குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கோவை தங்கவேல். Show all posts
Showing posts with label கோவை தங்கவேல். Show all posts

Friday, February 4, 2022

நரலீலைகள் - மோஸடி மன்னராட்சி - அரசியல் தத்துவம் (10)

(ஐ) - (I) உரை
 
இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் கடுமையான ஏழ்மை நிலையில் தள்ளப்பட்டோர் 5.60 கோடி இந்தியர்கள்

2021ஆம் ஆண்டில் 13.40 கோடி இந்தியர்கள் இன்னும் மோசமான ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஒரே ஆண்டில் 7 கோடி பேர் பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டார்கள்.

கொரானா காலத்தில் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தில் சுகாதார பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் மொத்த தொகையில் திடீரென்று 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஏன்? 

மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்திலும் கல்விக்கான நிதியில் 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஏன்?

2020 -2021ம் ஆண்டில் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

மேற்கண்ட செய்திகள் ஆக்ஸ்ஃபேம் இந்தியா (Oxfam India) இணைய தளத்தில் கிடைக்கிறது கொல்லும் சமத்துவமின்மை என்ற தலைப்பில்.

இப்படி எல்லாம் பத்திரிக்கைகள் பொய் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். 

அவர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். 

இந்திய மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.

2020ஆம் ஆண்டில் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 23.14 லட்சம் கோடியாக இருந்தது.

இந்தியாவே முடங்கிப் போயிருந்த கொரானா காலத்தில் இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 53.16 லட்சம் கோடி உயர்ந்திருக்கிறது.

இந்தியர்களின் மொத்த சொத்து மதிப்பு 100 சதவீதம் எனில் இதில் 94 சதவீதம் சொத்துக்கள் வெறும் 140 பணக்காரர்களிடம் இருக்கிறது. மீதி இருக்கும் 6 சதவீதம் சொத்துக்கள் மட்டுமே இதர இந்தியர்களிடம் உள்ளது.

ஒரு இந்திய பணக்காரரின் சொத்து மதிப்பு 2020ம் ஆண்டில் 8.9 அமெரிக்க பில்லியன் டாலர்கள். 2021ம் ஆண்டில் சொத்து மதிப்பு 82.2 அமெரிக்க பில்லியன் டாலர்கள்.

ஒரே ஆண்டில் 74 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்வு. 

ஒரு பில்லியன் டாலர்கள் என்பது இந்திய ரூபாயின் மதிப்பில்  1,00,00,00,000 US Dollar =  74,68,30,00,000 Indian Rupee (ஏழாயிரத்து நானூற்றி அறுபத்தெட்டு கோடி ரூபாய்) என்றால் 74,000,000,000 US Dollar = 5,526,542,000,000 Indian Rupee (ஐந்து இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து அற நூற்றி ஐம்பத்து நான்கு கோடி ரூபாய்) 

ஒரே ஆண்டில் இவ்வளவு சொத்து மதிப்பு நம் இந்திய தேசத்தின் எனது நண்பரின் சொத்து உயர்ந்திருக்கிறது. 

சாதனை... சாதனை... சாதனை...

உங்களிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

பணம் அல்ல சாதனை.  

இந்தியர்கள் ஆன்மீக வாதிகள். அவர்களுக்கு பணம் பிரதானம் இல்லை.

உங்களுக்கு ஆன்ம அமைதிதான் வேண்டும். எவரோ பணக்காரர்ரானால் என்ன ஆகா விட்டால் என்ன? அந்தப் பணத்தினால் அமைதியைக் கொண்டு வந்திட முடியுமா?

கடவுளின் முன்னால் பணமெல்லாம் தூசு அல்லவா?  

நாம் பக்தி யோகத்தில் மூழ்கிட வேண்டும். 

நாமெல்லாம் கடவுளின் குழந்தைகள். 

இங்கு பணக்காரர்கள் பற்றி யோசிக்க கூடாது. பணம் மனதுக்குள் வந்து விட்டால் பக்தி போய் விடும். பணமிருக்கும் உள்ளத்தில் கடவுள் இருக்க மாட்டார்.

கடவுள் இன்றி இவ்வுலகமே இல்லை.

ராம நாமமே சிறந்த வாழ்க்கை தத்துவம். 

ஆகவே 94 சதவீதம் சொத்துக்கள் வெறும் 140 பணக்காரர்கள் அனுபவிக்கின்றார்களே என்று பொறாமை படக்கூடாது.

உள்ளத்திலே பொறாமை வந்து விட்டால் கடவுள் உங்களிடமிருந்து விடை பெற்று விடுவார். பக்தி  அகன்றோடி விடும். பக்தி இல்லா மனிதம் சடத்துக்கு சமானம்.

உயர் படிப்பும், உயர் பதவியும் உங்களுக்கு கிடைக்கவில்லையே என்று விசனப்படக்கூடாது. இனி உங்களால் அதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஏனென்றால் படிக்கவே அனுமதிக்க கூடாது என்று அரசாங்கம் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. அங்கனம் அனுமதித்தால் மட்டும் தானே நீங்கள் அதைப் பற்றிச் சிந்திப்பீர்கள். சிந்தனை இருந்தால் மட்டுமே தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். குழப்பங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும்.

