குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, August 8, 2010

அம்முவும் புஜ்ஜுவும்





அம்முவும், புஜ்ஜுவும் தோழிகள். புஜ்ஜு அம்முவின் பக்கத்து வீட்டுக்கார பெண் குழந்தை. வெகு சூட்டிகையான பெண். அம்முவின் அருமை பெருமைகளை எழுத ஆரம்பித்தால் அது ஒரு அம்முபாரதம் ஆகி விடும்.

அம்மு ஒரு தாதா. புஜ்ஜு ஒரு தாதா. இரண்டு தாதாக்களும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும். வீடே அதகளப்படும். ஞாயிறுகளில் அவர்கள் அடிக்கும் லூட்டிக்கும், கலாட்டாவுக்கும் இறுதிப் பரிசு இவர்கள் அம்மாக்களின் மொத்துகள். அதைத் தொடர்ந்து பஞ்சாயத்து என்று இரவு வரை நீண்டு கொண்டே இருக்கும் இவர்களின் ராஜ்ஜியம்.




கோவை ஹோப் காலேஜ் - காதலர்கள்

நேற்று நானும் எனது நண்பரும் கோவை ஹோப் காலேஜ்லிருக்கும் ஃப்ரூட் லேண்டில் விற்கப்படும் அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதற்காக சென்றிருந்தோம். நல்ல கூட்டம். அரை மணி நேரம் காத்திருந்து சூடான, ஆவியில் வேக வைக்கப்பட்ட சோளப்பிஞ்சை வாங்கிக் கொண்டு காரை ஃப்ரூட் லேண்ட் அருகில் இருக்குமொரு சந்தில் பார்க் செய்து விட்டு பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

இந்த ஸ்வீட் கார்ன் சாப்பிட வெகு சுவையாக இருக்கும். பக்க விளைவுகள் இல்லாதது. ஆனால் இதன் மேல் உப்பையும், வெண்ணெயையும், லெமன் கலந்த மிளகாய்பொடியையும் தடவி தருவார்கள்.அதைத் தவிர்த்து விட்டுச் சாப்பிட்டாலும் சுவை அருமையாக இருக்கும்.

எங்கள் காருக்கு முன்னால் ஒரு மாருதி கார் பார்க் செய்யப்பட்டிருந்தது. காரின் சன்னல்கள் லேசாக திறந்து வைக்கப்பட்டிருந்தன. நண்பர் அதைக் கவனித்து விட்டு என்னிடம் காருக்குள் என்னவோ நடக்கிறது என்றார். மறந்து விட்டுச் சென்றிருப்பார்கள் என்று சொல்லி விட்டு கார்னில் மூழ்கி விட்டேன்.

சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்த போது கார் கதவு திறந்து ஒரு பெண் இறங்கினாள். நண்பர், சார் அங்கே பாருங்க என்று அலறினார். அந்தப் பெண் எங்கள் காருக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த காருக்குச் சென்றார். நல்ல விளக்கொளியில் அவரைக் கவனித்தபோது திருமணமான பெண் என்று தெரிந்தது. ஏன் தவறாக நினைக்க வேண்டுமென்று சொல்லி அந்தப் பெண்ணின் உறவுக்காரராக இருக்கும் என்று நண்பரிடம் சொன்னேன். அதற்கு நண்பர் என்னைப் பார்த்து நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்தார்.

அந்தப் பையனை பாருங்க என்றார். கல்லூரியில் படிக்கும் பையன் அவன். காரின் பின் சீட்டிலிருந்து டிரைவர் சீட்டுக்கு மாறி காரை எடுத்துக் கொண்டு சென்றான். அந்தப் பெண்ணும் தன் காரை எடுத்துக் கொண்டு சென்றார். இதெல்லாம் நடந்த நேரம் இரவு 7.30க்கு.

நண்பரிடம் இதுவும் ஒரு காதல் தான் என்றேன். தவறாகச் சொல்கின்றீர்கள், இதற்குப் பெயர் கள்ளக்காதல் என்றார்.

கள்ளக்காதல், நல்லகாதல் என்று காதலில் இன்னும் எத்தனை வகைகள் இருக்கின்றனோ தெரியவில்லை. வாழ்க்கையின் போக்கு சிலருக்கு சிலவற்றைக் கற்றுக் கொடுக்கும். அது மேற்படிச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் கிடைக்கும்.

வாழ்க தமிழ் சமுதாயமும், கலாச்சாரமும்

- அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்

Wednesday, August 4, 2010

அன்றும் இன்றும்


பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது எனது தோழனும், எங்கள் வீட்டு விவசாய வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த சந்திர போஸுக்கு கல்யாணம் பேசிக் கொண்டிருந்தார்கள். பெண் பார்த்து அனைவருக்கும் பிடித்து விட்டது. வீட்டு வாசலில் மாமா, தாத்தா, அம்மா, அக்கா, போஸ் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். நான் அவனிடம் சொன்னேன். போஸு கல்யாணம் முடித்தவுடன் உன் பொண்டாட்டியை கொண்டு வந்து இங்கே விட்டு விட்டு வீட்டுக்குப் போயிடு என்று அவனைக் கலாட்டா செய்தேன். அவனும் சரிடா என்று சொல்லி விட்டான்.

