குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label திமுக. Show all posts
Showing posts with label திமுக. Show all posts

Tuesday, February 27, 2024

பிரசாந்த் கிஷோர் மற்றும் புதிய தலைமுறை டிவி

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. டிவி, யூடியூப்பர்கள், செய்திதாள்கள், பத்திரிக்கைகள், உதிரி புதிரி கட்சிகளின் மாநாடுகள், சாதி வீதி கட்சிகளின் பேட்டிகள், கட்சித் தாவல்கள், தொண்டர்கள் விலகல் சேர்க்கை என பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

இது எதுவும் தெரியாமல் இந்தியாவில் பல கோடிப் பேர் வாழ்க்கை நடத்தி, வாழ்ந்தும் செத்துப் போகிறார்கள். விதி அல்ல சதி.

இந்திய டெலிவிஷன்கள், யூடியூப்பர்களின் பேட்டியில் பிரசாந்த் கிஷோர் பிஜேபி வெற்றி பெறும் என்று மக்கள் மனதில் திடீரென்று தோன்றி பதிய வைக்கிறார்.

புதிய தலைமுறை டெலிவிஷனில் கருத்துக் கணிப்பு என்றுச் சொல்லி ஒரு விஷயத்தை மக்களின் மனதில் பதிய வைக்க முனைகிறார்கள்.


சமீபகாலமாக பல இடங்களில் பல உதிரி புதிரி கட்சிகள், நாடாளுமன்ற மழைக்காளான்களாய் மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என தொடர்ச்சியாய் செய்திகள். கொடிகள், விளம்பரங்கள் என பிசியாக விட்டார்கள். 

நாடாளுமன்ற தேர்தல் பேருந்துக்குள் சீட் பிடிக்க துண்டு.

ஏன்? பணமின்றி ஓரணுவும் அசைவதில்லை உலகிலே.

மக்களை மூளைச் சலவை செய்யத்துவங்கி உள்ளார்கள் என்று நீங்கள் நினைப்பீர்கள். 

அதுவல்ல இது. 

மேலே சொல்லப்பட்ட தகவல்களை உண்மையாக்க துல்லியமான திட்டங்கள் உருவாக்கி செயலாக்கப்படுகின்றன. உண்மை தேர்தலுக்கு முன்பு விரட்டி அடிக்கப்படும். வதந்திகள் அரசாளும்.

மக்கள் சிந்திக்க வேண்டும். 

எது? என்ன? ஏன்? யார்? எதற்காக? கேள்விகளை உங்களுக்குள் இருக்கும் தகவல்களை நோக்கி கேளுங்கள். அவற்றை அலசி ஆராய்ந்து பாருங்கள். அதுவே சொல்லும் விடையை.

ஒரு செய்தி, உருவாக்கப்படுகிறது.  பின்னர் அச்செய்தி உண்மையாக்கப்படுகிறது. 

யோசித்துப் பாருங்கள். 

எல்லாமும் புரியும். 

அரசியலும் புரியும்.

நாம் எங்கிருக்கிறோம் என்ற அப்பட்டமான உண்மையும் புரியும்.

வாழ்க வளமுடன்..!




Thursday, September 8, 2022

ஸ்டாலினிசம் (2) - நான் முதல்வன்


ஆட்சிக்குப் பொறுப்பேற்றதும் அவர் தன்னை மக்களுக்கான ஊழியர் என அடையாளப்படுத்திக் கொண்டார். மக்களுக்கு சேவை செய்யும் ஊழியன் நான் என்று பெருமைப்பட்டார்.

அவர் தன் அமைச்சரவையை அரசியலுக்கு அப்பாற்பட்டு, தகுதியானவர்களுடன் உருவாக்கினார். ஒவ்வொரு அமைச்சர்களையும் மதியூகிகளாக தேர்ந்தெடுத்தார்.

தன் புதிய அரசியல் பயணத்தை, தமிழக மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் இருக்க வேண்டுமென்ற உன்னத நோக்கில் தொடங்கினார்.

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் எனப் பேசுகிறார். 

கண்ணிய அரசியல். 

என் கடன் பணி செய்து கிடப்பதே என்று செயலால் காட்டுகிறார்.

கல்வி கரையில, கற்பவர் நாற் சில. கரையிலாக் கல்வியை எல்லோருக்கும் கிடைத்திட ஆவலாய் பணி செய்கிறார். 

மாணவர்களிடையே, உங்கள் தகப்பன் இடத்தில் இருந்து சொல்கிறேன், “நன்றாய் படியுங்கள்” என்று கேட்கிறார்.

நான் முதல்வன் என்பது அனைவருக்குமானது. 

ஒவ்வொருவரும் முதல்வன், எல்லாவற்றிலும் என்று மாணவர்களிடையே மன ஊக்கத்தை ஊக்குவிக்கிறார்.

கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்றதை பொய்யாக்க முனைகிறார். 

நானிருக்கிறேன் நீங்கள் கல்வி கற்க, கற்க பிச்சை எதற்கு என்று கேட்கிறார்.

தமிழர்களின் பிள்ளைகள் கல்வியில் முதல்வனாக வேண்டுமெனத் திட்டமிடுகிறார். 

அதற்கு சான்று, “ நான் முதல்வன்” திட்டம்.

உயர்கல்வி ஒவ்வொரு தமிழர்களின் பிள்ளைகளுக்கும் கிடைத்திட வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

இதோ அதற்கான முன்னோட்டமாக தமிழக அரசின் இணையதளம்.

https://naanmudhalvan.tnschools.gov.in/home

இதோ இப்படித் தொடங்குகிறது இணையதளத்தின் ஆரம்பம்.

”9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்குவதே இந்த இணைய முகப்பின் நோக்கமாகும். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் இங்கு கிடைக்கும்.