உங்களுக்கு விதிக்கப்பட்டது இதுவே என்று உளச்சாந்தி கொள்ளல் தான் இராமபிரானின் பக்தர்களுக்கு உகந்தது.

இதோ இந்தியர்களுக்கு ராமர் கோவில் கிடைத்து விட்டது.

பிறகென்ன வேண்டும்? 

ராமரிடம் செல்லுங்கள். பிரார்த்தனை செய்யுங்கள். உங்களின் ஏழ்மையை அவர் சரி செய்து விடுவார்.

இராமபிரானின் அன்பும் கருணையும் கிடைத்து விட்டாலே, அனுமன் உங்களுக்கு உதவ ஓடோடி வந்து விடுவார்.

எத்தனை கோடி பேர் வேலை இழந்தாலும் உங்களுக்கு வேலை கிடைக்கும். ஏனென்றால் அனுமனின் ஆசியும், பகவான் இராமபிரானின் பக்தருக்கும் வேலை கிடைத்தே விடும். இராம பக்தர் ஸ்ரீ ஹனுமானுக்கு கோவில்களை பக்தர்கள் எழுப்பி வழிபாடு செய்து புகழ் பரப்புவது போல, நீங்களும் இராமபக்தர்கள் ஆனால் கிடைக்கும் என்று வரலாறு சொல்கிறது.

அன்புமிக்க இந்தியர்களே, உங்களின் சேவகனான ஐ (நான்) உங்களுக்காகவே வாழ்கிறேன். 

கடந்த 60 வருடமாக அரசியல் திருடர்கள் மக்களிடமிருந்து அவர்களின் சொத்துக்களை திருடிக் கொண்டிருந்தார்கள்.

உங்களிடமிருந்து உங்கள் சொத்துக்களை அரசியல் எதிரிகளிடமிருந்து பாதுகாத்திட வேண்டுமென்ற உன்னத நோக்கில்தான் 94 சதவீத சொத்துக்களை நம் அரசாங்கத்திடம் அடிபணிந்து கிடக்கும் வெறும் 140 நபர்களிடம் கொடுத்து பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களிடம் நேரடியாக பணம் கேட்டுப் பார்த்தேன். எனது பெயரில் இருக்கும் கஜானாவில் லட்சம் கோடி கூட சேரவில்லை என்பது எவ்வளவு பெரிய தேசத்துரோகம்?

உங்களுக்காகவே வாழும் நான் கேட்கிறபோது பணம் தராமல் இருக்கின்றீர்கள். அது சரியா? தகுமா?

உங்கள் பணத்தினைக் கொள்ளை அடித்திட உள்ளூர் கட்சிக்காரர்கள் துடித்துக் கொண்டிருப்பது கண்டு எனக்குள் சொல்லொண்ணா வேதனை மண்டியது. 

உங்களுக்குள் அறியாமை எனும் இருள் மண்டிக்கிடப்பதால், உங்களால் அரசியலைப் புரிந்து கொள்ள முடியாது.

மக்கள் சேவகனான நான் ஒரு புது வித யோஜனையாக வரி விதிப்பினை உருவாக்கினேன். விலைவாசி உயர்ந்தது. வரி வசூலும் உயர்ந்தது. உங்களுக்குத் தெரியாமலே உங்களிடமிருந்து எனது கஜானாவுக்கு பணம் இன்று லட்சம் கோடியில் வசூலாகிறது.

தேசப்பற்று மிக்க நீங்கள் வரி செலுத்துதல் அவசியம். தேசத்தை நீங்கள் நேசிக்க வேண்டும். நீங்கள் செலுத்து வரி பற்றி கவலைப்படாதீர்கள். அது  140 பணக்காரர்களிடம் பத்திரமாய் இருக்கும். எவராலும் திருட முடியாது. 

உங்கள் சம்பளம் குறைந்திருக்கிறது. விலை உயர்ந்திருக்கிறது என்று கவலைப்பட வேண்டாம். உங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டிருக்கிறேன். ஆகவே குறைவாக உணவு உட்கொள்ளுங்கள். அதிக உணவு ஆபத்து அல்லவா?

இராமபிரானுக்கு ஒரு நேரம் அல்ல அல்ல மாதம் பத்து நாட்கள் உபவாசம் இருங்கள். அவரின் ஆசியைப் பெறுவதை விட வேறென்ன வேண்டும் உங்களுக்கு?

* * *

மேடையிலிருந்து வெளியேறிய ஐ, மீண்டும் ஒரு உடையை மாற்றிக் கொண்டார். மேக்கப் விமன் டச்சப் செய்தார்.

”அடுத்த சீன் எப்போது?” என்று கேட்டார் நடிகர் ஐ.

“பிறரும் நடிக்க வேண்டாமா? அவர்களின் சீன் முடிந்ததும் உங்க சீனைச் சொல்கிறேன்” என்றார் உச்சிக்குடுமி இயக்குனர்.

* * *

”காலம் எல்லாவற்றுக்குமான தீர்ப்புகளை பதிய வைக்கும். நானென்ற அகம்பாவம் அழிவில் முடியும் என்பதை மனிதர்கள் மறந்து போய் விடுகிறார்கள். உயர் ஜாதி வஞ்சகர்களின் கட்டுப்பாட்டில் கிடக்கும் இந்தியா விடுதலை அடைய இன்னுமோர் சுதந்திரப் போர் வெடித்தாலும் வெடிக்கும் அபாயம் உண்டாகி இருப்பதை உணர முடிகிறது” என்றான் ஜூனா.