கொஞ்ச நாட்களில் திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்தான். நான் வாசலில் சேரில் அமர்ந்திருந்தேன். அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு என் அருகில் வந்தனர்.

வந்தவன், தங்கம், நான் கிளம்புறேண்டா, அண்ணி கையை பிடித்து என் கையில் கொடுத்து, நீயே பாத்துக்க என்று சொல்ல வெட்கத்தில் நெளிய ஆரம்பித்தேன். சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரி சிரி என சிரிக்க ஆரம்பித்தனர். அண்ணியோ ஒரு படி மேலே போய் என்னங்க, ஒன்னும் பேச மாட்டேங்குறீங்க என்று சொல்ல வெட்கத்தில் எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

அன்றைக்கு சரியான கலாட்டா.

இருபத்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஓடி விட்டன. போஸின் பையன் இஞ்சினியரிங் படிக்கப் போகிறான். பெண்ணும் படித்துக் கொண்டிருக்கிறாள். எனக்கு திடீரென்று பலா பிஞ்சு சாப்பிடனும் போல இருக்க, அவனுக்கு போன் போட்டேன். அண்ணி வாய்ஸ் கேட்டது. என் குரல் கேட்டவுடன் அடையாளம் தெரியாமல் போஸிடம் கொடுத்து விட்டார்கள்.

டேய் போனைக் அங்கே கொடுடா என்றேன். அண்ணி வாங்கிப் பேசினார்கள்.

என்ன அண்ணி, அப்படியே தான் இருக்கின்றீர்களா? இல்லை வயதாகி விட்டதா என்றேன். ஏன் நீங்களே வந்து பாருங்களேன் என்றார். நீங்க அப்படியே இருந்தா, வந்து கூட்டிக்கிட்டு வருகிறேன். என்னுடன் வருகின்றீர்களா என்றேன். அவரும் உடனே கிளம்புன்னு சொல்லுவாரு, நீங்க வாங்க உங்க கூட வந்துடுறேன் என்றார். சிரி சிரியென்று சிரித்தேன்.

அருகில் அமர்ந்திருந்த என் மனைவி, உங்களுக்கு ரொம்பவும் தைரியம் தான் என்றாள். அவ்ளுக்கு எங்கே தெரியப்போகிறது எங்களைப் பற்றி?

போஸிடம் பலா மோசு அனுப்பி வை என்றுச் சொன்னேன். இப்போ எங்கேடா போறது என்றான். அம்மாகிட்டே சொன்னேன், அவங்க உன்னிடம் சொல்லச் சொன்னாங்க, சொல்லிட்டேன் என்றேன். எங்காவது பிடித்து அனுப்பி வைப்பான்.

எனது உயிரோடு கலந்து, என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போஸ் அடுத்த பிறவியில் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன்.

* * * * *

Tuesday, August 3, 2010

கோவைக்கு வந்த முதல்வரும் இந்திய ஜன நாயகமும்


மதியம் பனிரெண்டு மணிக்கு காந்திபுரம் செல்ல வேண்டிய வேலை இருந்ததால் ட்ரெண்டியில் சென்று கொண்டிருந்தேன். நேற்றைக்கு சற்றே வெயில் கடுமையாக இருந்தது. குளிர் காற்று வீசினாலும் வெயிலின் சூடு உடம்பிலேறி வியர்வை பெருகியது. என்னடா இது கோவைக்கு வந்த சோதனை என்று வெயிலை நொந்து கொண்டு எரிச்சலுடன் காந்திபுரம் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பத்து நிமிட நேரம் வெயிலில் நிற்க முடியவில்லை. சோர்வும், எரிச்சலும் ஒரு சேர வந்தன. மனதில் அயர்ச்சியும் ஏற்பட்டது.

இள நீர் கடையில் செவ்வெளநீர் ஒன்றை பருகினேன். கடைக்காரர் புன்னகை முகத்தோடு பேசினார். வெயில் ரொம்ப போலிருக்கு என்றேன். அடுத்த வார்த்தையாக அயோக்கியப்பயல்கள் அதிகம் சார் அதனால் தான் வெயில் இப்படிக் கொளுத்தி எடுக்கிறது என்றார். அயோக்கியப் பயல்களுக்கும் வெயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

அவினாசி சாலை முழுதும் துடைத்து வைத்தாற்போல இருந்தது. இருபக்கமும் வழி நெடுகவும் காவல்துறையினர் பத்தடிக்கு ஒருவராய் வெயிலில் நின்று கொண்டிருந்தனர். முதல்வர் வருகிறார் என்று சொன்னார்கள். நல்ல வேளையாக ஒருபக்கம் போக்குவரத்துக்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால் மறுபக்கம் சுத்தமாய் நிறுத்தி விட்டார்கள்.