நான் முதல்வன் இணைய முகப்பில் 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் வாயிலாக பெறக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் அடங்கும். நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித் தொகைகளின் தகவல்களும் இந்த இணைய முகப்பில் உள்ளன. “

தகவல்களின் சுரங்கமாக கொட்டிக் கிடக்கிறது இந்த இணையத்தில். மாணாக்கர்கள் தங்களின் ஐ.டி வழியாக உள் நுழைந்து தேவையான தகவல்களைப் பெற்றுப் பயனடைதல் அவசியம். பலர் இத்தகவல்களை வைத்து சம்பாதிக்கிறார்கள். ஏழைகளால் இயலாதே. அவர்களுக்காக துல்லியமான தகவல்களுடன் இந்த இணையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நம் முதல்வர் மாணவர்களை முதல்வர்களாக்க உருவாக்கிய திட்டமிது. தமிழர்களின் குழந்தைகள் முதல்வன் என்ற தகுதியை அடைவதே, நம் முதல்வருக்கு மாணவர்கள் செலுத்தும் நன்றி.

ஸ்டாலின்ஷத்தின் இரண்டாம் பகுதி நான் முதல்வன்.



Tuesday, September 21, 2021

நீட் தேர்வு தினமலர் முனைவர் காயத் திரி

நீட் தேர்வு குறித்து முனைவர் காயத்திரி அவர்கள் கடந்த  20.09.2021ம் தேதியன்று தினமலரில் சிந்தனைக் களம் என்ற பகுதியில் கீழே படத்தில் இருக்கும் கட்டுரையினை எழுதி இருக்கிறார்.


நன்றி : தினமலர் - முழு கட்டுரையினை இணையத்தில் படித்துக் கொள்ளவும். இந்தக் கல்வியாளரின் நோக்கம் கட்டுரையினைப் படித்ததும் தெரிந்து விடும்.

இந்தியாவில் பல்வேறு வகையான கல்வித்திட்டங்கள் உள்ளன. சிபிஎஸ்சியும் ஒன்று. ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு வகையான பாடத்திட்டங்களை வைத்திருக்கின்றன. வேறுபட்ட கல்வித் திட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இந்தியா முழுவதுமான ஒரே தேர்வு என்றால் எப்படி சரியாகும்? எல்லாக் கல்வித் திட்டத்தினையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் கேள்வித்தாளுக்கு முழுமையான பதிலை மாணவனால் எங்கனம் எழுத முடியும்? 

ஆகவே நீட் தேர்வு என்பது ஒரு மோசடி என்பது தெளிவு. இதைப் பற்றி ஒரு வரி கூட இக்கட்டுரையில் அவர் எழுதவில்லை.

நீட் தேர்வில் வெற்றி பெற ஒரே வழி நீட் கோச்சிங்க். லட்சக்கணக்கில் பணம் செலுத்தும் வசதி உடையவருக்கு நீட் தேர்வில் வெற்றி கிடைக்கும். இதற்கு நீட் கோச்சிங்க் சென்டர்கள் சொல்லும் வெற்றிக் கணக்கே சாட்சி. 

இல்லையென்று இந்தக் கல்வியாளரால் எழுத முடியுமா? முடியாது. அதை மறைத்து விடுவார்.

ஒன்றிய அரசு ஒவ்வொரு மொழி வழி மாநிலங்களின் கல்வியை மாநிலப்பட்டியலில் இருந்து நீக்கி ஒன்றிய அரசுப்பட்டியலில் சேர்த்தது பெரும் மோசடியான அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மொழி வழி மா நிலங்கள் தனக்கென தனிப்பட்ட  வரலாறு, கலாச்சாரம் கொண்டவை. இப்படி இருக்கும் போது இந்தியா முழுமைக்கும் ஒரே கேள்வித்தாள் என்றால் அது மோசடி இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

பிஜேபி அரசின் காவி மயக் கல்விக்கு அடித்தளம் போட்டு வைத்திருக்கிறது. ஆரம்பமே தகராறு. இவருக்கு இதுவெல்லாம் நினைவில் இல்லை போல.

அடுத்து, முன்னைவர் காயத்திரி தன் கட்டுரையில் சுட்டுவது திமுகவின் நீட் ரத்து பற்றி. திமுக அரசு நீட் தேர்வு பற்றி ஆராய, ஒரு குழுவை உருவாக்கிய உடனே பிஜேபி கோர்ட்டிற்குச் சென்று தடை கேட்டது. 

சேப்பாக்கம் உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்வதாக முழங்கினாராம். ஏன் செய்யவில்லை என்கிறார்.  அதிமுக துரோகி எட்டப்பனும் தான் சொன்னான். தீர்மானம் இயற்றினான். அதைப் பற்றி ஏன் இவர் எழுதவில்லை. ஏனென்றால் அதிமுக அடிமையாக படுத்துக் கிடக்கிறது. அதைப் பற்றி ஒரு வரி எழுதவில்லை. திமுக நீட் தேர்வினை ரத்துச் செய்வதாகச் சொல்லி வெற்றி பெற்றார்கள் என்றும், அவர்கள் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்பது போல தோற்றத்தினை உருவாக்கி இருக்கிறார் முன்னைவர்.

நீட் தேர்வு பற்றி மக்கள் கருத்து அறிய குழு போட்டவுடனே பிஜேபி தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் புதைத்திட நீதிமன்றப்படியேறியதே, அந்த தடங்கல் பற்றி வாயைத் திறக்காத கல்வியாளர், கல்வி படிக்க விரும்பும் மாணவர் தரம் பற்றி கேள்வி எழுப்புகிறார்.

ஒரு மாணவன் கல்வி கற்பதன் காரணமாகத்தான் தரம் உயர்கிறானே ஒழிய, கல்வி கற்கவே தரம் வேண்டும் என்று சொல்லும் பிஜேபியும், தினமலரும், இந்தக் கல்வியாளரும் மனித குலத்திற்கு கோடாரியாய் இருக்கிறார்கள். ஏழை மாணவன் உயர் கல்வி உரிமையைப் பெறக்கூடாது என்ற சிந்தனை கொண்டவர்கள் என்பது  அவர்களின் இந்த கட்டுரையில் வெளிப்படுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் காலம், சூழல் போன்றவற்றுக்கு ஏற்பத்தான் கல்வியினை கற்கும். ஆரம்பத்தில் நன்றாகப் படிக்காத குழந்தைகள், பின் நாட்களில் நன்கு படிப்பார்கள். 

