பயணம் என்றால் என்னவென்று தெரியும் தானே? ஒரு இடத்துக்குச் செல்வது. எல்லோருக்கும் பயணம் செல்வது பிடித்தமானது. ஒரே இடத்தில் இருப்பதை விட புதிய புதிய இடங்கள், மனிதர்களைப் பார்ப்பது என்பது மனதுக்குள் மலர்ச்சியை உண்டாக்கும். அலுத்துச் சலித்துப் போன ஒரே மாதிரியான வாழ்க்கையில், இவ்வகையான பயணங்கள் உற்சாகத்தை தரக்கூடியவை. சில பயணங்களால் வாழ்க்கையே மாறிப் போய் விடும்.
ஒரு சில பயணங்கள் மனதில் பதிந்து விடும். அப்படியாகத்தான் எனது இந்தப் பயணமும் இருந்தது.
விடிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து குளித்து, உடைகள் உடுத்தி, மனைவியுடன் கோவை ஏர்போர்ட் சென்றேன். வீட்டிலிருந்து 45 கிலோ மீட்டர் தூரம் விமான நிலையம். இடையில் டிராபிக் என்றால் போச்சு என்பதால் சீக்கிரம் கிளம்பி விடுவதுண்டு.
ஏர்போர்ட்டில் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். காலை 6.10க்கு இண்டிகோ பிளைட்டில் சென்னைக்குப் பயணம். தனியாக வழக்கம் போல.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக விமானப் பயணங்களில் மனதில் பதிந்து விடுமளவுக்கு பிரமாதமான நிகழ்வுகள் கொண்ட நினைவுகள் ஏதுமில்லை. பல சினிமாக்காரர்களைப் பார்த்திருக்கிறேன். அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன். இவர்களை ஒருவர் கூட கண்டு கொள்ளவே மாட்டார்கள். செத்த பாம்பு போல சீட்டில் உட்காந்திருப்பார்கள்.
தமிழர்கள் பார்த்தாலே அலறிக் கொண்டிருப்பார்களே சினிமா நடிகைகள் - அவர்களை பலமுறை பயணத்தில் பார்த்திருக்கிறேன். யாராவது ஓரிருவர் செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். அவ்வளவுதான் தான்.
ஒரு சிலருக்கு விமானப்பயணத்தால் பெருமை பிடிபடாது. மன்னர்கள் போல பார்வைகளை பறக்க விடுவார்கள். ஒரு சிலர் விதியேன்னு உட்கார்ந்திருப்பார்கள். இதில் குழந்தைகள் இருந்தால் - அது என்னென்ன சேட்டை செய்யுமென முன்பே முடிவு செய்யமுடியாது. ஆனால் கேபின் க்ரூ - விமானப் பணிப்பெண்கள் (வேலைக்காரிகள்) பாடுதான் பெருசு. குழந்தையின் கன்னத்தில் தட்டிச் சிரிக்க வேண்டும். அதெப்படி இப்படி ஒரு டெம்ப்ளேட் சிரிப்பை முகத்தில் தேக்கி வைத்திருக்கிறார்களோ எனத் தெரியவில்லை. காசுன்னா எல்லாச் சங்கடங்களையும் சகித்துக் கொள்ளத்தானே வேண்டும்.
பஸ்ஸில் உரசினால் பட்டையைக் கிளப்பி விடுவார்கள். விமானத்தில் வேறு வழியே இல்லை. உரசல் இருந்தே ஆகும். எனக்கு அல்ல நண்பர்களே. என்னைக் கொண்டு போய் விஐபி சீட்டில் உட்கார வைத்து விடுவார்கள். ஒன்றையும் பார்க்க முடியாத ராசியில்லாதவன்.
ஒரு முறை ஹைதராபாத் சென்ற போது ஒரு இளம் பெண் உட்கார்ந்திருந்தார். சரியான மப்பு போல. சரக்கு வாடை. சீட்டில் மல்லாந்து கிடந்தது. இந்தப் பக்கமாய் ஒரு வயதான அரசு அதிகாரி பெண். இந்தம்மா சீட்டில் நெட்டைக் குத்தலா உட்கார்ந்திருந்தார். சேலை என் மீது பட்டு விட்டால், கற்பு பறிபோய் விடுமென பதைப்பில் இருந்தார் போல. அவ்வப்போது உடைகளை ஒதுக்கிக் கொண்டிருந்தார். நடுவில் நான். அவ்வளவுதான் என் அதிர்ஷடமெல்லாம்.
பேசக்கூட முடியாது. கெத்தாய் இருக்கனுமே. யாரும் தவறாய் நினைத்து விடக்கூடாதே. இப்படி பல கட்டுப்பாடுகள் நமக்குள்ளே இருக்கும். உடல் நமது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே?
எல்லாரும் எல்லாவற்றையும் பேசவும், செய்யவும் முடியாது. மரணம் வரையிலும் இப்படித்தான் போகும். படிக்க கஷ்டமாக இருக்குமே? அதுதான் எதார்த்தம்.
செக் இன் செய்து,போர்டிங் பாஸ் பெற்றுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அதிசயம் ஆனால் உண்மை. அன்றைய நாளில் சுமார் 50 பேர்தான் சென்னைக்கு சென்றோம்.