முதல்வர் வந்தால் அவர் பாட்டுக்கு அவர் வேலையைச் செய்வார். நீங்கள் எதற்கு இப்படி வேகாத வெயிலில் நின்று கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்கத் தோன்றியது. கேட்க முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட அயர்ச்சியும், எரிச்சலும் அவர்களுக்கும் ஏற்படும் தானே என்று நினைத்தேன். ஒருத்தருக்காக இத்தனை பேர் வெயிலில் நிற்கின்றார்களே இது தான் மக்களாட்சியா என்று தோன்றியது.

அரை மணி நேரம் அவினாசி, மசக்காளிபாளையம் சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். அத்தனை வண்டிகளும் உறுமியபடியே நின்றன. வெயிலும், டீசல் பெட்ரோல் புகையும் சேர்ந்து கருக்கி எடுத்தன. தீங்கு விளைவிக்கும் புகையினை சுவாசித்துக் கொண்டிருந்தோம். முதல்வர் பத்திரமாய் ஹோட்டலுக்கு சென்று சேர எத்தனையோ பேரின் உடலாரோக்கியம் கெட்டது.

ஏன் நிற்கிறோம் என்று யோசித்தேன். இந்திய ஜன நாயகத்தின் காரணமாய் நிற்கிறாய் என்றது மனது.

உண்மைதானே?


* * * * *

Monday, August 2, 2010

மனிதர்களுள் மாணிக்கங்கள் - குமார்





கோவை மசக்காளிபாளையத்தில் சில நண்பர்களுடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். சில்லிட்ட காற்று உடம்பைத் தழுவ அந்தச் சமயத்தில் சூடாக ஏதேனும் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற நினைப்புடன், அருகிலிருந்த பேக்கரியில் லெமன் டீ ஆர்டர் செய்தோம்.

கம கம வாசனையுடன் லெமன் டீ சாப்பிட்டு விட்டு, எதிர்ப்புறமாக இருந்த அகண்ட சாலையில் காருக்குள் அமர்ந்து கொண்டு சுவாரசியமாய் பேசிக் கொண்டிருந்த போது, மீன் வறுவல் வாசத்தை, காற்று எங்களிடம் கொண்டு வந்தது.

ஒரு தள்ளுவண்டியில் மீன் வறுத்துக் கொண்டிருந்தார்கள். சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று தட்டுகள் நிறைய மீனை வறுத்தவர், அந்த எண்ணெயை அருகில் இருந்த சாக்கடையில் கொட்டினார். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. என்னடா இது உலக அதிசயம் என்று எண்ணி அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அதற்குள் நண்பரொருவர் ஒரு தட்டு வறுவல் மீனை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

சார் என் கடைக்கு நிறைய கஸ்டமர்ஸ் இருக்காங்க. சின்னப் பிள்ளைகள் நிறைய பேர் வருவார்கள். இரண்டு லிட்டர் பாமாயிலை மீன் வறுத்தவுடன் கொட்டி விடுவேன். மேலும் மேலும் எண்ணெய் சேர்த்து வறுப்பது கிடையாது. என்னால் பிறரின் உடலுக்கும், குழந்தைகளின் நலத்துக்கும் தீங்கு நேரக்கூடாது என்ற எண்ணத்தில் தான் சார் அடிக்கடி எண்ணெயை மாற்றுகிறேன் என்றார்.

ஆச்சர்யம். மீந்து போன பொருட்களை மறு நாள் சூடாக விற்கும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களை பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாய் வெளியிட்டு மகிழ்வார்கள். கால்வதியான மருந்துப் பொருட்களை விற்பவர்களும், காலாவதியான உணவுப் பொருட்களை விற்கும் பன்னாட்டு விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு மிகச் சிறந்த தொழிலதிபர்கள் என்று அவார்டுகளை வழங்கும் நமது அரசாங்கம். வியாபாரம் என்ற பெயரில் மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற கொலைகாரர்கள் உலவும் இந்தப் பூமியில் தன்னை நம்பி சாப்பிட வரும் மனிதனின் நலத்தில், கவனம் வைத்துச் செயல்படும் மிஸ்டர் குமார் என்பவர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்பதை எண்ணி நாம் மகிழ்ச்சி அடைவோம். ஏனென்றால் இவர்களைப் போன்றவர்களால் தான் இன்னும் மனித நேயம் மனிதர்களின் உள்ளத்தில் இருப்பது தெரிய வருகிறது.

அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்