எல்லோருக்கும் தெரிந்த உண்மை இது. நீ ஆரம்பத்தில் நன்றாகப் படிக்கவே இல்லை, ஆகவே உனக்கு படிப்பு தர முடியாது என்றுச் சொல்லும் இந்த வகைத் தேர்வுகள் மனித மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் எதிரானவை அல்லவா? 

இதை வழிமொழியும் பிஜேபியும், தினமலரும், இந்தக் கல்வியாளரும் மனித குலத்தின் வளர்ச்சிக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் அல்லவா?

தன் கட்டுரையில் திமுகவினை சாடு சாடு என சாடி விட்டு, கல்வியில் அரசியல் என்கிறார். கல்வியில் அரசியலைக் கலப்பது பிஜேபி தான். வேறு எவரும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. 

பொறியியல் கல்லூரிகளில் தரம் இல்லையாம்? தரமில்லாத எந்த ஒன்றும் காலப்போக்கில் இல்லாது போகும். அதைச் சரி செய்ய கடுமையான சட்டங்கள் தான் தேவை. மாணவனைக் கல்வி தான் தரப்படுத்தும். அதை எப்படி தரமாக வழங்குவது என அரசு கல்வி நிலையங்களைக் கண்காணித்து செயல்படுத்திட வைத்தல் வேண்டும். அதை விடுத்து படிக்கவே தேர்வு வைப்பேன் என்பது கொடும் செயல். கொடுமைச் சிந்தனை. கொலைகார எண்ணம். மக்களை மாக்களாக்க வைக்கும் பாதகச்செயல்.

திமுவைத் திட்டி, இட ஒதுக்கீட்டை கிண்டல் செய்து, பொறியியல் கல்வியை தரம் தாழ்ந்து விட்டது என்றுச் சொல்லி வரும் இவர், அடுத்து நீட் தேர்வில் வெற்றி பெற்றால் குறைந்த கட்டணத்தில் படிக்கலாம் என்கிறார்.  

இது நாள் வரை, மெடிக்கல் படிக்க எந்த கோச்சிங்க் செல்லாமலும், கட்டணம் இல்லாமலும் சீட் பெற்று படித்த மாணவர்களுக்கு இது பெரும் சுமை.

நீட் கோச்சிங்க் சென்டர்களில் குவியும் கள்ளப்பணம் பற்றி இவர் வாய் திறக்கவில்லை. அங்கு நடத்தப்படும் தீண்டாமைகளை இவர் எழுதவில்லை. சமீப நீட் தேர்வில் கேள்வித்தாள் வெளியானது பற்றியோ, பீகார் மாநிலத்தில் தேர்வு என்கிற பெயரில் நடத்தப்படும் மோசடி பற்றியோ வாய் திறக்கவில்லை. திருட்டுத் தேர்வு, கேள்வித்தாள் மோசடி செய்து வெற்றி பெரும் மாணவர்களைப் பற்றி ஒரு வார்த்தை இக்கட்டுரையில் உள்ளதா என்றால் இல்லை. 

ஐஏஎஸ் தேர்வில் ஒரு பிசி மாணவனைப் பார்த்து, தேர்வாளர் ம்... நீங்களெல்லாம் இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்று அரசாள வந்து விட்டீர்கள் என்றுச் சொல்லி அவரை பெயில் ஆக்கிய சாட்சி என்னிடம் இருக்கிறது. தேர்வாளர் ஒரு பிராமின் என்று இங்கு சொல்ல விரும்புகிறேன். ஏன் அவன் நாடாளக் கூடாது என்று அவர் ஏன் கோபப்படுகிறார் என்று தெரிந்து கொண்டீர்களா? இதைத்தான் பிஜேபி அரசு செய்ய விரும்புகிறது.

உயர்கல்வி உயர் ஜாதியினருக்கு என்கிறது பிஜேபி அரசு.

கல்வியாளர் அடுத்து பரிந்துறை செய்கிறார் இப்படி

மருத்துவம் இல்லை என்றால் என்ன? வேறு படிப்புகள் இருக்கின்றனவே என்கிறார். இவருக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்னவென்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஏன் பெட்ரோமாக்சே தான் வேண்டுமா? வேறு எதுவும் வேண்டாமா என்று கேட்கிறார். 

அதாவது நாடாளும் கல்வி, மருத்துவம் போன்றவைகள் எங்களுக்கே உங்களுக்கு கீழ் நிலைப் படிப்பு இருக்கிறது அதைப் படியுங்களேன் என்கிறார்.

அப்துல்கலாம், ரஜினியை உதாரணம் காட்டுகின்றார். ஒரே ஒரு அப்துல் கலாமும், ரஜினியும் தான் இருக்க முடியும். அவர்களைப் போல இன்னொருவர் இருக்க முடியுமா? இவருக்குத் தெரியாதா? தெரியும். சொல்ல மாட்டார். அசைன்மெண்ட் அப்படி.

சினிமாவில் சாதித்தவனை விட அழிந்தவர்கள் தான் அதிகம். கோடியில் ஒருவன் வெற்றி பெறுகிறான் அதுவும் சிறிது காலம். அவரை உதாரணமாகக் காட்டும் இவரின் பாதகச்சிந்தனைக்கு மாற்றாக வேறு எதனையும் சுட்டிக்காட்ட முடியாது. ஒரு கல்வியாளர் என்ற போர்வையில் கல்வியில் வெற்றி பெற்றவர்களை உதாரணம் காட்டாமல் சினிமாக்காரனை உதாரணம் காட்டி, நீங்களும் சினிமாவுக்குச் சென்று அழிந்து போ என்றுச் சொல்லாமல் சொல்ல வருகிறாரா என்று தெரியவில்லை.

