன். அழைத்தால், ”உன் பிணம் என் வீட்டில் கிடக்கிறது, வந்து தூக்கிட்டுப் போ” என்றார் மாமா. என் மூத்த அக்காவின் கணவர். எனக்கு தாய் மாமா. பிணமென்று சொன்னது என் அம்மாவை. அம்மாவுக்கு மூன்று மகள்கள் வேண்டாத உறவாக அடியேன். அம்மா எப்போதும் மகள்கள் மீது அதுவும் முதல் மகள் மீது பிரியமாய் இருப்பார்கள். முதல் மகளின் பசங்களின் மீது அவ்வாறே. தலைச்சன் பிள்ளை அல்லவா? பாசம் இருக்கத்தானே செய்யும்.

இடையில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். சுமார் 15 வருடத்துக்கு முன்பு, மனைவி கர்ப்பமாக இருந்த போது, காலையில் ஒன்பது மணிக்குத்தான் உணவு தருவார் அம்மா. பால் கூட எட்டு மணிக்குதான். என் அக்காவின் மகள் கர்ப்பிணியாக இருக்கும் போது காலை ஆறு மணிக்கே பால் கறந்து, காய்ச்சி கொடுப்பாராம் அம்மா. மனைவி ஊருக்குச் சென்றிருந்த போது பார்த்து விட்டு என்னிடம் ஆற்றாமையால் சொன்னார். மனைவியிடம் ”அது பேத்தி,  நீ வேறு வீட்டுப் பெண் அல்லவா, அப்படித்தான், இதையெல்லாம் கண்டு கொள்ளாதே” என்று அப்போதைக்குச் சொல்லி வைத்தேன்.

அம்மா ஊரில் இருக்கும் போது கையில் அருவாளால் வெட்டிக் கொண்டார். காயமேற்பட்டு காய்ச்சல் வந்து விட்டது. சமைக்க முடியவில்லை. கடையிலிருந்தும், அக்கா வீட்டிலிருந்து வந்த சாப்பாட்டில் ஏதோ பிரச்சினை. வயித்தால் எடுத்து விட்டது. மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தும் சரியாகவில்லை. டீ ஹைட்ரேட் ஆகி உடல் சோர்வடைந்து விட்டது. டிஸ் எண்ட்ரி நிற்காமல் தொடர்ந்திருக்கிறது.

மாமா வீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். உடம்பு ரொம்ப மோசமாகி விட பயந்து போனார் மாமா. 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் எனக்கு இப்படி ஒரு அழைப்பு. அன்றைக்கே கார் கொண்டு வந்து, என் தங்கை வீட்டில் கொண்டு போய் அம்மாவைப் போட்டு விட்டு வந்து விட்டார். தங்கையாலும் முடியாமல் மறுநாள், பேராவூரணியில் இருக்கும் தர்ஷணா மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். எனக்கு போன். பல வேலைகள் கிடக்க மனதுக்குள் அலாரம் அடிக்க ஆரம்பித்தது.

நானும் நண்பரும் கோவையிலிருந்து கிளம்பினோம். மதியம் 12க்கு பேராவூரணி சென்று விட்டேன். அது எலும்பு முறிவு மருத்துவமனை. அங்கு பெட்டில் குளுகோஸ் ஏறிக் கொண்டிருந்தது. படுக்கையில் புரண்டு கொண்டு உளறிக் கொண்டிருந்தார் அம்மா. அருகில் தங்கை கையைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தார்.

”கிட்னி பெயிலியர் ஆகி விட்டது. இன்றைக்கு இரவு தாங்காது” என்றார் டாக்டர். ரிப்போர்ட் கொண்டு வரச் சொல்லி பார்த்தேன். ரிப்போர்ட் பக்கா நார்மல். டி ஹைட்ரேட் ஆகி இருந்ததைக் கண்டேன். பிபி இல்லை, சுகர் இல்லை, பிற எல்லாம் நார்மல். ஆஹா ஏதோ சமாச்சாரம் போலத் தெரிகிறதே, விட்டு வைத்தால் டாக்டர் நீலகண்டன் முடித்து விடுவார் போல என நினைத்துக் கொண்டு, சில சீன்களை போட்டு விட்டு, கோவைக்கு வந்து விட்டேன். அம்மாவுக்கு அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை. நீர் உணவும், சத்தான உணவும் எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் எனத் தெரிந்தது.

