குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label குறத்தி. Show all posts
Showing posts with label குறத்தி. Show all posts

Saturday, February 15, 2020

கணவனை முந்தானைக்குள் முடிந்து கொள்வது எப்படி? (18க்கு மேல் மட்டும்)

நேற்று காலையில் ஒரு வேலையாக வெளியில் வந்த போது சாலையின் நடுவில் அணில் ஒன்று அடிபட்டு துடித்துக் கொண்டிருந்தது. சட்டென்று கடந்து விட்டேன். மனது கேட்கவில்லை, உயிரோடு இருந்தால் தூக்கி அந்தப் பக்கமாய் விட்டு விடலாம். இல்லையென்றால் வீட்டுக்கு எடுத்துக்கு போய் கோதையிடம் திட்டு (சுகமோ சுகம்) வாங்கலாம் என நினைத்துக் கொண்டு வண்டியைத் திருப்பிக் கொண்டு அதன் அருகில் வந்தேன். 

(அது என்னவோ தெரியவில்லை, என் மனையாள் கோபம் கொள்ளும் போது வெகு அழகாய் இருக்கிறாள். நானும் மகளும் அவளை காலையில் ஏதாவது சொல்லி வம்பு இழுப்பதும், அவள் கோபம் கொள்வதும் ஊடல் கொண்ட அவளுடன், பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றவுடன் முயங்குவதும் இப்படியே செல்கிறது வாழ்க்கை. இப்போதெல்லாம் அவள் என் பெண் நண்பர்களைப் பற்றி அதிகம் விசாரிக்கிறாள். பெண்களுக்குச் சந்தேகம் உடன் பிறந்த தமக்கை போல)

வண்டி செல்லும் போது உருவான காற்றினால் அதன் வால் ஆடியதைக் கண்டு அது உயிரோடு இருப்பதாய் நினைத்து விட்டேன். 

அய்யகோ.. !

அது செத்துப் போய் விட்டது.

சட்டென்று மனதுக்குள் கவிழ்ந்த பாரத்தால் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது. என் படுக்கை அறையின் சன்னலோரம் தினமும் ஒரு அணில் கொய்யாமரத்தில் குதித்து ஓடி, சுவர் மீது உட்கார்ந்து தலையை அப்படியும், இப்படியுமாய் திருப்பிக் கொண்டிருக்கும். எனக்கு அவன் நினைவில் வந்து விட, உள்ளம் துடியாய் துடித்தது. அவனாக இருக்குமோ? இருக்காது என ஓரமாய் துளிர்த்தது நம்பிக்கை. அணில் என்றவுடன் ராமர் நினைவுக்கு வந்து விடுகிறார்.

ராமபிரானுக்கு மனிதர்கள் எல்லாரும் சேர்ந்து கோவில் கட்ட நீதியை குழியில் போட்டு புதைத்த கதையை பாரதம் கண்டிருக்கிறது. அடியேனுக்கு தர்மம் மட்டுமே கண்ணில் தெரியும். பிறவெல்லாம் என்னைப் பொறுத்தவரை ஒன்றுமில்லாதவை. ஆகவே அயோத்தியில் ராமர் கோவில் என்பது தர்மத்திற்கு விடப்பட்ட சவால் என்றே கருதுவேன். அவர்கள் கோவிலை இடித்தார்கள் ஆகையால் நாம் மீண்டும் கட்டுகிறோம் என்ற அபத்தவாதம் ஏற்கவியலாது.

ஒரு அதர்மத்துக்கு இன்னொரு அதர்மம் என்றால் உலகில் ஒருவர் கூட உயிரோடு இருக்க முடியாது. 

ராமபாணம் துளைத்த வாலி தன் நெஞ்சிலிருந்து பிடுங்கிய அம்பில் ராமன் பெயர் கண்டு, அவனுக்குள் எழும்பிய ஆயிரமாயிரம் கேள்விகள் எனக்குள் உண்டு.  தர்மத்தின் பாதை சூட்சுமமானது என்பார்கள். அதன் சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டால் விடை கிடைக்கும். ஒரு சிறிய மறைப்பு மட்டுமே என் முன்னால் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது மறைந்து விட்டால் மனித வாழ்க்கையின் சூட்சுமம் விளங்கி விடும். இன்ப துன்பம் பற்றிய காரண காரியங்கள் தெரிந்து விடும். அது எப்போது நடக்குமோ தெரியவில்லை.

நெடுவாசல் (ஹைட்ரோகார்பன் நெடுவாசல்) மாணிக்கதேவர் (என் அப்பா) மழை பெய்யவில்லை என்றால் இன்றும் என்னோடு வைத்திருக்கும் ராமாயாணம் புத்தகத்தை வாசிப்பாராம். வாசித்து முடிக்கையில் மழை பெய்யும் என்று அப்பாவின் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள். அது பழங்கதை. என் அப்பாவை ஒரு நாள் கூட அப்பா என்று அழைக்கவில்லை. அப்படி ஒரு பாசம் எனக்கும் என் அப்பாவுக்கும். இனிமேல் எனக்கு இனியொரு அப்பாவா வரப்போகிறார்? அப்பாவின் பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல், என் காலம் முடிந்ததும் இந்த உலகத்தை விட்டுப் போகப் போகிறேன். எல்லோருக்கும் கிடைத்த அப்பாவின் அன்பு எனக்கு கிடைக்காமலே போய் விட்டது. அம்மா? அன்பு????? அடியேன் இந்த விஷயத்தில் துரதிர்ஷ்டத்தின் குழந்தை.

ஆனால் என் குழந்தைகளுக்கு எந்தக் குறையும் வைப்பதில்லை. வைக்கவும் மாட்டேன். என் மகனோ, மகளோ இதைப் போன்ற பதிவு எழுதக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறேன்.



