குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தேர்தல் 2021. Show all posts
Showing posts with label தேர்தல் 2021. Show all posts

Monday, March 29, 2021

யாருக்கு ஓட்டு போடலாம் - வரலாறு காட்டும் வழி

தேர்தல் களம். நெருப்பு போல தகிக்கும் வெப்பச் சூழல். ஒவ்வொருவர் உள்ளத்திலும் அதிகாரத்துக்கு வர நெஞ்சுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் அதிகாரப் பசி எனும் கோர நெருப்பின் தாண்டவம். இந்த அதிகாரப்பசியில் எத்தனையோ பேரின் வாழ்க்கை நெருப்பில் இடப்படும். வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும். பங்கு எடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாய் இருங்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள், ஒப்பீடுகள், திட்டங்கள், அவதானிப்புகள், ஈடுபாடுகள், கட்சி சார்புகள், நண்பர்கள், உறவினர்கள், நன்றி உணர்ச்சிகள் இப்படி பல்வேறு காரணிகளுக்குள் சிக்கி இருக்கும் மனதானது யாருக்கு ஓட்டுப் போடலாம் என முடிவு செய்திருக்கும்.

அதெல்லாம் ஒரு பக்கம் வைத்து விட்டு இப்போது இங்கு படிக்க இருக்கும் கருத்துக்களை கொஞ்சம் கவனத்தில் கொள்க.

இங்கு அறம் மட்டுமே பேசப்படும் அல்லது எழுதப்படும் என்பதை என்றைக்கும் மறந்து விடாதீர்கள். நான் எந்தக் கட்சியும் சாராதவன். ஆனால் அறத்தின் வழி நின்று வாழ்க்கையை நடத்திச் செல்பவன். ஆகவே எனக்கு எந்த முத்திரையும் இல்லை.

தமிழக அரசியல் வரலாற்றினைப் படித்தவன் என்கிற முறையில் இதை எழுதுகிறேன். 

அன்றைக்கு நாமும், இன்றைக்கு நம் குழந்தைகளும் பாடப்புத்தகங்களில் படிக்கும் தமிழ் தாய் வாழ்த்து, திருக்குறள் பாடல்கள் அந்தக் காலத்தில் படிக்கச் சொல்லித் தரப்படவில்லை என்பதற்கான பல்வேறு தரவுகள் காணக் கிடைக்கின்றன. 

கலைஞரைப் பற்றி பலரும் பல்வேறு விதமாக பேசுவதைக் காணலாம். அதையெல்லாவற்றையும் விட அவரால் தமிழருக்கு விளைந்தது, எளிதில் கிடைத்தது கல்வி மட்டுமல்ல தமிழ் அதன் வளர்ச்சி. 

வள்ளுவர் கோட்டம், தென் குமரியில் வள்ளுவர் சிலை, பஸ்களில் திருக்குறள், அகநானூறு, புறநானூறு என தமிழ் பாடப்புத்தகங்களில் தமிழர் இனத்தின் நாகரீகமும், வரலாறும் படிக்கின்றோம் என்றால் அதற்கு அண்ணாவும், கலைஞரும் தான் காரணம் என்று சொல்லித்தான் தங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. வாழ்ந்த வழி தெரிந்தால் தான் வாழும் வழி தெரியும். அதைத் திறம்படச் செய்தவர் கலைஞர்.

ஐந்தாம் வகுப்பிலிருந்து தேர்வு வைத்து படிக்கவே விடாமல், அதி தீவிர நுணுக்கமான முறையில் தடுக்கின்றார்கள். மேல் படிப்புகளுக்கும் அவ்வாறே திட்டங்களும், நுழைவுத் தேர்வுகளும் நடத்தி படிக்கவே விடாமல் செய்கிறார்கள். அதற்கு இங்கு இருக்கும் தலைமைப் பண்பு அறவே அற்றவர்களும் துணை போகின்றார்கள். 

கல்வி என்பது செல்வம். அழிக்கவே முடியாத செல்வம். அதை நம் சந்ததியினருக்கு கிடைக்க கூடாது என்று நயவஞ்கமாக திட்டமிடுபவருடன் கூட்டுச் சேர்பவர்கள் நீக்கப்பட வேண்டும்.

இன்றையச் சூழலில் யார் தமிழ் நாட்டின் அதிகாரத்துக்கு வந்தால் நல்லது என உங்களுக்குப் புரிந்து இருக்கும். ஆகவே வரலாறு காட்டிய வழியில் வரக்கூடிய சந்ததியினருக்கு  எது நல்லது என்று யோசித்து முடிவெடுங்கள்.

அவர் இதைச் செய்தார், இதைச் செய்தார், அவங்க இப்படி, இவங்க இப்படி என்றெல்லாம் யோசிக்க நேரிடும். 

பொருளாதார ஏற்றங்கள் அவரவர் தர்மத்தின் படி நிகழ்பவை. நிகழ்த்தப்படுபவை. 