ஏன் இப்படி பொருமலுடன் இக்கட்டுரையினை எழுதி இருக்கிறார் இவர்?

ஏழை கீழ்சாதி மாணவர்கள் மருத்துவர் ஆகி விட்டால் கீழ் சாதிக்காரனிடம்  மருத்துவம் செய்ய சனாதன தர்மமும், ஆகம விதிகளும் ஏற்றுக் கொள்ளாது என்று சொல்ல வருகின்றார்கள் என நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நீட் தேர்வு வைத்து உங்களை நாங்கள் வடிகட்டி விடுவோம் என்றுச் சொல்லாமல்  சொல்கிறார்கள்.

கல்வி கற்க தடை போடும் எவரும் நிரந்தரமாக வாழ்ந்தது இல்லை. கல்வி கற்றுக் கொடுப்பவனை கடவுள் என்கிறது தமிழ் கலாச்சாரம். 

பிஜேபி தன் நிலைப்பாட்டை மாற்றி நாட்டை நிர்வாகம் செய்வதை கவனிக்க வேண்டும். அதை விடுத்து கல்வி கற்க தடை ஏற்படுத்தினால் காலம் அவர்களை மொத்தமாக அழித்து விடும். 

தன் வாழ்க்கையை நிரந்தரம் செய்ய முடியாத இவர்கள், மற்றவர்களுக்கு அழிவினை உண்டாக்கும் செயல்களைச் செய்கிறார்கள்.

அவ்வாறு செய்பவர்களுக்கு அறம் அதற்குரிய பலனை அளிக்கும் என்பது வரலாறு சொல்லும் செய்தி. நயவஞ்சக நரிகளையும், ஓநாய்களையும் தமிழர்கள் அறிந்து தெளிய வேண்டும்.

கல்வியாளர்கள் என்கிற போர்வையில் உலா வரும் பாதகச் சிந்தனைவாதிகளை உலகம் ஒதுக்கி தள்ளி விட வேண்டும். இவர்கள் மனித குலத்தின் ஒட்டுண்ணிகள். ஒட்டுண்ணிகள் காலப்போக்கில் உதிர்ந்து போய் விடும்.அவர்களை இனம் கண்டு கொண்டு, இவர்களையும் இவர்களின் படைப்புகளையும் உதறித் தள்ளிடல் காலத்தின் கட்டாயம்.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திடல் வேண்டும். அது ஒன்றே தர்மம்.

அது ஒன்றே அறம்.

வாழ்க வளமுடன்...!


Friday, May 7, 2021

தளபதி முதலமைச்சர் - ஜோதிடம் பொய் - சாட்சிகளுடன் ஒரு ஆய்வு

வாக்கு எண்ணிக்கை அன்று நான் டிவி பார்க்கவில்லை. ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ஞானக்கூத்தனின் கவிதைகள் சுவாரசியமாக இருந்தது. 

மாலையில் திமுக ஆட்சிக்கு வருகிறது என்று தெரிந்தது. மகிழ்ச்சி. ஏனென்றால் யாருக்கு ஓட்டுப் போடலாம் என்ற பதிவினை எழுதி இருந்தேன். அது நடக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளுக்குள் இருந்தது. வெற்றி.

எனக்கு ஏன் அதிமுகவை பிடிக்காமல் போனது?

மனித சமூகத்தில் பேரவலங்கள் நடக்கும் போதெல்லாம் அதற்கு யாரோ ஒரு துரோகிதான் காரணமாக இருப்பான்.

அதிமுகவிற்கு முதலில் துரோகம் செய்தவர் ஓபிஎஸ். அடுத்த துரோகம் இ.பி.எஸ். 

துரோகிகள் எப்போதும் துரோகத்தைத்தான் செய்வார்கள். அவர்களுக்கு நன்மை செய்வது பற்றி தெரியாது. தான், தன் சுகம், தன் மக்கள் என்று தான் சிந்திப்பார்கள். அதைத்தான் இருவரும் செய்தார்கள். அதுமட்டும் காரணம் அல்ல.

சட்டசபைக்குள் ஓ.பி.எஸ் தன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் இணைந்து அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். அது உச்ச நீதிமன்றத்தில் வழக்காக விசாரிக்கப்பட்டு இன்னும் தீர்ப்பு வழங்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது. 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை கேலிக்குரியதாக்கி தர்மத்தை அழித்த கயமைத் தனத்தை பிஜேபியும் அதிமுகவும் இணைந்து செய்தன. 

காரணம் என்ன? பதவி ஆசை. 

இதுமட்டுமின்றி வேறென்னவாக இருக்க முடியும்? 

பிஜேபிக்கு நன்கு தெரியும் இருவரும் துரோகம் செய்தவர்கள் என்று. நாளை இதை அவர்களுக்கே திரும்பவும் செய்வார்கள் இவர்கள். செய்யமாட்டார்கள் என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது. அம்மிக்கல் என்றைக்கும் கோவில் சிலை ஆக முடியாது. ஏனென்றால் துரோகிகளின் டிசைன் அது. 

அதுமட்டுமல்ல இன்றைக்கு இந்தியர்களின் நம்பிக்கையாக இருக்கும் ஒரே நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் மாண்பும் இந்தச் செயலால் சீரழிக்கப்பட்டது. இனி பதினோரு பேரின் அக்கிரமத்திற்கு தீர்ப்பு வந்தால் தான் என்ன வரவிட்டால் தான் என்ன? இனிமேல் வரக்கூடிய அந்த தீர்ப்பினால் என்ன பயன்? கேலிகுரியதாகி நிற்கிறது உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையினால். இதற்கும் இவர்களே காரணம் அல்லவா? உலகிற்கே தெரியும் பதினோறு பேரும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் என்று. பல்வேறு சாட்சியங்கள் இந்திய நீதித்துறையிலே கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும் அவர்கள் பதவி நீக்கம் பெறவில்லை. அவர்கள் தன் பதவிக் காலம் வரை பதவியில் இருந்தார்கள். ஏனென்றால் துரோகத்தினை இந்த மக்களும் ஆட்சியும் அமைப்பும் ஏற்றுக் கொள்கின்றன. அதற்கான விலையைத்தான் இன்றைக்கு நாமெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 

நல்லவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் அல்லவா மக்களின் துயரமென்ன என்று அறிந்து அதற்கேற்ப ஆட்சி செய்வார்கள்? ஆனால் நாம் செய்வது என்ன? 

