குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ஜென். Show all posts
Showing posts with label ஜென். Show all posts

Sunday, April 5, 2020

வெற்றியடைய சூட்சும ரகசியம்


வெற்றி என்பதன் விளக்கம் ’பணக்காரனாக இருப்பது’ என்று நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். பணக்காரர்களின் நிலை இன்றைக்கு என்னவென்று அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். இன்னும் மூன்று மாதங்கள் கொரானாவால் வீட்டில் முடங்கினால் ஒவ்வொரு பணக்காரனும் பிச்சைக்காரனாகி விடுவான். கீழ்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கமும் ஏற்கனவே பிச்சைதான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே வெற்றி என்பது மாயை என்று புரிந்து கொள்ளுங்கள்.

வாழும் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்கிறோமா என்பதைத் தான் என்னைப் பொறுத்தவரை வெற்றி எனக் கருதுவேன். நாம் ஒவ்வொருவரும் வாழும் சூழல்கள் விதவிதமானவை. சூழலுக்கு ஏற்ற பழக்க வழக்கங்கள், உணவுகள், மொழிகள், உடைகள் என ஒவ்வொருவரும் தனிப்பட்ட சூழலியல்வாதிகள்.

அமெரிக்கனைப் போல, இங்கிலாந்துக்காரனைப் போல, ஜப்பானியனைப் போலவெல்லாம் தமிழ்நாட்டில் வாழ முடியாது. பூமியின் தட்பவெட்பத்துக்கு ஏற்ப உருவான சூழ்நிலை, உருவாக்கி இருக்கும் சமூகக் கட்டமைப்புகளில் நம் வாழ்க்கையும் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதினை இப்போதாவது உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இமயமலை, நேபாளம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைச் சூழல் அவர்கள் தினமும் உணவு தேடுவதாகத்தான் இருக்கின்றன. உணவைத் தேடுவது, அதற்காக உழைப்பது தான் அவர்களின் முதல் வேலை. பிறகு உண்பது, உல்லாசம், உறக்கம், ஆட்டம், பாட்டமாய் வாழ்க்கை சுகத்தில் கழிகின்றது. பல யுடியூப் வீடியோக்கள் காணக் கிடைக்கின்றன. அவைகளைத் தேடிப் பிடித்துப் பாருங்கள். அங்கு வசிப்பவர்கள் நோய் நொடி இன்றி சர்வசாதாரணமாக 100 வயதுக்கும் மேல் வாழ்கிறார்கள்.

இங்கோ, பசிக்காக படிப்பு, வேலை என ஒவ்வொருவரும் வாழும் வாழ்க்கையின் போக்கு படு கேவலமானதாக இருக்கிறது. படித்தால் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்தால் காசு கிடைக்கும். அந்தப் பணத்தினால் சுகபோக வாழ்க்கை வாழலாம். ஆனால் வாழ்க்கை? இன்பம்? குழந்தையாக இருக்கும் போதே, படி படி படி. படித்து முடித்ததும் பணி, பணி, பணி. பணி கிடைத்ததும் வேலை, வேலை, வேலை. கிடைக்கும் பணத்தை அனுபவிக்க கூட முடியாமல் ஜக்கி, ரவிசங்கர், நித்தி ஆகிய அட்டைகளிடம் கொண்டு போய் கொட்டி விட்டு, தேடிக்கொண்டிருப்போம் மன நிம்மதியை, வாழ்க்கையை. எல்லாம் கை விட்டுப் போயிருக்கும். வயதும் போயிருக்கும். நல்ல சாப்பாட்டினைக் கூட சாப்பிட முடியாது. சாப்பிட்டால் உயிர் போய் விடும் என்பார்கள் மருத்துவர்கள்.

காசு சம்பாதிப்பதுதான் வாழ்க்கை என்று ஒவ்வொரு மனிதனும் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறான். இதிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதானதல்ல. மனம் எனும் அரக்கனிடமிருந்து விலகி, உண்மையை உணர்ந்து கொள்வது என்பது தற்போதைய சூழலில் முடியாத காரியம்.