மறு நாள், வீட்டுக்கு அனுப்பி விட்டார் டாக்டர் நீலகண்டன். ஒரு பில் இல்லை. வெறும் டோக்கன். அதில் அமவுண்ட் குறித்துக் கொண்டு, சீல் வைத்து தருகிறார்கள் இந்த மருத்துவமனையில். மக்களே, யாரையாவது முடிக்க வேண்டுமென்றால் இங்கு அழைத்துச் செல்லுங்கள். பரலோக பிராப்தி கேரண்டி. அப்படி ஒரு கைராசி டாக்டர் இவர். (உண்மையில் நடந்த சம்பவத்தை எழுதி இருக்கிறேன். பொய் இல்லை,புரட்டு இல்லை).

வீட்டுக்கு வந்தவுடன் எலும்பு ரசம் வைத்து, சாப்பாடு கொடுக்கச் சொன்னேன் சின்ன அக்காவிடம். கோவையிலிருந்து மீண்டும் ஊருக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றேன். நான்கு நாட்கள் அங்கு இருந்தேன், நேரத்துக்கு உணவு கொடுக்க ஆள் தயாராகி விட்டார். கோவைக்கு அழைத்து வந்து விட்டேன். அவர் பாட்டுக்கு நடக்கிறார். கண் தெரியவில்லை என்றார். அதற்கு சொட்டு மருந்து ஊற்றி வருகிறேன். இப்போது நன்றாகத் தெரிகிறது என்கிறார். நான் சுத்த சைவம். அம்மாவோ அசைவம். இதை மட்டும் தான் என்னால் சரி செய்ய முடியவில்லை. இருப்பினும் 86 வயதுக்கு சைவமே சரியானது என மனதை தேற்றிக் கொள்கிறேன்.

மாமாவுக்கும், அக்காவுக்கும் வயதாகி விட்டது. தங்கையோ அம்மாவுக்கு சிலாக்கியமில்லாத மகள். இரண்டாவது மகளோ எப்போதும் ஏதாவது வைது கொண்டே இருப்பவர். நேரத்துக்குச் சாப்பாடு, குளியல். அவருக்கு அவைகள் தன் மகள்களிடமிருந்து கிடைக்கவில்லை.

அவன் என்ன செய்கிறான், அவன் பொண்டாட்டி சொகுசாத்தானே இருக்கிறாள், கொண்டு போய் வைத்துப் பார்க்கட்டுமே என்ற பேராசை என் உடன் பிறந்தார்களுக்கு. ”இங்கே பாரு கோதை, உன் மாமியாளை இனி இங்கு கொண்டு வந்து விடாதே, என்னால் பார்க்க முடியாது” என கடுமையான உத்தரவு வேறு போட்டிருக்கின்றார்கள் அக்காக்கள்.

அம்மாவுக்குச் சோறிடுவதும், பணி செய்வதும் எவ்வளவு கொடுமையான பாவச் செயல் தெரியுமா?  அந்தக் கொடுமையை மகள்கள் செய்யலாமா? மகன் தானே செய்ய வேண்டும். வேண்டாத மருமகள் இப்போது தாயாய் மாறினாள். எம் மகள்கள் என்னைப் பார்த்துக் கொள்வார்கள் என்று ரகளை செய்த அம்மா, அமைதியாக இருக்கிறார். காலம் சொல்லிய பதிலை அவர் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அவருக்குத் தெரியவில்லை வயோதிகர்கள் காப்பகம் பற்றி.

காலையில் பேரன் பேத்தியுடன் அளாவளாவல், நேரத்துக்கு உணவு, மருந்துகள், குளியல், அமைதியான தூக்கம், பழங்கதைகள் என சுவாரசியமாய் செல்கிறது அவரின் வாழ்க்கை.

மூத்தமகளின் மகன் ”தேவசேனாதிபதி பொங்கலுக்கு வருகிறேன் என்றுச் சொன்னானே வந்து விட்டானா?” என்று நேற்று மனைவியிடம் கேட்டாராம்.

தலைச்சன் பிள்ளையாகப் பிறப்பதுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா?