”ஆம், மக்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டால் வயிற்றுப்பாட்ட்டினைச் சமாளிக்கவே நேரமிருக்கும். அரசியலில் மக்களுக்கு எதிராக நடக்கும் செயல்களை புரிந்து கொள்ளவே முடியாது அல்லவா? ஆகவே தான் மக்களை அரசாங்கங்கள் ஏழ்மையில் தள்ளிக் கொண்டிருக்கின்றன. யோசிக்கவே முடியாது. பசித்திருக்கும் போது ஆக்கப்பூர்வ சிந்தனைகள் வராது அல்லவா? ஜூனா” என்றான் பீமா.

* * *

”என்னடா சந்து, ஐ என்ற புதிய ஆள் வந்திருக்கின்றானே நாவலில்”

“ஆமா மாயாண்ணே, எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. பார்க்கலாம், அடுத்து என்ன எழுதுகிறான் இந்த நாவலாசிரியன் என” என்றான் சந்து.

தொடரும் விரைவில்...

Saturday, March 20, 2021

நிலம் (78) – லோன் வாங்கியதற்கு சிபிஐயினால் மோசடி வழக்கு

காலம் எல்லாவற்றுக்குமான பதிலாக இருக்கும். நற் செயல்களுக்கும், தீச் செயல்களுக்கும் காலம் சொல்லும் பதில்தான் உண்மை.

நாமெல்லாம் இல்லாத காலத்தில் பிணைக்கப்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

வரலாறுதான் காலம் பற்றிப் பேசுகிறது. ஆனால் உண்மையில் பிரபஞ்சத்துக்கு காலம் என்பது கிடையாது. உண்மை பேசினால் பிடிப்பதில்லை. ஆகவே விட்டுவிடலாம்.

கடும் உழைப்பினால் பெறக்கூடிய பொருளாதாரத்தை பாதுகாப்பாக வைத்திட நிலம் மட்டுமே மிகச் சரியான ஒன்று. அதைத் தவிர தங்கம் மற்றும் வங்கியில் டெபாசிட்கள் என்று பிறவனவும் உண்டு. ஆனாலும் 100 சதவீதம் பாதுகாப்பானது நிலம் அல்லது பூமி மட்டுமே. அவ்வாறு பூமிகள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய பல்வேறு காரணிகளைக் கவனிக்காமல் விட்டால் வரக்கூடிய இழப்பு என்ன தெரியுமா? வாழ்க்கை. ஆம் வாழ்க்கையை இழக்க நேரிடலாம். அப்படி வாழ்க்கையை இழந்தவர்களைப் பற்றித்தான் இப்பதிவு.

உங்கள் அனைவருக்கும் அவசியமான ஒன்று. இதை பலருக்கும் தெரிய வைத்திடுங்கள். இப்பதிவினை ஷேர் செய்திடுங்கள். அது உங்களுக்கும் பயன் தரலாம்.

பொருளாதாரத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொருவருக்கும், பின் புலம் இல்லாதவர்களுக்கும் வங்கிக் கடன் பெரும்பான்மையாக உதவுகிறது. புத்திசாலிகள் வங்கிகளைக் கொள்ளை அடிப்பார்கள். சாதாரணவர்கள் வங்கிகள் மூலம் வளர்ச்சி அடைவார்கள் இல்லையெனில் அழிக்கப்படுவார்கள். இது அவரவரின் வாழ்வியல் சூழலைப் பொறுத்தது.

இப்போது இரண்டு முக்கியமான விஷயத்தைப் பார்க்கலாம்.

ஒருவர் தான் கிரையம் பெற்ற சொத்தினை அரசு வங்கியிடம் அடமானம் வைத்து கடன் பெற்றார். நல்ல முறையில் தொழிலும் நடந்து கொண்டிருக்கிறது. கடனும் தொண்ணூறு சதவீதம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் கடன் பெற்ற வங்கியின் மேலாளார் மாறுகிறார்.

கார், பங்களா, ஆள், அம்பு என படாடோபமாக வாழ்ந்து கொண்டிருந்த கடன் வாங்கியவர் வீட்டுக்கு சிபிஐ வருகிறது. கைது செய்து ரிமாண்ட் செய்து ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

ஏன்?

அவர் கடன் பெற வங்கியில் அடமானம் வைத்த சொத்து போலியானது என்று சிபிஐ குற்றம் சாட்டுகிறது. அது வேறொருவரின் சொத்து என்பதைக் கண்டுபிடிக்கிறது. நான்காண்டு காலம் வங்கி ஒன்றும் செய்யவில்லை. வங்கி லீகல் ஒப்பீனியன் பார்த்துதான் அடமானம் வைத்துக் கொண்டு கடன் கொடுத்திருக்கிறது. ஆனால் மோசடிச் சொத்துப் பத்திரம் என்று பின்னால் கண்டுபிடிக்கிறார்கள்.

விளைவு பொருளாதார மோசடிக் குற்றம் – அரசு வங்கியை ஏமாற்றியது தேசத்துரோகம் அல்லவா?