இருக்கும் சூழலில் வெற்றியாக வாழ்க்கையை எளிதாக வாழ ஒரு சூத்திரம் ஒன்று உள்ளது.

அடியேனுக்கு சிறிய வயதில் இருந்து சாமியார்கள், வயதானவர்களுடன் தான் நட்பு. என் வயது நட்புக்காரர்கள் எனக்கு இல்லை. என்னை விட அனுபவசாலிகளுடன் பேசுவதையும், நட்புக் கொள்வதையும் விரும்புவன். அந்த வகையில் எல்லா மதங்களிலும், யோக, ஆன்மீக தொடர்பான விஷயங்கள் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறேன்.

தியானம், யோகம், யோகா, மூச்சுப்பயிற்சி எல்லாம் செய்து பார்த்தேன். எதுவும் எனக்கான தேடலை, நான் தேடிய வழியைக் காட்டக்கூட இல்லை. முதலில் என் மனத்தை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கண்ணை மூடினால் அதுபாட்டுக்கு எங்கெங்கோ அலைகிறது.

சுழித்தோடும் ஆற்றை நினைக்கிறது. பெருகி வழிந்தோடும் அருவியைப் பார்க்கிறது. அமெரிக்காவின் நயாகராவிற்குச் செல்கிறது. உருளைக் கிழங்கு மசாலாவுக்குச் செல்கிறது. ஆலப்புழா செல்கிறது. நயன்தாராவை நினைக்கிறது. ரூடோஸ் நாய்க்குட்டி சாப்பிட்டாச்சா என நினைக்கிறது. நிமிட நேரத்தில் லட்சக்கணக்கான மைல்கள் செல்கின்றது. எண்ணங்கள் புற்றீசல் போல பெருகிக் கொண்டே இருக்கின்றன. எப்படிக் கட்டுப்படுத்தி, மனதை ஒரு நிலைப்படுத்தி, சூட்சுமத்தில் மனதை நிலைக்க வைத்து தியானிப்பது?

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை இப்படித்தான் மனது அலைந்து கொண்டிருந்தது வானத்தில் காற்றின் வேகத்திற்கு ஏற்ப அலையும் மேகங்கள் போல.

மனதை அடக்க வேண்டும். இல்லையெனில் மனது எனும் குப்பைத் தொட்டிக்குள் அடங்கிப் போகனும். இதைத்தவிர வேறு வழியே இல்லை என்ற நிலை தான் நம் ஒவ்வொருவருக்கும். எனக்கும் அப்படித்தா இருந்தது.

தேடிக் கொண்டிருந்தேன் எளிய வழியை. அது கிடைத்தே விட்டது.

ஒரு ஜப்பானியன் போல அமைதியாக, எளிமையாக, வலிமையாக, அன்பாக வாழ துவங்கினேன். வெற்றி பெறுவது எங்கனம்? வாழ்க்கையின் போக்கிற்குத் தகுந்தவாறு எப்படி தொடர்வது என்று ஓரளவிற்குப் புரிந்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.

2008ல் இருந்து பிளாக் எழுதுகிறேன். அன்றையிலிருந்து இப்போது வரையிலும் எழுதியிருக்கும் எழுத்துக்கள் சொல்லும் நானெப்படி மாறி இருக்கிறேன் என்று. அவ்வப்போது படித்துப் பார்ப்பேன். வேடிக்கையாக இருக்கும். இருப்பினும் அவைகள் நான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதை எனப் புரிந்து கொள்வேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். இந்த வாக்கியம் உலகப் புகழ் பெற்றது. ஆனால் என்னைப் பொறுத்தவரை எதுவும் மாறவே இல்லை என்பதுதான்.

நான் கண்டடைந்த ‘அந்த எளிய’ வழியின் ஒரு பயிற்சியை நான் பழகத் துவங்கினேன். அது நான் தேடிய பாதைக்குத் தள்ளிக் கொண்டு சென்றது.