சுரைக்காய் விதை போட்டு விட்டு, அரிசி வருமென்று நினைப்பது நம் தவறு அல்லவா?

அறமும் தர்மமும் தண்டனை தருகின்றன என்பது வரலாறு.

உடனே அவங்க யோக்கியமா என்று ஆரம்பிக்க வேண்டாம். பத்தாண்டு காலம் பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளைப் படித்துப் பாருங்கள் தெரியும்.

அறம் மீறிய எந்தச் செயலையும் என்னால் ஏற்கவே முடியாது. ஏனென்றால் அதுதான் நம்மை எப்போதும் காத்து வருகிறது. இல்லையென்றால் இந்த நேரம் ஹிட்லரின் ஆட்சி அல்லவா இங்கு நடந்து கொண்டிருக்கும்?

நேர்மையாக இருக்கும் எந்த ஒரு தலைவருக்காக உழைத்திட இந்த மானிடம் தயாராக இருக்கும் எப்போதும். உண்மையற்ற, போலித்தனமான, கயமை எண்ணம் கொண்டவர்களை மக்கள் மன்னித்தாலும் அறமும், தர்மமும் மன்னிக்காது.

புதிய முதலமைச்சராக வரக்கூடிய ஸ்டாலின் பக்குவம் நிறைந்த தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். எனக்கு திமுகவில் நிரம்பவும் பிடித்தது உதயநிதி ஸ்டாலினின் பேச்சு. மக்களிடம் உரையாடுவது போல அவர்களையும் தன் பேச்சுக்குள் இழுத்து கொண்டு வந்து, அனைவரையும் தன் மீது கவனம் செலுத்த வைக்கும் எளிமையான பேச்சு. 

இனிவரும் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கான அரசியல் களமாகத்தான் தமிழகம் இருக்கும் என நினைக்கிறேன். நல்லன செய்தால் நல்லன நடக்கும்.

* * *

இந்தக் களேபரத்தில் ஒரு நாள் ஒரு புத்தகம் படிக்க கிடைத்தது. படித்து முடித்ததும் அதிர்ந்தே போனேன். அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் சில கீழே காட்டப்பட்டிருகின்றன. படித்துப் பாருங்கள்.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் என்னிடம் இருக்கும் பல்வேறு ஜோதிட புத்தகங்களுடன் இந்தப் புத்தகத்தில் இருக்கும் விஷயங்களை ஆராய்ந்து பார்த்தேன். எல்லாம் ஒன்றுதான். எதுவும் அட்சரமும் பிசகவில்லை. அப்படியே இருக்கின்றன.

பூமி சூரியனைச் சுற்றவில்லை, சூரியன் தான் பூமியைச் சுற்றுகிறது என்கிறார் இந்த வேதகால புராண ஆராய்ச்சியாளர். அதன் அடிப்படையில் இன்றைய ஜோதிடம் இருக்கிறது. ஆரம்பம் தவறு. ஆனால் விடை மட்டும் சரி என எவ்வாறு சொல்ல முடிகிறது என்று சிந்தித்தால் அறியாமை என்ற வார்த்தை தான் முன்னால் வருகிறது.

மனது கிடந்து அடித்துக் கொண்டது. கோவில்களில் இருந்து எல்லாவிதமான நம்பிக்கைகளும் ஜோதிடத்தை அடிப்படையாக கொண்டவை அல்லவா? ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கும் தவறான கணக்கு எப்படி மனித வாழ்க்கையில் தாக்கத்தை இத்தனை காலமும் ஏற்படுத்தி இருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனென்றால் எதை ஆராய்ச்சி செய்ய இயலாதோ அதைப் பற்றி பேசினாலோ எழுதினாலோ எவராலும் பதில் சொல்ல முடியாது அல்லவா? தெளிவான கட்டமைப்பு. தெளிவான பாதை. மக்களை முட்டாளாக்கும் அற்புத திட்டம். ஜோதிடம் பொய் என்பதை நிரூபி என்றால் நம்மிடம் ஏதும் தரவுகள் இருக்காது. ஆகவே தான் அந்தக் காலகட்டத்தில் இந்த ஜோதிடம் பெருகி வளர்ந்து மனித வாழ்வியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டே வருகிறது.

அவர் ஏதோ தவறாகப் புரிந்து கொண்டு விட்டார், அதுவெல்லாம்  இந்த ஜோதிடத்தில் கணக்கில்லை என்று வாதாடுவீர்கள். வைத்தீஸ்வரன் கோவில் ஏடுகள் எல்லாம் பொய்யா? என்பீர்கள். 

இருபத்தேழு நட்சத்திரங்கள், பனிரெண்டு ராசிக் கட்டங்களுக்குள் அடைபடும் ஜாதகத்தில் ஒன்பது நவக்கிரங்களின் பெயர்ச்சியால், அவைகளின் சேர்க்கை, விலக்கு ஆகியவைகளால் தான் பலன்கள் சொல்லப்படுகின்றன அல்லவா? டும் 12 ராசிக் கட்டங்களில் ஒன்பது நவக்கிரங்களில் முதல் கிரகமான சூரியன் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அறிவியல் நம்மிடம் யாரும் மறுக்கவே முடியாத சூரியனைத்தான் பூமி சுற்றுகிறது என்று காட்டி இருக்கிறது. இப்படியான சூழலில் நகரவே நகராத சூரியன் எங்கனம் ராசிக்கட்டங்களுக்கு நகர்ந்து செல்லும்? இதைத்தான் நான் இங்கு சொல்ல வருகிறேன். ஜோதிடம் சூரியன் பூமியைச் சுற்றுகிறது என்கிறது.