இதே போல மூன்றாம் நபர் சொத்துக் காப்புறுதிக் கடன் வாங்கியவர் ஒருவரும் பொருளாதார மோசடிக் குற்றப்புகாரில் சிக்கி, சிபியினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

இருவரின் தொழிலும் முடங்கியது. சொத்துக்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்தும் சீல் செய்யப்பட்டு விட்டது.

இனி என்ன செய்ய முடியும்? குற்றவாளிக்குத் தண்டனை நிச்சயம் அல்லவா?

ஏன் இந்த நிலை வந்தது?

கடன் வாங்கியவர்களை ஏமாற்றிச் சொத்து எழுதி வைத்தவர்கள் மீது வழக்கு இல்லை.

ஆவணங்களை சரிவர பரிசீலனை செய்யாது கடன் வழங்கிய மேலாளர், லீகல் வழங்கிய வக்கீல் மீது வழக்கு இல்லை.

ஆனால் ஏமாற்றப்பட்டவர் மீது வழக்கு.

ஏமாற்றியவர்களும், தன் வேலையைச் சரி வரச் செய்யாதவர்களின் மீதும் இங்கு வழக்கு ஏதும் இருக்காது.

இதுதான் இங்கு இருக்கும் சட்டம்.

சட்டத்தில் இருக்கும் ஓட்டையைப் பார்த்தீர்களா?

கடன் வாங்கியவர் கிரையம் கொடுத்தவர் மீது மோசடி வழக்குத் தொடுக்கலாம். ஆனால் தலைமீது தொங்கும் இந்தக் கத்தியெனும் வழக்குக்கு என்ன பதில் சொல்ல முடியும்?

கடன் வாங்கியவர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டு விடும். அதுமட்டுமா, தீராத பழி வேறு.

ஆகவே நண்பர்களே, ஒரு சொத்தினை வாங்கும் முன்பு லீகல் ஒப்பீனியன் என்பதும், டைட்டில் டிரேஸ்ஸிங் என்பதும் வெகு முக்கியம் என்பதை என்றைக்கும் மறந்து விடாதீர்கள்.

குறிப்பு: சொத்துக்களின் லீகல் டிரேஸ்ஸிங் மற்றும் ஒப்பீனியன் ஆகியவைகளை எமது நிறுவனம் வழங்கும்.

 

Sunday, April 5, 2020

வெற்றியடைய சூட்சும ரகசியம்


வெற்றி என்பதன் விளக்கம் ’பணக்காரனாக இருப்பது’ என்று நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். பணக்காரர்களின் நிலை இன்றைக்கு என்னவென்று அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். இன்னும் மூன்று மாதங்கள் கொரானாவால் வீட்டில் முடங்கினால் ஒவ்வொரு பணக்காரனும் பிச்சைக்காரனாகி விடுவான். கீழ்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கமும் ஏற்கனவே பிச்சைதான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே வெற்றி என்பது மாயை என்று புரிந்து கொள்ளுங்கள்.

வாழும் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்கிறோமா என்பதைத் தான் என்னைப் பொறுத்தவரை வெற்றி எனக் கருதுவேன். நாம் ஒவ்வொருவரும் வாழும் சூழல்கள் விதவிதமானவை. சூழலுக்கு ஏற்ற பழக்க வழக்கங்கள், உணவுகள், மொழிகள், உடைகள் என ஒவ்வொருவரும் தனிப்பட்ட சூழலியல்வாதிகள்.

அமெரிக்கனைப் போல, இங்கிலாந்துக்காரனைப் போல, ஜப்பானியனைப் போலவெல்லாம் தமிழ்நாட்டில் வாழ முடியாது. பூமியின் தட்பவெட்பத்துக்கு ஏற்ப உருவான சூழ்நிலை, உருவாக்கி இருக்கும் சமூகக் கட்டமைப்புகளில் நம் வாழ்க்கையும் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதினை இப்போதாவது உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இமயமலை, நேபாளம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைச் சூழல் அவர்கள் தினமும் உணவு தேடுவதாகத்தான் இருக்கின்றன. உணவைத் தேடுவது, அதற்காக உழைப்பது தான் அவர்களின் முதல் வேலை. பிறகு உண்பது, உல்லாசம், உறக்கம், ஆட்டம், பாட்டமாய் வாழ்க்கை சுகத்தில் கழிகின்றது. பல யுடியூப் வீடியோக்கள் காணக் கிடைக்கின்றன. அவைகளைத் தேடிப் பிடித்துப் பாருங்கள். அங்கு வசிப்பவர்கள் நோய் நொடி இன்றி சர்வசாதாரணமாக 100 வயதுக்கும் மேல் வாழ்கிறார்கள்.

இங்கோ, பசிக்காக படிப்பு, வேலை என ஒவ்வொருவரும் வாழும் வாழ்க்கையின் போக்கு படு கேவலமானதாக இருக்கிறது. படித்தால் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்தால் காசு கிடைக்கும். அந்தப் பணத்தினால் சுகபோக வாழ்க்கை வாழலாம். ஆனால் வாழ்க்கை? இன்பம்? குழந்தையாக இருக்கும் போதே, படி படி படி. படித்து முடித்ததும் பணி, பணி, பணி. பணி கிடைத்ததும் வேலை, வேலை, வேலை. கிடைக்கும் பணத்தை அனுபவிக்க கூட முடியாமல் ஜக்கி, ரவிசங்கர், நித்தி ஆகிய அட்டைகளிடம் கொண்டு போய் கொட்டி விட்டு, தேடிக்கொண்டிருப்போம் மன நிம்மதியை, வாழ்க்கையை. எல்லாம் கை விட்டுப் போயிருக்கும். வயதும் போயிருக்கும். நல்ல சாப்பாட்டினைக் கூட சாப்பிட முடியாது. சாப்பிட்டால் உயிர் போய் விடும் என்பார்கள் மருத்துவர்கள்.