ஜப்பானியரின் வாழ்க்கையில் ‘டீ அருந்துவது’ என்பது ஒரு சமுதாய வழக்கம். அமைதியாக காலை மடக்கி அமர்ந்து அரைத்த பச்சைத் தேயிலைத் தூளில் சுடுநீர் விட்டு வடிகட்டிய தேநீரை அவர்கள் மகத்தான ஒரு மவுனத்தின் மூலம் அருந்துவார்கள்.

வெள்ளையும் பழுப்பும் நிறைந்திருக்கும் அமைதியான வீட்டு அறை ஒன்றில் அமைதியான, ஆனந்தமருளும் மவுனத்தின் பிடியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்துவதை தவமாகச் செய்வார்கள்.

அதுதான் ஆரம்பத்துவக்கம்.

மவுனம், அமைதி, புன் சிரிப்பு முதலில் இதை பழகிக் கொள்ளுங்கள்.

என் குரு நாதர் வெள்ளிங்கிரி சுவாமியின் வாக்கியம், ”பேச்சைக் குறைத்து மூச்சைக் கவனி”. இது ஏதோ ஒரு சாதாரண வாக்கியம் என்று நினைத்து விடாதீர்கள். பேச்சைக் குறைத்து விட்டு, உயிர் நாதமெனும் மூச்சைக் கவனி என்கிறார். கவனி என்பதுதான் எல்லாவற்றுக்குமான ஆரம்பப் புள்ளி.

தொடர்ந்து படியுங்கள்.

ஜப்பானின் புகழ் பெற்ற ஜென் தத்துவங்களைப் படித்திருப்பீர்கள். ஜென் என்பதைப் பற்றிய புரிதல்கள் பலப்பல. ஜென் தத்துவங்களின் ஒரே நிலை தன்னை அறிதல். தன்னை அறிதல் என்பது சூனியத்தில் தன்னைக் கரைப்பது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவுடனும் தன்னையும் இணைத்துக் கொள்வது. அவ்வாறு இணைத்துக் கொண்டவர்கள் தொட்டால் நோய் நீங்கும். பழுதானவற்றை நீக்கிப் பழையபடி உருவாக்குவார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஒவ்வொரு அணுவும் இயங்கும். அவ்வாறானவர்கள் தான் புனிதர்கள் என்று அழைக்கிறோம்.

சரி, எங்கெங்கோ சென்று விட்டேன்.

ஒரு சிறிய பயிற்சியைத் தொடர்ந்து செய்யுங்கள். எல்லாமும் தெளிவாகி விடும்.

முன்பே பலரும் சொல்லி இருப்பதுதான் இது.

படிக்கின்றீர்கள் என்றால் நீங்கள் படிப்பதாக நினையுங்கள். சாப்பிடும் போது சாப்பிடுவதாக நினையுங்கள். எந்த வேலை செய்தாலும் வேலை செய்கிறேன் என நினையுங்கள்.

மனதினை இரண்டாகப் பிரியுங்கள். ஒரு மனதை வெளியில் கொண்டு வந்து நீங்கள் செய்வதை நீங்களே வேடிக்கைப் பாருங்கள். புரிகிறதா? நீங்கள் செய்வதை நீங்கள் வேடிக்கைப் பாருங்கள்.

ஆரம்பத்தில் சுவாரசியமாக இருக்கும். போகப்போக பழகி விடும். பின்னர் இரண்டு மனதும் ஒன்றாகும் போது நடக்கும் மாயா ஜாலத்தை அப்போது உணர்வீர்கள்.

அந்த மனதும் இல்லாது போக வேண்டுமெனில் அதற்கும் ஒரு பயிற்சி இருக்கு. அது இப்போது வேண்டாம். ஏனென்றால் நாமெல்லாம் லெளகீக வாழ்க்கையில் இருக்கிறோம். அது நமக்குச் சரிப்பட்டு வராது.

இதை வெற்றியின் முதல்படி என அடித்துச் சொல்கிறேன்.

நிதானம், நேர்மை, ஒழுக்கம், அமைதி, பேரமைதியுள்ளம் ஆகியவை உங்களுக்கு வெற்றிக் கனியை பறித்து தரும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

உங்களுக்கும் தானே…..