லீலாவதி சந்திர க்ரஹணம் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் விஷயமும் இப்போதைய ஜோதிட கணக்குகளும் ஒன்றாகவே இருப்பதை நீங்கள் மறுக்க முடியாது. நெட்டில் தேடுங்கள். இந்தப் புத்தகம் கிடைக்கிறது. அது போலியானது என்று சொல்வீர்கள். அதையெல்லாம் நான் நிராகரிக்கிறேன்.

ஏனென்றால் நம் மூளைக்குள் இருப்பது பிறரின் சிந்தனைகள், கருத்துக்கள், அவர்கள் காட்டிய வழிகள். நாம் நாமாக எப்போதும் இருந்ததே இல்லை.

வாழ்வியலுக்கு கல்வி பதிவு என்பது வேறு. வாழ்க்கையை நெறிப்படுத்தும் வாழ்வியல் கல்வி என்பது வேறு. பொருளாதார அறிவு என்பது வேறு. வாழ்க்கை அறிவு என்பது வேறு. உடனே கொடி பிடிக்கும் நம் மனதுக்குத்தான் இவ்வரிகள்.

ஆயிரக்கணக்கில் ஜோதிடர்கள் கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்னிடம். இனி கோவில்களுக்குச் செல்லும் போது ராகு, கேது, கிரகங்களை என் மனது எப்படி பார்க்கும் என்று சிந்திக்கிறேன்.

என் முன்பு கட்டமைக்கப்பட்டிருக்கும் அமைப்பின் போலித்தனத்தை என் மனது இனி எப்படி ஏற்கும்?

இனிமேல் குல தெய்வ வழிபாட்டினைத் தவிர வேறு எதையும் என்னால் ஏற்க இயலுமா என்றே தெரியவில்லை. இன்றைக்கும் தஞ்சை பெரிய கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை என்பது சாட்சி. அம்மன் கோவில்களில் நவக்கிரகங்கள் இருப்பதில்லை என்பது இன்னொரு சாட்சி.

எனது மதிப்பிற்குரிய சுவாமி ஆத்மானந்தா அவர்கள் என்னிடம் அடிக்கடிச் சொல்வார். என்னை துறவி ஆக்கியது “வாழ்க்கையில் வெற்றி” என்ற அப்துற் றஹீம் எழுதிய புத்தகம் என. 

எனக்கு காசையும், நேரத்தையும் மிச்சமாக்கி செய்யும் தொழிலே தெய்வமென நம்பும்படி செய்தது 1961ம் வருடம் மறைந்த சுப்ரமணிய சாஸ்திரிகள் எழுதிய லீலாவதி சந்திர க்ரஹணம் என்ற புத்தகம் என்றால் அது மிகையாகாது.

இது எனக்கு நானே எழுதிக் கொண்ட பதிவு. ஆகவே நீங்கள் இப்பதிவினைப் படித்தாலும் என்னைப் போல சிந்திக்க வேண்டாம். உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன் எது உண்மை, எது பொய் என்பதை உங்களின் அறிவு கொண்டு தெளிந்து கொள்ளுங்கள்.





 
கீழ்கண்ட படத்தில் இருப்பது இதே ஆசிரியர் எழுதிய தாரகா லீலாவதி வானசாஸ்திரம் புத்தகத்தில் 6வது பக்கம்



Monday, March 29, 2021

யாருக்கு ஓட்டு போடலாம் - வரலாறு காட்டும் வழி

தேர்தல் களம். நெருப்பு போல தகிக்கும் வெப்பச் சூழல். ஒவ்வொருவர் உள்ளத்திலும் அதிகாரத்துக்கு வர நெஞ்சுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் அதிகாரப் பசி எனும் கோர நெருப்பின் தாண்டவம். இந்த அதிகாரப்பசியில் எத்தனையோ பேரின் வாழ்க்கை நெருப்பில் இடப்படும். வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும். பங்கு எடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாய் இருங்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள், ஒப்பீடுகள், திட்டங்கள், அவதானிப்புகள், ஈடுபாடுகள், கட்சி சார்புகள், நண்பர்கள், உறவினர்கள், நன்றி உணர்ச்சிகள் இப்படி பல்வேறு காரணிகளுக்குள் சிக்கி இருக்கும் மனதானது யாருக்கு ஓட்டுப் போடலாம் என முடிவு செய்திருக்கும்.

அதெல்லாம் ஒரு பக்கம் வைத்து விட்டு இப்போது இங்கு படிக்க இருக்கும் கருத்துக்களை கொஞ்சம் கவனத்தில் கொள்க.

இங்கு அறம் மட்டுமே பேசப்படும் அல்லது எழுதப்படும் என்பதை என்றைக்கும் மறந்து விடாதீர்கள். நான் எந்தக் கட்சியும் சாராதவன். ஆனால் அறத்தின் வழி நின்று வாழ்க்கையை நடத்திச் செல்பவன். ஆகவே எனக்கு எந்த முத்திரையும் இல்லை.

தமிழக அரசியல் வரலாற்றினைப் படித்தவன் என்கிற முறையில் இதை எழுதுகிறேன். 

அன்றைக்கு நாமும், இன்றைக்கு நம் குழந்தைகளும் பாடப்புத்தகங்களில் படிக்கும் தமிழ் தாய் வாழ்த்து, திருக்குறள் பாடல்கள் அந்தக் காலத்தில் படிக்கச் சொல்லித் தரப்படவில்லை என்பதற்கான பல்வேறு தரவுகள் காணக் கிடைக்கின்றன. 

கலைஞரைப் பற்றி பலரும் பல்வேறு விதமாக பேசுவதைக் காணலாம். அதையெல்லாவற்றையும் விட அவரால் தமிழருக்கு விளைந்தது, எளிதில் கிடைத்தது கல்வி மட்டுமல்ல தமிழ் அதன் வளர்ச்சி. 