* * *

Wednesday, September 28, 2016

அன்னபூரணி தாய்


கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் தங்கி விவேகாநந்தா மெட்ரிக் பள்ளியில் கணிணி ஆசிரியராகவும், சாரதா நிகேதன் சயின்ஸ் காலேஜ் ஃபார் விமன் கல்லூரியின் கம்யூட்டர் துறையில் சிஸ்டம் அனலிஸ்ட் மற்றும் அட்மினிஸ்ட்ரேசனாக வேலை செய்து வந்து கொண்டிருந்தேன். சுவாமி ஆத்மானந்தாவிடம் இரண்டு காண்டசா கிளாசிக் கார்கள் இருந்தன. அப்போது அம்பாசிடர் மற்றும் காண்டசாக்கள் மற்றும் மாருதி 800 கார்கள் பிரபலம்.

நானும் சாமியும் அடிக்கடி சாரதா கல்லூரிக்குச் செல்வோம். ஆஸ்ரமத்தில் இருப்போர் கடுப்புடன் பார்ப்பார்கள். அலுவலக கம்யூட்டர் அல்லது பிரிண்டர் அல்லது லேப் கம்யூட்டர் ஏதாவது பிரச்சினையில் இருக்கும். அத்துடன் வாரம் தோறும் கல்லூரிப் பெண்களுக்கு கணிப்பொறி கிளாஸ் எடுக்க வேண்டும். காரைக்குடி அமராவதிப்புதூரில் இருக்கும் சாரதா நிகேதன் பெண்கள் கல்லூரிக்கும் அடியேன் தான் கணிப்பொறியியல் துறைக்கு அட்மின்ஸ். அடிக்கடி சாமியுடன் காண்டசாவில் பயணிப்போம். 


(திருப்பராய்துறை தபோவனம் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர்)

திருச்சி செல்லும் சாலையில் சுவாமி சித்பவானந்தர் அமைத்திருக்கும் திருப்பராய்துறை தபோவனத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். அருகில் இருக்கும் ராமகிருஷ்ண  குடில் வேறு. தபோவனம் வேறு. தபோவனத்தில் இருந்த சித்பவானந்தரின் சீடர் பிரம்மசாரி ராமசாமி தான் குடிலின் நிறுவனர்.

(ராமகிருஷ்ணர் குடில் நிறுவனர் பிரம்மச்சாரி ராமசாமி அடிகளார்)

இரண்டு நிறுவனங்களுக்கும்  அப்போதே ஏதோ பிரச்சினை இருந்தது என்றுச் சொல்லிக் கொண்டார்கள். உண்மையா என்று தெரியவில்லை. சுவாமி சித்பவானந்தரின் இன்னொரு சீடர் தான் சுவாமி ஆத்மானந்தர். கரூருக்கு வந்து பசுபதிபாளையத்தில் ஐந்து பள்ளிகள் மற்றும் சாரதாபுரி எனும் இடத்தில் அமைந்த சாரதா நிகேதன் கல்லூரியையும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். அத்துடன் பெண்கள் கல்லூரியில் சுமார் 150 அனாதை பெண்களையும், ஆஸ்ரமத்தில் சுமார் 100 மாணவர்களையும் ஆதரித்து படிக்க வைத்து, உடை கொடுத்து வளர்த்து வந்தார். 

(சுவாம் ஆத்மானந்தர் - அமராவதிபுதூர் கல்லூரி விழாவின் போது)

சுவாமி சித்பவானந்தர் உயிருடன் இருக்கும் வரையில் பிரச்சினை இல்லை. அவர் காலமானதும் தபோவனத்துக்கும் சுவாமி ஆத்மானந்தருக்கும் பிரச்சினை ஆரம்பித்தது. சுவாமி ஆத்மானந்தர் அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை தபோவனத்தின் பெயரில் தான் பதிவு செய்து வைத்திருந்தார். மேற்படி நிறுவனங்களை பெரிய அளவில் வளர்த்து வைத்திருந்தார். ஆனால் உண்மையான உரிமையாளர்கள் தபோவனத்தினர். சட்டம் அதைத்தான் சொல்லும். அதைத்தான் சொல்லியது.

கரூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு நடந்து அது தபோவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு எழுதியது. சுவாமியைக் கைது செய்து விடும் அளவுக்கு நிலமை தீவிரமானது. ஆசிரமவாசிகள் பரபரப்பாயினர். என்ன நடக்குமோ என்று கவலையடையத் தொடங்கினர். அடியேனுக்கு சுவாமியை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பதற்கு அனுமதி உண்டு. அவர் எந்த வேலையிலிருந்தாலும் அடியேன் நேரடியாக சுவாமியின் அறைக்குச் சென்று விடுவேன். எனக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

சாமியைப் பார்க்கச் சென்றேன். 