காசு சம்பாதிப்பதுதான் வாழ்க்கை என்று ஒவ்வொரு மனிதனும் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறான். இதிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதானதல்ல. மனம் எனும் அரக்கனிடமிருந்து விலகி, உண்மையை உணர்ந்து கொள்வது என்பது தற்போதைய சூழலில் முடியாத காரியம்.

இருக்கும் சூழலில் வெற்றியாக வாழ்க்கையை எளிதாக வாழ ஒரு சூத்திரம் ஒன்று உள்ளது.

அடியேனுக்கு சிறிய வயதில் இருந்து சாமியார்கள், வயதானவர்களுடன் தான் நட்பு. என் வயது நட்புக்காரர்கள் எனக்கு இல்லை. என்னை விட அனுபவசாலிகளுடன் பேசுவதையும், நட்புக் கொள்வதையும் விரும்புவன். அந்த வகையில் எல்லா மதங்களிலும், யோக, ஆன்மீக தொடர்பான விஷயங்கள் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறேன்.

தியானம், யோகம், யோகா, மூச்சுப்பயிற்சி எல்லாம் செய்து பார்த்தேன். எதுவும் எனக்கான தேடலை, நான் தேடிய வழியைக் காட்டக்கூட இல்லை. முதலில் என் மனத்தை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கண்ணை மூடினால் அதுபாட்டுக்கு எங்கெங்கோ அலைகிறது.

சுழித்தோடும் ஆற்றை நினைக்கிறது. பெருகி வழிந்தோடும் அருவியைப் பார்க்கிறது. அமெரிக்காவின் நயாகராவிற்குச் செல்கிறது. உருளைக் கிழங்கு மசாலாவுக்குச் செல்கிறது. ஆலப்புழா செல்கிறது. நயன்தாராவை நினைக்கிறது. ரூடோஸ் நாய்க்குட்டி சாப்பிட்டாச்சா என நினைக்கிறது. நிமிட நேரத்தில் லட்சக்கணக்கான மைல்கள் செல்கின்றது. எண்ணங்கள் புற்றீசல் போல பெருகிக் கொண்டே இருக்கின்றன. எப்படிக் கட்டுப்படுத்தி, மனதை ஒரு நிலைப்படுத்தி, சூட்சுமத்தில் மனதை நிலைக்க வைத்து தியானிப்பது?

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை இப்படித்தான் மனது அலைந்து கொண்டிருந்தது வானத்தில் காற்றின் வேகத்திற்கு ஏற்ப அலையும் மேகங்கள் போல.

மனதை அடக்க வேண்டும். இல்லையெனில் மனது எனும் குப்பைத் தொட்டிக்குள் அடங்கிப் போகனும். இதைத்தவிர வேறு வழியே இல்லை என்ற நிலை தான் நம் ஒவ்வொருவருக்கும். எனக்கும் அப்படித்தா இருந்தது.

தேடிக் கொண்டிருந்தேன் எளிய வழியை. அது கிடைத்தே விட்டது.

ஒரு ஜப்பானியன் போல அமைதியாக, எளிமையாக, வலிமையாக, அன்பாக வாழ துவங்கினேன். வெற்றி பெறுவது எங்கனம்? வாழ்க்கையின் போக்கிற்குத் தகுந்தவாறு எப்படி தொடர்வது என்று ஓரளவிற்குப் புரிந்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.

2008ல் இருந்து பிளாக் எழுதுகிறேன். அன்றையிலிருந்து இப்போது வரையிலும் எழுதியிருக்கும் எழுத்துக்கள் சொல்லும் நானெப்படி மாறி இருக்கிறேன் என்று. அவ்வப்போது படித்துப் பார்ப்பேன். வேடிக்கையாக இருக்கும். இருப்பினும் அவைகள் நான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதை எனப் புரிந்து கொள்வேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். இந்த வாக்கியம் உலகப் புகழ் பெற்றது. ஆனால் என்னைப் பொறுத்தவரை எதுவும் மாறவே இல்லை என்பதுதான்.

நான் கண்டடைந்த ‘அந்த எளிய’ வழியின் ஒரு பயிற்சியை நான் பழகத் துவங்கினேன். அது நான் தேடிய பாதைக்குத் தள்ளிக் கொண்டு சென்றது.

ஜப்பானியரின் வாழ்க்கையில் ‘டீ அருந்துவது’ என்பது ஒரு சமுதாய வழக்கம். அமைதியாக காலை மடக்கி அமர்ந்து அரைத்த பச்சைத் தேயிலைத் தூளில் சுடுநீர் விட்டு வடிகட்டிய தேநீரை அவர்கள் மகத்தான ஒரு மவுனத்தின் மூலம் அருந்துவார்கள்.

வெள்ளையும் பழுப்பும் நிறைந்திருக்கும் அமைதியான வீட்டு அறை ஒன்றில் அமைதியான, ஆனந்தமருளும் மவுனத்தின் பிடியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்துவதை தவமாகச் செய்வார்கள்.