வள்ளுவர் கோட்டம், தென் குமரியில் வள்ளுவர் சிலை, பஸ்களில் திருக்குறள், அகநானூறு, புறநானூறு என தமிழ் பாடப்புத்தகங்களில் தமிழர் இனத்தின் நாகரீகமும், வரலாறும் படிக்கின்றோம் என்றால் அதற்கு அண்ணாவும், கலைஞரும் தான் காரணம் என்று சொல்லித்தான் தங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. வாழ்ந்த வழி தெரிந்தால் தான் வாழும் வழி தெரியும். அதைத் திறம்படச் செய்தவர் கலைஞர்.

ஐந்தாம் வகுப்பிலிருந்து தேர்வு வைத்து படிக்கவே விடாமல், அதி தீவிர நுணுக்கமான முறையில் தடுக்கின்றார்கள். மேல் படிப்புகளுக்கும் அவ்வாறே திட்டங்களும், நுழைவுத் தேர்வுகளும் நடத்தி படிக்கவே விடாமல் செய்கிறார்கள். அதற்கு இங்கு இருக்கும் தலைமைப் பண்பு அறவே அற்றவர்களும் துணை போகின்றார்கள். 

கல்வி என்பது செல்வம். அழிக்கவே முடியாத செல்வம். அதை நம் சந்ததியினருக்கு கிடைக்க கூடாது என்று நயவஞ்கமாக திட்டமிடுபவருடன் கூட்டுச் சேர்பவர்கள் நீக்கப்பட வேண்டும்.

இன்றையச் சூழலில் யார் தமிழ் நாட்டின் அதிகாரத்துக்கு வந்தால் நல்லது என உங்களுக்குப் புரிந்து இருக்கும். ஆகவே வரலாறு காட்டிய வழியில் வரக்கூடிய சந்ததியினருக்கு  எது நல்லது என்று யோசித்து முடிவெடுங்கள்.

அவர் இதைச் செய்தார், இதைச் செய்தார், அவங்க இப்படி, இவங்க இப்படி என்றெல்லாம் யோசிக்க நேரிடும். 

பொருளாதார ஏற்றங்கள் அவரவர் தர்மத்தின் படி நிகழ்பவை. நிகழ்த்தப்படுபவை. 

வானளாவிய அதிகாரம் பெற்றிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெவின் இறுதிக்காலத்தை நிர்ணயித்தது அரசியல் சட்டம். அறம் இப்படித்தான் செய்யும். அது துரோகத்துக்கும் பொருந்தும். துரோகம் செய்தவர்களுக்கும் பொருந்தக்கூடியது. 

ஆகவே நண்பர்களே, யோசியுங்கள். எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லக்கூடிய என்ன என்பது பற்றிச் சிந்தியுங்கள்.

என் தாத்தா மாணிக்க தேவர் கையில் துப்பாக்கி ஏந்தி வெள்ளைக்கார பறங்கிச் சிப்பாய்களுடன் சண்டையிட்டது, நான் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்பதற்காகத்தான். அது நடந்து விட்டது.

ஆகவே அந்த வழியில் வந்த அடியேன் உங்களுக்கு இந்த வேண்டுகோளை வைக்கிறேன். 

வாழ்க்கை எப்போதும் மாற்றத்துக்கு உரியது.

தர்மம் மட்டுமே நிரந்தரம் அது மாறுவதில்லை எப்போதும். 

உண்மைக்கு எப்போது மாற்றுக் கருத்து இருந்ததில்லை அல்லவா?

சிந்தித்துப் பார்த்து செயல்படுங்கள்.

வாழ்க வளமுடன்.


Wednesday, March 10, 2021

தேர்தல் கமிஷனின் ஜனநாயக தேசதுரோக 2021 தேர்தல் - ஜிமோடி வெர்ஷன்

தேர்தல் வந்து விட்டது. தேர்தல் கமிஷன் நாடகம் நடத்துகிறது. எல்லோருக்கும் தெரியும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது என. பெரும்பாலானோர் பணம் வாங்குவதும் தெரியும் தேர்தல் கமிஷனுக்கு. ஆனாலும் தேர்தல் நடத்தப்படுகிறது.

பணம் கொடுக்கப்பட்டது என்று தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சட்டம் என்ன செய்து கிழித்தது?

இங்கு யாருக்கும் வெட்கமில்லை. 

இந்திய அரசிலமைப்புச் சட்டம் கேலிக்குட்படுத்தப்படுவதை எல்லோரும் வேடிக்கைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கொண்டிருக்கிறோம்.

என்ன செய்ய முடியும் நம்மால்? வேடிக்கை...வேடிக்கை. வேடிக்கை பார்ப்பதை தவிர?

காவல்துறை காவல் காக்கிறது. பணம் யாரும் எடுத்துப் போக கூடாது என. ஆளும்கட்சி ஆட்களை காவல்துறை என்ன செய்து விட முடியும்?

தேர்தல் கமிஷனின் மற்றுமோர் தேசதுரோகம் (ஆம் தேச துரோகம் என்றுதான் சொல்கிறேன்) தமிழகத்தில் நடத்தப்படும் 2021 தேர்தல்.

எப்படி என்று பார்க்கலாமா?


மேலே இருக்கும் தேர்தல் கமிஷன் அறிவிப்பினைப் பாருங்கள். தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கும் தேதி 19.03.2021. விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் நாள் 22.03.2021ம் தேதி. 

விண்ணப்பம் ஏற்கப்படுகிறதா இல்லையா என்பது 22ம் தேதிதான் தெரியும். அதாவது போட்டியிடுகிறோமா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள தேர்தலுக்கு 14 நாட்களுக்கு முன்புதான் தெரிய வரும்.

இந்த பதினான்கு நாட்களுக்குள் சுயேச்சையாக ஒருத்தர் போட்டியிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர் எப்படி தொகுதி முழுக்கவும் பிரச்சாரம் செய்ய முடியும்?