“என்னப்பா! ஏதும் வேண்டுமா?” என்றார்.

”சாமி, கைது என்று பேசிக் கொள்கின்றார்களே?” என்றேன். 

சிரித்துக் கொண்டே,”அன்னபூரணி பார்த்துக் கொள்வாள், நீங்க போய் சாப்பிட்டு விட்டு தூங்குங்க” என்றுச் சொல்லி தேங்காய் லட்டு ஒன்றினை எனக்கு கொடுத்தார். 

பரபரப்பாய் இருந்த சுவடு அடுத்த நாள் இல்லை. அவரைக் கைது செய்ய யாரும் வரவில்லை. அன்று சுவாமி சொன்ன வார்த்தைப் பலித்தது.  

மிகவும் குறைந்த விலையில் தமிழகத்தில் உள்ள பல ஏழைகள் தினம் தோறும் வயிறார உணவு உண்கின்றார்கள். பத்து ரூபாய் இருந்தால் போதும் அம்மா உணவகத்தில் வயிறு நிறையச் சாப்பிட்டு விடலாம். ஒரு வெகு சாதாரணமான குடும்பம் வெகு சொற்பமான தொகையில் தங்களின் பசியைப் போக்கி விடலாம். 100 யூனிட் வரை மின்கட்டணம் கூட இல்லை. 

இருபத்தைந்து கிலோ அரிசி இலவசமாய் கிடைக்கிறது. முப்பது ரூபாய்க்கு துவரம் பருப்பு ரேசனில் கிடைத்து விடுகிறது. அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு அரசு தன்னால் முடிந்த வரை எத்தனையோ லட்சோப லட்சம் மக்களுக்கு பசிப்பிணியை தீர்க்கிறது. அதற்கு காரணமாய் இருப்பது நம்ம முதல்வர் அம்மா அவர்கள்.

காமராஜர் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து பெரும் புகழ் பெற்றார். ஆனால் அம்மா ஏழைகளுக்கு மட்டுமல்ல பள்ளிக் குழந்தைகளுக்கும் பல சுவை உணவளித்து வருகிறார். அன்னமிடுதல் என்பது அவ்வளவு சாதாரண காரியமில்லை. பசிப்பிணியை தினம் தோறும் தீர்த்துக் கொண்டிருக்கிறார். அம்மா என்ற சொல் அவருக்கு மட்டுமே பொருந்தும் என்றுதான் சொல்ல வேண்டும்.

அம்மா அவர்கள் வாழும் அன்னபூரணித் தாய். அன்னபூரணித்தாயின் பூரண நல் ஆசியுடன் விரைவில் நலம் பெறுவார் என பிரார்த்தனை செய்து கொள்வோம்.


Saturday, November 15, 2014

கண்ணூ...!

சமீபத்தில் எனது பெரிய மாமா காலமாகி விட்டார். இறந்து கிடந்த மாமாவை பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணீர் பெருக்கெடுத்தது. உழைத்தே உயர்ந்தவர் அவர். சில சடங்குகளுக்காக செல்ல வேண்டியிருந்ததால் டிரைவரை அழைத்துக் காரை எடுக்கச் சொல்லி கிளம்பினேன்.

”அதுக்குள் ஏன் கிளம்புகிறாய்?” என்ற குரல் கேட்டது. திரும்பினேன். மாமாவின் மூத்த பையன். பெரிய மாமா மகனும் நானும் சிறிய வயதில்  பிரிக்க முடியாத தோழர்களாய் இருந்தோம். இடையில் என்னென்னவோ மாற்றங்கள். அவனும் நானும் பேசி பத்து வருடங்களுக்கும் மேலாகி விட்டன.  ஏன் நானும் அவனும் பேசிக் கொள்ளாமலேயே இருந்தோம் என்று யோசித்தேன். கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக யோசித்துப் பார்த்தேன். காரணம் மட்டும் புரியவில்லை. சிறிய வயதில், அறியாமல் செய்யக் கூடிய செயல்களின் பிடிவாதம் எவ்வளவு பெரிய அனர்த்தங்களை உண்டு செய்து விடுகின்றன.  இதனால் என்ன சாதித்து விட்டோம் என்று நினைத்துப் பார்த்த போது வெறுமை தான் மண்டியது. எரிச்சலில் மனசு எரிந்தது. சிறிய வயதில் அந்த காலத்துக்கே உண்டான பிடிவாத குணத்தினால் நாம் எத்தனையோ நல்லவைகளையும், நல்லவர்களையும் இழந்து விடுகிறோம் என்பது நிதர்சனமான உண்மை.