நம்பிக்கையே வாழ்க்கை….!


Monday, December 12, 2016

விதை முளைக்க உமி தேவையில்லை

ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே மதத்தின் வழி அடையாளப் படுத்தப்படுகின்றான். எவரும் தப்ப முடியாது. பெயராலோ, இனத்தாலோ அல்லது எதுவோ ஒன்றாலோ அவன் இன்னவன் என்கிறபடி அடையாளப் படுத்தப்பட்டு அடிமைப்படுத்தப்படுகிறான். மதங்கள் பிறப்பதற்கு முன்பு மனித வாழ்வு இப்படி இல்லை. அவன் வாழ்க்கையை உண்மையாக வாழ்ந்தான். 

எப்போது மதங்கள் உருவானதோ அப்போதே அவன் வாழ்க்கையை இழந்தான். 

அவனைச் சுற்றி மதங்கள் வழிபாடுகள் என்ற சிறைக்கம்பிகளை வைத்துச் சிறைப்படுத்தின. இனி அவன் எந்தக் காலத்திலும் சிறையிலிருந்து வெளி வர முடியாது. அந்தச் சிறை அவனுக்கு கடும் துன்பத்துடன் கூடிய மரணத்தை மட்டுமே பரிசளிக்கும். வாழ்க்கை அவனை விட்டு தூர ஓடி விட்டது. இயற்கையாக மலர வேண்டிய மரணத்தை துன்பகரமாக்கி துயரத்தில் ஆழ்த்தி கொன்று விடுகிறது. மதம் என்பது அனுபவம், முன்னாள் சென்றவர்களின் வழிச் சுவடுகள் இன்றி ஒவ்வொரு மனிதனும் தனியாகத்தான் பயணம் செல்ல வேண்டும் என்கிறார் ஓஷோ.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு நாள் கடுமையான மன அழுத்தமேற்பட மன அமைதிக்காக வண்டியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றேன். உறவுகள், நட்புகள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தொழில் செய்பவர்கள் என பலராலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றோமே இது என்ன விதமான உலகம் என்று புரிந்து கொள்ள முடியாமல் திணறினேன். முகத்துக்கு முன்னால் ஒரு பேச்சு முதுகுக்கு பின்னால் வேறொரு பேச்சு பேசுகின்ற நண்பர்களால் மனது வெம்மையாகி புழுங்கியது. பல்வேறு உடலியல் சிக்கல்களில் இருக்கும் எனக்கே மனச்சாட்சியை இழந்து துரோகங்கள் இழைக்கப்படுகிறபோது ஏற்படும் அதிர்வுகளில் மனம் சிக்கி சிதிலமடைந்து கொண்டிருந்தது. வாழ்வியல் சிக்கல்களை அவிழ்க்கும் முடிச்சு தெரியாமல் திணறிக் கொண்டிருந்தேன். எது வாழ்க்கை எனப் புரியாமல் எனக்குள் சிதறிக் கொண்டிருந்தேன்.

சிங்கா நல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் செல்லும் போது கடுமையான டிராபிக் ஏற்பட்டிருந்தது. பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று ’டீ சாப்பிடலாம்’ என்று நினைத்துக் கொண்டு உள்ளே வண்டியை விட விஜயா பதிப்பகத்தின் புக் ஸ்டால் இருந்தது. அதில் காட்சிப்படுத்தியிருந்த புத்தகத்தில் ஓஷோ கைகளை நீட்டியபடி நின்று கொண்டிருந்தார். எனது கல்லூரி காலத்தில் ஓஷோவின் ’ஒரு கோப்பை தேநீர்’ புத்தகம் கிடைத்தது ஆனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் பெற்றுக் கொண்டு பஸ் ஸ்டாண்டின் ஓரமாக வண்டியில் அமர்ந்துகொண்டு புத்தகத்தை விரித்துப் படிக்க ஆரம்பித்தேன். 