அதுதான் ஆரம்பத்துவக்கம்.

மவுனம், அமைதி, புன் சிரிப்பு முதலில் இதை பழகிக் கொள்ளுங்கள்.

என் குரு நாதர் வெள்ளிங்கிரி சுவாமியின் வாக்கியம், ”பேச்சைக் குறைத்து மூச்சைக் கவனி”. இது ஏதோ ஒரு சாதாரண வாக்கியம் என்று நினைத்து விடாதீர்கள். பேச்சைக் குறைத்து விட்டு, உயிர் நாதமெனும் மூச்சைக் கவனி என்கிறார். கவனி என்பதுதான் எல்லாவற்றுக்குமான ஆரம்பப் புள்ளி.

தொடர்ந்து படியுங்கள்.

ஜப்பானின் புகழ் பெற்ற ஜென் தத்துவங்களைப் படித்திருப்பீர்கள். ஜென் என்பதைப் பற்றிய புரிதல்கள் பலப்பல. ஜென் தத்துவங்களின் ஒரே நிலை தன்னை அறிதல். தன்னை அறிதல் என்பது சூனியத்தில் தன்னைக் கரைப்பது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவுடனும் தன்னையும் இணைத்துக் கொள்வது. அவ்வாறு இணைத்துக் கொண்டவர்கள் தொட்டால் நோய் நீங்கும். பழுதானவற்றை நீக்கிப் பழையபடி உருவாக்குவார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஒவ்வொரு அணுவும் இயங்கும். அவ்வாறானவர்கள் தான் புனிதர்கள் என்று அழைக்கிறோம்.

சரி, எங்கெங்கோ சென்று விட்டேன்.

ஒரு சிறிய பயிற்சியைத் தொடர்ந்து செய்யுங்கள். எல்லாமும் தெளிவாகி விடும்.

முன்பே பலரும் சொல்லி இருப்பதுதான் இது.

படிக்கின்றீர்கள் என்றால் நீங்கள் படிப்பதாக நினையுங்கள். சாப்பிடும் போது சாப்பிடுவதாக நினையுங்கள். எந்த வேலை செய்தாலும் வேலை செய்கிறேன் என நினையுங்கள்.

மனதினை இரண்டாகப் பிரியுங்கள். ஒரு மனதை வெளியில் கொண்டு வந்து நீங்கள் செய்வதை நீங்களே வேடிக்கைப் பாருங்கள். புரிகிறதா? நீங்கள் செய்வதை நீங்கள் வேடிக்கைப் பாருங்கள்.

ஆரம்பத்தில் சுவாரசியமாக இருக்கும். போகப்போக பழகி விடும். பின்னர் இரண்டு மனதும் ஒன்றாகும் போது நடக்கும் மாயா ஜாலத்தை அப்போது உணர்வீர்கள்.

அந்த மனதும் இல்லாது போக வேண்டுமெனில் அதற்கும் ஒரு பயிற்சி இருக்கு. அது இப்போது வேண்டாம். ஏனென்றால் நாமெல்லாம் லெளகீக வாழ்க்கையில் இருக்கிறோம். அது நமக்குச் சரிப்பட்டு வராது.

இதை வெற்றியின் முதல்படி என அடித்துச் சொல்கிறேன்.

நிதானம், நேர்மை, ஒழுக்கம், அமைதி, பேரமைதியுள்ளம் ஆகியவை உங்களுக்கு வெற்றிக் கனியை பறித்து தரும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

உங்களுக்கும் தானே…..

நம்பிக்கையே வாழ்க்கை….!


Tuesday, September 20, 2016

பூம் பூம் மாட்டுக்காரன்

பெரிய வெங்கல அண்டாவில் நெல்லைக் கொட்டி தண்ணீர் சேர்த்து, அண்டாவின் அகன்ற வாய்ப்பகுதியில் கும்மலாய் குவித்து அதில் தண்ணீரைத் தெளித்து அதன் மீது ஈரச்சாக்கை போட்டு கீழே அடுப்பு மூட்டி எரிய விடுவார்கள். சூடு ஏற ஏற நெல் அவியும் வாசம் பரவும். நெல்மணிகள் வாய் விரித்து இருக்கும். பதம் வந்து விட்டது. தண்ணீரை வடித்து நெல்மணிகளை கல்வாசலில் கொட்டி பரப்பி விட்டால் வெயிலில் காயும். அடிக்கடி காலால் பிரட்டி விட வேண்டும். பின்னர் மதியம் போல குமித்து சாக்குப் போட்டு மூடி வைத்து விட வேண்டும். இப்படியே மூன்று நாட்கள் அவித்த நெல்மணிகள் ஈரம் காய்ந்து விடும். அதை மூட்டையில் கட்டி வடக்கித் தெரு சுப்பையாதேவர் மில்லுக்கு கொண்டு சென்றால் அங்கு அரவை செய்து தவிடு, அரிசி, குருணை என்று தனித்தனியாக சாக்கில் பிடித்து வீட்டுக்கு வந்து விடும்.