காலம் தான் மனிதர்களுக்கு பெரிய படிப்பினைகளைக் கற்றுக் கொடுக்கின்றன. அவன் முழுமையாகப் படித்து முடிக்கிற போது, அவனைத் தனக்குள் இழுத்துக் கொண்டு விடுகிறது. மீண்டும் வெற்றிடம் !

எனது நண்பரின் 86 வயதான தாயாருக்கு உடல் நிலை சரியில்லை. நண்பரோடு பிறதந்து மூன்று ஆண்கள். பெண்பிள்ளைகள் இல்லையே, நண்பரின் தாயாரை யார் கவனித்துக் கொள்வார்கள் என்ற சிந்தனை. நண்பருக்கோ 50 வயது. இவர்தான் கடைக்குட்டி. நண்பரின் மூத்த அண்ணாவுக்கு 65 வயது இருக்கும்.

நானும் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றோம். மருத்துவமனைக்கு நால்வரில் ஒவ்வொருவரும் முறை வைத்து அம்மாவைப் பார்த்துக் கொள்கின்றனர். எனக்குள் ஆச்சரியம் மண்டியது. நான் அங்கு இருந்த நேரத்துக்குள் பால் வாங்கிக் கொண்டு வந்து ஆற்றி ஊட்டி விடுவதென்ன, வாய் துடைத்து விடுவதென்ன, தலை முடியைக் கட்டி விடுவதென்ன. அடடா என்ன பரிவு. ’கண்ணூ’ என்று நிமிடத்திற்கு ஒரு தடவை அந்த பாட்டி அழைக்க, ‘ஏம்மா? என்ன வேணும்?’ என்று நண்பரின் சகோதரர் கேட்க பத்து நிமிடத்தில் திரும்பி விடலாமென்று நினைத்துச் சென்றவன் ஒரு மணி நேரமாய் அமர்ந்து விட்டேன். 

கலைந்து கிடந்த தாயின் தலைமுடியை நீவி விட்டவர் என்னிடம், ‘என் தம்பி அம்மாவுக்கு அழகாய் தலை சீவி, பின்னலிடுவான்’ என்றார். எனக்கு கண்கள் பனித்தன. 

பெண் பிள்ளை இருந்தால் செத்துக் கிடக்கும் போது தலைமாட்டில் அமர்ந்து அழும் என்பார்கள். பெரிய மாமா இறந்த போது தம்பிக்கள் என்னிடம், ‘உனக்காவது ஒரு பெண் பிள்ளை இருக்கிறது, தலை மாட்டில் உட்கார்ந்து அழ ஆள் இருக்கு’ என்றார்கள். ’ஏன் கவலைப்படுகின்றீர்கள்? அவள் உங்கள் தலைமாட்டிலும் உட்கார்ந்து அழுவாள்’ என்றுச் சொன்னேன். 

ஆண் பிள்ளையானால் என்ன? பெண் பிள்ளையானால் என்ன? வளர்க்கும் வளர்ப்பில் இருக்கிறது. தன் தாயை எந்த வித அசூயையும் இன்றி குழந்தையைப் போல கவனித்துக் கொண்டிருக்கும் அந்த சகோதர்கள் போன்றோரால் தான் மனிதம் இன்னும் உயிருடன் இருக்கிறது. மனித சமூகத்தில அன்பும், பாசமும் என்றைக்கும் அழிவதில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். வீடு திரும்பிக் கொண்டிருந்த போது நண்பரின் தாயாரின் குரல் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

‘கண்ணூ.....!’

Tuesday, July 3, 2012

அம்மா என்றால் அசிங்கம்




மகளை அழைக்கச் சென்று வீடு திரும்பிய மனைவியின் முகம் பேயறைந்தந்தது போல இருந்தது. பள்ளியில் ஏதோ பிரச்சினை போலும் என்று நினைத்துக் கொண்டே விசாரித்தேன். பிரச்சினை பள்ளியிலோ அல்லது குழந்தைகளாலோ அல்ல.

மகளுடன் படிக்கும் தோழியை அழைக்க பாட்டி ஒருவரும் மனைவியுடன் செல்வாராம். நேற்றைக்கு கோவையில் லேசாக தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஆகவே குடை எடுத்துக் கொண்டுதான் பள்ளிக்குச் சென்றார்கள்.