ராமர் மீது அதீத பக்தி கொண்ட அணில் ஒன்று, லங்காவுக்குச் செல்ல வானரங்கள் பாலம் கட்டிக் கொண்டிருந்த போது, அவருக்கு உதவ முடிவெடுத்து, கடலுக்குள் விழுந்து நனைந்து, கடலோரம் சென்று உடலை மணலில் பிரட்டி, தன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் மணலை பாறைகளின் இடுக்குகளில் உதிர்த்துக் கொண்டிருந்ததாம். அதைக் கண்ட ராமன் அதை அன்போடு கையில் எடுத்து அதன் முதுகில் தடவிக் கொடுத்தாராம். அதனால் அதன் மீது ராமர் கோடு விழுந்ததாம் என்றுச் செவி வழிக் கதை ஒன்று உண்டு. 

அணில்கள் சத்தம் ஒரு வித கீச் குரலில் அபஸ்வரம் மாதிரி இருக்கும். இப்போது தாளம், சுருதி,லயமில்லாமல் வரும் சினிமா பாடல்கள் போல. அதன் சுறுசுறுப்புக்கு இணையாக வேறு எந்த பிராணியையும் சொல்ல முடியாது. இந்த அணில்களை குறவர்கள் கவட்டியால் அடித்து குடலைப் பிடிங்கி தோளில் தொங்க வைத்துக் கொண்டு செல்வதை சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.

எனக்கு திடீரென்று மஞ்சு நினைவுக்கு வந்து விட்டாள். மஞ்சு மஞ்சளாய் ஜொலிக்கும் குறத்திப் பெண். வாரா வாரம் கீரமங்கலத்திலிருந்து ஊசி,பாசி விற்க வருவாள். வீட்டுக்கு தவறாது வருவாள். அடியேன் அவளைப் பார்ப்பதற்காகத் தவமாய் தவமிருப்பேன். பழைய சோறு போட்டுக் கொடுப்பார்கள். ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு, அவள் கஞ்சி சோற்றினை அள்ளிச் சாப்பிடும் அழகே அழகு. அவளை விட்டு ஒரு நொடி கூட அகல மாட்டேன். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. குட்டைப்பாவாடையில் அவளின் நடை அழகு சுண்டி இழுக்கும். இடையில் நெளிந்து செல்லும் தாவணி அவளின் முன்னழகை மறைக்க முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கும். மஞ்சள் கிழங்கு போல நிறம் அவளுக்கு. 

அவளின் கணவன் அவளை விட்டு விட்டுச் சென்று விட்டானாம். நான் அவளிடம் கேட்டேன், ”என்னைக் கட்டிக் கொள்கிறாயா?” என. சிரித்தாள். முல்லைப் பற்களின் வரிசையில் மனது சொக்கிப் போகும். கன்னத்தில் விழும் குழியில் இதயம் விழுந்து துடித்துக் கொண்டிருக்கும்.

”உன் அம்மாவும், அக்காக்களும் உயிரோடு என்னைக் கொளுத்தி விடுவார்கள்” என்றாள். கல்லூரிக்குச் செல்லும் முன்பு ஒரு வருடம் வீட்டில் இருந்த போது அவளின் வாரா வாரம் வருகை நின்றதே இல்லை. கல்லூரிக்குச் சென்ற பிறகு இரண்டொரு முறை அவள் தங்கி இருந்த குறவர் குடிசைகளுக்குச் சென்று அவளைத் தேடினேன். கிடைக்கவில்லை.


நான் நடப்பதாக இருந்திருந்தால் அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தே சென்று இயமலைப் பக்கமாய் குடிசையைப் போட்டுக் கொண்டு அவளை விட்டு அகலாமல் அவளுடனேயே இருந்து இன்பமாக வாழ்ந்து இருப்பேன். வீட்டில் இரண்டு மணி நேரம் இருப்பாள். அம்மா ஏதாவது வாங்குவார்கள். தங்கைக்கு கண்மை, கிளிப் என. சோகத்துடன் செல்வாள்.  எனக்கோ கரையில் தூக்கிப் போட்ட மீனாய் உள்ளம் கிடந்து துடிக்கும். அவள் வரும் நாளன்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருப்பேன். அந்த இரண்டு மணி நேரம் இருக்கிறதே, அதைப் போல நாட்கள் இனி என்றும் வரப்போவதில்லை. 

“மஞ்சு, நீ இப்போது எங்கே இருக்கிறாயோ தெரியவில்லை. உன் மீது அறியா வயதில் நான் கொண்ட காதல் இன்னும் என் நெஞ்சில் கல்லாய் சமைந்து கிடைக்கிறது. மீண்டும் மனிதனாய் பிறந்து உன்னோடு சேரும் நாள் வருமா எனத் தெரியவில்லை. உன் நினைவுகளுடன் நான் நடத்தும் அபத்தமான நாடகத்தின் விளைவைப் பார்த்தாயா மஞ்சு. எதையோ எழுத வந்து உன்னைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். உன் அழகிய முகத்தில் என்றும் ஈரமாய் தெரியும் உன் விழிகளின் கருவிழிக்குள் சென்று விட இதயம் துடிக்கிறது மஞ்சு. உன் அழகான மை பூசிய கண் இமைக்குள் மறைந்து போய் விட துடியாய் துடித்துக் கொண்டே இருக்கிறது மனசு மஞ்சு”

”மஞ்சு...! மஞ்சு....! உன் மீது கொண்ட நான் கொண்ட காதலால், என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை அன்பே. உன் நினைவுகளுடன் உள்ளம் கரைந்து போய் விட்டது.”

அன்பு நண்பர்களே தலைப்பின் கதையை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்.