35 வருடங்களுக்கு முன்பு  பெரும் குடி விவசாயிகள் தான் நெல்லைச் சேகரித்து வைத்து அரிசிச் சோறு உண்பார்கள். விவசாயக்கூலிகள் கூலியாக நெல்மணிகளை மரக்கால் கணக்கில் வாங்கிக் கொள்வார்கள். நானே அளந்து போட்டிருக்கிறேன். மரக்கால் என்றால் நான்கு படிகள் கொண்டவை. வீட்டில் வெங்கல மரக்கால் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெரிந்து நெல் வாங்குவது நின்று கூலியாகப் பணம் பெற்றுக் கொண்டார்கள். 

தினமும் வீட்டிற்கு நான்கைந்து தர்மம் பெறுபவர்கள் வருவார்கள். ”அம்மா தர்மம் போடுங்கம்மா” என்ற குரல் கேட்டு அடுக்களைக்குள் இருக்கும் அம்மா கிண்ணத்தில் இரண்டு கைப்பிடி அரிசியைக் கொண்டு வந்து போடுவார்கள். இது தினம் தோறும் நடைபெறும் சம்பவம். ஒரு சிலர் சாப்பாடு கேட்பார்கள். வீட்டின் பின்புறம் வரச்சொல்லி பழைய சோறு, பழைய குழம்புடன் மறக்காமல் வெந்தய மாங்காய் ஊறுகாய் வைத்துக் கொடுப்பார்கள். பூவரச இலையைக் கொய்து அதை விளக்குமாத்துக் குச்சியால் தைத்து இலைபோல தயாரிப்பார் தர்மம் கேட்பவர். அதில் தான் உணவு போடுவார்கள். ஒரு சிலர் அலுமினியத்தட்டுக்களைக் கொண்டு வருவார்கள்.

(பூம் பூம் மாட்டுக்காரர்)

பூம் பூம் மாட்டுக்காரன் எப்போதாவது வருவான். அழகான காளையை அலங்கரித்து தோளில் தொங்கும் மேளத்தின் இருபக்கமும் வளைந்த இரண்டு குச்சிகளினால் இழுப்பான். அது பூம் பூம் என்று சத்தமிடும். காளை மாட்டின் மீது மாட்டப்பட்டிருக்கும் மணிகள் சத்தமிடும். சிகண்டியை வேறு அடித்து வருவான். வாசலில் வந்து நின்றதும் ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விடுவான். பழைய துணிகள் இருந்தால் கேட்பான். தர்மம் கிடைத்ததும் சென்று விடுவான்.

சாமியார்கள் வருவார்கள், பெண்கள் வருவார்கள், வயதானவர்கள் வருவார்கள். “அம்மா, தர்மம் போடுங்கம்மா!” என்ற குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். கல்லூரிக்குச் சென்ற பிறகு அந்த தர்மம் கேட்ட குரல்களும், பூம் பூம் மாட்டுக்காரனையும் நான் இதுவரை பார்க்கவில்லை. இனிப் பார்க்கவும் முடியாது. தர்மம் போடுங்கம்மா என்ற குரலுக்கு இரண்டு கைப்பிடி அரிசியைத்தான் தர்மம் செய்வார்கள். அரிசி கொஞ்சம் கொஞ்சமாக தன் வயத்தை காலத்தின் போக்கில் இழந்து விட்டது.

ஊசி, பாசி என்ற குரல் வாரம் ஒரு முறை கேட்கும். குறத்திகள் அழகான பாவாடை கட்டி, குறுக்கே தாவணி போட்டுக் கொண்டு வருவார்கள். இடது கைப்பக்கமாக துணித் தூளியில் கைக்குழந்தையொன்று உட்கார்ந்திருக்கும். கண் மை, ஊசிகள்,காது குடையும் வஸ்து, பாசிமணிகள் விற்பார்கள். சின்னஞ் சிறு வயதாக இருக்கும் குறத்தி கையில் குழந்தை இருக்கும். நல்ல மஞ்ச மஞ்சளேன்னு இருப்பார்கள். சரோஜாதேவி, பானுமதி, காஞ்சனா என சினிமா பெயர்கள் தான் வைத்திருப்பார்கள். அரிசிக்கு தான் மேற்கண்டவைகளை விற்பார்கள். 

காலத்தின் போக்கில் மறைந்து போன இது போன்ற மனிதர்களும், குடியானவர்களின் தர்மம் செய்யும் போக்கும் இனி எந்தக் காலத்திலும் பார்க்க முடியாது. குடியானவன் வாழ்வில் தர்மம் ஒரு பகுதியாக இருந்தது. வீட்டு வாசலுக்கு வரும் எவரும் வெறும் கையோடு அனுப்ப மாட்டார்கள். 

”தர்மம் செய்யுங்கம்மா” என்ற குரல் இப்போது வீட்டின் வாசல்களில் கேட்பதில்லை. அந்தக்காலத்தில் சாமியார்கள், வயதானவர்கள் தர்மம் செய்யுங்கம்மா என்று கேட்டார்கள். இந்தக் காலத்தில் ஒவ்வொரு குடும்பமே கோவில்களில் இருக்கும் சாமிகளின் முன்னே நின்று கொண்டு “சாமி எனக்கு அதைக் கொடு இதைக் கொடு” என தர்மம் கேட்கின்றார்கள்.

தர்மம் கேட்பது நிற்கவில்லை. ஆட்கள் தான் மாறி விட்டார்கள்.