பெரிய கட்சிகளுக்கு சின்னம் பேசும். கட்சி ஆட்கள் கார்களில் சுற்றி வந்து விடுவார்கள். அவர்களுக்கான கட்டமைப்பு இருக்கிறது. எளிதில் போஸ்டர் ஒட்டுவதிலிருந்து எல்லா பிரச்சாரத்தையும் செய்து விடுவார்கள். 

ஆனால் ஒரு சுயேச்சையினால் அது முடியுமா? பதினைந்து தெருக்கள் பிரச்சாரம் செய்யவே பத்து நாட்கள் ஆகி விடும். இதர பகுதிகளுக்கு எங்கனம் செல்ல இயலும்? இது கொடுமை அல்லவா? வாய்ப்பு கொடுக்காமல் ஏன் இத்தனை குறுகிய காலத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும்? என்ன அவசரம் வந்து விட்டது? ஓட்டு எண்ணுவதற்கு ஏன் 30 நாட்கள்?

இதுதான் தேர்தல் கமிஷன் செய்திருக்கும் ஜன நாயக தேசத்துரோகம். தனியொருவனுக்கு உணவில்லை என்றால் ஜகமே அழிக்கப்பட வேண்டும் என்றான் ஒருவன். 

வெட்கமாயில்லையா தேர்தல் கமிஷனுக்கு?

தனியொருவன் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவும், சிறிய கட்சிகளை அழித்திடவும் ஆளும் பாஜகவினரால் மிக மிகத் தந்திரமாக மோசடி செய்யப்பட்டு இந்திய ஜனநாயகம் அழிக்கப்படுகிறது. 

அதை தேர்தல் கமிஷன் கொஞ்சம் கூட யோசிக்காமல், ஏற்றுக்கொண்டு சுதந்திரத்தும், இந்திய இறையாண்மைக்கும், ஜன நாயகத்திற்கும், இந்திய மக்களுக்கும் துரோகத்தினையும் அக்கிரமத்தினையும் செய்துள்ளது.

இதைப் பற்றி எவரும் இங்கு பேசியதாக தெரியவில்லை. வெட்கமில்லாதவர்கள், அறமற்றவர்கள், தீங்கிழைப்பவர்களால் இதைப் பற்றி யோசிக்க கூட முடியாது.

ஆனால் இவர்கள் தான் ஆன்மீகம் பேசுகிறார்கள். மதம் பேசுகிறார்கள். தர்மம் அறம் பற்றி மேடைகளில் கத்துகிறார்கள்.

இங்கு இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் அனைவரின் அதர்மங்களை நாம் அறிவோம். ஆனாலும் யாரோ ஒருவருக்கு ஓட்டுப் போடுவோம். இவ்வுலகிற்கு தீங்கு செய்வதில் மனிதர்களுக்கு நிகர் எவருமுண்டா என்று யோசித்துப் பாருங்கள்.

எங்கே சென்றது நல் எண்ணங்கள்? எங்கே போனது அறம்? எங்கே போனது தர்மம்? ஏன் எல்லோரும் ஓடி ஒளிந்து கொண்டீர்கள்? ஒளிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை சுகமாகி விடுமா?

வாழும் நாட்களில் நாம் வாழும் பூமிக்கும், சமுதாயத்துக்கும் நன்மை செய்யக்கூடாதா? கொஞ்சம் கூட அறச்சிந்தனை அற்றவர்களாக மாறிப் போனீர்களே ஏன்? யோசித்துப் பாருங்கள்.

துன்பம், துயரம், கஷ்டம் என்று கதறிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் அதர்மங்களை மனம் கூசாமல் செய்பவர்களுக்கு கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உனக்கு வரும் நல்லது கெட்டது எல்லாமே உன்னால் தான் என்பதை நீ அறியும் போது வாழ்வின் கடைசி நிலையில் இருப்பாய் என்பார்கள். 

இதோ தமிழ் நாட்டில் ஓட்டே போடாத ஒருவர் முதலமைச்சர் ஆனார். வேடிக்கை பார்த்தோம். ஐந்து லட்சம் கோடி கடன் வைத்தார் வேடிக்கை பார்த்தோம். மாணவர்களுக்கு மருத்துவ கல்வியை எட்டாமல் ஆக்கினார். வேடிக்கை பார்த்தோம். மின்சாரத்துறையில் பல ஆயிரம் கோடி ஊழல் என்கிறது சிஏஜி. வேடிக்கை பார்த்தோம். சாலைகளில் ஊழல், பாலங்களில் ஊழல், ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை பராமரிப்பு மூன்று கோடி என ஊழல். முட்டையில் ஊழல், ரெவின்யூ துறையில் தொட்டதற்கெல்லாம் ஊழல். எல்லாவற்றையும் வேடிக்கைதான் பார்க்கிறோம். இனியும் என்ன ஆகப்போகிறது? மீண்டும் வேடிக்கை பார்ப்போம்.

இந்த 2021 தேர்தல் தேசத்துரோக தேர்தல் என்றுதான் அழைக்கப்பட வேண்டும். தேர்தல் கமிஷன் யாரோ ஒரு கட்சிக்கு அடிபணிந்து இந்திய மக்களுக்கு தேசத்துரோகம் செய்திருக்கிறது என்பது உண்மை.

குறிப்பு : கடந்த தேர்தலில் அடியேன் சுயேச்சை ஒருவருக்கு ஓட்டுப் போட்டேன். அந்த ஓட்டு பதிவாகவே இல்லை. விவிபாட் ஒப்புகை சீட்டு கூட பரிசீலிக்கப்படாது என்கிற போது ஓட்டுப் போடுவதால் என்ன பயன் என்று தெரியவில்லை. ஓட்டு மெஷின் நம்பிக்கையற்றவை.

மேலும் ஒரு உபகுறிப்பு: ஜோதிடம் என்பது மோசடி பொய் என்பதற்கான ஆதாரத்துடன் அடுத்த கட்டுரை வரும். அதிரப்போகின்றீர்கள்.