வானளாவிய அதிகாரம் பெற்றிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெவின் இறுதிக்காலத்தை நிர்ணயித்தது அரசியல் சட்டம். அறம் இப்படித்தான் செய்யும். அது துரோகத்துக்கும் பொருந்தும். துரோகம் செய்தவர்களுக்கும் பொருந்தக்கூடியது. 

ஆகவே நண்பர்களே, யோசியுங்கள். எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லக்கூடிய என்ன என்பது பற்றிச் சிந்தியுங்கள்.

என் தாத்தா மாணிக்க தேவர் கையில் துப்பாக்கி ஏந்தி வெள்ளைக்கார பறங்கிச் சிப்பாய்களுடன் சண்டையிட்டது, நான் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்பதற்காகத்தான். அது நடந்து விட்டது.

ஆகவே அந்த வழியில் வந்த அடியேன் உங்களுக்கு இந்த வேண்டுகோளை வைக்கிறேன். 

வாழ்க்கை எப்போதும் மாற்றத்துக்கு உரியது.

தர்மம் மட்டுமே நிரந்தரம் அது மாறுவதில்லை எப்போதும். 

உண்மைக்கு எப்போது மாற்றுக் கருத்து இருந்ததில்லை அல்லவா?

சிந்தித்துப் பார்த்து செயல்படுங்கள்.

வாழ்க வளமுடன்.


Wednesday, March 10, 2021

தேர்தல் கமிஷனின் ஜனநாயக தேசதுரோக 2021 தேர்தல் - ஜிமோடி வெர்ஷன்

தேர்தல் வந்து விட்டது. தேர்தல் கமிஷன் நாடகம் நடத்துகிறது. எல்லோருக்கும் தெரியும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது என. பெரும்பாலானோர் பணம் வாங்குவதும் தெரியும் தேர்தல் கமிஷனுக்கு. ஆனாலும் தேர்தல் நடத்தப்படுகிறது.

பணம் கொடுக்கப்பட்டது என்று தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சட்டம் என்ன செய்து கிழித்தது?

இங்கு யாருக்கும் வெட்கமில்லை. 

இந்திய அரசிலமைப்புச் சட்டம் கேலிக்குட்படுத்தப்படுவதை எல்லோரும் வேடிக்கைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கொண்டிருக்கிறோம்.

என்ன செய்ய முடியும் நம்மால்? வேடிக்கை...வேடிக்கை. வேடிக்கை பார்ப்பதை தவிர?

காவல்துறை காவல் காக்கிறது. பணம் யாரும் எடுத்துப் போக கூடாது என. ஆளும்கட்சி ஆட்களை காவல்துறை என்ன செய்து விட முடியும்?

தேர்தல் கமிஷனின் மற்றுமோர் தேசதுரோகம் (ஆம் தேச துரோகம் என்றுதான் சொல்கிறேன்) தமிழகத்தில் நடத்தப்படும் 2021 தேர்தல்.

எப்படி என்று பார்க்கலாமா?


மேலே இருக்கும் தேர்தல் கமிஷன் அறிவிப்பினைப் பாருங்கள். தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கும் தேதி 19.03.2021. விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் நாள் 22.03.2021ம் தேதி. 

விண்ணப்பம் ஏற்கப்படுகிறதா இல்லையா என்பது 22ம் தேதிதான் தெரியும். அதாவது போட்டியிடுகிறோமா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள தேர்தலுக்கு 14 நாட்களுக்கு முன்புதான் தெரிய வரும்.

இந்த பதினான்கு நாட்களுக்குள் சுயேச்சையாக ஒருத்தர் போட்டியிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர் எப்படி தொகுதி முழுக்கவும் பிரச்சாரம் செய்ய முடியும்?

பெரிய கட்சிகளுக்கு சின்னம் பேசும். கட்சி ஆட்கள் கார்களில் சுற்றி வந்து விடுவார்கள். அவர்களுக்கான கட்டமைப்பு இருக்கிறது. எளிதில் போஸ்டர் ஒட்டுவதிலிருந்து எல்லா பிரச்சாரத்தையும் செய்து விடுவார்கள். 

ஆனால் ஒரு சுயேச்சையினால் அது முடியுமா? பதினைந்து தெருக்கள் பிரச்சாரம் செய்யவே பத்து நாட்கள் ஆகி விடும். இதர பகுதிகளுக்கு எங்கனம் செல்ல இயலும்? இது கொடுமை அல்லவா? வாய்ப்பு கொடுக்காமல் ஏன் இத்தனை குறுகிய காலத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும்? என்ன அவசரம் வந்து விட்டது? ஓட்டு எண்ணுவதற்கு ஏன் 30 நாட்கள்?

இதுதான் தேர்தல் கமிஷன் செய்திருக்கும் ஜன நாயக தேசத்துரோகம். தனியொருவனுக்கு உணவில்லை என்றால் ஜகமே அழிக்கப்பட வேண்டும் என்றான் ஒருவன். 