கேபின் க்ரூ நல்லபடியாக கவனித்துக் கொண்டார்கள். 😉
முகங்களைப் பார்ப்பது எனக்கு நிரம்பவும் பிடிக்கும். ஏனெனில் நானொரு நாவல் எழுத முயன்று கொண்டிருக்கிறேன். அந்த நாவலில் வரும் ஹீரோயினுக்கு என் மனதில் ஒரு வடிவம் கொடுத்திருக்கிறேன். அந்த வடிவம் கொண்ட ஒரு பெண் முகத்தை நானும் கடந்த நான்கைந்து வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை.
ஆனால் இந்தப் பயணம் வேறொரு முகத்தை எனக்குக் காட்டியது. நான் விரும்பியது ஒன்று, கிடைத்தது ஒன்று.
கருங்குயிலுக்கு தோகையில்லை ஆனால் இனிய குரலுண்டு.
கொள்ளை அழகுடைய தோகை கொண்ட மயிலுக்கு இனிய குரலில்லை.
இப்படித்தான் இயற்கை உயிர்களைப் படைத்திருக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்குமென நினைத்துப் பார்க்கிறேன். விடை தெரியவில்லை.
ஒரு குறை, ஒரு நிறை - முழு வடிவம். இரவு பகல் போல.
ஆனால் இரவும் பகலும் உயிர்களுக்குத்தானே தவிர இயற்கைக்கு இல்லை அல்லவா? காலம் என்பதும் இயற்கைக்கு இல்லை. இயற்கை படைத்திருக்கும் உயிர்களுக்கு மட்டுமே காலம்.
சரி போகட்டும் வேதாந்தம்.
மீட்டிங்க் முடித்து விட்டு அரக்கப் பரக்க மீண்டும் கோவை நோக்கி கிளம்பினேன். கத்திபாரா பாலம் அருகில் கையில் புறாவோடு நின்றிருப்பாரே நேரு அவரைச் சுற்றிலும் பாலங்கள். பாலங்களுக்கு கீழே அப்டவுன் என்றொரு நிறுவனத்தைப் பார்த்தேன். அரசிடம் உபயோகமாய் இல்லாத இடங்களில் பொழுது போக்கு மற்றும் உணவகம் நடத்துகிறார்கள் போல.
அங்கே இருந்த ஒரு உணவகத்தில் இரண்டு சப்பாத்தியும், சைவ குருமாவும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு நான்கரை மணி வாக்கில் போர்டிங்க் பாஸுடன் கேட் நம்பர் 101 முன்னால் இருந்த சேரில் உட்கார வைக்கப்பட்டேன்.
விமானங்கள் சிட்டுக் குருவி போல பறந்து கொண்டிருந்தன. ஆட்கள் ஏறினார்கள், இறங்கினார்கள். சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
இடது பக்கமாய் ஒரு குரல் கேட்டது.
திரும்பினேன்.
அவளைப் பார்த்தேன்.
அச்சு எடுத்தால் போல இதே முகம் தான். ஆனால் ஒரு சில மிஸ்ஸிங்க். நெற்றிப் பொட்டில் குங்குமம், மூக்கில் லோலாக்கு. கத்தரிப்பூ நிறத்தில் பார்டர் போட்ட காட்டன் சேலை.
வயது முப்பத்தைந்து இருக்கும்.
அவள் என்னைப் பார்த்தாள்.
என்னுடன் விமானத்தில் பயணித்தாள்.
என் அதிர்ஷ்டம் தான் எனக்கு முன்னே நிற்குமே.
நான் விஐபி சீட்டில், அவளோ விமானத்தின் பின் சீட்.
அந்தக் கண்களுக்குள் சிறை கொண்ட மனதைப் பிடித்து, எதார்த்தத்துக்கு கொண்டு வர இந்த நொடி வரை முயன்று கொண்டிருக்கிறேன்.
அந்தக் கண்கள்.
பாரசீக கவிஞன் சாதி ஷிராசி எழுதினானே இப்படி - ஒரு வேளை அவனும் என்னைப் போல கண்களைப் பார்த்திருப்பானோ???
நீ என்னை விட்டுப் பிரிந்து சென்றபோது,
என் கண்கள் உன்னையே பின்தொடர்ந்து வந்தன.
இப்போது என் கண்கள் வெறும் கண்ணீரால் மட்டுமே நிரம்பவில்லை,
உன் நினைவுகளால் உறைந்து போயிருக்கின்றன
என் பிரியத்துக்குரிய கவிஞன் ஜலாலுதீன் ரூமியின் கவிதை இதோ கீழே
உன் கண்களை மூடு,
அப்போதுதான்
உன்னால் இதயத்தின்
கண் கொண்டு பார்க்க முடியும்.
பயணங்கள் முடிவதில்லை.
அவளை நான் இனி பார்க்க முடியாது. எனக்கு அது தேவையுமில்லை. அந்த நொடியில் நிகழ்ந்த ஒரு பார்வை. அவ்வளவுதான் வாழ்க்கை.
வாழ்க்கையில் எல்லாமே துன்பம் தான். ஏதோ ஒரு நொடியில் ஏற்படும் புன்னகையைத்தான் நாம் இன்பம் என்கிறோம்.
அந்த ஒரு நொடிக்காகத்தான் வாழ்கிறோம். அந்த வாழ்க்கை எப்போதும் துன்பமே..
புரியாதவர்கள் விலகி விடுங்கள். புரிந்தவர்கள் புன்னகை செய்வார்கள்.
அது இந்த நொடியில் மலரட்டும்.
வளமுடன் வாழ்க.