பள்ளி விட்டதும் பாட்டி தன் பேத்தியையும், மனைவி என் மகளையும் அழைத்துக் கொண்டு கேட் தாண்டி நான்கு அடி தூரம் வந்திருப்பார்களாம். பாட்டியின் மகன் காரில் வந்திருக்கிறார். காரில் அவருடன் மனைவி மட்டும் இருந்தாராம். காரை நிறுத்தி தன் மகளை மட்டும் ஏற்றிக் கொண்டவர், பாட்டியை நடந்து வா என்றுச் சொல்லி விட்டுச் சென்று விட்டாராம். பாட்டிக்கு கண்ணில் கண்ணீர் துளிர்த்து நின்றதாம். 

“ஐந்து வயதில் கணவர் இறந்து போய் விட்டார். இவனை படித்து ஆளாக்குவதற்கு இருந்த சொத்தையெல்லாம் விற்று படாத பாடு பட்டு படிக்க வைத்து வேலையையும் வாங்கிக் கொடுத்தேன். என்னதான் சொல்லுங்க, கணவன் இருந்தால் என்னை இப்படி விட்டு விட்டுப் போவாரா? ஏதோ உசிர் இருக்கும் வரை அப்படியே இருந்துவிட்டு போக வேண்டியதுதான்” என்று சொல்லி அழுதிருக்கின்றார்.

என் மனைவி ஏதோதோ சொல்லி சமாளித்து அவரை ஆறுதல் படுத்தி இருக்கிறார். 

ஆசை ஆசையாய் பெற்று வளர்த்து கண்ணுக்குள் வைத்து காப்பாற்றி படிக்க வைத்து, நேரத்திற்கு உணவு கொடுத்து, வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்து வரும் பிள்ளைகளில் நூற்றுக்கு 99 சதவீதம் மேலே கண்ட மகனைப் போலத்தான் இருக்கின்றார்கள்.

ஏன்?

எல்லாவற்றுக்கும் ஒரு பெண் தான் காரணம்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.

எனது குடும்பத்தில் என் சின்னம்மா பசங்க மூவர். என்னுடன் சேர்த்து நால்வர். நால்வரும் ஒன்று சேர்ந்தால் அன்றைக்கு ஒரே கொண்டாட்டம் தான். மட்டன், சிக்கன், முட்டை என்று கூத்தும் கும்மாளமுமாய்த் தான் இருக்கும். 

முதல் குழந்தையின் போது மனைவி வாமிட் எடுத்துக் கொண்டே இருப்பாள். அதை வாங்கிக் கொண்டு போய் வெளியில் கொட்டி தண்ணீர் கொடுத்து, அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருவது நடுத்தம்பி.

மூத்த தம்பி பிரவசத்தின் போது மருத்துவமனையிலேயே என் அம்மாவுக்குத் துணையாகவும், வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு செல்வது என்று இருப்பான். 

இப்படி இருந்தவர்கள் இன்றைக்கு வருடத்திற்கு ஒரு முறை என்னுடன் பேசுவது அரிது. காரணம் அவர்களின் திருமணம்.

சரியாகச் சொன்னால் பெண்கள். மூவரும் மூன்று திசைகள். மெட்டீரியல்ஸ் வாழ்க்கைக்கு அடிமைப்பட்டுப் போன நுகர்வுப் பெண்களாய் வாழ்க்கையில் ஆசைக்கும், நிதர்சனத்திற்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் அற்பங்களாய் இருக்கின்றார்கள்.

வாழ்க்கையின் நிதர்சனம் புரிவது ஐம்பது வயதுக்கும் மேல். அப்போது எவராலும் ஏதும் செய்ய இயலாது. இயலாமையால் வெந்து வெந்து வேதனைப்படத்தான் முடியும்.

பாட்டியின் மகனுக்கும் இதே சூழல் வரத்தான் செய்யும். அப்போது வருந்தி என்ன ஆகப் போகின்றது. சாகின்ற வரையில் தன் மகனைப் பற்றி நினைத்து நினைத்து வேதனையில் அல்லவா அப்பாட்டி இறந்து போகும்? 

கணவன் இல்லையென்றால் மனைவியும், மனைவி இல்லையென்றால் கணவனும் கேட்பாரற்றுப் போவார்கள் என்பதுதான் நிதர்சனம். எத்தனை அன்பாக பிள்ளைகள் இருந்தாலும் அது எதற்குமுதவாது.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்