வெட்கமாயில்லையா தேர்தல் கமிஷனுக்கு?

தனியொருவன் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவும், சிறிய கட்சிகளை அழித்திடவும் ஆளும் பாஜகவினரால் மிக மிகத் தந்திரமாக மோசடி செய்யப்பட்டு இந்திய ஜனநாயகம் அழிக்கப்படுகிறது. 

அதை தேர்தல் கமிஷன் கொஞ்சம் கூட யோசிக்காமல், ஏற்றுக்கொண்டு சுதந்திரத்தும், இந்திய இறையாண்மைக்கும், ஜன நாயகத்திற்கும், இந்திய மக்களுக்கும் துரோகத்தினையும் அக்கிரமத்தினையும் செய்துள்ளது.

இதைப் பற்றி எவரும் இங்கு பேசியதாக தெரியவில்லை. வெட்கமில்லாதவர்கள், அறமற்றவர்கள், தீங்கிழைப்பவர்களால் இதைப் பற்றி யோசிக்க கூட முடியாது.

ஆனால் இவர்கள் தான் ஆன்மீகம் பேசுகிறார்கள். மதம் பேசுகிறார்கள். தர்மம் அறம் பற்றி மேடைகளில் கத்துகிறார்கள்.

இங்கு இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் அனைவரின் அதர்மங்களை நாம் அறிவோம். ஆனாலும் யாரோ ஒருவருக்கு ஓட்டுப் போடுவோம். இவ்வுலகிற்கு தீங்கு செய்வதில் மனிதர்களுக்கு நிகர் எவருமுண்டா என்று யோசித்துப் பாருங்கள்.

எங்கே சென்றது நல் எண்ணங்கள்? எங்கே போனது அறம்? எங்கே போனது தர்மம்? ஏன் எல்லோரும் ஓடி ஒளிந்து கொண்டீர்கள்? ஒளிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை சுகமாகி விடுமா?

வாழும் நாட்களில் நாம் வாழும் பூமிக்கும், சமுதாயத்துக்கும் நன்மை செய்யக்கூடாதா? கொஞ்சம் கூட அறச்சிந்தனை அற்றவர்களாக மாறிப் போனீர்களே ஏன்? யோசித்துப் பாருங்கள்.

துன்பம், துயரம், கஷ்டம் என்று கதறிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் அதர்மங்களை மனம் கூசாமல் செய்பவர்களுக்கு கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உனக்கு வரும் நல்லது கெட்டது எல்லாமே உன்னால் தான் என்பதை நீ அறியும் போது வாழ்வின் கடைசி நிலையில் இருப்பாய் என்பார்கள். 

இதோ தமிழ் நாட்டில் ஓட்டே போடாத ஒருவர் முதலமைச்சர் ஆனார். வேடிக்கை பார்த்தோம். ஐந்து லட்சம் கோடி கடன் வைத்தார் வேடிக்கை பார்த்தோம். மாணவர்களுக்கு மருத்துவ கல்வியை எட்டாமல் ஆக்கினார். வேடிக்கை பார்த்தோம். மின்சாரத்துறையில் பல ஆயிரம் கோடி ஊழல் என்கிறது சிஏஜி. வேடிக்கை பார்த்தோம். சாலைகளில் ஊழல், பாலங்களில் ஊழல், ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை பராமரிப்பு மூன்று கோடி என ஊழல். முட்டையில் ஊழல், ரெவின்யூ துறையில் தொட்டதற்கெல்லாம் ஊழல். எல்லாவற்றையும் வேடிக்கைதான் பார்க்கிறோம். இனியும் என்ன ஆகப்போகிறது? மீண்டும் வேடிக்கை பார்ப்போம்.

இந்த 2021 தேர்தல் தேசத்துரோக தேர்தல் என்றுதான் அழைக்கப்பட வேண்டும். தேர்தல் கமிஷன் யாரோ ஒரு கட்சிக்கு அடிபணிந்து இந்திய மக்களுக்கு தேசத்துரோகம் செய்திருக்கிறது என்பது உண்மை.

குறிப்பு : கடந்த தேர்தலில் அடியேன் சுயேச்சை ஒருவருக்கு ஓட்டுப் போட்டேன். அந்த ஓட்டு பதிவாகவே இல்லை. விவிபாட் ஒப்புகை சீட்டு கூட பரிசீலிக்கப்படாது என்கிற போது ஓட்டுப் போடுவதால் என்ன பயன் என்று தெரியவில்லை. ஓட்டு மெஷின் நம்பிக்கையற்றவை.

மேலும் ஒரு உபகுறிப்பு: ஜோதிடம் என்பது மோசடி பொய் என்பதற்கான ஆதாரத்துடன் அடுத்த கட்டுரை வரும். அதிரப்போகின்றீர்கள்.