Thursday, September 15, 2016

குறுஞ்செய்தி இதழில் இணையாசிரியர் அனுபவம்

எனது நண்பரின் நண்பர் திரு.மாதேஷ் என்பவர் புகைப்படக்கலைஞர். நடிகை ஹீராவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர். பிளாக்கில் இருக்கும் புகைப்படத்தினை எடுத்தவர் அவர் தான். மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர். 

ஒரு நாள் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்டினார். குறுஞ்செய்தி என்ற தலைப்பினைப் பதிவு செய்து ரெஜிஸ்டர் ஆஃப் நியூஸ்பேப்பர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதம் அது. 

அவருக்குப் பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினால் தலைப்பினைப் பதிவு செய்து விட்டார். 

“சார் எனக்கு எதுவும் தெரியாது. இந்தப் புத்தகம் வெளியிடுவது நீங்கள் தான், நீங்கள் என்ன முடிவு செய்தாலும் எனக்கு முழுச்சம்மதம். புத்தகம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தால் போதும், நீங்கள் தான் முழுவதும் பார்க்க வேண்டும்” என்று என்னிடம் விடாது கேட்டுக் கொண்டிருந்தார். என்னிடம் நான்கு வருட நட்பில் இருந்ததால் அவருக்கு உதவுகிறேன் என்றுச் சொல்லி விட்டேன். மாதமிருமுறை இதழ் அது. எனக்குத் தெரிந்த நன்கு அறிமுகமான நண்பர்களை ஆசிரியர் குழுவில் இணைத்து ஒரு குழுவினையும் உருவாக்கினேன்.

இதழ் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கோரல்டிராவில் டெம்ப்ளேட் தயார் செய்து ஒவ்வொரு பதிவுகளாக ஏற்றி டிசைன் செய்தேன். கருத்துப் பெட்டகமாக, கொஞ்சம் கிளுகிளுப்பாக (வியாபாரத்திற்காக) இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் கட்டுரைகளை இணைத்தேன். இதழ் பெயர் குறுஞ்செய்தி. ஆகவே அதற்கேற்ற வகையில் செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்ற நினைவில் முதன் முதலாக பத்திரிக்கையை டிசைன் செய்யும் ஆர்வத்தில் முழு ஈடுபாட்டுடன் செய்தேன். குறுஞ்செய்தி புத்தகத்தினை இரண்டே நாட்களில் வடிவமைத்தேன்.

ஒரு சில நண்பர்களிடம் கட்டுரைகளை பெற்று இணைத்தேன். முழு வடிவமைப்பும் செய்தேன். தலையங்கமும் நானே எழுதினேன். அனைத்தும் முடிந்து புத்தகப்பதிப்பாளரைத் தேடிப்பிடித்து முப்பத்தைந்து பக்கங்கள் வெறு மூன்று ரூபாய்க்கு ஒரு புத்தகத்தினைப் பதிப்பிக்க கட்டணம் பேசி ஆயிரம் புத்தகங்களுக்கு ஆர்டரும் கொடுத்தேன். 


(முதல் இதழ்)


(இரண்டாம் இதழ்)

பின் அட்டை விளம்பரத்தை திருப்பூர் யுவராஜ் அவர்கள் பெற்று அதற்குரிய கட்டணத்தையும் கொண்டு வந்து கொடுத்தார்.

முதல் புத்தகத்தினை எனக்கும் மாதேசுக்கும் நட்பு வட்டத்தில் இருந்த நண்பரை வெளியிடச் செய்தேன். ஆயிரம் புத்தகங்கள் பிரிண்ட் செய்து வெளிவந்தது. அனைவருக்கும் கொடுத்தேன்.

ஒரு புத்தகத்தை வடிவமைக்கு பக்கத்துக்கு ரூபாய் 500 கேட்டார்கள். 35 பக்கத்துக்கு கிட்டத்தட்ட 15000 ரூபாய் கொடுக்க வேண்டும். அதை இவரால் கொடுக்க முடியாது. புத்தகத்தினை பிரிண்ட் செய்வதற்கு தனியே கட்டணம் வேறு கொடுக்க வேண்டும்.எழுதுபவர்கள் இலவசமாக எழுதினால் கூட மொத்தச் செலவும் கிட்டத்தட்ட ரூபாய் 20000 ஆகும். இதையெல்லாம் நானே எந்த விதக்கட்டணமும் இன்றிச் செய்தேன்.

என்னால் ஒரு இதழை வெகு குறுகிய காலத்திற்குள் வடிவமைத்து, பதிப்பித்து வெளியிட முடியும் என்கிற தைரியம் வந்து விட்டது. அரசிடம் அனுமதி பெறுவது எப்படி? என்ற அனுபவமெல்லாம் கிடைத்து விட்டது. 

முதல் இதழுக்காக ஒரு வாரம், அடுத்த இதழுக்காக மூன்று நாட்கள் அவ்வளவுதான் விஷயம். பிரிண்ட் ஆக இரண்டு நாட்கள். இதழை வெளியிட வைத்து விட்டேன்.

பத்திரிக்கைத் தொழில் என்பது அவ்வளவு எளிதானதல்ல என்று புரிந்து கொண்டேன். எதிர்காலத்தில் என் மனதுக்குள் இருக்கும் அட்டகாசமான மாத இதழ் கான்செப்டை உருவாக்கம் செய்ய இந்த அனுபவம் எனக்கு கைகொடுக்கும்.