வீட்டுக்கு வந்தும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். மனிதர்களைப் புரிந்து கொண்டேன். வாழ்க்கையை புரிந்து கொண்டேன். மதங்களைப் புரிந்து கொண்டேன். எல்லாம் வெளிச்சமானது போலத் தெரிந்தது. 

நேற்று ஓஷோவின் பிறந்த நாள். அவர் உண்மையைப் பட்டவர்த்தமாகச் சொன்னதால் 22 நாடுகள் சேர்ந்து விரட்டின. விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். ஆனால் அவரின் உண்மையோ இன்றும் பேசிக் கொண்டே இருக்கிறது. எனக்கு வெளிச்சத்தை உணர வைத்த அவரை நினைத்துப் பார்ப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

எல்லா மதங்களையும் அவர் ஆராய்ச்சி செய்தார். அதன் பலாபலன்களை விவரித்தார். இந்து மதத்தை பூசாரிகளின் ஆதிக்கம் நிறைந்தது அங்கு கடவுளே இல்லை என்றார். முஸ்லிம் மதத்தை விமர்சித்தார். கிறிஸ்து மதத்தை மரணக் குறியான சிலுவையை வணங்கும் மதம் என்று காட்டமாக விமர்சித்தார். பிறப்பும் இறப்பும் இயற்கையானது. இடைப்பட்ட வாழ்வில் வாழ்க்கைத்தானிருக்கிறது. அதை மனிதன் வாழ வேண்டும் என்றார். 

மதம், இனம், மொழி, தேசம் என்கிறவை எல்லாம் மனிதனுக்கான தளைகள். அவைகளால் மனிதன் சிறைப்படுகின்றானோ ஒழிய அவன் வாழ்க்கை சின்னப்படுத்தப்படுகிறதோ ஒழிய அவனுக்கு நன்மை தருவதில்லை என்கிறார். தனி மனித பிரச்சினைகளுக்கு இவையே காரணம் என்று சாடுகிறார்.

ஜைன மஹாவீரர், புத்த மதங்களையும் தத்துவங்களையும் அவர் அலசி ஆராய்ந்தார். முடிவில் எல்லோராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஜென் என்பது மனிதனுக்கானது என்று விவரித்தார். 

ஜென் மதமும் அல்ல சித்தாந்தமும் இல்லை அது எதுவுமே இல்லை என்றார். எதுவுமே இல்லாத ஒன்று தான் மனிதனுக்கு முழுமையான வாழ்க்கையைத் தருகிறது என்றார்.

சலனமற்ற, சிந்தனையற்ற மன நிலையை எவனொருவன் அடைகின்றானோ அவன் இந்த சமூக வாழ்க்கையிலிருந்து வெகு எளிதாக தன்னை மீண்டெடுத்து தனக்கான வாழ்க்கையை வாழ்வான் என்று தனது உரைகள் மூலம் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார் ஓஷோ.

மனிதனின் தற்போதைய வாழ்க்கையை அவர் ஒரு கதை மூலம் விவரிக்கிறார். இதோ கதை!

முல்லா நஸ்ருதீனின் சமாதியில் ஒரு பெரிய மரக்கதவு பொருத்தப்பட்டுள்ளது. அது அடைத்துப் பூட்டப்பட்டிருக்கிறது. யாரும் அதற்குள் நுழைய முடியாது கதவின் வழியாக. அது அவருடைய கடைசி வேடிக்கை. அந்தச் சமாதிக்கு நான்கு சுவர்களே இல்லை. வெறும் பூட்டிய கதவு மட்டுமே. முல்லா நஸ்ருதீன் தம் சமாதியை எப்படி அமைத்தாரோ, அப்படித்தான் ஒவ்வொருவரும் தம் வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர் அறியாமலேயே! வாழ்க்கை பாதுகாப்பின்மையானது. அது தான் நிதர்சனம். அதை உணர்ந்து கொள்ள வேண்டும். விஷயம் அவ்வளவுதான். 

அதிகாரம், பதவி, பணம், இறையருள், ஆத்மபலம் ஆகியவைகளால் உருவான கதவினால் பூட்டப்பட்டிருக்கும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைப்பதே எவ்வளவு அனர்த்தம்? இது மட்டுமல்ல மனிதன் தான் அறிவாளி என்று நினைத்துக்கொள்வதுதான் ஆகப் பெரும் முட்டாள் தனமானது. 



ஒவ்வொரு மனிதனும் மதத்தின் வழியாக நின்று கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கின்றான். எதார்த்தமான வாழ்க்கை வாழாமல் நெறி முறைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இறந்து போய் விடுகிறான். ஒரு கதை ஒன்று உங்களுக்காக ஓஷோ சொல்லி இருக்கிறார்.

ஓர் இருண்ட இரவில், ஒரு பக்கிரி பாழ்கிணற்றின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்த போது, அபயக்குரல் கேட்டு எட்டிப் பார்த்தார். “என்ன ஆச்சு?” என்று கிணற்றுக்குள் பார்த்துக் கேட்டார். “ஐயா, நான் ஓர் இலக்கணப் புலவன். துரதிர்ஷ்டமாக உள்ளே விழுந்து விட்டேன், வழி தெரியவில்லை, அதனால் தான், இப்போது நகர முடியவில்லை” என்றார் உள்ளே கிடந்தவர்.

“இரப்பா! ஒரு ஏணியும் கயிறும் கொண்டாறேன்” என்றார் பக்கிரி.

“ஒரு நிமிடம்! உங்கள் பேச்சு இலக்கணப் பிழை. அதை நான் திருத்தி விடுகிறேன்” என்றார் உள்ளே விழுந்தவர்.

”ஏணியையும், கவுத்தையும் விட அது முக்கியம்னா, நான் நல்லாப் பேசக் கத்துக்கிற வரை நீ அங்கேயே கெட!” என்றுச் சொல்லி நகர்ந்தார் பக்கிரி.

(பிரேம் உங்களுக்குப் புரிகிறதா?)

ஓஷோ உண்மையின் உரைகல். எதார்த்தமான வாழ்க்கையை வாழ விரும்புகின்றவர்கள் படிக்க வேண்டிய அற்புதமான உரைகளை ஓஷோ வழங்கி இருக்கிறார். அவரை நாம் பின் தொடர வேண்டியதில்லை. நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றிய அவரின் கருத்துக்களை புரிந்து கொள்ளலாம். அதன் உண்மையை ஆராயலாம், எது சரி எது தவறு என்ற முடிவெடுக்கலாம். நாமும் புதிதாகச் சிந்திக்கலாம். அதன் தொடர்ச்சியாக வெளிச்சமடையலாம். 

ஒவ்வொருவருக்குள் வெளிச்சம் ஏற்பட வேண்டும். அதுவே உண்மையான வாழ்க்கை!

குறிப்பு : ஜெயமோகன் அவர்கள் தனது பிளாக்கில் தமிழ் இந்துவில் எழுதப்பட்ட கட்டுரையைப் பதிவேற்றி இருந்தார். விசித்திர புத்தர் என்று தலைப்பிட்டிருந்தார். ஓஷோ அடையாளப்படுத்தப்படுவதைத்தான் உடைத்தார். ஓஷோ புத்தரையே சின்னாபின்னமாக்கினார். புத்தமதத்தை கேள்விகளால் துளைத்தெடுத்தார். ஜைன மதத்தின் ஆணி வேரையே அசைத்தார். ஓஷோ வந்து சென்றவர். புத்தரல்ல!

அதுமட்டுமல்ல ஓஷோவின் கேலியும் கிறுக்கும் இன்றைய நவீன ஊடங்களில் விரவிக்கிடக்கின்றன என வெட்டி அரட்டையும் அர்த்தமில்லா பதிவுகளையும் கொண்ட நவீனமய விளம்பர உத்திகளை தன்னகத்தே அடக்கிய இணையதள ஊடகங்களும் கருத்துக்களும் ஓஷோவின் உடைத்தல்களும் ஒன்றானவை என்பது போல எழுதி இருப்பது சரிதானா? என்றொரு கேள்வியை எனக்குள் எழுப்பி இருக்கிறது.